Monday, September 27, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
4
“கயல்! எப்படிப் படிப்பெல்லாம். சோதினைய நல்லாச் செய்தியா? எப்ப முடீவு வரும்.? நீயும் ஓரு வேலைக்குப் போனியண்டா அப்பாக்கும் கொஞ்சம் பாரம் குறையும்”. தங்கம் தனது பாரத்தை இறக்கினாள். கயல்விழிக்கு உயர்ந்த மலையிலிருந்து பாதாளத்துக்குத் தன்னைத் தள்ளிவிட்ட பிரமை ஏற்பட்டது. எதிர்பாராத பெரிய பிரச்சினையை அம்மா அறிமுக மாக்கிவிட்டார். ‘வேலை தேடும் படலத்தைப் பார்’ என அம்மா மறைமுகமாக எச்சரித்து விட்டார். படிக்கும்வரை பிரச்சினை இல்லை. படித்து முடித்தபின்தான் விலங்கு மாட்டப்படுகிறது. சமூகம் ஒரு மனிதனை எப்படி நோக்குகிறது. “பல்கலைக்கழகம் போனால் சோதனை பாஸ்தான். நமது நாட்டிலதான் படிக்கிறதுக்கு வாய்ப்புகள் குறைவு. நீ கவலப்படாத. றிசல்ட் இந்த மாதக்கடசியில் வந்திரும். பிறகு வேலைதேடுவம்”. கடலைப் பார்த்தபடி கூறினாள்.
கயல்விழியின் மனம் பாதாளமலைக் கடலாக விரிந்தது. அதில் வீசும் அலைகளாக எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து, ஓங்கி ஆர்ப்பரித்துச் சிலிர்த்து மோதி உடைந்து சென்றன. பரீட்சை முடிவு வந்து விடும். அதன்பின் என்ன செய்வது? எங்களுக்கு முதல் சித்தியடைந்து வெளியேறிய பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. நமக்கு எப்போது கிடைக்கும். என்ன கல்வித்திட்டம்.? வேலைக்கேற்ற படிப்பு இல்லை. படிப்புக்கேற்ற வேலையில்லை. வேலையில்லாப் பட்டதாரிகள் பெருகிவிட்டார்கள். எப்படி அப்பா அம்மாவைக் காப்பாற்றுவது? கேள்வி மேல் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.
. “வாழ்க்கை என்பது நாம் நினைப்பதுபோல் மலர்கள் பரப்பிய பஞ்சணைந்த படுக்கையல்ல. அது முட்கள் பரப்பிய கற்பாறைப் படுக்கை. பள்ளமும் படுகுழிகளும் நிறைந்த கரடுமுரடான பாதை. அது ஒரு பாம்புப் புற்று. புற்றுக்குள் என்ன, எது இருக்கும், எப்போது வெளிவரும்?. இவை புரியாத புதிராகவே இருக்கும். வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் அதன் தாற்பரியம் புரியும். கோழைகளால் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் உங்களைப் போன்ற புத்திசாலிகளுக்கு அது எளிதாகிவிடும். நீங்களும் சவால்களைக் கண்டு பின்வாங்கினால் சமூகம் குட்டிச் சுவராகிவிடும்.” பல்கலைப் பேராசிரியை பத்மா இறுதிப்பரீட்சை எழுதி வெளியேறும் மாணவியர்களுக்கு பேருரை நிகழ்த்தினார். அதனை நினைந்து அகொண்டாள்.
சிறுவர்களாக இருந்திருந்தால் எப்போதும் கவலையை மறந்து சந்தோசமாக வாழலாம். பணக்கார வர்க்கத்துக்கும் பிரச்சினை குறைவு. அதோபோல் ஏழையாகப் பிறந்தவருக்கும் பிரச்சினைகள் குறைவாகவே இருக்கும். ஆனால் வசதியற்ற நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களுக்குத்தான் பிரச்சினைகள் அதிகம். கயல்விழியின் உள்ளத்தில் அடுக்கடுக்காகப் பல ஆராய்ச்சிகள் வந்து வந்து போயின. இந்த நாட்டில் அடுக்கடுக்காக வந்து போன பேரழிவுகளை நினைந்து கொண்டாள். சுனாமியின் தாக்கமும் அதன் விளைவுகளும் வந்து போயின. சுனாமி வந்தபொழுது விடுதலைப்புலிகள் சிங்களப் பகுதி மக்களுக்கு உதவி செய்ததையும் எண்ணிப்பாரத்தாள். அப்போது சமாதானம் வந்துவிட்டதாகவே எண்ணினாள்.
கிழக்கே அவள் கண்கள் பார்வையைப் பரவவிட்டன. கொட்டியாரக் குடாக்கடலில் மகாவலியின் சங்கமம் தெரிந்தது. மத்திய மலைநாட்டில் உற்பத்தியாகிப் பல சிற்றாறுகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டு கடலோடு சங்கமிக்கிறது. சங்கமிக்கும் இடம் மிக ரம்யமானது. அது பாய்ந்து வரும் பாதையெல்லாம் எவ்வளவு செழிப்பாக இருக்கும். மகாவலி என்றும் வற்றாத ஜீவநதி. இலங்கையின் மிக நீண்டநதி. அதனூடாக் கடலில் பாயும் தண்ணீரைத் தடுத்து நீர்த்தேக்கங்களை அமைத்தால் நமது நாடு சொர்க்கமாகும். இலங்கையில் ஓடும் நதிகளையிட்டு அவள் மனம் யோசித்தது. எல்லா நதிகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து வலைபின்னல் ஏற்படுத்தினால் நமது மக்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும். இதையிட்டு எந்த அரசியல்வாதிகளும் நினைப்பதில்லை. இந்தநாட்டு நதிகளின் நீரைக் கடலுக்குள் விடாமல், பயிர் செய்நிலங்களுக்குப் பாய்ச்சி வளம் பெருக்கும் காலம் வருமா? கற்பனையில் மூழ்கினாள்.
மரஞ்செடி கொடிகளும் பேசுமாமே. அவற்றின் மொழி எதுவாயிருக்கும்.? மரஞ்செடி கொடிகளாகப் பிறந்திருந்தாலும் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் நான் மனிதகுலத்தில் பிறந்து விட்டேனே. நான் செய்த தவப்பேறா? இல்லை இவை யாவும் முன்னம் முற்பிறவியில் செய்த பாவச்செயல்களா? அவளது சிந்தனை விரிந்தது. அவளது விழிகளில் தூக்கத்தின் தாக்கம் எள்ளளவும் இல்லை. யோசித்து யோசித்து எண்ணங்கள் மனக்கடலில் வந்து மோதி உடைந்து, பின்வாங்கி அப்படியே மறைந்து பின் புதிதாக உத்வேகத்தோடு வந்து மோதி உடைந்து போகும். என்னைப் போல் எத்தனை பாவப்பட்ட ஜீவன்கள் இந்த உலகத்தில் இருக்கின்றனவோ? அவள் மனம் சுழன்றடித்தது. பாதாளமலையைக் கடந்து கப்பல் பயணித்தது. ஆட்டமில்லாது கப்பல் நீந்திக் கொண்டிருந்தது. உல்லாசப் பயணிகள் படு சந்தோசமாகக் காட்சியளித்தார்கள். கப்பலின் மேல்தளத்தில் இருந்து ரசித்துக் கதைத்தார்கள். சம்பூர் அவர்கள் வாயில் ‘சாம்பூரா’கப் புகுந்து விளையாடியது. காலாகாலமாகத் தமிழ் மக்களின் பிரதேசங்களாகக் கிடந்த இடங்கள் இப்போது அழிந்து போய்க்கிடக்கின்றன. தமிழ் மக்கள் வீடுவாசல்களையும் சொத்துப்பத்துக்களையும் இழந்து அகதிகளாகிவிட்டனர். சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயமாகிவிட்டது. சம்பூர் மக்கள் பலகிராமங்களிலும் சிதறிக்கிடக்கின்றனர். சம்பூருக்குள் இராணுவம் மட்டும் உள்ளது. சம்பூர் பத்திரகாளி அம்மன் கோயிலின் நிலை எவ்வாறு இருக்கும்? நினைக்கக் கவலையாக இருந்தது.
சொந்த ஊரைப் பலவருடங்களுக்குப் பின் பார்க்கப் போகிறாள். ஊர் எப்படிக் கிடக்கும?;. மக்கள் இல்லாத ஊர் காடாக இருக்கும். அவள் மனம் விரைந்தது. ஒரு இடத்தில் இருந்து கொண்டே இந்த மனம் உலகமெல்லாம் சுற்றி வருகிறதே. இந்த மனம் பொல்லாதது. எந்தத் தடை போட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்துப் போய்விடும். கற்பனை எனும் தேரேறி கயலின் மனம் பறந்தது. அவள் இப்போது மேலே இருந்தவாறு தனது கல்லூரியைப் பார்க்கிறாள். தான் படிக்கும்போது கடமையாற்றிய ஆசிரியர்களைப் பார்க்கிறாள். தனது வகுப்பறைகளுக்கு விரைகிறாள். அந்தப்பரந்த வளாகத்தினைச் சுற்றி வலம் வருகிறாள். அதிபர் கதிர்காமத்தம்பி வேட்டியும் வாலாமணியுடனும் வளாகத்தை வலம் வருகிறார். எத்தனை ஆசிரியர்கள் கற்பித்திருந்தாலும் ஒருசிலர் மட்டுந்தானே மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
சுற்றிவர வகுப்பறைக் கட்டிடங்கள். பாடசாலைக் கட்டிடங்களின் மத்தியில் பாடசாலைத் தோட்டம். தோட்டத்தில் பலவகைப் பயிர்கள். அதிகாலையில் அருளானந்தமும், தங்கராசாவும் வந்து வகுப்பெடுப்பார்கள். விபுணசேகரம் ஆசிரியர் வந்துவிடுவார். சில மாணவர்களும் வந்து தண்ணீர் இறைப்பார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் சிறு நிலம் ஒதுக்கப்பட்டு அதில் பயிர்கள் நடப்பட்டிருக்கும். வகுப்புக்களுக்கு இடையே போட்டி. மாணவர்கள் தாமே இயங்கினார்கள். குரோட்டன் செடிகள் வகுப்பறைக் கட்டிடங்களுக்கு வெளியே நின்று அழகூட்டின. மூன்று ஜீவரத்தினங்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள். ஒரு ஜீவரத்தினம் உதவி அதிபராக இருந்தார். மற்றவர் மாணவர்களின் கட்டொழுங்கில் கவனமாக இருந்தார். அடுத்தவர் ஆங்கிலம் கற்பித்தலில் ஈடுபட்டார். அவர்களது வீடுகளும் கட்டைபறிச்சானில் இருந்தன.
கயல்விழியின் வீடும் அங்குதான் இருந்தது. காலையில் ஒன்று கூடலின்போது ஆசிரியர்களின் நற்சிந்தனை நடைபெறும். அதிபர் தலைமையில் மாணவர்கள் அணிவகுத்து நின்றார்கள். “கல்வி என்பது வெறும் புத்தகப்படிப்பு மட்டுமல்ல. அறிஞர்களுடைய அறிவுரைகள், படிப்பினைகள் புத்தகங்களில் நிறைந்துள்ளன. நாம் அவற்றைப் படித்து அதிலுள்ளவற்றை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். படித்தவற்றை நடைமுறைப் படுத்தாவிட்டால் கற்றதன் பயனை அனுபவிக்கமுடியாது. படித்தவற்றை அனுபவமாக்க வேண்டும். படித்தபடி நடக்க முனையுங்கள்”;. அவர் கூறிய கூற்றுக்கள் கயல்விழியின் காதுகளில் ஒலித்தன. உயர்தரப் பரீட்சைக்காகப் படிக்கும்போதே நாட்டுப் பிரச்சினை தொடங்கிவிட்டது. பொதுவாக கிராமப் புறங்களே பாதிக்கப் பட்டன.
இயக்கங்களின் கண்மூடித்தனமான செயல்களால் கட்டொழுங்கு சிதைந்தது. படிக்கின்ற மாணவர்களை இயக்கங்கள் இழுத்தெடுத்தன. கட்டாயமாக இழுத்தெடுத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் விருப்பமில்லாது சென்றார்கள். அவர்களது உள்ளங்கள் மரத்துப் போய்விட்டன. ஒருவித விரக்தியுடன் வாழ்க்கையை எதிர்கொண்டார்கள். தங்களுக்கு மரணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டது. எதையும் செய்யலாம் என்ற துணிச்சல் பிறந்து விட்டது. நல்லது கெட்டது தெரியாத பருவத்தில் தாங்களாகவே முடிவெடுக்கத் தெரியாமலிருந்தார்கள். கற்றவர்களின் அனுபவங்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தார்கள். தலைமைப்பீடங்களின் கொள்கைகளைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியாத பருவத்தில் இருந்தார்கள். பல்லாயிரக் கணக்கான இளைய தலைமுறையினரின் உயிர்களை இயக்கங்கள் பலிகொண்டன.
“கயல்! என்னம்மா யோசிக்கிறாய்”? அம்மாவின் குரல் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். “இனி இறங்குவம். மூதூர் வந்தாச்சு. இப்ப வஸ் இருக்காம். இறங்கின கையோடு வஸ்சில போவம். இல்லாட்டி ஆட்டோவிலதான் போகவேணும். இருநூறு ரூபா கேப்பாங்க. கெதியாக இறங்கிப் போவம்.” அம்மா துரிதப்படுத்தினாள். ”கப்பல் பயணம் நல்லது. விரைவாக வந்து விட்டது. அம்மா இன்னும் கரைக்கு வரவில்லை. அவசரப்படாதிங்க. ஆறுதலாய் இறங்குவம்”. தாயைச் சாந்தப்படுத்தினாள். கப்பல் கரையை அடையும் முன்னரே சனங்கள் இறங்குவதற்காக எழுந்து நின்றார்கள். இந்த மக்களுக்குப் பொறுமை என்பதே கிடையாது.
மூதூர் ஜெட்டியில் இறங்கினார்கள். ஜெட்டிப் பாலம் மரப்பலகைகளால் ஆனது. பரவியிருந்த தடித்த பலகைகளின் இடையில் அதிக இடைவெளிகள் தெரிந்தன. அந்த இடைவெளிக்குள் அம்மாவின் பாட்டா புகுந்து இடரச்செய்தது. கயல் அவதானமாக நடந்தாள். மூதூர் மாற்றம்பெற்றிருந்தது. ஓலைக்குடிசைகள் ஒழிந்து கல்வீடுகள் முளைத்திருந்தன. ஆனால் தெரிந்த முகங்களைக் காணமுடியவில்லை. இப்போது கெடுபிடிகள் தளர்ந்திருந்தன. உடலில் ஆயுதங்கள் இருக்கின்றதா, என ஆட்களைத் தடவிப்பார்ப்பார்கள். சிலர் தடவிப்பார்ப்பது போல் தழுவியும் பார்த்த ஈனச்செயல்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் நடந்தன. ஆட்களைத்தடவி விடும் தொல்லை இல்லாதிருந்தது. எங்கும் படைவீரர்கள்தான் நிறைந்திருந்தார்கள். வெளியில் வந்தார்கள். நிம்மதிப் பெருமூச்சுப் பறந்தது.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP