Sunday, April 25, 2010

கிளிக்குஞ்சு மலை

திருகோணமலை நகரின் மேற்காகக் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. இடையில் உள்ளதுதான் கிளிக்குஞ்சு மலை. அப்பகுதி இயற்கை வளம் நிறைந்த பிரதேசம். சிறிய மலைத்தொடர் நீண்டு கிடக்கிறது. மலைத் தொடரில் தொட்டம் தொட்டமாக தாவரப்போர்வை. தொடரை மூடிச் சோடித்துக் கிடக்கிறது. மரஞ்செடி கொடிகள் பரந்திருந்தன. பூக்களும் காய்கனிகளும் நிறைந்திருந்தன. நெருக்கமாகப் புதர்கள் வளர்ந்திருந்தன. மரஞ்செடி கொடிகள் பரந்திருந்தன. பூக்களும், காய்கனிகளுமாய் நிறைந்திருந்தன. பறவைகளுக்குப் புகலிடமாக விளங்கியது. எங்கும் பலவகைப் பறவைகள் வாழ்ந்தன.

கிளிகள்தான் அதிகமாகக் காணப்பட்டன. புறாக்களும் நிறையவே வாழ்ந்தன. மலைத் தொடர் நீண்டு ஆங்காங்கே கற்பாறைகளை நீட்டியிருந்தன. பாறைகள் அடுக்கடுக்காகப் படுக்கை விரித்திருந்தன. பாறை இடுக்குகள் பெரிதும் சிறிதுமாகக் காணப்பட்டன. இடுக்குகள் குகைபோல் தெரிந்தன. மலை இடுக்குகளில் புறாக்களும், கிளிகளும் வாழ்ந்தன. மைனாக்களும் இன்னும் பலவகைப் பறவைகளும் வாழ்ந்தன. பொந்துகளில் கூடுகளை அமைத்தன. முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரித்து வாழ்ந்தன. ஊரிய நேரத்தில் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டின. குஞ்சுகள் சந்தோசமாகச் சிறகடித்து குதூகலித்தன.


கிழக்கு வெளிக்குமுன் பறவைகள் எழுந்து விடும். காலைவேளை குதூகலமாக இருக்கும். பொழுது புலருமுன் அனைத்துப் பறவைகளும் வெளியில் வந்து விடும். குஞ்சுகளும் பொந்துகளைவிட்டு வெளியில் எட்டிப் பார்க்கும். அனைத்தும கூடிச் சல்லாபிக்கும். காலையானதும் கிளிகளும் புறாக்களும் பாட்டம் பாட்டமாகச் சேரும். இரைதேடப் போவது சந்தோசமானது. பாட்டம் பாட்டமாகச் சேர்ந்து பாடிப்பறக்கும்.

வான்வெளியில் சிறகடித்து வலம் வரும். காற்றில் சிறகை விரித்துப் பறப்பது அற்புதமானது. பறவைகள் வெளியே போனதும் கிளி. புறா, மைனா, எனக் குஞ்சுகள் ஒன்று சேரும். சேர்ந்து ஒற்றுமையாக விளையாடிப் பேசிமகிழும். அவைகளுக்குள் வேற்றுமையில்லை. மரங்களிலும். மலையோரங்களிலும் குஞ்சுகள் நிறைந்திருக்கும். கிளிக்குஞ்சுகளின் அட்டகாசந்தான் பெரிதாக இருக்கும். கிளிக்குஞ்சுகளின் சொர்க்கமாக மலை விளங்கியது. அதனால் ‘கிளிக்குஞ்சுமலை’ என்ற பெயர் வந்தது.

மாலையானதும் ஒரே குதூகலம்தான். புறாக்கள் ஒருபுறம் கூடி உறவாடும். கொஞ்சிக் குலாவும். கிளிகள் கூட்டமாகச் சேர்ந்து பேசும். மனிதர்கள் வந்தார்கள். தரமான கருங்கற்கள் எனப் பார்த்தவர்கள் கூறினார்கள். உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மனிதனுக்குரியவை. “இறைவன் மனிதனுக்காகப் படைத்த செல்வங்கள் இவை”. இப்படித்தான் மனிதர்கள் பேசிக்கொண்டார்கள். கல்லுடைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. தொழிலாளர்களுக்கு தற்காலிக தொடர்வீடுகள் கட்டப்பட்டன. பல தொழிலாளர்களது குடும்பங்கள் வந்தனர். மலையை வெடிமருந்து வைத்துத் தகர்க்கத் தொடங்கினர். வெடிச்சத்தம் அந்தப்பிரதேசத்தைக் கலங்க வைத்தது.

கிளிக்குஞ்சு மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் ‘குவாரி’ இருந்தது. குவாரியில் இருந்து கூப்பிடு தூரத்தில் கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தையும் கிளிக்குஞ்சுமலை என்றே அழைத்தார்கள். அக்கிராமத்தில் ஐம்பது வீடுகள்வரை இருந்தன. தமிழ், முஸ்லிம், சிங்களக் குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். குவாரியில் ஆண்களும், பெண்களும் வேலை செய்தார்கள். வேலை செய்பவர்கள் அனைவரும் ஏழைகள். அற்புதனின் வீடும் அங்கேயே இருந்தது. அன்சார். நிமால், விக்ரர் வீடுகளும் பக்கத்திலேயே இருந்தன.

அற்புதனின் அம்மாவும் அப்பாவும் குவாரியில் வேலை செய்தார்கள். குவாரிக்கு நடந்து போவார்கள். அற்புதனின் வீட்டுத்தோட்டத்தில் கனிதரு மரங்கள் இருந்தன. மா, பாலா, வாழை, தென்னை நிறைந்திருந்தன. குவாரியில் வேலை தொடங்கும். குவாரியில் கல்லுடைக்கும் சத்தம் பயங்காட்டும். கிளிக்குஞ்சுகள் கிராமத்துள் வந்துவிடும். காலையில் இருந்து மாலைவரை மரங்களில் கூத்தடிக்கும்.

சனங்கள் அதிகாலையில் எழுவார்கள். உணவினைச் சமைப்பார்கள். வேலைக்குச் செல்வார்கள். பகல் உணவுக்கு வருவார்கள். உணவின்பின் சென்றுவிடுவார்கள். அவர்கள் வேலைக்குச் சென்றதும், பிள்ளைகள் ஒன்று கூடுவார்கள். பறவைகளும் பகலில் குஞ்சுகளைத் தேடிவரும். உணவினை ஊட்டும். பின்னர் உணவு தேடிச்சென்றுவிடும். பாடசாலை அந்தக்கிராமத்தில் இல்லை. சின்னச் சிறுவர்களும் கல்லுடைக்கப் போவார்கள். போகாதவர்கள் வீடுகளில் கூத்தடிப்பார்கள். அற்புதனின் வீட்டுத் தோட்டம்தான் அவர்களது விளையாட்டு மைதானம். அன்சார். நிமால், விக்ரர் என நண்பர்கள் வருவார்கள். தோட்டம் நிறைந்து கலகலக்கும். அந்தத் தோட்டத்தில்தான் பறவைக் குஞ்சுகளும் கூடும். மாலையானதும் வேலை முடிந்துவிடும். வேலையாட்கள் வீடுகளுக்குப் வந்துவிடுவார்கள். கிளிக்குஞ்சுகள் மலைக்குப் போய்விடும். தங்கள் கூடுகளில் தவமிருக்கும். காலையில் போன உறவுகள் கூடுகளுக்கு வரும். பின்னர் ஒரே கொண்டாட்டம்தான். விடியவிடியக் கதையளந்து குதூகலிக்கும்.

கல்லுடைக்கும் வேலை கஸ்டமானது. சிறிய காயங்களை ஏற்படுத்தும். கண்களில் கற்துணிக்கைகள் படும். கவனமாக வேலை செய்யவேண்டும். இரும்பினால் செய்த வளையம் இருக்கும். அதற்குள் கற்துண்டங்களைப் போடுவார்கள். வேண்டிய கற்களின் அளவினைச் சொல்வார்கள். அந்த அளவுக்குச் சுத்தியலால் அடித்துத் துண்டங்களாக்க வேண்டும். நாள் முடிந்ததும் தாச்சிச் சட்டிகளால் அளந்து கணக்குக் கொடுக்கவேண்டும். கிழமை முடிவில் கூலி கொடுபடும். கையில் காசு வந்தால் கேட்கவும் வேண்டுமா? ஆண்கள் நிலவில் கூடியிருந்து கொண்டாடுவார்கள். கூட்டங்கூட்டமாகச் சிறுவர்கள் கூடிக்கதைப்பார்கள். கிளிக்குஞ்சுகளின் கதைகளைக் கூறுவார்கள்.

பகலில் அற்புதன் வீட்டில் தனிமையில் இருப்பான். அன்சார். நிமால், விக்ரர் என நண்பர்கள் வருவார்கள். மரத்தில் கிளிக்குஞ்சுகள் இருக்கும். அவை சீட்டியடித்து விளையாடும். அற்புதனும் அவைற்றைப் போல் செய்து பார்ப்பான். நுண்பர்களும் செய்வார்கள். இப்படிப் பலநாட்கள் செய்துவந்தார்கள். கிளிக்குஞ்சுகள் அவர்களை நண்பர்களாக எற்றுக் கொண்டன. அவர்கள் சீட்டியடிப்பார்கள். பதிலுக்குக் குஞ்சுகளும் சீட்டியடிக்கும். குஞ்சுகளுக்குப் பழங்களைக் கொடுப்பார்கள். அவை சந்தோசமாக உண்ணும். பழக்கம் வழக்கமாகி விடுமாம். ஓவ்வொரு நாளும் அவர்கள் பழங்களைக் கொடுப்பார்கள். அவை சந்தோசத்தோடு உண்டு வந்தன. நட்பு வளரத்தொடங்கியது.

கன்னியாவில் பாடசாலை கட்டப்பட்டது. கட்டாயக் கல்விச் சட்டம் வந்தது. சிறுவர்கள் அனைவரும் பாடசாலைக்குப் போகவேண்டும். அவர்களும் போனார்கள். பாடங்கள் நடக்கும். பாடங்களில் ஆர்வம் இல்லை. தங்களது சுதந்திரம் பறிக்கப் பட்டதாக எண்ணிக்கொண்டார்கள். பாடசாலைக்குப் போகாவிட்டால் வழக்குத் தொடரப்படும். பெற்றார் தண்டப்பணம் கட்ட வேண்டிவரும். ஆதனால் பாடசாலைக்குப் போனார்கள். பாடசாலை விட்டதும் வீடுகளுக்கு ஓடுவார்கள். குஞ்சுகளோடு கொஞ்சுவார்கள். சிறுவர்கள் வரும்வரை குஞ்சுகள் காத்திருக்கும். அவர்கள் வந்ததும் ஆரவாரிக்கும்.


சிறுவர்கள் பாடசாலை விட்டு வந்தார்கள். கிளிக்குஞ்சுகள் கவலையோடு இருந்தன. அவை பாடவில்லை. பேசவில்லை. அனைத்துக் குஞ்சுகளும் அமைதியாக மரங்களில் இருந்தன. ஆனால் அதிகம் குஞ்சுகளைக் காணவில்லை. பழங்களைக் கொடுத்தார்கள். அவை உண்ணவில்லை. அன்சார் சீட்டியடித்தான். பதிலில்லை. விக்ரர். நிமால் சேர்ந்து சீட்டியடித்தார்கள். பதிலில்லை. அற்புதனுக்கு ஆச்சரியம். அவனும் சீட்டியடித்தான். பதிலே இல்லை. குஞ்சுகள் கவலையோடு இருப்பதைக் கவனித்தார்கள். ஒவ்வொரு குஞ்சுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருந்தார்கள். பெயர் சொல்லிச் சீட்டியடிப்பார்கள். பதிலுக்கு அவை சீட்டியடிக்கும். ஏன் இப்படி இருக்கின்றன. அவர்களுக்குப் புரியவில்லை. பெயர் சொல்லிச் சீட்டியடித்தார்கள். சில பதிலளித்தன. பல பதிலளிக்கவில்லை. உங்களுக்கு என்ன நடந்தது.? சத்தமிட்டுக் கத்தினாhர்கள். இரண்டு தாய்ப்புறாக்கள் தலைகளை அசைத்தன. அவைகளும் கவலையுடன் இருந்தன.

குஞ்சுகளின் மொழியைப் புரிந்து கொண்டார்கள். அவர்களும் சாப்பிடவில்லை. கவலையோடு இருந்தார்கள். பிள்ளைகள் ஏன் சாப்பிடவில்லை? பெற்றோருக்கும் கவலை. புpள்ளைகளைத் தேடி வந்தூர்கள். அற்புதன் அம்மாவிடம் சென்று விசாரித்தான். அன்சாரின் அம்மா பயக்கூன் வந்தார். நிமாலின் அம்மா அனுலா வந்தார். விக்ரரின் அம்மா பிலோமினாவும் வந்தார். ஏன் சாப்பிடவில்லை? கவலையோடு கேட்டார்கள். குஞ்சுகள் எங்களோடு கதைக்கவில்லை. பல குஞ்சுகளைக் காணவில்லை. என்ன நடந்திருக்கும்? கவலையோடு இருக்கிறோம். பசியே இல்லை.” என்றார்கள்.

அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது. கிளிக்குஞ்சு மலைக்கு சிலர் வந்திருந்ததைக் கூறினார்கள். குஞ்சுகளைப் பிடித்துப் போனதையும் சொன்னார்கள். சிறுவர்கள்; கவலையடைந்தார்கள். என்ன மனிதர்கள் இவர்கள்? இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். சைகையால் குஞ்சுகளுக்கு ஆறதல் கூறினார்கள். சிறுவர்கள் யோசித்தார்கள். “டேய் நமக்கு நமது ஆசிரியர்கள்தான் உதவக்கூடியவர்கள். அவர்களிடம் சொல்வோம். இதற்கு ஒரு விடிவு கடைக்கும். அற்புதன் புதிய பாதையைக் கண்டு பிடித்தான். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

பொழுது விடிந்தது. அவர்கள் பாடசாலைப் படலையில் நின்றார்கள். அதிபர் எப்ப வருவார்? வரும்வரை காத்திருந்தார்கள். அதிபர் யோகராசன் வந்தார். அவரைத் தொடர்ந்து ஏனைய ஆசிரியர்களும் வந்தார்கள். அதிபருக்குப் பெரியதொரு ஆச்சரியம். சிறுவர்களை உற்றுப் பார்த்தார். “இவர்கள் வழமையாகப் பாடசாலைக்குப் பிந்தி வருபவர்கள். பாடசாலைக்கு ஒழுங்காக வருவதுமில்லை. படிப்பதும் இல்லை. இன்று பாடசாலைக்கு முந்தி வந்திருக்கிறார்கள். இவர்கள் ஏதோ சொல்ல நினைக்கிறார்கள்”;. ஊகித்துக் கொண்டார். அவர்களை அன்போடு அழைத்தார்.

கதை கொடுத்து விசாரித்தார். அவர்களது கதை அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. “சேர் எங்கட கிளிக்குஞ்சு மலையில பறவைக் குஞ்சுகள் இருக்கு. அவற்றை மனிதர்கள் பிடித்துச் செல்கிறார்கள். தாய்ப் பறவைகள் வருந்துகின்றன. குஞ்சுகள் பயந்து நடுங்கிக் கிடக்கின்றன. நீங்கதான் சேர் காப்பாற்ற வேண்டும்”. அற்புதன் பிரசங்கம் செய்தான். அதிபர் அவர்களை அன்போடு பார்த்தார். அவர்களையிட்டுத் தான் கொண்ட அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டார். உயிர்களிடம் இச்சிறுவர்கள் காட்டும் அன்பை நினைத்து மகிழ்ந்தார். ‘இவர்கள் நன்றாகப் படித்தால் இந்த நாட்டையே மாற்றியமைப்பார்கள். இவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.’ உறுதியெடுத்தார்.

“சரி நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். உங்களுக்குப் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதானே”? கேட்டார். “ஓம் சேர்”. பயபக்தியுடன் ஆர்வத்தோடு நின்றார்கள். “நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் காப்பாற்ற முடியும். உங்களால் முடியுமா”? மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். “முடியும் சேர்”; ஒன்றாகச் சேர்ந்து ஒரே குரலில் சொன்னார்கள். “இனிமேல் பாடசாலைக்கு ஒழுங்காக வரவேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். உங்களால்தான் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்ற முடியும்”. அதிபர் விளக்கினார். “பாடசாலைக்கு வந்தால் காப்பாற்ற முடியுமா? அதெப்படி சேர்”? ஆவலோடு கேட்டார்கள். “ஒழுங்காகப் பாடசாலைக்கு வந்து படியுங்கள். நடப்பதைப் பாருங்கள். அதிபர் கூறிக் கொண்டிருந்தார்.

“சேர் பறவைக் குஞ்சுகளுக்காக எதையும் செய்வோம் சேர். பாடசாலைக்கு ஒழுங்காக வருவோம் சேர். வந்து நன்றாகப் படிப்போம் சேர். அதுமட்டுமில்லை சேர். பாடசாலைக்கு வராமல் வீட்டில நிற்கிற பிள்ளைகளையும் கூட்டி வருவோம் சேர். குஞ்சுகளைக் காப்பாற்றுங்க சேர்” கெஞ்சினார்கள். அவர்களது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. பறவைக் குஞ்சுகளுக்காக அவர்களது மனங்கள் ஏங்கின. அப்பாவிச் சிறுவர்களின் இரக்க குணம் அதிபரை மெய்மறக்கச் செய்தது. ஆசிரியர்கள் சூழ்ந்து மாணவர்களின் உள்ளங்களைப் படித்தனர். இந்தச் சின்ன வயதில் இவர்களுக்கு எத்தனை பெரிய மனது.? பிரமித்தார்கள். பறவைக் குஞ்சுகளுக்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக நின்றார்கள்.

அதிபரும் ஆசிரியர்களும் மனம் நெகிழ்ந்து போனார்கள். சதீசன் சுறுசுறுப்பான ஆசிரியர். மாணவர்களில் அக்கறையுடையவர். மாணவர்களை வகுப்புக்களுக்கு அனுப்பினார்கள். பாடம் தொடங்கியது. அதிபர் சதீசனை அழைத்தார். தனது திட்டத்தைச் சொன்னார். சதீசன் அதிபரைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். பிரதேச செயலாளரின் அலுவலகம் சென்றார்கள். அவரிடம் விரித்துரைத்தார்கள். பிரதேச செயலாளர் போலிஸ் அத்தியட்சருடன் தொலைபேசியில்

கதைத்தார். அவர்கள் ஏதோ கதைத்துக் கொண்டார்கள். அப்படியே அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் முறையிட்டனர்.

இன்றும் கவலையோடுதான் பாடசாலைக்கு வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பறவைக் குஞ்சுகளும் பாட்டமாக வந்தன. மரங்களில் தஞ்சம் புகுந்தன. சிறுவர்களின் மனதில் தாங்கமுடியாத கவலையிருந்தது. பாடசாலை தொடங்கியது. ஒன்றுகூடல் நடந்தது. பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டது. முடிவுற்றதும் வகுப்குக்கள் தொடங்கின. குஞ்சுகள் அவர்கள் போகும் பக்கமெல்லாம் அலைந்தன. வகுப்பறைகளுக்குள் நுழைந்து அமைதியாக இருந்தன. மாணவர்களது செயல்களை ஆசிரியை ஜனார்த்தனி அவதானித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஆச்சரியம். உயிர்கள் அனைத்தும் ஒன்றுதானே? தனக்குத் தானே நினைத்துக் கொண்டார். சற்று நேரத்தில் வாகனங்கள் பல வந்தன. பாடசாலையின் நுழைவாயிலை அடைந்தன. பிள்ளைகளுக்கு ஆச்சரியம்.

பிரதேச செயலாளர் தேவி இறங்கினார். ஒரு தேவதை வந்ததுபோல் இருந்தது. அவரைத் தொடர்ந்து பொலிஸ் அத்தியட்சர் வந்தார். அரசசார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்களும் வந்தார்கள். கிராமசேவகர் ஊடாக மக்களுக்கு அறிவிக்கப் பட்டது. அதிபரும் ஆசிரியர்களும் அவர்களை வரவேற்றனர். பாடசாலை மண்டபத்தினுள் கூட்டம் நடைபெற்றது. அதிபர் தலைமை வகித்தார். கிளிக்குஞ்சு மலையின் சூழலை அதிபர் விளக்கினார். மாணவர்களைப் பற்றிச் சொன்னார். அற்புதன். அன்சார், நிமால். விக்ரர் எனப் பெயர்கள் குறிப்பிடப் பட்டன. பிரதேச செயலாளர் அவர்களை விளித்துப் பாராட்டினார். “உங்களால் கிளிக்குஞ்சுமலை காப்பற்றப்படுகிறது. இனி எந்தத் தொல்லையும் இருக்காது. போலிஸ் அத்தியட்சர் பிடித்துப் போனவர்களைக் கைது செய்துள்ளார். நீதிமன்றில் வழக்கு நடந்தது. பிடித்துப் போனவர்களுக்குத் தண்டனையும் கிடைத்துள்ளது. நீதிபதி செழியன் பறவைக்குஞ்சுகளைப் பிடிப்பதற்குத் தடையும் போட்டுள்ளார். இனி யாரும் எந்தப் பறவைகளையும் பிடிப்பதற்கு வாய்ப்பில்லை. பறவைகளைப் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் குஞ்சுகளை மீட்டுள்ளோம். அதோ அங்கே பாருங்கள்”;. சுட்டிக் காட்டினார். பலர் கூடுகளுடன் நின்றார்கள். கூடுகளுள் பறவைக் குஞ்சுகள் இருந்தன. அற்புதன் ஓடிவந்தான். அன்சார், நிமால், விக்ரர் பின் தொடர்ந்தார்கள். பறவைக்குஞ்சுகள் அவர்களைக் கண்டு கொண்டன. சிறகடித்து ஆரவாரித்தன.


கூடுகளை அவர்களிடம் ஒப்படைக்கும்படி கூறினார். கூடுகளை வாங்கியதும் கூத்தாடினார்கள். கொள்ளை இன்பம் அவர்களைப் பற்றிக் கொண்டது. கூடுகளைத் திறந்தார்கள். பறவைக் குஞ்சுகள் சுதந்திரமாக வெளியில் வந்தன. சிறுவர்களின் தோளில் தொத்திக் கொண்டன. பற்றைகளில் பதுங்கியிருந்த பறவைக் குஞ்சுகளும் சேர்ந்து கொண்டன. பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். உயிர்கள் அனைத்தும் ஒன்றுதான். உடல்களில் மட்டுந்தான் வித்தியாசம். அவை தொடர்பாடும் வழிமுறைகளிலும் வித்தியாசம் உண்டு. உணவு, உறைவிடம், உறவு, பாசம் ஆகியன யாவற்றுக்கும் உண்டு. உயிர்களிடத்து அன்பு வேண்டும்.

பிரதேசச் செயலாளர் தேவியின் கண்கள் பனித்தன. போலிஸ் அத்தியட்சர் பிரமித்துப் போனார். மனிதர்கள் மட்டுமேன் இப்படி ஆனார்கள்.? சிறுவர்களை வாழ்த்தினார்கள். “நீங்கள் பெரிய சாதனையாளர்கள். உங்களால் கிளிக்குஞ்சுமலை சுதந்திரம் பெற்றுள்ளது. பறவைக் குஞ்சுகள் விடுதலை பெற்றன. நன்றாகப் படித்து வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துக்கள்”. கூறிவிட்டுச் சென்றார்கள். பாடசாலை மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

அற்புதனும் நண்பர்களும் பாடசாலைக்குப் போவார்கள். பாடசாலைவரை குஞ்சுகள் பறந்து வரும். பாடம் நடப்பதைப் பார்த்து மகிழும். பாடசாலை விட்டதும் அவர்களோடு சேர்ந்து வீடு போகும். பறவைக் குஞ்சுகள் தங்கள் நண்பர்களையிட்டுச் சந்தோசமடைந்தன. அவர்கள் சாதனையைச் செய்துள்ளார். உங்களுக்கு எங்கள் நன்றி. நன்றாகப் படியுங்கள். வாழ்த்தி வானில் பறந்து கொண்டாடின. இப்போது சிறுவர்கள் ஒழுங்காகப் பாடசாலை செல்கிறார்கள்.

Read more...

சாதனை படைத்தவர்கள்

“சீனாவுக்கும் எங்கள் ஊருக்கும் என்ன தொடர்பு? ஏன் சீனக்குடா என்று பெயர்வந்தது”. ஆதவன் பாடசாலையின் எல்லையில் நின்று யோசித்தான். பாடசாலையின் எல்லையைக் கடல் தழுவிக்கொண்டிருந்தது. நிலப்பரப்பினுள் கடல்நீர் விரல்களை நீட்டிக் குடைந்து குடாக்களை உருவாக்கியிருந்தது.

அதில் ஒன்றுதான் இந்தச் சீனக்குடா. திருகோணமலையின் இயற்கைத் துறைமுகத்தின் மேற்குக் கரையோரத்தில் சீனக்குடா சிதறிக்கிடக்கிறது. குடாக்கடலின் ஓரமாக சமனற்ற நிலப்பரப்பு. அங்குதான் சீனக்குடா தமிழ்வித்தியாலயம் குந்தியிருக்கிறது.


“பிரித்தானியர் எண்ணைய்க் குதங்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள். வேலைசெய்வதற்காக சீனாவிலிருந்து வந்தவர்கள் முகாமிட்டிருந்த பகுதி சீனக்குடாவாகியது”. யாரோ ஒரு பெரியவர் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான். சிறியஅலைகள் கரையில் மோதிக் கொண்டிருந்தன. சிறு நண்டு கரைமீது படமொன்று வரையும். அலை வந்து மெதுவாக அழித்தோடிப் போகும்.. அவன் வாய் முணுமுணுத்தது.

ஆதவன் அதனை ரசித்துக் கொண்டிருந்தான். நுரைகள் கரையில் மாலைகளாகப் படிந்திருந்தன. அவை அடுக்கடுக்காய்த் திரண்டு கிடந்தன. எத்தனை அலைகள்.? ஆலைகள் எழுந்து வருவதும் போவதுமாக இருந்தன, எழுவதும் மடிந்து சுருண்டு புரள்வதுமாகக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. ஜூன், ஜூலை வந்தாலே ஒரு பயம் தழுவிக் கொள்ளும். இலங்கைத்தீவில் இம்மாதங்களில்தான் வன்செயல்கள் அதிகரிக்கும். அகதிகளாக மக்கள் இடம்பெயர்ந்து நலிவுறுவதும் இம்மாதங்களில்தான். “எத்தனைமுறை நாங்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்றோம். இனி ஓடுவதற்கு இடமும் இல்லை. வாழ்ந்தால் இங்கேயே வாழ்ந்து மடிவோம். ஓற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும்”. அவனது சின்னமனதில் சமாதானத்தின் தேவை புகுந்து கொண்டது.


ஆழ்ந்து யோசித்தான். “மாணவ சமுதாயம் விழித்துச் செயற்பட்டால் இந்த நாட்டைச் சொர்க்கமாக்கலாம். முயற்சித்தால் என்ன? சரி விளையாடிப் பார்ப்போம்”. தனது நண்பர்களை எண்ணிக் கொண்டான். தலையைத் திருப்பிக் கண்களை மேயவிட்டான். கண்களுக்கெட்டிய தூரம்வரை அவனது பார்வை பாய்ந்தது. விளையாட்டு மைதானம் விரிந்து கிடந்தது. சிறுவர்கள் காலையிலும் மாலையிலும், விளையாடுவார்கள். கடல் துள்ளிக்குதித்து அலைகளை வீசும். மென்படையை அலைகள் கரைத்துச் செல்லும். சிறுகற்களைக் கரையில் உருட்டிவிடும். கரையில் நின்றவாறே பாடசாலையைப்


பார்த்தான். பாடசாலை பழைய கட்டிடங்களோடு வயது முதிர்ந்து கிடந்தது. பற்றைகள் புடைசூழ கட்டிடங்கள் ஒதுங்கி ஓரமாகச் சிதறிக்கிடந்தன.

இரவு வேளைகளில் பாடசாலையினுள் பலர் வருவார்கள். தங்கி பாடசாலையை அசுத்தமாக்குவார்கள். அப்படியே சென்று விடுவார்கள். அதனை நினைந்து வருந்தினான். “எங்கள் பாடசாலைக்கு ஒரு விடிவு வாராதா? ஒரு புறம் துறைமுகம். ஓருபுறம் பிரித்தானியரால் அமைக்கப் பெற்ற எண்ணெய்க் குதங்கள் தெரிந்தன. பிறிமா தொழிற்சாலை நிமிர்ந்து நின்றது.

சீமேந்துத் தொழிற்சாலை, விமானப்படைத்தளம். புகைவண்டி நிலையம். குறிஞ்சியும், நெய்தலும் குலவி மகிழுமிடம். மூவின மக்களும் சேர்ந்து வாழுமிடம். அழகான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள பாடசாலை கல்வியில் பின்தங்கியுள்ளதே.” அவன் உள்ளத்தில் ஏக்கம் குந்திக்கொண்டது.

“ஒரு நல்லகாலம் வராமலா போகும். வரும் காத்திருப்போம்.” முணுமுணுத்தான். விளையாட்டுத் திடல் ஒப்புரவாக அமையவில்லை. கிறேவல் சார்ந்த மலைச்சாரல். விளையாடுவதற்கேற்ற திடலாக இல்லை. விளையாடும் போது பலமுறை விழுந்திருக்கிறான். சிறுவர்கள் விழுந்து காயப்பட்டும் இருக்கிறார்கள். தூரத்தில் சைக்கிள் தெரிந்தது. அன்வர் வந்து கொண்டிருந்தான். கூடவே அன்ரனும் வந்தான். அவர்களும் நல்ல சிந்தனையுடையவர்கள். மூவரும் நண்பர்கள். பத்தாம் வகுப்பில் படிக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைகளை உடையவர்கள்.

“ஹாய்..ஆதவன!; தனிமையில் என்ன யோசிக்கிறாய்”?. அன்வர் சைக்கிளை நிறுத்திவிட்டு பக்கத்தில் வந்து கொண்டே கேட்டான். “நமது பாடசாலையின் நிலையை எண்ணிப் பார்த்தேன். நமது ஊரில் இருந்து பற்றுள்ள ஒருவனாவது நன்றாகப் படிக்கவேண்டும். நமது பாடசாலைக்கு ஆசிரியராக வரவேண்டும். அப்போதுதான் நமது பாடசாலை விழித்துக் கொள்ளும். இதனை நமது ஆசிரியர்கள் அடிக்கடி சொல்வதை நினைத்துப்பார். நாம் படித்து இப்பாடசாலையில் ஆசிரியராக வந்தால்தான் நமது பாடசாலையை உயர்த்தலாம். ஆனால் படிப்பதற்கு ஏற்ற வசதியில்லை. நமது பெற்றோரும் நம்மைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அவர்கள் கடலுக்குப் போவார்கள். வேலை முடிந்ததும் வருவார்கள். கடல்தான் அவர்களுக்குத் தஞ்சம். நாம் படிக்கவேண்டும். அதுதான் யோசிக்கிறன்.”

“எங்களுக்கும் அதுதான் யோசனை. என்ன செய்யலாம்.”? அன்வரும், அன்ரனும் ஒரே குரலில் கூறினார்கள். நடந்து கொண்டே பாடசாலை வளவினுள் வந்தார்கள். பாடசாலை விளையாட்டு மைதானத்தின் ஓரமாக வேம்பு நிழல்பரப்பிக் கொண்டிருந்தது. அதற்கப்பால் ஆசிரியர் விடுதியிருந்தது. வேப்பமரத்தடியில் மரக்குத்திகள் கிடந்தன. மரக்குத்திகளில் இருந்தார்கள். வேம்பு பூத்துக் கலகலத்தது. இலைகள் காற்றில் அசைந்து இசையெழுப்பிக் கொண்டிருந்தன. நேரே பார்த்தார்கள். “அன்வர்! அந்த விக்ஸ் மரத்துக்கு எத்தனை வயதிருக்கும்? சொல். பார்க்கலாம்.?” ஆதவன் வினவினான்.

“சுமார் முப்பத்தாறு இருக்கலாம்’
“எப்படிச் சொல்வாய்” அன்ரன் கேட்டான்.
“இந்தப் பாடசாலை ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரெண்டில் கட்டப்பட்டது. அப்போது நடப்பட்டிருக்கலாம். அதுதான் சொன்னேன். இது ஒரு ஊகந்தான்”.
‘பரவாயில்லையே. உனக்கும் மூளை வேலை செய்யுது.” ஆதவன் சிரிப்போடு சொன்னான்.“ இதுதானே கூடாது. நக்கல் அடிக்காதே” சந்தோசமாக உரையாடினார்கள். “அன்வர்! நான் சொல்வதைக் கேள். நாம் படிக்க வேண்டும். நமது கிராமத்தில் எழுச்சியைக் காணவேண்டும். அதற்குப் பல தியாகங்களைச் செய்யவேண்டும்.”

“என்ன செய்யவேண்டும்”. அன்ரன் வினவினான் “பாடசாலைக்குப் புதிய அதிபர் வந்திருக்கிறார். அவரிடம் நல்ல திட்டமுள்ளது போல் தெரிகிறது. நமது ஆதங்கத்தை அவரிடம் சொல்வோமா? அவரைச் சந்திப்போமா?’ அன்வர் உற்சாகமாகச் சொன்னான். “நல்ல விசயம்தான். அதற்கு முதல் எங்கட ரீச்சர்மார் சொன்னதைச் செய்வோமா? செய்தால் புதிய அதிபருக்கு நம்மீது நம்பிக்கை பிறக்கும்” ஆதவன் உசாரூட்டினான்.

“ ரீச்சர்மார் என்ன சொன்னவங்க.” அன்வர் தெரியாதவன்போல் கேட்டான். “இதைக்கூட நீ நினைவில் வைக்கவில்லை. எப்படி படிக்கப்போகிறாய்?. எத்தனைநாள் முதலிருந்த அதிபர்களும், நமது ரீச்சர்மார்களும் சொல்லியிருக்கிறார்கள். இது நமது பாடசாலை. பாடசாலையைச் சுத்தமாகவும், அழகாகவும் வைக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். இரவு வேளையில் பாடசாலையில் வந்து படியுங்கள். பக்கதுணையாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் படித்தால் ஊர் முன்னேறும். என்று எவ்வளவு புத்திமதி கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்தானே சொல்லுவார்கள். நாங்கதான் கேட்பதில்லை. வீட்டிலும் படிக்கச் சொல்வார்கள். நமக்குத்தான் வீட்டில் படிக்க வசதியில்லை. நாங்களும் யோசிக்க வேணும்..” ஆதவன் கவலையோடு கூறினான்.

“ஆதவன்! நடந்தவற்றை மறப்போம். நடக்கப்போவதையிட்டு யோசிப்போம். நாளைக்குச் சனிக்கிழமை. ரீச்சர்மார் சொன்னவற்றைச் செயலில் காட்டுவோமா? நமது பாடசாலை பற்றைகளில் மறைந்துள்ளது. எங்கும் குப்பை கூளங்கள். அவற்றை முதலில் துப்பரவு செய்வோமா? சிரமதானம் செய்தால் என்ன? முதல் முயற்சியாக மேற்கொள்வோமே. நீ என்ன சொல்கிறாய்”? அன்வர் விளையாட்டகச் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொண்டான் ஆதவனுக்கு உற்சாகம் பிறந்து விட்டது. “சரி வாங்க. முதலில் நமது ரீச்சரிடம் ஆலோசனை கேட்போம்.” ரீச்சரிடம் ஓடினார்கள். “என்ன ஓட்டப்போட்டி நடக்கிறது?” ரீச்சர் உமா விளையாட்டாகக் கூறினார்.

“ரீச்சர்! இனி ஓட்டப்போட்டிதான். உங்கட ஆலோசனைதான் தேவை.” உமா அவர்களது மன உறுதியைப் புரிந்து கொண்டார். அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார். “என்ன விசயம். சொல்லுங்க.” தங்கள் முடிவைச் சொன்னார்கள். உமா இந்த உலகத்தில் இல்லை. “ஆதவன் இது உங்களது வழமையான விளையாட்டுத்தானே?. விளையாடுவதற்கும் ஒரு எல்லையுண்டு. நீங்கள் நல்லா யோசிக்க வேண்டும். நமது சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். என்ன? நான் சொல்வது புரிகிறதா”?. உமா சற்று அழுத்தமாகவே கூறினார்.

“ரீச்சர். இவ்வளவு நாளும் விளையாடினோம்தான். ஆனால் இப்போது விழித்துக் கொண்டோம்.. எங்களை வழிநடத்துங்கள்.” அவர்களது குரலொலி உமாவை சிறைப்பிடித்து விட்டது. “ஆதவன், அன்ரன், அன்வர்! விளையாட்டுத்தான். விளையாட்டு மூலம் சாதனை படைக்கலாம். வெறும் விளையாட்டு, கல்வி இல்லை. ஆனால் விளையாட்டில்லாமல் கல்வி இல்லை. இறைவனே திருவிளையாடல் மூலம்தான் மனிதனுக்கு வாழ்வை விளக்குகிறார். உங்களுக்கு வாழ்த்துக்கள்.” அவர்களை அமரச்சொன்னார். கதிரைகளில் இருந்தார்கள். எல்லா வழிவகைகளையும் விளக்கினார். ஆசிரியர்கள் என்பவர்கள் கல்வி உளவியலைக் கற்றவர்கள். அதனைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பரீட்சித்துப் பார்ப்பவர்கள். உமா நல்லதொரு ஆசிரியர். எங்கு தட்டினால் இயந்திரம் இயங்குமோ, அங்கு தட்டிவி;ட்டார். மாணவர்கள் பம்பரமானார்கள்.


நேரம் மாலை ஆறுமணி. இருவரும் கோயிலுக்கு ஓடினார்கள். பூசை நடந்து கெண்;டிருந்தது. குருக்கள் திருக்குமரன் வாழ்த்தினார். நண்பர்களிடம் செய்தி பரிமாறப் பட்டது. பள்ளிவாயில் மௌலவி அமீரலியிடம் ஆலோசனை பெறப்பட்டது. அவர் ஓரு புன்னகையை மட்டும் உதிர்த்தார். “நல்லது நடக்கும்” என்றார். பங்குத் தந்தை மரியசேவியரிடம் ஓடினார்கள். செய்தியைக் கேட்டதும் அவரது உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. “நாளை அங்கு உங்களில் ஒருவனாக நிற்பேன்”; என்றார். இரவு எட்டு மணி விகாரைக்கு ஓடினார்கள். தர்மானந்த தேரர் வரவேற்றார். அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “உங்களால் முடியும். முயற்சி திருவினையாக்கும். நாளைக்குப் பார்ப்போம்.” என்றார். வணக்கம் கூறிப் புறப்பட்டார்கள். செய்தி காட்டுத் தீபோல் ஊரெங்கும் பரவியது.. மாணவர்கள் செய்தி காவிகள். அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் சாதனை படைக்கலாம். ஆதவனும் அன்வரும் சாதனை படைக்கப் புறப்பட்டு விட்டார்கள்.

திருக்கோணமலைத் துறைமுகம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. காலைநேரம் அற்புதமாகப் பரந்தது. ஆதவனும் அன்வரும் பாடசாலையை நோக்கி வந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதிபர் பத்மசீலன் அதிகாலையிலேயே வந்து விட்டார். அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவரைச் சூழப் பலர் நின்றிருந்தார்கள். அதிபரைக் கண்டதும் பயமாக இருந்தது. அவரது பக்கத்தில் சென்றார்கள். “சேர் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் சொல்லாமல்....” இழுத்தார்கள். “எல்லாம் எனக்குத் தெரியும். ரீச்சர் உமா அறிவித்தார். பெரிய சந்தோசம். நான் யோசித்ததை நீங்கள் சாதித்துவிட்டீர்கள்”. அவர்களது தலைகளைத் தடவிவிட்டார்.

அவர்களுக்கு உச்சி குளிர்ந்தது. உமாவுக்குச் சந்தோசமாக இருந்தது. சொல்லி வைத்தாற்போல் அனைத்துச் சமய குரவர்களும் வந்தார்கள். அதிபரோடு சேர்ந்து அவர்களை வரவேற்றார்கள். சமய குரவர்கள் ஆசிர்வதித்துச் சிரமதானப் பணியைத் தொடங்கி வைத்தார்கள். தர்மானந்த தேரர் வாழ்த்தினார். பங்குத்தந்தை மரியசேவியர் வாழ்த்தினார். மௌலவி அமீரலி ஆசிர்வதித்தார். குருக்கள் திருக்குமரன் பாராட்டி வாழ்த்தினார். விளையாட்டு மைதானத்தில் இவ்வளவு சனக்கூட்டத்தை இன்றுதான் உமா ரீச்சர் பார்த்தார். எப்படி இம்மாணவர்களால் ஒரு இரவுக்குள் சாதிக்க முடிந்தது. மாணவர் சமுதாயம் வலிமைமிக்கது. அவர்கள் நினைத்தால் உலகை மாற்றி அமைக்கலாம். அவர்களிடம் ஆற்றல்கள் நிறையவே உண்டு. அதனை அவர்கள் உணர்ந்து கொண்டால் உலகம் உயர்வு கொள்ளும். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாடசாலை வளவினுள் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்புகாமி புள்டோசருடன் வந்தார். விளையாட்டு மைதானம் ஒப்புரவானது. கதிர்காமத்தம்பி முதலாளியும் காதர் முதலாளியும் உணவுப் பொட்டலங்களோடு வந்தார்கள். பல நிறுவனங்கள் வந்திறங்கின. பிஸ்கற், குளிர்பானங்கள் பரிமாறப்பட்டன. விமானப்படையதிகாரி வட்டுகொட வந்தார். பார்வையிட்டுச் சென்றார். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான படையினர் குவிந்தனர். மக்கள் அனைவரும் மனிதர்கள்தான் என்ற தத்துவம் மிளிர்ந்தது. பழைய கட்டிடங்கள் புதுவடிவம் பெறத் தொடங்கின. பிள்ளைகளின் கிறுக்கல்கள் ஓடிமறைந்தன. பற்றைக் காடுகள் பறந்து விட்டன. பாடசாலை புதுமைக் கோலத்தில் நின்றது.

அனைவரும் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இனபேதம் அங்கு இல்லை. சந்தோசம் கும்மாளமிட்டது. தர்மானந்ததேரரும், திருக்குமரன் குருக்களும். பங்குத்தந்தை மரியசேவியரும், மௌலவி அமீரலியும் சந்தோசப் பட்டார்கள். இப்படியே நமது நாடு இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். நாமும் இந்தச் சமாதானத்துக்காகத்தானே சேவை செய்கிறோம். சிறுவர்களின் துணிச்சலையும் ஓற்றுமையையும் பாராட்டினார்கள். அயலிலுள்ள சிங்கள மகாவித்தியாலயம் உள்ளது. கபிலதான் மாணவ தலைவன். கபில தலைமையில் மாணவரணி வந்தது. தீபிகா தலைமையில் மாணவியர் வந்து சூழ்ந்தனர். ஆவர்களும் சிரமதானப்பணியில் ஈடுபட்டுழைத்தார்கள். ‘இது நமது நாடு. நமது பாடசாலை. நூம் ஒருதாய் மக்கள்’ என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.

பகல் உணவுத் திட்டம் பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் சமைப்பதற்கேற்ற கட்டிடம் இல்லை. அதனை அதிபர் ஒரு நிறுவனத்திடம் கேட்டிருந்தார். ஏற்ற ஒழுங்குகளையும் செய்திருந்தார். ஆனால் எப்போது கட்டப்படும் என்பது தெரியாதிருந்தது. சிலவாகனங்கள் வந்துநின்றன. பலர் இறங்கி வந்தார்கள். எடுப்பான நடையோடு சூரியா நடந்து வந்தார். சூரியாவின் வரவு அனைவரையும் கவர்ந்தது.

அதிபர் வரவேற்று அழைத்து வந்தார். சமய குரவர்கள் வந்து ஆசிர்வதித்து வரவேற்றார்கள். சூரியா பிரமித்துப் போனார். தன்னை இவர்கள் வரவேற்பதா?. சூரியா தன்னைத் தானே உயர்த்திக் கொண்டது கிடையாது. வலக்கை கொடுப்பதை இடக்கை அறியக் கூடாதென்ற புனிதக் கொள்கையைத் தன் கொள்கையாகக் கொண்டவர். அதிர்ந்து போனார். தர்மானந்த தேரர் வந்து வாழ்த்தினார். பங்குத்தந்தை போற்றினார். அனைத்துச் சமய குரவர்களும் பாராட்டினார்கள். இந்தப் பெரியவர்கள் போற்றுவதற்குத் தான் தகமையுள்ளவாரா? மனதினிலே கேள்விகளைக் கேட்டுக் கொண்டார். அவருக்குச் சங்கடமாக இருந்தது. எனினும் அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

எந்த நேரமும் சூரியாவின் முகத்தில் ஒரு புன்னகை குந்தியிருக்கும். அந்தப் புன்னகையை வீசியவாறு நடந்து வந்தார். பாடசாலையைப் பார்த்ததும் சூரியாவுக்கு அதிர்ச்சியான ஆனந்தம் பொங்கியது. கூடவே எஞ்ஜினிர சிவலிங்கமும்; வந்திருந்தார். கட்டிடப் பொருட்களும் வந்திறங்கின. பெற்றோர்களுள் மேசன்மார் இருந்தார்கள். அத்திவாரம் வெட்டப்பட்டது. சமய குரவர்கள் சேர்ந்து வாழ்த்த அடிக்கல்லை சூரியா நாட்டிவைத்தார். அப்போதும் சூரியா மலர்ந்த முகத்துடனேயே இருந்தார். வந்திருந்த பிரமுகர்களும் நாட்டினார்கள். கட்டு வேலைகள் தொடங்கின.

குழுக்களாகப் பிரிந்து செயற்பட்டார்கள். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு செயற்திட்டத்தில் ஈடுபட்டது. பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் வந்திருந்து செயற்பட்டார்கள். பெற்றோர் இவ்வாறு செயற்பட்டது இதுதான் முதற்தடவை. அனைவருக்கும் ஆச்சரியம். சந்தோசம் கலந்த நிகழ்ச்சியாக அமைந்தது. பற்றைகள் படர்ந்து வேலி உடைந்து கிடந்தது. பற்றைகள் அகற்றப்பட்டன. பாடசாலையின் வேலி செப்பனிடப்பட்டது. “அமுதன். அடுத்து நமது திட்டப்படி பாடசாலையைச் சுற்றி நிழல்தரு மரங்களை நட்டால் என்ன?”அழகாக இருக்கும். அத்துடன் நிழலும் கிடைக்கும்.” ஆதவன் அமுதனின் காதுகளில் ஓதினான். பிள்ளைகளின் காதுகளிலும் புகுந்து வந்தன. சிங்கள மகாவித்தியாலய மாணவர்களும் மரக்கன்றுகளைக் கொண்டுவந்தார்கள். மரக்கன்றுகள் வந்து குவிந்தன. மா, பலா, வாழை. தேக்கு, வேம்பு, பப்பாளி, தோடை என அனைத்து மரக்கன்றுகளும் குவிந்தன.

“எப்படி இக்கன்றுகளைப் பெற்றீர்கள்.? எவ்வளவு செலவாகியிருக்கும்”. சூரியா பிள்ளைகளிடம் வினவினார். “எங்களுக்கு ஒரு சதமும் செலவில்லை. உங்கள் நிறுவனத்தினர் இரண்டு மாதங்களுக்குமுன் எமது பாடசாலைக்கு வந்திருந்தார்கள். வீட்டிலும் பாடசாலையிலும் மரக்கன்றுகளை வளர்க்கும்படி அறிவுறுத்தினார்கள். மரக்கன்றுகளை இளநீர்க் கோம்பைகளில் வளர்க்கும்படி வழிகாட்டினார்கள். பாடசாலையில் வேலியில்லை. வீடுகளில் வளர்த்தோம். பொழுது போக்காகவும் இருந்தது. இப்படிச் செய்வதன் மூலம் மரக்கன்றுகளை வளர்க்கவும் கற்றுக் கொண்டோம்.” விளக்கினார்கள். “என்ன கற்றுக் கொண்டீர்கள்? சூரியா குறுக்கிட்டார். “ மாணவர்கள் பதிலளித்தார்கள்.

“சிறந்த விதைகளைத் தேர்ந்தெடுத்தோம். கோம்பைகள் அல்லது அளவான பொலித்தின் உறைகளைத் தேடி எடுப்போம். அதனுள் வளமான மண்ணையிட்டு விதைகளை நடுவோம். அதனைக் கொப்பியில் பதிந்து கொள்வோம். திகதியையும் குறித்துக் கொள்வோம். தண்ணீர் விடுவோம். முளை வருவதை அவதானித்துக் குறிப்பெழுதுவோம். இலைகள் துளிர்விடுவதைப் பார்க்கச் சந்தோசமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகள் உள்ளன. ஓவ்வொருவரும் ஒருவகை மரக்கன்றுகளைத்தான் வளர்க்கிறோம். வேண்டியபோது மரக்கன்றுகளைப் பரிமாறிக் கொள்வோம். கற்றலும் நடக்கிறது, பொழுது போக்குடன் செலவுக்கு எமக்குப் பணமும் கிடைக்கிறது. இது மிகுந்த பயனுடைய திட்டம். இதனைத் தொடர்ந்து உங்களது நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். இது எமது வேண்டுகோளாகும்.” ஒரு மாணவி கேட்டுக் கெண்டார். “தனியாருக்குப் போகும் பணத்தை படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுப்பதால் படிப்புச் செலவைச் சமாளிக்கலாம். அல்லவா”?. இன்னுமொரு மாணவி பதிலிறுத்தாள். சூரியாவுக்குப் பெருமையாக இருந்தது.

மாணவர்களுடன் சூரியாவும் சிரமதானப் பணியில் இறங்கிவிட்டார். ஒரு சிறந்த தொண்டன்தான் தலைவனாக முடியும். இதனை அனுபவத்தில் கண்டவர். அதனால் மாணவர்களுடன் சேர்ந்து அவர்களைக் கலகலப்பாக்கித் தானும் ஈடுபட்டார். பாடசாலை வளவு, கட்டிடங்கள். சுற்றுச்சூழல் அழகு பெற்றது. அன்றைய நாளை நினைவு கொள்ளவேண்டும். அதிபர் பத்மசீலன் வந்தார். சூரியாவை மாமரக் கன்று ஒன்றை நடும்படி கேட்டுக் கொண்டார். சூரியாவிடம் மரக்கன்று கொடுபட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் கைகளைத் தட்டினார்கள். பெரும் ஆரவாரத்தோடு சூரியா மரக்கன்றை நட்டார். சமயகுரவர்களும் ஆளுக்கொரு மரக்கன்றுகளை நட்டார்கள். மரக்கன்றுகளை எப்படி, எங்கே நடுவதென்று திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அந்தந்த இடங்களில் மரக்கன்றுகள் நடப்பெற்றன. பூந்தோட்டம் திட்டமிடப்பட்டு அழகாக நடப்பெற்றது. மலை மெல்லப் படரத் தொடங்கியது. அதிபர் பாடசாலையினைச் சுற்றி நோட்டம் விட்டார். காலையில் காடுபற்றி பயங்கரமாகத் தெரிந்த பாடசாலைக் காணியைக் காணவில்லை. அது அழுகுபெற்று புத்துயிர் பெற்று நிமிர்ந்திருந்தது.

ஒருநாள் பொழுதுக்குள் பாடசாலை பொலிவுற்றுப் பளிச்சிட்டது. நிகழ்வு முடிவுறும் தருணம் வந்தது. செயற்பாட்டில் முன்னின்று உழைத்தவர்களை அனைவரும் பாராட்டினார்கள். “இவ்வாறான நிகழ்வுகள் பாடசாலைகள் தோறும் நடைபெற வேண்டும். அப்போதுதான் இனநல்லுறவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உதவிகள் செய்து சமாதானமாக வாழவும் முடியும்” சமயகுரவர்கள் பாராட்டினார்கள். “இந்த மாணவர்களைப் பாராட்டும் இந்நாளில் வீட்டுக்கொரு மரம் நடும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துங்கள். நமது வளங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சின்னஞ்சிறு சிறார்களின் மனவளங்களையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். நமது சூழலின் வளங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேற்றுமையை நான் காணவில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக நிற்கிறீர்கள். மிகச் சந்தோசமாக இருக்கிறது. இப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாடசாலைத் தேவைக்கேற்றவாறு பயனுறச் செய்த அதிபர், ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்”. சூரியா நிறைவாகக் கூறினார்.

மாலையானதும் சிரமதானப் பணி நிறைவாகியது. வெளியில் வந்துநின்று பாடசாலையைப் பார்த்தார்கள். அவர்களது கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. ‘சீனக்குடா உயர்நிலை வித்தியாலயம்’ காட்சியாகிக் கொண்டிருந்தது. சிங்கள மகாவித்தியாலய மாணவர்கள் தமிழ் முஸ்லிம் மாணவர்களோடு வாஞ்சையுடன் உரையாடினார்கள். உமா ரீச்சர் ஆதவனைப் பார்த்தார். அன்ரனையும், அன்வரையும் அழைத்தார். சிங்கள மகாவித்தியாலய மாணவர் தலைவர்களை அழைத்தார். அவர்கள் அனைவரையும் பார்த்தார். அவர்களை வாஞ்சையோடு பாராட்டினார். “ நீங்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய சாதனையைச் சாதித்துவிட்டீர்கள். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேற்றுமையை உடைத்தெறிந்து விட்டீர்கள். உங்கள் சாதனை தொடரவேண்டும். படிப்பில் மிகுந்த கரிசனையைக் காட்டுங்கள். சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கு வாழ்த்துக்கள்.” என்றார். அதிபர் பத்மசீலன் அனைவருக்கும் நன்றி கூறினார். ஆதவனும், அன்வரும், அன்ரனும் ஏனைய மாணவர்களை ஊக்குவிக்கும் சாதனை வீரர்களாக வலம்வருகிறார்கள்.

Read more...

Friday, April 2, 2010

சாதனையாளர்கள்

சாம்பல்தீவு அழகிய கிராமம். நீர்வளம் மிக்கது. நிலவளம் கொண்டது. உயர்ந்த உள்ளங்களைக் கொண்ட மாந்தர்கள் வாழுமிடம். தொல்பொருள் என்பது பழங்காலத்துப் பொருட்கள். அவற்றையிட்டு ஆராய்வதை தொல்பொருள்ஆய்வு என்பார்கள். அந்த ஆய்வில் நாட்டங் கொண்டவர்தான் ‘சேமன்’ தம்பிராசா. அவர் பிறந்து வாழ்ந்த கிராமும் சாம்பல்தீவுதான்.




உப்புநீர்ச் சிற்றாறு ஒருபக்கம் ஊரும். கிழக்கே கடல். அலைவீசித் தென்றலை அனுப்பும். தென்னம்பாளைகள் வெடித்துச் சிரிக்கும். தென்னோலைகளைப் பிரித்துச் சூரிய ஒளி எட்டிப் பார்க்கும். கிளி, மைனாக்கள் சீட்டியடித்துக் குதூகலிக்கும். வீடுகளின் முற்றங்களில் றோசாச் செடிகள் பூத்துக் குலுங்கும். கனிகளைச் சுமந்து பலாமரங்கள் காற்றில் அசையும். மாமரங்கள் காய்த்துக் குலுங்கும். ககாய்கறித் தோட்டம் சிரித்துப் படுத்திருக்கும்.




பாடசாலை கிராமத்துக்குப் பெருமை தேடித்தருவது. அதிலே கற்கும் மாணவர்களால் ஊரின் புகழ்பரவும். சாம்பல்தீவு மகாவித்தியாலயம் அதனை நிறைவு செய்வதாக நிமிர்ந்து நிற்கிறது. எத்தனை அதிபர்களும், ஆசிரியர்களும் வந்தார்கள். தமது கடமையை முடித்துச் சென்றார்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தங்களது சேவையைச் செய்துவிட்டுத்தான் போனார்கள். ஆனால் அதிபர் யோகானந்தர் இவர்களைவிடவும் சற்று வித்தியாசமானவர். சாதனையாளர்கள் மற்றவர்கள் செய்வதையே சற்று வித்தியாசமாகச் செய்வார்கள். யோகானந்தர் அப்படிப் பட்டவர்தான். அவரும் சாதனை படைக்கப் புறப்பட்டவர்தான். ஆனால் அந்தச் சாதனையை மாணவர்கள் ஊடாகக்காண ஆசைப்பட்டார். பாடசாலையைப் பொறுப்பெடுத்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. பாடசாலை சோம்பலை விடுத்து விழித்துக் கொண்டது. இருபத்திநான்கு மணித்தியாலங்களைக் கொண்டது ஒருநாள். பாடசாலை எந்நேரமும் திறந்திருக்க வேண்டும் என்பது அவருடைய கொள்கை. பாடசாலை அனைவரையும் அணைத்துக் கொள்ளும் இடமாக அமையவேண்டும். பாடசாலையில் அக்கறையற்ற பெற்றோரையும், மற்றோரையும் ஈர்த்தெடுக்கும் இடமாக விளங்கவேண்டும்.




பழைய மாணவர்களையும் இணைத்து அவர்களது ஆற்றல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். பாடசாலையே தஞ்சம் எனக்கிடந்தார். பாடசாலை புதுப்பொலிவோடு நிமிர்ந்து நிற்கிறது. அதிபரில் சிறார்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர் கூறுவதும், செய்வதும் தங்களுக்காகத்தான். தங்கள் உயர்வுக்காகத்தான் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதிபரின் அறிவுரையும் செயற்பாடுகளும் மாணவர்களைக் கவர்ந்து விட்டது. ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கவர்ந்து விட்டனர். சாம்பல்தீவு மகாவித்தியாலயம் எந்த நாளும் இயங்கிக் கொண்டுதானிருக்கும். பாடசாலைகள் மூன்றாந்தவணை விடுமுறைக்காக மூடியிருந்தன




தலைமைத்துவம் என்றால் என்ன? தானாகக் கடமைகளை உணர்ந்து செய்வது தலைமைத்துவப் பண்பு. நல்லனவற்றைப் பிறர் செய்யத்தூண்டுவதும் தலைமைத்துவம்தான். சாம்பல்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் இதனை உணர்திருந்தார்கள். அவர்களும் தலைமைத்துவம் கொண்ட தொண்டர்களாக மாறிவிட்டார்கள். விடுமுறை நாட்களிலும் பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தது. மாணவர்கள் தாங்களே கற்றலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். பாடசாலைச் சுற்றுப்புறம் தூய்மை கண்டது. பூந்தோட்டம் அழகூட்டியது. பூங்கன்றுகளுக்கிடையில் கத்தரி, மிளாய், வெண்டி காய்த்துக் கொண்டிருந்தன. கொஞ்சநேரப் படிப்பு. பின்னர் விளையாட்டு என வழக்கப் படுத்திக் கொண்டார்கள். விளையாட்டில் விதிமுறைகள் உண்டு அவற்றுக்குத் தாங்களாகவே கட்டுப்பட்டு விளையாடினார்கள். கற்றல் என்பதும் தவம்தான். இவைகளும் ஒருவகைத் தவம்தான். சந்தோசம் கூத்திட்டது. குப்பை கூளங்கள் குழிகளில் நிறைந்து பசளையாகின. மாணவர்கள் பாடசாலைக்கு விருப்பத்தோடு வந்தார்கள்.



மாதங்களில் மார்கழி மாதம் மகத்தானது. மழையும் பனியும் கலந்து பொழியும். மழைத்தூறலும் பனியும் கலந்து குளிரைத் தடவிக் கொண்டிருந்தது. கோயில்களில் திருவெம்பாவை முடிந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள். அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் பத்தாம் வகுப்பில் படிக்கிறார்கள். அடுத்த வருடம் பதினோரம் வகுப்பு. அவர்கள் வகுப்பறைச் சுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பல மாணவர்கள் பூந்தோட்டத்தில் நின்றிருந்தார்கள். வழமைக்கு மாறாகக் கடல் இரைந்து கொண்டிருந்தது. “கடல் பொங்கி வருது. ஓடுங்கள்”. மக்களிற் சிலர் சத்தமிட்டார்கள். கால் போனபோக்கில் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். சல்லியில் உள்ள மக்கள் சாம்பல்தீவு வழியாக ஓடினார்கள். எல்லோரும் ஓடத் தொடங்கினார்கள். ஆத்திமோட்டைச் சந்தியைத் தாண்டினார்கள். “உயிர்தப்பினால் உப்பும் வித்துச் சீவிக்கலாம்.’. சொல்லியபடி சனங்கள் ஓடினார்கள். பெரியகுளம் மேட்டுப்பகுதியில் மக்கள் குவிந்திருந்தார்கள்.




மாணவர்களுக்குப் புதினமாக இருந்தது. “என்னடா செய்யிறியள். கடல் பொங்கி வருது. உயரமான பகுதிக்கு ஓடுங்க” யாரோ ஒருபெரியவர் கரிசனையோடு சத்தமிட்டு விரைந்தார். அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் மாணவர்களை உசார்ப் படுத்தினார்கள். அவர்களை ஒன்று கூட்டினார்கள். மக்களுக்குப் பின்னால் ஓடவைத்தார்கள். பாடசாலை வெளிக்கதவை மூடினார்கள். அவர்களும் சைக்கிளில் விரைந்தார்கள். சனங்கள் சாரிசாரியாக ஓடிக்கொண்டிருந்தார்கள். சனங்களை உயரமான இடங்களில் அனுப்பினார்கள். நேரம் பதினொரு மணியைத் தாண்டியிருந்தது. வெயில் சுட்டெரித்தது. தெருவெங்கும் மக்கள் கூட்டம். கடற்கரைப் பக்கம் போகமுடியாது. அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் சைக்கிளைத் திருப்பினார்கள்.




திருகோணமலை நகரை நோக்கி மிதித்தார்கள். விரைந்து செல்லமுடியாதிருந்தது. வீதிகளில் மக்கள் திரண்டிருந்தார்கள். பலரின் கண்களில் கண்ணீர் வெள்ளம். ஓலமிட்டு அழுதார்கள். உப்புவெளியைத்தாண்டி மட்டிக்களிக்கு வந்தார்கள். மட்டிக்களிப் பரவைக் கடல் வெறிசோடிக் கிடந்தது. கடல்நீரைக் காணவில்லை. மக்கள் கூட்டம் கடற்பரப்பினுள் பாய்ந்து செல்வதை அவதானித்தார்கள். பலர் கைகளில் மீன், நண்டு என நிறைந்து காணப்பட்டன. கடலுள் நீரில்லாததைப் பார்த்தார்கள். சற்று நேரத்தில் கடல் சீறியெழுந்து விரைந்து வந்தது. மக்கள் கூட்டம் முண்டியடித்து கரையேறி ஓடினார்கள். பலர் விழுந்து புரண்டார்கள்.




கடல்நீர் வேகமாகப் பின்வாங்கியது. கடலை நோக்கி மக்கள் மீண்டும் ஓடினார்கள். பயமறியாச் சிறுவர்கள் பாய்ந்து ஓடினார்கள். அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் எச்சரித்தார்கள். “கடலுள் போகவேண்டாம”; எனக் கத்தினார்கள். அதனை மக்கள் காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லை. போனவேகத்தில் கடல் வாரிச்சுருட்டித் திரும்பியது. மக்கள் பாய்ந்து கரைக்கு வந்தார்கள். வெகுவேகமாக வந்து கரைகளில் மோதியது. பலர் விழுந்து சுருண்டார்கள். அவர்களைச் சுருட்டி முட்டி மோதியது. ‘மக்களின் அறியாமையினாலும் பயத்தினாலும் அனர்த்தங்கள் அதிகரிக்கின்றன’. ஆசிரியர் வகுப்பில் கூறியதை நினைவு கூர்ந்தார்கள்.




மக்கள் ஓடிய வேகத்தில் முதியவர் இடறி வீழ்ந்து கிடந்தார். முதியவரை நோக்கி அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும ஓடினார்கள். அவரைத் தூக்கி ஓரமாக விட்டார்கள். இரண்டு மூன்று வயதுச் சிறுவர்களும் அனாதரவாக ஓலமிட்டார்கள். அவர்களைத் தூக்கி மக்கள் நின்ற இடங்களில் விட்டார்கள். கடல்நீர் நிறம் மாறியிருந்தது. நிலத்தின் தாழ்வான பகுதிக்குள் ஊடுருவிய நீர் வேகமாகக் கடலுள் இழுக்கப் பட்டது. அந்த வேகம் வீடுகளின் மதில் சுவர்களையும் பெயர்த்து வீழ்த்தியது. அவர்களது வாழ்க்கையில் இது ஒரு புது அனுபவம்.



“ ஸ்ரீவன்! நம்மூர் சனங்களைக் கவனிக்க வேண்டும். விரைந்து போவம்.. எங்கே அஸ்வர்”? அரவிந்தன் சத்தமிட்டான். “அதோ அஸ்வர்” காட்டினான். அஸ்வர் அந்த முதியவருக்கு உதவி செய்து கொண்டிருந்தான். கடல்நீர் கடலுக்குள் வடிந்தோடிக் கொண்டிருந்தது. வானொலிச் சாதனங்கள் நேரடி ஒலிபரப்புச் செய்து கொண்டிருந்தன. அவர்களது காதுகளில் ‘சுனாமி’ என்ற யப்பானியச் சொல் பதிந்து கொண்டது. அனைவரது வாய்களிலும் சுனாமி உலாவந்தது. யப்பானிய மொழிச் சொல்லுக்குச் சர்வதேச அந்தஸ்த்துக் கிடைத்து விட்டது. சைக்கிள்கள் சாம்பல்தீவை நோக்கிப் பறந்தன. கடற்கரையை அண்மித்த பகுதிகளைமக்கள் பாடசாலையில் நிறைந்திருந்தனர்.





அப்படியே சல்லியம்பாள் கோயிலடிக்குச் சென்றார்கள். அவர்கள் திடுக்கிட்டார்கள். என்ன கொடுமை. அவர்களால் அக்காட்சியைப் பார்க்கமுடியவில்லை. படகுகள் வீதிகளில் வீசப்பட்டுக் கிடந்தன.





அலைவாரி கரையில் மோதியவண்ணம் இருந்தது. கடற்கரையோரம் சின்னாபின்னமாகிக் காணப்பட்டது. எங்கும் கடல் சீற்றத்தின் எச்சங்கள் தெரிந்தன. தென்னைகள் சரிந்து கிடந்தன. வீடுகள் சிதைந்து குவிந்து கிடந்தன. தென்னஞ்சோலையாக விரிந்து கிடந்த கடற்கரை பாலைவனமாகப் படர்ந்திருந்தது. கடற்கரையில் மக்கள் கூட்டம். தங்கள் உறவுகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பல உடலங்கள் கரையொதுங்கின. கடற்கரையோரமாக இருந்த வீடுகளை கடலலை அள்ளிக் கொண்டு போய்விட்டது. கோயில் முன்மண்டபம் அழிவுற்றிருந்தது. மூலஸ்த்தானம் அழிபடவில்லை. அம்பாள் சிலைமட்டும் அசையாமல் இருக்கிறது. அவர்களுக்கு அதிசயம். கையெடுத்துக் கும்பிட்டார்கள். “ஏனம்மா இந்தக் கொடுமை”? அரவிந்தன் இரந்தான்.



“ஸ்ரீவன்! இந்த அம்மன் பேராற்றல் வாய்ந்தசக்தி கொண்டவள். இராம இராவண யுத்தம் பற்றிப் படித்தோம் அல்லவா? நமது அதிபரும் ஆசிரியர்களும் கற்பித்ததை மறந்து விட்டாயா? நினைத்துப் பார். இராமரது வீரர்கள் சாம்பல்தீவில் அதாவது நமது ஊரில் முகாமிட்டிருந்தனர். விடியவும் போர் நிகழவிருந்தது. அன்று இரவு இராமன் இந்த அம்மனைப் பிரதிஸ்டை செய்தான். இந்த இடத்தில் இருத்திக் களப்பலி கொடுத்தான். அந்த அம்மன்தான் இவள். இவளது பேராற்றல் அளப்பெரியது. அதிகம் உக்கிரமுடையது. இவளது உக்கிரத்தைக் குறைப்பதற்காகத்தான் பாலம்போட்டாற்று அம்மனை நிறுவினார்கள். இது நமது மூதாihயர் வாய்வழி வந்த உண்மை. வருடாவருடம் வைகாசிமாதத்தில் உற்சவம் நடக்கும். அந்தக் களப்பலியை நினைவு கூரத்தான் இந்தக் கோயிலில் சேவலைக் கழுவில் ஏற்றுவார்கள்.” அரவிந்தன் இந்தச் சோகத்தின் போதும் தனக்குத் தெரிந்ததைக் கூறினான். ஸ்ரீவனுக்கு ஒரே ஆச்சரியம். அவனுக்குப் பயமாகவும் இருந்தது.




கோணேசர் கோயில் நேரே தெரிந்தது. கடற்கரை ஓரங்களில் உயிரற்ற உடல்கள் புதையுண்டு கிடந்தன. தூரத்தே சிலர் மீட்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

“தம்பிமார் அங்கால ஓடுங்கள். பயந்து போவிங்கள்.” பெரியவர்கள் எச்சரித்தார்கள். “ஐயா நாங்கள் சல்லியம்மனின் பிள்ளைகள். எங்களுக்குப் பயமாவது, நாங்கள் பயப்படுவதாவது. நமது மக்கள் செத்துக்கிடக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.” சிறார்களது பேச்சுப் பெரியவர்களது வாய்களுக்குப் பூட்டுப் போட்டது. “உங்க இஸ்டம். வாங்க.” அவர்களுடன் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். கூடவே நண்பர்களும் உதவிக்கு வந்தார்கள். சில ஆசிரியர்களும், அதிபரும் வந்தார்கள். கடற்கரையைப் பார்த்தார்கள். அவர்களது கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. மீட்புப் பணியில் அவர்களும் பங்கு கொண்டார்கள். தனது மாணவர்களைக் கண்டதும் அதிபர் நெகிழ்ந்து போனார். இராணுவத்தினரும் பல்வேறு இளைஞர்களும் பங்கு கொண்டு உழைத்தார்கள்.



அனைவருக்கும் களைப்பு. தாகம் தலைக்கேறியது. கிணறுகளை எட்டிப் பார்த்தார்கள். பளிங்கு போன்ற தண்ணீர்; கருமையடைந்து தெரிந்தது. பார்க்கப் பயங்கரமாக இருந்தது. உப்பாகக் கரித்தது. வீடுகள் உருக்குலைந்து கூரையற்றுக் கிடந்தன. கிடுகுக்கூரை சிதைந்து அப்பால் சரிந்த மரங்களில் சிக்கியிருந்தது. தென்னை மரங்கள் சரிந்து கிடந்தன. இளநீர் குலைகளைக் கண்டார்கள். சிதைந்த வீட்டினுள் எட்டிப் பார்த்தார்கள். இரண்டு மூன்று கத்திகள் தெரிந்தன. எடுத்துக் கொண்டார்கள். இளநீரை வெட்டினார்கள். காப்பாற்றப் பட்டவர்கள் களைத்திருந்தார்கள்.




அனைவருக்கும் இளநீரைக் கொடுத்தார்கள். தாங்களும் உட்கொண்டார்கள். தொண்டு நிறுவனங்கள் வந்து சேர்ந்து கொண்டன. கரையோரக் கிராமங்கள் சோகத்தில் ஆழ்ந்து விட்டன. அரவிந்தன் மற்றவர்களுக்குச் சைகை காட்டினான். மூவரும் பாடசாலையை நோக்கி விரைந்தார்கள். மக்கள் வெள்ளம் பாடசாலையை நிறைத்திருந்தது. கரையோர மக்கள் பாடசாலையில் தஞ்சமாகினார்கள். அவர்களைப் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது.



சாம்பல்தீவு மகாவித்தியாலயம் சுனாமியினால் பாதிக்கப் படவில்லை. பயத்தினால் இடம் பெயர்ந்த மக்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள். அரவிந்தன் சுற்றிப்பார்த்தான். “அஸ்வர்! எங்கே ஸ்ரீவன்”?;. நமது வகுப்பு மாணவர்களைக் கூப்பிடு. வகுப்பறைகளில் தஞ்சமடைந்த மக்களைக் குடும்பவாரியாகப் பதிவு செய்வோம். விரைவாகச் செய்வோம். சரியா”? மாணவர்களைப் பாடசாலைக்கு வரும்படி செய்தி அனுப்பியாகிவிட்டது. பல மாணவர்கள் வந்துவிட்டார்கள். சாரணர்கள் தங்கள் சீருடையில் வந்தனர்.



மாணவிகள் பதிவுகளை மேற்கொண்டார்கள். “இயற்கையினால் நமது மக்கள் அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள். அவர்களுக்கு உதவுவோம். புறப்படுவோம்..” பாடசாலையில் இருந்த மண்வெட்டிகள் வெளியில் வந்தன. பொருத்தமான இடங்களில் கழிவுகள் போடுவதற்கான குழிகள் அமைந்தன. தொட்டிகளில் தண்ணீர் நிரம்பியது. கழிவறைகள் சுத்தமாக்கப் பட்டன. பல மாணவர்கள் கிராமத்தின் வீதிகளில் வலம் வந்தார்கள். மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உணவுப் பார்சல்கள் தயாராகின.



மேற்குவானம் சோகத்தால் சிவந்திருந்தது. மக்கள் துயரில் பங்குகொண்டது போல் சூரியன் அழுது வடிந்து கீழிறங்கியது. இருள் சூழ்ந்து கொண்டது. அரவிந்தன் தலைமையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. மின்வெளிச்சம் பரவியது. மாணவிகளுக்கு உதவியாக மாதர்சங்க உறுப்பினர்களும் தேநீர் தயாரித்தார்கள். அஸ்வர் பெருங்கூட்டம் புடைசூழ உணவுப் பார்சல்களோடு வந்தான். ஸ்ரீவன் உடுதுணிகளை அள்ளியவாறு இளைஞர் கழகத்துடன் வந்தான். அபயபுர சிங்கள மகாவித்தியாலய் மாணவரணி வந்தது. அவர்கள் பாய்களும் போர்வைகளும் கொண்டுவந்தனர். பதிவுகளைப் பரிசீலித்தார்கள். ஏறத்தாழ இருநூற்று ஐம்பத்தைந்து குடும்பங்கள் அகதிளாகி இருந்தனர். பதிவுகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தார்கள்.



உணவுப்பொதிகளைப் பகிர்ந்தார்கள். வாளிகளில் தண்ணீர் நிறைத்துக் கொடுத்தார்கள். முதியோர்களை ஆதரித்து உபசரித்தார்கள். தாய்மார்களை அன்புடன் போற்றினர். அதிபர் அப்போதுதான் களைத்து வந்து சேர்ந்தார். அனைத்தையும் உற்று நோக்கினார். அவருக்குப் பெருவியப்பாக இருந்தது. சந்தோசம் அவரது களைப்பைப் போக்கியது. “இவற்றைவிட எனக்கென்ன வேண்டும். எனது மாணவர்கள் சாதனையாளர்கள்தான். தாமாகவே இயங்கும் வல்லமை பெற்றவர்கள்.” மாணவர்களது சேவை அவரது உள்ளத்தைத் தொட்டது. அவரை அறியாமலேயே கண்கள் பனித்தன.

யாவும் கற்பனை.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP