Sunday, February 27, 2011

கல்வி கற்கவேண்டும்
கல்வி கற்க வேண்டும் - அதனைக்;
கற்றுத் தேற வேண்டும்
தொல்லை நீங்கி வாழ – அது
துணை புரிய வேண்டும்
உன்னை உணர வேண்டும் - நீ
உலகை அறிய வேண்டும்
தன்னை உணர்ந்த பின்னால் - நீ
தலைவி யாக வேண்டும்.
சட்டம் பயில வேண்டும் - தங்கை
தலை நிமிர வேண்டும்
குட்டும் மனிதர் வெட்க – நிமிர்ந்து
குலவு நடை போடு
மொழிகள் யாவும் கற்பாய் - கற்றால்
முன் அணியில் நிற்பாய்
வழிகள் பலதைக் காண்பாய் - மாந்தர்
வறுமை போக்க உழைப்பாய்.



புதுமைப் பெண்
அன்பை முகத்தில் காட்டு – உன்
அகத்தில் மலர்ச்சி ஊட்டு
என்றும் இனிமை தேக்கு – அந்த
இதயம் கோயில் ஆக்கு
வறுமைக் கோட்டை உடைப்பாய் - உன;
வரவைக் கண்டு விடியும்
சிறுமை ஓடி ஒதுங்கும் - உலகம்
சிலிர்த்து அழகு துலங்கும்.
அடிமை விலங்கை உடைப்பாய் - இந்த
அவனி உன்னைப் புகழும்
அடிக்க ஓங்கும் கைகள் - உன்னை
அன்பால் வணங்கித் தழுவும்.
வாழ்க்கை முழுதும் இன்பம் - நாம்
வாழும் முறையில் உண்டு
வாழ்க்கை இன்பத் தேராய் -- மாற்றி
வாழ்ந்து புகழைத் தேடு


வாழ்ந்து காட்டு
வளியை உற்றுப் பாரு – அதன்
வலிமை பற்றிக் கேளு
வளி அசைந்து கொண்டால் - நம்
வாழ்க்கை விரிந்து கொள்ளும்.
வளி அசைந்து கொள்ள - வெப்பம்
வெய்யோன் அள்ளித் தருமாம்
தெளிந்து வீசும் போது – அதனைத்
தென்றல் என்று கொள்வார்.
கடலை அமுக்கிப் பார்க்கும் - அலை
கரையைத் தொட்டுப் பார்க்கும்
உடலை உரைஞ்சிப் பார்க்கும் - மனிதர்
உள்ளம் மகிழ வைக்கும்
வேகம் கொண்டு வந்தால் - அலை
விரைந்து அழிவைக் கொடுக்கும்
ஊகம் கொண்டு வாழ்வாய் - இந்த
உலகம் புகழ வாழ்வாய்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP