Thursday, May 6, 2010
Tuesday, May 4, 2010
கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
2
“குட் ஆப்ரநூன். மாலை வணக்கம்” ஒரு முறுவலை வீசிவிட்டுக் கூறினான். “கான் ஐ ஹெல்ப் யூ பிளீஸ். உங்களுக்கு நான் உதவலாமா?” மிகப் பௌவியமாக ஆனந்தன் கேட்டான். சிப்பாய்களைக் கைகளால் விலக்கியவாறு கப்ரன் செனிவரத்ன முன்னே வந்தான்.
“மே..கத்தாவ எப்பா. ஓகொல்லோ கௌத? இந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீங்கள் எல்லோரும் யார்”? கப்ரன் கேட்டான். ஸ்ரீலங்கா அரசு சிங்கள இளைஞர்களையே இராணுவத்தில் சேர்த்துள்ளது. சிறுபான்மையாக சில முஸ்லிம் இயைஞர்களையும் உள்ளீர்த்துள்ளனர். சிங்களம் ஆட்சி மொழி என்பதனை வலியுறுத்தி சிங்களத்திலேயே கடமையாற்ற ஏற்பாடு செய்துள்ளனர். மேலிடம் தொடக்கம் அடித்தளம்வரை உள்ள அனைத்து அலுவலர்களும் சிங்களத்தில் கையெழுத்திடும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தியிருந்தனர். அது இன்றுவரை கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழும் அரசகரும மொழி என்று கூறினாலும் நடைமுறையில் அது பேணப்படுவதில்லை. இதற்கு வதிவிலக்காக தமிழர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது கௌரவமாகக் கருதப்படுகிறது. ஒரு தமிழன் தனது கையொப்பத்தினை தமிழில் இன்றுவரை இடுவதில்லை. அனைவரும் பாரதி கூறியதுபோல் நடிப்புச் சுதேசிகள்தான். ஆனந்தன் மண்டபக் கதவுகளை அகலத் திறந்து விட்டான். அவர்களை அழைத்தான். “கம் இன். சிற் டவுண் பிளீஸ்.” கதிரைகளைக் காட்டி அவர்களை அமரும்படி கேட்டுக் கொண்டான். “நாங்கள் கல்விப் பணி;ப்பாளர்கள். பரீட்சை நடத்துகிறோம். விடைத்தாள் பொதிகளை ஒப்படைத்து விட்டு இப்போதுதான் வந்தோம்” ஆங்கிலத்தில் ஆனந்தன் கூறினான்.
கப்ரன் செனிவரத்னவுக்கு ஆங்கிலம் தெரியும். எனினும் அவனும் சிங்களத்தில்தான் கதைத்தான். வேட்டையாட வந்த இடத்தில் மரியாதை. அவர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. சிப்பாய்கள் ஆளையாள் பார்த்துக் கொண்டனர். “இராணுவத்தைக் கண்டால் பயங்கரவாதிகள் சுட்டுவிட்டு ஓடுவார்கள். மிகக்கவனமாகப் பதுங்கி, ஆயத்தம் செய்து பிடிக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். அவர்களை நம்பவே கூடாது.” பயிற்சியின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள் அவை. சிப்பாய்களுக்கு ஏமாற்றம். சுற்றி வளைத்து மிகஅவதானத்தோடு வந்தால் இப்படியொரு வரவேற்பா? அந்தக் கப்ரனுக்கு அதிர்ச்சி. தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “மே.. ஆனந்தன் கௌத? ஆனந்தன் யார்”;? கப்ரன் கேட்டான்.
“வெல். யேஸ்.. இற்ஸ் மி. நான்தான் ஆனந்தன். டிப்பியூட்டி டிறெக்டர் ஒப் எடியுகேசன். பிரதிக்கல்விப் பணிப்பாளர்;” ஆனந்தன் விடையளித்தான். ஆனந்தனை உற்றுப் பார்த்தான். “ஆனந்தனைப் பிடித்து வா. மிகப்பயங்கரமான பயங்கரவாதி. முரட்டு ஆசாமி. மடக்கிப் பிடிக்க வேண்டும்.” ஆனந்தனை அந்த மேலதிகாரியும் இதுவரை நேரில் பார்க்வில்லை. வாய்க்கு வந்தபடி அவனது மேலதிகாரி கட்டளை இடடிருந்தான். கப்ரன் செனிவரத்தின உள்ளத்தில் பெரும் போராட்டம். அவர் கூறிய கில்லாடி எப்படி இருப்பான்.? தனது மேலதிகாரியை நினைத்தான். “சேர் ஆனந்தன் எப்படி இருப்பான்.” கப்ரன் செனிவரத்ன கேட்டான். “கறுத்து உயரமாக இருப்பான். குறும்தாடி வைத்துள்ளான். படு கில்லாடி. துப்பாக்கியை லாவகமாகக் கையாளுவான். மிகக் கவனம்.” தான் எதிரிகளைக் கற்பனையில் எவ்வாறு பார்த்தானோ அவ்வாறே அந்த அதிகாரி கப்ரனுக்கு கூறிவைத்தான். உண்மையில் அவன் கண்டதே இல்லை. தனது உயரதிகாரி கூறியவற்றுக்கு எதிர்மாறாக இருக்கிறதே. மேலதிகாரி கூறிய ஆனந்தன் கறுப்பு. உயரமானவன். எண்ணிப் பார்த்தான்.
ஆனந்தனை உற்றுப் பார்த்தான். “இவன்தானா அவன். இல்லையே. இவனுக்குச் சிவந்த மேனி. இவன் அவர் கூறியது போல் உயரமில்லையே. முரட்டுத் தன்மையும் இல்லையே. மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறான். மிகச் சாதுவாக இருக்கிறான். அவன் தோற்றத்திலேயே பண்பாடு விளங்குகிறது. இவன் உயரதிகாரியாக அரசாங்கத்தில் கடமை செய்கிறான். அதுவும் கல்விச் சேவையில். எதனை நம்புவது.?” அவர்களால் நம்ப முடியவில்லை. அந்த இராணுவக் கப்ரனுக்குச் சந்தேகம். மேலதிகாரியின் கட்டளையை நிறைவேற்றியாக வேண்டும். தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். மீண்டும் அவனே தொடர்ந்தான்.
“ மே .. ஆனந்தன் கௌத. மட்டக் கியான்ட. கூ இஸ் ஆனந்தன்.? பிளீஸ் ரெல் மி” கப்ரன் செனிவரத்ன வாயிலிருந்து ஆங்கில வார்த்தைகள் வந்தன. ஆனந்தன் புன்னகைத்தான். ஆங்கிலத்தில் “ நான்தான் ஆனந்தன்.” ஆணித்தரமாகக் கூறினான். தனது அடையாள அட்டையைக் காட்டினான். கப்ரன் செனிவரத்னவுக்கு தலை சுற்றியது. வேறு வழியில்லாது வாகனத்தில் ஏறுமாறு உத்தரவிட்டான். ஆனந்தன் ஏறிக்கொண்டான். வாகனம் திரும்பியது. செல்வம் கப்ரனிடம் ஓடி வந்தார். அவரது கண்கள் சிவந்திருந்தன. கோபம் ஒருபக்கம். துயரம் ஒரு பக்கம். “ஏன் அவரைக் கூட்டிப் போறியள். டு யூ ஹாவ் எனி அறஸ்ற்; வாரண்ட்.” இந்தக் கேள்வி கப்ரனைத் தாக்கியது. பெரும்பான்மை மக்களின் ஆட்சியில் இவர்களது கேள்விக்கு இடமில்லை. சிறுபான்மை மக்கள் வெறும் புழுக்கள். அடிமைகள் என்ற நினைப்பு. அதனால் அவசரகாலச் சட்டத்தை அமுலாக்கம் செய்தனர்போலும். அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “மே நாக்கியோ கட்ட வாகென இன்ர. ஏய் கிழவா வாயை மூடிக் கொண்டு கிட”. அவன் அதட்டலோடு சத்தமிட்டான். “செல்வம் பேசாதிருங்கள். நான் போய் வாறன்.” ஆனந்தன் கைகாட்டினான். செல்வம் செய்வதறியாது தடுமாறினார். அவரது கண்கள் குளமாயின. வாகனம் வீர் என்று விரைந்தது.
மழை பொழிந்த வண்ணம் இருந்தது. மக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். இராணுவ வாகனத்தைக் கண்டு ஒதுங்கினார்கள். வாகனத்தினுள் செல்பவர்களைப் பார்ப்பதற்கு அவர்களுக்குத் தைரியம் கிடையாது. ஆனந்தனை யாரும் கண்டு கொள்ளவில்லை. வாகனம் படைமுகாமுக்குள் நுழைந்தது. ஈரற்பெரியகுளம் இராணுவ முகாம் பரந்திருந்தது. அது வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும்; எல்லையாக உள்ளது. அது சிங்களச் சிப்பாய்களின் சாம்ராச்சியம். இராணுவ வாகனங்களின் இரைச்சல். போவதும் வருவதுமாக அசைந்தவண்ணம் இருந்தன. ஆனந்தன் வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டான். அவனைச் சூழ்ந்து துப்பாக்கிகளுடன் இராணுவச் சிப்பய்கள். பெரிய பயங்கரவாதியைப் பிடித்த சந்தோசம் அவர்களுக்கு. ஆனந்தனைப் பார்ப்பதற்காகப் பல சிப்பாய்கள் எட்டிப் பார்த்தார்கள். ஆனந்தனுக்குச் சிங்களம் தெரியும். ஆனால் சரளமாகப் பேசவராது. சிங்களம் புரியாதவனாகவே காட்டிக் கொண்டான். சிப்பாய்கள் பேசிக்கொண்டார்கள். “பெரிய புலியைப் பிடித்துவிட்டீர்கள். எப்படி முடிந்தது?” ஆச்சரியத்தோடு கேட்டார்கள். “அதுதான் மச்சான் நம்ம கெட்டித்தனம்.” பிரமாதமாகப் புளுகினான் ஒருவன். “மச்சான் இவன் புலியில்ல. எலி. இவனை ஏன்பிடிச்சாங்கள். பாவம்டா.” அனுதாபத்தோடு இன்னொருவன் கூறினான்.
“ஏய். கோப்ரல்.. பொல்லாத புலி இது. இப்படித்தான் இருக்கும். தெரியுமா”? வேறொரு சிப்பாய் உளறினான். கப்ரன் செனிவரத்ன முன்னால் நடந்தான். சிறிய கட்டிடம் வந்தது. அதன் வாசலில் ஹேமசிறி நின்றான். கப்ரனைக் கண்டதும் சலூற் அடித்தான். “மே சார்ஜன் ஹேமசிறி ..மெயாவ பாரகண்ட”. கப்ரன் செனிவரத்ன ஆனந்தனைப் பொறுப்பெடுக்கும்படி கட்டளையிட்டான். ஹேமசிறி திறப்புகளுடன் வந்தான். கையில் சில பத்திரங்களையும் கொண்டு வந்தான். அவற்றில் கப்ரன் கையெழுத் திட்டான். இரும்புக் கதவைத் திறந்தான். அது கிறீச்சிட்டுத் திறந்து கொண்டது. ஹேமசிறி கப்ரனைப் பார்த்தான். கப்ரன் ஆனந்தனைக் கைகாட்டி அழைத்தான். அவன் வந்தான். உள்ளே போகுமாறு கட்டளை வந்தது.
ஆனந்தனை அந்த அறையினுள் தள்ளி விட்டார்கள் அவன் உள்ளே நுழையும்போது பின்னாலிருந்து உதைத்தார்கள். ஆனந்தன் இதனை எதிர்பார்க்கவில்லை. எதிரேயிருந்த சுவரில் போய் விழுந்தான். தாமாகவே கைகள் சுவரிலிருந்து அவனைக் காப்பாற்றின. அவன் திரும்புமுன் அறை அடைக்கப்பட்டது. பெரிய பூட்டினால் பூட்டப்பட்டது. ஆனந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடல் நடுங்கி நொந்தது. அவன் கண்கள் சுவர்களை நோட்டம் விட்டன. எங்கும் ரத்தக்கறை படிந்திருந்தது. பிணவாடை அடித்தது. ஏழடி நீளமும் ஏழடி அகலமும் கொண்ட காவலறை அது. காற்று உட்புக முடியாதபடியான வடிவமைப்பு. இரண்டரையடி அகலத்திலான இரும்புக் கம்பிகள் போட்ட கதவு. அதன் உயரம் ஐந்தடி. தூசிநிறைந்து அசுத்தமாக இருந்தது. சொல்லப்போனால் அது ஒரு இருட்டறை. மெல்ல இருள் பரந்தது. நேரம் மெதுவாகவே நகர்ந்தது. அடிக்கடி சிப்பாய்கள் வந்தார்கள் எட்டிப்பார்த்தார்கள். பல்லைக் கடித்துக் கெட்ட வார்த்தைகளால் சிங்களத்தில் ஏசினார்கள்.
நேரம் நகர்வது கடினமாக இருந்தது. அவனது உள்ளத்தில் நாளை நடைபெறவிருக்கும் பரீட்சையே நிறைந்திருந்தது. எப்படியாவது பரீட்சை நடைபெற வேண்டும். ஏழை மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது. காவலுக்கு நின்ற சிப்பாயை அழைத்தான். அவன் பல்லைக் கடித்தவாறே “மொக்கத்த”? “என்ன” என்று கேட்டான். நாளைய பரீட்சை பற்றித் தெரிவித்தான். அவன் பதில் கூறாது போய்விட்டான். கம்பி எண்ணுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இதுதான் அவனது முதல் அனுபவம். கம்பிகளைப் பிடித்தவாறு வாசலையே பார்த்திருந்தான். எங்கும் கும்மிருட்டு. அறையினுள் இருளாகவே இருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. நிலம் ஈரமாகக் கசிந்திருந்தது. நுளம்பின் விளையாட்டு. அவை பறந்து காதுகளில் ரீங்காரம் செய்தன.
சரியாக மாலை ஏழரை மணியிருக்கும். சிப்பாய்கள் சிலர் வந்தனர். ஒருவன் பூட்டைத் திறந்தான். அது கிரீச்சிட்டுத் திறந்து கொண்டது. “மே எலியட்ட என்ர” வெளியில் வருமாறு பணித்தான். ஆனந்தன் கையில் அவனது தினக்குறிப்பேடும் பேனாவும்தான் இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டான். சிப்பாய்கள் புடைசூழ ஆனந்தன் நடந்தான். அவர்களது கைகள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தன. எச்சரிக்கையுடன் நடந்தார்கள். நாளை பரீட்சை. அதனால் எப்படியும் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றான். நூறு மீற்றர் தொலைவில் பெரிய கட்டிடத் தொகுதி இருந்தது. அதற்குள் நுழைந்தார்கள். பெரியதொரு மண்டபம். அதனைத் தொடர்ந்து இரண்டு அறைகள். அந்த மண்டபத்தில் இரண்டு மேசைகள் கிடந்தன. நான்கு கதிரைகளும் தென்பட்டன.
மெல்லிய பச்சை வெளிச்சம் மண்டபத்துள் பரவியிருந்தது. மண்டபத்துள் ஆனந்தன் நின்றான். ஆனந்தனைச் சூழ சிப்பாய்கள் நின்றார்கள். அவனை நோக்கி மூன்றுபேர் வந்தார்கள். முன்னால் வந்தவனைக் கண்டதும் நின்றவர்கள் சலூற் அடித்தார்கள். அவன்தான் இவர்களுக்கெல்லாம் பெரியவன் போல் தெரிந்தது. ஆனந்தனைக் காட்டி ஏதோ சொன்னார்கள். அவன் ஆனந்தன் பக்கம் வந்தான். அவன் வரும்போதே ஆனந்தன் “குட் ஈவினிங்” என்றான் ஒரு முறுவலோடு. பதிலுக்கு அசட்டுச் சிரிப்பு மட்டும் தெரிந்தது. மேசைமேல் ஏறி இருந்தான். ஒரு கதிரையைப் பற்றினான். பக்கத்தில் இழுத்து அதன்மேல் காலொன்றை ஊன்றினான். மேசைமேல் வசதியாக இருந்தான். ஆனந்தனும் ஒரு அரசாங்க உயரதிகாரி. இந்த இராணுவ அதிகாரியும் உயரதிகாரிதான். இருவரும் பல்கலைக்கழக பட்டதாரிகள். ஆனாலும் இராணுவ அதிகாரி காரமாக இருந்தான். பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கம் அவனிடம் தெரிந்தது. அவனிடம் மரியாதை என்பதே இல்லை. சிங்களத்தில் மட்டுமே உரையாடினான்.
“ நம மொக்கக்த? உன்ர பேரென்ன”? மேலதிகாரியின் குரல்.
“ஆனந்தன்” பெயரைக் கூறினான். “சரி. உன்னை விடுகிறேன். உண்மையை ஒப்புக்கொள்”. அந்த இராணுவ அதிகாரி இப்படித்தான் தொடங்கினான். ஆனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் எதனைக் கேட்கிறான்.
“எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதைப்பற்றிக் கேட்கிறீர்கள். சொன்னால் விளக்கமாகக் கூறுகிறேன்”. என்றான். அந்த இராணுவ அதிகாரி அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். ‘தமிங்களத்தில்’; சொன்னான். ‘தமிங்களம்’ என்பது இங்கே தமிழ்கலந்த சிங்களம். “அடோவ் செய்வதையெல்லாம் செய்து கதையளக்கிறது.? “மே கப்ரன்! மெயா மொனவத கரே. கியான்ட. கப்ரன். இவன் என்ன செய்தவன்? சொல்.” என்றான். கப்ரன் செனிவரத்ன தனது குறிப்புப் புத்தகத்தை விரித்தான். சிங்களத்தில் உளறிவைத்தான். “ஏய் நீ புலிகளுக்குச் சல்லி சேர்த்து கொடுத்தது. மீற்றிங் நடத்தினது. சாப்பாடு கொடுத்தது. கப்ரன் சரியாக சொல்லியிருக்கிறது. புரியுதா? உண்மையை ஒத்துக்கொள்.” அந்த அதிகாரி அடுக்கிக் கொண்டு போனான். ஆனந்தனுக்குச் சிரிப்பு ஒருபுறம். வேதனை இன்னொரு புறம். கனவிலும் நினைக்காத வற்றைக் கூறுகிறானே? இவனெல்லாம் கற்றவனா? கல்வி என்பது இதுதானா?
கல்வி என்பது என்ன? சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதானே? நிலையில்லா வாழ்க்கையில் நல்லனவற்றைச் செய்வதுதானே?. ஆனந்தன் கண்கள் சிவந்தன. கண்ணீர் பொங்கியது. ஆத்திரம் உடலை உலுக்கியது.“வட் நொன்ஸன்ஸ். என்ன இது.? ஐ ஆம் ஏ டிப்பியூட்டி டிறக்ரர் ஒவ் எடியுகேசன். நான் ஒரு பிரதிக் கல்விப் பணிப்பாளர். உங்களைப்போல் நானும் ஒரு உயர் அதிகாரி. என்னிடம் இப்படிக் கேட்கலாமா? வேதனையோடு ஆங்கிலத்தில் கூறினான். அந்த அதிகாரி ஆணவத்தோடு எழுந்தான். “அப்ப நீ உண்மை சொல்ல மாட்டாய். கதிரையைக் காலால் உதைத்து எழுந்தான். “மே சார்ஜன், மெயாட்ட கொந்த பாடமக் தெமு” கூறி வெளியில் சென்றான்.
அவ்வளவுதான். சுற்றிநின்ற சிப்பாய்கள் சாடினார்கள். ஆனந்தனின் உடலில் அடி விழாத இடமில்லை. கீழே சுருண்டு விழுந்தான். எப்படி இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டான். தமிழனாய் இந்த நாட்டில் பிறந்தது அவன் செய்த குற்றமா? கல்விக்காகத் தன்னையே அர்ப்பணித்துச் சேவையாற்றும் உயர்அதிகாரிக்கு ஸ்ரீலங்கா அரசு கொடுக்கும் பரிசு இதுதானா? அவன் மனம் கலங்கியது. அவன் கண்விழித்து நிமிர்ந்தபோது மீண்டும் அந்த உயர் அதிகாரி உள்ளே வந்தான். அவன் இப்போது சீருடையில் இல்லை. அரைக்காற் சட்டையும் ரீ சேட்டும் அணிந்திருந்தான். ஆனந்தனை நோக்கி வந்தான். ஆனந்தன் வெறும் தரையில் கிடந்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. தலையை நிமிர்த்திப் பார்த்தான். அதிகாரி கதிரையை இழுத்து ஆனந்தன் பக்கத்தில் இருந்தான். “ஹலோ.. மிஸ்டர்.. உண்மையை ஒத்துக் கொள். இதில கையெழுத்துப் போடு”. தாளை எடுத்து நீட்டினான். அந்த அதிகாரியின் கண்கள் சிவப்பேறி இருந்தன. மதுவின் மணம் வீசியது. ஆனந்தன் தாளைப் பார்த்தான். தனிச்சிங்களத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. ஆனந்தனுக்கு ஆத்திரம் பொங்கியது.
“ஆர் யூ அன் எடியூகேற்றற் ஒவ்பிசர். இஸ் திஸ் த வே யூ ரீற் அன் ஒவ்பிசர்?” ஆனந்தன் வேதனையோடு கூறினான். அது அந்த அதிகாரிக்கு வெறியைக் கூட்டியது. “அடோவ்.. கனக்கக் கதைக்கிறாய் நீ. பற தெமழ. நீதான் சரியான கொட்டியா. கிழட்டுப் புலி. உன்ன சும்மா விடமாட்டம். மே சார்ஜன்! புட் கிம் டவுண். விமட்ட தாண்ட” கட்டளை பிறந்தது. ஆங்கிலம், சிங்களம், அரைகுறைத்தமிழ் கலந்து அதிகாரி பேசினான். அந்த சார்ஜன் ஆனந்தனை அலக்காகத் தூக்கிக் கீழே போட்டான். ஆனந்தனின் முதுகுப்புறம் தரையில் அடிபட்டது. அவன் எதிர்பார்க்காதது நடந்தது. ஒரு கட்டுமஸ்த்தான சிப்பாய் வந்தான். ஆனந்தனின் நெஞ்சில் குந்தி அமர்ந்தான். ஆனந்தனின் கைகளைச் சிப்பாய் இழுத்தான். தனது இரண்டு முளங்கால்களுக்குள் மடக்கி இறுக்கினான். மேசையொன்று நகர்த்தப்படும் சத்தம் கேட்டது. ஆனந்தனின் கால்கள் இழுத்து உயர்த்தப் பட்டன. பாதங்கள் இரண்டும் மேசையின் விளிம்பைத் தொட்டன. குதிநரம்பு விளிம்பில் பதிந்திருந்தது. சிப்பாயின் முதுகுப்புறம் ஆனந்தனுக்குத் தெரிந்தது. அவன் நெஞ்சு வலித்தது.
சிப்பாயின் இரண்டு முரட்டுக் கைகளும் ஆனந்தனின் இரு கால்களையும் இறுக்கிக் கெட்டியாகப் பிடித்தன. இரண்டு சிப்பாய்கள் இருபுறமும் நின்றார்கள். அவர்களது கைகளில் மணல் நிறைத்த ‘எஸ்லோன் பைப்’ இருந்தன. ஆனந்தனின் முகம் மட்டுமே அசைந்தது. கைகள் சிப்பாயின் கால்களுள் சிக்கியிருந்தன. யோகாசனப் பயிற்சி நிலையில் ஆனந்தன். அந்த அதிகாரி ஆனந்தனின் முகத்துக்கு அருகே கதிரையில் இருந்தான். “இப்ப சொல். உண்மையை ஒத்துக் கொள்கிறாயா? இல்லையா?” ஆனந்தனுக்கு மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. சேர்! ஐ ஆம் இன்னசன்ற். எனக்கு ஒன்றுமே தெரியாது. நம்புங்கள்.” ஆங்கிலத்தில் கூறினான்.
அந்த அதிகாரி ஆணவமாக எழுந்தான். “காப்பாங்.. அடியுங்கள்.” கட்டளையிட்டான். எழுந்து அப்பாற் சென்றான். வேட்டை நாய்களுக்கு விருந்து. காத்திருந்த சிப்பாய்கள் விளையாடினார்கள். ‘எஸ்லோன் பைப’; ஆனந்தனின் பாதங்களை முத்தமிட்டன. அடிமேல் அடி. ஒவ்வொரு அடியும் உச்சந்தலையில் உறைத்தது. காய்ச்சிய இரும்புக் கம்பியால் சுடுவதுபோல் சுட்டது. ஒவ்வொரு அடிக்கும் கைவிரல்கள் இறுக்கி மூடி விரிந்தன. தலை அரை வட்டத்தில் மின்விசிறியாக ஆடியது. கால்கள் மரத்து விட்டன. குதிகால் நரம்புகளை மேசை விளிம்பு வெட்டியது. தோல் கிழிந்து இரத்தம் கசிந்து கீழ் நோக்கி வழிந்தது. கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாய்தடுமாறி புலம்பியது. உடலெங்கும் வெயர்த்து மூச்சுத்தடுமாறி …மரண அவஸ்த்தையில்.. திணறி மயக்கம் வந்தது. மயங்கிவிட்டான்.
அறியாத உலகத்தில் அந்தரத்தில் பறந்து விழுவதுபோன்ற உணர்வில் வாய் அரற்றியது. உடல் அசைவற்றுக் கிடந்தது. மனிதனாகப் பிறப்பது அரிதாம். அதிலும் அரிது கூன், குருடு நீங்கிப் பிறப்பது அரிதாம். ஆனால் அரிதான மனிதப்பிறவியில் இப்படி ஒரு இக்கட்டான கேவலமான அவல நிலையா? துன்பங்களையும் துயரினையும் நீக்கி மனிதன் உன்னத நிலையை அடையவேண்டும் என்பதற்காகத்தானே புத்தபெருமானும், ஜேசு, நபிகள் போன்றோரும் அவதரித்துப் போதித்தார்கள். புத்தனைப் பின்பற்றும் மனிதர்களா இப்படியான ஈனச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த அடிவதை வேதனையின் மத்தியிலும் ஆனந்தனின் மனதில் கேள்விகள் எழுந்தன. விடைகாணமுடியாது அலைகளாக விரிவடைந்து சென்று கொண்டிருந்தன. கனவுலகில் சஞ்சரித்தான். ஒரு மயக்கநிலையில் ஆனந்தன் இருந்தான். சூழலில் நடப்பது புரியாத புதிராகத் தெரிந்தது.
அதிகாரி வந்தான். பார்த்தான். “மே... சுட்டக் வத்துற தாண்ட“ தண்ணீரை ஊற்றுமாறு சொன்னான். சிப்பாய்கள் ஆனந்தனின் முகத்தில் தண்ணீரை அடித்தார்கள். தண்ணீரில் அப்படியென்ன சக்தி இருக்கிறது. தண்ணீர் பட்டதும் ஆனந்தனுக்கு நினைவு துளிர்விட்டது. மெதுவாக விழிகளைத் திறந்து பாத்தான். அவனைச் சுற்றி இருவர் காவல் நின்றார்கள். மற்றவர்கள் வெளியில் சென்று வந்தார்கள். அவனது தலை அசைந்தது. அந்த அதிகாரி ஏதோ கட்டளை இட்டான். ஆனந்தனை அப்படியே விட்டுக் கதவைத் தாளிட்டார்கள். வெளியில் காவல் இருந்தார்கள். ஆனந்தன் அரற்றினான். அவனது வாய் "மேரி..மேரி..“ என முணுமுணுத்தது. மேரி அவனது மனைவி. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட அன்புப்பெடை. ஆனந்தனுக்குச் சற்றுத் தலைவலி என்றாலே தாங்கமாட்டாது துடிப்பாள் மேரி. ஆனந்தன் மயங்கிக் கிடந்தான். அவனது நினைவுகள் சிறகடித்துப் பறந்து உலாவந்தன.
தொடரும்..
Monday, May 3, 2010
கனவு மெய்ப்பட வேண்டும்
1
ஆனந்தனுக்கு அந்த நீல ஜீன்ஸ் எடுப்பாகத் தான் இருந்தது. உடலொட்டிய டெனிம் ஜீன்ஸ்சுக்குப் பொருத்தமான மெல்லிய நீலநிற சேட். அவனது செம்மஞ்சள் மேனிக்குக் கச்சிதமாக இருந்தது. இடுப்புப் பட்டி மின்ன அவன் நடப்பது அழகாக இருந்தது. இடக்கண்ணுக்கு நேரே உச்சியிலிருந்து ஒரு அங்குல இடை வெளியில் எடுத்து விட்ட வகிடு. நெற்றியில் சுருளாக விழுந்து காற்றில் அலையும் சுருள்முடி. அழகிய அரும்பு மீசை. எந்த நேரமும் முறுவல் ஓடும் இதழ்கள். கனிவான பேச்சு. கம்பிரமான ஒலி. நடையில் ஒரு மிடுக்கு. அனைவரையும் மதிக்கும் பண்பு. அன்போடு உறவாடும் தன்மை. இது ஆனந்தனின் இயல்பு.
அதனால் அந்தத் திணைக்களத்தில் அவனுக்குப் பெருமதிப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை. அவன் உயர்பதவி வகித்தாலும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதும் இல்லை. எல்லாரோடும் சகஜமாகப் பழகுவான். அவன் வவுனியா நகருக்கு இடமாற்றம் பெற்று வந்து ஆறுமாதங்கள்தான் ஆகின்றன. இந்த ஆறுமாதங்களில் நல்லதொரு உயரதிகாரி தமக்குக் கிடைத்து விட்டதாக அனைவரும் உணரத்தொடங்கி விட்டனர். அவனை உயரதிகாரியாக நினைத்ததே இல்லை. தங்களுக்குக் கிடைத்த உறவினனாகவே அனைவரும் கருதினர்.
அது மார்கழி மாதம். மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். இயற்கையின் அழகு துள்ளி விளையாடும். மார்கழியில் மயிர் நனையாத் தூறலாமே? மழைத்தூறல்களைக் கையிலேந்திப் பார்க்க ஆசை. பார்த்தால் என்ன? கைகளை நீட்டினான். கைகளில் குளிர்தடவி விட்ட உணர்வுமட்டும் புரிந்தது. இரு கைகளையும் சேர்த்துத் தேய்த்துக் கொண்டான். மழையோடு பனி கலந்து இறைக்கும் அற்புதம். குளிர் காற்று வீசி முகத்தில் அறையும் சிலிர்ப்பு. அது இங்கிதத்தை அள்ளி இறைக்கும் பக்குவம். மார்கழியில்தான் வருடத்துக்கான பரீட்சைகள் பள்ளிகளில் நடைபெறும். இலங்கையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முக்கியமானது. கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்காலங்களில் கல்வி சார்ந்த அலுவலர்களும், அதிபர், ஆசிரியர்களும் மாணவர்களும் இயந்திர கதியில் இயங்குவார்கள்;. நகரம் சுறுசுறுப்பாக இயங்கும். பரீட்சைகள் முடிவுற்றதும் நகரம் சோபை இழந்ததுபோல் காட்சிதரும்.
வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று விளையாடிக் கொண்டிருந்தது. வவுனியா மாவட்டம் மாரியில் நீந்திக் கொண்டிருந்தது. குளங்கள் நிறைந்து வளம்பெருக வேண்டும். இது அக்கால மன்னர்களது வைராக்கியமாகும். அக்கால மன்னர்கள் ஏராளமான குளங்களைக் கட்டி வைத்திருந்தனர். மன்னர்களுக்குள் தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடு இருக்கவில்லை. அவ்வாறுதுதான் ஆட்சி செய்துள்ளனர். சிங்கள மன்னர்களானாலும், தமிழ் மன்னர்களானாலும் அவர்கள் அனைவரும் பதவி ஆசை கொண்டவர்களே. அவர்களுக்கு அரச பரம்பரையில்தான் கரிசனை. அரசர்களுக்கு மொழி, இனம். நாடு முக்கியமல்ல. திருமணங்கள் அரச பரம்பரையில்தான் செய்து கொள்வார்கள். தூய்மையான அரச பரம்பரை எந்த நாட்டிலும் இல்லை. ஆனால் சாதாரண பிரசைகள் தங்களது சாதி, மொழி, இனங்களை விட்டுவிலகாது இருக்கவேண்டும். இதில் கரிசனை காட்டினார்கள். நாடு செழிக்கவும் தமது பரம்பரை நல்லநிலை பெறவும் கவனம் செலுத்தினார்கள். அதற்காகப் பாடுபட்டார்கள். குளங்களை அமைத்தார்கள்.
வவுனியாவிலும் குளங்கள் ஏராளம் உண்டு. இப்போதுள்ள வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கப்பாலும் வன்னி இராச்சியம் பரந்திருந்தது. வர்ணாச்சிரம தர்மம் என்பார்களே அது அக்காலத்தில் நிலவியது. அதற்கேற்பக் குளங்களும் அமைக்கப் பட்டன. அவ்வாறு அமைந்த குளங்கள் வன்னிப்பிரதேசத்திலும் உண்டு. இந்த மாரியில் அவை நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. மரங்கள் மதாளித்துச் சிலிர்த்தன. குரங்குகள் கொப்புகளில் குளிர்காய்ந்தன. வீதிகளில் குறுக்கறுத்து மழைநீர் சலசலத்தது. வழிந்து சிறுகால்வாய்களூடாக ஓடியது. அதில் அடையல்கள் சவாரி செய்தன. குடைகள் உலா வந்தன. வாகனங்கள் மழைநீரை வாரியடித்துச் சென்றன. இராணுவ வாகனங்கள் வேகமாக வரும். மக்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தற்செயலாக மோதுண்டால் அவ்வளவுதான். இராணுவத்தைத் தாக்க முயன்றதாகக் குற்றம் பதியப்படும். மக்களையும் இராணுவத்தினர் வாட்டி வதைத்தெடுத்தனர். அடாவடித் தனம் தலைவிரித்தாடியது. பாரதி சொல்வானே ‘பேயரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரம்’ என்று. அவ்வகை இனவாத ஆட்சி. நாட்டு நடப்பு அப்படி இருந்தது. பெரும்பான்மை இனத்தவரின் ஆட்சி. அதனால் சிறுபான்மை மக்கள்மேல் அராஜகம் கட்டவிழ்க்கப் பட்டிருந்தது. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப் பட்டிருந்தனர். அவர்களின் அட்டகாசம் அதிகரித்திருந்தது.
வவுனியா வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சந்தைப் பெருநகராக விளங்குகிறது. வவுனியா நகரின் சந்தி முக்கியமானது. அச்சந்தியில் இருந்து இலங்கையின் எந்தப் ;பகுதிகளுக்கும் செல்வதற்கான போக்கு வரத்துச் சேவைகள் உண்டு. தெற்கின் விளைபொருட்கள் வந்து குவியும். வடக்கிலிருந்து புகையிலை, வெங்காயம், வாழைக்குலைகள் என ஏராளம் வரும். லொறிகளில் ஏற்றப்பட்டதும்; தெற்குநோக்கி விரையும். தெற்கின் பண்டங்கள் வடக்கு நோக்கிப் பயணமாகும். சந்தை இரைந்து கொண்டிருக்கும். புகைவண்டிச் சேவைகள் வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் விரைந்து கொண்டிருக்கும். மூவின மக்களும் ஒன்றுகூடி மகிழும் இடமாக வவுனியா திகழ்கிறது. அரச, அரசசார்பற்ற, தனியார் நிறுவனங்கள் நகரில் ஆங்காங்கு தத்தம் நாளாந்த நடவடிக்கைகளில் மூழ்கியிருந்தன. அதேபோல் இராணுவத்தின் கெடுபிடிகளும் தொடர்ந்தன.
கண்டி வீதியால் அந்த லாண்ட்றோவர் விரைந்து கொண்டிருந்தது. கல்வித் திணைக்கள வளாகத்தினுள் வாகனம் நுழைந்தது. லாண்ட்றோவரில் இருந்து ஆனந்தன் இறங்கினான். அவனது கையில் பல ஆவணங்கள் இருந்தன. அவை யாவும் பரீட்சை சம்பந்தமான ஆவணங்கள். ஆனந்தன் பல பரீட்சை நிலையங்களின் இணைப்பாளராகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான். பரீட்சைத் திணைக்களத்தில் இருந்து வினாத்தள்கள் அடங்கிய பொதிகள் வந்திருந்தன. அவற்றைப் பெற்றுக் காவல்துறையினரின் நிலையத்தில் பத்திரமாக வைத்திருந்தான். காலையில் வினாப்பொதிகளை எடுத்துவருதல், பரீட்சை நிலையங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தல், பரீட்சை முடிவுற்றதும் விடைப்பொதிகளை ஒன்று சேர்த்து மத்திய இணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தல் ஆகிய கடமைகள் ஆனந்தனிடன் கொடுபட்டிருந்தன.
மழை அனைவரையும் ஆட்டிப்படைத்தது. ஆனந்தன் மட்டுமல்ல பரீட்சைக் கடமையில் ஈடுபட்ட அனைவரும் களைத்திருந்தனர். காலையில் வழமைபோல் வினாத்தாள் பொதிகளை எடுத்துக் கொண்டான். எங்கும் மழைநீரின் அட்டகாசம். பெருவெள்ளக் காடாய் வவுனியா காட்சி தந்தது. வாகன வசதி போதுமானதாக இல்லை. ஒரு வாகனத்தில் இரண்டு பகுதிகளுக்குச் செல்லவேண்டும். கடந்த நான்கு நாட்களாக இவ்வாறு சமாளித்தாகி விட்டது. ஆனால் இன்று பெருஞ்சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஓமந்தை அழகானதொரு சிறிய நகர். மருதநிலத்தின் அழகு தலைவிரித்தாடும். நிலம் விளைந்து நெற்கதிர்கள் சாய்ந்து படுத்திருக்கும். ஆநிரைகள் கூட்டங்கூட்டமாய்த் திரியும். படித்தவர்களின் முயற்சியால் பெரியதொரு உயர்நிலைப் பள்ளிக்கூடம் நிமிர்ந்து நின்றது. அந்தப் பள்ளிக்கூடம் ஒரு பரீட்சை மத்திய நிலையமாக இயங்கியது. ஓமந்தைப் பரீட்சை நிலையத்துக்குச் செல்வதே பெரும்பாடாய் இருந்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. காலை எட்டரை மணிக்குப் பரீட்சை தொடங்கும். அதற்குமுன் வினாத்தாள் பொதிகளை ஒப்படைக்க வேண்டும். ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தினான்.
உதவிப்பணிப்பாளர் செல்வம் வினாப் பொதிகளுடன் தயாராக நின்றார். அவர் ஒரு மேதை. அதிகாலை மூன்றுமணிக்கு எழுந்து விடுவார். குளித்து தேநீர் தயாரித்துக் குடிப்பார். ஆங்கிலப் புத்தகங்களை வாசித்து ரசிப்பார். இரசித்துச் சுவைத்தவற்றை அழகாக எடுத்து விளக்குவார். சேக்ஸ்பியரின் யூலியஸ்சீசர் நாடகம் அற்புதமானது. அதில் அந்தனியின் பேச்சு மிகவும் சுவாரஸ்யமானது. அந்தப் பேச்சு அவருக்குத் தண்ணிபட்ட பாடம். நடித்தவாறு பேசிக்காட்டுவார். பாராளுமன்றத்தில் அன்றைய உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களைப் படித்துவிட்டு பேசிக்காட்டுவார். வழக்கறிஞர் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களது நீதிமன்ற வாதங்களை அப்படியே பேசுவார். ஆங்கிலம் ஆற்றொழுக்காக ஓடும். செல்வராசா அவரது பெயர். ஆனால் அவர் தனது பெயரின் முதல் எழுத்தை மட்டும் எழுதி தனது அப்பாவின் பெயரான கணபதிப்பிள்ளை என்பதையே எழுதுவார். தனது தந்தையின் பெயரால் அழைக்கப் படுவதையே பெரிதும் விரும்பினார். தந்தையை இளமையிலேயே இழந்துவிட்டார். தனது தாயையும், தம்பிமார்களையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். திருமணம் செய்யாத கட்டைப் பிரமச்சாரி. அவரை அந்த வாடகை வாகனத்தில் அனுப்பி வைத்தான். அவர் ஓமந்தைப் பரீட்சை நிலையத்துக்கு உரிய வினாப் பொதிகளோடு சென்று விட்டார். மற்ற வாகனத்தில் பாவற்குளம் பரீட்சை நிலையத்துக்கு விரைந்தான்.
பாவற்குளம் பண்டையப் பெருமைகளுக்கு உதாரணமாய் விளங்கியது. வன்னிவள நாட்டின் பொருளாதாரத் தொட்டில் அது. குளம் தொட்டு வளம் பெருக்கும் பூமி. பயிர் செழித்து விளைச்சலைக் கொடுக்கும் வளமான மண் நிறைந்தது. நாடு சுதந்திரம் பெற்றபின் குடியேற்றத் திட்டங்கள் என்ற பெயரால் பெரும்பான்மை மக்களைத் தமிழ்ப் பிரதேசங்களைக் கைப்பற்றி அவர்களை குடியேற்றும் நோக்குடன் செயற்படுத்திய திட்டங்களில் ஒன்றுதான் பாவற்குளம் குடியேற்றத் திட்டம். தமிழர்கள் பெரும்பான்னையாகக் குடியேற வேண்டிய பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றி சகல வசதிகளையும் அரசு செய்து கொடுத்திருந்தது. பாவற்குளம் பாரிய குளமாகும். அது உடைப்பெடுத்து வீதியின் குறுக்காகப் பாய்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில்தான் பரீட்சை நிலையம் இருந்தது. ஆனாலும் எப்படிப் போவது. பேரிரைச்சலோடு வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது.
அவனுக்குச் சிந்திக்க அவகாசமேது? அந்தக் குளிரிலும் வெயர்த்துக் கொட்டியது. நேரத்தைப் பார்த்தான். ஒன்பதைத் தாண்டிவிட்டது. சாரதி காசிம் வானத்தைப் பார்த்தான். அது இருண்டு கறுத்து உறுமியது. இடைவிட்ட மின்னல். இடையிடைலே இடியோசை காதைப் பிளந்தது. “காசிம் வாகனத்தைத் திருப்புங்கள். மதவாச்சி வழியாகப் போவோம்.” கூறிமுடிக்குமுன் வாகனம் திரும்பியது. காசிம் தனது கடமையில் கண்ணானவர்.
வழிநெடுகிலும் மழைநீர். நீரைக் கிழித்து வாகனம் விரைந்தது. ஈரற்பெரியகுளத்தைத் தாண்டி மதவாச்சிச் சந்தியில் வலப்பக்கமாகத் திரும்பி மன்னார் வீதியால் வாகனம் சென்றது. சரியாகப் பத்து மணிக்குப் பரீட்சை நிலையம் வந்துவிட்டான். ஆனந்தனைக் கண்ட அதிபர் சீனிவாசகம் முகம்மலர்ந்து வரவேற்றார். சீனிவாசகம் கட்டுமஸ்த்தான உடலுடையவர். மகாபாரதத்தில் வரும் பீமனின் சாயலை அவரில் காணலாம். சிரிக்கும் போது கன்னத்தில் ஒரு குழி விழும். சிறிதாகக்; கண்ணிமைகள் மூடியிருக்கும். பாதிவிழிகள் தெரியும். பாடசாலைக்காகவும். மாணவர்களது எதிர்காலத்துக்காகவும் உழைப்பவர். கடமை உணர்ச்சி உள்ளவர். வவுனியா மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர். உரிய நேரத்துக்குப் பரீட்சை நடைபெறுவதில் அக்கரை உள்ளவர். வினாப் பொதிகளை பெற்றதும் இயந்திரமயமானார். வினாத்தாட்களை பரீட்சார்த்திகளுக்கு விநியோகித்தார். செல்வராசா அதிபர் அற்புதமான மனிதர். பிறருக்கு உதவுவதில் முன்நிற்பவர். அவர் சீனிவாசகத்தின் உதவிப் பரீட்சகராகச் செயற்பட்டார். இருவரும் சுறுசுறுப்பானார்கள். கடுகதியாக வினாத்தாட்களைப் பரிமாறினார்கள். ஏனைய உதவியாளர்களும் விரைந்து செயற்பட்டார்கள். வினாத்தாட்கள் கொடுபட்டன. வினாத்தாள்கள் கொடுபட்டபின்தான் ஆனந்தனுக்கு நிம்மதிப் பெருமூச்சுப் பறந்தது.
சீனிவாசகம் பரீட்சை நடைபெறுவதற்குரிய ஒழுங்குகளைச் செய்திருந்தார். பதகளிப்பால் சீனிவாசகத்தின் மூக்குக்கண்ணாடி கீழே விழுந்து விட்டது. அதிர்ஸ்ட்டவசமாக ஒரு கண்ணாடி தப்பிப் பிழைத்தது. ‘இஸ்றெயில்’ நாட்டின் முன்னாள் அமைச்சர் மோசிதயான் போல் ஒற்றைக் கண்ணாடியில் காட்சியாகிக் கொண்டிருந்தார். நமது நாடு பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தது. அப்போது சோல்பரிப்பிரபு ஆளுநராக இருந்தார். அவர் ஒற்றைக்கண்ணில் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். எதற்காகக் கண்ணாடி அணிந்தாரோ தெரியாது. ஆனால் அப்போது நமது மக்கள் பேசிக்கொண்டார்கள். மக்கள் அனைவரும் தனது ஒரு கண்போன்றவர்கள். அவர்கள் அனைவரையும் ஒருகண்ணால்தான் பார்க்கவேண்டும் என்று அவர் ஒரு கண்ணுக்குக் கண்ணாடி அணிந்து நோக்கினாராம்.
அதேபோல் சீனிவாசகமும் கல்வி உலகத்தை ஒரு கண்ணாக மதித்தார். சீனிவாசகத்துக்கு ஒரு கண்ணாடி இல்லாதது குறையாகத் தெரியவில்லை. அவருக்குக் கடமைதான் முக்கியம். ஆனந்தனின் மனதில் சீனிவாசகத்தின் உருவம் படிந்து கொண்டது. அனுமானின் உள்ளத்தில் இராமனின் உருவம் எப்படி இடம்பிடித்ததோ அப்படியே சீனிவாசகத்தின் உருவம் பதிந்து கொண்டது. வானத்தில் இருள் சூழ்ந்து மூடிக்கொண்டது. பகற்பொழுது போல் இல்லை. பரீட்சை மண்டபத்துள் போதிய வெளிச்சம் இல்லை. ஊரவர்களின் உதவி அவருக்கு நிறையவே இருந்தது. பல ‘பெற்றோமக்ஸ்’ விளக்குகள் விரைந்து வந்தன. ஒவ்வொரு அறையிலும் பெற்றமக்ஸ். உரிய இடங்களில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
முதல்நாள் நடைபெற்ற பரீட்சையின் விடைத்தாள் பொதிகளைப் பாதுகாப்பாகச் சீனிவாசகம் வைத்திருந்தார். அவற்றை அவர் ஆனந்தனிடம் ஒப்படைத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டு திரும்பினான். மழை கொட்டிக் கொண்டிருந்தது. பசி வயிற்றைப் பிசைந்தது. தான் கொண்டு வந்த விடைத்தாள் பொதிகளை இணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தான். பதிவேட்டுப் பற்றுச் சீட்டுக்களைப் பெற்றான். நிம்மதிப் பெருமூச்சோடு மீண்டும் ‘லான்ட் றோவரில்’ ஏறிக் கொண்டான். செல்வமும் சேர்ந்து கொண்டார்.
“காசிம் நேரே சுத்ததனந்தா ஹோட்டலுக்கு விடுங்கோ. சாப்பிடுவோம்.” ஆனந்தன் முடிக்கவில்லை. ஜீப்வண்டி ஹோட்டல் பக்கம் திரும்பியது. மாற்றமாகிச் செல்லவிருந்த நண்பர் ராஜசுந்தரத்தின் நினைவு வந்தது. அவரும் எதிரே வந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு பறப்பட்டான். வாகனத்தின் ரயர்கள் மழைநீரைக் கிழித்து இரைந்து சென்று சுத்தானந்தா ஹோட்டலை அடைந்தது. உள்ளே சென்றார்கள். ஹோட்டல் அழகாக இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. மேசையில் இருந்த உணவுக்குரிய பட்டியலைப் பார்த்தான். விரும்பிய உணவு வகைகளைச் சுட்டிக்காட்டினான். உணவு மேசையில் குவிந்தது.
சாப்பிடும்போது யாரும் கதைக்கவும் இல்லை. அவ்வளவு பசி அவர்களுக்கு. உணவுக்கு மேல் வாழைப் பழத்தையும் விழுங்கினார்கள். ஆனந்தன் கட்டணத்தைச் செலுத்தினான். வெளியே வந்தார்கள். “இன்று யார் முகத்தில் விழித்தோம்?” செல்வம்தான் பேச்சைத் தொடங்கினார். “யார் முகத்தில் விழித்தாலும் கடமையைச் செய்ததில் மனத்திருப்தி ஏற்பட்டது. அல்லவா? அதற்காக நாம் கடவுளுக்குத்தான் நன்றி கூறவேண்டும்.” ஆனந்தன் சொல்லிக் கொண்டு வாகனத்தில் ஏறினான். கண்டி வீதியில் அவர்கள் தங்கும் விடுதி இருந்தது. அந்த விடுதிக்கு வாகனம் சென்றது. வழியில் ராஜசுந்தரம் இறங்கிக் கொண்டார். அந்த விடுதி தூரத்தில் உள்ள மாணவர்கள்; தங்கிப் படிப்பதற்காகக் கட்டப்பட்டது. விடுமுறைக் காலங்களில் பரீட்சை எடுக்கும் மாணவர்கள் மட்டும் தங்கியிருப்பார்கள். மற்றவர்கள் விடுமுறைக்காகத் தங்கள் வீடுகளுக்குப் போய்வி;டுவார்கள். ஒரு அறையோடு சேர்ந்த சிறிய மண்டபம் இவர்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. செல்வம் மட்டும் சிறிய அறையில் ஓய்வைக் கழிப்பார். மற்றவர்கள் மண்டபத்தில் உள்ள கட்டில்களைப் பயன்படுத்துவார்கள். நேரம் பிற்பகல் மூன்று மணியிருக்கும். விடுதியினுள் நுழைந்து சற்றுக் களைப்பாற எண்ணினார்கள். செல்வம் அறையினுள் சென்றார். மேசையில் தினசரிகள் கிடந்தன. ஆனந்தன் அவற்றைப் பார்த்து விட்டு உடைகளை மாற்ற எண்ணினான். கட்டிலில் சாய்ந்தவாறு ஆனந்தன் அன்றயத் தினசரிகளைப் புரட்டினான்.
வாகனங்களின் இரைச்சல் கேட்டது. விடுதியின் முன்னால் இரண்டு வாகனங்கள் வந்து நின்றன. தடதடவென பூட்ஸ் சத்தங்கள். தொடர்ந்து ஸ்ரீலங்கா ராணவத்தினரின் சுற்றி வளைப்பு. ஆனந்தன் வெளியில் வந்தான். அவனது கண்கள் சுழன்றன. கட்டிடங்களைச் சுற்றி இராணுவத்தினர் நின்றிருந்தனர். அவர்களின் கைகள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தன. அசைந்தால் துப்பாக்கிகள் குண்டுகளைக் கக்கும். உயிர் பறிக்கும். ஒன்றும் புரியாது விழித்தான். ஒரு இராணுவக் கப்ரன் வாகனத்தில் இருந்து இறங்கினான். மெதுவாக நடந்து வந்தான். அவனைப் புடைசூழ பல இராணுவ வீரர்கள் பின்தொடர்ந்தார்கள். அவர்களை நோக்கி ஆனந்தன் எதிர்கொண்டான்.
தொடரும்
