Sunday, July 31, 2011

வித்தகன் விபுலாநந்தன் - தொடர்ச்சி

வித்தகன் விபுலாநந்தன் - தொடர்ச்சி
யாழ்நூல் “ஐயிரண்டு ஆண்டுகளாக நேரங்கிடைக்கும் போதெல்லாம் முயன்று குருவருளினாலும், தமிழ்த் தெய்வத்தின் கடைக்கண் நோக்கினாலும், இவ்வாராய்ச்சி நூலினை ஒருவாறு எழுதிமுடித்தேன்”;. என வுpபுலானந்த அடிகள் யாழ்நூலில் கூறுவதன் மூலம் பத்தாண்டுகளுக்கும் அதிகமான காலமாக ஈடுபட்டு உழைத்துள்ளதை அறியலாம். பழமை வாய்ந்த இசைநூல்களை ஆராய்ந்து தமது பன்மொழித்திறத்தினாலும் கணித, விஞ்ஞான அறிவின் துணைகொண்டும் யாழ்நூலை எழுதியுள்ளார்.
யாழ்நூலில் அடிகள் ‘சரித்திர கால எல்லைக்கு எட்டாத காலத்தில் வில்யாழ் எனப் பெயரிய குழவியாய் உதித்தாள்.. மழலைச் சொற்பேசி, இடையர் இடைச்சியரை மகிழ்வித்தாள். சீறியாழ் என்னும் பேதைப் பருவச் சிறுமியாகி, பாணனொடும், பாடினியொடும்; நாடெங்கும் திரிந்தாள். ஏழைகளும் இதயம் களிப்பெய்த இன் சொற்கூறினாள். பின்பு ‘பேரியாழ்’ என்னும் பெயரோடு பெதும்பைப் பருவமெய்திப் , பெரும்பாணரோடு சென்றாள். குறுநில மன்னரும், முடிமன்னரும், தமிழ்ப்புலவரும், கொடை வள்ளல்களும். கேட்டு வியப் பெய்தும் வண்ணம். நயம்பட உரைபகர்ந்தாள்;. அதன்பின் மங்கைப்பருவம் எய்தி, அப்பருவத்துக்கு ஏற்ப. புதிய ஆடையும் அணிகலனும் பூண்டு, நாடக அரங்கத்திலே திறமை காட்டி, மடந்தைப் பருவம் வந்தெய்தலும், திருநீலகண்டப் பெரும்பாணரோடும், மதங்க சூளாமணியாரோடும், அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள் பலவற்றை வலம்வந்து, தெய்வ இசையினாலே அன்பருள்ளத்தினை உருக்கி, முத்தமிழ் விரகரால் பாராட்டப்பட்டு, அரிவைப் பருவம் வந்தெய்துதலும், அரசிளங்குமரிகளுக்கு இன்னுயிர் பாங்கியாகி, அவர்க்கேற்ற தலைவரை அவர்பாற் சேர்த்து. சீரும் சிறப்பும் எய்தி நின்ற யாழ் என்னும் மென்மொழி நங்கை இருந்தவிடம் தெரியாமல் மறைந்துபோனாள்”. என யாழ்நூலில் மனம் வருந்துகிறார்.
உழை, இளி, விளரி, தாரம். குரல், துத்தம். கைக்கிளை என்னும் ஏழிசையோசையின் சிறப்புக்களும் தனித்தன்மைகளும், நூலில் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் யாழினின்று எழும் இனிய இசை பற்றிய குறிப்புக்கள் இருப்பதாக பாயிரவியல் குறிப்பிடுகிறது.
பாயிரவியல், தேவாரவியல், ஒழிபியல், சேர்க்கை எனும் பகுதிகளாக யாழ்நூல் கொண்டுள்ளதை அவதானிக்கலாம். யாழ்நூலைப் புரிந்து கொள்ள மூவகை அறிவான இசையறிவு, கணித அறிவு, தமிழறிவு தேவையென பேராசிரியர் சி.மௌனகுரு கருதுவர். இசைநுணுக்கம் தெரியாதோரும் படித்து இன்புறும் பல பகுதிகளும் உண்டு என்று உடுவை தில்லைநடராசா கூறுவர். பழந்தமிழ் இலக்கியங்களில் யாழினின்று எழும் இனிய இசை பற்றிய குறிப்புக்கள் உள்ளதை பாயிரவியலில் குறிப்பிடுகிறது.
“புனத்திலும் பொழிலிலும், குன்றத்தின்மீதும், மருதத் தண்பணையிலும், முல்லைப் புறவத்திலும், கடற்கானலிலும், கான்யாற்றடைக் கரையிலும், அஞ்சுரத்திலும், மனையகத்திலும், தேவர்கோட்டத்தும், அறவோர் பள்ளியிலும், இசை வழங்கிய நாடு தமிழ்நாடு. மெல்லென்றிசைக்கும் தென்றலின் உயிர்ப்பிலும், இழுமென இழிதரும் அருவி நீரிலும், நறுமலரில் முரலுகின்ற தேன்வண்டின் ஒலியிலும், இசையினைக் கேட்டு உவந்த பழந்தமிழர், பாடன் மகளது மிடற்றுப் பாடலையும், பாணனிசைத்த யாழ்ப்பாடலையும், குழலோன் தந்த வங்கியப் பாடலையும் செவியாரக் கேட்டு இன்பமெய்தினர்” எனக்குறிப்பிடுவர்.
யாழ் உறுப்பியல்உறுப்பியல் பகுதியில் வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் அகியவசற்றின் உறுப்புக்களின் அமைதிபற்றிக் கூறுகிறார். வில்வடிவில் அமைந்த யாழை வில்யாழ் எனக்கூறுவர். யாழ்வகைகளில் முதன்மை பெறுபவை பேரியாழ், மகரயாழ், சீறியாழ், செங்கோட்டியாழ் என்பவையாகும். இந்த நான்கு வகைகளைத் தவிர, நாரதயாழ், கீசகயாழ், தும்புரயாழ், மருத்துவயாழ் போன்றனவும் உள்ளன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த யாழ்க் கருவியின் படத்தைப் பாருங்கள். விபுலானந்தர் யாழ்நூலில் காட்டும் சில யாழ் வகைகளைப் படத்தில் காணலாம் ஏனைய இயல்கள்.யாழ்நூலில் இசை நரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற பகுதிகளில் இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன. இந்நூல் இசை இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.பண்ணியலில் பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ் என்ற நாற்பெரும் பண்களும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல், என்னும் நால்வகை வேறுபாடுகளினால் ஒவ்வொன்றும், நான்காகி பதினாறு பண்களாகி வரும் நிலை கூறப்படுகிறது..தேவார இயலில் 103 பண்களில் தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விபரங்களைக் குறிப்பிடுகிறார். பழந்தமிழிசை மரபிற்கும், வடநாட்டு மரபிற்கும், அமைந்த தொடர்பு நிலையையும் விளக்கியுள்ளார். யாழ் உறுப்பியலில் வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ், சகோடயாழ் எனும் ஐவகை யாழ்களை விபரிக்கிறார். வில் யாழுக்கு விளக்கம் தருவதற்காக இசைவான இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். “நண்பகற் காலமாகிறது. இடைச்சி ஒரு குடுவையில் பாலிட்டுக் காய்ச்சிய கூழ்கொண்டு வருகிறாள். இடையன் கூழுண்டு நீரருந்துகிறான். பின் கையிலே குழலை எடுக்கிறான். சில நாட்களுக்கு முன் அம்மூங்கிற் குழல் இடையனால் ஆக்கப்பட்டது. குழலிலே பாலைப் பண் வாசிக்கிறான். இடைச்சி கேட்டு மகிழ்கிறாள்.”
அவள்போனபின் வில் வடிவமான கருவியை எடுக்கிறான். அஃது ஒரு வில்யாழ். அக்கருவியையும் தானே செய்து கொண்டான். உள்ளே துளையுடைய குமிழ மரக் கொம்புகளை வில்லாக வளைத்து, மரநாரிலே திரித்த கயிற்றினை நாணாகக் கட்டியிருக்கிறான். ஒரே அளவான ஏழு விற்கள் இருக்கின்றன. நாண்கள் மாத்திரம் தாழ்த்தியும், உயர்த்தியும் கட்டப்பட்டனவாய், அளவு வேறுபட்டிருக்கின்றன. இடையன் நரம்புகளைத் தெறித்து இசை யொப்புமையினையை ஆராய்கிறான்” எனக் காட்டுகிறார்.
தமிழ் நிகண்டு நூல்கள், சங்க இலக்கியங்கள், வடமொழிநூல்கள் ஆகியவற்றிலுள்ள யாழ் பற்றிய குறிப்புக்களோடு பிறதேசங்களிலும் தமிழ்க்குலத்தோர் வாழ்ந்து நாகரீகம் பரப்பினார்கள் எனவும், அந்நாடுகளில் யாழ்க்கருவிகள் போற்றப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார். யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினால் 1947ல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினால் 1974 ல் வெளியிடப் பெற்றது. அதன்பின்னர் வெளிவந்ததற்கான சான்றுகள் கிடைத்தில.
‘சகோடயாழ்’ பலவழிகளிலும் சிறப்புடையது எனக் அடிகளார் குறிப்பிடுவர். “சிறப்பு வாய்ந்த கருவியின் இசையினை மீண்டுமொருமுறை தோற்றுமாறு செய்தல் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கு சிறந்ததோர் ஏதுவாகும் என்கிறார்.‘சிறப்பு வாய்ந்த யாழ் எழுப்பும் ஒலி தமிழ் வழங்கும் இடமெல்லாம் ஒலிக்க வேண்டுமாயின் இசை ஆர்வலர் மத்தியில் ‘யாழ்நூல்’; என்னும் இனிய நூல் வலம்வரவேண்டும். இசைக்கலைஞர்கள் யாழ்நூலை நன்கு பயின்று மீண்டும் தமிழ் ஒலிக்கும் இடமெல்லாம் ‘யாழ்’ ஒலிக்க வகை செய்தல் வேண்டும்’ என்று உடுவை தில்லைநடரசா தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
யாழ்நூலை பல்கலைக்கழகத்தில் பாடநூலாகக் கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்களா? சுவாமி விலானந்தர் இசை நடனக்கல்லூரி பல்கலைக்கழக வளாகமாகத் தரமுயர்ந்துள்ளது. அவரது நூல்களைப் பாடநூல்களாக ஏற்றுக் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைச் செய்வோர் அவர் விட்டுச் சென்ற சேவையினைத் தொடர்பவர்கள் என்ற வரிசையில் சிறப்பார்கள்.
ஒரு வரலாறு முடிந்தது. ‘யாழ்நூல்’; அரங்கேற்றம் நிகழ்ந்து முடிந்தபின் சுவாமி விபுலானந்தர் இலங்கை திரும்பினார். பல்கலைக் கழகத்துப் பணியினை மேற்கொண்டார். அவரது உடல் நோய்வாய்ப் பட்டிருந்தது. ஓய்வு தேவைப்பட்டது. கொழும்பு மருத்துவ விடுதியிலே சிகிச்சையளிக்கப் பட்டது. எனினும் அது பயனற்றுப் போயிற்று. ‘யாழ்நூல்’; அரங்கேற்றம் நிகழ்ந்து நாற்பத்துநான்கு நாட்களே இப்பூவுலகில் வாழ்ந்தார். அவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகவே இருந்து 1947 ஜூலை 19ம் நாள் அவர் இவ்வுலகை நீத்தார்.
வவுனியா சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினர் ‘உள்ளக்கமலம்’ என்னும் மலரினை வெளியிட்டார்கள்.
அதில் ‘விபுலாநந்த அலை’ எனும் தலைப்பில் ஆலன் இப்படி எழுதியுள்ளார். “உடல்நலம் குன்றிய விபுலானந்தர் கொழும்பு மருத்துவ மனையில் ஓய்வெடுக்கிறார். அவரது உடல் களைப்புற்றுக் கிடக்கிறது. உள்ளம் உயிர் எங்கோ.. வெகுதூரத்தில் ..மட்டக்களப்பு வாவியினடியில் எழும் அந்த இசையை நாடிச் செல்கிறது. அவரது காதுகளில் ‘ச,ரி,க..ம.ப.த,நி’.. இசை பரவுகிறது.
‘நீல வானிலே நிலவு வீசவேமாலை வேளையே மலைவு தீருவோம்சால நாடியே சலதி நீருளேபாலை பாடியே பலரொ டாடுவோம்’
அந்த இசையோடு இசையாகி உயிர் பிரிகிறது. தமிழ்த்தாய் கண்ணீர் வடிக்கிறாள். தமிழ் பேசும் மக்கள் ஆறாத்துயரால்
அலைமோதுகின்றனர். மட்டக்களப்புப் புகைவண்டி நிலையத்தில் இருந்து சுவாமிகளது ஊனுடம்புப் பேழை ஊர்வலமாக வருகிறது. ஸ்ரீ இராமக்கிருஷ்ண சதுக்கத்தை அடைகிறது. அவர் உருவாக்கிய சிவானந்த வித்தியாலயத்தில், சிவபுரிக் கோட்டத்தில் கமலாலயத்தின் முன்னால் வீதியோரமாக ஆலமரம் உள்ளது. அந்த ஆலைநிழலில் சமாதியடைகிறது.
‘சிலம்பு தந்த இளங்கோபோல் யாழ்நூல் தந்த விபுலன்’ எனக்கூறிச் சாரிசாரியாக மக்கள் கூட்டம் அஞ்சலி செலுத்தி அலைமோதுகிறது”. எனக்குறிப்பிடுகிறார்.
அந்த இடத்தில் நினைவுச்சின்னமாக அழகிய சமாதி எழுப்பப்பட்டுள்ளது.
‘வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மா மலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது’.
என அச்சமாதியில் அவரது பாடல் பொறிக்கப் பட்டுள்ளது நான் மாணவனாக சிவானந்த வித்தியாலயத்தில் கற்கும்போது மணிமண்டபம் கட்டும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. குறிப்பிட்ட பழைய மாணவர்கள் ஒன்றுகூடினார்கள். அந்தக்காலகட்டத்தில் 1957ல் படித்துக் கொண்டிருந்த மாணவர்களும் சேர்ந்துகொண்டார்கள். ஒரு நாடகத்தைத் தயாரித்து மேடையேற்றினால் சிறிதளவு தொகை நிதியினை மணிமண்டபம் கட்டுவதற்குச் சேர்த்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
அதற்கேற்ப கல்லடி உப்போடை கிராமசபையில் எழுதுவினைஞராகக் கடமையாற்றிய திரு.கனகலிங்கம் கதைவசனம் எழுதிய ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தைப் பழகினோம். வீரபாண்டியக் கட்டப்பொப்மன் தமிழகத்தில் படமாக வருமுன்னமேயே விபுலானந்தருக்காக நாங்கள் நாடகமாக்கி அரங்கேற்றினோம். அதனை சிவானந்த வித்தியாலயத்தில் கற்று ஆரையம்பதியில் ஆசிரியராகவும் சிவானந்த வித்தியாலயத்தின் விடுதியின் பொறுப்பாளராகுவும் இருந்த திரு. நேசராசா என்ற சாமித்தம்பிதான் நெறியாள்கை

செய்தார். ஆனைப்பந்தி விவேகானந்த வித்தியாலய மாணவியரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு நகர மண்டபத்திலும், கல்முனை நகர மண்டபத்திலும் நிகழ்திப் பங்களிப்புச் செய்தமை எனது மனதில் இன்றும் நிறைந்து சிவானந்த வளாகத்தினுள் உள்ள மணிமண்டபம்.
இனிக்கின்றது. 1957 – 60 களில் விபுலானந்தருக்கு மணிமண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் படத்தைப் பாருங்கள்.
விபுலானந்தரின் நினைவுகள் தொடர்கின்றன.
சுவாமி விபுலானந்தரின் சேவையினைப் புரிந்தவர்கள் சிலரே இருந்தார்கள். அவர் மறைந்தபின்னரும் அவர் செய்த தியாகங்களை நினைத்துப் பார்த்தவர்கள் வெகு சிலரே. கிழக்கு மாகாணத்தில் அவரது சேவை அளப்பரியது. சுவாமி விபுலானந்தர் கிழக்கிலங்கையில் இல்லாதிருந்தால் இன்றைய மறுமலர்ச்சி சூனியமாக இருந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் நாவலரைப் போல், கிழக்கிலங்கையில் விபுலானந்தர் ஏற்றிவைத்த சுடர் இன்றுவரை பிரகாசிக்கிறது.
குறுமண்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட அருள் செல்வநாயகம் அவர்கள் சுவாமி விபுலானந்தரது ஆக்கங்களைத் தொகுத்தளித்தார். அவரே விபுலானந்தரது ஆக்கங்களை வெளியுலகினுக்கு அறிமுகப் படுத்தியவராக மதிக்கப்படுகிறார்.
விபுலானந்தர் நூற்றாண்டுச் சபை.
1992ல் ‘மட்டக்களப்பு சுவாமிவிபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை’ உருவாக்கம் பெற்றது. அச் சபையின் தலைவராக திரு. க.தியாகராஜா அவர்கள் அருந்தொண்டாற்றினார். திரு.க.தியாகராஜா அவர்கள் சுவாமி விபுலானந்தரினால் கட்டியெழுப்பிய கலைக்கோயிலான சிவானந்த வித்தியாலயத்தில் கற்றவர். சிவானந்த வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றியவர். வடக்குக் கிழக்கு மாகாணத்தின் மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும். கல்விச் செயலாளாராகவும் சேவை செய்தவர்.
அவரோடு தோளோடு தோள்நின்று உழைத்தவர்கள் பலர் அவர்களுள் வித்துவான் ச. இ. கமலநாதன், த.செல்வநாயகம். வ.சிவசுப்பிரமணியம். காசு. நடராஜா. பி.யுவராஜன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்களைத் தேடித் தொகுத்துள்ளார்கள். பல தொகுதிகளாக அவை நூலாக்கம் செய்யப்பட்டன. இவை பாராட்டப் படத்தக்கனவாகும். இவ்வறிஞர்கள் சுவாமி விபுலானந்தருக்கும் தமிழ்கூறும் நல்லுலகினிற்கும் செய்த மாபெரும் கைங்கரியமாகும்.
வவுனியாவில் விபுலானந்தர் நூற்றாண்டு விழா.
1992ல் வவுனியாவில் திரு. எஸ்.நவரத்தினராஜா பிரதேசக்கல்விப் பணிப்பாளராகக் கடமையினைப் பொறுப்பேற்றார். வவுனியமாவட்டப் பாடசாலைகளின் பௌதீக வளங்கள் நலிந்திருந்தன. திரு.எஸ்.நவரத்தினராஜா கல்விப் பணிப்பாளராகக் கடமை ஏற்றபின்புதான் வவுனியா மாவட்டப் பாடசாலைகள் மாடிக்கட்டிடங்களைக் கண்டன. சுமார் 58 புதியபாடசாலைகள் திறப்பதற்கு உதவியாக இருந்தார். அவரது காலத்தில் வவுனியாவில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினைத் தொடங்கினோம்.
அப்போது கொத்தணி முறை இருந்தது. ஒவ்வொரு கொத்தணியிலும் கலைநிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தோம். ஆசிரியர்களினதும், பாடசாலைப் பிள்ளகைளினதும் ஒத்துழைப்பு நிறையவே கிடைத்தது. பெற்றோரது வரவேற்பு பயனுள்ளதாக அமைந்தது. சுவாமி விபுலானந்தர் நிதியத்தை உருவாக்கினோம். ‘உள்ளக்கமலம்’ என்ற மலரை வெளியிட்டோம். இன்று அந்த நிதியம் பல ஏழை மாணவர்களுக்குப் பல்கலைக் கழகக் கல்வியைத் தொடர்வதற்கு உதவுகிறது. அதற்காக உழைத்த உத்தமர்களான திரு.க.சீனிவாசகம். அருட்சகோ.மடுத்தீன், திரு. மர்மலானந்தகுமார், திருமதி தெய்வச்சிலை முத்துக்குமாரசாமி. திரு. வீ. பேரம்பலம் திரு.ஜி.அலெக்சாந்தர், திரு. பத்மநாதன் ஆகிய கொத்தணி அதிபர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்கள்.
இன்று காரைதீவில்…
காரைதீவில் இன்று அவர் பிறந்த வீட்டை நினைவாலயமாக மாற்றியுள்ளார்கள்.
அவரது இறுதி நினைவுகளாகப் பல படங்களையும் காணலாம். கரைதீவு மக்கள் அவருக்கு நினைவு மண்டபமும் நிறுவியுள்ளார்கள். காரைதீவில் எழுப்பப்பட்ட மணிமண்டபத்தின் முன்னால் விபுலானந்தரின் உருவச்சிலை உள்ளது. அவரது வீட்டின் ஒரு அறையில் விபுலானந்தரின் உருவச்சிலை உள்ளது.
சாரதா இல்லமும் இயங்கிக் கொண்டு பல நூறு மாணவியருக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் வாழ்ந்த வீடு நினைவாலயமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது நினைவுகளைத் தாங்கிய எச்சங்களாக இறுதிக் காலங்களில் எடுத்த புகைப்படங்கள் இருக்கின்றன. அவரது அறையில் இப்போது அவரது உருவச்சிலை உள்ளது. அவற்றின் படங்களை உங்களுக்காகத் தந்துள்ளேன். இலங்கையில் தமிழ் மொழித்தினமும் விபுலானந்தரும்
1968 முதல் இலங்கையில் கல்வி அமைச்சு தமிழ் மொழித்தினத்தினைப் பாடசாலைகளில் நடத்தி வருகிறது. பாடசாலை மட்டம், வட்டாரமுறை இருந்த காலத்தில் வட்டார மட்டம், மாவட்ட மட்டம் என விரிந்து தேசிய மட்டம் வரை தமிழ்மொழித் தினத்தை நடத்தினர். இந்நிகழ்வு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். முதல்நாள் பாடசாலை மாணவரிடையே போட்டிகள் நடைபெறும். இரண்டாம் நாள் நிகழ்வு பரிசளிப்பு நடைபெறும். சிறந்த நிகழ்வுகளை மேடையேற்றி பெருவிழாவாக எடுத்தனர். அமரர் வெற்றிவேல் சபாநாயகம் தமிழ்மொழிப்பிரிவின் பிரதிச் செயலாளர் நாயகமாக நியமனம் பெற்றார்.
அன்று முதல் சுவாமி விபுலானந்தர் அமரரான ஜூலை 19ம் திகதியை அகில இலங்கைத் தமிழ்மொழித் தினமாகப் பிரகடனப்படுத்தி பெருவிழா வாக எடுத்து வந்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலும், எனைய மலைநயக நகரங்களிலும் சிறப்பாக நடத்தி வந்தார். அவரது சேவையை மனங்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. திரு. வெ. சபாநாயகம்.
அவரைத் தொடர்ந்து திரு. அல்பிரட் அவர்கள் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். அவர் இருக்கும்வரை வெகு விமரிசையாக நடத்தி வந்தார். ஆனால் அவர்களின் பின் அவை யாவும் போய்விட்டன.
வடக்குக் கிழக்கு மாகாணத்தில்
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தபோது கல்வி அமைச்சும், மாகாணக் கல்வித் திணைக்களமும் திருகோணமலையில் அமைந்திருந்தன. தமிழ்மொழித்தின நடைமுறை சிறப்பாக இருந்தது. அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் இரண்டு நாட்கள் மாகாண மட்டத்திலும் நடந்தது. திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, வவுனியா எனப்பல நகர்களிலும் கொண்டாடப்பட்டது. தமிழ் பேசும் மக்களின் மொழி. கலை இலக்கியப் பண்பாடு யுத்த சூழ்நிலைகளுக்குள்ளும் வெளிக் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு மாகாணமட்ட தமிழ்மொழித் தினவிழாக்களில் பங்கு கொள்ளும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்குமிட வசதியுடன் உணவும் கொடுக்கப்பட்டது. போக்கு வரத்துக்குரிய கொடுப்பனவும் வழங்கப்பட்டன. இவை யாவும் அரச பணத்தில் நடைபெறவில்லை. தமிழ்ப்பற்றாளர்களின் தயவுடன் நடந்தேறின. அதற்கேற்பக் கனதியான விழா மலர்கள் வெளியிடப்பட்டன. திரு. க. தியாகராஜா அவர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளராக இருந்தார்.
தமிழ்மொழித்தின விழாச்சபை அவரது காலத்தில் உருவாக்கப்பட்டது.
திரு. க. தியாகராஜா
போசகராக மாகாணக் கல்விச் செயலாளர் இருந்தார். தலைவராக மாகாணக் கல்விப் பணிப்பாளர் செயற்பட்டார். பொருளாளராக கல்வி அமைச்சின் கணக்காளர் கடமையாற்றினார். செயலாளராக மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் செயற்பட்டார். திரு.க.தியாகராஜா கல்விச் செயலாளராக இருந்தபோது செல்வி. திலகவதி பெரியதம்பி அவர்கள் மாகாணக்கல்விப் பணிப்பாளராக இருந்தார்கள். தமிழ்மொழித் தினத்தினை நடாத்தும் பொறுப்பை மேலதிக மாகாணகக் கல்விப்பணிப்பாளர் திரு.ச.அருளானந்தம் ஏற்றார். ‘சுவைத்தேன்,’ ‘பார்த்தேன்.’ ‘மலைத்தேன்’ என மலர்களை வெளியிட்டார்.
அகில இலங்கைத் தமிழ்மொழித்தினப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதற்கெனத் தனியான விழாச்சபை இருந்தது. தலைவராக அப்போது மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. க. தியாகராசா இருந்தார். செயலாளராக திரு.ச.அருளானந்தம் இருந்தார். செயற்குழு உறுப்பினர்களாக அதிபர் திரு. வ.தங்கவேல் அவர்களும் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ஒ.குலேந்திரன் அவர்களும் இருந்தனர்.
முதலாம் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூபாய் 700 சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது. பயிற்றுவித்த ஆசிரியர்களையும். வெற்றிபெற உழைத்த அதிபர்களையும் பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன. அந்நிகழ்வு 1997 வரை ஆண்டுதோறும் ஒரு பெரு விழாவாகவே நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழித்தினம்
பல ஆண்டுகளின் தொய்வின் பின்னர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஒரு புதிய பாதையில் பிரவேசித்துள்ளது. தமிழ் மொழி ‘செம்மொழி’யாகப் பிரகடணப் படுத்தப்பட்டு பெருவிழாவை தமிழகம் கொண்டாடியது. அந்த எழுச்சி கிழக்கிலங்கையில் பற்றிக் கொண்டது. தமிழ்மொழித் தினத்தை ‘தமிழ் செம்மொழி விழா’வாக எடுக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டது.
சுவாமி விபுலானந்தரின் நினைவு தினமான 19 – 07 – 2010 ல் அவர் பிறந்த காரைதீவில் ‘தமிழ் செம்மொழி தினவிழா’வினை கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களம் பெருவிழாவாக எடுத்துப் பெருமையைத் தேடிக்கொண்டது. ‘தமிழ் செம்மொழித் தினம்’ என்ற மகுடத்தின்கீழ் பெருவிழாவாக நிறைவேறியது.
இவ்வகையில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ.நிசாம் அவர்கள் பெருமைக்குள்ளாகிறார். அவரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவரது பெருமுயற்சியும், பிரதிக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி. எஸ்.சிவநித்தியானந்தா அவர்களினதும், உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.விக்னராஜா அவர்களினது ஒத்துழைப்பும் மெச்சத்தக்கது. கல்முனையில் காமல் பத்திமாக் கல்லூரியில் தமிழ் மொழித்தினத்துக்கான முதலாம் நாள் நிகழ்வுகள் நடந்தேறின.
இரண்டு நாட்கள் இவ்வைபவம் நடைபெற்றது. முதல்நாள் மாணவர்களின் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வும் வழக்கம்போன்று பெருவிழாவாகவே நடைபெற்றது.
மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் எனப் பெருந்திரளானோர் கூடினார்கள். இன்னியம் காற்றில் பரவ ஊர்வலம் விழா மண்டபத்தை அடைந்தது.

நிகழ்சிகள் சம்பிரதாயங்களோடு தொடங்கப் பட்டன. இவற்றையெல்லாம் செய்யத்தான் வேண்டுமா? என்ற வினாக்கள் எழுப்பப்படுவது வழக்கமானவைதான். ஆனால் இவ்வாறு நாம் செய்ய மறந்தால் நமக்குப் பினனால் வரும் சமூகம் மறந்துவிடும். பண்பாடு அழிந்துவிடும். நமது பாரம்பரிய பண்பாட்டம்சங்களைப் பேணிப் பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைப்பது நமது தலையாய கடமையாகும்.
பாடசாலைகள்தான் பண்பாட்டுக் காவிகளான மாணவர்களை வழிப்படுத்துவது. அங்கேதான் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பு மாணவர்கள் ஊடாக, அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்குத் தரப்படுகிறது. அதிதிகளாக வருபவர்களை ஆலத்தி எடுத்து வரவேற்பது தமிழர்தம் பாரம்பரியப் பண்பாடாகும். அதனை ஆசிரியர்கள் செயல்மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.
தமிழ் அன்னைக்கும், தமிழை வளர்க்கப் பாடுபட்ட சுவாமி விபுலானந்தருக்கும் மாலையணிவித்து, மங்கல விளக்கேற்றி விழா தொடங்கியது.
தமிழ்த் தாய் வணக்கத்தின்போது தமிழ் முஸ்லின் மாணவியர் கலந்து நின்று பாடினார்கள்.பார்வையாளர்கள் பெருந்திரளாக வருகைதந்து பெருமைப் படுத்தினர்
19 – 07 – 2010 அன்று சுவாமி விபுலானந்தரின் நினைவு தினமாகும். தமிழ்மொழித் தனத்தின் இரண்டாவது நாள் விழாவாகும். ‘தமிழ் செம்மொழி தினவிழா’வின் ஊர்வலம் காலை நீலாவணையில் இருந்து தொடங்கியது. அலங்கரிக்கப் பட்ட ஊர்திகளின் பவனி மெய்மறக்கச் செய்தது.
விழாவில் பங்கு கொண்டவர்களுக்கு விபுலானந்தரின் திருவுருவப்படம் கொண்ட சின்னம் அணிவிக்கப்பட்டது. அதன் வடிவமைப்புக் கண்ணைக் கவருமாறு இருந்தது. மக்கள் வீதிகளின் இருமருங்கும் நின்று விபுலானந்தரை வாழ்த்தினார்கள். வழிநெடுகிலும் மாவிலை தோரணங்கள், வண்ணக் கொடிகள் கொண்ட அலங்காரங்கள் மகிழ்ச்சியை ஊட்டின. “வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ”? என்று பாடியவாறு மக்கள் ஊர்வலம் வந்தார்கள். தங்களது பாரம்பரிய உடைகளில் அவர்களைக் கண்டபோது உள்ளம் உவகையால்
துள்ளியது.சுவாமி விபுலானந்தரின் திருவுருவப் படங்களைத் தாங்கிய ஊர்திகளின் தொடரணிகள் பவனிவந்தன. சிலப்பதிகாரத்தின் சில காட்சிகளும் ஊர்திகளில் உலாவந்தன. ஆச்சியர் குரவையை நினைவூட்டும் குரவையொலி காற்றில் மிதந்து பரவசமூட்டியது. முஸ்லிம் மக்களும் பேதமறக் கலந்து கொண்டு தமது பாரம்பரியக் கலைநிகழ்வுகளை நிகழ்த்தினர்.
இவ்விழாவுக்கு தமிழகத்தில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் பல அறிஞர்கள் வந்திருந்தனர். முனைவர் அறிவுடை நம்பி அவர்களளும், முனைவர் வெங்கடேஸ்வரனும் கலந்து கொண்டனர். தமிழுக்காகத் தொண்டாற்றிய நமது நாட்டுப் பேராசிரியர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.
சிறப்பாகத் தமிழ் முஸ்லிம் மக்கள் பெருந்திரளாகத் திரண்டிருந்தனர். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களின் இன்னிய இசை அற்புதமாக இருந்தது. காரைதீவில் ஊர்வலத்தினை வரவேற்க முன்வளைவில் மக்கள் கூடியிருந்தனர்.
ஊர்வலத்தில் வலய மட்டத்தில் வெற்றி பெற்ற பாடசாலைகளில் இருந்து கலந்து கொண்ட மாணவ மாணவியரும். ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பொதுவாக கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் பிள்ளைகள் அணியணியாகப் பவனி வந்தார்கள்.
சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் ஊர்வலம் வளைவைக் கடந்து வந்து கொண்டிருந்தது. தொடரணியாக வந்த ஊர்திகளின் பின்னால் பல பிரமுகர்களும் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் பெருந்திரளாக மக்களும் திரண்டு வந்தார்கள். ஊர்வலம் காரைதீவு விபுலானந்த கல்லூரியை அடைந்தது. அங்கு குழுமியிருந்தவர்கள் ஊர்வலத்தை வரவேற்று விழா மண்டபத்தினுக்குள் அழைத்துச் சென்றனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் அன்றைய நாள் முழுவதும் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். பேராசிரியர் முனைவர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் முனைவர் அறிவுடை நம்பி ஆகியோருடன் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ.நிசாம் அவர்களைப் புடைசூழ ஏனைய பிரமுகர்களை கல்லூரி வளாகத்தில் சூழ்ந்திருந்த மக்கள் வரவேற்றனர்.
இந்நிகழ்வு பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் படவேண்டிய தொன்றாகும். சிறப்பாக கிழக்கு மாகாண மாணவரிடையே ஒரு எழுச்சியைக் காணக் கூடியதாக இருந்தது. சுவாமி விபுலானந்தர் கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளி. அவர் ஆற்றிய சேவை அளப்பெரியது. உழைப்பால் உயர்ந்த உத்தமர். சான்றோரில் சான்றோன். தானும், தனது சுற்றத்தாரும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்ற இந்த உலகத்தில் தனது உழைப்பை சகல மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று பாடுபட்டவர். சிறப்பாக ஆநாதைகளாக யாரும் இருக்கக் கூடாது. அவர்களுக்கு உதவி உயர்த்திவிட வேண்டும் என்று சிந்தித்துச் செயலாற்றிய உத்தமர்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’; என்ற கூற்றுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடலுக்கேற்ப அவர் நிறுவிய கல்விக்கூடங்கள் இயங்கின. தமிழ் மொழியின் சிறப்பை வெளியுலகத்தினர் உணரும்படி செய்த பெருமையுடையவர். நடைமுறைப்படுத்தினார். இன மத, மொழி பேதங்களைக் கடந்து சேவையாற்றிய உத்தமர். ‘உள்ளக்கமலம்தான் உத்தமனார் வேண்டுவது’ என்று பறைசாற்றிய மகான் அவர். அவர் பிறந்த மண்ணில் அவரை நினைவு கூர்ந்த நிகழ்வு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியதொன்றாகும்.
2004ல் கடற்கோள் காரைதீவுக் கடற்கரையைக் காவு கொண்டது. மாற்றமாம் வையகத்தில் மாற்றம் வருவது இயல்பு. மீண்டும் அமைந்த விபுலானந்தா மத்திய கல்லூரி விழாக்கோலத்தில் ஆழ்ந்தது. ஒரு புயலின்பின் அமைதி வருவதுபோல, ஒரு துயரின் பின்னால் ஒரு மகிழ்வு உதயமாகும். சுவாமி விபுலானந்தர் விளையாடித் திரிந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் சமுத்திரமாகக் கூடியிருந்தனர். அந்த உத்தமரை நினைந்து கொண்டாடுவதற்காக தமிழறிஞர்கள் கூடியிருந்தனர். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி புதுப்பொலிவு கொண்டிருந்தது.
மாணவர் அலையலையாகத் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டனர். கற்றவர்களும், கல்லாதவர்களும் சுவாமியின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்ந்தனர். அவர் பிறந்த மண் அவரினால் புனிதம் அடைகிறது. காரைதீவு மக்கள் பாக்கியசாலிகள். நமது நாட்டுப் பேராசிரியர்களான திரு. தில்லiநாதன். முனைவர். அ. சண்முகதாஸ் போன்றவர்கள் கௌரவிக்கப் பட்டார்கள். அதேபோல் வெளிநாட்டு அறிஞர்களையும் கௌரவப்படுத்தினார்கள்;.
“நாங்கள் புண்ணியவான்கள். அதனால்தான் சுவாமி விபுலானந்தர் பிறந்த இந்தப் புண்ணிய பூமியில் எங்களது கால் தடம்பதிக்கிறது. அவர் பிறந்த மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்கிறோம். அவராலன்றோ நாங்கள் வந்தோம். அவரது நினைவாக ‘தமிழ் செம்மொழித் தின விழாவெடுப்பது’ போற்றுதற்குரியது. அதனை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் செய்திருக்கிறது.” என வெளிநாட்டுப் பேராசிரியர்கள் குறிப்பிட்டார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இலங்கையின் தேசிய பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
நிறைவாக தமிழ்மொழி வாழ்த்து இடம்பெற்றது. தமிழ் முஸ்லீம் மாணவியர் ஒருங்கிணைந்து பாடினார்கள்.
“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழிய வே !வான மளந்த தனைத்தும் அளந்திடும்வண் மொழி வாழிய வே !ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசிஇசைகொண்டு வாழிய வே!எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ் மொழிஎன்றென்றும் வாழிய வே!சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்துலங்குக வையக மே!தொல்லை வினை தரு தொல்லை யகன்றுசுடர்க தமிழ்நா டே! “ பாடலைக் கேட்டதும் பாரதியின் கருத்தை ஆழமாகச் சிந்தித்தேன். “சுடர்க தமிழ்நா டே!” என்று தமிழ்நாட்டை மட்டும் ஏன் வாழ்தினார்? ஏன் இப்படிப் பாரதி பாடினார்? என்று எண்ணிப் பார்த்தேன். தமிழர் உள்ள இடமெல்லாம் தமிழ்நாடுதான் என்ற ஒரு உண்மையை வைத்துத்தான் பாடியிருக்கிறான். தமிழரிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டித்தான் இப்படிப் பாடியிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.
கிழக்கிலங்கையின் ஒரு மூலையில் இருந்து கொண்டும் தமிழ்நாட்டை வாழ்த்தும் ஈழத்தவரின் இதயத்துடிப்பை எந்த இந்தியத் தமிழர்களும் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மொழியால் உலகத்தில் வாழும் அத்தனை தமிழர்களையும் ஈழத்தவர்கள் நினைவு கொள்கிறார்கள். ஈழத்தில் இருந்து தமிழகத்தில் சேவை செய்த சுவாமி விபுலானந்தரின் புகழைத் தமிழர் உள்ளவும் போற்ற வேண்டும். தமிழகத்தார் சுவாமி விபுலானந்தரது சேவையை இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. காந்தியத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தியர்கள் இதுவரை சாதியை எதிர்த்துக் குரல்கொடுக்க வில்லை. பாரதியின் பாடல்களை தமிழர்களுக்குப் புரியவைக்க ஒரு விபுலானந்தர் தேவைப்பட்டார். இன்று தமிழகம் பாரதியின் பாடல்களை ஏற்றுக் கொண்டாடுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரலெழுப்பினார். அவர்களது வாழ்வில் ஒளியேற்படக் கல்விப் பயிர் விதைத்தார். அவருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அண்டிய மேட்டுக்குடியினர் நன்நீரைப் பெறத் தடைவிதித்தனர். அதனைப் பொருட்படுத்தாது உப்புநீரை உட்கொண்டு சேவை செய்தார். விபுலானந்தரின் சேவை தமிழகத்துக்கு ஒரு பாடமாக இருக்கும். அதனைப் பலர் இன்னும் புரியவில்லை. தமிழ் பேசும் சமூகத்துக்கு விபுலானந்தரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டலாகவும் எடுத்துக் காட்டாகவும் அமையும்.
ஈழநாட்டில் பிறந்து உலகத்துக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்த நமது விபுலானந்தரை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். இசையாராச்சியில் ஈடுபட்டுழைத்து யாழ்நூலை தமிழுலகத்துக்குத் தந்தவர். சாதி, சமய, இன, மொழி பேதங்களைக் கடந்து மனிதர்கள் எல்லோரும் ஒரே குலம். ஒருவனே தேவன் என்ற அறநெறியில் வாழ்ந்து காட்டிய உத்தமனை நாமெல்லோரும் போற்றி உலகத்தோருக்குப் புரியவைப்போம்.
தொடர்ந்தும் இக்கைங்கரியத்தை சுவாமி விபுலானந்தரின் நினைவு நாளாகக் கொண்டாட வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்களது பேரவாவாகும். இவற்றை வெறும் புகழுக்காக அல்லாது நமது மண்ணில் பிறந்து கல்விக்காகவும் மக்களுக்காகவும் தம்மைத் தியாகம் செய்த உத்தமர்களை மனங்கொண்டு வாழ்த்திப் போற்றவேண்டும். இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இவை அமையவேண்டும்.இந்த வகையில் கிழக்கு மகாண முதலமைச்சர் மாண்புமிகு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் திரு.சி.தண்டாயுதபாணி அவர்களும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். எம். ரி. ஏ. நிசாம் அவர்களும், அவர்களுடன் தோழோடு தோள் கொடுத்து உழைத்த அனைத்து அன்புள்ளங்களும் வெகுவாகப் பாராட்டபட வேண்டியவர்களே. என்றென்றும் நினைவில் கொள்ளவேண்டியவர்களே. அவர்கள் அனைவரும் பெருநன்றிக்குரியவர்கள் எனப் போற்றுவோம்.

நன்றி
இந்த நூலில் பல அறிஞர் பெருமக்களது ஆக்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் நிறையவே உண்டு. தனித்தனியே அந்நூல்களை அடிக்குறிப்பாக்கிப் போடமுடியாதுள்ளேன். தங்களது கருத்துக்கள் இடம்பெறுவதைக் கண்ணுற்றால் உங்களது ஆக்கங்களால் இந்நூல் பெருமையுறுவதாகப் பெருமனம் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆசிரியர்.

Read more...

பயிலுநர் ஆசிரியர்.
1908ம் ஆண்டு ‘கேம்பிறிஜ்’ பரீட்சை நடந்தது. அப்பொழுது அவருக்குப் பதினாறு வயது. ‘கேம்பிறிஜ்’ பரீட்சையில் வெற்றி பெற்றார். அவரின் திறமையைப் பலரும் பாராட்டினார்கள். சிறப்பாகச் சித்தியெய்திய மயில்வாகனத்தை சென் மைக்கல் கல்லூரி ஆசிரியர் பதவி கொடுத்துக் கௌரவித்தது. பயிலுநர் ஆசிரியராகப் பதவியினைத் தொடர்ந்தார். 1909 முதல் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகக் கடமையாற்றினார். 1911ம் ஆண்டில் மயில்வாகனம் தனது அன்னையை இழந்தார். அந்தச் சோகம் அவரை வாட்டியெடுத்தது. அதனால் கல்முனை புனித மரியாள் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
ஆசிரியர் கற்பித்தல் துறையில் பயற்சியினைப் பெற்றிருக்க வேண்டும். அப் பயிற்சியைப் பெறவிரும்பினார். மகரகமை ஆசிரிய பயிற்சிக் கல்லூரி உட்புகுமுகத் தேர்வை எழுதினார்.பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாண்டுக் கால ஆசிரியர் பயிற்சியின் போது பலவிடயங்களைக் கற்றறிந்தார். அத்துடன் கொழும்பில் பல நல்லறிஞர்களின் நட்பையும் பெற்றார். பயிற்சியின் போது அங்கே விரிவுரையாளராகக் கடமையாற்றிய தென்கோவை கந்தையாபிள்ளையிடம் பழந்தமிழ் இலக்கியங்களையும், தமிழ் இலக்கணத்தையும் பயின்றார்.
ஆசிரியர் பயிற்சியின் போது இலங்கை அரசினரால் பெருமதிப்புப் பெற்ற கலைச்செல்வராகிய கைலாசபிள்ளை முதலியார் அவர்களைச் சந்தித்துச் சிலப்பதிகாரத்தைக் கற்றார். “கலைச்செல்வராகிய கைலாசபிள்ளை முதலியார் அவர்கள் பரம்பரைக் கலைவாணர் குலத்தில் உதித்தவர். பழைய இசைமரபு தவறாது கம்பீரமான குரலிலே மங்கல வாழ்த்துப் பாடலினைப் பாடக்கேட்டது இன்னும் என் அகச்செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது”. என சுவாமி விபுலானந்தரே யாழ்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1912ல் ஆசிரியர் பயிற்சி முடிந்தது. பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியானார். சென் மைக்கல் கல்லூரியில் மீண்டும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். மயில்வாகனம் தனது மாணவர்களுக்கு மிகத் திறமையாகக் கற்பித்தார். ஆசிரிய பயிற்சியினைப் பெறாது கற்பித்ததையிட்டு அசைபோட்டுப் பார்த்தார். பயிற்சி பெற்றதன் பின்னர் தான் கற்பிக்கும் முறையினையும் கண்டு பிரமித்தார். கல்வி உளவியலைக் கற்றதனால் அவர் பெற்ற நன்மைகளை எண்ணிப் பார்த்தார்.
மாணவர்களின் சந்தேகங்களை எளிய முறைகளைக் கையாண்டு தீர்த்தார். அவர்களுடன் அன்பாகப் பழகினார். இரண்டாண்டுகள் சிறந்த ஆசிரியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து வாசித்தார். அத்துடன் பல கட்டுரைகளையும் எழுதினார். சென்மைக்கல் கல்லூரியின் 1914ம் ஆண்டு வெளிவந்த வருடாந்த மலருக்கு அவர் எழுதிய (ழுரச ஐகெயவெ னுநியசவஅநவெ) ‘மழலையர் பிரிவு’ அற்புதமான கட்டுரையாகும். 1872ல் தொடங்கப்பட்டட சென்மைக்கல் இக்கல்லூரி இப்போது சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரியதாக ஏற்றம் பெற்றுள்ளது.
இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி
1903ல் கொழும்பில் இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1915ல் மயில்வாகனம் இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியில் நுழைந்து 1916ல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றார். ஆசிரிய பயிற்சியின் போதும், தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும்போதும் தென்கோவை வித்துவான். கந்தையாபிள்ளை, முதலியார்; சிற். கைலாயபிள்ளை, வதிரி வித்துவான் சி. தாமோதரம்பிள்ளை ஆகிய தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றார்.
அதன்பேறாக மதுரைச் தமிழ்ச்சங்கத்தால் நடத்திய பரீட்சையில் தோற்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையில் இருந்து முதன்முதலாக பண்டிதர் பட்டத்தைப் பெற்ற பெருமை மயிலவாகனனையே சாரும். பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற திறனுடன் பண்டிதர் பட்டமும் சேர்ந்து கொண்டது. உழைப்பால் உயர்ந்த பண்டிதர் மயில்வாகனம் படித்துக் கொண்டே இருந்தார்.
‘கல்வி கரையில’ என்பதவர் கொள்கை. திறமை சாலிகளுக்கு எந்நாளும் கதவு திறந்தே இருக்கும். முயற்சிக்கு எந்நாட்களிலும் மதிப்பு இருக்கத்தான் செய்யும். ‘நீ எதுவாக வரவேண்டும் என்று விரும்புகிறாயோ ஒருநாளைக்கு அதுவாக வந்தே தீருவாய்.’ என்பதற்குப் பண்டிதர் மயில்வாகனம் சான்றாக விளங்கினார
இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், கதையும் இசையும். நாடகமும் கலந்து ஓருருவான இலக்கியத் திருவுருவம். எனினும் இந்நூலின் அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை என்பவற்றில் காணப்படும் இசை நாடகச் செய்திகளுக்கு விளக்கமளிக்கத் தமிழறிஞர்களால் முடியவில்லை.
முத்தமிழ்க் காப்பியத்தினை முற்றும்படித்து இன்புறுவதற்கு ஏற்ற கருவியாக இசையியல் நாடகவியல்களை ஆராய்ந்து தெளியவேண்டும். இதனைச் சுவாமி விபுலானந்தர் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை நாடக நுணுக்கங்களைத் துருவி ஆராயத் தொடங்கினார்.
தமிழிலக்கிய இலக்கண நூல்களில் இருந்த ஆழ்ந்த அறிவும், கணிதம். பௌதிகம், பன்மொழியாற்றல் சிலப்பதிகார இசை நாடக நுட்பங்களை வெளிக்கொண்டுவர பேருதவியாகின. சிலப்பதிகாரத்தை முத்தமிழ் என்ற வட்டத்தில் இருந்து பிரித்தெடுத்து அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதன் நல் விளைவுதான் மதங்கசூளாமணியாகவும், யாழ் நூலாகவும் பின்னர் மலர்ந்தன.
கொழும்பு தொழில் நுட்பக்கல்லூரி;யில் டிப்ளோமா பரீட்சைக்குத் தோற்றினார். பரீட்சையில் தேறியவுடன் அக்கல்லூரி அவரை இராசாயன விரிவுரையாளராகத் தேர்ந்தெடுத்தது. அதனை விரும்பியேற்றார். தனது பணியைச் செவ்வனே செய்தார். அவரது பெருமை இலங்கை எங்கிலும் பரவியது. படித்தோர் மட்டத்திலும், அறிஞர்கள் மத்தியிலும் மயில்வாகனத்தின் பெயர் பேசப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியர் தேவையிருந்தது. மயில்வாகனத்தை விஞ்ஞான ஆசிரியராகச் சேவைக்கு அழைத்தது. சம்பத்தரிசியார் கல்லூரியின் அழைப்பை ஏற்றுச் சென்றார். ஆசிரியராகத் தனது சேவையைத் தொடங்கினார். மாணவர்களுக்குக் கற்பிக்கும் அதேநேரம் தானும் கற்றலில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் குருநகருக்கு அருகில் உள்ள மரகத மடத்தில் (ஐஅயசயடன ஐnn) சில காலம் தங்கியிருந்தார்.
பின்னர் ஆனைப்பந்தியில் இருந்த விவேகானந்த சபையில் குடியிருந்தார். கற்றுக் கற்பிக்கும் முறையினால் ஏற்படும் நன்மைகளைப் புரிந்து கொண்டார். கல்லூரியில் ஆசிரியர் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதற்குப் பண்டிதர் மயில்வாகனம் சிறந்த சான்றாக விளங்கினார். அதற்கு சம்பத்தரிசியார் கல்லூரி உதவியாக இருந்தது. லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி பரீட்சைக்குத் தன்னைத் தயார்ப்படுத்தினார். அப்பரீட்சையில் தோற்றி 1920ல் பி.எஸ.;சி பட்டத்தைப் பெற்றார். மயில்வாகனம் பன்மொழிப் புலவராக விளங்கினார்.
மயில்வாகனம் பி.எஸ்.சி – அதிபர்
திருவிளங்கத்தார் மானிப்பாய் தந்த மூதறிஞர். அவர் மானிப்பாயில் இந்துக்கல்லூரியின் முகாமையாளராக இருந்தார். அவர் திருப்புகழுக்கு உரையெழுதியவர். மானிப்பாய் இந்துக்கல்லூரி சிறந்ததொரு அதிபரைத் தேடிக் கொண்டிருந்தது. பண்டிதர் மயில்வாகனத்தின் மொழிப் புலமையையும் ஆற்றலையும் வழக்கறிஞர் திருவிளங்கத்தார் அறிந்தார். அந்தப் பதவி புனிதமும் உயர்வும் அடையும் என்றெண்ணினார். மயில்வாகனத்தினால் தனது கனவு நிறைவேறும் என நினைந்தார். அதற்குத் தகுதியுடையவர் மயிலவாகனம்தான் என்று முகாமையாளர் தீர்மானித்தார்.
அந்தப் பதவி புனிதமும் உயர்வும் அடையும் என்றெண்ணினார். மயில்வாகனத்தை அணுகி தனது விருப்பத்தை எடுத்தியம்பினார். மயில்வாகனமும் மறுக்காது அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார். விஞ்ஞானக் கல்விக்கு ஆய்வுகூடம் அவசியம் என வலியுறுத்தினார். மயில்வாகனனின் தலைமையில் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஏற்றம்பெற்றது. அதனை நிறுவும் முயற்சியில் இறங்கி ஆய்வு கூடத்தை நிறுவினார். சதாசிவ ஐயர் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உழைத்தவர். அதேபோல் பண்டிதர் மகாலிங்கசிவம் தமிழ்ப்பற்றுள்ளவர். இவர்களது நட்பு பண்டிதர் மயில்வாகனத்துக்குப் பெருந்துணையாயிற்று. இவர்களடன் சேர்ந்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தைத் தொடங்கினார். அதற்கெனப் பாடத்திட்டத்தையும் வகுத்தனர். இன்று ஆயிரக்கணக்கான பண்டிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். இன்னும் பலருக்கு ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் களமமைத்துக் கொடுக்கிறது.
பண்டிதர் மயில்வாகனம் யாழ்ப்பாணத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் வரை வாழ்ந்தார். அக்காலத்தில் அரிய பணிகளை ஆற்றினார். பல தமிழறிஞர்களின் நட்புக்கிட்டியது. அதிபரின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினார். திருவிளங்கம் பிள்ளை கொழும்பில் இருந்தார். அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் வருவார். பண்டிதர் மயில்வாகனத்துக்கும் யோகர் சுவாமிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டது. திருவிளங்கம் பண்டிதர் மயில்வாகனத்தின் விடுதிக்கு வருவார். அப்போது யோகர் சுவாமிகளும் வருவார்.
யாழ்ப்பாணத்தின் சிறந்த அறிஞர்களும் வருவார்கள். சமயப் பிரசங்கங்கள் நடைபெறும். பக்தி மயமாக இருக்கும். உலக வாழ்க்கை பற்றிய விவாதங்கள் நடைபெறும். அடிமட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தார். யோகர் சுவாமியின் நடத்தைக் கோலங்கள் ஆச்சரியமாக இருந்தன
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தமது விடுதியில் விவேகானந்த சபையை நிறுவினார். 1917ல் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்துறவியான சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். அப்பொழுது இச்சபை முன்னின்று தொண்டாற்றியது. சுவாமி சர்வானந்தருக்கும் பண்டிதர் மயில்வாகன்துக்கும் இடையில் நட்பு வளர்ந்தது. அந்த நட்பு ஆன்மீகம் கலந்ததாக அமைந்தது. மக்கள் சேவைதான் மகேசன் சேவை என்னும் அருட்டுணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது. சுவாமி சர்வானந்தரின் வருகையும், நட்பும் வழிகாட்டலும் கிடைத்தது. பண்டிதரின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் துளிர்விடத் தொடங்கியது.
ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கம்.
இந்தியாவில் கல்கத்தா பெரியதொரு நகரம். கங்கைக்கரையில் உள்ளது. அதனை இப்போது கொல்கொத்தா என அழைப்பார்கள். கொல்கொத்தாவின் வடக்கே வேலூர் உள்ளது.
வேலூரில் பஞ்சவடி தீரத்தில் தட்சநேஸ்வர ஆலயம் இருக்கிறது. இங்குதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சதேவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந்தவமிருந்தார். உலகத்தை உய்விக்க வேண்டிப் பல அவதார புருசர்கள் தோன்றினார்கள். தட்சநேஸ்வர ஆலயம்அவர்களுள் ஒருவர்தான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். அவரது சீடர்களாக பதினெட்டுப் பேர்கள் இருந்தார்கள். அவர் தனது சீடர்களுக்கு ஞானோபதேசம் செய்து மறைந்தருளினார்.
கடவுளைப் பற்றிய தேடலில் இறங்கிய இளைஞனாக நரேந்திரன் விளங்கினான். ஸ்ரீஇராமகிருஷ்ணர் அவனை ஈர்த்து ஞானோபதேசம் செய்தார். நரேந்திரன் துறவு பூண்டு விவேகானந்தர் ஆனார். சுவாமி விவேகானந்தர் உலக நாடுகளில் இந்து தர்மத்தின் புகழைப்பரப்பினார்.
வேலூரில் ஸ்ரீஇராமக் கிருஷ்ண சங்கம் அமைந்தது. அதுவே தலைமைச் செயலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் சின்னம் மிகவும் அழகாக உள்ளது.
உலகின் பலபாகங்களிலும் ஸ்ரீ இராம கிருஷ்ண சங்கம் மக்களுக்காகச் சேவை செய்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணிச் சேவை செய்வதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் பணியாகும். வங்கதேசத்தின் இளைஞன்தான் தாரக். பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச தேவரினால் ஈர்க்கப்பட்டுத் துறவு பூண்டவர்.
உலகின் பலபாகங்களிலும் ஸ்ரீ இராம கிருஷ்ண சங்கம் மக்களுக்காகச் சேவை செய்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணிச் சேவை செய்வதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் பணியாகும். வங்கதேசத்தின் இளைஞன்தான் தாரக். பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச தேவரினால் ஈர்க்கப்பட்டுத் துறவு பூண்டவர். பின்னர் சுவாமி சிவானந்தராகச் சேவை செய்தவர். இவர்கள் ஸ்ரீ இராமகிருஷ்ண பமஹம்சரின் நேரடிச் சீடர்கள். சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்து இலங்கைக்கும் வந்தார். இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களைத் தரிசித்தார்.
விவேகானந்தர் ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளைப் பரவ வழிசமைத்தார். ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளை ஸ்ரீஇராம கிருஷ்ண சங்கத்தின்
துறவிகள் இலங்கையிலும் வேரூன்றச் செய்தார்கள். சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.
பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளத்தை ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகள் ஆட்கொண்டு விட்டன. பரமஹம்சரின் போதனைகளில் அதிக ஈடுபாடு கொண்டார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளம் துறவைநாடிச் சென்றது. உலக இன்னல்களுக்குக் காரண காரியம்தேடிப் புறப்பட்ட சித்தார்தன்போல் மயில்வாகனமும் புறப்பட்டு விட்டார்.
பிரபோத சைத்தன்யர் எனும் பெயருடன் துறவறம்
1922ல் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமக்கிருஷ்ண மடத்தை அடைந்தார். தனது அங்கலாயும் உள்ளத்துக்கு ஸ்ரீராமக்கிருஷ்ண மடம் விருந்தளித்தது. அங்கே பிரமச்சரிய விரதம் பூண்டு துறவு மார்க்கத்தில் காலடியைப் பதித்தார். தந்தையாரிட்ட மயில்வாகனம் பெயர் நீங்கியது. பிரபோத சைத்தன்யர் என்ற பிரமச்சரியப் பெயரால் அழைக்கப் பெற்றார்.
மடத்தின் அமைதியும், சாந்தமும் அவரை ஆட்கொண்டு விட்டது. தியானம் அவரை நிதானிக்க வைத்தது. நிறைய வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்களின் எழுச்சிக்காக விரிந்தது. பண்டிதராய் இருக்கும் போது தொடர்ந்த தமிழ்ப்பணியையும், சமயப்பணியையும் தொடர்ந்தார்.
ஏழைகளின் கண்ணீரில் இறைவனைக் காணமுடியும் என்பதைப் புரிந்து கொண்டார். படமாக இருக்கும் பரமனுக்கு அன்பின் நிமித்தம் நாம் ஒன்றைக் கொடுத்தால், அது அருக்குப் போய்ச் சேராது. அதே பொருளை அவனாகக் கருதி நடமாடும் ஏழைக்குக் கொடுத்தால் படமாக இருக்கும் பரமனுக்குச் சேரும் எனத் திருமூலரின் கூற்றாகும். திருமூலரின் சிந்தனை அவரைச் சிக்கெனப் பற்றிக் கொண்டது.‘படமாடக் கோயில் பரமர்க்கு ஒன்றீந்தால்நடமாடக் கோயில் நம்மவர்க்கு அது ஆகாநடமாடக் கோயில் நம்மவர்க்கு ஒன்றீந்தால்படமாடக் கோயில் பரமர்க்கு அது ஆகும்மே’
என்பதன் தாற்பரியத்தை உணர்ந்து கொண்டார். அந்த உணர்வுதான் மட்டக்களப்புக்குக் கல்விப் பயிர் செழிக்க உதவியது.
பத்திரிகை ஆசிரியராகப் பணி
ஸ்ரீராமக்கிருஷ்ண சங்கம் தமிழில் வெளியிடும் ஸ்ரீராமக்கிருஷ்ண
விஜயம், ஆங்கிலத்தில் வெளியிடும் வேதாந்தகேசரி மாதாந்த இதழ்களின் ஆசிரியராகச் சேவைசெய்தார். அரிய பல கட்டுரைகளையும் எழுதினார். இக்கட்டுரைகளை எழுதியவர் பண்டிதர் மயில்வாகனம் எனக் குறிப்பிடப்பட்டது. சில நாட்களின் பின்னர் பிரபோத சைத்தன்யர் எனக்குறிப்பிடப்பட்டது. துறவு மார்க்கத்தில் செல்லுவதற்குரிய பயிற்சிகளிலும் தன்னை ஆழ்த்திக் கொண்டார்.
ஸ்ரீராமக்கிருஷ்ண விஜயத்தில் பெரும்பாலும் சமயம்சார்ந்த ஆக்கங்களையே எழுதினார். அருநிதியம் விலை சரசம், அறத்துப்பாலாராய்ச்சி, உறக்கமும் விழிப்பும், வரகுணதேவர் சரித்திரம், விநாயகக்கடவுள், வினைப்பயன், வைதிகநெறி, தமிழ்மொழியின் தற்கால நிலையும் தமிழரது கடமையும், உயிர்வாழ உழைப்பு, அழுத பிள்ளை பால்குடிக்கும், நம் நாட்டின் பெருமை, பெரியோரின் வாழ்க்கையும் அவரது திருநட்சத்திரங்களும், மாதவர் நோன்பும் மடவார் கற்பும் மன்னவர் நீதியும், மானிடனும் அவன் மனத்தின் ஆற்றலும், இளமைப்பருவத்தின் பெருவனப்புப் போன்ற பல கட்டுரைகளை எழுதினார். சிலப்பதிகாரத்தினுள் புதைந்திருந்த இசை நாடக நுணுக்கங்களையும் ஆராயத் தொடங்கினார்.
ஸ்கொட்லாந்தின் புகழ்பெற்ற கவிஞர் வால்டர் ஸ்கொட.; ஸ்கொட்லாந்தின் யாழைத்தேடி எழும் ஏக்கக் குரலாக லேடி ஒஃப் த லேக்(டுயனல ழக வாந டுயமந) எனும் அழகிய கவிதையில் மூழ்கி அதனை ‘நீர்நிலைக் கன்னிகை’ என்ற தலைப்பிட்டு மொழி பெயர்த்து எழுதினார். அதன் சாரம் இவ்வாறுள்ளது.
“நல்யாழே துயிலொழிந்து எழுவாயாக, நினது நரம்புகளில் படருங் கையானது பயிற்சியற்ற கையெனினும் செழிய பழம் பாடல்களின் இன்னொலியை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா? நின் இசைக்கு ஒர் இதயமாவது துடிப்புறு மெனின், நின் செயல் வீண் செயலாகாதல்லவா? நீ இன்னும் வாய் திறவாதிருத்தல் தகுதி யன்று. சித்தத்தைக் கவரும் வனமோகினியே, எழுந்திரு!இன்னும் ஒருமுறை எழுந்திரு”
வால்டர் ஸ்கொட்டின் பாடல் அடிகளது உள்ளத்தை உருக்கி உள்ளொளியைத் தூண்டியது.
தமிழரின் சொத்தான யாழ்கள் துயிலில் மூழ்கியிருப்பதை உணர்ந்தார். அவற்றை மீட்டெடுக்க ஆராய்ச்சியில் இறங்கினார். வேதாந்த கேசரியில் அரிய ஆங்கிலக் கட்டுரைகளை எழுதினார்.
மொழிபெயர்ப்புக் கலை
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ் மொழியில் பெர்ததல் வேண்டும்” என்ற பாரதியின் கனவுக்கு உயிர் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தரே. ஒரு மொழியில் உள்ளதை இன்னொரு மொழிக்கு மாற்றிச் சொல்வது ஒரு கலை. அக்கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். மொழி மாற்றம் செய்யும்போது மூலக்கரு சிதையாவண்ணம் பாரத்துக் கொள்ளவேண்டும் என்று கூறியவர். பிறமொழி இலக்கியங்களைக் கற்று தான் சுவைத்தவற்றைத் தமிழில் மொழிமாற்;றம் செய்து பல பத்திரிகைகளில் வெளியிட்டார். லத்தின் மொழியில் உள்ள ‘எயினெயிட்’; என்ற நூலைத்; ‘ஏநேய காவியம்’ என தமிழில் எழுதினார். ஷேக்பியரை செகப்பிரியர் என்று பெரிட்டழைத்தவர் விபுலாநந்தர். ஷேக்ஸ்பியரின் சிறந்த ஆக்கங்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கூற்றை செயல்மூலம் உணர்த்தியவர். தமிழின் தொன்மையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார். மதங்கசூளாமணியில் அவர் எடுத்துக் காட்டியலில் சேக்ஸ்பியரின் கவிதைகளை சிதைவின்றி மொழி பெயர்த்துக் காட்டியதைத் தமிழ் உலகம் வியக்கிறது.
யூலியஸ்சீசர் உரோம மக்களின் பண்டைய தலைவன். உரோமப்பேரரசை விரிவு படுத்தியவன். அவன் புகழ் கண்டு அவனது நண்பர்கள் பொறாமை கொண்டனர். சீசரைக் கொல்லத் திட்டமிடுகின்றார்கள். சீசரின் மனைவி கல்பூர்னியா தீயகனவு காணுகிறாள். அரச சபைக்குப் போகவேண்டாம் என்று கெஞ்சுகிறாள். தடுக்கிறாள். சீசர் புன்னகைத்தவாறே பதிலளிக்கிறான். அதனை சேக்ஸ்பியர் அழகாகச் சித்தரிக்கிறார். நம் அடிகள் அதனை மொழிமாற்றம் செய்து மூலக்கரு சிதைவுறாது வீறுபெறச் செய்கிறார். அவரது மொழிமாற்றம் அற்புமதாக உள்ளது.
“அஞ்சினார்க்குச் சதமரணம், அஞ்சாத நெஞ்சத்துஆடவர்க்கு ஒரு மரணம் அவனிமிசைப் பிறந்தோர்துஞ்சுவர் என்றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும்துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை செய்பவன்நான்இன்னலும் யானும் பிறந்ததொரு தினத்தில் அறிவாய்இளம் சிங்கக்குருளைகள் நாம்: யான் மூத்தோன்எனதுபின் வருவது இன்னல் எனப் பகைமன்னர் அறிவார்பேதுறல் பெண்ணங்கே யான்போய் வருதல் வேண்டும்”
எனத் தன் மனைவிக்குக் கூறிச் செல்கிறான். சீசரின் அஞ்சாமையை அழகாகக் காட்டுகிறார். இதேபோல் அற்புதமான எடுத்துக் காட்டுகளை மதங்க சூளாமணியில் காணலாம்.
சிறந்த ஆங்கிலப் புலவர்களாகிய மில்ரன், வேட்ஸ்வேர்த்,ஷெல்லி, கீற்ஸ் போன்ற பலரின் கவிதைகளைத் தமழில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்தார். நோர்வே நாட்டைச்சேரந்த் நாடகாசிரியர் இப்சனின் ஆக்கங்களையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். வங்ஙக் கவி ரவீந்திநாத் தாகூரின் ஆக்கங்களையும் அறிமுகம் செய்துள்ளார்.
கட்டுரையாசிரியர் - எழுத்துப்பணி
சுவாமி விபுலானந்தர் சிறந் எழுத்தாளர். அவர் காலத்தில் இருந்த பத்திரிகைகளுக்கு நிறையவே எழுதினார். தான் ஆசிரியராக இருந்த ஸ்ரீராமக்கிருஷ்ண விஜயம், ஆங்கிலத்தில் வெளிவந்த வேதாந்தகேசரி மாதாந்த இதழ்களில் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் கலைமகள், மணிக்கொடி, மஞ்சரி, நலசக்தி, குமரன், செந்தமிழ், தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, இந்து சாதனம், இலங்கையில் வெளிவந்த விவேகானந்தன், ஈழகேசரி, ஆகிய பத்திரிகளுக்கும் எழுதினார். இலங்கையில் அமையவிருக்கும் பல்கலைக்கழகம் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி ‘இந்து ஓகன்’ (ர்னைனெர ழுசபயn) பத்திரிகையில் தொடர் கட்டுரைகளை எழுதினார். யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமையவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விவேகானந்தன் பத்திரிகையில் எழுதினார். விவேகானந்தன் பத்திரிகையில் வெளியான பதிநாலு கட்டுரைகளைத் தொகுத்து ‘விபுலானந்தர் உள்ளம்’ என்ற தலைப்பில் 1976ல் ச. அம்பிகை பாகன் வெளியிட்டார்.
கலைச்சொல்லாக்கப் பணி
பாரதியின் ஏற்றமிகு கருத்துக்களை விபுலாநந்தர் செயல்மூலம் சிறப்படையச் செய்தவர். அதிலொன்று கலைச்சொற்களை உருவாக்குவதாகும். தமிழ்மொழி உயர்நிலை அடைவதற்கு அறிவியல் நூல்கள் வேண்டும். அறிவியல் நூல்களை எழுதுவதற்குக் கலைச் சொற்கள் முக்கியம். ஆகவே கலைச் சொல்லாக்கத்தினை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1934ல் சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டில் சொல்லாக்கக் கழகம் உருவாயிற்று. இச்சொல்லாக்கக் கழகத்தின் பொதுத்தலைவராக விபுலாநந்த அடிகளாரே தெரிவு செய்யப்பட்டார். சொல்லாக்கக் கழகம் 1934 ஒக்டோபர் 14ந் திகதி தனது வேலையைத் தொடங்கியது. கணிதம், பௌதிகம், வேதியல். தாவரவியல், விலங்கியல். உயிரியலும் நலவியலும், புவியியல், வரலாறு, வேளாண்மை போன்ற ஒன்பது தலைப்புக்களில் கலைச்சொல்லாக்கக் குழுக்கள் தமது கடமைகளில் ஈடுபட்டன. பொதுத்தலைவராகக் கடமையாற்றிக் கொண்டு, பௌதீகவியற் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார். 1935, 1936ம் ஆண்டுகளில் புதியகலைச் சொற்கள் ஆக்கப்பட்டன.
கலைச் சொற்களை ஆக்கும்போது முகக்pயமான கருத்துக்களை வெளியிட்டார். முதலில் தமிழில் உள்ள மருத்துவ, தத்துவ நூல்களை ஆராயும்ப டிவற்புறுத்தினார். அவற்றுள் பொதிந்து கிடக்கும் விஞ்ஞான நுண்மொழிச் சொற்களை தெரிந்தெடுக்க வேண்டும். அவற்றின் பொருளை நிச்சயித்துக் கொள்ளவும் வேண்டும். சுருக்கம், விளக்கம், தெளிவு, தமிழுருவம் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளும்படி தெளிவு படுத்தினார். வழக்கில் உள்ள சொற்களைப் புறக்கணியாது அவற்றையும் சேர்க்கும்படி கூறினார். பொருத்தமான தமிழ் மொழிச் சொற்கள் கிடையாது போகுமிடத்து தமிழ்மணம் குன்றாமல் சொற்களை ஆக்கலாம் என்றார்.
1936ம் ஆண்டு சேர் . சீ. பி. இராமசாமி ஐயரவர்கள் மகாநாட்டினைத் திறந்து வைத்தார். சுவாமி விபுலாநந்தர் தலைமையில் மகாநாடு நடந்தேறியது. ஒன்பது துறைகளையும் சேர்ந்த அறிஞர்களது பதினாயிரம் கலைச் சொற்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. 1938ம் ஆண்டு சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினால் “கலைச்சொற்கள் அகராதி“ வெளியிடப் பட்டது. “…இவ்வாறு அடிகளார் தொடங்கி வைத்த நன்முயற்சியினால் விஞ்ஞானக்கலை இன்று தமிழில் விரைவாக வளர்ந்து வருகின்றது…” எனப் பேராசிரியர் அமரர் கணபதிப்பிள்ளை கூறியுள்ளார்.சுவாமி விபுலானந்தா தனது கடும் பயிற்சியினால் துறவறவாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அடைந்துவிட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடுந்தவம் நோற்றார். ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர்களாக பதினெட்டுப் பேர் இருந்தார்கள். முதன்மைச் சிடராக சுவாமி விவேகானந்தர் விளங்கினார். அவரைத் தொடர்ந்து பலர் இருந்தார்கள். அவர்களுள் ஒருவர் சுவாமி சிவானந்ததர் ஆவார். பிரபோத சைத்தனயரின் பக்குவத்தை உணர்ந்தார்கள்.
1924 சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி கூடிவந்தது. சுவாமி சிவானந்தர் பிரபோத சைத்தன்யரை அழைத்து ஞானோபதேசம் கொடுத்தார். தொடர்ந்து ‘விபுலானந்தா’ என்ற துறவறப் பெயரைச் சூட்டினார். தந்தையார் சூட்டிய மயில்வாகனம் எனும் பெயரைத் துறந்தார். பண்டிதர் மயில்வாகனம் .பி.எஸ்.சி என்ற தகைமைப் பெயர் நீங்கியது.
பிரபோத சைத்தன்யர் என்ற மடாலயப் பெயரும் நீங்கியது.‘சுவாமி விபுலானந்தா’ என்ற துறவறப் பெயர் வந்து சூழ்ந்து கொண்டது. சேரத்து இளங்கோவைப்போல் ஈழத்து விபுலாநந்தர் உருக்கொண்டார்.

இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார். சிலப்பதிகாரத்தினுள் இளங்கோ அடிகள் புகுத்திய இசைநாடக மரபினை ஆராய்ந்து தமிழ் உலகத்துக்கு அளிக்க விபுலானந்தர் வந்தார். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, என்பவற்றில் காணப்படும் இசை நாடக ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். தமிழரின் சொத்தான யாழ்களை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியிலும் இறங்கினார். 1924ல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தமது இருபத்து மூன்றாம் ஆண்டு உற்சவ விழாவைக் கொண்டாடினார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக ஹைகோட் வக்கீல் திரு.வு.ஊ. சீனிவாச ஐயங்கார் இருந்தார்கள்.
அந்த ஆண்டு விழாவிலே பெரும் புலவராகிய மஹாமஹோபாத்தியாய சாமிநாதையர் தலைமை வகித்தார். இளந்துறவி இவ்விழாவில் கலந்து கொண்டு “நாடகத் தமிழ்” என்ற சொற்பொழிவு மூலம் தான்கண்ட இசைநாடக முடிபுகளை வெளியிட்டார். இதுவே பின்னர் “மதங்கசூளாமணி” என்ற நூலாக வெளிவந்தது.
இளந்துறவி விபுலாநந்தருக்குப் பல பணிகள் காத்திருந்தன. இலங்கை மக்களுக்கு அவரது சேவை அவசரமாகத் தேவைப்பட்டது. சர்வானந்தர் இளந்துறவியை அழைத்தார். திருகோணமலைப் பயணம் பற்றிக்கூறினார். அங்கு ஆற்றவேண்டிய சேவைகளைப் பற்றி எடுத்துரைத்தார். இலங்கைப் பயணம் தொடங்கியது.
இலங்கையில் ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்கப் பாடசாலைகள்.
1924 டிசம்பர் மாதம் சர்வானந்தர் விபுலானந்தருடன் திருகோண மலைக்கு வருகை தந்தார். இலங்கையில் ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்கப் பாடசாலைகள் சிலவே இருந்தன. அவற்றை மைலாப்பூரில் உள்ள ஸ்ரீ இராமக் கிருஷ்ண சங்கமே மேற்பார்வை செய்தது.

அப்போது இலங்கை அரசாங்கத்தின் சட்ட அங்கீகாரம் இல்லாதிருந்தது. அதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் சுவாமி சர்வானந்தர் ஈடுபட்டார்.
வட இலங்கையில் ஆறுமுக நாவலரின் அரியசேவை வேரூன்றியிருந்தது. சைவ பரிபாலன சபையும், இந்து மகாசபையும் அனுசரணையாக இருந்தன. ஆறுமுக நாவலரும் கிறிஸ்தவப் பாடசாலையிலேயே கல்வி கற்றவர். விவிலியநூலை நன்கு கற்றுணர்ந்தவர். அதனை தமிழில் மொழிபெயர்த்தவர்.
வேற்றுச் சமயத்தைக் கற்றால்தான் தனது சமயத்தின் மகிமை புரியும். எல்லாச் சமயங்களும் அன்பினையே சுட்டிக்காட்டுவன. வேற்றுச் சமயக்கருத்துக்களை அவர் ஏற்கவில்லை. சைவசமயத்தின் உள்ளார்ந்த தத்துவத்தை உணர்ந்தார்.
தமிழ் மொழியின் அருமையையும், பெருமையையும் உணர்ந்தார். இளம் துறவி சுவாமி விபுலானந்தரின் தோற்றம்.அதனால் சைவசமயத்தின்பால் அவரது பற்று வளர்ந்தது. ஆங்கிலக் கல்வியின் தேவையை உணர்ந்து அம்மொழியைக் கற்றுத்தேறவும். அதே வேளை தமிழைக் கற்கவும் பிடியரிசி முறையைக் கைக்கொண்டு கல்விப் பயிர் வளர்த்தார். தமிழுக்காகவும், சைவத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஆறுமுக நாவலரை விபுலாநந்தர் வியந்து போற்றினார். ஆறுமுக நாவலரின் மேல் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.
விபுலானந்தரின் சிந்தையில் கிழக்கிலங்கை மக்களது மிகப் பின்தங்கிய வாழ்க்கை முறைகள் பதியத் தொடங்கின. கிழக்கிலங்கையில் ஒரு மாற்றம் தேவை என்பதை உணரத்தொடங்கினார். அந்த மக்களது வாழ்க்கையில் கல்வியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பினார்.
கிழக்கிலங்கையில் விபுலானந்தரின் வருகைக்கு முன்பே பல சைவப் பெரியார்களினால் பாடசாலைகள் தொடங்கப்பட்டிருந்தன. மட்டக்களப்பில் ஆனைப்பந்தி, ஆரையம்பதி, கல்லடி உப்போடை, காரைதீவு, மண்டுர், முறக்கட்டாஞ்சேனை, ஈச்சந்தீவு போன்ற கிராமங்களில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. 1925ல் இவை யாவும் சுவாமி விபுலானந்தர் மூலம் இராமக்கிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
திருகோணமலையில் கிறிஸ்தவப் பாடசாலைகளே அதிகம் இருந்தன. அந்நியரின் ஆட்சி அவர்களது சமயம் பரப்பும் கொள்கைக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. ஐரோப்பியர்கள் தமது சமயத்தைப் பரப்பும் ஊடகமாகக் கல்வியைக் கைக்கொண்டனர். அதற்கெனப் பல்வேறு கிறிஸ்தவ சமயச் சபைகள் தோன்றி தென்னாசிய நாடுகளில் சமயத்தைப் பரப்பின. இலங்கையிலும் அமெரிக்க மிசன்சபை, மெதடிஸ்த சபை, லண்டன் மிசனரிச் சபை, பப்ரிஸ்ற் சபை, சேர்ச் மிசனரிச் சபை, றோமன் கத்தோலிக்க சபை போன்றன தமது சமயத்தைப் பரப்பின.
திருகோணமலையில் 1817 ல் சாமுவேல்பிரோட் பென்ற் என்ற மெதடிஸ்த திருச்சபைக் குருவானவரால் ஆலயங்களும். பாடசாலைகளும் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 1823ல் மூன்று மெதடிஸ்த மிசன் பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. ஒன்று சின்னமுத்தவெளி எனப்படும் றைபிள் கிறீன் விளையாட்டரங்கத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டது. அது இப்போது பெண்கள் கல்லூரியாக இயங்குகிறது. அடுத்து பெருந்தெருவில் அமைந்த பாடசாலையாகும். அது இப்போது விக்னேஸ்வரா மகா வித்தியாலயமாகக் கல்விப் பயிர் வளர்க்கிறது. இன்னுமொன்று உப்புவெளியில் கட்டப்பட்டது. பலலாண்டுகளாக மெதடிஸ்த தமிழ் வித்தியாலயமாகச் சேவைசெய்த பாடசாலை ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயமாக பெயர்மாற்றப்பட்டு விட்டது.
1862ல் நான்கு றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலைகளும்; இயங்கின. 1867ல் ஜூலை 27ல் அருட்தந்தை லூயிஸ் மேரி கீரிங் அவர்களால் புனித சூசையப்பர் ஆங்கிலப் பாடசாலை தொடங்கி வைக்கப்பட்டது. இவை கிறிஸ்தவ சமயத்துக்கும், ஆங்கில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தன. மேல்நாட்டுக் கலாச்சாரப் பாரம்பரியமும் திருகோணமலையில் வேரூண்றத் தொடங்கியது.
ஆங்கிலம் கற்றவர்களை நாடி அரச உத்தியோகங்கள் வந்தன. ஆங்கிலம் கற்றவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்துக் கிடைத்தது. தொழில் வாய்ப்புக் கிட்டியது. சுகபோக வாழ்வும் கிடைத்தது. கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தவர்கள் மதிக்கப்பட்டார்கள். புதிய பாரம்பரியம் உருவாகத் தொடங்கியது. பழையன மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.
சைவசமய வழிபாடடீடங்கள் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டன. ஆங்கிலம் படித்த சமூகத்தின் முன் ஏனையவர்கள் கூனிக்குறுகி நின்றனர். ஆறுமுகநாவலரும், சுவாமி விபுலானந்தரும் அவர்களை நிர்த்த வந்த ஆசான்களானார்கள். அதனைத் தொடர்ந்து புனித மரியாள் கல்லூர் கட்டப்பட்டது
பல இந்து ஆலயங்கள் இருந்தாலும் அதற்கேற்ப இந்துப் பாடசாலைகள் தொடங்கப் படவில்லை. எனினும் சில இந்துப் பெரியார்கள் திண்ணைப் பள்ளிக்கூடங்களை நடத்தினார்கள். ஆர்வங்கொண்ட சில இந்துப் பெரியார்களினால் 1897ல் ஆண்களுக்கான இந்து ஆரம்பப்பாடசாலை தொடங்கப்பட்டது.
1910 இல் இந்து ஆங்கிலப் பாடசாலையும், சைவப் பெரியார்களினால் தொடங்கப்பட்டது. இந்து ஆங்கிலப் பாடசாலையும், கோணேஸ்வர வித்தியாலயமும் 1922 ஆண்டு உத்தியோக பூர்வமாகப் பதியப்பட்டன. அதன் முகாமையாளராக முதலியார் வல்லிபுரம்பிள்ளை இருந்தார். முதலியார் வல்லிபுரம்பிள்ளை அவர்கள் தமது முகாமைத்துவத்துக்குக் கீழிருந்த இந்து ஆங்கிலப் பாடசாலையும், கோணேஸ்வர வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளையும் 01-06-1925ல் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைத்தார்.
சுவாமி சர்வானந்தரும், சுவாமி விபுலானந்தரும் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் இருந்த ரோசாத்தோட்டம் (சுழளந குநைடன) என்ற வீட்டில் குடியிருந்தனர். சுவாமி விபுலானந்தரின் இருப்பு கிழக்கிலங்கைக்கு அத்தியாவசியமாக இருந்தது. இதனை ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கமும் உணர்ந்திருந்தது. 1925ல் விபுலானந்தர் கிழக்கிலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் ஈடுபட்டார். 1925 தொடக்கம் கிழக்கிலங்கையின் கல்வி வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி உதயமாயிற்று எனலாம்.
அதேவேளை பெண்பிள்ளைகளுக்கான பாடசாலையின் தேவையை திருமதி. தங்கம்மா சண்முகம்பிள்ளை உணர்ந்தார். 1923ல் இந்துப் பெண் பிள்ளைகளுக்கான ஆரம்பப் பாடசாலையைத் தொடங்கிவைத்தார். இன்று ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலையாக விளங்குகிறது.
சிவானந்த வித்தியாலயம்.
கிழக்கு மாகாணத்தில் கிறிஸத்தவ மிசனரிப் பாடசாலைகளே அதிகமாக இருந்தன. அரசாங்கமும் அதற்கு உதவியாக இருந்தது. இந்துப்பாரம்பரியத்தில் ஊறிய பெரியார்கள் தமது முயற்சியினால் ஆங்காங்கே இந்துப் பாரம்பரிய பாடசாலைகளை நிறுவி இயக்கி வந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதே நிலை தொடர்ந்தது. சுவாமி விபுலானந்தரின் வருகையினால் இந்துப் பாரம்பரியப் பாடசாலைகளை ஸ்ரீஇராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்தன.
இந்துப்பாரம்பரியத்தில் ஒரு ஆங்கில மொழிமூலப் பாடசாலையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 1925 ஆண்டு மார்ச் மாதம் மட்டக்களப்புப் பெரியோர்கள் கொண்ட மகாசபையைக் கூட்டினார். அடிகளாரது ஆவலைப் புரிந்து கொண்ட பெரியோர்கள் கல்லடி உப்போடையில் பாடசாலை அமைவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். 06-11-1925ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மட்டக்களப்புப் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலமும் 1927ல் கட்டி முடிக்கப்பட்டது.
சிவானந்த வித்தியாலயத்தைக் கவியரசர் தாகூரின் சாந்திநிகேதனை ஒத்ததாக அமைக்கத் திட்டமிட்டார். பாடசாலைகள் நல்ல அமைதியான சூழலில் அமைந்திருப்பது பொருத்தமானது. அதற்கேற்ற இடமாகக் கல்லடி உப்போடை திகழ்ந்தது. ஒருபுறம் கிழக்காக வங்காள விரிகுடாக் கடல் ஆரவாரிக்கிறது. மறுபுறம் இயற்கையழகை அள்ளி வீசும் பாடு;மீன் நிறைந்த மட்டக்களப்புவாவி. இவற்றின் நடுவிலே வெண்மணல்பரப்பிலே வகிடெடுத்து நீண்டு கிடக்கும் மட்டக்களப்பு – கல்முனை கரிய தார்வீதி. வீதியை ஒட்டினாற்போல் சிவானந்த வித்தியாலயம் அமைந்துள்ளது. தனது ஆத்ம குருவான சிவானந்தரின் பெயரைச் சூடி 20 – 04 - 1929 ல் திறக்கப்பட்டது.
பாடசாலை வளாகத்தை ஒட்டினாற்போல் சிவபுரி ஆச்சிரமம். மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதிகள். வேம்பு, மஞ்சவர்ணா, மரமுந்திரிகை மரங்கள் நிறைந்த சோலையாக சிவானந்த வளாகம் பரிணமிக்கிறது. சாந்திநிகேத்தன் இன, மத, மொழி பேதங்களற்று, எல்லோருக்கும் அறிவினை வாரி வழங்குதல்போல், சிவானந்த வித்தியாலயமும் திகழ்வதே அவரது நோக்கமாகும். அதற்கேற்ப இந்துக்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், பொளத்தரும் கல்வி கற்க வழி செய்தார். ஆங்கிலம் போதனா மொழியாக இருந்தாலும், தமிழ், சமஸ்கிருதம், லத்தின், அத்துடன் சிங்களமும் கற்பிக்கும் ஏற்பாட்டைச் செய்தார்.
திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் கல்விப்பயிர் வளர்க்கும் அதே நேரம் மட்டக்களப்பில் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிடப் பணியினையும் நிறைவேற்றினார்.

இன்று இப்பாடசாலைகள் இலங்கையின் சிறந்த பாடசாலைகளாகத் திகழ்கின்றன. 1940 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு பரிசளிப்பு விழா நடந்தது. அப் பரிசளிப்பு விழாவில் அன்றையக் கல்வி அமைச்சராகவும், இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தையுமான ஊ.று.று.கன்னங்கரா அவர்கள் கலந்து சிறப்பித்தார். இன்று பல அறிஞர்களையும், பேராசிரியர்களையும். டாக்டர்களையும். பொறியிய லாளர்களையும். சட்ட வல்லுநர்களையும், அரசியல் வாதிகளையும். நல்லாசிரியர்களையும். பல்துறை விற்பன்னர்களையும் உருவாக்கும் உன்னத நிறுவனமாகத் திகழ்கிறது. இந்துக் கல்வி முறையில்…
சுவாமி விபுலானந்தரின் வருகையினால் சிறப்பாக இந்துக் கல்வி முறையில் ஒரு உத்வேகம் தோன்றியது. 16-02-1926ல் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம் சுவாமி விபுலானந்தர் மூலமாக ஸ்ரீராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இலங்கையில் உள்ள ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்பப் பாடசாலைகள் எல்லாம் மைலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண சங்கத்தின் மேற்பார்வையில் இருந்தது 03-11-1926 ல் சுவாமி அவிநாசானந்தர் இலங்கைக்கு வந்து சேர்ந்தார். அவர் கொழும்பில் இருந்துகொண்டு ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் வளர்ச்சியில் பங்கு கொண்டார். இலங்கை அரசின் அனுமதியைப் பெறுவதற்கு முயற்சித்தார். சுவாமி அவிநாசானந்தரின் பெருமுயற்சியினால் அப்போதிருந்த தேசாதிபதியினால் 17-07-1929 ல் இலங்கையில் பதிவு செய்யப்பட்டு;ச் சட்ட அந்தஸ்தைப் பெற்றது.
ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளர்
சுவாமி விபுலானந்தர் பாடசாலைகளின் வளர்ச்சியில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். 1928 தொடக்கம் 1930 ஜூலை வரை அதிபர் பதவியையும் ஏற்றுக் கடினமாக உழைத்தார். 20 – 04 – 1929ல் சிவானந்த வித்தியாலயம் திறக்கப்பட்டது. ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் தொகை இலங்கையில் பெருகின. அவற்றை நெறிபடுத்து வதற்கும் முகாமைப்பதற்கும் முழுநேரமும் தேவைப்பட்டது. அதனால் அதிபர் பதவியைத் துறந்து கிழக்கிலங்கை முழுவதிலுமுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளராகச் செயற்பட்டார்.காந்தியடிகளோடு …..யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த இளைஞர் காங்கிரஸ் நம் நாட்டுக்குப் பொருத்தமான தேசியக் கல்விச் சிந்தனைகளை உருவாக்குவதில் கனதியான பங்களிப்பைச் செய்தது. இச்சங்கத்தில் மக்கள் மத்தியில் பெருமதிப்புப் பெற்ற ஹண்டி பேரின்பநாயகம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, சைவப்புலவர் நவரத்தினம், சிவபாதசுந்தரனார், நேசையா போன்றோர் உறுப்பினர்களாக இருந்தனர். சங்கத்துக்கும் சுவாமி விபுலானந்தருக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு இருந்தது. 1927ல் காந்தியடிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டார். மகாத்மா காந்தி பிரித்தானியரின் ஆட்சியை எதிர்த்துப் போர்க்கொடி எழுப்பியவர். அந்நிய ஆதிக்கம் நீங்கினால்தான் நம் மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்கும். அதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார். அதேவேளை முதலாவது உலக மகா யுத்தம் நடந்தபோது பிரித்தானிய அரசுக்காகப் படையும் பணமும் அனுப்பி உதவினார்.
அதே யுத்தத்தின் போது விபுலானந்த அடிகள் பிரித்தானியருக்கு உதவியாகக் கரையோரக் காவல்படையில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்து பணிபுரிந்தார். சங்கத்தின் சார்பில் சுவாமி விபுலானந்தரே காந்தியடிகளை வரவேற்று நிகழ்ச்சியை வழிநடத்தினார். காந்தியடிகள் தமதுரையில் “இத்தகைய துறவி இளைஞர் குழாத்துக்குத் தலைமை தாங்க முடியுமானால் உங்களுக்கு என்ன குறை”? எனக் கூறினார். “என்னைப் பொறுத்தமட்டில் முத்திக்கு வழி எங்கே இருக்கிறது என்றால், எனது தேசத்துக்காகவும், மனித சமுதாயத்துக்காகவும் ஓயாமல் தொண்டு செய்து கொண்டிருப்பதுதான்”; எனக் காந்தியடிகள் ஒரு இடத்தில் கூறினார். அதனையே விபுலானந்த அடிகளும் செய்தார்.
காந்தியக் கல்விக் கருத்துக்களான சமய சமரசம், கிராம எழுச்சி, சாதிப்பாகுபாடு ஒழிப்பு, தொழிற்கல்வி, பெண்கள் கல்வி, தாய்மொழிக்கல்வி, எல்லோருக்கும் கல்வி, நலிந்தோருக்கு உதவுதல், என்பன சுவாமி விபுலானந்தருடன் இணைந்து கொண்டன. இவற்றை ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளில் நடைமுறைப் படுத்தினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் - தமிழ்ப் பேராசிரியர்
1857ல் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம் இல்லாததைப் பலர் உணர்ந்தார்கள். சென்னை அரசை வற்புறுத்தியும் வந்தார்கள். அதன்பயனாக விசாரணைச் சபை நிறுவப்பட்டது. அச்சபையின்முன் சாட்சியமளிக்க சுவாமி விபுலானந்தர் அழைக்கப்பட்டிருந்தார். செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் அளித்த கட்டிடங்கள், நிலம். பணம் ஆகியவற்றைக் கொண்டு 1929ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் அனுமதியுடன் 1931 அண்ணாமலை பல்கலைக்கழகம் விபுலானந்தரை அழைத்துப் பேராசிரியர் பதவியைக் கொடுத்துக் கௌரவித்தது. அவர் தனது சேவையை நேர்த்தியாக 1933 வரை செய்தார். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, அடிகளாரின் அன்பைக் கவர்ந்த கந்தசாமி ஆகியோர் விரிவுரையாளர்களாகச் சேவை செய்தனர். சுவாமியிடம் அ.மு.பரமசிவானந்தம், மு.ஆலாலசுந்தரஞ் செட்டியார், இலங்கையைச் சேரந்த க.கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம் ஆகியோர் தமிழ்கற்றனர்.
இந்தியநாடு பிரித்தானியர் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது லெப்ரினனட் கேணல் சேர் ஜோர்ஜ் பெடறிக் ஸ்ரான்லி அவர்கள் 1929 தொடக்கம் 1934 வரை மாட்சிமைமிக்க கவர்ணராக இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933ல் பட்டமளிப்பு விழா சிறந்த முறையில் நடந்தது. அதற்காகக் கவணர் வருகை தந்தார். மண்டபம் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு பேராசிரியர்களின் விடுதிகள் மேல் மாடியிலும் ‘ஜூனியன் ஜாக்’ கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனால் சுவாமி விபுலானந்தர் வீட்டின் மேல்மாடியில் இந்திய தேசியக் காங்கிரஸ் கொடி கட்டப்பட்டிருந்தது. மாட்சிமைமிக்க கவர்னர் பட்டமளிப்பு மண்டபத்துக்கு வருமுன் பொலிசார் அடிகளாரின் வீட்டைச் சோதனையிட்டனர். இந்தியர்கள் செய்யத் துணியாத சாதனையினை இலங்கையில் பிறந்த அடிகள் செய்தார்கள். அந்நியர் ஆட்சியை எதிர்த்து இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட அடிகள் அஞ்சவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்பன்றோ? என அவரது மாணவரில் ஒருவரான பூ.ஆலாலசுந்தரம் எழுதுகிறார்.
சுவாமி விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அப்போதுதான் மானிடத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டார். தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை நேரில் கண்டறிந்தார். திருவேட்களத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேரிக்குடி யிருப்புக்களில் வாழ்ந்தார்கள். அம்மக்களின் துயரத்தைத் துடைக்க எண்ணினார். அங்கு இரவுப் பள்ளியினைத் தொடங்கிச் சேவை செய்தார். பகல் முழுவதும் பல்கலைக் கழகத்தில் சேவை செய்வார். இரவானதும் திருவேட்களத்தில் சேரிப்பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துதல் எனச் சேவை செய்தார். தான் வருந்தி உழைக்கும் பணத்தை இந்த ஏழைகளின் ஏற்றத்துக்காகச் செலவு செய்தார்.
மாலையானதும் பொட்டுக்கடலையும், சர்க்கரையும் வாங்கிப் பொட்டலமாகக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பாடம் முடிந்ததும் பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார்கள். அதனால் மேட்டுக்குடியினர் நல்லநீர்க் கேணியில் சுவாமி விபுலாநந்தருக்குத் தண்ணீர் எடுப்பதற்கும் தடைபோட்டார்கள். உவர்நீரையே பயன்படுத்தி வாழ்ந்தார். இந்திய மக்களது விடுதலைக்காகச் சுவாமி விபுலானந்தர் காட்டிய தீவிர ஆதரவுக்கு இந்திய மக்கள் அளித்த பரிசு மகத்தானது. அதனைத்தான் ஈழப்போராட்டத்திலும் இந்திய மக்கள் ஒதுங்கியிருந்து காட்டினார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அனைவரையும் கவரும் வகையில் தனது சேவையினைத் தொடர்ந்தார். கற்றவர்களுக்கும் விளங்கிக் கொள்ளச் சிரமமாக இருந்த சிலப்பதிகாரம் நூலின் அரங்கேற்று காதையினைச் சுவைபடக் கற்பித்தார். அதன் ஊடாக இசை நுணுக்கங்களையும், இசைக் கருவிகளையும், யாழ்வகைகளையும் பற்றிய ஆராய்ச்சியை ஆழமாக மேற்கொண்டார். இவற்றுக்கு உதவியாக பழந்தமிழ் இலக்கிய, இலக்கண அறிவும், விஞ்ஞான, கணித, பன்மொழியாற்றலும் கைகொடுத்துதவின.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழாராய்ச்சிப் பிரிவுக்கான பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். இசை ஆராய்ச்சி பற்றிய சிந்தனையைத் தூண்டும் விரிவுரைகளைச் செய்தார். சென்னைப் பல்கலைக் கழகம் சுவாமி விபுலானந்தரைத் தமிழாராய்ச்சித்துறை அங்கத்தவர் களில் ஒருவராகவும், தமிழ் பரீட்சகர்களுள் ஒருவராகவும் நியமித்துக் கொண்டது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதி கழகம்
பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கவிதைகளைக் கவிதகைளே இல்லை எனப் பலர் வாதாடி வந்தார்கள். அவர்களுள் கல்கி, வ.ரா, கு.ப.ராஜகோபால், புதுமைப்பித்தன், பிச்சைமூர்த்தி, ராமையா, சுந்தரராஜன், போன்ற அக்கால பிரபல எழுத்தாளர்கள் முக்கிய இடங்களை வகித்தார்கள். அதனை எதிர் கொண்டு பாரதியின் கவிதைகள் உலகத் தரமிக்கது என முழங்கிய பெருமகன் சுவாமி விபுலானந்தரே. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதி கழகத்தைத் (டீhயசயவாi ளவரனல உசைஉடந) தோற்றுவித்து மாதமிருமுறை பாரதியின் பாடல்களின் சிறப்புக்களை பரவச் செய்தார். பண்டிதர்க்கே சொந்தமாக இருந்த தமிழ் மொழியைப் பாமரரின் சொத்தாக மிளிரச் செய்த பெருமை பாரதியாரைச் சாரும். ‘பாரதி தமிழ்மொழியைச் செம்மைப் படுத்திய சாரதி’ என சுவாமி விபுலாந்தர் முழங்கினார்.
சுவாமி விபுலாநந்தர் 1933ல் பேராசிரியர் பதவியினைத் துறந்தார். சுவாமியவர்களது பிரிவு திருவேட்களத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களைப் பெரிதும் பாதித்தது. அம்மக்கள் அளித்த பிரியாவிடை மடலில் ‘ஏழைக்கிரங்கும் எந்தாய்,’ ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்றறிந்த பெரியீர்;’எனக் குறிபிட்டிருந்தனர். இலங்கை திரும்பிய சுவாமி விபுலானந்தர் சிவானந்த வித்தியாலயத்தின் அதிபர் பதவியினையும் பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவியைத் திறம்பட நடத்திய சுவாமி விபுலானந்தர் சிறிய பாடசாலையின் அதிபர் பதவியை மனதார ஏற்றுச் சேவைசெய்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பரின் திருவாக்குக்கு ஏற்ப பணியினை மேற்கொண்டார். கிழக்கிலங்கை முழுவதிலுமுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளராகவும் செயற்பட்டார்.
பிரபுத்த பாரதத்தின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இமயமலைச் சாரலில் மாயாவதி ஆச்சிரமம் உள்ளது. அங்கிருந்து ‘பிரபுத்த பாரத’ என்ற ஆங்கில இதழ் மாதாமாதம் 1896ம் ஆண்டு தொடக்கம் வெளிவருகிறது. அந்த இதழ் தரமான வேதாந்த தத்துவங்களையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் தாங்கி வருவது. வாசிப்பவர்களது மனங்களைத் திருப்தியடையச் செய்வது. சுவாமி விபுலானந்தருக்கு ‘பிரபுத்த பாரத’ ஆங்கில இதழின் ஆசிரிய பீடத்தை அலங்கரிக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது.
சுவாமி விபுலானந்தர் 1939 ம் ஆண்டு ஆகஸ்ற் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டார். ஸ்ரீ;ராமகிருஷ்ண சங்கத்தின் அனுமதியுடன் இமயமலைச் சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தை அடைந்தார்.
தமிழ் நூல்களில் புதைந்து கிடக்கும் அரிய கருத்துக்களை ஆங்கிலத்தில் பிரபுத்த பாரதம் தாங்கி வெளிவரத் தொடங்கியது. ‘பிரபுத்த பாரத மூலம் மறைந்து போன தமிழிசைக் கருவிகளான யாழ் வகைகளையும், இசை நுணுக்கங்களையும் பிரித்துத் தொகுத்து ஒழுங்கமைத்து உலகத்தவர் அறிந்திடச் செய்தார்.அடிகளார் மாயாவதி ஆச்சிரமத்தில் இருந்து மயிலை- சீனி. வெங்கடசாமி அவர்களுக்கு “இப்பொழுது தமிழ் நிதியத்தை வெளிநாட்டவருக்கு ஆங்கில மொழிமூலமாக அறிவிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இருந்து சில மொழிபெயர்ப்புக்களைச் செய்து கொண்டி ருக்கிறேன்”; என எழுதியிருந்தார். சுவாமி விபுலானந்தர் சிறந்த ஆசிரியர். பேராசிரியர். சிறந்த கல்விமான்.
‘மனிதனில் உள்ள முழுநிறைவை விருத்தி செய்வதே கல்வி. கல்வியும் மனிதனின் விருத்தியுமே மனித வரலாறாகும்;’ என்று கூறிய கார்ல்மாக்ஸ்சின் சிந்தனையில் ஊறியவர். சிறந்த கல்விக் கட்டுரைகளை எழுதினார். தமிழ் மொழியிலுள்ள இலக்கிய வகைகளை மொழிமாற்றம் செய்து கட்டுரைகளை எழுதினார். அவர் தமது நண்பரொருவருக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந் தத்திலிருந்து சில பகுதிகளை மொழிமாற்றம் செய்து கொண்டிருப்பதாய் எழுதியிருந்தார். பிரபுத்த பாரத இதழின் ஆசிரியராக 1941 வரை தொடர்ந்தார்.
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்.
இலங்கையில் பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன், கலாயோகி ஆனந்தக் குமாரசாமி முதலியோர் வலியுறுத்தியும் பாடுபட்டும் வந்தனர். அதன்பயனாக 1921ல் இலங்கைப் பல்கலைக் கழகக்கல்லூரி நிறுவப்பட்டது. 1941ல் இலங்கைப் பல்கலைக் கழகக்கல்லூரி பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்தப் பட்டது. ஆனாலும் ஒரு தமிழ்ப் பேராசிரியரை 1943ல் தான் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கென தமிழ்பேராசிரியராக சுவாமி விபுலாநந்தர் நியமனம் பெற்றார். இதனை ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்கமும் ஏற்றுக் கொண்டது.
சுவாமி விபுலாநந்தர் பேராசிரியராக வந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவரிடம் கற்ற க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம் ஆகிய இருவரும் விரிவுரையாளர்களாக இருந்தனர். திரு. சு. வித்தியானந்தன் கற்றுக் கொண்டிருந்தார். பின்னர் இவர்கள் ஒருவர்பின் ஒருவராக தமிழ்ப் பேராசிரியர் பதவியினை வகித்தார்கள். திரு. சு. வித்தியானந்தன் யாழ்ப்பணத்தில் பல்கலைக்கழகம் அமைந்த போது அதன் உபவேந்தராகப் பணியாற்றினார்.
சுவாமி விபுலாநந்தர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுமானி (ஆ.யு) வகுப்பை 1944ம் ஆண்டு தொடக்கி வைத்தார். தமிழ் வித்துவான் வகுப்புக்களையும் 1946ல் தொடக்கி வைத்தார். சிங்கள மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் தமிழ் வகுப்புக்களை நடத்தினார். பல்கலைச் சேவையினைச் செய்து கொண்டு கல்விப்பகுதியின் பாடநூற் சபை, பரீட்சைச்சபை, கல்வி ஆராய்ச்சிக்குழு போன்னவற்றில் முக்கிய பங்கினை வகித்தார்.
இலங்கையின் இடைநிலைக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினார். பள்ளிக்கூடங்களில் கலைத்திட்டத்தில் இசை ஒரு பாடநெறியாக சேர்ப்பதற்கு அரும்பாடு பட்டார். இசைக்கான பாடத்திட்டத்தினையும் அமைத்துக் கொடுத்தார். சுவாமி விபுலானந்தர் இறக்கும்வரை இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவே இருந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசை பற்றிய விரிவுரைகளை நடத்தி, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் யாழ்நூலாக வடிவமைத்தார். தமிழர் இசை பற்றி ஆராய்ந்து கண்ட முடிபுகளைக் கட்டுரைகளாக்கி பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.
செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஆகிய இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்தன. தமது பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் கண்ட முடிபுகளை யாழ்நூலாக எழுதிமுடித்தார்.; 1943 ஆண்டு ஆனி மாதம் யாழ்நூலை எழுதி முடித்துவிட்டார். அதனைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்துக்கு அனுப்பி விட்டார். இரண்டாம் உலகப்போர் போன்ற இடர்களினால் நூல் அச்சிடும் பணிகள் தாமதமாகின. அது 1947ல்தான் முடிவுற்றது. தனது மாணவர்களில் ஒருவரான வெள்ளைவாரணனார் யாழ்நூலுக்குச் சிறப்புப் பாயிரமும் எழுதி, கையெழுத்துப் படிகளை எழுதியும், ஒப்பு நோக்கியும் உதவி புரிந்ததையும் விபுலாநந்த அடிகள் குறிப்பிட்டுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் அரங்கேற்றம் செய்வதற்குரிய ஆயாத்தங்களைச் செய்தது.
சுவாமி விபுலானந்தர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது சம்பளம் பெற்றுக் கொண்டு சுகபோகமாக வாழ்ந்தவர்தானே என்று பலர் விமரிசித்தனர். அவர்களுள் ஸ்ரீஇராமகிருஷ்ண சங்கத்துறவிpயான சுவாமி நிஷ்காமானந்தரும் ஒருவர்;. அவரே கூறுகிறார். சுவாமி விபுலானந்தரும் சுவாமி நிஷ்காமானந்தரும் கடற்கரையில் பேசிக்கொள்கிறார்கள். சுவாமி நிஷ்காமானந்தர் “தங்களுக்குத் தமிழ்ப்பணி ஆற்ற ஆர்வமிருந்தால் தாராளமாக ஆற்றுங்கள். பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவோ அல்லது அத்தியட்சராகவோ இருங்கள். ஆனால் தாங்கள் ஏன் அவ்வளவு ஊதியம் பெறவேண்டும்.? நாம் துறவிகளல்லவா”? ஆத்திரத்துடன் சொற்கள் வெளிவந்தன.
அமைதியுடன் சுவாமி விபுலானந்தர் விடையளிக்கிறார். “நமது வளர்ப்புக் குழந்தையான சிவானந்த வித்தியாலயத்தைப் பேணி வளர்த்தெடுப்பதற்காகத்தான் ஊதியம் பெறுகிறேன். அங்கே உள்ள ஏழைமாணவர்களின் வயிற்றுப் பசிக்கும். அறிவுப்பசிக்கும் யார் உதவுவார்கள்?” அதனைக் கேட்ட சுவாமி நிஷ்காமானந்தர் விக்கித்துப் போகிறார். “பணியுமாம் என்றும் பெருமை: சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. என்பதற்கு இலக்கணமாக அடக்கம், அன்பு, அமைதி, பொறுமை இவையெல்லாம் ஓர் உருவெடுத்து என்முன் நிற்பதுபோல் அவர் காட்சியளித்தார்” என சுவாமி நிஷ்காமானந்தர் கூறுகிறார்.
சுவாமி தானே வருந்தி உழைத்த பணத்தை அநாதைகளுக்கு வழங்கினார். அவர் பவணத்தைக் கையால் தொட்டதே இல்லை. அவரது வங்கிக் கணக்குகளை இலங்கைப் பல்கலைக் கழகப் பதிவாளராக இருந்த ஏ.எம்.கே. குமாரசாமிதான் கவனித்துக் கொண்டார்.பண்டிதர் மயில்வாகனத்துக்குத் தந்தைவழிச் சொத்தாக கிடைத்த வீடும் வளவும் அவர் துறவு பூண்டதும் சமய சமூகப் பணிகளைச் செய்யும் நிலையமாக்கி அதனை நிர்வகிக்க தர்மகர்த்தாச் சபையையும் நியமித்திருந்தார். அத்தர்மகர்த்தாக்களின் பின் அச்சொத்து ஸ்ரீஇராமகிருஷ்ண சங்கத்தைச் சேரவேண்டும் என்று எழுதிவைத்து விட்டார். இன்று அவரது நினைவாலயமாகத் திகழ்வதை காரைதீவில் காணலாம்.
யாழ்நூல் அரங்கேற்றம்
1947 ஆம் ஜூன் மாதம் 5ம் 6ம் திகதிகளில் திருக்கொள்ளம்பூதூர்த் திருக்கோயிலில் அரங்கேற்றம் இடம்பெற்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் யாழ்நூல் அரங்கேற்றம் பற்றி தமிழ்ப் பொழில் பத்திரிகையில்
அறிக்கை ஒன்றை விடுத்தார். அதன் சுருக்கம் இவ்வாறுள்ளது.‘அருள்மிகு விபுலாநந்த அடிகளார் பதினான்கு ஆண்டுகளாக இடைவிடாது இயலிசை ஆராய்ச்சியினை நிகழ்த்தினார். அவர் நுண்ணிதிற் கண்டுணர்ந்த பழந்தமிழிசை நூன்முடிபுகளை ஒரு கோவைப்படுத்தி யாழ்நூலாக தமிழகத்திற்கு இயற்றி உதவியுள்ளார். நம் தமிழ்ச்சங்கச் சார்பில் வெளிவரும் இவ் யாழ்நூல் அரங்கேற்றம் நிகழும் சர்வசித்து வைகாசி உஉ, உங (5, 6 – 6 47) வியாழன், வெள்ளி இரண்டு நாட்களிலும் திருக்கொள்ளம்பூர்த் திருக்கோயிலிலே ஆளுடையபிள்ளையார் திருமுன்னர் நிகழவிருக்கிறது.
இவ்விரண்டு நாட் காலையிலும் அருண்மிகு அடிகளார் அவர்கள் சிவபுரியில் சுவாமி சுவாமி விபுலானந்தர் யாழ்நூலில் உள்ள இசைகளின் முடிபுகளை எடுத்துரைத்து விளக்குவார்கள். நண்பகலுக்கு மேல் புதுவதாக அமைக்கப்பெற்ற வீணைக்கருவிகளிலே அவர்கள் அராய்ச்சியிற் கண்ட இசை உருவங்கள் இசைத்துக் காட்டப் பெறுவ. இவ்வரங்கேற்றத்தை ஒட்டிய இயற்புலவர், சொற்புலவர்களும் இசைப்புலவர் இசையரங்கும் நிகழும். அன்பர்கள் இவ்விழாவினைச் சிறப்பித்தருள்வார்களாக. 05-06-1947 வியாழக்கிழமை சென்னை மாகாணக் கல்வி அமைச்சர் திரு.தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களின் தலைமையில் விழா தொடங்கியது. கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர் நீ.கந்தசாமி, கோலூர் ஜமீந்தார் திரு. ராம.தி. சிதம்பரம் செட்டியார், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதியார், போன்ற அறிஞர்பெருமக்கள் புடைசுழ்ந்து வந்தனர். யாழ்நூல் குறித்த கணக்குப்படி அமைக்கப்பெற்ற முளரியாழ், சுருதி வீணை, பாரிசாதவீணை, சதுர்த்தண்டி வீணை போன்ற இசைக்கருவிகளைச் சிலர் தாங்கி வந்தார்கள். திருக்கொள்ளம்பூதூர்த் திருக்கோயில் தெற்கு வாசல் ஊடாக அடிகள் பிரவேசித்தார்கள்.
ஒளவை துரைசாமிப்பிள்ளை அழகிய நாச்சியார் சேவடி பரவிய பாடலைப் பாடினார்கள். அரங்கேற்று மண்டபம் குதூகலித்தது. திருமுறை ஓதப்பட்டது. திரு. சிதம்பரம்செட்டியாரும், நீ. கந்தசாமி அவர்களும் வரவேற்புரையை நிகழ்த்தினார்கள். “யாழ்நூலாசிரியர் அவர்கள் தமது வாழ்வு முழுவதையும் தமிழன்னையின் திருப்பணி யொன்றிறற்கே உரிமை செய்து வாழ்பவர்”;. எனத் தலைவர் அவிநாசலிங்கம் செட்டியார் வலருணித்தார். விபுலானந்த அடிகள் யாழ்நூலின் வரலாற்றினையும், தாம் ஆராய்ந்து கண்ட உண்மைகளையும் விளக்கினார்.
மாலைநிகழ்வின்போது இசையறிஞர் க.பொ.சிவானந்தம் பிள்ளையவர்கள் பாரிசாத வீணையை இசைத்தார். அதில் சங்கராபரணம், அரிகாம்போதி, பிந்துவராளி, என்னும் நிறங்கள் பரவி கானமழை பொழிந்தது. சதுர்த்தண்டி வீணையில் மாயாமாளகௌளை, கானமூர்த்தி, காயகப்பிரியா, தவளாம்பரி, என்ற நிறங்களை இசைத்தார். சபை களைகட்டி ரசித்திருந்தது.அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க தலைவர் சிவானந்தம் பிள்ளை அவர்களுக்கு ‘வீணைவித்தகர்’ என்னும் பட்டத்தைப் பொற்பூவுடன் சூட்டினார்.
06-06-1947 வெள்ளிக்கிழமை அவை கூடியது. அடிகளாரின் அருந்திறனைப் பாராட்டி சோமசுந்தர பாரதியார், வித்துவான் துரைசாமிப்பிள்ளை போன்றோர் பேசினார்கள். இசைப் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி யாழ்நூலிற்காட்டும் அரிய இசைக் கருத்துக்களை விளக்கினார்கள். ‘வீணைவித்தகர்’; சிவானந்தம்பிள்ளை அவர்கள் யாழ்நூலில் குறிப்பிடப்பட்ட விதிப்படி அமைந்த சுருதி வீணையில் பண்டைத்தமிழர் இசை உருவாகிய ஏழ்பெரும்பாலைகளை கிரகசுகவரம் மாற்றியமைக்கும் முறையில் இனிமையாக வாசித்துச் சபையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். “இது இறைவனின் திருவருளால் நிகழ்ந்தது”. என அடிகள் பலரிடமும் சொல்லி மகிழ்ந்தார்.
தொடரும் -

Read more...

வித்தகன் விபுலாநந்தன்

வித்தகன் விபுலாநந்தன்
சிறுவர் ஆய்வு இலக்கியம். கேணிப்பித்தன். ச. அருளானந்தம்
அணிந்துரை
நாடறிந்த நல்லெழுத்தாளர் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் சிறுவர் தொடர்பில் ஏராளமான இலக்கிய வடிவங்களை ஆக்கியளித்து வருகின்றார். சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், சிறுவர் நாவல்கள், சிறுவர் செயல் விளையாட்டுக்கள் போன்ற பல்வேறு இலக்கிய ஆக்கங்களைத் தொடர்ந்து அவ்வப்போது படைத்துவரும் பாங்குடையவர். அவ்வரிசையில் சிறுவர் ஆய்வு இலக்கிய வடிவாக அமைகின்ற வித்தகன் விபுலானந்தன் எனும் நூலுக்கு அணிந்துரை அளிப்பதில் அகமகிழ்வு அடைகிறேன்.
விபுலானந்தர் பன்முகச் சிந்தனையாளரும். பயன்தரு படைப்பாளியுமாவார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த புலமைவாய்ந்தவர். இலத்தின், வங்காளம், சிங்களம், போன்ற ஏனைய மொழிகளையும் கற்றிருந்தார். இப் பன்மொழிப்புலமை அன்னார் பல்வேறு பதவிகளைப் பொறுப்பேற்று அலங்கரிப்பதற்கு அடிகோலின. சீரிய கரத்தும், நற்பெறுமதியும் நிறைந்த விடயங்களைப் பிறமொழிகளில் இருந்து தமிழ் மொழிப்படுத்தவும். தமிழிலுள்ள தரமான அறிவுப் பொக்கிசங்களை பிறமொழியினர் புரியும் விதத்தில் வெளிப்படுத்தவும், ஒப்பீட்டுரைக்கவும் வாய்ப்பாக அமைந்தது.
அவரது கல்விச் சிந்தனைகளும் - தொண்டுகளின் பரவலாக்கமும் நம் மட்டுமன்றி பாரதநாடு உட்பட பல பிறநாடுகளுக்கும் பயன்படும் பாங்குடைத்தவை. விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகள், தொண்டுகளின் உண்மைநிலை, பெறுமதி, தாக்கம் என்பன குறித்து முறையாகக் கூறுவோரும், எழுதுவோரும் மிகவும் குறைவே. வசதியற்ற மாணவர்தம் கல்விக்கென அநாதைகள் இல்லங்கள் அமைத்தலும், அவற்றில் உரிய வசதிகள் வழங்க “விவேகாநந்த வித்தியா தருமநிதியத்தை” நிறுவுதல் வேண்டுமெனவும் உள்ளார்த்தமாக வெளியிட்டவர் விபுலாநந்த அடிகளாவார். அவர் மனிதநேயப் பெருமனங்கொண்ட கல்வித் தத்துவவியலாளராகக் கணித்துக் கௌரவப் படுத்தப்பட வேண்டியவராவார்.
விபுலாநந்தரின் பல்வேறு வகிபாகங்கள் குறித்து இலக்கிய நயத்துடன் இனிதாகவும், எளிதாகவும் சிறுவர் நன்கு விளங்கும் வண்ணம் இந்நூலை அருளானந்தம் அவர்கள் வடிவமைத்துள்ளார். விபுலாநந்தர் குறித்துத் துல்லியமாக .ன்றையச் சிறார்கள் தெரிந்து கொள்ள, அவரின் கல்விப்புலமை, பணிகள், சிறப்புக்கள் பற்றித் தெளிவுறத் தகுந்தமுறையில் ஆங்காங்கு அரிய விளக்கப் புகைப்படங்களையும் புகுத்தியிருப்பது இன்னுமொரு விசேட அம்சமாகும்.
விபுலானந்தரின் மதங்கசூளாமணி, யாழ்நூல் குறித்து விபரமான விளக்கங்கள் இலக்கியப் பாங்கில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்குக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இன்றையச் சிறார்களின் அறிவுத் தாகத்தணிப்புக்கு இந்நூல் தனது பங்களிப்பை நல்குதற்கு இசைவாக அமையுமென்பதில் ஐயமில்லை.
கல்வித்துறையில் நல்ல பயிற்சியும், ஆழமான ஈடுபாடும், பரந்த அனுபவமும் கொண்ட கலாபூஷணம் அருளானந்தம் தமக்கே தனித்தான இலக்கியப் பாங்கில் விபுலாநந்தரின் வித்தகத் தன்மையை விளக்கியுள்ளார். இவ்வாறான நூல்கள் சிறுவர் வட்டத்துள் மட்டுமன்றி, இளையோர், வளர்ந்தோர் அடங்கலாக அனைவர் மத்தியிலும் வரவேற்புப் பெறுமென்று எதிர்பார்க்கின்றேன். கேணிப்பித்தன் அருளானந்தத்தின் எழுத்தாக்க முயற்சிகள் வெற்றியுற இறைவனை இறைஞ்சி வாழ்த்துகிறேன்.
29ஃ 2, மத்திய வீதி செ.அழகரெத்தினம்.உவர்மலை முன்னாள் பீடாதிபதிதிருகோணமலை தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா
பதிப்பாளர் உரை‘வித்தகன் விபுலாநந்தன்’ என்ற சிறுவர் ஆய்வு நூலைப் பிரபல எழுத்தாளரும், கல்விமானும், கவிஞருமான கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் எழுதியுள்ளார். படிப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் மொழிநடையில் சுவாமி விபுலாநந்தரின் சரிதையை வரைந்துள்ளார். திரு.ச.அருளானந்தம் அனுபவமிக்கவர். நல்லாசானாய் விளங்கியவர். நிறைந்த கற்பித்தல் அனுபவமிக்கவர். ஆசிரியர்களைப் பயிற்றுவித்தவர். அதிபராகவும், கல்வி நிர்வாக சேவைப் பணிப்பாளராகவும் சேவை செய்தவர்.
நமது சிறார்களுக்காக இடைவிடாது பல ஆக்கங்களை எழுதிவருபவர். அவற்றைப் படிப்படியாக உங்களுக்குத் தரவிருக்கிறோம். இந்நூலில் வித்தகன் விபுலாநந்தனின் சரிதையுண்டு. விபுலானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றும் விரும்பிப் படிக்கும் வண்ணம் உள்ளது. சின்னச் சின்ன விடயங்களை உங்கள் மனங்களில் தங்க வைப்பதற்காக இலகுவான நடையில் எழுதியுள்ளார்.
சிறுவர்களுக்காகவே எழுதி வெளியிட்ட இந்நூலைச் சிறுவர்கள் வாங்கிப் படித்து இன்புறவேண்டும். இந்நூல் அனைவரும் படிக்கவேண்டியதொன்று. நீங்கள் படித்துப் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகின்றோம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் இந்நூலை வாங்கித் தம் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து படிக்கத் தூண்டவேண்டும். வாசிப்பதால் நமது அறிவு விரிவடைகிறது. அத்துடன் நம் நாட்டுப் பேரறிஞர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஆதலால் இவ்வகை நூல்களை வாங்கிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
க.சதீஸ்முகாமையாளர்லங்கா புத்தக சாலை கொழும்பு -12
எனது உரை
சுவாமி விபுலானந்தரைப் பற்றிச் சிறுவருக்கு ஏற்ற வகையில் எழுத வேண்டும் என்ற அவா தொடர்ந்து கொண்டிருந்தது. சுவாமி விபுலானந்தரையும். ஈழத்திருநாட்டில் தமிழுக்காகத் தொண்டு செய்த அறிஞர் பெருமக்களையும் அறியச் செய்யவேண்டும் என்ற முயற்சியில் இந்தச் சிறு நூலினை எழுதமுனைந்தேன். சுவாமி விபுலானந்தரது அயரா முயற்சியினால் எழுந்த கல்விக்கூடமான சிவானந்த வித்தியாலயம் எனது கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.
ஆங்கிலம் போதனாமொழியாக இருந்தும், இந்துப்பாரம்பரியக் கல்விமுறை பேணப்பட்டது. அங்கு ஓரளவில் குருகுல முறையான கல்வி கிடைத்தது அதற்கு வித்திட்டவர்களாக சுவாமி விபுலானந்தரை அடியொற்றி வந்து அக்காலத்தில் கடமையாற்றிய இராமகிருஷ்ண மிசன் துறவிகளான சுவாமி. நடராஜானந்தா, சுவாமி. சர்வானந்தா, சுவாமி. ஜீவனாநந்தா போன்றவர்களும், அதிபர்கள் திரு.எஸ்.அம்பலவாணர், திரு.க.கணபதிப்பிள்ளை, அவர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த அதிபர்களும். ஆசிரியர்களுமாவார்கள். நான் மாணவனாக இருந்த காலத்தை நினைந்து பேருவகை அடைவேன். இன்று சிவானந்த வித்தியாலய வளாகம் முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. நவீன வசதிகளைக் கொண்டு தேசியபாடசாலையாக மாறியுள்ளது. வவுனியாவில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்தபோது திரு.எஸ். நவரத்தினராசா கல்விப்பணிப்பாளராக இருந்தார். அவரோடு இணைந்து அறுபத்தைந்து புதிய பாடசாலைகளைத் திறந்தோம். அப்பாடசாலைகளுக்குத் தமிழ் வளர்த்த அறிஞர்களாகிய வீரமாமுனிவர், சுவாமி.ஞனப்பிரகாசர், போன்றோரது பெயர்களோடு, சுவாமி விபுலாநந்தா, சுவாமி நடராஜானந்தா, சுவாமி சிவானந்தா, சுவாமி விவேகாந்தா போன்ற இராமகிருஷ்ண துறவிகளது பெயர்களையும் சூட்டினோம். அத்துடன் வவுனியாவில் விபுலானந்த நூற்றாண்டு விழாக்குழுவையும் உருவாக்கி, ‘உள்ளக்கமலம்’ எனும் நூற்றாண்டு மலரையும் வெளியிட்டு, பல்கலைக்கழகம் சென்று படிக்கமுடியாத வறுமைக்கோட்டுக்குக் கீழ்வாழும் மாணவருக்குப் புலமைப் பரிசு வழங்குவதற்கான நிதியத்தையும் நிறுவினோம்.
இன்று அந்த நிதியம் பேருதவி செய்கிறது. இவற்றை நினையும்தோறும், ஏதோ ஒருவகையில் சுவாமி விபுலானந்தரின் சேவையில் ஒரு துளியை நிறைவு செய்த நிம்மதி உருவாகிறது. இந்நூல் உருவாக உழைத்த அனைருக்கும் -சிறப்பாக அணிந்துரையுடன் சில ஆலோசனைகளையும் வழங்கிய முன்னாள் திருகோணமலை மாவட்டக் கல்விப் பணிப்பாளரும், வவுனியா கல்வியியல் கல்லூரி முன்னாள் பீடாதிபதி திரு. செ.அழகரத்தினம் டீ.யு.னுip.in நுன. ஆ.நன அவர்களுக்கும், பதிப்புரை நல்கி எனது நூல்களைச் சந்தைப்படுத்தும் கொழும்பு லங்கா புத்தகசாலை முகாமையாளர் திரு .க . சதீஸ், அட்டைப்படத்தினை வடிவமைத்த எனது மகன் திரு.ச.அ.அருள்பாஸ்கரன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வகை நூல்களை வாங்கி. நமது இளையோருக்கு வாசித்தறியும் படி செய்வது தங்கள் அனைவரதும் கடமையாகும் என்பது எனது அவாவாகும். அதற்கான ஆதரவை நல்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கேணிப்பித்தன் -ச.அருளானந்தம்.


வித்தகன் விபுலானந்தர்; தந்த மதங்கசூளாமணி என்னும் ஒரு நாடகத்தமிழ் நூல்
மதங்க சூளாமணியில் சுவாமி விபுலானந்தரின் மொழி நடையினைக் காணலாம். அதனையே இங்கு தருகிறேன். வாசித்துப் பாருங்கள்.
“நாடகவியலினை ஆராயப்புகுந்த இச்சிற்றாராய்ச்சியில் கண்ட முடிபுகள் அனைத்தும் பலநாளாக என்னுள்ளத்தினுள் பயின்று கிடந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இருபத்து மூன்றாம் வருட உற்சவத்துக்குச் சென்றிருந்தபோது அவற்றினைத் தொகுத்துத் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் குழுமியிருந்த வித்தகக் கழகத்தில் பெரும் புலவருள் பெரும்புலவராகிய மஹாமஹோ பாத்தியாய சாமிநாதையர் அவர்களது தலைமையின் கீழ் இயன்றவரை விரித்துக் கூறினேன்.
இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹாமஹோ பாத்தியாயர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழ் அபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.
ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்குமபோது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக” என சுவாமி விபுலானந்தர் “மதங்கசூளாமணி” நூலில் குறிப்பிடுகிறார்.
1924 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தமது இருபத்து மூன்றாவது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்கள். அந்த விழாவிலே பெரும் புலவராகிய மஹாமஹோபாத்தியாய சாமிநாதையர் தலைமை வகித்தார். சாமிநாதையர் ஏட்டுச்சுவடிகளில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்துத் தந்தவர். அவர் இருந்திராவிட்டால் நாம் இன்று காணும் பல இலக்கியங்களை இழந்திருப்போம். இளந்துறவி விபுலானந்தர் இவ்விழாவில் கலந்து கொண்டு “நாடகத் தமிழ்” என்ற சொற்பொழிவு மூலம் தான்கண்ட இசைநாடக முடிபுகளை வெளியிட்டார். அதனை நூலுருவாக எழுதித்தருமாறு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் கேட்டுக் கொண்டார்கள். அதனை ஏற்று நூலுருவில் எழுதிக் கொடுத்தார். மதங்கர் என்பது கூத்தாடுபவரைக் குறிக்கும் சொல். சூடாமணி என்பது விலைமதிக்க முடியாத ரத்தினம். அதுவே மதங்கசூளாமணி ஆகும்.
‘நானிலம் யாவுமோர் நாடக மேடையே – அதில்நடிப்பவர் ஆண் பெண் அனைவருமாவோம்’
என்ற கூற்றை தமிழ்க் கவிஞர்களும். அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள். கம்பரது கவிகள், நயம்பல கொண்டவை. அவரது கவிதைகள் முத்திரை பதிக்கப்பெற்றவை. முதன்மை பெற்று விளங்குபவை. ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரது நாடகங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக விளங்குவதுபோல் சேக்ஸ்பியர் நாடகச் சக்கரவர்த்தி என சுவாமி விபுலானந்தர் போற்றுகிறார். சேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியதோடு மட்டுமல்லாது மேடையில் நடித்துமுள்ளார்.
“உலக வாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக் கூறிய இக்கவிவாணர் வனப்பின்மிக்க நாடக நூல்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். அதுமட்டுமல்லாது அரங்கினுட் புகுந்து தாமும் கூத்தருள் ஒருவராக நின்று நடித்துள்ளார். நாடகக் கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரில்லை. ஆதலால் சேக்ஸ்பியர் என்னும் இயற்பெயர் பூண்ட இக்கவிவாணரை யாம் மதங்கசூளாமணி என வழங்குவாம். இவரது நாடகங்களுள் அமைந்து கிடந்த வனப்பினுட் சிலவற்றை ஆராயப்புகுந்த இவ் உரைத்தொடரும் மதங்கசூளாமணி என வழங்கப் பெறும்” என சுவாமி விபுலானந்தர் மதங்கசூளாமணியில் கூறுகிறார். எந்த நாட்டவரும் சேக்ஸ்பியருக்குக் கொடுக்காத கௌரவத்தையும் முதன்மையையும் நமது அடிகள் கொடுத்துக் கௌரவித்துள்ளார்.
மதங்கசூளாமணி என்னும் நாடக நூல் உறுப்பியல். எடுத்துக்காட்டியல். ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. நாடகப் பாத்திரங்கள், சம்பவங்கள், எவ்வாறு அமையவேண்டும் என்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து மதங்கசூளாமணியில் தந்துள்ளார். மாணவர்களும் மதங்கசூளாமணி பற்றி அறியவேண்டும் அல்லவா? அதற்காகச் அதனைச் சுருக்கமாகத் தருகிறேன்.
உறுப்பியல்
உறுப்பியல் சிலப்திகார அடியார்க்கு நல்லார் உரையினால் பெறப்பட்ட அழிந்துபோன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை விளக்குகின்றார். இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்துக்கு உரிய கட்டுக்கோப்பு, என்பவற்றுடன் நாடகத்துக்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவையுணர்வு என்பன பற்றியும் எடுத்துக் கூறப்படுகிறது.எடுத்துக் காட்டியல்இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களை மொழிமாற்றம் செய்து உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கேற்ப விளக்கியுள்ளார். நாடகத்தின் அமைப்பை, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல், என விளக்கி, அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைக் காட்டுகிறார். அத்துடன் நாடகம் தரும் சுவையுணர்வுகiளான வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுவுநிலை என்ற ஒன்பது சுவைகளையும் விளக்கி, அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார். இந்நாடகங்களில் சிலவற்றின் கதைகளை மட்டும் கூறிச் செல்கிறார்.ஒழிபியல்ஒழிபியல் தனஞ்செயனார் வடமொழியில் இயற்றிய இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்து கூறுகிறது. நாட்டிய சாத்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களை எல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகமாகும். இவற்றைவிட தொல்காப்பியர் சூத்திர உரையினின்றும் எடுக்கப்பட்ட நாடகத்துக்குரிய அவிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்துக்குப் பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல். அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன் மறுபதிப்பாக இலங்கையின் பிரதேச அமைச்சு 1987 ஜூலை 19ல் வெளியிட்டுள்ளது. அந்நூலின் தோற்றத்தையே படத்தில் காட்டியுள்ளேன். இந்த நூலைக் கற்பவர்கள் எத்தனை பேருளர்.? பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களுக்கு மதங்கசூளாமணி பாடநூலாக்கப்பட்டுள்ளதா என்பதும் கேள்விக்குறியே. நம்நாட்டுப் பேரறிஞர் சாத்திரங்களை நாங்களே ஒதுக்கிவிடுகிறோம். மதங்கசூளாமணியை ஒரு வெள்ளைக்காரர் எழுதியிருந்தால் உலகமே போற்றுவதாக நம்தமிழர் மார்தட்டுவார்கள். நாங்கள் எல்லோரும் நடிப்புச் சுதேசிகள்தானே?
இந்த அரிய நூலை எழுதியவர் நமது விபுலானந்த அடிகள். அவர் கிழக்கிலங்கையில் பிறந்து வாழ்ந்து மறைந்தவர். அவரது வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அது நமக்குப் பெருமையைத் தரும். ஈழத்தில், கிழக்கிலங்கையில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் பிறந்தவர்தான் சுவாமி விபுலானந்தர்.
ஈழத்திருநாடு
ஈழத்திருநாடு என்று இலங்கையைக் கூறுவார்கள். இத்திருநாட்டில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் கிழக்கு மாகாணமும் ஒன்று. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முன்னர் இரண்டு மாவட்டங்கள்தான் இருந்தன. அவை திருகோணமலையும் மட்டக்களப்பும் ஆகும்
கிழக்கு மாகாணத்தை இப்போது மூன்று மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை ஆகியன இதிலடங்கும். ‘மீன்பாடும் தேன் நாடு’ என்று மட்டக்களப்பை அழைப்பார்கள். திருகோணமலையைப் பாடல் பெற்ற திருத்தலம் என்றழைப்பார்கள்.
மட்டக்களப்புக்கு அதன் நீண்ட வாவி இயற்கை அழகை ஊட்டுகிறது. அதேபோல் திருகோணமலைக்கு அதன் இயற்கைத் துறைமுகம் அழகூட்டுகிறது. மட்டக்களப்பு வாவி மட்டக்களப்பை இருகூறுகளாக்கி கல்முனைவரை நீண்டு கிடக்கிறது.
கல்முனையில் இருந்து வருபவர்கள் வாவியைத் தோணிகள் மூலம் கடந்து நகரை அடைவார்கள். வாகனங்களைப் பெரிய பாதைப் படகு மூலம் ஏற்றி இறக்குவார்கள்.
இறங்குதுறை மட்டக்களப்புக் கோட்டைக்கு அண்மையில் இருந்தது. கோட்டையில் போத்துக்கேயர் காலத்துப் பீரங்கிகள் பொருத்தப் பட்டிருந்தன. அவற்றை இப்போதும் காணலாம். சூரியன் உதிக்கும் பகுதியை எழுவான்கரை என்பார்கள். சூரியன் மறையும் பகுதியை படுவான்கரை என்பார்கள். சூரியனை மையமாகக் கொண்டு நிலங்களுக்குப் பெயரிட்டார்கள். திசைகளையும் தெரிந்து கொண்டார்கள். வாவியின் இருகரையும் அழகாக இருக்கும். தென்னை விரி;சோலை பரந்தி ருக்கும். படகுகள் அசைந்து செல்லும். மீனும், இறால் நண்டுவகை களும் பிடிபடும். மக்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை அளித்து வருகிறது. விதையாத வயலாக வாவி இன்றும் விளங்குகிறது.
போத்துக்கேயர் இலங்கையின் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றி ஆண்டனர். மட்டக்களப்பும் அவர்களது ஆட்சியினுள் வந்தது. அத்துடன் அவர்கள் தமது கத்தோலிக்க சமயத்தைப் பரப்பினார்கள். முதலாவதாககக் கத்தோலிக்க கோயில்களையும், சமயத்தைப் பரப்பப் பாடசாலைகளையும் கட்டினார்கள். மட்டக்களப்பில் உள்ள தாண்டவன்வெளியில் முதலாவது கத்தோலிக்க தேவாலயத்தை 1624ல் கட்டினார்கள். கதர்தோலிக்க குருமார் பாடசாலைகளையும, ஆசிரிய பயிற்சிக் கலாசாலையையும் அமைத்தார்கள். அச்சியந்திர சாலைகளையும் நிறுவினார்கள்.
1626ல் போர்த்துக்கேயர் மட்டக்களப்பின் புளியந்தீவில் கோட்டையினைக் கட்டினர். ஒல்லாந்தர் போர்த்துக்கேயரை வென்று தமது ஆட்சியைத் தொடர்ந்தார்கள். போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையை ஒல்லாந்தர் 1682ல் திருத்தியமைத்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் மெதடிஸ்த மிசன் ஆலயங்களும் பாடசாலைகள் வளரத்தொடங்கின. ஒரு மதபாடசாலையின் தலையாய நோக்கம் கிறிஸ்தவ மதத்தைப் போதிப்பதே. இதனை இலக்காகக் கொண்டு கல்வி போதிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதமும், ஆங்கிலமும் உயர்ச்சியடையத் தொடங்கியது. ஆங்கிலப் பண்பாடு தோற்றம் பெற்றது. கிறிஸ்தவ மதத்தில் சேருவோருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தன. சமூக அந்தஸ்த்துக் கிடைத்தது.
மட்டக்களப்பில் இருந்து சுமார் 39 கிலோ மீற்றர் தூரத்தில் கல்முனை உள்ளது. கல்முனையின் அருகாமையில் காரைதீவு என்றொரு கிராமம் உள்ளது. அது அழகான ஊராகும். அதனைக் ‘காரேறும் மூதூர்’; என அழைப்பார்கள். காரைதீவின் கிழக்கே வங்காள விரிகுடாக் கடல் விரிந்து கிடக்கிறது. காரைதீவு மணல் பரந்த கிராமம். வீடுகள் நெருக்கமாக இருந்தன. வீடுகளின் முன்னால் கனிதருமரங்கள் நிறைந்திருக்கும். கிணற்றடியில் கமுகுகள் பாக்கினைச் சுமந்து காற்றில் அசையும். பாக்குக் குலையோடு இருந்தால் கமுகுமரங்களுக்குத் தனியான அழகுதான். கமுகு மரங்களைச் சுற்றி வெற்றிலைக் கொடிகள் படர்ந்து அழகூட்டும். தென்னைகள் பாளை வெடித்துக் காற்றில் ஆடும். இளநீரையும், தேங்காய்களையும் தாங்கி நிற்கும்.
காரைதீவின் மேற்கே வயல்வெளி பரந்துள்ளது. கிராமத்தையும் வயல்வெளியையும் கரிய தார்வீதி பிரிக்கிறது. கல்முiனையில் இருந்து வரும் தார்வீதி வடக்குத் தெற்காக பொத்துவில் நோக்கிச் செல்கிறது. அவ்வீதியில் இருந்து காரைதீவு ஊருக்குள் செல்லும் வீதி கடற்கரைவரை செல்கிறது. அச்சந்தியில் கண்ணகி அம்மன் கோவில் உள்ளது.
கோயிலில் இருந்து கூப்பிடு தூரத்தில் சின்னத்தம்பியின் வீடு இருந்தது. அவருடைய மகன்தான் சாமித்தம்பி விதானையார்.
அக்காலத்தில் கிராமத்தின் தலைமகனாக சாமித்தம்பி விதானையார் விளங்கினார். அவர்தான் கிராமத்தின் சிற்றரசன். பேரும் புகழும் விதானையாருக்கு இருந்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. விதானையார் அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் செயற்படுபவர்.
காரைதீவின் ஊடாக தோணா எனப்படும் சிற்றாறு ஓடுகிறது. கடற்பெருக்கின் போது தோணாவிலும் தண்ணீர் கூடும். மாரிகாலத்தில் வெள்ளம் பாய்ந்தோடும். தோணாவை நிறைத்து ஊதாநிறத்தில் பூக்களைத் தாங்கி நீர்த்தாவரங்கள் மிதக்கும். பார்ப்போரின் கண்களைக் கவரும். காரைதீவுக்குப் பெருமைசேர்ப்பது தென்னைகள். வங்காளவிரிகுடாக் கடலின் காற்று தென்னைகளை வருடி, ஓலைகளை அசைத்து இசையைக் கூட்டும். தென்னை மரமும் ஒரு கற்பகதருதான். தென்னை அதிக பலனை மக்களுக்குத் தருகிறது. அதனால் அதனைக் கற்பகதரு என்றார்கள். தென்னை தேங்காய் தருகிறது. இளநீரைத் தருகிறது. அதன் ஓலைகள் கிடுகுகளாகப் பின்னப் படுகிறது. கிடுகுகள் வீடுகளின் கூரையை வேய்வதற்குப் பயன்படுகிறன.
அதன் ஈர்க்கு விளக்குமாறு செய்ய உதவுகிறது. ஈர்க்கில் கட்டு முற்றத்தைப் பெருக்க உதவுகிறது. தேங்காயை உரித்தால் உரிமட்டை வரும். உரிமட்டை தும்புகளைக் கொண்டுள்ளது. தும்பு கயிறு இழைக்க உதவுகிறது. தும்புத்தடி செய்ய உதவுகிறது. தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுக்கப் படுகிறது. முற்றிய மரங்கள் வீட்டுக் கைமரங்களாக வீடு கட்டப்பயனாகிறது.
காரைதீவில் இராசகோபாலன்பிள்ளையின் குடும்பமும் செல்வாக்குள்ளது. இராசகோபாலன்பிள்ளையின் மகளாக கண்ணம்மை வாழ்ந்தார். கண்ணகி வழிபாட்டில் கண்ணம்மை சிறந்து விளங்கினார். சின்னத்தம்பியும் இராசகோபாலன்பிள்ளையும் தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். இல்லறம் சந்தோசமாகக் கழிந்தது. பத்துத் திங்கள் பறந்தோடியது. இத்தம்பதியினருக்கு 1892 ஆண்டு மார்ச் 27ம் திகதி ஆண்குழந்தை பிறந்தது.
‘மயில்வாகனம்’ எனப் பெயரிட்டனர். பாலூட்டித் தாலாட்டி வளர்த்தார்கள். மயில்வாகனனுக்கு இரு சகோதரிகள் இருந்தார்கள். ஒருவரின் பெயர் கோமளவல்லி. மற்றவரின் பெயர் மரகதவல்லி.
மட்டக்களப்பு மாவட்டம் பத்தினித் தெய்வ வழிபாட்டில் பெருமை மிக்கது. கண்ணகிக்குக் கோயில்கள் அதிகம் உள்ளன. காரைதீவில் உள்ள கண்ணகிக்குக் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவம் நடைபெறும். உற்சவ காலத்தில் மக்கள் பயபக்தியாக இருப்பார்கள்.
கண்ணகி வழக்குரை காதை பாடப்படும். மக்கள் பெருந்திரளாகக் கூடிக் கொண்டாடுவார்கள். விதானையாரின் மேற்பார்வையில் உற்சவம் நடக்கும். மயில்வாகனம் கோயிலுக்குப் போவான். கண்ணகி வழக்குரை காதையில் மூழ்கி ரசிப்பான். சிலப்பதிகாரத்தை நன்கு அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
இளமைக் கல்வி
இளமைக் கல்வியை தந்தையிடமே கற்றான்;. மயில்வாகனம் ஆரம்ப பள்ளிப் பருவத்தினை அடைந்தான். அவனை சாமித்தம்பி விதானையார் திரு. நல்லரத்தினசிங்கம் அவர்களிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் முறைப்படி வித்தியாரம்பம் செய்து வைத்தார். தொடக்கக் கல்வியை நல்லரத்தினம் ஆசிரியரிடம் கற்றார்.
காரைதீவில் கிறிஸ்தவப் பாடசாலை இருந்தது. அங்கு குஞ்சித்தம்பி ஆசிரியர் கற்பித்தார். அவர் சிறந்த ஆசானாய் விளங்கினார். மயில்வாகனத்தின் திமையைக் கண்டு வியந்தார். அப்பாடசாலையில் 1897ல் சேர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்றான்;. காரைதீவு விநாயகர் கோயில் அர்ச்சகராக புலோலியூர் வைத்தியலிங்க தேசிகர் இருந்தார். அவர் பேரறிஞராய்த் திகழ்ந்தவர். கோயில் பூசையையும் செய்தார். பாடசாலையையும் நடத்தி வந்தார். அவரிடம் நன்நூல், நிகண்டு, சூடாமணி, போன்ற நூல்களையும் வடமொழியையும் கற்றான்.
அக்காலத்தில் ஆண்பிள்ளைகளும் பெண்களைப்போல் குடுமி வைப்பது வழக்காக இருந்தது. மயில்வாகனமும் குடுமி வைத்திருந்தான். அதிகாலையில் எழுந்ததும் குளிப்பான். தலையை வாரிக் குடுமி கட்டிக் கொள்வான். பெண்பிள்ளைகள் போல் நீண்ட சட்டையை அணிந்து கொள்வான். காதுகளில் வெண்கடுக்கண் அணிந்திருந்தான். இளமையிலேயே புலமை உடையவனாகக் காணப்பட்டான்.
சாமித்தம்பி விதானையார் 1901ல் மயில்வாகனத்தின் ஒன்பதாவது வயதில் கல்முனை வெய்ஸ்லிக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். கல்முனை சற்று நாகரிகத்தைப் பற்றியிருந்தது. வெய்ஸ்லிக் கல்லூரி கிறிஸ்தவப் பாடசாலை. அங்கு கற்ற மாணவர்கள் மயில்வாகனத்தைச் ‘சைற்லாம்ப்’ எனப்பகுடி பண்ணினார்கள். மயில்வாகனம் செய்த முதல் வேலை தனது காதுகளில் அணிந்திருந்த வெண் கடுக்கண்களைத் துறந்ததுதான்.
அத்துடன் தனது குடுமியையும் எடுத்துவிட்டார். உச்சியில் வகிடெடுத்து இருபக்கமும் அழகாகச் சீவியிருப்பான். அங்கு ஆங்கிலக் கல்வியைக் கற்கத் தொடங்கினான். சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வெய்ஸ்லிக் கல்லூரிக்கு மற்றப் பிள்ளைகளுடன் நடந்தே செல்வான். ஒரு துணியால் செய்த உறையினுள் புத்தகங்களை திணிப்பான்.
தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடப்பான். நடையோடு பாடங்களையும் மனனம் செய்வான். கருவில் திருவுடைய மயில்வாகனம் குரு பக்தியுள்ளவன். தனது குருவை மதித்தவன்.
‘அம்புவியிற் செந்தமிழோ டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவு தீட்டி வம்பு செறி வெண்கலச வல்லியருள் எனக்கூட்டி வைத்த வள்ளல் குஞ்சித் தம்பி யெனும் பெயருடையோன் தண்டமிழின் கரைகண்ட தகமையோன்தன் செம்பதும மலர்ப் பதத்தைச் சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே’
இவ்வாறு தனது பன்னிரெண்டாவது வயதில் தனது குருவாகிய ; குஞ்சித்தம்பி ஆசிரியருக்குக் கவிதையில் வணக்கம் சொன்னார்.
அக்காலத்தில் புளியங்தீவுதான் பெரிய நகரமாக இருந்தது. மட்டக்களப்பு வாவியைத் தோணிகளின் மூலம் கடக்கவேண்டும்.
வாகனங்கள் அக்காலத்தில் மிகக்குறைவு. மாட்டு வண்டிகள்தான் அதிகம் இருந்தன. அவற்றைப் படகுப் பாதையின் உதவியுடன் கடப்பார்கள். மக்கள் காரைதீவிலிருந்து கல்முனைக்கு வருவார்கள். பின்னர் மட்டக்களப்புத் துறையைக் கடந்து நகருக்குச் செல்வார்கள். சாமித்தம்பியும் தனது மகனோடு துறையைத் தாண்டித்தான் சென்றார்.
கிழக்கின் முக்கியமான இடங்களில் மெதடிஸ்த திருச்சபை ஆலயங்களைக் கட்டியது. சமயம் பரப்பும் நோக்காகவே பாடசாலைகளையும் அமைத்தது. ஆங்கிலம் போதனை மொழியாக இருந்தது. சுயமொழியும் போதிக்கப்பட்டது. 1814ல் மட்டக்களப்பில் மெதடிஸ்த கல்லூரி கட்டப்பட்டது. 1904ல் மெதடிஸ்த கல்லூரியில் மயில்வாகனம் சேர்க்கப்பட்டான். மட்டக்களப்பில் சென்மைக்கல் கல்லூரி புளியந்தீவில் 1872ம் ஆண்டு கட்டப்பட்டது. தொடக்கத்தில் 57 மாணவர்கள் கல்வி பயின்றனர். மட்டக்களப்பில் சாமித்தம்பியின் நண்பர் திரு. வேலுப்பிள்ளை வாழ்ந்தார். அவர் ஒரு பிரசித்தி பெற்ற நொத்தாரிசு. சென்மைக்கல் கல்லூரியின் தென்புறத்தே திரு. வேலுப்பிள்ளை அவர்களின் வீடு இருந்தது. மயில்வாகனம் அவரது வீட்டில் தங்கியிருந்து படிப்பதற்கு ஏற்பாடாயிற்று. சாமித்தம்பி 1906ம் ஆண்டு சென் மைக்கல் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
அப்போது மயில்வாகனத்துக்குப் பதின்நான்கு வயது. மயில்வாகனம் திரு. வேலுப்பிள்ளையின் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்றான். திருமதி. வேலுப்பிள்ளை அன்பானவர். மயில்வாகனத்தை அவருக்குப் பிடித்துக் கொண்டது. வேண்டிய உணவுப் பொருட்கள் கரைதீவில் இருந்து வந்துவிடும். மயில்வாகனம் அன்பாகப் பழகினான். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தனது வேலைகளை முடித்துப் படிப்பான். ஏழுமணிக்குக் காலை உணவைத் திருமதி. வேலுப்பிள்ளை தயாரித்து வைத்து விடுவார். பெரும்பாலும் இடியப்பம் அல்லது பிட்டு இருக்கும். அத்துடன் தயிரும் இருக்கும். அதிகாலையில் இடியப்பம் அல்லது பிட்டோடு தயிரைப் பிசைந்து சாப்பிடுவது மயில்வாகனத்துக்குப் பிரியமானது. சாப்பிட்டதும் எட்டிச் சிறுநடை போட்டால் கல்லூரியில் நிற்பான்.
சென்மைக்கல் கல்லூரியில் புகழ்பெற்ற விஞ்ஞான, கணித ஆசிரியராக அருட்தந்தை. பேர்டினன்ற் பொனல் இருந்தார். அவர் ஒரு பிரஞ்சுக்காரர். மயில்வாகனம் இராசாயனம், பௌதிகம், கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்கினான். அதனால் அருட்தந்தை. பேர்டினன்ற் பொனல் அவர்களது பாராட்டுதல்களைப் பெற்றான்.
அவர் அவனை ‘மயில்குஞ்சு’ என்றே செல்லமாக அழைப்பார். லத்தின் மொழியினைக் கற்றுக் கொண்டான். கிரேக்கக் காவியங்களைப் படித்தறிய லத்தின் மொழி பேருதவியாக இருந்தது.
விபுலானந்தரைப் பற்றி எழுதுபவர்களும், பேசுபவர்களும் இப்படிக் கதைகதையாகக் கூறுவர். அவற்றுள் சுவையான நிகழ்வாக இதனை அனைவரும் கையாளுவர். அதனை இங்கு நானும் தருகிறேன். ‘ஒருநாள் வழமைபோல் மயில்வாகனம் கல்லூரி செல்ல ஆயத்தமானான். கடமைகளை முடித்தான். திருமதி. வேலுப்பிள்ளை அன்று இரவு அப்பம் சுடுவதற்காக மாவைக் கரைத்துப் புளிக்க வைத்து மூடியிருந்தார். திருமதி. வேலுப்பிள்ளை அன்று வழமைக்கு மாறாக வேறேதோ வேலையில் இருந்திருக்கிறார். காலையிலேயே தனது கடமைகளை முடித்துக் அடுக்களைக்குள் புகுந்தான். உணவு இருக்கும் மேசைக்குச் சென்றான். இடியப்பம் இருந்தது. புளிக்கவைத்த மாவும் இருந்தது. அதனைத் தயிரென நினைத்து குழைத்து உண்டான். உண்ணும் போது புளித்த கள்ளின் மணம் வீசியது. அதனைப் பற்றி சிந்தனையின்றி உண்டபின் கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.
திருமதி. வேலுப்பிள்ளை குசினியில் அப்பம் சுடுவதற்காக வந்தார். புளிக்க வைத்த மா குறைந்திருந்தது. ‘மாவினைப் பூனை விளையாடி விட்டதோ? அப்படி விளையாடச் சந்தர்ப்பம் இல்லையே. கூடையால் அவற்றை மூடிவைத்தேனே’? என நினைந்து கொண்டார். இதில் அதிசயம் என்னவென்றால் மயில்வாகனத்துக்குப் புளித்த மா ஒன்றும் செய்யவில்லை. கல்லூரி முடிந்தபின் வீடு வந்தான்.
“மகன் காலையில் சாப்பிட்டாயா”? திருமதி.வேலுப்பிள்ளை வினவினார்.
“ ஓம். சாப்பிட்டேனே.” மயில்வாகனம் பதிலளித்தான். “ என்ன சாப்பிட்டாய்? இடியப்பமும் தயிரும்” “எங்கே சாப்பிட்டாய். தயிர் அப்படியே இருந்ததே”. என்றார். “இல்லை அம்மா நான் தயிர் சாப்பிட்டேன்”. பதிலளித்தான் மயில்வாகனம். “நீ சாப்பிட்டது தயிரா? வித்தியாசம் விளங்கவில்லையா”? சிரிப்போடு திருமதி. வேலுப்பிள்ளை கூறினார். “நல்ல தயிர்தான். எனக்கு ஒரு வித்தியாசமும் விளங்கவில்லை”. மயில்வாகனம் விளக்கினான். “அது அப்பம் சுடுவதற்காகக் கரைத்துப் புளிக்க வைத்த மா”. என்று விசயத்தை திருமதி. வேலுப்பிள்ளை கூறி விழுந்து விழுந்து சிரித்தார். மயில்வாகனமும் சிரித்துக் கொண்டானாம்.’இக்கதை விபுலானந்தரின் மனநிலையை உணர்த்துகிறதல்லவா?

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP