Monday, October 25, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
22
இளைஞர் வீட்டுத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தது. பிரதேசச் செயலாளரின் உதவியைக் கயல்விழி நாடினாள். அவரின் பெருமுயற்சியினால் இளைஞர் வீட்டுத்திட்டமும் கிடைத்து விட்டது. புதிய காணிகளில் புத்தம் புதிய வீடுகள் முளைத்தன. முன்னூறு இளைஞர்கள் முழுநேர விவசாயிகளாக மாறியிருந்தனர். அரசாங்கத்தின் முழுக்கவனமும் கட்டைபறிச்சான் பக்கம் திரும்பியிருந்தது. அருண் வீட்டுக்குப் போயிருந்தான். அந்த நாட்கள் கயல்விழியின் வேகம் குறைந்திருந்ததை மங்கை கவனித்தாள். வகுப்புக்களிலும் கலகலப்பு இல்லை.”கயல்விழி நீ எனது உயிர் தோழிதானே?” மங்கை கேட்டாள். “ என்னடி சந்தேகம்”? நெற்றியைச் சுருக்கியவாறே கயல் கேட்டாள்.“ கயல் எனக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேணும். அது எனக்கு விளங்குது. ஆனால் நீ என்னிடம் மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களுக்கும் மறைக்கிறாய். ஏன்? சொல்?” அவளைப் பார்த்தபடியே கேட்டாள். “ நீ என்ன கேட்கிறாய்? எனக்கு விளங்கவில்லை.” எங்கேயோ பார்த்தபடி கூறினாள். “கயல்விழி என்னட்ட மறைக்காத. உன்ர மனதைக் கேள். உன்ர மனதுக்குள்ள என்ன இருக்குது என்று பார்.” மங்கை ஆற்றைப் பார்த்தவாறு கேட்டாள். “கயல்விழி நானும் இவ்வளவு காலமும் பழகியிருக்கிறன். இப்பதான் உன்ர முகத்தில ஒரு மாற்றத்தைக் கண்டிருக்கிறன். அதற்கான காரணத்தையும் தெரிந்திருக்கிறன். ஆனால் நீ பிடிபடாமல் நடிக்கிறாய்?” மங்கை விடுவதாயில்லை.
“சரி நேரடியாகக் கேட்கிறன். நீ அருணைப் பற்றி என்ன நினைக்கிறாய்.? மங்கை கேட்டாள். கயல்விழி திடுக்குற்றாள். சற்றுத் தடுமாறித்தான் போனாள். யோசித்தாள். “அருண் மிக நல்ல நண்பர். அவர்மேல் எனக்கு மரியாதை இருக்கு.” இழுத்து இழுத்துக் கூறினாள். “அருண் மிக நல்ல இளைஞன். உனக்கு ஏற்றவர். நீ அவரைக் காதலிக்கிறாய். ஆனால் போலியாய் நடிக்கிறாய்.” சற்று ஆவேசமாய்ப் பேசினாள். “மங்கை காதல் என்பது புனிதமானது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லறத்தில் இறங்கவேண்டும். எனக்கு அந்தப் பக்குவம் இன்னும் வரல்ல. அந்த நிலைக்கு நான் வருவதற்கு நாளெடுக்கும். என்னை அருண் விரும்புவதை நான் அறியவில்லை. அவர் அன்பாக நமக்கு எவ்வளவோ செய்கிறார். அதனால் என்னை காதலிக்கிறார் என்று நான் எப்படிச் செல்லமுடியும்? சரி இதை இப்படியே விடு”.அவள் கதையை நிறுத்தினாள்.
சுந்தரத்தார் ஏதோ வேலையாக வந்தவர் இவர்கள் பேசியதைக் காதில் வாங்கிக்கொண்டார். தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். அருண் வேலை நிமித்தம் வருவதும் போவதுமாக இருந்தான். உண்மையில் அவனுக்கு அதிகமான வேலைகள் இருந்தன. நாட்கள் வாரங்களாகி, மாதங்களாக விரைந்து ஓடின. சாந்தன், ராகினி, சுலோச்சனா மங்கை ஆகியோரின் ஒத்தாசையோடு அனைவரது ஒத்துழைப்பும் கிடைத்தது. மரவட்டக்குளம் ‘இன்பபுரி’யாக மாற்றம் பெற்றுவிட்டது. குளத்து வேலைகள் முடிவுற்றன. குளத்தின் திருத்த வேலைகளை விரைவில் செய்ய உதவியமைக்காக மக்களுக்கு நீர்பாசனத் திணைக்களம் நன்றி தெரிவித்தது. சிறப்பாக கயல்விழியைப் பாராட்டியது.
மாலையாகி வந்தது. வழமைபோல் ஆற்றங்கரையைப் பார்த்தவாறு கயல்விழி இருந்தாள். அவளது மனத்திரையில் பழைய கட்டைபறிச்சானின் பசுமை எட்டிப்பார்த்தது. அப்பா சொன்னவைகளை அசைபோட்டுப் பார்த்தாள். அவளை மறந்து சிலையாகி நின்றாள். கட்டைபறிச்சான் துறை கிருஸ்ணபிள்ளையின் அதிகாரத்தில் இருந்தது. அப்போது பாலம் இல்லை. ஒரு படகுப்பாதை இருந்தது. இரண்டு கரையையும் இணைத்துத் தடித்த கயிற்றால் கட்டியிருப்பார்கள். அந்தக் கயிற்றில் படகுப் பாதையை இணைத்திருப்பார்கள். படகில் பயணிப்பவர்கள் கயிற்றை இழுத்தால் படகு அசைந்து போகும். கரையின் இருபுறமும் சிறிய தேநீர்க் கடைகள் இருக்கும.; பயணிகளுக்கு அவை ஆறுதல் அளித்தன. வைகாசி, புரட்டாசி மாதங்களில் கிராமங்களில் கும்பம் வைத்து அம்மன் வழிபாடு நடக்கும். ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு நடைபெறும். கட்டைபறிச்சானிலும் அதனைச் சூழ்துள்ள கிராமங்களிலும் நடக்கும்.
இச்சடங்கு முறை மக்களை சமூகமயப்படுத்தியது. அனைவரும் ஒன்று பட்டுழைப்பார்கள். ஒத்தாசைகளைச் செய்வார்கள். கும்பம் வைப்பதற்கான செலவுகளை மக்களே பொறுப்பெடுத்து பங்களிப்புச் செய்வார்கள். நாட்பூசைகளையும் தாங்களே ஏற்று நடத்துவார்கள். இளைஞர்கள் பெரிதும் பங்கேற்கும் விழாவாக விளங்கும். கட்டைபறிச்சான் கிராமம் மந்திர தந்திரங்களில் முன்னணியில் இருந்தது. இளைஞர்கள் தமக்குள் மந்திரங்களை மனப்பாடம் செய்து பரீட்சிக்கும் களமாக கும்பத்து மால் நிகழ்ச்சிகள் இருக்கும்.ஒவ்வொரு இரவும் ஊர் கலகலக்கும். பூசைநேரத்தில் சாமி ஆடிக் கட்டுச்சொல்வது சுவையான நிகழ்ச்சியாக இருக்கும். பூசாரியார் கும்பம் தொடங்கிய நாளில் இருந்து கும்பத்து மாலில் பயபக்தியாக இருப்பார். அந்தச் சடங்கு முறை இப்போது அருகிவிட்டது. பூசை தொடங்கியதும் பூசாரியின் உடுக்கும், மந்திரமும் பார்த்திருக்கும் பலரை நடுங்க வைக்கும். சிலர் தங்களை அறியாமல் உடல் குலுங்க நடுங்கி அலறியும் விடுவார்கள். அத்துடன் பறைமேளம் அதிரும். சாமியாடி வருபவர்கள் பறை மேளகாரரின் பக்கம் செல்வார்கள். சாமியாடி பக்கத்தில் வந்தால் மேளம் அடிக்கிறவர்களுக்கும் கொண்டாட்டம். உரத்து மேளம் அடிப்பார்கள். சாமி தாளத்துக்கு ஏற்ப ஆடும். நல்ல வேடிக்கையாக இருக்கும். சாமி ஆட்டம் நடக்கும். சாமியாடும் போது அவர்களின் உடல் குலுங்கும் முறை வித்தியாசமானது. அவர்களது கண்கள் அரைவிழி மூடியிருக்கும்;. இதனை நம்புவதா? நம்பாமல் இருப்பதா? பெரிய சங்கடமாக இருக்கும்.
நிறைவு நாள் உற்சாகமாக இருக்கும். கும்பங்களைத் தூக்கி வருபவர்கள் அதற்கான ஆடையணிந்து வருவார்கள். மாலை கும்பம் ஊர்வலம் வரும். இளைஞர்கள் வீதிகளில் நிற்பார்கள். கும்பம் வரும்போது வீதிகளுக்குக் குறுக்கே மந்திரித்துக் கோடுகள் வரைந்து திருநீறு கைகளில் எந்தி மந்திரம் சொல்லி நிற்பார்கள். அவர்களது உடல் நடுங்கியவாறே இருக்கும். மந்திரம் கனலாகப் பறக்கும். இந்த மந்திரங்களைப் பாடமாக்கும் நமது இளைஞர்கள், தங்கள் பாடங்களைப் படித்தால் பரீட்சைகளில் சித்தியடைந்து பெரிய பதவிகளில் வரலாம் என்று அன்று கற்பித்த ஆசிரியர்கள் சொன்னதையும் நினைந்து கொண்டாள்.
வீதிக்குக் குறுக்கேயுள்ள கோட்டுக்கு அண்மையில் வந்ததும் சாமியாடி வருபவர்கள் அதைத் தாண்டி போகமுடியாமல் திணறுவார்கள். ஓருகுழு போகமுடியாதவாறு மந்திரிப்பார்கள். சாமியாடியவர்கள் தொப் தொப்பென்று விழுவார்கள். இன்னுமொரு குழு அதற்கெதிரான மந்திரங்களை சொல்லி காய் வெட்டுவார்கள். வீழ்து விட்ட சாமிகளைத் தூக்கி நிறுத்தி அவர்களுக்கு ஊருவேற்றுவதில் இன்னுமொரு குழு செயற்படும். இவர்களால் முடியாதவற்றைப் பூசாரியார் வந்து மந்திரித்துத் தண்ணீர் தெளித்தால் கட்டு உடைந்து சாமி போகும். சில சாமிகள் பூசாரியாரிடமிருந்து சாட்டையைப் பெற்று வரும். மந்திரம் தெரிந்த இளைஞரிடம் கொடுத்து ஒரு கையை நீட்டி நிற்கும். இளைஞர் சாட்டையைத் தன் இரு கைகளிலும் ஏந்திப்பித்து மந்திரம் சொல்லி சாட்iயால் சாமிக்கு அடிப்பார். முடிந்ததும் மஞ்சள் தண்ணீரால் கழுவி சாட்டையைச் சாமியின் கழுத்தில் அணிந்து விடுவார்.
நாட்டுப் பிரச்சினைகள் பிரச்சினைகள் பூதாகாரமாக வளர்ந்தன. பழையன கழிந்து புதியன புகுந்து விட்டன. ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சிதறிவிட்டன. அகதி வாழ்வு சிறைப்படுத்தி விட்டது. சிறுதெய்வ வழிபாடு தொலைந்து விட்டது. “கயல்விழி.. இஞ்ச வந்து பார்..கெதியா வா.” அம்மாவின் சத்தம் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். அம்மாவிடம் போனள். அவளது கண்களை அவளால் நம்ப முடியவில்லை. சிலையானாள். “அருண் வந்திருக்கார். அம்மாவும் வந்திருக்கா” அம்மா சொன்னதும்தான் தன்னையுணர்ந்தாள். முகம் மலவர்ந்தது. விழிகள் ஒளிவீசின.
“வாங்க.. வாங்க. அம்மா சகம் எப்படி,? பலநாட் பழகியதுபோல் பக்கத்தில் சென்று அவரை கதிரையில் அமரச் செய்தாள். “நீங்க இப்படி இருங்க”. இருக்கையைக் கொடுத்தாள். “அம்மா நான் தேநீர் போட்டு வாறன்.” துடித்து நின்றாள். அவளுக்குக் கையும் ஓடல்லக் காலும் ஓடல்ல. “கயல் நான் எல்லாம் செய்யிறன். நீ அவங்களோட கதச்சிக் கொண்டிரு”. அம்மா குசினிக்குள் போனாள்.
அருண் தனது வீட்டுக்குப் போய் இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டிருந்தது. அவனைத் திடீரெண்டு திருகோண மலையிலும் கடமை செய்யும்படி தற்காலிகக் கடமைப் பட்டியல் கொடுத்திருந்தார்களாம். அதனால் அவன் கட்டைபறிச்சானுக்கு வரச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது கஅது முடிந்ததும் கட்டைபறிச்சானில் கடமையாற்ற வந்து விடான்.
“அம்மா நான் உங்களிட்ட சொன்ன சமூகசேவகி இவதான். பெயர் கயல்விழி. ஆனால் கனல் விழியாகத்தான் எனக்குத் தெரியுது.” வழமைபோல் தமாசாகச் சென்னான். “டேய் அருண்..நீ எங்கயும் இப்படித்தான் பேசுவியா? பாவம்டா அந்தப் பிள்ள அப்படியா இருக்கா”. சிரிப்போடு சொன்னார். “அம்மா பார்த்த உடனே எடைபோடாதிங்க. இவட தோழி மங்கை இருக்கிறா. இந்த இரண்டும் சேர்ந்து இந்த ஊரைப்போட்டுப் படுத்திற பாடு சொல்லேலா. அதுக்குள்ள என்னையும் சேர்த்து தொடர்ந்து இங்கேயே வேலை செய்ய வேண்டும் என்று பிரதேசச் செலாளரிடம் சொல்லி, இங்கேயே இருக்க வெச்சிட்டா. பாவம் அம்மா சனங்கள்”. பல உண்மைகளை எப்படி நாசூக்காகச் சொல்லுறான். அவளுக்குச் சொல்லமுடியாத சந்தோசம்.
மனித வாழ்விலும் இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்து போகும். அப்போதுதான் வாழ்க்கை சுவைக்கும். அருணைக் கண்டதும் அவளை அறியாமல் உள்ளம் துள்ளுவதேன்?. அவன் போனதும் வாடி வதங்கிப் போவதுமேன்? மங்கை சொன்னது சரிதானா? நான் என்னை ஏமாற்றுகிறேனா? அல்லது எனது அகம்பாவமா? ஓன்றுமே விளங்கவில்லை. அம்மா தேநீர் கொண்டு வந்தார். கொடுத்தார். குடித்தார்கள். மங்கை வந்ததும் சந்தோசப்பட்டாள். “அம்மா நான் சொன்ன மங்கை இவதான்” அருண் முந்திக் கொண்டான். வணக்கம் சொன்னாள். “நல்ல பிள்ளயள்.” பாராட்டினார்.
“கயல் எல்லா வசதியையும் செய்து குடு.” தங்கம் மகளுக்குச் சொன்னார். மங்கை அவர்களது உடமைகளை எடுத்துக் கொண்டு போனாள். அருண் அம்மாவுடன் சென்றான். “அம்மா இந்த ஆற்றிலதான் இவங்க குளிக்கிறவங்க. நீங்களும் அவங்களோட சேர்ந்து நீச்சல் பழகலாம்” அம்மா கேட்டுக் குலுங்கிச் சிரித்தார். “இவன் இப்படித்தானம்மா. ஏதாவது சொல்லிச் சிரிக்க வைப்பான்”;. கயல் சேர்ந்து குலுங்கிச் சிரித்தாள். இன்றைக்குத்தான் கயல் குலுங்கிச் சிரிக்கிறா. சொல்லித்தானும் சிரித்தாள். கயல் அறையினைத் துப்பரவாக்கினாள். அழகாக அடுக்கி வைத்தாள். வேண்டிய பொருட்களை ஆயத்தம் செய்து வைத்தாள். “அம்மா குளிக்க வசதியிருக்கு. பின்பக்கம் சுடுதண்ணி வைச்சிருக்கிறன். சோப் துவாய் எல்லாம் இருக்கு. போய்க் குளியுங்க. பிரயாணக்களைப்புப் பறந்து விடும். படபடவெனக் கூறினாள்.
அம்மா குளிக்கச் சென்றார். அவருக்கு நல்லாப் பிடித்துக் கொண்டது. “நீங்களும் குளிச்சிட்டு வாங்க. நல்லா நேரம் போயிற்று. அம்மாக்குப் பசிக்கும் நாங்க சாப்பாட்டத் தார் செய்திட்டு வாறம்.” சொல்லிவிட்டுப் பின்னால் போனாள். “அம்மா ஏதாவது தேவையா? கேட்டாள். “இல்லம்மா நான் குளிச்சிட்டு வாறன்”. அவர் குளிகத் தொடங்கினார். “இவனுக்கு ஏற்ற பிள்ளைதான்.” பார்த்த பார்வையிலேயே தீர்மானித்து விட்டார். “இப்படியான ஒரு பிள்ளயத்தான் நான் தேடிக் கொண்டிருந்தன். இறைவனால் பார்த்து நான் நினத்ததைத் தந்திருக்கிறார். என்ர எண்ணம் நிறைவேறினால் நான் பாக்கிய சாலிதான்.” மனதினில் நினைந்த கொண்டே குளித்து முடித்தார்.
அருண் கிணற்றடியில் குளித்து வந்தான். அவர்கள் உடைகளை மாற்றி வந்து வெளியில் இருந்தார்கள். “அருண் நீ சொன்னமாதிரி அழகான இடம்தான். என்னமாதிரிக் காற்று வீசுது.” மெய்மறந்து பேசினார். “அருண் இனியும் என்னால் பொறுக்கமுடியாது. எனக்குப் பிடிச்சிக் கொண்டுது. நான் இனி அவங்களோட கதைக்கப் போறன்.” அம்மா முடீவோடு இருந்தார். “அம்மா இன்றைக்குத்தானே வந்திருக்கிறீங்க. முதலில் கயல்விழியின் விருப்பத்தை அறியுங்க. ஆறுதலாய் கதையுங்க. இப்ப என்ன அவசரம்.? அம்மாவைப் பொறுமை காக்க வைத்தான்.
கயல்விழியும் மங்கையும் வந்தார்கள். கயல்விழி நின்றிருந்தாள். “கயல் வாம்மா. கதிரையில் வந்திருங்க. அம்மா அழைத்தார். “பரவாயில்லை. நான் இப்படி நிக்கிறன். இப்ப அம்மா கூப்பிடுவா. சாப்பிடப் போவம். அம்மா இறால் சாப்பிடுவிங்கதானே? சும்மாதான் கேட்டாள். “என்ர அம்மா என்னப்போலதான். எதையும் சாப்பிடுவா, அம்மா கயல்விழியிர அம்மா இறால்கறி சமைத்தால் சா..சொல்லி வேலையில்ல. அப்படி ருசியாக இருக்கும்.” ஓரு போடுபோட்டான். “மங்கை..! வரச் சொல்லுங்க. அப்பாவும் வந்திற்றார்”. தங்கம் கூப்பிட்டார்.
சாப்பாட்டுக்காகச் சென்றார்கள். மேசையில் எல்லாம் தயாராய் இருந்தது. சுந்தரத்தார் “வாங்க” வரவேற்றார். அவருக்கு அரண் தனது அம்மாவை அழைத்து வந்தது நல்ல சந்தோசம். மங்கை கைகழுவக் கிண்ணத்தில் தண்ணீர் கொடுத்தாள். மங்கை பீங்கான் கோப்பைகளில் உணவினைப் பரிமாறினாள். சுhப்பிடுங்க என்றாள். அண்ணே நீங்களும் வாங்க. எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவம். சந்தோசமாக இருக்கும். அருணின் அம்மா அழைத்தார். யாராலும் தட்டமுடியவில்லை. சுற்றியிருந்து உண்டார்கள். அடிக்கடி கயல் எழுந்து பரிமாறினாள். சுhபப்pடும் போது அவளது விழிகள் அருணைப் பார்க்கத் தவறவில்லை. மங்கையின் கண்கள் மிகக் கவனமாகச் சுழன்றன.
குடும்பங்களைப் பற்றிப் பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள். நாட்டு நடப்புக்களைப் பற்றிக் கதைத்தார்கள். அருணைப் பற்றிப் பேசினார்கள். இங்கு நடக்கும் வேலைத் திட்டங்களைப் பற்றிக் கலந்துரையாடினார்கள். “இன்றைக்கு எனது மனம் நிறைந்து இருக்கிறது. உங்களோட இருந்து இப்படி சாப்பிட்டுறதற்குக் கொடுத்து வைத்திருக்கவேணும்”. நன்றியோடு அருணின் அம்மா கூறினார். “இது நிலைக்க வேணும்.” சொல்லிக் கொண்டு எழும்பினார். எழும்பி வேறுகதிரைகளில் இருந்து கதைத்தார்கள். “ஏரிக்கரை’ வீட்டுக்குப் போவோமா? நான் கோயிலடிவரை நடந்து போய்வாறன்”;. சொல்லிவிட்டு நடந்தார்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP