Thursday, May 20, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

28

வெயில் வன்னிக் காட்டிலும்; தனது சேட்டையைக் காட்டியது. பூவரசங்குளத்துச் சந்தியில் இருந்த கடையில் புகுந்தான். நல்ல கறிவணிஸ் தெரிந்தது. சாப்பிட்டான். காய்ச்சிய பசும்பால் கிடைத்தது. வயிறு நிரம்பியது. முடிந்ததும் பாடசாலையினுள் நுழைந்தான். அதிபர் சீனிவாசகம் எழுந்து வந்தார். சீனிவாசகம் நமது விளையாட்டுப் போட்டிக்குச் சில பரிசுப் பொருட்கள் வேண்டுமே. என்ன செய்வது“? விசாரித்தான். "சேர்! நீங்க சொல்லமுதலிலேயே நானும் அலெக்ஸாந்தரும் அவற்றைச் சேர்த்து விட்டோம்.“ சந்தோசத்தோடு சீனிவாசகம் சொன்னார். „விளையாட்டுப் போட்டிக்குரிய ஆயத்தங்கள் எல்லாம் தயார் வியாழன் நீகள் வந்தால் சரி. ஆனால் நடுவர்களுக்கு எப்படியும் உணவு கொடுக்கவேணும். அதுதான் முடியவில்லை.“ சீனிவாசகம் விளக்கினார். ஆனந்தனுக்கு உச்சி குளிர்ந்தது. „உணவை நான் பார்த்துக் கொள்ளுவேன்“;. ஆனந்தன் கூறினான்.

"சரி கடிதங்களைத் தாருங்கள். உடனே போய் அவற்றைக் கொழும்புக்கு அனுப்ப வேணும்“;. விரைவு படுத்தினான். சீனிவாசகம் எல்லாம் தயாராக வைத்திருந்தார். "சேர்! சாப்பிட்டுட்டுப் போங்களன். சாப்பாடு தயாராக இருக்கு“. சீனிவாசகம் முறுவலோடு அழைத்தார். "ஐயய்யோ, இப்பதான் அந்தக் கடையில சாப்pட்டேனே. இனிச்சாப்பிட இயலாது. பிறகு பார்ப்போம். நன்றி. நான் வாறன். கடிதங்களைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

கால்கள் பெடலை மிதித்தன. விளையாட்டுப் போட்டிக்குரிய உணவுபற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான். சாளம்பைக் குளம் வித்தியாலயம் வாருங்கள் என்றழைத்தது. அதிபர் கரீம் புன்னகையோடு வரவேற்றார். பாடசாலையைச் சுற்றி வலம் வந்தான். கண்கள் தேவைப்பாடுகளை ஆராய்ந்தன. "சேர் விளையாட்டுப் போட்டிக்குரிய ஆயத்தங்கள் நடக்குது. உணவுப்பார்சல்கள் பத்து எங்கள் பாடசாலை தரும். அலெக்ஸாந்தரிடம் கூறிவிட்டேன். பயப்படத்தேவையில்லை“. கரீம் அதேசிரிப்போடு கூறினார். அவரை அன்போடு பார்த்தான். நன்றி கூறினான். நல்ல மனிதர்கள் உலகத்தில் ஏராளம் உண்டு. அவர்களை நாம்தான் இனம்காணத் தவறிவி;டுகிறோம். "மிஸ்டர் கரீம் நான் அவசரமாக அலுவலகம் போகவேணும். நான் வருகிறேன். கூறிப்புறப்பட்டான். சேர்! சாப்பிட்டுங்களன். சுhப்பாடு தயாராக இருக்கு. அதிபர் அழைத்தார். வேண்டாம் கரீம் சாப்பிட்டுட்டன். இன்னொரு நாளைக்குப் பாரப்போம். நான் வாறன்“. புறப்பட்டான்.

வழியில் சுணங்காமல் நேரே கல்வித்திணைக்களத்துக்குச் சென்றான். தனது அறையில் உடலைக் கழுவினான். உடைகளை மாற்றிக் கொண்டு அலுவலகத்துக்குள் புகுந்து கடிதங்களைப் பார்வையிட்டுத் தேவையான பதில்களைத் தயாரித்தான். திறக்கவேண்டீய இரு பாடசாலைகளின் கோவைகளைப் பார்வையிட்டான். எஸ்.ஓ.படிவங்கள் சரியாகப் பூரணப்படுத்தப் படவில்லை. வரைபடங்கள் இல்லை. குறைபாடுகளைச் சரிசெய்தான். கல்விப்பணிப்பாளருடன் கலந்தாலோசித்தான். எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உரையாடினான். ஆனந்தனது செயற்பாடுகள் கல்விப் பணிப்பாளர் சிவபாததத்துக்குப் பிடித்து விட்டது. அவன் தயாரித்த கடிதங்களுக்கு தனது ஒப்பத்தையிட்டு அவனிடமே கொடுத்தார். அவற்றை கல்வி அமைச்சுக்கு அனுப்பினான்.

தான் சென்றுவந்த பாடசாலைகளின் நிலையை அறிக்கையாகத் தயாரித்தான். அறிக்கையை கல்விப் பணிப்பளருக்குக் கோவைப்படுத்தினான். நேரம் ஐந்து மணியைத் தாண்டியிருந்தது. தனது அறையில் தினசரிகளைப் புரட்டியபடி இருந்தான். கதவில் யாரோ தட்டுவது தெரிந்தது. "சேர்! மே ஐ கம் இன்..சேர்“. மெல்லிய சத்தம் வந்தது. "ஓ..யெஸ். கம் இன்“ கூறியவாறு கதவினைத் திறந்தான். அங்கே முருகப்பா நின்றிருந்தார். மெதுவாக உள்ளே வந்தார். "வாங்க மிஸ்டர் முருகப்பா“ அழைத்துக் கதவினை மெல்ல மூடினான்.

முருகப்பா திடீரென ஆனந்தனின் கால்களைப் பிடித்துக் கொண்டார். "இதன்ன மிஸ்டர் முருகப்பா? காலை விடுங்க. எழும்புங்க. நான் பெரிய மனிதனல்ல. உங்களப்போல சாதாரண மனிதன். உங்கட வயதென்ன. எனது வயதென்ன? நீங்க போயும் போயும் என்ர காலில விழுவதா?. எழும்புங்க“. அவரைப் பிடித்து எழுப்பினான். "சேர்! இதுதான் முதலும் கடைசியும். நான் விட்டபிழைகளை உணர்ந்து கொண்டேன் சேர். என்னை மன்னிச்சிக் கொள்ளுங்க. இனிமேல் என்ர கடமையச் சரியாகச் செய்வன். அதிபர் கரிமோட கதைச்சனான் சேர். அவர்ர பாடசாலையில் இருந்து விளையாட்டுப் போட்டிக்கு உணவுப் பார்சல் தருவதாகக் கூறினார். எங்கட பாடசாலையில இருந்து நாப்பது பார்சல் வரும். அது என்ர பொறுப்பு“. உண்மையில் முருகப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன.

ஆனந்தனின் மனம் வருந்தியது. வயதில் முதிர்ந்த ஒருவர் தனது காலில் விழும்படி தான் நடந்து கொண்டதற்கு வருந்தினான். அவனது மனதில் போராட்டம். தனது குற்றங்களை மறைப்பதற்காக இப்படி நடந்து கொண்டார். தனக்குத் தானே தேற்றிக் கொண்டான். "வியாழன் விளையாட்டுப் போட்டி கலகலப்பாக நடைபெறும். நான் வாறன் சேர்“. கூறிவிட்டு அவர் போனார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். மனிதர்கள் தமது குறைகளைத் தாமே உணர்ந்து கொண்டால் இந்த உலகத்தில் குற்றங்கள் பெருகாது. அதேவேளை அவர்களுக்கு உரியமுறையில் தெளிவு படுத்தி அவற்றைப் பெரிதாக்கி மனங்களை நோகச்செய்யாமலும் இருக்கவேண்டும். முருகப்பா தொடர்ந்து செய்து வந்த இச்செயற்பாடுகளை இனியும் செய்யமாட்டார். ஆனால் அதனைச் சரியாக நெறிப்படுத்த வேண்டும். சந்தர்ப்பங்கள்தான் அனைவரையும் ஆட்டிப்படைக்கின்றன.

விளையாட்டுப் போட்டி ஆனந்தன் எதிர்பார்த்ததற்கு மேலாக சிறப்பாக நடந்தது. கல்விப்பணிப்பாளர் திரு.சிவபாதம் வித்தியாசமானவர். பொதுவாக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதைத் தவிர்த்துக் கொள்வார். ஆனால் ஆனந்தன் அழைத்தபோது வந்து விட்டார். அவரது வாயாலேயே "இரண்டு புதிய பாடசாலைகள் அடுத்த மாதம் இந்த கல்வி வட்டாரத்தில் திறபடும். அத்துடன் இரண்டு பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமையும். நேற்றுத்தான் திரு.ஆனந்தன் அதற்கான கடிதங்களை முறைப்படி தயாரித்து எனது அனுமதியைப் பெற்று கல்வி அமைச்சுக்கு அனுப்பியிருக்கிறார். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். அவருக்கு ஒத்தாசை கொடுக்கும் அதிபர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்“. எனக் கூறினார். அருட்திரு.பிலிப் அடிகளார் கல்விப் பணிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

"அலெக்ஸ் என்ன யோசனை“? ஆனந்தன் அவரைப் பார்த்துக் கேட்டான். "இல்லை சேர். முருகப்பாவை நினைத்துக் கொண்டேன். விளையாட்டுப் போட்டிக்கு ஒரு சதமும் தரமாட்டேன் என்று அடம்பிடித்தவர், ஐம்பது உணவுப் பார்சல் தந்தாரே. அதை நினைத்தேன்“. ஆனந்தன் கொடுப்புக்குள் சிரித்தான். "முருகப்பா நல்ல மனிசன். ஆனால் ஒருவிதமான போக்கு. அவரை நீதான் ராசா என்றால் எல்லாம் செய்வார்;. பொதுவாக நமது கல்வி வட்டாரத்தில் உள்ள அதிபர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான்;“. சிரித்துக் கொண்டே ஆனந்தன் கூறினான். "சேர் நீங்க எல்லாரையும் நம்பியிருக்கிறீங்க. ஆனால் இரண்டு மூன்று பேர் நமக்கு ஆப்பு வெச்சிருக்காங்க“. பரமன் கூறினான்.

"சேர், எல்லா அதிபர்களும் வந்து பார்த்துப் போனாங்க. ரத்தினத்தாரும், லிங்கரும் வரல்லயே. பார்த்தீங்களா? இவங்கதான் பிட்டிசத்துக்குப் பின்னால் இருப்பதாகப் பரவலான கதை“. பரமன் குறிப்பிட்டான். "யாரையும் நாங்க குற்றம் சொல்லக்கூடாது. இதனை நாம் அனுபவிக்கவேணும் என்டு இருக்கு. அதை அனுபவிக்கிறம். எல்லாம் நன்மைக்கே. நாம் பட்ட துன்பத்தை பிறர்படும்படி செய்யவோ, நினைக்கவோ கூடாது“. அலெக்ஸாந்தர் ஆனந்தனைப் பார்த்தார். அனந்தன் சிரித்துக் கொண்டு நின்றான்.

யோகதாஸ் வந்தார். மாற்றுடைகளைக் கொடுத்தார். "சேர், உங்கள பொலிஸ் கைது செய்துள்ளதாகவும், செட்டிகுளம் கல்வி வட்டாரம் வெற்றிடமாக இருப்பதாகவும், அதற்காகத் தற்காலிகமாக வேறு ஒருவரையும் நியமித்து, அனுமதிக்காகக் கல்வி அமைச்சுக்குக் கடிதம் அனுப்பியாச்சு. ஆவர்தான் இப்ப கடமைசெய்கிறார். பாருங்க சேர் இவங்கட குணத்த. ஆறதலாகக் கடிதம் அனுப்பியிருக்கலாம்தானே?“. கலங்கியவாறு யோகதாஸ் கூறினார். "யோகதாஸ் சரியானதைத்தான் கல்விப் பணிப்பாளர் செய்திருக்கிறார். கட்டாயம் ஒருவர் அந்த வேலைகளைக் கவனிக்கவேண்டும். அடுத்தது கல்வி அமைச்சுக்குத் தெரிவிக்க வேண்டியது அவரது கடமை. அதனை நாங்கள் ஏன் பெரிதுபடுத்தவேணும்.? வாறகிழமை எங்கள விடுவாங்க. வேறென்ன விசேசம்? மனதினில் கவலை இருந்தாலும். அதனை வெளிக்காட்டாது யோகதாசுக்குப் பதில் கூறினான்.

"யாரைப் போட்டிருக்கிறார்“;? கேட்டான். "ஐயாத்துரையரப் போட்டிருக்கிறார்“. யோகதாஸ் பதிலளித்தார். "எங்களிடம் பலவீனங்கள் நிறையவே உண்டு. தகுதியான தகைமையுள்ளவர்களை உரிய பதவிக்கு நியமிப்பதில்லை. இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள்தான் கல்வி அதிகாரியாக நியமனம் பெறவேண்டும். ஆனால் அதற்கு எதிர்மாறாக நியமனங்கள் நடக்குது. கல்வி உலகம் சீரழிவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அடுத்தது கல்வி அமைச்சும், அரசாங்கமும் கல்விச்சேவையை அலட்சியம் செய்வதாகும். பாடசாலைக்கு கல்வி மேற்பார்வைக்குச் செல்பவர் பாடசாலைகளில் உள்ள அதிபர், ஆசிரியர்களைவிடவும் தகைமையுடையவராக இருக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் மரியாதை செலுத்துவார்கள். இவற்றுக்குக் காரணம் அரசியல்வாதிகள்தான். இந்தநிலை என்று மாறும். பெருமூச்செறிந்து கூறினான்.

அதிபர் பாலசிங்கம்; இரவு உணவினைச் சுமந்து வந்தார். "எங்களால எவ்வளவு பேருக்குத் துன்பம்“. ஆனந்தன் கவலையோடு சொன்னான். "ஏன் சேர் அப்படிச் சொல்றீங்க. இது எங்கட கடமை. நாங்க சந்தோசப்படுறம் சேர். உங்களுக்குச் சேவைசெய்யக் கொடுத்து வைத்திருக்க வேணும். உங்களால வவுனியா மாவட்டம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது. நீங்க விரைவில வெளியில் வந்து சேவைசெய்ய வேணும். இதுதான் எங்கள் எல்லோரதும் பிரார்த்தனை“. பாலசிங்கம் சொல்லும்போதே அவரது நா தளதளத்தது. „சேர், சட்டத்தரணி வந்தாரா? என்ன சொன்னார்?“ வினவினார். "அடுத்த கிழமை பார்க்கலாம் என்று சொன்னன். அடுத்த கிழமை நாங்க வெளியில வருவோம் என்ற நம்பிக்கை இருக்கு. எங்களால நீங்களும் அலைவதுதான் சங்கடமாயிருக்கு“. ஆனந்தன் விளக்கினான்.

"டி.ஒ. போடாட்டிச் சரி. போட்டாத்தான் சேர் சிக்கல். உங்கட விருப்பம்போல செய்வம் சேர். பகல் என்ன சாப்பிட்டிங்க.? உணவைக் கொடுத்தவாறே பாலசிங்கம் கூறினார். "பகல் அலெக்ஸ் வீட்டிலிருந்தும், பரமன் வீட்டிலிருந்தும் உணவு வந்தது. நல்ல சாப்பாடுதான். ஆனால் சாப்பிடேலாது“. ஆனந்தன் பதிலளித்தான். "வேறென்ன சேர் வேணும்.“? பாலசிங்கம் கேட்டார். "ஒன்றுமே வேண்டாம். சுதந்திரமாக வெளியில் வரவேண்டும்“ புன்னகையோடு ஆனந்தன் சொன்னான்.

தொடரும்

Read more...

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

27

அதிகாலையிலேயே சைக்கிள் ஓடுவது உடலுக்கு நல்ல பயிற்சியாகும். காலை வவுனியா மன்னார் வீதியால் சைக்கிளில் புறப்பட்டுவிட்டான். நெடிதுயர்ந்த பாலை, வீரை மரங்கள் பனிநீராடிக் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மூலிகைகளால் நிறைந்த வன்னிக் காட்டினைத் தழுவி காற்று வீசியது. அந்தக் காற்றைச் சுவாசிப்பதில் அலாதி இன்பம் பொங்கியது. களைப்பே தெரியவில்லை. அந்தக் காற்றுக்கு அத்தனை சக்தியிருந்தது. போகும் வழியில் கிராமங்களில் மக்கள் சுறுசுறுப்பாகத் தோட்டங்களிலும், வயல்களிலும் தங்கள் தொழில்களில் ஈடுபட்டுழைப்பதைப் பார்த்து ரசிப்பான். ஆநிரைகள் கூட்டங்கூட்டமாகப் படுத்திருந்து சூரியக்கதிர்களில் சுகம் காணும்.

பூவரசங்குளம் பாடசாலையில் அதிபர் சீனிவாசகம் தனது அலுவல்களில் ஈடுபட்டிருந்தார். ஆனந்தனைக் கண்டுவிட்டார். ஓடோடி வந்தார். "சேர் வணக்கம். இந்த அதிகால வேளயில வந்திருக்கிறியள். எங்கட அதிகாரிமார் பாடசாலயளுக்குப் பத்து மணிக்குப்பிறகுதான் வருவாங்க. வாங்க சேர். ஒரு ரீ குடித்துப் போகலாம்“. அழைத்தார். ஆனந்தன் புன்னகைத்தான். சைக்கிளைவிட்டு இறங்கிப் பாடசாலைக்குள் போனான். பாடசாலை மகிழ்ச்சியான சூழலுடன் நிமிர்ந்து நின்றது. சுற்றிவர நோட்டம் விட்டான். "இன்று முதன்முதலில் உங்கட பாடசாலைக்கு வந்தது சந்தோசமாக இருக்கிறது. பாடசாலை அழகாகக் காட்சிதருகிறது“. மனநிறைவோடு சொன்னான். சீனிவாசகம் மகிழ்ந்து போனார். அவரது மனைவியும் அசிரியர். அவர் சுடச்சுடப் பசும்பால் தேநீரைக் கொண்டு வந்தார். "குடியுங்க சேர்“. அன்போடு சொன்னார்.

நீங்க அதிகாலயிலேயே பாடசாலையில் இருந்து வேலைசெய்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வழியில் மூன்று பாடசாலைகளைப் பார்த்தேன். பாடசாலைகள் தூங்கிக்கிடக்கினறன. இன்று ஆலங்குளம் சந்திவரையுள்ள பாடசாலைகளது நிலைகளை அறியப் புறப்பட்டிருக்கிறன். தேநீரைக் குடித்தவாறே தனது திட்டத்தைக் விளக்கினான். அவனது கையிலுள்ள வவுனியா மாவட்டப் பாடசாலைகளின் அமைவிட வரைபடத்தை சீனிவாசகம் கண்டுகொண்டார். பலஅதிபர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்பதை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டார். அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கப் பாடசாலையைச் சுற்றிப் பார்த்தான். அதிபரின் கனவுகளைக் கேட்டறிந்தார். "சேர்! இதனை மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்த வேண்டும். இங்க ஏ.எல் வகுப்பு இல்லை. அதற்கும் அனுமதி வேண்டும். இங்கயிருந்து பிள்ளைகள் பல்கலைக் கழகம் செல்ல வழிசெய்யவேண்டும். அதுதான் சேர் எங்கட ஆசை“. ஆனந்தனுக்கு அவரது ஆசைகளைக் கேட்கச் சந்தோசமாக இருந்தது.

"ஏன் அதிபர்களின் கூட்டத்தில் இவற்றை முன்வைக்க வில்லை“.? ஆனந்தன் வினாவினான். "ஒரு விசயத்தை முன்வைக்கும்போது சகல ஆதாரங்களையும் இணைத்துக் கொடுக்கவேண்டும். அவற்றைக் கொண்டுவரல்ல. அதனால பேசாமல் இருந்தன். இப்ப எல்லாம் தயார் நாளைக்கு உங்களிட்டக் கொண்டு வந்து தாறன் சேர்.“ சீனிவாசகம் விளக்கினார். "எல்லாம் தயாரா? கிராமத்தின் வரைபடம், கடந்தகால பரீட்சைப் பெறுபேறுகள் எல்லாம் இருந்தால் தாங்க பார்ப்பம்“;. கேட்டான். சீனிவாகம் ஆவணங்களை தயாராக வைத்திருந்தார். அவற்றை மேலோட்டமாகப் பார்த்தான். திருப்திப்பட்டுக் கொண்டான். அவரிடமே திருப்பிக் கொடுத்தான். இந்தப் பாடசாலைக்கு ஒரு மண்டபம் இல்லை. இந்த வருடம் நடைபெறும் க.பnh.த. பரீட்சைக்கு இந்தப் பாடசாலையும் ஒரு பரீட்சை நிலையமாக இயங்கும். சரியா“? அவன் சொல்லும்போது சீனிவாசகம் அதிசயித்துப் போனார்.

"சரி நேரம் ஏழுமணி. விளையாட்டுப் போட்டி ஆயத்தங்கள் தயாரா? நான் வரும்போது வாறன். எல்லாக் கடிதங்களையும் தாங்க. கொண்டு போகிறேன். சொல்லிப் புறப்பட்டான். சைக்கிள் விரைந்தது. சீனிவாசகம் அவன் போவதையே அதிசயித்துப் பார்த்துக் கொண்டு நின்றார். சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது. கால்கள் பெடலை மிதித்துக் கொண்டிருந்தன. கைகள் ஹாண்டிலில் விளையாடின. கண்கள் வழிகாட்டின. மனம் எண்ணக்கடலில் விரிந்து எதிர்காலத் திட்டக் கனவில் உலா வந்தது. எவ்வளவு தேவைகள் இருக்கின்றன? இவையாவற்றையும் நிறைவேற்றவேண்டும். எண்ணியவாறே சைக்கிள் ஓடினான். முன்னால் குருக்கள்புதுக்குளம் பாடசாலை தெரிந்தது. பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தது.

அதிபர் பாடசாலையிலேயே இருப்பவர். பிள்ளகைள் பாடசாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். சைக்கிள் விரைந்தது. பூவரசங்குளத்தில் இருந்து அவனது கண்கள் இயற்கைத்தாவரங்களை அவதானித்து வந்தன. அவை படிப்படியாக மாறிவருவதை அவதானிக்கத் தவறவில்லை. உயர்ந்த மரங்கள் உயரத்தில் குறைந்து செல்வதை அவதானித்தான். கிளைகள் நிறைந்ததாகத் தெரிந்தன. இலைகள் அகன்ற தாவரங்களும், முட்செடிகளும் காணப்பட்டன. குளங்களையண்டி மருதமரங்களின் நிறைந்திருந்தன. வேம்பு பரவலாகக் காணப்பட்டன. காட்டுப்பூக்கள் கண்களைப் பறித்தன. பிராமனாளங்குளம் தெரிந்தது. முன்னால் தெரிந்த சந்தியில் காலையூன்றினான். கிராமங்களுக்குச் செல்லும் அம்புக் குறிகளைப் பார்த்தான்.

வலப்பக்கமாகச் சைக்கிளைத் திருப்பினான். கிராமங்கள் பிரதான வீதியிலிருந்து விலகியிருந்தன. ஆட்டுமந்தைகள் அலைந்து திரிந்தன. ஊர்மைனைகள் தெரிந்தன. பெரியதம்பனை குளம்தொட்டு வளம்பெருக்கும் பழம்பெரும் கிராமம். பெரிதொரு கிராமம். பாடசாலை தெரிந்தது. உள்ளே சென்றான். ஊர்மாடுகள் பாடசாலை வளவினுள் காவல் செய்தன. பாடசாலையின் ஒருபுறத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பாடசாலை அலுவலகம் மூடிக்கிடந்தது. ஆசிரியர்கள் யாnருமில்லை. புதியதொரு ஆள் தங்கள் பாடசாலைக்கு வந்ததை அறிந்து பிள்ளைகள் ஓடிவந்தார்கள். விசாரித்தார்கள். "நான் உங்களின் ஆசிரியர்தான். வாருங்கள்“ அழைத்தான். பிள்ளைகள் அனைவரும் வந்தார்கள். மாடுகளை அப்புறப்படுத்தினான். எங்கும் சாணம் குவிந்து கிடந்தது.

மாணவ தலைவர்களை அழைத்தான். வந்தார்கள். பக்கத்திலுள்ள வீடுகளுக்குப் போய் மண்வெட்டி, குப்பைவாரி போன்றவற்றை எடுத்துவருமாறு கூறினான். நொடிப்பொழுதில் வந்தன. தானும் ஒருமண்வெட்டியை எடுத்தான். குழிகள் தோண்டப்பட்டன. அவற்றுள் சாணம் தஞ்சமாகியது. பிள்ளைகள் அனைவரும் இயங்கினார்கள். ஆசிரியர் மாதவன் வந்தார். அவரும் சேர்ந்து கொண்டார். அரைமணி நேரத்தில் பாடசாலை பளிச்சிட்டது. ஒன்றுகூடலை நடத்தினான். மிகவும் அழகாகத் தேவாரம் பாடினார்கள். அறிவுக் கதைகளைக் கூறினான். பலவினாக்களைத் தொடுத்தான். பாடசாலையின் நிலையினைப் புரிந்து கொண்டான். ஆசிரியரிடம் தான் யாரென்பதைக் கூறினான்.

"அதிபர் இன்று வரமாட்டார் அவர் கல்வி அலுவலகம் செல்வதாகச் சொன்னவர். இன்றைக்குப் பதிலதிபராக சின்னத்துரை ஆசிரியர் பொறுப்பெடுத்தவர். அவரிட்டத்தான் பாடசாலைத் திறப்பு. அவர் இப்ப வந்திருவார். மாதவன் கூறும்போதே தூரத்தில் சின்னத்துரை வருவதைக் கண்டுவிட்டார். "அதோ வாறார்“ மாதவன் காட்டினார். "மாஸ்டர். நான் யாரென்டு சொன்னால் அவர் திரும்பிப் போயிருவார். அதிபரைச் சந்திக் வந்தவர் என்று சொல்லுங்க. மாஸ்டர் நீங்க வழமையாகப் போடும் நேரத்தைப் பதியச்சொல்லுங்க பரவாயில்லை. பாவம் பிந்தி வரும் ஆசிரியர்களையும் காப்பாற்றத்தானே வேண்டும். சரியா“? ஆனந்தன் முன்னெச்செரிக்கை விடுத்தான். பிள்ளைகள் வகுப்புக்களை நோக்கிச் சென்றார்கள்.

சின்னத்துரை நேரே அலுவலகதுக்குச் சென்றார். மாதவனோடு ஆனந்தனும் சென்றான். ஆனந்தன் கூறியது போல் சின்னத்துரையிடம் ஒப்புவித்தான். "அதிபர் கல்வி அலுவலகம் சென்றிருக்கார். நாளைக்குத்தான் வருவார். கதவினைத் திறந்தவாறே கூறினார். உள்ளே போய் அலுமாரியினைத் திறந்து ஆசிரியர்களின் வரவுப் பதிவேட்டினை எடுத்து அதில் தனது ஒப்பத்தை இட்டு நேரத்தை எட்டு மணியெனக் குறிப்பிட்டார். மாதவன் அவரின் பின்னால் கையெழுத்திட்டார். ஆனந்தனின் கண்கள் வரவேட்டின் குளறுபடிகளைக் கண்டு கொண்டன. "அதிபர் எப்ப கல்விஅலுவலகம் போனவர்.? அவர் எங்க இருக்கிறவர்? போனல் இன்டக்குச் சந்திக்கலாமோ? ஆனந்தன் வினவினான். "அவர் வவுனியாவிலதான் இருக்கிறவர். ஓவ்வொரு நாளும் வந்து போறவர். அவரின் வீட்டு விலாசம் தெரியாது. மாதவன் மாஸ்டர்! உங்களுக்குத் தெரியுமா“? சின்னத்துரை மாதவனிடம் கேட்டார். மாதவனும் தெரியாது என்று தலையை ஆட்டினார்.

பஸ் பாடசாலைப் படலையில் நின்றது. சில ஆசிரியர்கள் இறங்கி வந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். அவர்கள் வரும்போது பிள்ளைகள் விளையாடுவார்கள். இன்று வகுப்புக்களில் ஆசிரியர்கள் இல்லை. ஆனால் வகுப்புக்கள் அமைதியாக இருக்கின்றன. குதுகலிப்போடு அலுவலகத்தில் நுழைந்தார்கள். அதே நேரத்தைப் பதிந்தார்கள். "என்ன மாஸ்டர் இன்றைக்குப் பிள்ளைகள் ஒழுங்கா வகுப்புகளில் இருக்கிறாங்க. அதிபரும் இல்ல. வேலைகள் கொடுத்தீங்களா? சொல்லிக் கொண்டு ஆசிரியர்கள் இளைப்பாறும் அறைக்குள் சென்றார்கள்.

"மாஸ்ரர் இப்ப உங்கட நேரம் என்ன? ஆனந்தன் கேட்டான். சின்னத்துரை தனது மணிக்கூட்டைப் பார்த்தார். "எட்டரையாகிறது“. சின்னத்துரை பதிலளித்தார். மிஸ்டர் மாதவன் உங்கட நேரமென்ன? பாடசாலை மணிக்கூட்டில் தெரியும் நேரமென்ன? மாதவனைப் பார்த்துக் கேட்டான். "பத்தரையாகிறது“ மாதவன் பதிலளித்தான். "மாஸ்டர் தயவுசெய்து அந்த ஆசிரியர் பதிவேட்டைத் தாங்க“. ஆனந்தன் கேட்டான். "உங்களுக்கு அதெல்லாம் எதுக்கு. வந்த லேலையப் பாரத்திட்டுப் போங்க“? சின்னத்துரை சினத்தோடு பதிலளித்தார். மாதவன் அவர் காதுகளில் ஓதினான். சின்னத்துரை நிலைமையைப் புரிந்து கொண்டார். "மன்னிச்சிக் கொள்ளுங்க சேர். நான் யாரோ என்று நினைச்சிட்டன்“. வரவேடு ஆனந்தன் கைகளுக்குத் தாவியது.

ஆசிரியர்கள் கொண்டுவந்த உணவையுண்டு களைப்பைப் போக்கினர். இன்னும் வகுப்புக்களுக்குப் போகவில்லை. "அதிபர் இன்று பாடசாலைக்கு வந்திருக்கிறார். ஏழு மணிக்குக் கையெழுத்திட்டிருக்கிறார். வெளியில் போயிருக்கிறார். சின்னத்துரை மாஸ்டர் பத்துமணிக்கு வந்து அலுவலகம் திறந்து எட்டுமணியென வரவு பதிந்துள்ளார். ஆனால் ஏழரை மணிக்கு வந்த மாதவன் மாஸ்டர் எட்டுமணிக்கு வரவினைப் பதிந்துள்ளார். பத்தரை மணிக்கு வந்த ஆசிரியர்கள் எட்டு மணிக்கு தங்கள் வரவினைப் பதிந்துள்ளார்கள். நான் ஏழேகாலுக்கு வந்து பிள்ளைகளோடு சேர்ந்து பாடசாலையைத் சுத்தம் செய்தேன். சரி லொக் புத்தகத்தை எடுங்கள்“. கேட்டான். சின்னத்துரையருக்கு வெயர்த்து விட்டது. அதனையெடுத்துக் கொடுத்தார்.

ஆனந்தனுக்குச் சிரிப்பாக வந்தது. „வியாழன் அதிபர்களது கூட்டத்துக்கு உங்கள் அதிபர் வந்தார். அதற்குப்பின் அவர் வரவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் அவரைப் பலமுறை வவுனியாவில் கண்டிருக்கிறேன். வரவுப் பதிவேட்டில் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் அவர் பாடசாலைக்கு வரவில்லை. உண்மையாக அவர் சென்ற புதன் வந்திருக்கிறார். அதன்பிறகு அவர் வரவில்லை. நான் வந்தபின்தான் அலுவலகம் திறபட்டது. அவரது ஆவி வந்து கையெழுத்திட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வருகிறது. கூடுவிட்டுக் கூடுபாயும் விக்கிரமாதித்தன் கதையைக் கேள்விப் பட்டிருக்கிறேன். வியாழன், வெள்ளி, இன்று திங்கட்கிழமை மூன்று நாட்களும் அதிபர் வரவில்லை. ஆனால் அதிபர் உங்களுக்குத் தெரியாமல் கையெழுத்திட்டு விட்டுப் போயிருக்கிறார்.“ சுpன்னத்துரையின் முகத்தில் வெயர்வை அரும்பியது.

„மிஸ்டர் சின்னத்துரை நீங்கதான் அவருக்காக பதில் கடமை பார்க்கிறீங்க. இல்லையா? என்ன நடந்தது. உண்மையைச் சொல்லுங்க. பிழைவிடுவது மனித இயல்பு. ஆனால் அதையுணர்ந்து திருந்தவேண்டும். இல்லையா? மிஸ்டர்.மாதவன் ஆசிரியர்கள் இன்னும் வகுப்புக்குப் போவில்லை. அவர்களை வரச் சொல்லமுடியுமா“? சொன்னதும் மாதவன் வெளியில் சென்றார். மாதவன் செய்தியைத் தெரிவித்தான். ஆனால் வந்திருப்பது யாரென்று சொல்லவில்லை. பிரதி அதிபர் வரச்சொன்னதாகவே சொன்னான். அவர்கள் அலுவலகத்துக்குள் வந்தார்கள். சின்னத்துரையர் அவர்களை இருக்கும்படி கூறினார். அவரே தொடங்கினார்.

"அதிபர் புதன்கிழமை தான் வருமட்டும் பாடசாலைக்குப் பொறுப்பாக இருக்கும்படி கூறிச் சென்றவர். ஆனால் இன்றுவரை வரவில்லை. இன்றுவரை அவர் ஒவ்வொருநாளும் கையெழுத்திட்டுச் சென்றிருக்கிறார். லொக்புத்தகத்திலும் இன்று கல்வி அலுவலகம் செல்வதாக எழுதிக் கையெழுத்திட்டுச் சென்றுள்ளார். நானும், நீங்களும், பத்து அல்லது பத்தரை மணிக்கு வந்து எட்டுமணியென்று நேரத்தைப் பதிந்து விட்டு பன்னிரெண்டு மணிக்குப் போய்விடுகிறோம். இதனால் நமது பிள்ளைகள் தமது கல்வியில் பின்னடைந்துள்ளார்கள். இதற்கான மாற்றொழுங் கினை நாம் மேற்கொள்ளவேண்;டும். என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்“;. கூறிவிட்டு மெல்ல இருந்தார்.

ஆசிரியர்களுக்கு மனதுக்குள் கோபம். "ஒரு வெளியாரை வைத்துக் கொண்டு இப்படிக் கதைப்பது நல்லதல்ல“. திருமதி.கார்த்திகேசு வீறாப்பாகச் சொன்னார். ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது. "நாம் பிழைவிடுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ளவேணும். இதைத்தான் இவ்வளவு நாளும் செய்து கொண்டு வந்திருக்கிறோம். இங்கு இருப்பவர் வெளியாளல்ல. நமது பாடசாலைக்கு மிகவேண்டியவர். நமது கல்வி அதிகாரி. காலையில் அவர் வந்து பாடசாலையைச் சுத்தஞ்செய்து தொடங்கியும் வைத்தார். மாதவன் மாஸ்டரும் அவருக்கு ஒத்தாசை செய்திருக்கிறார். அவர் தானொரு கல்வி அதிகாரியென்று காட்டிக் கொள்ளவில்லை. நமது தவறுகளைச் சுட்டிகாட்டி, திருந்துவதற்கான வழிவகைகளைக் காட்டவே வருகை தந்துள்ளார்“;. சின்னத்துரை கூறியதை ஆசிரியர்கள் உள்வாங்கியதை அவர்களது முகங்கள் காட்டின. "சேர்! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து நாங்கள் உண்மையாக உழைப்போம்“. ஏகமனதாகக் கூறினார்கள். இப்படியொரு மாற்றத்தைத்தான் ஆனந்தன் எதிர்பார்த்தான்.

"நான் உங்களில் ஒருவன். நானும் ஆசிரியராக இருந்துதான் இந்தநிலைக்கு உயர்ந்துள்ளேன். நாமெல்லோரும் கூடி ஏழைமாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்போம். உங்கள் மனமாற்றம் தொடரவேண்டும். நன்றி. உங்கள் வகுப்புக்களுக்குச் சென்று கடமையைச் செய்யுங்கள்“ கூறிவிட்டு;. லொக் புத்தகத்தில் தனது வருகையைப் பதிந்து, அதிபர் வெளியில் சென்றுள்ளார். என எழுதி ஐந்து வரிகள் இடம் விட்டுக் கையொப்பத்தினை இட்டான். "மிஸ்டர் சினத்துரை இன்று மாலை அல்லது நாளைக் காலை அதிபரை அலுவலகத்தில் என்னைச் சந்திக்குமாறு செய்தியை அனுப்புங்கள். அவரைக் காப்பற்ற வேண்டுமானால் உடனடியாக வரச் சொல்லுங்கள். நான் வாறன“ கூறிச் சைக்கிளில் தாவியேறிப் புறப்பட்டான். அவனையே ஆசிரியர்கள் பார்த்தவாறு நின்றார்கள்.

தொடரும்

Read more...

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

26

அலெக்ஸாந்தரின் "வாங்க சேர்“; சத்தம் அவனைச் சுயநினைவுக்கு இழுத்தது. உள்ளே போனான். கண்களை வீசி அளந்தான். அதிபர்களது முகங்களைப் படித்தான். கல்வி அதிகாரியை வரவேற்க ஆயத்தமாகி யிருப்பதை அவதானித்தான். ஒரு வகுப்பறையின் வடிவில் தளபாடங்கள் இருந்தன. நான்கு கதிரைகள். அவற்றுக்கு முன்னால் பெரிய மேசை. மாணவர்கள் இருப்பது போல் அதிபர்கள் அமர்ந்திருந்தனர். ஆனந்தனைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களது எண்ணமெல்லாம் கல்வி அதிகாரியிலேயே இருந்தன. செட்டிகுளப் பங்குத் தந்தை அருட்திரு.பிலிப் அடிகளார் வருவதை அலெக்ஸ் கண்டு கொண்டார். அலெக்ஸ் எழுந்து அடிகளாரிடம் சென்று "வணக்கம் பாதர் வாங்க. என்ன விசயம் பாதர்“? அவரிடம் விசாரித்தார்.

"வணக்கம் அலெக்ஸ். எங்க கல்வி அதிகாரி? அவர் காலயில என்னைச் சந்திக்க வந்திருக்கார். நான் வெளியில போயிருந்தன். அவர் பாடசாலையில் நிற்பதாகச் சொல்லியிருக்கார். நான் வந்ததும் சொன்னார்கள். அதுதான் வந்தனான்“. விசயத்தைச் சொன்னார். "அவர் இன்னும் வரல்ல பாதர். அதுதான் காத்திருக்கிறம்“;. அலெக்ஸ் விளக்கினார். "இன்னும் வரல்லையா“? பாதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது கண்கள் ஆனந்தனைத் தேடின. ஆனந்தன் அடிகளாரைப் பார்த்து விட்டான். எழுந்து வெளியில் வந்தான். "குட் மோர்னிங் பாதர். நான் ஆனந்தன். காலையில் உங்களப் பார்த்து ஆசிர்வாதம் பெறலாம் என்று வந்தன். நீங்க வெளியில் போனதாகச் சொன்னார்கள். வாங்க பாதர் உள்ளே..“ அழைத்தான்.

அலெக்ஸாந்தருக்குத் தன்னை யாரோ அலக்காகத் தூக்கி வாரி மேலே எறிந்து, அதள பாதாளத்தில் இருந்து விழும் உணர்வு ஏற்பட்டது. "காலையில் இருந்து யாரோடு கதைத்தேனோ அவர்தான் கல்வி அதிகாரி என்பதை அறிந்து கொள்ளவில்லையே. மரியாதையோடு அடக்கமும் உள்ள அதிகாரி. சே.. எவ்வளவு மடத்தனம்.“ தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். எண்ணியவாறே உள்ளே முன்னால் சென்றார். பிலிப் அடிகளாருக்கு நல்ல மரியாதை இருந்தது. சமயங்கள் எல்லாம் அன்புவழியைக் காட்டுவன. மனிதர்களைப் பாவச் செயல்களில் இருந்து காப்பாற்றி நல்வழிப்படுத்துவன, என்ற உன்னத நோக்கத்தைக் கொண்டவர். பாதரைக் கண்டதும் அதிபர்கள் எழுந்தார்கள். வணக்கம் சொன்னார்கள். அவரும் வணக்கத்தைத் தெரிவித்தார்.

பாதர் மேசையருகில் இருந்த கதிரையில் அமர்ந்தார். பக்கத்தில் அதிபர்சங்கத் தலைவர் யோகசாமி போயிருந்தார். செயலாளர் அதிபர் பாலசிங்கம். அவரும் சென்று இன்னொரு கதிரையில் இருந்தார். அதிபர் யோகசாமி தான் தலைமை வகித்தார். இரண்டு நிமிட மௌனப் பிரார்த்தனையோடு கூட்டம் தொடங்கியது. "இதுவரை நமது கல்வி அதிகாரி வந்து சேரவில்லை. பாதர் வந்திருக்கிறார். அவரது ஆசியோடு நமது கூட்டத்தைத் தொடங்குவோம். எப்படியும் கல்வி அதிகாரி வந்துவிடுவர்“;. பிலிப் அடிகளாரை ஆசியுரை வழங்குமாறு அழைத்தார். அடிகளாருக்குச் சிரிப்பு வந்தது. "நமது மக்களும் இப்படித்தானே. எங்கும் நிறைந்திருக்கும் ஏகாந்தப் பரம்பொருளைத் தமக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவரைத்தேடி அலைகிறார்கள்“. மனதில் நினைத்துக் கொண்டு அடிகளார் எழுந்தார்.

"எனக்கு இன்றைக்குச் சந்தோசமாக இருக்கிறது. நமது பக்கத்திலேயே இறைவனை வைத்துக் கொண்டு அவனைக் காணவில்லை என்று தேடுகிறோம். நாம் நம்மை அறிந்து, நமது சூழலையும் புரிந்து தேடலில் ஈடுபடவேண்டும். ஒவ்வொருநாளும் புதிதாக வருகின்றன. கழிந்த நாட்கள் திரும்பி வருவதில்லை. புதிய நாட்கள் நம்முன்னே வந்து நிற்கின்றன. நாம்தான் அதனைப் பரிந்து நமது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். எங்களது செட்டிகுளம் கல்வி வட்டாரம் வளமுறவேண்டும். நல்லதொரு கல்விச் சமூகம் உருவாக வேண்டும் என்பதற்காக நமது மத்தியில் வந்திருக்கும் கல்வி அதிகாரி திரு.ஆனந்தன் அவர்களே! அதிபர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கமும், நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக“. பாதர் கூறியதும் அனைவரது கண்களும் சுழன்றன.

எங்கே கல்வி அதிகாரி? யார்..? அவரா..? வினாக்கள் எழுந்தன. "இதோ உங்களோடு ஒருவராக அமர்ந்திருக்கும் இவர்தான் நமது கல்வி அதிகாரி திரு.ஆனந்தன்.“ கைகளால் சுட்டிக் காட்டினார். அனைவரது கண்களும் ஒரே நேரத்தில் ஆனந்தனை மொய்த்தன. யோகசாமி எழுந்து ஆனந்தனிடம் சென்றார். சேர்! மன்னிச்சிக் கொள்ளுங்கோ. உண்மையில் நாங்கள் வேறு யாரோவென்று இருந்துவிட்டோம்.“ மன்னிப்புக் கேட்டு அவருக்காக ஒதுக்கப்பட்ட கதிரையில் அமருமாறு கேட்டுக் கொண்டார். அதிபர்கள் அனைவரும் ஒரே முகமாக அழைத்தார்கள்.

ஆனந்தன் மெல்ல எழுந்து கதிரையில் அமர்ந்தான். பாதர் தொடர்ந்தார். "செட்டிகுளம் கல்வி வட்டாரத்தில் இரண்டு புதிய பாடசாலைகளைத் திறப்பதற்கு இரண்டு வருடங்களாக முயற்சிக்கிறோம். ஆனால் இன்னும் திறந்தபாடில்லை. முதல்வேலையாக அவற்றைத் திறந்து தர ஆவனசெய்யவேண்டும். அடுத்ததாக இந்தப்பாடசாலையிலும் சுற்றுப்புறப் பாடசாலைகளிலும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை நடத்துவதற்கான மத்திய நிலையம் செட்டீகுளத்தில் இல்லை. செட்டிகுளத்தில் அந்தப் பரீட்சை நடத்துவதற்குரிய மத்திய நிலையத்துக்கான அனுமதியையும் பெற்றுத்தரும்படி“ தனது ஆசியுரையோடு சேர்த்துக் கேட்டுக் கொண்டார்.

ஆனந்தன் தன்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்தான். அதிபர்கள் தங்களை அறிமுகம் செய்தார்கள். புன்னகையோடு அவர்களுக்கு வணக்கம் சொன்னான். பாடசாலைகளின் குறைகளைப் பட்டியல் படுத்திப் பாடசாலைவாரியாகப் பெற்றுக் கொண்டான். "பாடசாலைத் தேவைகளுக்காக நீங்கள் கல்வி அலுவலகம் செல்லவேண்டியதில்லை. அத்தேவைகளை என்னிடம் தாருங்கள். உடனேயே முடித்துத் தருவேன்.“ ஆணித்தரமாக முன்வைத்தான். முதற் கூட்டத்திலேயே அதிபர்களது நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டான். "பாதர் குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் அடுத்தமாதம் கைகூடும். அதனைச் செய்து தருவது எனது பொறுப்பு“?. என்றான். அதிபர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. நம்பினவர்களும் உண்டு. நம்பாதவர்களும் இருந்தார்கள்.

"சேர்! மன்னிக்கவேணும். பீடிகையோடு அதிபர் முருகப்பா எழுந்தார். "நீங்க நினைப்பது போல் புதிய பாடசாலைகள் திறப்பது இலகுவானதல்ல. அதேபோல்; செட்டிகுளத்தில் பரீட்சை நிலையம் வைப்பதற்கான அனுமதியும் பெறுவது முடியாத காரியம்“. எதையோ வீழ்த்திய பெருமையில் அவர் சொற்களை வீசினார். ஆனந்தன் சிரித்துக் கொண்டான். "நீங்கள் ஏன் எதிர்மறையாய் நினைக்கிறீர்கள். முடியும் என்று நம்புவோமே.“ ஆனந்தன் வழமையான பதிலை ஆறுதலாகக் கூறினான். "அதுக்கில்ல சேர், புகழுக்காகச் சொல்லிப்போட்டு செய்யாமல் விடக்கூடாது. இப்படிப் பல அதிகாரிகள் வந்தார்கள். அது செய்வேன். இது செய்வேன் என்று சொல்வார்கள். போய்விடுவார்கள். ஒன்றும் நடக்காது. பின் அதுபற்றிய பேச்சே இருக்காது. அதுதான் சொன்னேன்.“ முருகப்பா பதிலளித்தார்.

"அதிபர் முருகப்பா சொல்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், பாதர் நீங்கள் முன்வைத்த இரு கோரிக்கைகளையும் அடுத்த மாதக்கூட்டத்தில் அறிவிப்பேன். சரி உங்களது வட்டார வேலைத் திட்டத்தின்படி விடுபட்ட வேலைகள் இருக்கினறனவா“? வினாவாகக் கேட்டு விடையை எதிர்பார்த்தான். அதிபர் பாலசிங்கம் எழுந்தார். "சேர்! வட்டார விளையாட்டுப் போட்டி அரைவாசியில கிடக்கு. அதைப்பற்றி வட்டார விளையாட்டுச் செயலாளர் திரு.அலெக்ஸாந்தர் கூறுவார். அலெக்ஸ் சேர், அதைப் பற்றிக்கூறுங்களன்“;. அலெக்ஸாந்தரைக் கேட்டுக் கொண்டார். அலெக்ஸாந்தர் எழுந்து விபரத்தை விளக்கினார். 'கீற்ஸ்’ முடிந்துவிட்டது. "பைன’லில் இன்னும் சில நிகழ்ச்சிகளும், பரிசுகளும் வழங்க வேண்டும். அதற்குரிய நிதி வளமும் இல்லை. என்ன செய்யலாம், சேர்? வினாவாக முடித்தார்.

"என்னன்ன செலவு வரும். உத்தேசமாகச் சொல்லமுடியுமா? கேட்டு விட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தார். "சேர்! விருந்தினர்கள், நடுவர்களது உபசரிப்பு, பரிசுப் பொருட்கள், இதர செலவுகளாக உத்தேசமாக இருபத்தைந்தாயிரம் தேறும். அலெக்ஸாந்தர் சமர்ப்பித்தார். "அதிபர் சங்கத்தால் எவ்வளவு கொடுக்கலாம்“. வினவினான். சங்கத்தின் பேரில் விளையாட்டுப்போட்டிக்காக ஏழாயிரம் இருக்கு. அலெக்சாந்தர் வாசித்தார். சரி எப்போது விளையாட்டுப் போட்டியை வைக்கலாம்.? திகதியைத் தீர்மானியுங்கள்“;. கூறிக்கொண்டே தனது தினக்குறிப்பைப் புரட்டினான். "இன்று வியாழன் அடுத்தகிழமை வியாழன் பொருத்தமாக இருக்கும் சேர். எல்லா ஆயத்தங்களையும் செய்து விடலாம்“. கரீம் அதிபர் சுட்டிக்காட்டினார். அது சரிப்பட்டு வராது. மூன்றுகிழமையாவது வேண்டும்“;. மீண்டும் முருகப்பா குறுக்கிட்டார். "வேண்டாம் சேர். அதிபர் கரீம் கூறியபடி வியாழக்கிழமையே வைப்போம“;. அதிபர்கள் ஏகமனதாகத் தீர்மானித்தார்கள்.

"அலெக்ஸ் ஏற்பாடுகளைக் கவனியுங்கள். ஐம்பது உணவுப் பொட்டலம் வேண்டும். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். பரிசுப் பொருட்களை புதன்கிழமை வாங்குவோம். வவுனியா மாவட்டக் கல்வி அலுவலகம் வரமுடியுமா“? கேட்டுவிட்டு அலக்ஸ்சாந்தரைப் பார்த்தான். "ஓம் சேர்“;. அலெக்ஸாந்தரிடமிருந்து பதில் வந்தது. பதினெட்டு வியாழன் விளையாட்டுப் போட்டி நடைபெறும். உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள்“. அதிபர் யோகசாமிக்கு ஆனந்தனின் செயல்கள் அனைத்தும் பிடித்துக் கொண்டது. கூட்டம் முடியும்போது "அன்பானவர்களே உங்கள் பாடசாலைகளுக்குத் திடீர்விஜயம் செய்வேன். உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யுங்கள். அத்துடன் எனது அலுவலகம் இந்தப் பாடசாலையிலேயே அமையும். உங்கள் தேவைகளை இங்கேயே நிறைவேற்றப் படும்“. நிறைவாகக் கூறி விடைபெற்றான்.

அதிபர்களது கூட்டம் முடிந்தது. பாதர் ஆனந்தனிடம் விடை பெற்றார். மெதுவாக ஏதோ சொன்னார். அவனால் தட்டமுடியவில்லை. சம்மதித்தான். அவர் சென்றுவிட்டார். அதிபர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். ஆனாலும் அவர்களால் உடன் செல்லமுடியவில்லை. போக்குவரத்து மிகவும் அரிதாகவே நடைபெற்றது. செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் ஒரு பகுதியில் சிறியதான அறையை பிரதேசக் கல்வி அலுவலகமாக மாற்றியமைத்தான். அதிபர் ரத்தினத்தின் உதவியோடு அலெக்ஸ் யாவற்றையும் செய்து முடித்தார். அதிபர் பாலசிங்கம் பூரணமாக ஒத்துழைத்தார். பல அதிபர்கள் கல்வி அலுவலக அறை ஒழுங்கு படுத்திக் கொண்டே உரையாடினார்கள். உரையாடல்கள் இடையே பலவற்றைப் பரிமாறிக் கொண்டார்கள்.

"செட்டிகுளம் பிரதேசத்தைப் பற்றித் தெரியாது. வஸ்போக்குவரத்தும் குறைவு. எப்படி பாடசாலைகளுக்கு இவர் திடீர் விஜயம் செய்வார். வஸ் வாறநேரம் எங்களுக்குத்தான் தெரியும்“. முருகப்பாவின் குரல் ஓங்கி ஒலித்ததை ஆனந்தன் உள்வாங்கிக் கொண்டான். இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் இருக்கும் திறமைகளை இனங்காணவேண்டும். தக்க தருணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். மனதில் பதித்துக் கொண்டான். ஒரு மனிதனிடம் பலமும் உள்ளது. அதேபோல் பலவீனம் உள்ளது. அதனைப் போக்குவதற்குரிய சந்தர்பங்களை அறியவேண்டும். அதனைப் பயன்படுத்தும் சாதுரியத்தையும் அறிந்திருக்கவேண்டும். மனிதனிடமுள்ள மானிடத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.

துரிதகதியில் அலுவலகம் தயாராகிவிட்டது. அலுவலகத்தை ஒட்டியதுபோல் ஒரு அறை இருந்தது. அதனைத் தான் தங்குவதற்கென ஒதுக்கிக் கொண்டான். "அலெக்ஸ்! அழைத்தான். அலெக்ஸ் வந்தார். "எனக்கொரு உதவி செய்யவேண்டும். நான் வந்து தங்கும் நாட்களில் உணவு வசதிக்கு ஏற்பாடு செய்துதர வேண்டும். செய்யலாமா? கேட்டான். "அதற்கென்ன சேர். நான் ஒழுங்கு செய்யிறன்“;. அலெக்ஸ் ஏற்றுக்கொண்டார். பாடசாலை முடிந்து பிள்ளைகள் போய்க்கொண்டிருந்தார்கள். அதிபர்களும் சென்றுவிட்டார்கள். பிலிப் அடிகளார் செய்தியனுப் பியிருந்தார். அலெக்ஸ் ஆனந்தனை பாதரிடம் அழைத்துச் சென்றார். பகல் உணவுடன் பாதர் காத்திருந்தார். அலெக்ஸாந்தரையும் அவர் அழைத்திருந்தார். சேர்ந்து உணவருந்தினார்கள். உண்டபின் தனது திட்டங்களை விளக்கினான். பாதரிடம் திறக்கவேண்டிய பாடசாலைகளின் விபரங்களைப் பெற்றுக் கொண்டான். அடுத்தகிழமை சந்திப்பதாகக் கூறி விடைபெற்றான்.

தொடரும்

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP