Sunday, February 27, 2011

சிறுவர் பாடல்
வாழ்ந்து காட்டு
பூமித் தாயைப் பாரு –- அது
பொறுமை தன்னைக் காட்டும்
சாமி பெயரைச் சொல்லு –- மனம்
சாந்தி பெற்றுத் துள்ளும்
மாந்தர் தன்னைப் பாரு –- அவர்
மனதை கொஞ்சம் கேளு
சாந்தம் உள்ளே இருக்கா - இல்லை
சங்கடம் உள்ளே இருப்பா?
உன்னைப் போலே போற்று –- பிறர்
உன்னை நம்ப வாழு
உன்னை வெற்றி கொண்டால் - இறை
உன்னோடு இருப்பார் அன்பால்
எண்ணும் எழுத்தும் போற்று –- அதை
எழுதி வாழ்ந்து காட்டு
எண்ணம் தூய்மை காணும் - உன்
இதயம் கோயில் ஆகும்.
நன்றும் தீதும் யார்க்கும் – - தானாய்
நம்மைத் தொடுவ தில்லை
என்றும் நன்மை செய்வாய் - வாழ்வில்
இன்பம் காட்டும் எல்லை.
பறவை இனத்தைப் பாரு..

பறவை இனத்தைப் பாரு –- அவை
பாடும் பாட்டைக் கேளு
உறவை வளர்த்துக் கொள்ளு –- உன்
உணர்வு விரிந்து கொள்ளும்.
பூக்கள் மலர வண்டு –- சுற்றி
படை யெடுத்து வருது
ஈக்கள் மொய்க்கும் என்று –- தேனை
இதழுள் வைத்து இருக்கு

பாயைச் சுருட்ட வில்லை - இன்னும்
பணி தொடங்க வில்லை
தாயைப் பார்த்துப் பிள்ளை –- எல்லாம்
தானே கற்க வேண்டும்

கிழக்கு வானைப் பாரு –- ஒளி
கிழித்து வருது முகிலை
துலக்கிப் பல்லை குளித்து –- உன்னைத்
தூய்மைப் படுத்திக் கொள்ளு

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP