Tuesday, April 26, 2011

சிறுவர் கதைகள்.

காகமும் குயிலும்
வசந்த காலம் தொடங்கிவிட்டது. பறவைகளுக்குக் கொண்டாட்டம். அதிகாலையிலேயே எழுந்து பாடத் தொடங்கிவிட்டன. மாமரங்கள் துளிர்த்துப் பூத்தன. வேம்புகள் இலைகளைச் சொரித்து இளந்தளிர்களைச் சூடிக் கொண்டன. குளிர்மை சேர்த்தன. தளிர்களில் பூச்சூடி மகிழ்ந்தன. சில வேம்புகள் கொத்துக் கொத்தாய் காய்களைச் சுமந்தன. குளிர்மையைப் பரவவிட்டு நின்றன. பொதுவாக எல்லா மரங்களும் பூத்துக் காய்த்துக் கலகலத்தன. காகங்கள் ஆணும் பெண்ணுமாய் மரங்களிலே கூடுகளை அமைக்கத் தொடங்கி விட்டன.
மரங்களில் வசதியான கிளைகளைத் தெரிந்தெடுத்தன. பொருத்தமான சுள்ளிகளையும். தும்புகளையும் சேர்த்தன. தமது அலகால் மிக நேர்த்தியாகப் பின்னிக் கட்டின. குதிரைகள் பாய்ந்து திரிந்தன. குதிரைகளில் போய்க் குந்தின. தோழர்கள் தம்மைத் துப்பரவு செய்ய வந்துவிட்டார்கள் என்று சந்தோசித்தன. அவை உண்ணிகளைப் பிடுங்கின. அத்துடன் குதிரையின் மயிர்களையும் பிடுங்கின. அம்மயிர்களைக் கூடுகளில் பதமாய் வைத்துப் பின்னின. கூடு மெத்தையாக இருந்தது. தமது குஞ்சுகளுக்கு இதமளிக்கும் வண்ணம் கூடுகளை அமைத்தன.
காகக் கூடுகளைக் குயில்கள் பார்த்து வந்தன. எங்கும் குயில்களின் கூவல்கள். ஒவ்வொன்று ஒவ்வொரு திசையில் இருந்து கூவின. ஏட்டிக்குப் போட்டியாகக் கூவத்தொடங்கி விட்டன
இரண்டு குயில்கள் பதுங்கியிருந்தன. “ஒரு கூட்டைப் பார்த்து வாங்க. பெண்குயில் கூறியது. நமக்கு முன்னால் இருக்கும் கூடு நல்லது. அந்தக் காகங்கள் அழகாகக் கூடுகள் கட்டியுள்ளன. கொஞ்சம் பொறு. அவை வெளியே போகும். அப்போது உள்ளே போய் முட்டையை வைத்துவிட்டு வா. அதுவரை பொறுமையாக இரு.” ஆண்குயில் கூறியது.
வேம்புகளில் காகங்களின் ஆட்சி. பெண்காகம் கூட்டில் இருக்கும். முட்டைகள் இடும். ஆண்காகம் உணவு தேடப்போகும். பெண்காகம் வெளியில் போனால் ஆண் காகம் முட்டைக்குக் காவல் இருக்கும். குயில்கள் குதூகலித்துப் பாடும். அந்தப் பாடல்களைக் காகங்கள் காது கொடுத்துக் கேட்கும்.
“கூட்டை விட்டு வெளியே வா? கொஞ்சநேரம் கதைத்து உறவாடுவோம்”. ஆண்காகம் வேறு கிளையில் இருந்து அழைத்தது. பெண்காகம் அக்கம் பக்கம் பார்த்தது. மெதுவாக ஆண்காகத்திடம் வந்தது. பக்கத்தில் இருந்தது. பெண்காகத்தின் இறக்கைகளைக் கொதிவிட்டது. கொஞ்சம் சுகமாக இருந்தது.
“இந்தக் குயில்களை நம்ப முடியாது. அவை நமது கூடுகளில் வந்து முட்டையிடும். அதன் முட்டைகளை அடையாளம் காணமுடியாது. அவற்றின் முட்டையும் எங்கட முட்டையைப்போல்தான் இருக்கும். நாம்தான் கஸ்டப்பட்டுக் குஞ்சுகளைப் பொரிக்க வேண்டும். அவற்றுக்கு உணவூட்டிக் காப்பாற்றவும் வேண்டும். குஞ்சுகளுக்குப் பறவை காட்டி வளர்க்கவும் வேண்டும். இது நமக்குத் தேவைதானா”? பெண்காகம் கேட்டது. அப்போது குயிலின் கூவல் காற்றில் கலந்து வந்தது. காகங்கள் காது கொடுத்துக் கேட்டன. சற்றுநேரம் அமைதி காத்தன. பெண்காகத்துக்கு ஆறுதல் கூறியது.
“நீ ஏன் கவலைப்படுகிறாய். எல்லாம் புண்ணியம்தான். கடவுள் நமக்கு இட்ட கட்டளையாகக் கொள்வோம்”. ஆண்காகம் அறிவுரை கூறியது. கதையோடு கதையாக “ஏன் நமது குரல் இனிமையாக இல்லை”? ஆண்காகம் கேட்டது.? “யார் சொன்னது? நீங்க பாடினால்தான் எனக்குச் சந்தோசம். நமது பாடல் நமக்கு இனிக்கும். எங்க பாடுங்க”? பெண்காகம் கேட்டுத் தனது உடலைக் கோதிவிட்டுச் சிலிர்த்தது. ஆண்காகத்துக்கு உற்சாகம் பிறந்து விட்டது.
ஆண்காகம் குரலெழுப்பிப் பல்வேறு குரல்களில் பாடியது. ‘கா…ஆ…ஆ’ பாடியது. “சா… எவ்வளவு இனிமையாக இருக்கிறது”. பெண்காகம் பாராட்டியது.கதை நீடித்தது. மெல்லிய காற்று வீசியது. வேம்பின் இலைகள் சலசலத்தன.சந்தர்ப்பத்தைக் குயில்கள் பார்த்திருந்தன. ஆண்குயில் பெண்குயிலைத் தூண்டியது. பெண்குயில் மெதுவாகப் பறந்து வந்தது. சூழலைக் கவனித்தது. காகத்தின் கூட்டைப் பார்த்தது. சடுதியாகப் புகுந்தது. கண்ணிமைக்குமுன் முட்டையை விட்டதும் பறந்தது. ஆண்குயில் அதனைத் தொடர்ந்து பறந்தது.
அப்போதுதான் ஆண்காகம் கண்டது. தமது முட்டைகளைக் குடிப்பதற்குத்தான் குயில் வந்தது என்று எண்ணியது. குயிலைத் துரத்திக் கொண்டு போனது. ஆனால் குயில் பறந்து விட்டது.
அந்தக் கூட்டுக்குள் முட்டைகள் இருந்தன. எத்தனை முட்டைகளை விட்டோம் என்ற நினைவு காகத்துக்குத் இருப்பதில்லை. கூட்டில் முட்டைகளைப் பார்த்தது. முட்டைகள் இருந்தன. “சரி இனி நீ வெளியில் வராதே. நான் உனக்கு உணவு கொண்டு வருகிறேன்”;. கூறிக்கொண்டு ஆண்காகம் பறந்தது. பெண் காகம் கூட்டில் இருந்து அடை காத்தது. அடைகாப்பது இலகுவான செயலல்ல. பொறுமையாக இருந்து பாதுகாக்கவேண்டும். முனிவர்களின் தவம் போன்றது. ஒரு குழந்தையைப் பெறும் அவஸ்த்தையை ஒத்தது.
நாட்கள் உருண்டன. கூடு களைகட்டியது. குஞ்சுகள் முட்டைகளில் இருந்து எட்டிப்பார்த்தன. காகங்களுக்குக் கொண்டாட்டாம். விடியவும் எழுந்திருந்து குஞ்சுகளைப் பார்க்கும். அவற்றின் வளர்ச்சியைக் கண்டு களிக்கும். குஞ்சுகளின் சின்னஞ்சிறு இறக்கைகளைக் கோதிவிடும். அவற்றின் பசியைப் போக்குவதற்குப் பறந்து பறந்து உழைக்கும்.
கிடைக்கும் உணவைப் பதம் பார்த்துத் தேர்ந்து எடுக்கும். சிந்தாமல் வாயுனுள் பாதுகாப்பாகக் கொண்டு வரும். தாயும், தந்தையும் மாறி மாறி உணவை ஊட்டும். ஓய்வில்லாது உணவுதேடும் படலம் நடந்தது. குஞ்சுகள் இப்போது வளர்ந்து விட்டன.
குங்சுகள் கூட்டைவிட்டு வெளியில் வந்தன. கொப்புகளில் இருந்தன. ஒற்றுமையாகக் கூடிக் குலவின. காகங்கள் எந்தவித பேதமுமின்றிப் பாதுகாத்தன. அடிக்கடி உணவைக் கொண்டு வந்து ஊட்டின.
இரண்டு குஞ்சுகள் வித்தியாசமாக நடந்து கொண்டன. நிறத்திலும் குணத்திலும் மாற்றம். வளர்ந்த குஞ்சுகள் அதனை உணர்ந்து கொண்டன.
இரண்டு குஞ்சுசுகளின் கண்கள் சிவப்பாக இருந்தன. நிறத்தில் ஓரு குஞ்சு வித்தியாசமாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல குரலிலும் வித்தியாசம் தெரிந்தது. காகம் உணவைக் கொண்டு வந்தது. பெரிய காகக்குஞ்சு தாயைப் பார்த்தது. “அம்மா எனக்கொரு சந்தேகம். உண்மையில் அந்த இரண்டு குஞ்சுகளும் எனது சகோதரர்களா? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.” உணவூட்டும் தாயிடம் கேட்டது.
“அம்மா ஓகு குஞ்சு நிறத்தில் வித்தியாசமாக இருக்கிறது. இது உங்களுக்கு விளங்கவில்லையா”? அடுத்த குஞ்சு புறுபுறுத்தது. “பிள்ளைகளா! எனக்கு நீங்கள் எல்லாரும் பிள்ளைகள்தான். நான் அவர் வேறு, இவர்வேறு என்று பார்ப்பதில்லை. நான் அடைகாத்தேன். அடைகாப்பது தவம் செய்வதுபோலொரு விரதம். எனது உடல் சூட்டை முட்டைகளுக்கு ஊட்டவேண்டும். அந்தக் கணகணப்பில் உங்களின் உடலுறுப்புக்கள் உருவாகின்றன. முட்டைக் கோதுகளை உடைத்துக் கொண்டு நீங்கள் வெளிவருவீர்கள். எல்லோரும் எனக்குப் பிள்ளைகள்தான். பிள்ளைகள் எங்களுக்கு உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. பருவம் வந்ததும் ஆளுக்கொரு திசையில் பறந்து விடுவீர்கள். என்னால் வளர்க்கப் படுகின்ற பிள்ளைகள் அனைவரும் எனது பிள்ளைகளே. நீங்கள் பேதம் பார்க்காது வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.” தாய்க்காகம் புத்திமதி கூறியது.
குயில் குஞ்சுகள் காது கொடுத்துக் கேட்டன. “நான் கறுப்பாக இருக்கிறேன். ஆனாலும் ஏன் எனது கண்கள் சிவப்பாக இருக்கின்றன. குரல் வித்தியாசமாக உள்ளது”? கறுத்த குயில்குஞ்சு மனதுக்குள் கேட்டுக் கொண்டது. புள்ளிக்குஞ்சு அவை பேசுவதை கேட்டது.
“எனக்கேன் புள்ளிகள் உள்ளன”.? கறுத்தக் குஞ்சுவிடம் கேட்டது. “நீ ஆண். அதனால் புள்ளிகள் உள்ளன. நான் பெண். அதனால் புள்ளிகள் இல்லை. நாம் காகத்தின் குஞ்சுகள் இல்லை. நாம் இருவரும் குயிலினம். “உண்மையில் நாங்க யார்? எங்கள் தாய் தந்தையர் யார்? எங்களுக்கு என்று ஒரு கூடு இல்லையா?” குஞ்சுகள் மனம் வெதும்பின. அந்த மரக்கிளையில் குயில்கள் வந்திருந்தன. அவற்றைக் குஞ்சுகள் கண்டு கொண்டன. “ஏய்! அங்கே பார். நம்மைப் போல் உடலமைப்பு. அவங்கதான் நமது சொந்தக் காரர்ர்களோ? ஆண்குயிற் குஞ்சு பேசியது. அப்படிச் சொல்வதற்கே வெட்கமாயிருக்கு. முட்டையிடுவது அவங்க. அடைகாத்துக் குஞ்சு பொரித்து வளர்ப்பது இவங்களா? என்ன பிறவிகளோ? ஏன் பிறந்தோமென்று இருக்கிறது. பெண்குயில் குஞ்சு கூறியது.
தாய்க்காகம் உணவோடு வந்தது. குஞ்சுகள் சிறகுகளை விரித்தன. ஆர்வத்தோடு வாயைத்திறந்து நின்றன. காகம் உணவை வாய்க்குள் திணித்தது. குஞ்சுகள் உண்டன. அம்மா! “நாங்க உங்கட குஞ்சுகள் இல்லையா”? குயில் குஞ்சுகள் கேட்டன. நீங்களும் எங்கட குஞ்சுகள்தான். இவ்வளவு காலமும் அடைகாத்துப் பாதுகாத்தேன். இப்போது உணவு தேடி ஊட்டுகிறேன். நீங்கள் வளர்ந்து பெரியவர்களானதும் புரிந்து கொள்வீர்கள். இப்போது உண்ணுங்கள்”. உணவைக் கொடுத்தது.
குயில்கள் உற்றுக் கேட்டன. பெண்குயில் இயற்கையையின் நியதியை எண்ணி வருந்தியது. “கவலைப் படாதே. இதனை மாற்ற முடியாது. நமு சந்ததி இதனையே தொடரும். நமக்குப் பிள்ளைகளை வளர்க்கும் பாக்கியத்தை இறைவன்தான் தரவேண்டும். அதற்காகக் அவனை வேண்டுவோம். நான் முதற்குரலை எழுப்புகிறேக். இசைகூட்டிக் கூவியது.
குயிலின் கூவலைக் கேட்டதும் காகத்துக்குக் கொபம் வந்தது. கா..கா என கரைந்தது. சுற்றிவரக் காகக்கூட்டம் சேர்ந்து விட்டது. வா..போவோம். காகங்கள் கூடிவிட்டன. தப்ப முடியாது. கூறிக் nஅகாண்டு பறந்தன. அவற்றகை; காகங்கள் பாதி வழிவரை துரத்தின. பின் திரும்பி விட்டன.
குஞ்சுகள் வளர்ந்து விட்டன. கூட்டுக்குள் அவை தங்குவதற்கான இடம் போதாதிருந்தது. குஞ்சுகளை கிளைகளில் தங்குவதற்குப் பழக்கின. கூடு வெறுமனே கிடந்தது. பறக்கத் தொடங்கி விட்டன. ஆளுக்கொரு திசையில் பறந்து பார்த்தன. தாய்க் காகம் போகும் இடங்களுக்குக் குஞ்சுகளும் சென்றன. காகக்குஞ்சுகள் குதூகலித்துக் “கா..கா” என்று இரைந்தன. குயில் குஞ்சுகளின் குரலில் வித்தியாசம் வந்தது. அவை கொஞ்ச நாட்கள் மௌனம் காத்தன.
ஒரு விடியற்காலை. ஆண் குயில் குஞ்சு கூவியது. கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பெண்காகம் அவற்றின் பக்கத்தில் வந்திருந்தது. “அம்மா” என்றன. காகம் அன்போடு அவற்றைப் பார்த்தன.
“இன்றிலிருந்து உங்கள் உணவை நீங்களே தேடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு விரும்பிய மரங்களில் தங்கலாம். என்னால் உணவு கொண்டு வர முடியாது. வயது போய்விட்டது. களைத்து வந்த காகம் கூறியது. தாய்க்காகம் ஒரு கிளையில் இருந்தது. ஆண்காகமும் வந்திருந்தது. கலங்கியவாறு குஞ்சுகள் பறந்தன. அவை அந்தப் பக்கம் வரவே இல்லை.
தாய்க்காகம் நோய்வாய்ப் பட்டது. ஆண்காகம் இரை கொண்டு வந்து கொடுத்தது. ஒரு நாள் தாய்க்காகம் மரத்தில் இருந்து கீழே விழுந்தது. விழுந்தது விழுந்ததுதான். அதன் கதை முடிந்து விட்டது. செய்தி காகங்களுக்குப் பரவியது. காகங்கள் கூட்டங்கூட்டமாக வந்தன. பறந்து பறந்து கரைந்தன. அந்தப் பிரதேசம் இரைந்து கொண்டிருந்தது. அந்தக் காகத்துக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு யாருமில்லை. குயில்கள் அந்தப் பக்கமே வரவில்லை. காகங்கள் மட்டும் கரைந்தவாறு பறந்து திரிந்தன.

"என்ன தோட்டம் நிறைந்து காகங்கள் கரைகின்றன." கூறியவாறே கந்தப்பர் வந்தார். காகம் கீழே கிடப்பதைக் கண்டார். மண்வெட்டியைக் எடுத்துக் குழியைத் தோண்டினார். உடலைக் குழியில் போட்டு மூடினார். காகங்கள் பார்த்திருந்தன. அவை ஒவ்வொன்றாகக் கலைந்து போய்விட்டன. தூரத்தே மரக்கிளைகளில் இருந்து குயில்கள் கூவிக் கொண்டிருந்தன.

Read more...

Friday, April 22, 2011

சிறுவர் கதைகள்

சிங்கமும் எருதுகளும்

இலங்கையில் சிங்கராசவனம் இருக்கிறது. வனம் என்பது பெரிய காடு. அந்தக் காட்டில் ராஜகோன் என்ற சிங்கம் வாழ்ந்தது. அதுதான் அந்தக் காட்டின் அரசன். ராஜகோனின் அமைச்சராக விக்ரமன் என்ற நரி இருந்தது. ராஜகோனின் தளபதியாக பொன்னன் என்ற ஓநாய் இருந்தது. இவை ராஜகோனின் திட்டங்களுக்குத் துணைபோயின. ராஜகோனின் அரசசபையில் ஓணான்கள் முக்கிய பதவிகளை வகித்தன. ராஜகோனின் ஆட்சி நல்லபடியாக நடந்தது.
ஓணான்கள் நிறத்தை மாற்றிக் கொண்டு வேவு பார்க்கும். இலகுவாக வேட்டையாடக் கூடிய விலங்குகளைக் காட்டிக் கொடுக்கும். விலங்குகள் தனியாக நிற்கும் வேளையில் ஓணான் விசிலடிக்கும். அந்த விசில் சத்தத்தைச் செவிமடுத்து விக்கிரமனும், பொன்னனும் ராஜகோனுக்குதர் தெரிவிக்கும். பின்னர் மிருகங்களை ராஜகோன் வேட்டையாடும். ராஜகோன் உண்ட மிச்சத்தை விக்கிரமனும், பொன்னனும் உண்ணும். ஓணான்கள் அங்கு வரும் பூச்சி புளுக்களை வேட்டையாடும். மிருகங்கள் பயத்துடன் வாழ்ந்தன.
ஒருநாள் ராஜகோன் விக்ரமனையும். பொன்னனையும் அழைத்தது. “எப்படியும் வில்பத்துக் காட்டில் புகுந்து வேட்டையாட வேண்டும் அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள். அது முடிந்தபின் என்னைப் பார்க்க வாருங்கள்” என்று ராஜகோன் கர்சித்தது.
வில்பத்து காடும் வளம் நிறைந்தது. அங்கு வல்லமை பொருந்திய ஐந்து எருதுகள் ஆட்சியை நடத்தின. அரசர் என்ற பதம் இல்லை. ஆனால் எருதுகள் அரசர்களாக உலா வந்தன. ஒற்றுமையே பலம் என்று வாழ்ந்தன. இந்த ஐந்து எருதுகளும் ஒற்றுமையாகச் சேர்ந்து செயற்பட்டன. எது வந்தபோதும் ஐவரும் ஒன்றாக எதிர்த்து நின்றன. அவற்றை வெல்ல எந்த மிருகங்களாலும் முடியவில்லை. விக்ரமனும் பொன்னனும் வில்பத்துக் காட்டினுள் ஊடுருவல் செய்தன. அங்கு வாழ்ந்த மிருகங்களிடை குழப்பங்களை ஏற்படுத்தின.
ஒருநாள் எருதுகள் ஒன்று கூடின. தமக்குள் முக்கியமான விடயங்களைக் கதைத்துக் கொண்டன. பிரிந்து நிற்க ஏகமனதாக முடிவெடுத்தன. காட்டெருமைகள் வேறாயின. வலங்குகளையும், பறவைகளையும் கூட்டின. பல இரகசியக் கூட்டங்கள் நடந்தன. மான்கூட்டம் வேறாக ஒதுங்கின. கரடிகள் ஒருபுறம் ஒதுங்கின. பறவைகள் வேறாயின. யானைகள் தனியான கூட்டமாக உலாவந்தன. எருதுகளின் பலம் குன்றியது.
எருதுகளும் ஒவ்வொரு பக்கம் சாய்ந்தன. ஒவ்வொரு எருதுக்கும் சார்புடைய விலங்குகளும், பறவைகளும் சேர்ந்து கொண்டன. வில்பத்துக் காட்டில் நிம்மதியும் சந்தோசமும் தொலைந்து போனது. செய்தி ராஜகோனுக்கு அனுப்பப்பட்டது.
விக்கிரமனும். பொன்னனும் சிங்கராஜவனம் வந்து சேர்ந்தன. வில்பத்து நிலைமையை எடுத்து விளக்கின. ராஜகோனுக்குச் சந்தோசம். ஓணான்களை அழைத்தது. வில்பத்துக் காட்டுக்குள் போய் நிலைமையை அறிவிக்கும்படி சொன்னது. ஓணான்கள் விரைந்தன.
வில்பத்து நிம்மதியைத் தொலைத்து விட்டது. நல்ல சந்தர்ப்பம் நிலவுகிறது. எருதுகளிடம் ஒற்றுமை இல்லை. அவை பிரிந்து நிற்கின்றன. என்ற செய்திகள் பறந்தன.
ராஜகோன் விக்கிரமனையும், பொன்னனையும் அழைத்தது. வானைப் பார்த்தது. வானம் நிர்மலமாக இருந்தது. பின்நிலவு காலம். “நமது படைகளைத் தயார் நிலையில் வையுங்கள். நாளை இருள் சூழ்ந்ததும் வில்பத்துக்குப் புறப்படுவோம். நமக்கு வேண்டியது நல்ல கொழுத்த இரைகள்தான். நல்ல திடகாத்திரமுள்ள விலங்குகளை மட்டும் கூட்டிச்செல்வோம்.” விளக்கியது.
எருதுகள் எந்த விலங்குகளுக்கும் தெரியாமல் சந்தித்தன. எதிர்கொள்ள வேண்டியவற்றைத் திட்டமிட்டன. ஒவ்வொரு எருதும் தமது ஆதரவாளர்களுக்குப் பயிற்சி அளித்தன. “உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று இறுதி நாளில் சொல்வேன். அப்பொழுது உங்கள் திறமையைக் காட்டுங்கள்”. ஒவ்வொரு எருதும் தமது படையணிகளுக்கு விளக்கின. வில்பத்துக் காடு அமைதியாக இருந்தது.
ஓணான்களின் விசில் ஒலித்தது. அதே விசில் வில்பத்துக் காட்டிலும் ஒலித்தது. வில்பத்துக் காட்டின் நடுவில் ஒரு வெளியிருந்தது. எருதுகளின் கட்டளைப்படி சில மிருகங்கள் அந்த வெளியில் கூடின.
ராஜகோனின் விலங்குப் படை வில்பத்துக் காட்டினுள் ஊடுருவியது. காட்டின் நடுப்பகுதிக்குள் விலங்குகள் நிற்பதைக் கண்டுகொண்டன. “நல்ல தருணம். அப்படியே சுற்றி வளைத்து வேட்டையாடுவோம்.” ராஜகோன் பாயந்து சென்றது. “சாடுங்கள் சத்தமிட்டது.” விலங்குகள் பாயதர் தொடங்கின.“சற்று திரும்பிப் பாருங்கள். உங்களைச் சுற்றி எங்கள் விலங்குகள் சூழ்ந்துள்ளன.” சத்தம் வந்த பக்கம் ராஜகோன் திரும்பிப் பார்த்தது. ஐந்து எருதுகளும் மூர்கத்தனத்தோடு நின்றன. “நீங்கள் நினைத்ததுபோல் நடக்கவில்லை. எங்களைப் பிரிக்கப் பார்த்தீர்கள். அது நடக்காது. உங்கள் சதி எங்களிடம் பலிக்காது. நாங்கள் ஒன்றாகவே போராடுவோம். முடியுமானால் தப்பிப் பிழையுங்கள்.” எருதுகளிகன் கட்டளை பிறந்தது. வில்பத்து விலங்குகள் மூர்க்கத்தனத்தோடு நின்றன.
வில்பத்துக் காட்டின் நடுவில் ராஜகோன் சிக்கிவிட்டது. “விக்கிரமனும். பொன்னனும் சேர்ந்து சதி செய்து விட்டன. தப்புவதற்கு வழியில்லை. இவர்களை நான் நம்பி மோசம் போனேன்”. என்று ராஜகோன் வருந்தியது. வில்பத்துக் காட்டில் ராஜகோன் சுற்றிவளைக்கப் பட்டுவிட்டது. பின்னாலும் சுற்றி வளைப்பு. நடுவினில் ராஜகோனின் விலங்குகள். எருதுகளின் கொம்புகள் விளையாடின. சிங்கராஜவனத்தில் இருந்து வந்த விலங்குகள் ஆபத்தில் சிக்கிக் கொண்டன. எருதுகளின் கொம்புகள்; ராஜகோனைக் குறிபார்த்து நின்றன.
எருதுகளைப் பிரிக்க முயன்ற விக்கிரமனும், பொன்னனும் வீழ்ந்து கிடந்தன. ஓணான்களைச் செம்பகங்கள் கொத்திக் கொண்டிருந்தன. அவை அழுது புலம்பிக் கெண்டிருந்தன.
“இறைவன் படைத்த இந்தப் பூமியில் எல்லோரும் வாழ உரித்துடையவர்கள். ஆளையாள் அடிமைப்படுத்துவதால் நன்மை ஏற்படப் போவதில்லை. நீங்களும் சுதந்திரமாக வாழவேண்டும். நாங்களும் சுதந்திரமாக வாழவேண்டும். இக்காடுகள் எல்லோருக்கும் சொந்தம். கேடுகெட்ட மனிதர்களைப் போல் நாமும் சண்டையிடுவதா? நமக்கும் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்க வேண்டும். நாம் மனிதர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவோம். இவ்வாறான அழிவுப் பாதைகளில் ஈடுபடமாட்டோம் என்று சத்தியப் பிமாணம் செய்வோம். அதற்கான உடன்படிக்கை செய்வோம். எவரும் எங்கும் வாழலாம் என்று பிரதிக்ஞை செய்வோம். நீங்கள் சுதந்திரமாகப் போய்வாருங்கள்”. எருதுகள் ராஜகோனுக்கு விடுதலை அளித்தன. தவறாக வழிநடத்திய விக்ரமனையும், பொன்னனையும் காவலில் வைத்தன. ஓணான்களைக் காட்டை விட்டு விரட்டின. அவை பயந்து பயந்து ஒளிந்து வாழ்கின்றன.
ராஜகோன் தனது தவறை உணர்ந்து கொண்டது. வில்பத்து விழாக் கொண்டாடியது.

குரங்கும் முதலையும்
மணியரசன் குளம் வரலாற்றுப் பெருமையுடையது. மிகப் பழமையானது. அந்தக் குளத்தில் எந்த நேரமும் தண்ணீர் நிரம்பியே இருக்கும். தாமரை மலர்கள் அடர்த்தியாகப் பூத்திருக்கும். தாமரைப் பூவில் இருந்து விதைகளை மக்கள் பிடுங்குவார்கள். அந்த விதைகள் நல்ல ருசியாக இருக்கும். தாமரை விதைகளில் நல்ல சத்துக்கள் உண்டு. அதனை உண்ணும் பெண்கள் மினுமினு என்று இருப்பார்கள் என்பது ஐதீகம்.
தாமரைக் கிழங்கு சத்துள்ள உணவாகும். கிழங்கை அவித்து உண்பார்கள். இவை யாவும் இயற்கை அளிக்கும் அருங்கொடைகள். விஜயன் தாமிரபரணியை அடைந்தபோது குவேனி கொடுத்த உணவு தாமரைக்கிழங்குதான். ஆதிகால மக்கள் இவற்றையே உண்டு வாழ்ந்தார்கள்.
குளத்தில் உள்ள தண்ணீரினால் அந்தப் பிரதேசத்தில் வரட்சி நிலவுவதில்லை. குளத்தை அண்டிய பகுதிகள் செழிப்பாக இருந்தன. எங்கும் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அவை காய்த்துப் பூத்துக் கலகலத்தன.
குளக்கரை நெடுகிலும் மரங்கள் நின்றன. நாவல், பனிச்சை, மருத மரங்கள் நிறைந்திருந்தன. காலத்துக்குக் காலம் பழங்கள் கிடைக்கும். குளம் மக்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்தது. குளத்தின் ஒரு பகுதியில் மக்கள் குளிப்பார்கள். கால்நடைகளும் தண்ணீர் குடிக்கும். பலவகையான பறவைகளும், பிராணிகளும் வாழ்ந்தன. அந்தக் குளத்தில் முதலைகளும் வாழ்ந்தன. ஆனால் முதலைகள் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருவதில்லை. குரங்குகள் குளத்தின் கரைக்குக் குழுக்களாக வரும். வரிசையாக இருந்து தண்ணீரை அருந்தும்.
குரங்குக் குழுக்களின் தலைவர் காவலுக்கு இருப்பார். அது அழகான காட்சியாக இருக்கும். குரங்குகளைப் பிடிக்க முதலைகள் பதுங்கி இருக்கும். குரங்குகளின் தலைவர் எச்சரித்த வண்ணம் இருப்பார். சிறிய அரவம் கேட்டாலும் பாய்ந்து சத்தமிடுவார். குரங்குகள் உசாராகி மரங்களில் தாவி ஏறிவிடும். முதலைகளின் அட்டகாசங்களை அடக்குவதற்குக் குரங்குத் தலைவன் திட்டமிட்டது.
இரண்டு முதலைகள் குளக்கரைக்கு வந்தன. கரையில் தலையை நீட்டி உரiயாடின. அவற்றின் கண்கள் கரையில் நின்ற நாவல் மரத்தில் குத்திட்டு நிலைத்தன. குரங்குகள் சந்தோசமாகப் பழங்களைப் பறித்து உண்டன. பெண்முதலை யொன்றுக்கு ஆசை பிறந்தது.
“இஞ்சாருங்கப்பா நாவல் பழங்கள் நல்ல ருசியாமே? உடல் உறுதிக்கு ஏற்றதாம். நமது குரங்குத் தலைவரிடம் கூறிக் கொஞ்சம் நாவல் பழம் சாப்பிடுவோமா? கேட்டுப் பாருங்க” முதலையொன்று தனது கணவனிடம் கூறியது. குரங்குக் கூட்டம் கும்மாளம் கொட்டிப் பாய்ந்து விளையாடின. முதலைகளைக் கண்டதும் எச்சரிக்கைச் சத்தமிட்டன. அதனை ஒருவாறு ஆண்முதலை உணர்ந்து கொண்டது.
“குரங்குகளுக்கு நல்ல மூளை வளர்ச்சியுண்டு. நாங்க உண்மையில் நாவற்பழந்தான் கேட்டாலும் அவை தரப்போவதில்லை. அவற்றை ஏமாற்றிப் பிடித்து விழுங்கி விடுவோம் என்ற பயமிருக்கு. இப்படி ஒரு கதையிருக்கு. அது உனக்குத் தெரியாதா”? ஆண்முதலை கேட்டது. “அது என்ன புதினமான கதை. எனக்குத் தெரியாதே”. ஆச்சரியத்துடன் பெண்முதலை கேட்டது.
“ ஓரு குரங்கும் முதலையும் நண்பர்களாக இருந்தன. குரங்கின் வசிப்பிடத்தில் நாவல் மரம் இல்லை. மறுகரையில் நாவல் மரம் இருந்தது. குரங்கை முதலை தன் முதுகில் ஏற்றும். குளத்தின் மறுகரைக்குக் கொண்டு போய் விடும். குரங்கு நாவற்பழத்தைப் பறித்து முதலைக்குக் கொடுக்கும். முதலை தன் மனைவிக்கும் கொடுக்கும். நல்ல ருசி என்று முதலை உண்ணும். குரங்கு நாவற்பழத்தை உண்டு கொழுத்திருந்தது. “அந்தக் குரங்கின் ஈரல் நல்ல ருசியாக இருக்கும். அதைப்பிடித்துத் தா” என்று பெண் முதலை கேட்டதாம். ஆண்முதலை உடன்பட்டதாம். குரங்கை ஏமாற்றி தனது முதுகில் ஏற்றிக் கொண்டது. வழியில் உண்மையை முதலை கூறியது.
“ஆஹா! இதையேன் முதலில் கூறவில்லை. எனது ஈரலை நாவல் மரத்தில் விட்டுவந்து விட்டேனே. என்னைத் திருப்பிக் கொண்டுபோ. ஈரலை எடுத்து வருகிறேன். உன் மனைவிக்குக் கொடுக்கலாம்.” என்று கூறியது. முதலையும் நம்பியது. கரையில் கொண்டுபோய் விட்டது. குரங்கு “தப்பினேன். பிழைத்தேன்”. என்றதாம். இதுதான் அந்தக் கதை. அன்றிலிருந்து முதலையென்றால் குரங்குகளுக்குப் பயம்.” ஆண்முதலை கூறியது. உரையாடியவாறே முதலைகள் கரையில் கிடந்தன. கொக்குநிரை அவ்வழியால் வந்திறங்கின. “நண்பர்கள் வந்து விட்டார்கள். கண்களை முடியிருப்போம். அப்போதுதான் அவை நமது அழுக்கைச் சுத்தப்படுத்துவார்கள்.” கண்களை மூடிக்கிடந்தன. கொக்குகள் முதலையின் உடலில் உள்ள அழுக்குகளை உண்டன. பற்களைச் சுத்தம் செய்தன. அந்தச் சுகத்தில் முதலைகள் உறங்கிவிட்டன.
முதலைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது வாய்கள் திறந்திருக்கும். முதலைகளைக் கண்ட குரங்குகள் மெதுவாக இறங்கி வந்தன. குரங்குகள் கூடிக் கதைத்தன. அளவான குச்சிகளைப் பொறுக்கி வந்தன. குச்சிகள் வைரமானவை. இலகுவில் முறியாதன. துணிச்சல் உள்ள குரங்கு இறங்கி வந்தது. முதலையின் பக்கத்தில் சென்றது. முன்னால் எச்சரிக்கையுடன் இருந்தது. மிக அவதானமாகப் பார்த்தது. முதலைகள் அசையாது கிடந்தன.
குரங்கு கைகளைப் பின்னால் நீட்டியது. பின்னால் இருந்த குரங்கு குச்சியைத் திணித்தது. முன்னால் இருந்த குரங்கு குச்சிகளைப் பற்றியது. மெதுவாகக் குச்சியினை முதலையின் தாடைகளுக்கு இடையில் செருகியது. அப்படி இரண்டு குச்சிகள் முதலையின் வாயினுள் ஏறின. ஒருவாறு இரண்டு முதலைகளின் வாய்களிலும் குச்சிகள் ஏறின. வந்தது போலவே குரங்குகள் மரத்தில் தாவி ஏறின.
குரங்குகள் குதூகலித்தன. மான்கூட்டங்கள் குளக்கரைக்கு வந்தன. முதலைகளைக் கண்டதும் பின்னிழுத்தன. குரங்குகள் கூச்சலிட்டன. குச்சிகளை வைத்த குரங்கு மரத்தை விட்டு இறங்கி வந்தது. மான்கள் அதனைக் கவனித்தன. குரங்கு முதலையின் வாயினுள் கையை விட்டுக் காட்டியது. மான்கள் குளத்தில் இறங்கி நீரை அருந்தின. முடிந்ததும் முதலைகளைச் சுற்றி நின்றன. நீரருந்த வந்த மிருகங்களும் நின்றன. பறவைகள் கூடிநின்று புதினம் பார்த்தன. முதலைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன. ஒரு குரங்குக்குச் சந்தோசம். கொப்புகளில் சத்தமிட்டுப் பாய்ந்தது. மரத்தின் கிளை பெரிய சத்தத்துடன் முறிந்தது.
அச் சத்தத்தில் முதலைகள் விழித்துக் கொண்டன. பக்கத்தில் நின்ற பறவைகளும், மிருகங்களும் சற்று விலகின. குரங்குகள் இறங்கி வந்து பார்த்தன. முதலைகளுக்கு வாயை மூடமுடியவில்லை. கதைக்கவும் முடியாதிருந்தது. வாலை முறுக்கி உன்னின. குளத்தினுள் இறங்கி மறைந்தன. பறவைகளும் மிருகங்களும் பார்த்துக் கொண்டிருந்தன. சற்று நேரத்தால் முதலைகள் கரைக்கு வந்தன. அவற்றின் வாயை மூடமுடியவில்லை. பார்ப்பதற்குக் கஸ்டமாக இருந்தது. செய்தியறிந்து யானைகள் வந்து சேர்ந்தன. சமரசம் பேசின.
மிருகங்களும் பறவைகளும் கலந்துரையாடின. ஒரு முடிவுக்கு வந்தன. குரங்குகள் பேசிக்கொண்டன. யானை ஒன்று முன்னால் வந்தது. முதலைகளைப் பார்த்தது. “இந்தக் குளத்தில் இருக்கும் தண்ணீர் எல்லா உயிரினங்களுக்கும் உரியது. நீங்கள் அவற்றை வேட்டையாடுவது என்ன ஞாயம்? தாகத்தோடு வரும் அந்த உயிர்களை நீங்கள் வதைப்பது குற்றம். அதனால் உங்களுக்கு இந்தத் தண்டனை. இதிலிருந்து விடுபட உடன்படிக்கைக்கு வரவேண்டும். தொடர்ந்தும் நீங்கள் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது. அப்படி அச்சுறுத்தலாக இருந்தால் இச்செயற்பாடு தொடரும். சம்மதமா”? யானை கேட்டது. உங்கள் வாயுனுள் குச்சிகள் இருந்தால் உங்களால் உண்ணமுடியாது. உங்களுக்கு நிம்மதி கிடையாது. என்ன சொல்கிறீர்கள்.? யானை மீண்டும் கேட்டது. முதலைகள் பரிதாபத்துடன் பேசாதிருந்தன.
முதலைகள் நழுவித் தண்ணீருள் மூழ்கின. சற்று நேரத்ததால் வெளிவந்தன. பலமுதலைகளின் தலைகள் தெரிந்தன.. “குச்சிகள் வாயினுள் இருந்தால் எப்படிப் பேசமுடியும். அவற்றால் பேசமுடியாது.” ஓரு முதலை குளத்தினுள் இருந்து பேசியது “மௌனம் சமாதானத்துக்குச் சம்மதம். சரி அவற்றை எடுத்து விடுங்கள்”. யானை கேட்டுக் கொண்டது. “நாம் எச்சரிக்கையாக இருந்தால் சமாதானமாக உயிர் வாழலாம். எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”. குரங்குத் தலைவன் கூறியது. குரங்குகளைப் பார்த்துக் கனைத்தது. குரங்கு ஒன்று காட்டுக் கொடிகளோடு வந்தது. குரங்குத் தலைவனிடம் கொடுத்தது. குரங்குத் தலைவன் முதலையின் பக்கத்தில் வந்தது. முதலைகள் பரிதாபத்தோடு பார்த்தன. குரங்குத் தலைவன் கொடியை எடுத்தது. முதலையின் கடைவாயினுள் கொடியைத் திணித்தது. அக்கொடியின் மற்றநுனி மறுபக்கத்துக் கடைவாயிலால் தெரிந்தது. குரங்கொன்று அதனைப் பிடித்துக் கொண்டது.
அதேபோல் மற்ற முதலைக்கும் செய்தது. கொடிகளின் தலைப்புக்களை நான்கு குரங்குகளைப் பிடிக்கச் செய்தது. நாம் யாராவது குச்சிகளை எடுக்கக் கைகளைப் பாவித்தால் முதலை கைகளைப் பிடித்துக் கொள்ளும். அங்கு நமக்கு வில்லங்கனம் காத்திருக்கும். அதனால் நமது விவேகத்தைப் பயன்படுத்தவேண்டும். வீரம் மட்டும் போதாது. விளக்கம் கொடுத்தது. “நான்கு குரங்குகளும் ஒரே நேரத்தில் முன்பக்கமாக இழுக்க வேண்டும்.” அறிவுறுத்தலைக் குரங்குத் தலைவர் வழங்கினார். யானை பிளிறியது. குரங்குகள் கொடிகளை இழுத்தன. குச்சிகள் சரிந்து வெளியில் வந்தன. முதலைகளுக்கு விடுதலை கிடைத்தது. முதலைகள் நன்றியைத் தெரிவித்தன. தண்ணீரில் மூழ்கியெழுந்தன. பறவைகளும் மிருகங்களும் சந்தோசப்பட்டன. இப்பொழுது அந்தக் குளத்தில் எல்லா உயிரினங்களும் தண்ணீரைத் தாராளமாகக் குடித்து வருகின்றன. முதலைகளின் தொல்லைகள் இல்லை. அவை உயிரினங்கள் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து மகிழ்கின்றன.

குரங்கும் தூக்கணாங் குருவியும்.
பரந்த வயற்பரப்பின் நடுவே பழையதொரு வீடு தெரிந்தது. சுற்றிவரப் பனை மரங்கள் சோலையாக நின்றன. வேலியெங்கும் பனைமரங்கள். காற்று வீசிக் கலகலத்துக் கொண்டிருந்தது. வயல்வெளி பசுமையைப் போர்த்திக் கொண்டிருந்தது. உழைப்பாளிகள் பகல் முழுவதும் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். இரவானதும் வீகளுக்குப் போய்விடுவார்கள்.
அந்த வீட்டில் சுப்பையா வாழ்ந்தார். அவருக்குத் துணையாக இராமன் இருந்தான். இராமன் சிறு வயதுமுதல் சுப்பையா வோடுதான் இருக்கிறான். அவனது தாய் அவனை அனாதையாகத் தவிக்க விட்டுப் போய்விட்டாள். சுப்பையா இராமனுக்குப் பாலூட்டி வளர்த்து விட்டார். இராமன் சுப்பையாவுக்கு உதவியாக இருப்பான். சுப்பையாவின் வயலில் குருவிகள் தொல்லை அதிகம். இராமன்தான் குருவிகளை விரட்டுவான்.
அவனது கையில் சுண்டுவில் இருக்கும். இராமனுக்குச் சின்னக் கால்சட்டை தைத்துக் கொடுத்திருந்தார். கால்சட்டையில் ‘பொக்கற்; இருக்கும். அதற்குள் சிறுகற்களை இராமன் வைத்திருப்பான். குருவிகளை விரட்டுவதற்குச் சுண்டுவில்லைப் பயன்படுத்துவான். சுண்டுவில்லில் கற்களை வைத்து அடிப்பான். குருவிகள் பாட்டமாக எழுந்து பறக்கும். இராமனுக்குத் துணை சீசர்தான். இராமன் சீசரோடு வயலைச் சுற்றி வருவான். சில சமயங்களில் சீசர் இராமனின் குதிரையாகும். சீசரில் ஏறிச் சவாரி செய்வான். குருவிகள் வயலில் தொல்லை கொடுக்கும் நேரத்தை இராமன் அறிந்திருந்தான். அந்த நேரத்தில் சீசரோடு சென்று பதுங்கியிருப்பான். குருவிகள் பாட்டமாக வந்து இறங்கும். அப்போது கற்களை வீசி விரட்டுவான். குருவிகள் இறங்காமலேயே பறந்து விடும். சுப்பையாவுக்குப் பெருமையாக இருந்தது. இராமனையும் சீசரையும் தடவிக் கொடுப்பார்.
ஒருநாள் சுப்பையா தனது வயற்பரப்பைச் சுற்றி வந்தார். அவர் முன்னால் இராமன் சென்றான். பின்னால் சீசரும் சென்றது. தற்செயலாகத் தனது குடியிருப்பையும் பார்த்தார். பனைமரங்கள் காற்றில் ஆடியசைந்தன. பனைகளில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள் தென்பட்டன. அவருக்கு ஆத்திரம் வந்தது. “எனது பனை மரங்களில் கூடுகளைக் கட்டியிருக்கிறீர்கள். எனது வயலை அழிக்கிறீர்கள். செய்து காட்டுறன் வேலை”. தனக்குள்ளேயே பேசிக் கொண்டார்.வயல்வரம்புகளில் நடந்தார். பின்னால் சீசர் நடந்தது. முன்னாலும், பின்னாலுமாக இராமன் ஓடியோடித் திரிந்தான். “டேய் இராமா! அங்கே பனைகளைப் பார். எங்கும் தூக்கணாங்குருவிக் கூடுகள். அவைதான் நமது நெற்பயிரை நாசம் செய்கின்றன. அவற்றைக் கலைக்க வேணும்;”. சத்தமாகச் சொன்னார். இராமனுக்குச் சங்கடமாக இருந்தது. இராமனுக்கு அன்று இரவு நித்திரையே இல்லை. ஒரே யோசனை.
அதிகாலை இராமன் விழித்துக் கொண்டான். சீசரையும் அழைத்துக் கொண்டு சென்றான். பனைமரங்களைப் பார்த்தான். பனையோலைகளில் கூடுகள் தொங்கின. “ சீசர்.. அந்தக் கூடுகளைப் பார். எவ்வளவு கஸ்டப்பட்டுக் குருவிகள் கட்டியிருக்கு. அங்கே பார்.. அந்தக் குருவிகள் நமக்கு முதல் எழுந்து பறக்கின்றன. சந்தோசமாக வானில் பாடிப் பறந்து வட்டமடிக்கின்றன. அவற்றின் சந்தோசத்தைக் கெடுக்கலாமா? அந்தப் பாவம் நம்மைச் சும்மா விடுமா”? கவலையோடு கூறியது.
“பாவம் பார்க்க முடியாது. நமக்குச் சோறு போடும் ஐயாவுக்கு விசுவாசமாக இருக்க வேணும். நீ மரத்தில ஏறிக் கூடுகளைப் பிய்த்து எறி”. சீசர் கூறிவிட்டுக் குந்தியிருந்தது. “சீசர் நான் சொல்வதைக் கேள். இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள். எதுக்கெடுத்தாலும் குத்திக் காட்டுகிறார்கள்.” கவலையோடு கூறியது. “எப்படி எப்படி”? சீசர் குறுக்கிட்டது. “எதுக்கெடுத்தாலும் ‘குரங்குப் புத்தி’ என்று சொல்லித் திரிகிறார்கள்”;. வெறுப்போடு சொன்னது.
“ஏன் அப்படிச் சொல்கிறார்கள்.” சீசர் வினாவியது. “ஒருமுறை தூக்கணாங் குருவிக் கூட்டை எங்கட தாத்தா பிய்த்தெறிந்தவராம். அதனால் அப்படிச் சொல்கிறார்கள்”. இராமன் எங்கோயோ பார்த்த வண்ணம் கூறியது. “இது என்ன கதை. எப்ப நடந்தது.”? சீசர் ஆவலோடு கேட்டது. “எனக்குந் தெரியாது. இது எப்பவோ நடந்திருக்கலாம். ஒருநாள் பலத்த மழை பெய்ததாம். எங்கட தாத்தா மழையில் நனைந்து மரத்துக்குக் கீழே நடுங்கியபடி நின்றாராம். மேலே தூக்கணாங்குருவிக் கூடு இருந்ததாம். கூட்டுக்குள் இருந்து தூக்கணாங்குருவி புத்தி சொன்னதாம்.” “என்னென்று”?“நான் கஸ்டப்பட்டுக் கூடுகட்டி மழையில் நனையாமல் வாழுகிறேன். நீயும் ஒரு வீட்டைக்கட்டி மழையில் நனையாது வாழலாமே. இப்படி நனையலாமா? என்றதாம்.”“பிறகு”? சீசர் ஆவலுடன் கேட்டது.“தாத்தாவுக்குக் கோபம் வந்திற்றாம். எனக்குப் புத்தி சொல்ல வந்திற்றாயா? உன்னை என்ன செய்கிறேன் பாரென்றாராம். அப்படியே மரத்தில் ஏறினாராம். கூட்டைப் பிய்த்து எறிந்தாராம்”. இராமன் சொல்லும்போது கண்கள் கலங்கின. “அந்தக் கதை இப்ப நடந்த மாதிரித் தெரியுது. ஆனால் அந்த வடுமட்டும் எனது மனதை உறுத்துது.” இராமன் கவலையுடன் சொன்னது.
“சீசர்! உன்னை நினைத்தாலும் கவலைதான் வருது.” இராமன் தொடர்ந்தது. “என்னை நினைத்தா? ஏன்”? சீசர் கேட்டது. “உனக்கும் அப்படித்தான் சொல்கிறார்கள்”. இராமன் குத்திக் காட்டியது. “எப்படிச் சொல்கிறார்கள்.” சீசர் அதனை அறியும் ஆவலில் நின்றது. “எதுக்கெடுத்தாலும் ‘நாய்ப்புத்தி’ என்று கிண்டல் செய்கிறார்கள்”. இராமன் தொடர்ந்தது.“என்னது? நாய்ப்புத்தியா? நாய்ப்புத்தி நன்றியுள்ளது. அதுதான் அதற்குப் பொருள்.” சீசர் பெருமையுடன் சொன்னது. இராமன் சிரித்தது. “ஏய் ஏன் சிரிக்கிறாய்.” சீசர் தொடர்ந்தது. “நாப்பதுக்கு மேல் நாய்ப்புத்தியாம். எதுக்கெடுத்தாலும்
வள்ளென்று பாய்ந்து விழுவதற்குச் சொல்வார்கள்”. இராமன் சொன்னது. சீசரின் முகம் சுருங்கியது. “சரி அதைவிடு. நமது விசயத்துக்கு வருவோம். சீசர் இதற்கு ஏதாவது செய்யவேண்டும். நான் மரத்தில் ஏறி தூக்கணாங்குருவிகளோடு பேச்சு வார்த்தை நடத்தப்போறன். நீ மத்தியஸ்த்தம் செய்”. கூறிக்கொண்டு இராமன் மரத்தில் ஏறியது. பனையில் கூடுகள் தொங்கின. பனையில் பழங்களும் குலைகட்டி இருந்தன. கூடுகளுக்குள் குஞ்சுகள் கொஞ்சும் சத்தம் கேட்டது. குரங்கைக் கண்ட தூக்கணாங் குருவிகள் அல்லோல கல்லோலப் பட்டன.
இராமன் குருவிகளுக்குச் சைகை செய்தது. அவை அமைதிகாத்தன. எல்லாக் குருவிகளும் வந்தன. இராமன் கீழே உள்ள சிறிய வடலியைக் காட்டியது. பின் கீழிறங்கி வந்தது. குருவிகள் வடலியில் ஒன்று திரண்டன.
சீசர் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது. இராமன் குருவிகளைப் பார்த்தது. “நண்பர்களே! நாங்கள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் அனைவரும் இங்குள்ள மரங்களில் கூடுகட்டி வாழுகிறீர்கள். எங்களுக்கும் சந்தோசம். உங்கள் கூடுகளில் முட்டையும் குஞ்சுகளும் உள்ளன. உங்கள் சந்தோசம்தான் எங்கள் சந்தோசம். இந்தச் சந்தோசம் நீடிக்க வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்புத் தேவை.” இராமன் கூறிவிட்டு அமைதி காத்தது.குருவிகள் குசுகுசுத்தன. “எப்படிப்பட்ட ஒத்துழைப்புத் தேவை”? ஒரு குருவி கேட்டது. “நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும். அதனைக் கடைப்பிடித்து வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால் நாம் சந்தோசமாக வாழலாம்”;. இராமன் கூறியது. “இராமன்! சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்”. சீசர் குறுக்கிட்டது.
“நீங்களும் நாங்களும் இந்தச் சூழலில் வாழ்கிறோம். அதனால் இந்தச் சூழல் நமக்கு உரியது. ஆனால் இந்தச் சூழலைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமை. நாம் ஆளுக்காள் பக்கத் துணையாக இருக்க வேண்டும். நமது உழைப்பை நாம் அழிக்கக் கூடாது. எல்லோரும் சேர்ந்திருந்து வாழ்வோம். நமது எல்லைக்குள் உள்ள வயற்பரப்புக்களில் உள்ள நெற்பயிரைப் பாதுகாக்க வேண்டும். வேறு பறவைகளை உள்நுழையவிடாது பாதுகாக்க வேண்டும். நாங்கள் அதற்குள் புகுந்து அழிக்கக் கூடாது. அறுவடைகாலத்தில் சிந்துகின்ற தானியங்கள் ஏராளம். அவற்றைப் பாது காத்து உணவாகக் கொள்வோம். அப்படி வாழ்வதாயின் நாம் ஒற்றுமையாக வாழலாம். நமது கூடுகளுக்கு எந்தவித அழிவுகளும் வராது பாதுகாக்கலாம்”. கூறிவிட்டு இராமன் குருவிகளைப் பார்த்தது.
குருவிகள் தமக்குள் பேசிக்கொண்டன. “ இது நல்ல ஆலோசனை. அறுவடை நேரத்தில் சிந்துகின்ற நெல்மணிகள் ஏராளம். அவை வீணாக நிலத்தில் விழுந்து விரையமாகின்றன. அவற்றைச் சேகரித்து உண்பதால் நமக்குப் பஞ்சமிருக்காது. எந்தக் காலமும் வயிராற உண்ணலாம். நமது எல்லைக்குள் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்”. பெரிய தூக்கணாங்குருவி கூறியது. “இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறீர்களா? சீசர் சத்தமிட்டது. தூக்கணாங்குருவிகள் சந்தோசத்தில் ஆரவாரித்தன.
“சரி உங்கள் உடன்படிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் கடமைகளைச் செய்கிறோம். எல்லோரும் சந்தோசமாக வாழ்வோம். ஆராவாரித்துப் பறவைகள் பறந்தன. நடந்தவற்றை சுப்பையா பார்த்துக் கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டார். அவருக்குச் சந்தோசம். அன்றிலிருந்து நெற்பயிர்களைக் குருவிகள் அழிக்கவில்லை. அவை ஆனந்தமாகக் கூடுகளில் வாழ்கின்றன. சுப்பையாவின் அனுமதியோடு தானியங்களை இராமன் குருவிகளுக்குக் கொடுக்கிறான். சீசரில் சவாரி செய்கிறான்.

Read more...

Wednesday, April 20, 2011

சிறுவர் கதைகள்

சிறுவர் கதைகள்
‘கோணேசர் உலா’
திருகோணமலை அழகிய நகரம். அந்நகரைச் சுற்றி மலைத்தொடர்கள் அரணாக அமைந்துள்ளன. கடல் சூழ்ந்துள்ளது. மலையடிவாரம் அழகானது. அங்குதான் கோணேசர் குடிகொண்ட கோயில் உள்ளது. அதனை ‘திருக்கோணேஸ்வரம்’ என்றழைப்பார்கள். அத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றதாகும். அந்த திருக்கோயிலை அண்டி கணபதிப்பிள்ளையின் குடிசை இருந்தது. அவர் கோணேசரின் பக்தன். எந்த வேலையைத் தொடங்கும்போதும் ‘கோணேசா’ என்றுதான் தொடங்குவார்.
அவரது மனைவி செல்லம்மா. பெயருக்கேற்ற குணமுடையவள். அவர்கள் ஏழைகள். ஆனால் கோணேசரின் அருளினால் மனதால் மகிழ்ந்திருந்தனர். அவர்கள் உள்ளத்தால் செல்வந்தர்கள்.
வறுமையில் இன்பத்தைக் கண்டார்கள். கோயிலுக்கு அப்பால் உள்ள சிறிய காடு தேனீக்களின் குடியிருப்பு. தேன்வதைகள் தொங்கும். பழமரங்கள் பழங்களைக் கொடுத்தன. அவர்களுக்கென்று சிறிய நிலம் இருந்தது. அதில் தங்களுக்குத் தேவையான விளைபொருட்களைப் பெற்றார்கள். தங்களிடம் இருக்கும் பொருட்களை மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள். மற்றவர்களின் பொருட்களில் பொறாமை கொள்ள மாட்டார்கள். யாரும் பசியென்று வந்தால் புசியென்று கொடுப்பார்கள். யாருக்கும் இல்லை யென்று சொல்லாது வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு அப்பால் திருகோணமலை நகரம் இருந்தது. அந்நகரம் அழகானது. காரோடும் வீதிகளும் மாடமாளிகைகளும் அழகூட்டின. ஆனால் மக்கள் ஆளுக்காள் பொறாமை கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களிடம் மனதில் அன்பில்லை. ஆடம்பரம் இருந்தது. பகட்டு இருந்தது. போலியாக வாழ்ந்தார்கள்.
கோணேசர் சிவராத்தரி தினத்தைத் தொடர்ந்து நகர்வலம் வருவார். இம்முறையும் வருவதற்கான ஆயத்தங்கள் நடந்தன. ஐந்து நாட்கள் நகர்வலம் வருவதாக அறிவித்தார்கள். வீதிகள் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டன. புதுமணல் பரப்பிக் கோலமிட்டார்கள். வீட்டு வாசல்களில் மலர்களால் சோடித்தார்கள். மின்விளக்குகளால் அலங்கரித்தார்கள். ஒவ்வொருவரும் தமது இருப்பிடங்களை மற்றவ்களைவிடவும் அழகாக இருக்கவேண்டும் என்று செயற்பட்டார்கள். சொர்க்கபுரியாக நகரம் பிரகாசித்தது. மக்கள் மனங்களில் ‘கோணேசர் உலா’ நிறைந்திருந்தது. அவர்களது சிந்தனை எல்லாம் கோணேசர் விழாச் சிறப்பில் ஆழ்ந்திருந்தது. அதற்கான ஆயத்தங்களில் இறங்கிக் களைத்திருந்தார்கள்.
ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. கோயிலில் கோணேசரை அலங்கரித்த தேரில் வைத்தார்கள். பட்டுச் சாற்றினார்கள். மலர் மாலைகளால் அலங்கரித்தார்கள். எல்லோரும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அதேவேளை அன்றைய தினம் மங்கிய மாலைப் பொழுதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிச்சைக்காரர்கள் வீதி வீதியாகத் திரிந்தார்கள். அவர்கள் பசியால் வாடியிருந்தார்கள். குளித்துப் பலநாட்களாகியிருந்தன. அழுக்கடைந்த கந்தலைக் கட்டியிருந்தார்கள். “அம்மா பசிக்குது. ஐயா! இந்த ஏழைகளின் பசியைப் போக்குங்க. படுத்துறங்க ஒரு இடம் தாங்க. நாங்க வெளியூர்காரங்க. இரக்கம் காட்டுங்க.” என்று கேட்ட வண்ணம் திரிந்தார்கள். அவர்களை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
ஊர்மக்கள் உள்ளமெல்லாம் கோணேசர் மட்டுமே நிறைந்திருந்தார். கோணேசர் ஊ}ர்வலம் வரும்போது பிரசாதம் வழங்குவார்கள். கோணேசர் வீடுகளுக்கு முன்னால் வந்ததும் பூசை நடக்கும். தேங்காய் உடைப்பார்கள். பிரசாதம் வழங்குவார்கள். மக்கள் முண்டியடித்துப் பிரசாதத்தைப் பெறுவார்கள். இந்த ஏழைகளுக்கு ஒன்றும் கிடைப்பதாக இல்லை.
பிச்சைக்காரர்களைக் கவனிக்க யாருமே இல்லை. நடந்த களைப்பால் பிச்சைக்காரர்கள் வாடிவிழுந்தார்கள். பசி அவர்களை வாட்டியது. யாரும் அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை. வீதிகள் எங்கும் அலைந்து பார்த்தார்கள். அவர்களை அப்பால் போகுமாறு விரட்டினார்கள். “ஏய் எங்க போறிங்க. அங்கால ஒதுக்குப் புறமாகப் போங்க.” காவல் துறையினரும் அச்சுறுதினார்கள். அவர்கள் தட்டுத் தடுமாறி நடந்தார்கள். களைப்படைந்து திக்குத் தரியாமல் நடந்தார்கள். கோணேசர் கோயிலருகில் உள்ள குடிசையை அடைந்து விட்டார்கள். அது கணபதிப்பிள்ளையின் குடிசை. கணபதிப்பிள்ளையின் குடிசையின் முன்னால் நின்றார்கள். “அம்மா பசிக்குது. ஐயா! இந்த ஏழைகளின் பசியைப் போக்குங்க. படுத்துறங்க ஒரு இடமாவது தாங்க”என்று கேட்ட வண்ணம் நின்றார்கள்.
சத்தம் கேட்டுச் செல்லம்மா எட்டிப் பார்த்தார். கணபதிப்பிள்ளையும் வெளியே வந்தார். இரண்டு ஏழைகள் குடிசைமுன் நிற்பதைக் கண்டார்கள். அவர்களது மனங்கள் இரக்கத்தில் மூழ்கின. “உள்ளே வாருங்கள்.” உள்ளே அழைத்தார்கள். கணபதிப்பிள்ளை “செல்லம்மா தண்ணீரைக் கொடு. உடலைக் கழுவட்டும்”. என்றார். செல்லம்மா பக்கத்தில் உள்ள கிணற்றடிக்கு அழைத்துச் சென்றாள். தண்ணீரை அள்ளிக் கொடுத்தாள். “கழுவுங்கள்” என்றாள். தான் கட்டுவதற்காக வைத்திருந்த சேலையைக் கொடுத்தாள். அந்தப் பெண் உடையை மாற்றிக் கொண்டாள். செல்லம்மாவுக்கு மாற்றிக் கட்ட வேறு சேலையில்லை. கணபதிப்பிள்ளையும் அப்படியே. தனது வேட்டியை அந்தப் பிச்சைக் காரருக்குக் கொடுத்தார். தங்களுக்கு மட்டும் போதுமான உணவுதான் இருந்தது. அதனைத் தயார் செய்தாள். அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார்கள். கோணேசருக்குப் படைப்பதற்காகப் பழங்கள் வைத்திருந்தாள். கொஞ்சம் பிரசாதமும் இருந்தது. அந்தப் பிரசாதத்தையும் பழங்களையும் கொடுத்தாள். அவர்கள் உண்டார்கள்.
‘படமாடக் கோயில் பரமர்க்கு ஒன்று ஈந்தால்நடமாடக் கோயில் நம்மவர்க்கு அதுஆகா.நடமாடக் கோயில் நம்மவர்க்கு ஒன்று ஈந்தால்படமாடக் கோயில் பரமர்க்கு அதுஆகும்’
என்பதைக் கணபதிப்பிள்ளை அறிந்திருந்தார்.
விருந்தாளிகள் உணவருந்தியதும் அவர்களுக்கு உரிய படுக்கையைத் துப்பரவு செய்தாள். தங்களிடம் இருந்த போர்வையை எடுத்து விரித்தாள். அவர்களை உறங்குமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டாள்.
மிகுதியாகக் கொஞ்சம் உணவு இருந்தது. அதனை இருவரும் பகிர்ந்து உண்டார்கள். தாங்கள் குடிசையின் வெளியே தாழ்வாரத்தில் தரையில் உறங்கினார்கள். விடிந்ததும் விருந்தாளிகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார்கள். அவர்கள் புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்பி வைக்கப் படலைவரை வந்தார்கள். “நீங்கள் உங்களுக்கு இல்லாதபோதும் எங்களைக் கவனித்தீர்கள். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. நீங்கள் எவற்றை விரும்புகிறீர்களோ அவை உங்களுடமை ஆகும்.” என்று சொல்லிச் சென்றார்கள். ஏழைகளுக்கு இரங்கி உதவிய செயல் அவர்களது உள்ளங்களை நிரப்பியது.
செல்லம்மா குடிசைக்கு வந்தாள். சமைப்பதற்குத் தானியம் இல்லை. அரிசி வேண்டுமே என்ன செய்வது? யோசித்தாள். பானையைப் பார்த்தாள் பானை நிறைந்து அரிசி இருந்தது. “இங்க பாருங்கள்”என்று கணபதிப்பிள்ளையை அழைத்தாள். அவர் வந்தார். நடந்த அதிசயத்தைக் காட்டினாள். அவருக்கு அதிசயம். வீட்டைப் பார்த்தார். அழகிய வீடாக மாறியது. அவர்களுக்குத் தேவையான அத்தனையும் சேர்ந்தன.
“செல்லம்மா இவையெல்லாம் கோணேசப் பெருமான் அருளியவை.. இவை நமகுக்குப் போதும். வேண்டியவற்றை மட்டும் கேட்போம். ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’. இறiவா எப்போதும் இப்படியே இருக்க வரந்தா. அவன் நமக்குத் தருவது போதும். இறைவன் சித்தம் நமது பேரின்பம். ஏழைகளுக்கு உதவுவோம். எப்போதும் இந்த மனத்தோடு இருப்போம்”. கணபதிப்பிள்ளை அறிவுரை கூறினார். சந்தோசத்தோடு இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.
நாட்கள் விரைந்தோடின. வருடங்கள் புரண்டோடின. கணபதிப்பிள்ளையும் செல்லம்மாவும் முதியவர்கள் ஆனார்கள். “செல்லம்மா இந்த வாழ்க்கை போதும். இனியும் நமது முதுமையைப் பொறுக்க முடியாது. இருவரும் ஒன்றாக இறைவனை அடைய வழிதேடுவோம். இறைவனை வேண்டிப் பிரார்த்திப்போம்.” சேர்ந்து பிரார்த்தித்தார்கள். மாளிகை மண்வீடானது. கோணேசர் கோயிலின் முற்றத்தில் புதிதாய் இரண்டு வில்வமரங்கள் தோன்றின. கோயிலுக்கு வருவோர் அம்மரங்களின் நிழலில் இருப்பார்கள்.
“செல்லம்மா ……”“சொல்லுங்கள்…….” என்ற ஒலி அவர்கள் காதுகளில் ஒலிக்கும். களைத்து வருவோர்க்கு நிழலைக் கொடுத்த வண்ணம் அம்மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.

“சின்னப் பெண்ணே!
முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரிகள் வாழ்ந்தார்கள். ஒரு பாத்தியில் இரண்டு அவரைக் கொடிகள் போல் வளர்ந்தார்கள். இளையவள் சுந்தரி மிக நல்லவள். மற்றவள் சிங்காரி தீயகுணங்களை உடையவள். அவர்களது தந்தைக்கு வேலையில்லை. அதனால் சகோதரிகள் உழைப்பதற்குப் புறப்பட்டார்கள்.இளையவள் சுந்தரி “நான் முதலில் செல்கிறேன். என்னால் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன். பின்னர் மூத்தவள் சிங்காரி போகட்டும்.” என்றாள். தனது உடமைகளை மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டாள். வேலைக்காக நகர்புறங்களில் அலைந்தாள். யாருமே அவளைக் கணக்கெடுக்க வில்லை. நெடுந்தூரம் நடக்கலானாள். ஒரு சூளையை அண்மித்து நடந்தாள். அச்சூளையில் ரொட்டித்துண்டுகள் வெந்து கொண்டிருந்தன. அவளைக் கண்டதும் ரொட்டித் துண்டுகள் ஒருமித்துச் சத்தமிட்டன.
“ ஏய்! சின்னப் பெண்ணே! சின்னப் பெண்ணே! கொஞ்சம் நில்லு. சின்ன ரொட்டித் துண்டுகளை எட்டிப்பாரு இன்னும் நாங்கள் வெந்தோமானால் எரிந்து கரியாகி விடுவோம் ஏழுவருசம் தொடர்ந்து நாங்கள் இப்படித்தான் இந்தச் சூளை தன்னில் வெந்து நொந்து வேகுறோமே இறக்கிவிட யாரும் இல்லை எங்களை நீ இறக்கிவிடு. என்றும் நன்றி”சின்னப்பெண்ணின் இரக்க குணம் அவளை நிற்கவைத்தது. தனது உடமைகளைக் கீழே வைத்தாள். சூளையில் வெந்த ரொட்டிகளை இறக்கினாள். “உங்களுக்கு இப்போது வசதியாக இருக்கும்”. கூறி இறக்கிவிட்டுத் தனது உடைமைகளை எடுத்தாள். நடந்து சென்றாள்.
தூரத்தில் ஒரு பசு நன்றது. “ ஏய்! சின்னப் பெண்ணே! சின்னப் பெண்ணே! கொஞ்சம் நில்லு. தயவு செய்து எனது பாலைக் கறந்து விடு.ஏழு வருசமாய் காத்திருக்கிறேன் எவரும் இல்லை எனது பாலைக் கறக்க.தயவு செய்து எனது பாலைக் கறந்து விடு” என்று பசு கூறியது.இரக்கம் கொண்ட சின்னப் பெண் தனது உடமைகளைக் கீழே வைத்தாள். பாலைக்கறந்தாள். “உங்களுக்கு இப்போது வசதியாக இருக்கும்”. கூறிவிட்டுத் தனது உடைமைகளை எடுத்தாள். நடந்து சென்றாள்.
சற்றுத் தூரத்தில் கொய்யா மரம் நின்றது. கிளைகள் நிறைந்து பழங்கள் தெரிந்தன. அவை வளைந்து முறியும் நிலையில் இருந்தன. “ ஏய்! சின்னப் பெண்ணே! சின்னப் பெண்ணே! கொஞ்சம் நில்லு. தயவு செய்து எனது கிளைகளைக் குலுக்கி விடு.ஏழு வருசமாய் காத்திருக்கிறேன் எவரும் இல்லை. எனது கிளையைக் குலுக்கிவிட.தயவு செய்து எனது கிளையைக் குலுக்கி விடு” என்று கொய்யாமரம் கூறியது.இரக்கம் கொண்ட சின்னப் பெண் தனது உடமைகளைக் கீழே வைத்தாள். கொய்யா மரத்தின் கிளைகளைக் குலுக்கி விட்டாள். பழங்கள் விழுந்து கிளைகள் நிமிர்ந்தன. மரம் சந்தோசமடாக நின்றது.“உங்களுக்கு இப்போது வசதியாக இருக்கும்”. கூறி இறக்கிவிட்டுத் தனது உடைமைகளை எடுத்தாள். நடந்து சென்றாள்.
ஒரு வீடு தெரிந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரி பேச்சிமுத்து. அவள் இரக்கமில்லாதவள். மந்திர தந்திர வேலைகளில் கெட்டிக்காரி. அவளுக்கு வேலை செய்வதற்கு ஒரு வேலையாள் தேவைப்பட்டது. நல்ல சம்பளம் தருவதாகப் பேசிக் கொண்டாள். சின்னப் பெண் சுந்தரி அவளிடம் சென்றாள். “எனக்கு ஒரு வேலைவேண்டும்.” என்றாள். பேச்சிமுத்து சுந்தரியைப் பார்த்தாள். அவளுக்குப் பிடித்து விட்டது. “வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் செய்யக் கூடாது” என்று மேலே பார்த்தாள்.
“என்னுடைய மரமே! என்னருமை மரமே! எனது சுட்டித்தனமுள்ள வேலைக்காரி வந்திருக்கிறாள். அவள் அடுப்பங்கரையின் புகைபோக்கியைத் தொட்டால் அது விழுந்து தீங்கு ஏற்படும். என்று அவளிடம் சொல்” என்றாள். சுந்தரி அதனைப் புரிந்து கொண்டாள். நல்ல சம்பளம் தருவதாகக் கூறினாள். சுந்தரி ஏற்றுக் கொண்டாள். அவளிடம் வேலைக்கு அமர்ந்து கொண்டாள். வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல் அவளது கடமையாயிற்று. ஆனால் புகைபோக்கியைத் துடைப்பதில்லை. நாட்கள் கழிந்தன. சுந்தரி பம்பரமாகச் சுழன்று வேலைகளை முடித்துவந்தாள். ஆனால் இதுவரை சம்பளம் கொடுபடவில்லை. சுந்தரிக்கு ஏமாற்றமாகப் போனது. அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. பணமில்லாது வீட்டுக்குப் போவதெப்படி? பொறுமையாக இருந்தாள்.
ஒருநாள் பேச்சிமுத்து வீட்டில் இல்லை. அவள் தனது மந்திரக் கோலான தும்புத்டியில் ஏறிச் சவாரி போய்விட்டாள். சுந்தரி புகைபோக்கியை உற்றுப் பார்த்தாள். ஏன் இதனைச் சுத்தப்படுத்தக் கூடாது என்றாள். அதனுள் என்ன இருக்கிறது என்று பார்க்க நினைத்தாள். அதனை நன்றாக உற்றுப் பார்த்துத் தூசு தட்டினாள். அதனுள் இருந்து பொத்தென்று ஒரு பொதி அவள் மடியில் விழுந்தது. அதனை அவிழ்த்துப் பார்த்தாள். அத்தனையும் பணக்கற்றைகள். அவளுக்கு ஆச்சரியம். இவ்வளவையும் வைத்துக் கொண்டு எனக்குச் சம்பளம் தரமறுத்தாள். “நல்லவேளை வீட்டுக்காரி இல்லை. இது நல்ல தருணம்” எனநினைத்தாள். வீட்டுக்குப் போகத்திட்டமிட்டாள். பொதியையும் தூக்கிக் கொண்டு ஓடினாள்.
கொஞ்சத் தூரம் போயிருப்பாள். பேச்சிமுத்து தனது வீட்டுக்குத் திரும்பினாள். சுந்தரியைக் காணவில்லை. அவளுக்குப் புரிந்து விட்டது. தனது மந்திரக்கோலான தும்புத்தடியில் ஏறினாள். தேடிப்புறப்பட்டு விட்டாள். சுந்தரி அவளது வருகையைப் புரிந்து கொண்டாள். தான் உதவி செய்த கொய்யா மரம் நின்றது.
கொய்யா மரமே! கொய்யா மரமே என்னைத் துரத்தும் மாயக்காரி என் பின்னால் வருகிறாள்.என்னைப் பிடித்தால் எலும்பை உடைத்துஅடுப்பில் சூப்பாய் வைப்பாள்.மண்ணுள் என்னை புதைத்து விடுவாள்என்னைக் காத்து மறைத்துக் கொள்ளுஎன்றும் உனக்கு நன்றிசெய்வேன்” கொய்யா மரத்தை வேண்டிக்கொண்டாள்.“உனக்கு உதவும் கடமை எனக்குஉனது உதவி பெருமைக்குரியது.அதனால் அது உலகில் பெரியதுஓடிவந்து கொப்பில் மறை” கொய்யா மரம் அவசரப்படுத்தியது. அவளை இலைகளால் மறைத்துக் கொண்டது.
மாயக்காரி பேச்சிமுத்து தும்புத்தடியில் பறந்து வந்தாள்.
“கொய்யா மரமே கொய்யா மரமேஎன் அன்புக்குரிய கொய்யா மரமேஎனது பணத்தை எடுத்துக் கொண்டசின்னச் சிறுக்கி வந்தாளா சொல்”என்று கேட்டாள். கொய்யா மரம் மறுதலித்தது.
“அன்புத் தாயே! அன்புத் தாயே!ஏழு வருசமாய் இதிலே நிற்கிறேன்எதையும் நான் கண்டதில்லைஎவரையும் நான் பார்த்ததில்லை” கொய்யா மரம் பதில் சொன்னது. பேச்சிமுத்து ஆத்திரத்தில் இருந்தாள். தும்புத்தயில் வேறு பக்கம் பறந்து போனாள். சுந்தரி மெதுவாக கொய்யா மரத்தை விட்டு வெளிவந்தாள். கொய்யா மரத்துக்கு நன்றி சொன்னாள். விரைந்து வீடுநோக்கி நடந்தாள்.
வழியில் பசு தூரத்தில் நிற்பதைக் கண்டாள். அதேநேரம் பேச்சிமுத்து பறந்து வருவதையும் அறிந்தாள். பசுவிடம் ஓடினாள்.
“அன்புப் பசுவே அன்புப் பசுவே!என்னைத் துரத்தும் மாயக்காரி என்னைப் பிடிக்க பின்னால் வருகிறாள்.என்னைப் பிடித்தால் எலும்பை உடைத்துஅடுப்பில் சூப்பாய் வைத்துக் குடிப்பாள்மண்ணுள் என்னை புதைத்து விடுவாள்என்னைக் காத்து மறைத்துக் கொள்ளுஎன்றும் உனக்கு நன்றிசெய்வேன்” என்று சுந்தரி பசுவை வேண்டிக்கொண்டாள்.
“உனக்கு உதவும் கடமை எனக்குஉனது உதவி பெருமைக்குரியது.அதனால் அது உலகில் பெரியதுஓடிவந்து இதற்குள் மறைந்து கொள்” என்று வைக்கோல் போருக்குள் புகுந்து ஒளியுமாறு கூறியது. சுந்தரியும் ஒளிந்து கொண்டாள். பேச்சிமுத்து பசுவிடம் வந்தாள்.
“பாலைப் பொழியும் அன்பின் பசுவே எனது பணத்தை எடுத்துக் கொண்டசின்னச் சிறுக்கி இவ்வழியாக வந்ததைக் கண்டாயா? சொல்”என்று கேட்டாள். பசு பேச்சிமுத்தைப் பார்த்தது.
“அன்புத் தாயே! அன்புத் தாயே!ஏழு வருசமாய் இதிலே கிடக்கிறேன்எதையும் நான் கண்டதே இல்லைஎவரையும் நான் பார்த்ததும் இல்லை” பசு பண்பாகப் பதில் சொன்னது. பேச்சிமுத்துவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தும்புத்தயில் வேறு பக்கம் பறந்து போனாள். சுந்தரி மெதுவாக வைக்கோல் போரை விட்டு வெளிவந்தாள். பசுவுக்கு நன்றி சொன்னாள். விரைந்து வீடுநோக்கி நடந்தாள்.
வழியில் சூளை தெரிந்தது. அதனை அண்மித்தாள். அப்போது பேச்சிமுத்து கோபத்தோடு வருவதை அறிந்தாள். சூளையை உற்று நோக்கினாள்.
“ரொட்டியை வெதுப்பும் சூளையேஎன்னைத் துரத்தும் மாயக்காரி என்னைப் பிடிக்க பின்னால் வருகிறாள்.என்னைப் பிடித்தால் எலும்பை உடைத்துஅடுப்பில் சூப்பாய் வைத்துக் குடிப்பாள்மண்ணுள் என்னை புதைத்து விடுவாள்என்னைக் காத்து மறைத்துக் கொள்ளுஎன்றும் உனக்கு நன்றிசெய்வேன்” என்று சுந்தரி சூளையை வேண்டிக்கொண்டாள்.“ஐயையோ என்ன செய்வேன்.சூளை நிறைய ரொட்டித் துண்டுசுருண்டு கொள்ள இடமும் இல்லை.போரணைக் காரர் அங்கே நிற்கிறார்அவரிடம் கேளு அவர் பதில் சொல்வார்” என்று போறணை சொன்னது. சுந்தரி போறணைக் காரரிடம் முறையிட்டாள். .
“ஒருமுறை எனது ரொட்டித் துண்டுகளைக் கருகவிடாது காப்பாற்றினாய் அல்லவா?அதற்குப் பிரதியுபகாரம் செய்வேன். உதவி கட்டாயம் செய்வது கடமை.வெதுப்பகம் உள்ளே ஓடி ஒளித்திரு” அவர் வழியைக் காட்டினார். சுந்தரி ஒளித்துக் கொண்டாள். பேச்சிமுத்து விரைந்து கோபத்தோடு வந்தாள். “ஓ..ஓ மனிதா… அன்பான மனிதா ..என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும்எடுத்துப் பையில் பதுக்கிக் கொண்டுசின்னச் சிறுக்கி இந்த வழியால்எனக்கு முன்னே வந்தாளா சொல்” என்று கேட்டு நின்றாள்.
“போறணை உள்ளே போய் பார்” என்றான். பேச்சிமுத்து புகுந்து தேடினாள். சட்டென போறனைக் கதவை மூடினான். பேச்சிமுத்து வெந்து போனாள். கையில் ரொட்டித் துண்டொடு வெந்;தாள். விரைந்து வீடு சென்றாள். வெந்த புண்ணுக்கு மருந்து தடவினாள்.
சுந்தரி வெளியில் வந்தாள். போறணைக் காரருக்கு நன்றி கூறினாள். மெல்ல நடந்து வீட்டையடைந்தாள். அனைவரும் சுந்தரியை அன்பாய் வரவேற்றனர். அவளுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் மூத்தவள் சிங்காரி பொறாமை கொண்டாள். நானும் போகிறேன். உழைத்துப் பணத்தொடு வருவேன் என்றாள். தனது உடமைகளைப் பொதியாக்கினாள். புறப்பட்டாள்.
சுந்தரி சென்ற வழியிலேயே சென்றாள். வழியில் போறணை தெரிந்தது. “ஏய் பெண்ணே இப்படி வா. ஏழு வருசமாய் எரிகிறோம் தீயில். எங்களை இறக்கி விட்டுச் செல்.” என்று ரொட்டித்துண்டுகள் கெஞ்சின. “எனக்கு வேறு வேலையில்லையா? உங்களைத் தொட்டு என் கையைத் தீய்ப்பதா? மன்னிக்க வேண்டும். என்னால் முடியாது”. என்று சொல்லிப் போனாள்.
போகும் வழியில் பசு நின்றது. “ஏய் பெண்ணே இப்படி வா. எனது மடியில் பால் சுரந்துள்ளது. தயவு செய்து எனது பாலைக் கறந்து விடு.ஏழு வருசமாய் காத்துக் கிடக்கிறேன் எவரும் இல்லை எனது பாலைக் கறக்க.தயவு செய்து எனது பாலைக் கறந்து விடு” என்று பசு கூறியது. சிங்காரி பசுவைப் பார்த்துச் சிரித்தாள். நான் உனது பண்ணைக்காரியில்லை. இன்னும் ஏழு வருசம் காத்திரு. நன்றி. நான் வருகிறேன”;. என்றாள். நடையைக் கட்டினாள்.
வழியில் கொய்யா மரம் நின்றது. அதன் கிளைகள் நிறைந்து பழங்கள் தொங்கின. தனது கிளையை உசுப்பிப் பழங்களைப் பறித்துவிடுமாறு கெஞ்சியது. “எனக்கு ஒன்று போதும்.. மிகுதியை நீயே வைத்துக்கொள்” என்று ஒன்றைப் பறித்து உண்டாள். தனது வழியில் தொடர்ந்தாள். ஈற்றில் மாயக்காரி பேச்சிமுத்து வீட்டுக்கு வந்தாள்.
பேகச்சிமுத்து போறணையில் வெந்த முகத்துக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தாள். அவளை அணுகி வேலை கேட்டாள். அவளுக்கு வேலை கிடைத்தது. வீட்டைச் சுத்தம் செய்தாள். பேச்சிமுத்து வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. வீட்டிலேயே அடைந்து கிடந்தாள். சிங்காரிக்கு புகைபோக்கியைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. களைப்பேற்படும் வரை வேலை செய்தாள். அன்றொரு நாள் பேச்சிமுத்து தனது தோட்டத்துள் சென்றாள். சிங்காரி வீட்டு வேலைகளைச் செய்தாள். தற்செயலாகப் புகைபோக்கியைப் பார்த்தாள். அதனைத் துப்பரவு செய்தாள். சடுதியாக ஒரு பணப்பை அவளது மடியில் விழுந்தது.
உடனடியாக அதனை எடுத்துக் கொண்டு ஓடினாள். சடுதியாக வீட்டுக்குப் பேச்சிமுத்து வந்தாள். சிங்காரி ஓடுவதைக் கண்டாள். அவளைத் துரத்திப் போனாள். வழியில் கொய்யா மரம் நின்றது. கொய்யா மரத்திடம் தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டாள். கொய்யாப் பழங்கள் நிறையவே உள்ளன. உனக்குத் தர எனக்கு இடமில்லை. மன்னித்துக் கொள்” என்றது.
பேச்சிமுத்து தனது தும்புத்தடியில் வந்தாள். “கொய்யா மரமே கொய்யா மரமேஎன் அன்புக்குரிய கொய்யா மரமேஎனது பணத்தை எடுத்துக் கொண்டசின்னச் சிறுக்கி வந்தாளா சொல்”என்று கேட்டாள்.
கொய்யா மரம் பதிலளித்தது. “ஓமோம் தாயே இந்தவழியால் ஓடினாள் ஒருத்தி.” சிங்காரி ஓடிய திசையைக் காட்டியது. பேச்சிமுத்து விரைந்து சென்றாள். சிங்காரியால் தப்ப முடியவில்லை. பேச்சிமுத்து சிங்காரியைத் துரத்திப் பிடித்தாள். நல்ல அடிபோட்டாள். பணப்பையைப் பிடுங்கிக் கொண்டு அவளை அடித்து விரட்டி விட்டாள். கையில் ஒருசதமும் இல்லாமல் வெறுங்கையுடன் வீடு சென்றாள் சிங்காரி.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP