Monday, May 31, 2010

சொந்த மண்ணின் அகதி
பங்குனி மாதத்தின் நெருப்பு வெயில் சுட்டெரிக்கிறது. செல்வராசா என்ற செல்லன் மெல்ல நடந்து வந்து அந்த பிரதேச செயலாளர் அலுவலக வளாகத்துள் நுழைந்தார். அவரை முதுமை துரத்தத் தொடங்கியதால் சற்றுத் தளர்வு. அனுபவ முத்திரைகளை அவரது நெற்றியில் புரிகளாக விழுந்த கோடுகள் காட்டின. வாளிப்பான இளமை குந்தியிருந்தமைக்கான வடுக்களை அவரது உடலின் சுருக்கங்கள் தெளிவு படுத்தின. வளாகத்தினுள் மரங்கள் சோலைகளாகி நிழலைக் கொடுத்தவண்ணம் நின்றன. வளாகத்தின் புதிய கட்டிடத்துக்குப்பின்னால் அந்தப் பெரிய மாமரம் இன்னும் நிற்கிறது. ஆனால் அது முன்னையமாதிரி இல்லை. கிளைகள் வெட்டப்பட்டுச் சடைத்திருந்தது. அடிமரம் மட்டும் பெரிதாக இருந்தது. அதனண்டை சென்று அதன் நிழலில் குந்தியிருக்கிறார்.
செல்லனுக்கு இப்போது எண்பத்து மூன்றுவயதாகிறது. செல்லனைக் கண்டதும் அந்த மரம் கிளைகளை அசைத்துச் சாமரம் வீசுவதுபோலிருந்தது. அந்தமரத்துக்கு மட்டும் செல்லனின் கதை தெரிந்திருந்தது. ஏனென்றால் அந்த மரம் அவனது பாட்டனாரால் நடபட்டது. பரம்பரை முதுசம். மரத்துக்கு மட்டும் நடக்கும் சக்தியிருந்தால் தன்னை வளர்த்தவனோடு அவன்போகும் இடத்துக்கெல்லாம் போயிருக்கும். தன்னோடு இருந்த சனங்கள் இப்போது எங்கிருக்கின்றனர்? அவருக்கே தெரியாது. சனங்கள் பிரதேச செயலக வளாகத்தில் தமது கடமைகளை முடிப்பதற்காக வருவதும் போவதுமாக இருந்தார்கள். களைப்புத் தணிந்ததும் பதிவாளர் பகுதியில் உள்ள யன்னலூடாகப் பிறப்பு அத்தாட்சிக்கான விண்ணப்பப் படிவத்தைக் கேட்டெடுத்தார். அதனை அவரால் நிரப்பமுடியாது. கண்ணும் மங்கலாய் போய்விட்டது. பக்கத்தில் பர்தா உடையில் இளம்பெண் நின்றிருந்தாள். “தங்கச்சி இத நிரப்பித்தாம்மா” கெஞ்சினார். அவள் படிவத்தை வாசித்து அவரிடம் விபரத்தைக் கேட்டு எழுதத் தொடங்கினாள்.
பெயரைக் கேட்டாள். சொன்னார். தற்போது இருக்கும் விலாசம் கேட்டாள். “மாகாணம் கிழக்கு. அது சரி. மாவட்டம் திருகோணமலை. சரி. பதிவாளரது பிரிவு”? கேட்டாள். “தம்பலகாமம் கிழக்கு” சொன்னார். “ஐயா இது கிண்ணியாப் பிரிவு. கிண்ணியா என்று போடட்டா? அதுதான் சரி”. அவள் வாதாடினாள். “இல்லம்மா நான்பிறக்கேக்க கிண்ணியா பிரதேசச் செயலாளர் பிரிவு இ;ல்லம்மா. நான் சொல்லுறபடி எழுதம்மா”. அவள் வேண்டா வெறுப்பாக எழுதினாள். “பிறந்த இடம்”? கேட்டாள். அவரது உட்குவிந்த கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலத்தது. தனது இரண்டு கைகளையும் விரித்து “இதுக்குள்ளதானம்மா பொறந்தனான்.” சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. படிவத்தைக் கொடுத்து விட்டுச் சென்றாள். அதனை யன்னல் ஊடாகக் கொடுத்தார். பார்த்துச் சொல்லுவதாகப் பதில் வந்தது. அப்படியே வளாகத்தின் ஒரு மூலையில் குந்திக் கொண்டார். அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. மெதுவாக எழும்பி அந்த மாமரத்தடியின் கீழ் சென்றார். அவரை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்றைய தலைமுறையினருக்கு அவரையும், அவரது கதையையும் தெரியாது. தமிழர் செறிந்து வாழ்ந்த இடத்தில் தமிழர்களே இல்லை. அப்பிரதேசத்தில் தற்போது எஞ்சியுள்ள சில தமிழ்க்கிராமங்களின் மக்களே வருவார்கள். பொதுவாகத் தமிழர் மிகக் குறைவு.
மாமரத்தின் இலைகள் பழுத்துச் சொரிந்து கொண்டிருந்தன. சருகுகள் படைகளாகப் பரந்து கிடந்தன. அவற்றை ஒருபுறமாக ஒதுக்கி விட்டு மரத்தடியோடு உடம்பைச் சாத்தி ஒருக்களித்திருந்தார். அண்ணார்ந்து பார்த்தார் மாந்தளிரகள் முளைவிட்டு எட்டிப் பார்த்தன. கூப்பிடு தூரத்தில் கன்ரீன் தெரிந்தது. இப்போது கன்ரீனில் சனமில்லை. கன்ரீனில் நின்ற பையனை அழைத்தார். அவனிடம் ஒரு பணி;சும், பிளைன்ரீயும் தரும்படி கேட்டார். அவன் ஒரு சிரிப்போடு கொடுத்துவிட்டுப் போனான். அவற்றைச் சுருங்கிக் கிடந்த வயிற்றுக்குள் விட்டார். காய்ந்து கிடந்த வயிற்றில் இருந்து பெரிதாய் ஏப்பம் வந்தது. மடியில் இருந்த சுருட்டை எடுத்துப் பற்றவைத்து உள்ளிழுத்துப் புகையை வெளியில் விட்டார். புகை சுருண்டு பரவி மேலெழுந்து கரைந்து சென்றது. பழய நினைவுச் சுழியில் மிதந்தார்.
“செல்லன் அந்த மாமரத்தைப் பார். நிறையப் பூவும் பிஞ்சுமாய் கிடக்கு. சருகுகளை கூட்டியொதுக்கிப் போட்டு வேப்பஞ்சருகையும் கலந்து நெருப்பு வெய். புகை மாமரத்தில படட்டும். பூச்சி விழாது. கலைஞ்சிடும்.” சின்னத்துரையர் சொல்லிப்போட்டுப் போய்விட்டார். செல்லன் அப்பா சொன்னதுபோல் சருகுகளைக் கூட்டி வட்டமாகக் குவித்துவிட்டு வேப்பஞ்சருகையும் கலந்து நெருப்பை வைத்தான். அது பகைந்து மாமரத்தின் இலைகுழைகளுக்கு ஊடாகப்பரந்தது. பூச்சிகள் விலகிப்போனதைச் செல்லன் அவதானித்தான். பூச்சிகளை விரட்ட இந்தப்புகை நல்லதுதான். அவனுக்கு அது அனுபவப் பாடம். வேப்பைமரங்கள் நிறையவே நின்றன. ஆனால் அவை இப்போது அங்கில்லை எல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டு விட்;டன. புதிதாக வைத்த மரங்கள்தான் தெரிந்தன.
செல்லனின் கண்கள் அந்தச் சூழலை ஒருமுறை துளாவி வந்தன. பெருமூச்சு மட்டும் பறந்தது. மணலில் தனது கைகளை ஊன்றி மறுபக்கம் ஓருக்களித்து இருந்தார். கைகளில் மணல் பதிந்த தடங்கள் தெரிந்தன. தனக்குள் பேசிக் கொண்டார். “எத்தனை தலைமுறையாய் இதுக்குள்ள கிடந்தம். என்ர பாட்டன், முப்பாட்டான் அரது பாட்டன் காலத்தில இருந்து இங்கதானே கிடந்து புரண்டனாங்கள். எங்களுக்கென்று குளக்கோட்டு மன்னனால் தரப்பட்ட நிலபுலங்கள். எல்லாம் போய்விட்டது. அந்நியர் ஆட்சியின் போதும் எங்களுக்கு எங்கட நிவபுலங்களைத் தந்து அதற்கான உறுதிப்பத்திரங்களும் தரப்பட்டன”. அவரது மனக்குரல் நின்றது. “என்னப்பா இதில கிடக்கிறிங்க” அந்தக் கன்ரீன் பொடியன் கதை கொடுத்தான்.
“புறப்பு கடுதாசி எடுக்க வந்தனான். கொஞ்சம் பொறுக்கட்டாம். இந்த இணல் நல்லாருக்கு இருக்கிறன்.” சொன்னார். அவன் சிரித்தவாறே போய்விட்டான். அவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தார். முதுமையில் தனியே கதைப்பார்கள் என்பது உண்மைதான் போல் தெரிகிறது. அவர்களது கதைகளை யார் கேட்கிறார்கள். அதனால் வயதுபோனவர்கள் தங்களது திருப்திக்காகத் தங்கள் ஆதங்கங்களைத் தாங்களே சொல்லி ஆறுதல் அடைவதற்காகக் கதைக்கிறார்கள். சிறுவர்களும் இப்படித்தானே? தனிமையில் இருக்கும்போது தனக்குத் தானே கதைப்பார்கள். செல்லனும் இப்போது அப்படித்தான் இருந்தார். அந்த மரந்தான் கேட்டுக் கொண்டு நின்றது.
“இதுக்குள்ள தானே தங்கச்சியின்ர கலியாணம் நடந்தது. அந்த இடத்தைப் பார்த்தார். அதிலதான் என்ர வீடு இருந்தது. மாமா. அண்ணன், சித்தப்பா, பெரியப்பா வீடுகள் பக்கத்துப் பக்கத்தில் சந்தோசமாய்க் கிடந்தம். தனிக்குடித்தனங்களும். கூட்டுக் குடும்பங்களுமாக சா.. எப்படியெல்லாம் வாழ்ந்தம். எல்லாத்தையும் பறிச்சிப் போட்டுத் தெருவில விட்டுட்டாங்க. இத ஆரிட்டச் சொல்லுற. சொன்னாலும் ஆர் தட்டிக்கேக்கப் போறாங்க?”. செல்லனின் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் உடைந்து வீழ்ந்தன. “இந்த வீட்டில இருந்து கூப்பிடு தூரத்திலதான் குட்டிக்கரச்சை றோமன் கத்தோலிக்க பாடசாலை இருந்தது. லூர்துமேரி அக்கா படிப்பிச்சவ. அதிலதான் நான் படிச்சனான். மூண்டாம் வகுப்புத்தான் படிச்சனான். என்னோட இந்தக்காலத்துப் பிள்ளையள் வாசிக்கட்டும் பார்ப்பம். இப்ப என்ன படிப்பு. பிள்ளயளுக்கு வாசிக்கத் தெரியாது.
இதில இருந்து வடக்குப்பக்கமாக ஒரு தாவுத்தாவினா அடப்பனார் வெட்டையில இருந்த மாமா கனகசிங்கத்தார் வீட்டில நிற்பன். அங்கிருந்து கிழக்கால் ஒடினா … இடுப்பளவு உப்புத்தண்ணியோடும் கட்டையாறு. அதைக் கடந்தால் நீரோட்டுமுனைப் புள்ளையார் கோயில் வரும். ஒரு கும்பிடு போட்டுத் தெற்கால ஓடினா பூசாரி வெட்டையில தம்பிமுத்துப் பூசாரியார் வீட்டில நிற்பன். அங்கிருந்து நேர ஓடினா.. தாமரவில் சோமநாதர் வீட்டில பனையான் மீன்கறியோட தாமர இலயில போட்ட சாப்பாடு கிடைக்கும். உப்பாத்துக் கோணாமலையர் வருவார். ஒன்டுரெண்டு கத. அது முடிஞ்சதும் ஓடி கட்டையாற்றைக் கடந்தால் ஆலங்கேணிப் பிள்ளையார் கோவில் அமுது கிடைக்கும். அங்கிருந்து மேற்காக ஓடினால் சமாவைத்ததீவில் அண்ணாவியார் தாமோதரனாரின் கூத்து நடக்கும். சா…என்ன அற்புதமான வாழ்க்கை”.
“கிருஸ்ணபிள்ளை உடையாரின் ராசாங்கம் நடக்கும். யப்பான்காரன் போட்ட குண்டால் பெற்றோல் தாங்கி எரிஞ்சபோது நான் இந்த மாமரத்தில் எறியிருந்துதான் பார்த்தனான். வானம் முட்ட நெருப்புக் கொழுந்து விட்டு எரிஞ்சுது. எங்கட சனங்கள் மாகாமம் சுங்கான்குழிப் பக்கம் ஒருகிழமை போயிருந்து வந்ததுகள். ஒரு பிளேன் எங்கட வண்ணான் வயலுக்க விழுந்தது. போகப் பயம்தான என்டாலும் கூட்டாளிகளோட போய்ப்பார்த்தனான். பெரிய லொறிகளைக் கொண்டு வந்து கட்டிக் கொண்டு போனாங்க. நீரோட்டுமுனை அம்மன் கோயிலில இருந்து தம்பலகாமம் ஆதிகோணநாயகரின் பதினாலாவது திருவிழாவுக்கு முள்ளுக் காவடி எடுத்துப் போறனாங்க. ஆலங்கேணி, உப்பாறு ஊர்களில் இருந்தும் காவடிகள் போகும். இஞ்;ச அப்ப கொஞ்சம் முஸ்லிம் சனங்கள்தான் இருந்தவங்க. படிக்காம இருந்த சனங்கள நம்மட காசிநாதர் ஐயாதான் வீடுவீடாய்ப் போய் பிள்ளயளுக்கு முட்டாசி குடுத்துப் பள்ளிக்குக் கூட்டிப்போய்ப் படிப்பிச்சவர். வசதியுள்ளவங்கட பிள்ளயள வெளியூரிலும் படிக்க எற்பாடு செய்தவர். ஆனாலும் அவர் எங்களப் படிக்கச் சொல்லல்ல. முஸ்லிம் பிள்ளயளுக்குத்தான் உதவி செய்தவர். பாவம் அவர் நல்லதுதான் செய்தார். அந்தா இருக்கிற பெரிய பாடசால அப்ப இதில இல்ல. அதுதான் எங்கட விளையாட்டுத் திடல். கிளித்தட்டு அதிலதான் விடியவிடியப் பாய்வம்.”
“சாமி விபுலானந்தர் சமயங்கள நேசித்தவர். அவர் பல சைவப்பாடசாலைகள கிழக்கு மாகாணத்தில தொடங்கினார். எல்லாச் சமயப் பிள்ளைகளையும் தனது பாடசாலையில சேர்த்துக் கொணடவர். கிறிஸ்தவப் பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகள் சேருவதில்ல. கிராமப் புறங்களில எல்லாப்பிள்ளையளையும் சேர்த்துக் கொள்வாங்க. ஆனால் கத்தோலிக் கதாவாசகம்தான் படிப்பிப்பார்கள். எங்கட நாடு சுதந்திரம் பெற்றதென்று சொன்னாங்கள். சுதந்திரம் என்டால் என்ன என்று எனக்கு இன்னும் விளங்கல்ல.அது பெரிய தந்திரம் நம்மட நாட்டுக்குக் கிடச்ச சாவுமணி. எங்கட பொடியள் கொஞ்சப்பேர் வெளியில் போய் இங்கிலிஸ் படிச்சாங்க. எங்கட பொடியள் என்றால் தம்பலகாமம் கிழக்குப் பகுதி தமிழ் முஸ்லிம் எல்லாரையும் சேர்த்துத்தான் சொல்லுறன். பாராளுமன்றத் தேர்தல் வந்துது. நாங்களெல்லாம் ராசாக்களாம். வாக்குக் கேக்கிறவங்க எங்கட தொண்டர்களாம் என்டாங்கள். வாக்குப்போட்டு ஆதரிக்கச் சொன்னாங்கள். எங்கள ராசாக்கள் என்டால் எங்களுக்கு மதிப்பு வராதே. வாக்குப் போட்டம். அவங்களும் வெற்றி பெற்றுப் பாராளுமன்றம் போய் வந்தாங்கள். இரண்டு பேரும் முஸ்லிம்தான். தமிழ்தானே நம்மட தாய்மொழி.
பெரிய வரவேற்பெல்லாம் செய்தம். சீனடி சிலம்படி வித்தையெல்லாம் காட்டி வரவேற்பெடுத்தம். எங்களுக்குள்ள வேற்றும இருக்கல்ல. ஆனா எங்களுக்குத் தெரியுமா அவங்கட மனதுக்குள்ள கரவுகள ஒளிச்சி வச்சிருந்தாங்க. ஒருநாள் லொறிகள், ரக்டர்கள். குண்டர்கள் கூடி வந்தார்கள். அரசாங்கம் எங்கட காணிகள சுவிகாரம் செய்திட்டாம். எங்கட வீடுகளை உடைத்தெடுத்துப் போகச் சொன்னாங்க. “அதென்ன தமிழ் மக்கள்ற காணிகள மட்டுந்தானா”? கேட்டம். “வாயமூடிற்றுப் போங்க” என்டாங்க. அத்தனை தமிழ் மக்களது வீடுகளுக்குள்ளும் நுழைந்து வந்தார்கள். ஒரு ஒதுக்குப் புறமான இடத்துக்கக் கொண்டு போய் நிலம் ஒதுக்கித் தந்தார்கள். எங்கட சனங்கள் பொருமினார்கள். அவங்க விட்ட கண்ணீர்தான் சுனாமியாய் சுழன்றடிச்சது. திட்டம்போட்டுச் சட்டமாக்கித் தமிழர மட்டும் குடியெழுப்பிப் போட்டாங்கள். அகதியாக்கிப் போட்டாங்கள். சின்னச் சின்னக் குடிசைகளைப் போட்டுக் குந்திக் கிடந்தம். விட்டாங்களா? தொன்னூறு இனக்கலவரத்தில் அங்கிருதும் விரட்டப்பட்டு ஊரூராய் அலைந்து திரியுறம்.” தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.
“அதுமட்டுமா? இந்தப் பிரதேசத்தில இருந்த தமிழர்களைக் கடத்திக் கொண்டுபோய் சாக்காட்டிப் போட்டாங்கள். நகரசுத்தித் தொழிலாளர்களும் தமிழர்கள்தான். அவங்கட குடியிருப்புக்களையும் அழித்து அப்புறப் படுத்திவிட்டாங்கள். கொஞ்சப் பேர் காணாமலே பொயிட்டாங்க. தொண்ணூறுக் கலவரம் சாதகமாகப் போய்விட்டது. காணிச்சட்டம் வந்ததிலிருந்து அலெக்தோட்டம் அரசினால் சுவீகரிகப்பட்டது. அரச காணிகளில் தமிழ் முஸ்லிம் சனங்கள் குடியேறினார்கள். கலவரத்தினால் தமிழ் கிராம மக்களில் அரைவாசிச் சனம் செத்துப் போயிற்றுகள். மிஞ்சிக் கிடந்தவங்கள கிளப்பன்பேக் அகதி முகாமில போட்டாங்க. அலெக்தோட்டத்தில் தனிமுஸ்லிம் சனங்களக் குடியேற்றி கிராமங்களை உருவாக்கி பைசல்நகர், ஹிஜிரா நகர் இப்படி முஸ்லிம் பெயர்களை வைத்து கிண்ணியா தனிமுஸ்லிம் பிரதேசமாக மாறிவிட்டது. இது திட்டமிட்ட இன அழிப்புத்தானே? ஒருபக்கம் பெரும்பான்மை அரசாங்கம் இன அழிப்பைச் செய்யுது. இன்னொரு பக்கம் மறைமுகமாக தவித்த முயலடிக்கும் வேலை நடக்குது, தமிழ் பாடசாலைகள் என்ன பாவம் செய்திச்சி. அந்தப் பாடசாலைகளையும் முஸ்லிம் பாடசாலைகளாக மாற்றிக் கொண்டாங்க. அவங்குளுக்குத் தேவையென்டால் புதிசா முஸ்லிம் பாடசாலைகள கட்டலாம்தானே. இது ஆருக்குத் தெரியப்பேகுது.? சொல்லப்போனால் நான் இனவாதியாம்.” தனக்குத்தானே சொல்லிச் சிரித்தார்.
“காலம் இப்படியே இருப்பதில்லை. உலகம் சுழன்று கொண்டுதான் இருக்குது. சூரியன் உதிக்காமல் இருப்பதில்லை. இரவு பகல் வரத்தான் செய்யும். இந்த மனிசன் தான் மட்டும்தான் வாழப்போவதாக எண்ணயிருக்கிறான். இன்னும் புத்தரும். யேசுவும். நபிகளும் சித்தர்களும் வரத்தான் போகிறாங்கள். நான் இந்த மரத்துக்குக் கீழ இருந்து சொல்லுறன். ஒரு நாளைக்கு இன்னொரு சுனாமி வரத்தான் போகுது. அப்ப எல்லாம் அள்ளிக் கொண்டு போகத்தான்போகுது.” அவர் கண்கள் சிவந்து கொண்டு வந்தன. கன்ரின் பொடியன் வந்தான். “என்ன ஐயா தனியக் கதைக்கிறிங்க”. அவனது குரலால் செல்லனின் கதையும் சிந்தனையும் முடிவுக்கு வந்தது. செல்லனின் சிந்தனை குழம்பி நிமிர்ந்து பார்த்தான். மீண்டும் கன்ரின் பொடியன் “ஐயா அந்த அக்கா கூப்பிடுறாங்க. போய் பாருங்க” கூறிவிட்டுச் சென்றான். செல்லன் எழுந்து நின்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டு நடந்தார். யன்னல் கம்பிகளைப் பிடித்தபடியே எட்டிப் பார்த்தார்.
“தங்கச்சி .. என்ன பருவம். கிடைச்சிதா?”“ என்ன பருவம் ? உங்கட பதிவு இங்க இல்ல. அது டமேஜா போச்சு”“டமஜ் என்டால் என்ன?“டமஜ் என்றால் அழிஞ்சி போச்சி உங்கட பதிவு இங்க இல்ல. இனி நீங்க வேறெங்காவது போய்த் தேடிப் பாருங்க.” “வேறெங்க போய்த் தேடுவது. நான் இந்த இடத்திலதானே பொறந்தனான்”?“கொழும்பு மாளிகாவத்தயில போய்ப் பாருங்க” “நான் கொழும்பிலயா பொறந்தனான். நான் இதில இருந்த எங்கட வீட்டிலதான் பொறந்தனான்.” செல்லன் ஆத்திரத்தோட அந்த எழுது வினைஞரைப் பார்த்தார்.“அதெப்பிடி இல்லாமப் பேகும். வேறென்ன வழி செய்யிறது”? எழுதுவினைஞர் அங்கில்லை. செல்லனின்ன உள்ளம்பேசியது.“யாழ்ப்பாணத்தில முஸ்லிங்கள குடி எழுப்பினது பிழையென்று சொல்லுறாங்க. அப்பிடியென்றால் நாங்க தமிழர்கள். நாங்க பரம்பரையாக வாழ்ந்த இந்த இடத்தில இருந்து எங்கள முஸ்லிம்கள் அரசாங்கத்தின்ர உதவியோட குடி எழுப்பியது சரியா? சொந்த மண்ணில் பிறந்ததற்காக அத்தாட்சியையும் தொலைத்து விட்டாங்களே? வேதனைப் பட்டார். “ஐயா! இந்தாங்க“! அந்த எழுது வினைஞர் ஒரு பத்திரத்தை அவர் கைகளில் திணித்து விட்டுப்போனார்;. ‘பதிவுப்புத்தகத் தேடுதல் விளைவு’. “திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் கிழக்குப் பகுதியின் பிறப்பு பதிவின் மூலமும், இணைப்பும் பழுதடைந்து இருப்பதால் மறுபக்கத்தில் குறிப்பிட்ட செல்லன் என்பவரது பிறப்பு பதியப் பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியாதவனாயுள்ளேன்’;. என்ற சான்றிதழ் அவரைப் பார்த்துச் சிரித்தது. நான் இங்க பொறக்கல்லையா? பிறந்த சொந்த மண்ணிலேயே நான் அகதியா? செல்லன் தடுமாறினார்.

Read more...

Saturday, May 29, 2010

வீட்டுக்கொருவர் ….
அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்படிச் சொல்வது?.. பிள்ளைகள்… வீடு வளவு, மாடுகன்றுகள் என்று சொத்துக்கள் அனைத்தையும் எத்தனை வருசமாப் பொத்திக் காத்து வந்தார். அண்ணனை அவங்கள் வந்து கூட்டிப்போனபோது அவர் பட்ட பாடு… சொல்லமுடியாதது. அவன் இன்னும் வீடு திரும்பவில்லை. பெத்து வளர்த்து ஆளாக்கியெடுக்கப் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும் எத்தனை நாள் அம்மாவும், அப்பாவும் எங்களுக்காகப் பட்டினி கிடந்திருப்பாங்கள். அறிவழகன் குலுங்கி அழுதான். அம்மன் கோயிலுக்கு நேர்த்திக்காகக் கட்டியிழுத்துப் போன ஆட்டுக்குட்டியைப் போல அண்ணன் போனதை இன்னும் எண்ணியெண்ணி ஏங்கித்தவிக்கும் அந்தப் பெற்ற மனதின் துடிப்பைச் சொல்லில் வடிக்கேலாது. அந்தக் கவலையில் மூழ்கிப்போன அவருக்கு உள்ளவை யாவும் அழிக்கப்பட்டு விட்டன.…ஷெல்லடியினால் அவரது கண்முன்னாலேயே மாடுகள் உடல்சிதறித் துடித்துச் செத்தகாட்சியை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. வாய் பேசாத ஜீவன்கள் என்ன செய்தன? எல்லாவற்றையும் இப்படி..பறிகொடுத்து…யாரால தாங்கமுடியும்? அவரால நடக்கமுடியாது. உடலெங்கும் ஷெல்லடிக் காயங்கள். கொத்தணிக்குண்டின் நச்சுப்புகைபட்டு தோல் எரிந்து அவரின் உடல்நிலை மோசமாக இருந்தது. அவரது ஏக்கத்த எப்படிப் போக்குவது? பேயறைந்தமாதிரி… பங்கருக்குள் ஒரே திசையைப் பார்த்தபடி குந்தியிருக்கிறார். சுதந்திரமாய் நடமாடித்திரிந்த மக்களுக்குப் போக்கிடம் இல்லாது பங்கருக்குள்ளதான் சீவியம். புங்கருக்குள்ளே இருந்தவாறு ஆறிவழகனின் இதயம் அழுதது.
தனது அம்மாவைப் பார்க்கிறான். அம்மா தலைவாரிச் சீவி மாதங்களாகி விட்டன. எல்லாத் தாய்மாரும் அப்படித்தான். ஏன் இளம் கன்னியர்களும் இப்படித்தான். இந்த வன்னியில பங்கருக்குள்ள பட்டினியோட எத்தனை நாளைக்குக் கிடக்கிறது. வெளியில் தலைகாட்டினா ஷெல் விழுந்து தலைதெறிக்கும். நிலம் அதிரும். “கடவுளே பங்கருக்கு மேல ஷெல் விழாமக் காப்பாற்று. இந்த மக்களுக்கு வந்த மாயமென்ன? வற்றாப்பளைத் தாயே நீதான் துணை. கதிர்காமத்துக் கந்தா …கடம்பா …கதிர்வேலவனே.. ” அம்மாவின்ர வேண்டுதல் கந்தனுக்குக் கேக்குமா? இப்ப கதிர்காமத்துக் கந்தனுக்குத் தமிழ் விளங்குமா? அவருக்குச் சிங்களம்தான் விளங்கும். பூசை அர்ச்சனைகள் எல்லாம் சிங்களத்தில்தான் செய்கிறார்கள். தூரத்திலிருந்து ஒலிபெருக்கிச் சத்தம். கேட்கிறது. “என்ன சத்தம் அது. பிரித் ஓதுறாங்களோ?” கந்தையர் கைகளால் பொத்தியிருந்த காதுகளை விடுவித்துக் கேட்கிறார். “தங்கட பக்கம் வரட்டாம். பாதுகாப்புத் தாறங்களாம். சனங்களோட சனங்களா போவமே”? அறிவழகன் மெதுவாகச் சொன்னான்.
மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. “தம்பி பங்கருக்குள்ள வாற தண்ணிய அந்தப்பானைக்குள்ள கொஞ்சம் பிடி. வுடித்துக் குடிப்பம். குடிக்கவும் தண்ணியில்ல. பசிக்குத் தொண்டையையாவது நனைப்பம்”. அம்மா சொல்லவும் அறிவழகன் பானையை எடுத்து பங்கருக்கு வெளியே வைக்கிறான். மழைநீர் அதற்குள் சேருகிறது. ஷெல்லடி தொடருகிறது. இடிமின்னலுடன் சோவென மழை வாரியடிக்கிறது. பங்கருக்குள் இப்போது மழைநீர் நிறைகிறது. அதனை உள்நுழையவிடாது அறிவழகன் தடுக்கிறான். அவனையும் மீறி தண்ணீர் உள்ளே கசிந்து வருகிறது. இனியும் தாக்குப்பிடிக்கேலாது. “கந்தையாண்ணே ஷெல்லடி குறைந்ததும் வெளியில வாங்க. இனி ஒன்றும் செய்யேலாது. என்னால இனித்தாங்கேலாது. உடம்பெல்லாம் எரிகாயம் எரியுது. ஏப்படியென்றாலும் செத்துப்போறது நிச்சயம். அதிர்ஸ்டம் இருந்தால் யாராவது தப்பிப் பிழைக்கலாம். வாறது வரட்டும். நம்மட வரலாற்றச் சொல்லுறதுக்கும் ஆக்கள் வேணுந்தானே” சாமித்தம்பியர் விரக்தியின் விளிம்பில் இருந்து சொன்னார். அவரது உடலெங்கும் எரிகாயம். அதன் வேதனையைத் தாங்கமுடியாது தவித்துக்கொண்டிருப்பவர். அவர் சொன்னது சரியாகத்தான் பட்டது. செய்தி பங்கர்களுக்குப் பரவியது. புற்றுக்குள்ளிருந்து வெளிவரும் ஈசல்களைப்போல் சனங்கள் பிள்ளைகுட்டிகளோட மழையிருளில் பங்கரை விட்டு வெளியில் வந்தனர். மயான அமைதி. எங்கும் வெறிச் சோடிக்கிடந்தது.
கட்டிடங்கள், மரங்கள் ஒன்றையும் காணவில்லை. கேத்துக்கு வெளியாய் தெரிகிறது. மழைமேக மூட்டத்தின் ஊடாகத் தெரியும் வெள்ளிப் பொட்டுக்களின் வெளிச்சம் பூமியில் பட்டுத் தெறிக்கிறது. இருளில் இருந்து பழக்கப்பட்டால் இருளும் வெளிச்சமாகத்தான் தெரியும். இந்தச் சனங்களுக்கு இப்போது பழக்கமாகிவிட்டது. அதனால் பார்க்கும் இடமெல்லாம் வெட்ட வெளியாய் அந்த இருளிலும் தெரிந்தது. பள்ளங்களில் இருள்பதுங்கித் தொட்டந்தொட்டமாகத் தெரிந்தது. பள்ளம் படுகுழிகளாய், நிலம் பாறுண்டு கிடந்தது. ஷெல்விழுந்து வெடித்து உடலங்கள் சிதறிக் கிடந்தன. எங்கும் பிணவாடை. அந்த இருளில் உயிர் தப்பினால் போதும் என்ற உந்தல்வேறு. உயிர் தப்பியவர்கள் சாரிசாரியாக இடறிவிழுந்து நடந்தார்கள். கால்களில் இடறிய உடல்களைக் கடந்து நடந்தார்கள். குற்றுயிராய்க் கிடந்தவர்களின் முனகல் இருளில் கரைந்து போய்க்கொண்டிருந்தது. எப்படி வாழ்ந்த சனங்கள் இப்படிச் சின்னாபின்னமாகி குற்றுயிருடனும், உயிரற்ற சடலங்களாகவும் சிதறிக்கிடக்கின்றனர். யாருக்கும் உதவக்கூடிய நிலையில் யாரும் இல்லை. ‘ஆண்ட இனமிங்கு மாண்டு கிடக்குதையோ’ அறிவழகனின் மனம் அங்கலாய்ந்தது. குலுங்கி ஏங்கிக்கலங்கியது. கண்கள் குளமாகிக் கண்ணீர் கொட்டியது. அவனது கண்கள் பொலபொலத்த வண்ணமிருந்தன. நடக்கும்போது ஒரு உடலில் காலிடறி விழுந்தான். அதனை அணைத்து முகத்தைப் பார்த்தான். அந்த உடலை அடையாளம் காணமுடியவில்லை. பிணவாடை அவனைக் கலக்கியது. அந்த உடலை அடக்கம் செய்யவும் அவனால் முடியாது. அங்கே சுணங்கினால் அவன் உயிரிழக்க நேரிடும “தம்பி யோசியாத ஐயா. நம்மலால ஒண்ணும் செய்யேலாது. எழும்பி ஓடிவா”. அவனை இழக்க அந்தப் பெற்ற மனம் இடம்கொடுக்கவில்லை. அம்மாவுக்குக் கொஞ்சம் துணிச்சல் இருந்தது. “எழும்பி கெதியா வா” அம்மாவின் குரலுக்குக் கட்டுப்பட்டான்.;. அப்புவை எப்படியும் கரைசேர்க்க வேண்டும். அவரது உயிரைக் காக்க வேண்டும். இவ்வளவு காலமும் எங்களை வளர்த்து ஆளாக்கிய அப்பு இப்படி ஆளாக்கப்பட்டு விட்டார். எழுந்து ஓடி தனது அப்பாவைத் தாங்கியபடி நடந்தான். உப்புநீர் சிற்றாறு குறுக்கிட்டது. ஆறு ஆழமற்றது. அதனைக்கடந்து சென்ற பழக்கமுண்டு. பலருக்குப் படுகாயங்கள். உடல்முழுவதும் எரிந்து மேற்தோல் உரிந்திருந்தது. குறுக்கோடிய ஆற்றைக் கடக்க வேண்டும். உப்புத்தண்ணீர் எரிகாயங்களைக் கழுவின. ஏரிச்சலெடுத்து உருண்டு துடித்தார்கள். திராணியுள்ளவர்கள் சிலரைச் சுமந்தும் நடந்தனர்.அந்தப்பக்கம் ஷெல்லடியில்லை. ஆனால் சனங்களுக்கு நடக்கத் திராணியில்லை. பசியும், பட்டினியும், பயப்பிராந்தியும் அவர்களை வாட்டியெடுத்தது. ‘இனியொரு மனிதப்பிறவி வேண்டாமடா சாமி. அதுவும் தமிழனாகப் பிறக்கவே கூடாது. சபிக்கப்பட்ட இனம்.’ வுhய் முணுமுணுத்தவண்ணம் இருந்தன. காயப்பட்டவர்களும், உடல்நலம் குன்றியோரும் அதிகமாகக் காணப்பட்டனர். சிலருக்குக் காயங்களிலிருந்து சீழ்வடிந்து மணத்தது. முன்பின் அறிமுகமில்லாத இளைஞர்கள் காயப்பட்டவர்களையும், முதியவர்களையும் தூக்கிக் கரைசேர்த்தனர். அப்படித் தூக்கும்போது “ஐயோ அம்மா” எனக் கதறினர். வெடிச்சத்தங்கள் தூரத்தில் தொடர்ந்தன. “எல்லாரும் அப்படியே நிலத்தில குப்புறப் படுத்துக் கொள்ளுங்கோ. கட்டளைகள் பிறந்தன”. சனங்கள் நிலத்தோடு தம்மைச் சங்கமப் படுத்திக்கொண்டனர். சேறும் சகதியும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.;. போர் தொடங்கிய நாளிலிருந்து அவர்களுக்கு உறக்கம் என்பதே கிடையாது. சின்னஞ்சிறிசுகள் வீரிட்டன. அமைதியானதும் எழுந்து நடந்தனர்.
ஆற்றைக்கடந்து வடலிப்புதருக்குள் நுழைந்தனர். உயர்ந்த மரங்களைக் காணவில்லை. “பொழுதுபுலரும் வரை இங்கேயே கிடப்பம். விடிந்ததும் வெள்ளக் கொடியக்காட்டிச் சரணடைவம்’. கந்தையர் கூறினார். “இப்படியே இப்பவே போனால் நல்லதுதானே”? சாமித்தம்பி அவசரப்படுத்தினார். “அவங்களுக்கு யாரெண்டு தெரியும்? சுட்டுப்போட்டால்.. அவங்களிட்டத் துவக்கிருக்கு. இவ்வளவு தூரம் வந்திற்றம். பொறுத்த நாங்க கொஞ்சம் பொறுப்பம்.” எல்லோரும் அமைதியானார்கள். பசியும் களைப்பும் வாட்டியது. எல்லோரும் பட்டினியாலும். பயத்தினாலும் வாடி மெலிந்திருந்தார்கள். பட்டினி போட்டால் எவரும் சரணடையத்தான் செய்வார்கள். பண்டைய யுத்தச் சாணக்கியத்தில் பட்டினி நல்லதொரு ஆயுதமாகப் பயன்பட்டதாம். கொடுமையான யுத்தம் இது. நச்சுவாயு கலந்த குண்டுகளைப் போட்டுச் சாகடிக்கிறாங்கள். நாங்க என்ன எதிரிகளா? நாங்களும் இந்தநாட்டு மக்கள்தானே? ஏன் இப்படிச் செய்யுறாங்கள். ஆளுக்காள் கேட்டவாறே அப்படியே குந்தியிருந்தார்கள். அறிவழகன் மனதில் போராட்டம்.
விடிந்து கொண்டு வந்தது. கந்தையர் எல்லோரையும் உசார்படுத்தி எழுப்பி வரிசையில் நிற்கவைத்தார். வரிசை நீண்டு இரண்டு கிலோமீற்றர் நீளத்துக்கு நின்றது. சனங்களின்; கைகளில் பொலித்தின் பைகள் மட்டுமிருந்தன. ஆமிக்கரங்கள் இவர்களைக் கண்டிருக்க வேண்டும். தலைக்கு மேலால் வெடிகள் பறந்தன. சனங்கள் அலறியடித்துப் பதுங்கினர். கந்தையர் தனது தலையிலிருந்த துவாயை அவிழ்த்து தடியில் கட்டி சமாதானச் சமிக்ஞை கொடுத்தார். அவருக்கும் காயங்கள் இருந்தன. அவருக்கு மனத்தைரியம் கொஞ்சம் அதிகம். மனத்தைரியம் இருந்தால் உடல் உளவலிகளையும். பெரிய பிரச்சனைகளையும் சமாளித்துக் கொள்ளலாமாம். வெடிச் சத்தங்கள் குறைந்து ஓய்ந்தது. பொழுது புலர்ந்து வெயில் எறிக்கத் தொடங்கியிருந்தது. மழைபெய்த தரையில் சூரிய வெப்பம் ஏறித் தகித்தது. எரிகாயங்களில் எரிவு அதிகரித்தது. பசித்துக் களைத்த உடல்களில் இருந்து வியர்த்துக் கொட்டியது. இராணுவ வாகனங்கள் சுற்றி வளைத்தது. பயம் மக்களைக் கௌவிக்கொண்டது. கந்தையருக்குச் சிங்களம் கொஞ்சம் தெரியும். முன்னால் வந்து விசயத்தை விளக்கினார்.
வரிசையில் வரும்படி கட்டளைபிறந்தது. நடந்தார்கள். நடக்கத் தெம்பில்லை. சிலர் விழுந்து எழும்பினார்கள். வரிசை வளைந்து வளைந்து நகர்ந்தது. சனங்கள் வருவார்கள் என்று தெரிந்து இராணுவம் ஆயத்தமாகத்தான் இருந்தது. பிளாஸ்ரிக் தாங்கிகளில் தண்ணீர் வசதிகள் தெரிந்தன. லொறிகளில் உணவுப் பொட்டலங்கள் வந்தன. கொடுக்கத் தொடங்கினார்கள். உணவுப் பொட்டலத்தைக் கண்டதும் வரிசையாக வந்த மக்கள் வரிசை குழம்பி ஆளுக்காள் தள்ளுண்டு விழுந்து எழும்பி… பார்க்கப் பரிதாபமாகவும் கோபமாகவும் இருந்தது. “என்ன தமிழ் ஈழம் வேணாமா”? தவித்த முயல்களாக வந்தவர்களுக்கு சில சிப்பாய்களிடம் இருந்து நக்கலும் வந்தது. சில சிப்பாய்களுக்குச் சிரிப்பாக இருந்தது. அதே வேளை சிலருக்குப் பரிதாபமாகவும் இருந்தது.
இப்போது இந்தத் தமிழ் மக்கள் அடிமையாகி அகதிகளாகிவிட்டார்கள். ஒருபிடி உணவுக்காகவும், ஒதுங்கி உயிர்தப்புவதற்காகவும் அடங்கி ஒடுங்கி நின்றார்கள். புதுமாத்தளன் பகுதி இப்போது புகலிடமாகத் தெரிந்தது. பெயர்கள் பதியப்பட்டன. ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டார்கள். இளம் வயதினரை வேறாகப் பிரித்தெடுத்தார்கள். ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பதுபோல் கம்பிவேலி போட்டுக் காவலிருந்தார்கள். வெள்ளையர்கள் ஆபிரிக்காவினுள் புகுந்து பழங்குடி மக்களை வேட்டையாடிப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்துக் கப்பலில் கொண்டு போய் ஏலத்தில் விற்பார்கள். அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று பார்க்க மாட்டார்கள். தாய் வேறு, தந்தை வேறு, பிள்ளைகள் வேறாக விற்பார்கள். ஏலத்தில் வாங்கியவர்கள் அமெரிக்க நாட்டில் அடிமைகளாகத் தமது பருத்தித்தோட்டத்தில் வேலை செய்யப்பணித்தார்கள். கூலியில்லை. அரை வயிற்றுக்குக் கூழ்கிடைக்கும் உரிமையில்லை. சவுக்கடி கிடைக்கும். அதனை அறிவழகன் நினைந்து கொண்டான்.
இப்பொழுது ஒரு நிம்மதியைக் கண்டார்கள். வெடிச்சத்தமில்லை. பங்கரும் இல்லை. ஆனாலும் முள்ளுக்கம்பி வேலிக்குள் சிறைவாசம். “இப்ப எங்கட கையில ஒண்டுமில்ல. வீசின கையும் வெறுங்கையுமாக. உயிர்தப்பி வந்து சேந்திட்டம். இந்தக் கம்பி வேலிக்குள்ள வந்தாச்;சி. என்ன செய்யப் போறாங்களோ தெரியாது. எத்தனை மாதங்களுக்கு இப்படிச் சிறையிருப்பம்”? தமக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். கொழுத்தும் வெயில் சுட்டெரித்தது. “எல்லாரும் ஏறுங்க வண்டியில”. சிங்களத்தில் கட்டளை வந்ததும் ஏற்றப்பட்டார்கள். புதுமாத்தளன் கடற்கரைக்கு பஸ்வண்டி சென்றது. அங்கிருந்து படகுகளில் கப்பலுக்கு மாற்றப்பட்டார்கள். கப்பல் புல்மோட்டை நோக்கி நகர்ந்தது.
இருள் பரந்துகொண்டு வந்தது. சிறிய கடற்படைத்தளம் புடவைக்கட்டு ஆற்றுமுனையில் இருந்தது. கப்பல் ஜெட்டியில் தரித்ததும் பயணிகள் இறக்கப்பட்டார்கள். புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலையின் கட்டிடங்கள் தற்காலிக முகாமாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிக ஆஸ்பத்திரியும் உருவாகிவிட்டது. காயப்பட்டவர்களையும், நோய்வாய்ப் பட்டவர்களையும் ஆஸ்பத்திரி பாரமெடுத்தது. காயப்பட்டவர்களை யாரும் பார்க்க முடியாது. இந்திய டாக்டர்கள் கடமையில் ஈடுபட்டனர். அறிவழகனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன இது? டாக்டர்களா இராணுவத்தினரா? அவனுக்குப் பரியவில்லை. டாக்டர்களின் இடுப்பிலும் பிஸ்ரல்கள். பயமாக இருந்தது.
பாடசாலைக் கட்டிடங்கள் நிரம்பி வழிந்தது. உடலாலும் உள்ளத்தாலும் நொந்த மக்கள் கூனிக்குறுகிக் கிடந்தனர். அகதிமுகாங்களாயின. அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டன. சுற்றிவர ஆயுதமேந்திய இராணுவத்தினர் காவலிருந்தனர். இதில இயக்கத்தில் இருந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழல் பயிற்சி அளிக்கப் போகிறோம். அப்படிப் பட்டவர்கள் தமது பெயரைத் தரவேண்டும். நாங்களாகக் கண்டுபிடித்தால் தண்டனைதான். ஆறிவிப்பபைக் கேட்டதுமு; இளைஞர் யுவதிகளிடையே ஓரு புயல் உருவாகிவிட்டது. பலர் தொழில்பயிற்சி பெறுவது நல்லது. சுயதொழில் செய்து வாழலாம். பெயர்களைப் பதிந்தனர்.
சற்று நேரத்துக்கெல்லாம் வாகனங்கள் வந்தன. பெயர்பட்டியல் வாசிக்கப் பட்டது. “ஏறுங்கள் வாகனங்களில்.” கட்டளை பிறந்தது. பார்த்துக் கொண்டிருந்த வாட்டசாட்டமான இளைஞர் யுவதிகளையும் பலாத்காரமாக வேறு வாகனங்களில் ஏற்றினர். அறிவழகனும் ஏற்றப்பட்டான். வுhகனங்கள் புறப்பட்டன. “சட்டி சுடுகுதென்று பயந்து நெருப்புக்குள்ள விழுந்தமாதிரிக் கிடக்கு. அவங்கட கட்டுப்பாட்டுல இருந்தம். வீட்டுக் கொருவர் வாங்க. என்று பிடிச்சிக் கொண்டு போனார்கள். பயந்து இங்கால, இவங்களிட்ட வந்தால் எல்லாரையும் கொண்டு போறாங்க. யாரிட்டச் சொல்வது.? தமக்குள் சொல்லிச் சொல்லி தேம்பினார்கள். தூரத்தே சரமாரியாக வெடிச்சத்தங்கள் கேட்டன. மிஞ்சியவர்களை ஏற்றுவதற்கு வெற்று வாகனங்கள் மட்டும் திரும்பி வந்தன. சமைத்த உணவு பாத்திரங்களில் அப்படியே கிடந்தது. அங்கு இருந்தவர்களுக்குப் பசிக்கவில்லை.

Read more...

Friday, May 28, 2010

கும்பத்துமால்

அந்தக் கோயில் ஊரிலிருந்து ஒதுக்குப்புற எல்லையில் இருந்தது. கோயில் என்று சொல்வதற்கான கட்டிடங்;கள் இல்லை. வருசத்துக்கு ஒருமுறை வைகாசியில் ஊர் மக்கள் கூடுவார்கள். கோயிலடியைத் துப்பரவாக்குவார்கள். நீளமான கொட்டில் அமைப்பார்கள். கூரையை தென்னோலையால் வேய்ந்து சுற்றிவர அடைப்பார்கள். கொட்டிலின் உட்பக்கமாக வெள்ளை கட்டுவார்கள். சலவைத் தொழிலாளரின் பங்கு வேள்வி முடியும் வரை இருக்கும். கும்பத்து மாலினை இரண்டாகப் பிரித்திருப்பார்கள். முதலாவது அறையில் அம்மன் கும்பம் இருக்கும். அதனைத் திரை போட்டு மூடியிருப்பார்கள். பெரிய செப்புக் குடங்களில் வேப்பங்குழை பரத்தி அதன் மேல் அம்மன் உருப்பதித்து மந்திர உச்சாடனத்தோடு அம்மனை அதில் ஏற்றிவைப்பார்கள்.

இரண்டாவது அறையிலும் வேறு சிறுதெய்வங்களை வைத்திருப்பார்கள். கொட்டிலைச் சேர்த்தாற்போல் முன்னால் அழகான பந்தல் போட்டிருப்பார்கள். பந்தலில் கும்பம் வைக்குமுன் கன்னிக்கால் நடுவார்கள். அதனைச் சோடித்திருப்பார்கள். பார்ப்பதற்கு ஒரு இளம்பெண் நிற்பதுபோல் இருக்கும். அதற்கு நேரே பந்தலுக்கப்பால் வயிரவரின் பந்தல் அம்மனைப் பார்த்தபடி இருக்கும். அதற்கு முன்னால் விறகுகளை அடுக்கித் தீயிட்டுத் தணலை வளர்த்திருப்பார்கள். ஒரு பெற்றமக்ஸ் வெளிச்சம் மட்டும் இருக்கும். அரிக்கன் லாம்புகளும் உலா வரும். அம்மனை உச்சாடனத்துடன் கும்பத்தில் ஏற்றும்போது பூசாரியார் உணர்வு பூர்வமாகக் காணப்படுவார். அவரது உடல் சாமியாட்டம் போடும். கும்பத்தில் சோடனை செய்திருப்பார்கள். கும்பம் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். கும்பம் ஒற்றைப்படையாக இருக்கும். மூன்று தொடக்கம் ஐந்து கும்பங்கள் வரை நிரையில் வைப்பார்கள். அதற்கென விதிமுறைகளைப் பூசாரியார் தெரிந்து வைத்திருப்பார். ஏழு நாட்களுக்குக் கும்பத்துமாலில் வேள்வி நடக்கும். ஏழாவது நாள் ஆயுதபூசை. அடுத்தநாள் காலை குளிர்த்தி நடக்கும். மாலை ஊர்வலம் வரும். அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஈற்றில் கடலில் கும்பத்தைச் சொரிவார்கள்.

கும்பத்துக் காலத்தில் பூசாரியும் அவரோடு வேலைசெய்யும் உதவியாளர்களும் அங்கேயே தங்கி நிற்பார்கள். பயபக்தியாக சடங்குகள் நடக்கும். சடங்குகளில் மக்கள் தங்களை மறந்து ஈடுபடுவார்கள். மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக சடங்குமுறை அமைந்து விட்டது. மக்களிடையே பரஸ்பர நல்லெண்ணத்தை வளர்க்க உதவியாகவும் இருந்தது. பறைமேளங்கள்pன் ஒலியால் நாடும் காடும் அதிரும். உடுக்குகளின் இசை காதுகளில் ஒலிக்கும். அதிகாலையில் ஓரு பூசை. மதியம் ஒரு பூசை நடக்கும். இரவுவேளைப் பூசை ஏழெட்டு மணிக்குத் தொடங்கி பதினொரு மணிவரை நடக்கும்.

இரவுப் பூசையின் போதுதான் ஊர்மக்கள் அதிகம் கூடுவார்கள். சுமார் எட்டு மணிக்குப் பூசை தொடங்கும். பூசாரியார் மடை வைத்து ஆசாரங்கள் செய்வார். மடையில் வெற்றிலை பாக்கு, பழவகை, பொங்கலும் வைப்பார்கள். தேசிக்காய்ச் சாற்றில் சர்க்கரை சேர்த்து, அதற்குள் சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டு சுத்தமான தண்ணீரில் கலந்து வைத்திருப்பார்கள். அதனைப் பாணக்கம் என்பார்கள். பூசகர் பூசையின் போது உடுக்கடித்து மந்திரம் சொல்வார். உடுக்கடிக்கவும். மந்திரங்கள் சொல்லவும் அவருக்குத் துணையாக உதவியாளர்களும் இருப்பார்கள். உச்சக்கட்டப்பூசையின் போது பறைமேளங்களும் ஓங்கி ஒலிக்கும். உடுக்கு மந்திரத்துக்கு ஏற்ப பேசும். அப்போது திரை திறபடும். தீபம் காட்டப்படும். மந்திரம் ஓங்கி ஒலிக்கும். திரை திறந்ததும் “ஆ…ஊ….” சத்தங்கள் பறக்கும் உருக்கொண்டு சாமியாட்டம் நடக்கும். ஒவ்வொரு சாமியும், தனக்கென ஆட்டத்தைப் போடும். சாமியாடுபவர்களின் தலைகளில் தண்ணீர்க் குடங்களை எடுத்து ஊற்றுவார்கள். குடங்களில் தண்ணீர் கொண்டு வருவதற்கென்றே சிலர் இருப்பார்கள்.

பறைமேளத்துக்கும், உடுக்கு மேளத்துக்கும் போட்டி நடப்பதுபோல் ஒலிக்கும். அந்த ஒலிக்கு ஏற்ப சாமிகள் ஆடும். சாமியாடுபவர்கள் பறைமேளம் ஒலிக்கும் இடத்துக்குப் போவார்கள். மேளம் அடிப்பவர்கள் விரைந்தும் பலமாகவும் அடிப்பார்கள். அதற்கேற்ப சாமிகள் குதித்து ஆடும். சாமியாடுபவர்களது கண்கள் அரைவிழி மூடியபடி இருக்கும். சிலரது கண்கள் சிவந்து இருக்கும். பார்க்கப் பயமாகத் தெரியும். ஒரு கையில் சிலம்பினை அணிந்து, பொல்லொன்றை இரு கைகளிலும் பிடித்து குலுங்கி ஆடுவார்கள். சாமியாடுபவர்கள் கட்டுச் சொல்வது வழக்கம். அதற்காகவே மக்கள் கும்பத்துமாலுக்கு வருவார்கள். எல்லாச் சாமிகளும் வாய் பேசாது. சில சாமிகள் மட்டும் கட்டுச் சொல்லும். மனதில் உள்ள குறைகளுக்கு சாமிகள் பரிகாரம் சொல்வதைத்தான் கட்டுச் சொல்வதென்பார்கள். சாமி ஆடிமுடிந்ததும் மலையேறிவீடும்.

நாட்டில் ஏற்பட்ட யுத்த நடவடிக்கைகளால் மக்கள் அகதிகளாவும், அனாதைகளாகவும் ஆக்கப் பட்டனர். பலர் கொல்லப்பட்டார்கள். பொத்துவில் தொடக்கம் பருத்தித்துறை வரை இளைஞர்கள் பலர் காணமல் போனார்கள். சொந்த நாட்டுக்குள்ளும் நாடோடிகளாக ஆக்கப்பட்டு அகதிகளானார்கள். பலர் படகுகளில் இந்தியாவுக்குப் போனார்கள். இடம் பெயரந்து வன்னிப் பக்கம் போனார்கள். யுத்தம் பூதாகரமாய் மூண்டது. கொத்தணிக்குண்டுகள் மக்களை அழித்தன. விமானங்களும், ஆட்டிலறிக் குண்டுகளும், ஷெல்லடிகளும் வெடித்து உடல்சிதறிச் செத்தார்கள். பாதுகாப்புக்காக அமைத்திருந்த பதுங்கு குழிகளுக்குள்ளேயே பலர் சங்கமமானார்கள். மாவிலாற்றில் தொடங்கிய யுத்தம் மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் கடற்கரையோரம் வரை சுடுகாடாய்ப் போனது. ஏங்கும் பிணக்குவியல். சரணடைந்தவர்களது கதி தெரியவில்லை. அப்பாவிகள் வவுனியா அகதிமுகாமில் இருந்து முட்கம்பி வேலிகளுக்குள் தவமிருந்தார்கள். பின் ஊரூராய் அலைந்து எஞ்சியவர்கள் தங்கள் சொந்த ஊரில் மீளக்குடியேறினார்கள். கந்தையர் மனதில் பழையன வந்து படம்காட்டியது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டார்.

குடியேறிய மக்களின் மனங்கள் வாடிக்கிடந்தன. சொந்தங்களைத் தொலைத்து விட்ட சோகம். ஒன்றிலும் உற்சாகமில்லாமல் தவித்தார்கள். இப்படியே விட்டால் இவர்களின் வாழ்க்கை என்னவாவது? ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ? வீடுதோறும் சென்று ஆறுதல் கூறினார். துயரங்களால் ஏற்பட்ட கண்ணுக்குப் புலனாகா மனவடுக்களைப் போக்கவல்லது எது? குhலம்தான் மனக்கவலையை மாற்றவல்லது. பாரம்பரியக் கலாசரங்களும் கலையம்சங்களும் அவற்றைக் குறைக்கும் என்பதைக் கந்தையர் தெரிந்து வைத்திருந்தார். இளைஞர்களைப் பார்த்துக் கந்தையர்தான் சொன்னார். “தம்பிமார் எல்லாத்தையும் இழந்துபோட்டம். இனி இழக்க ஒன்றுமில்ல. நாங்க இப்படி இருந்தமென்டால் எங்கட பழக்க வழக்கமெல்லாம் மறஞ்சிடும். ஏங்கட பாரம்பரியங்களை விடாமல் காப்பாற்ற வேண்டும். மக்களின் மனங்களில் மீண்டும் சந்தோசத்தை வரச் செய்வம். இந்த முறை கும்பம் வைப்பம்.” எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார். இளைஞர்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஊரில் மிஞ்சியிருந்த பெரியவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.

“தம்பிமார் வைகாசிக் கும்பம் நமது ஊரில் விஷேசம். அதைச் செய்வம். போன வைகாசியில நமது சனங்கள்ல அரவாசிப்பேருக்குமேல அழிஞ்சு போச்சுதுகள். இப்ப இருக்கிற நாங்களாவது செய்வம். எல்லாரும் ஒத்துழைச்சால் இருக்கிற சனங்களின் மனத்துயரையாவது போக்கலாம். முதலில் அம்மன் கோயில் பக்கம் போய் வெளியாக்கி கும்பத்துமாலை அமைப்பம். புறப்படுங்க”. கந்தையர் எடுத்த முடிவு சரியாகப் பட்டது. கும்பம் வைப்பதற்கான ஏற்பாடுகளையும் கந்தையர் ஒழுங்கு செய்துவிட்டார்.

“அதுதான் அம்மன் நகர். வாங்க போவம்”. கந்தையர் இடத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டு நடந்தார். அவரைத் தொடர்ந்து பல இளைஞர்கள் நடந்தார்கள். “எல்லாம் காடு பற்றிப்போய்க்கிடக்கு. சனங்கள் இருந்த இடமெல்லாம் யானைகளின்ட ராச்சியமாப் போச்சு” இளையவர் பெருமூச்சுடன் சொன்னார். “இதுலதான் கோயில் இருந்தது. இதில இருந்த பெரிய காட்டுத்தேங்கா மரத்தக் காணல்ல. அடையாளமே தெரியல்ல”. சொல்லிக் கொண்டு தேடினார்கள். சித்திரத்தாரின் கண்கள் கூர்மையானவை. “இந்தாருக்கு. இந்தக்கல்லிலதான் வயிரவர்ர சூலம் இருந்தது. நல்ல காலம் இந்தக் கல்லாவது இருக்குதே”. கிடைக்காததொன்று கிடைத்த சந்தோசம். சூழ்ந்து நின்று பார்த்தார்கள்.

“இனிப்பாத்துக் கொண்டு நிக்கேலாது. சட்டுப்புட்டென்று வேலய முடிக்க வேணும்”. சிரமதானத்துக்கு ஆயத்தமானார்கள். “முதல்ல அம்மன் கோயில் இருந்த இடத்தத் துப்பரவாக்குவம்”. தொடங்கினார்கள். பற்றைக் காடுகளை வெட்டி இழுத்துக் குவித்தார்கள். காட்டுத்தடிகளை வெட்டிக் கொட்டிலமைத்தார்கள். கிடுகுகளைக் கொண்டு கூரையை வேய்ந்தார்கள். வைரவர் கல்லை மையமாக வைத்து மூன்றடி உயரத்துக்குக் காட்டுத் தடிகாளால் பந்தல் அமைத்தார்கள். கோயிலடிக்குப் போவதற்கான ஒற்றையடிப் பாதையும் தயார். குப்பைகளைக் கூட்டித் தீயிட்டார்கள். நிழல்தரு மரங்களை அப்படியே விட்டார்கள். அவர்கள் கோயிலடியை வெளியாக்கி விட்டார்கள். ஒரு கிராமத்து மக்களை உள்ளடக்கக் கூடியதாக வெளி தெரிந்தது. வேலையில் கவனம் இருந்தாலும் கந்தையரின் மனதில் பழைய அனுபவங்கள் இழையோடின.

சம்பிரதாயப்படி பூசாரியாருக்குப் பச்சைப் பெட்டி அனுப்பியாகி விட்டது. பச்சைப் பெட்டி என்பது பூசாரியாருக்கு உரிய அழைப்பு மரியாதை. ஒரு பனையோலையால் இழைத்த பெரிய கடகப் பெட்டிக்குள் மரக்கறி வகைகள், அரிசி தேங்காய், வேட்டி சால்வை அனைத்தும் இருக்கும். கணபதிப்பிள்ளைப் பூசாரியாரும் உதவியாளர்களும் வந்து விட்டார்கள். உரிய பொருட்களைக் கணபதியார் பட்டியலிட்டு அனுப்பியிருந்தார். கந்தையர் இளைஞர்களை முடுக்கிவிட்டார். பொருட்கள் வந்திறங்கின. வெள்ளை கட்டுவதற்கு சலவைத் தொழிலாளரைத் தேடினார். அவர் இல்லை. கிராமத்தில் இருந்த தொழிலாளர் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வன்னியில் இருந்தன. அங்கு எறிகணைகள் வந்து விழுந்து வெடித்துப் பலியெடுத்துவிட்டது. “எப்படி வெள்ளை கட்டுவது?” கிணறுவெட்டப்பூதம் புறப்பட்ட கதை மாதிரியாகிவிட்டது. இந்த யுத்தம் எல்லாரையும் பாதித்துவிட்டது. கந்தையருக்கு யோசனை பிடித்து விட்டது.

“கந்தையாண்ணே! ஏன் யோசிக்கிறியள். நாங்கள் வெள்ளை கொண்டுவந்து கட்டிறம்”;. வீடுகளில் இருந்து வேண்டிய துணிகள் கிடைத்தன. இளைஞர்கள் வெள்ளை கட்டிவிட்டார்கள். பறை மேளம் இருந்தது. அடிக்க ஆட்கள் இல்லை. கொடிய போரின் தாக்கத்தை அப்போதுதான் உணர்ந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் இந்த யுத்தம் ஏதோ ஒருவகையில் தாக்கியுள்ளதைக் கந்தையர் புரிந்துகொண்டார். “எங்களுக்கு மேளம் அடிக்கத் தெரியம், நாங்க இருக்கிறம்”. இளைஞர்கள் இடைவெளியை நிரப்பினார்கள்.

கந்தையருக்குத் தெம்பு வந்துவிட்டது. பூசாரியார் தனது வேலைகளைத் தொடங்கி விட்டார். இளைஞர்கள் பம்பரமானார்கள். பந்தலை தாங்கியிருந்த கப்புகளுக்கு வெள்ளைத் துணிகளைச் சுற்றினார்கள். வயிரவர் பந்தலில் வெடித்துப் பூமலர்த்த பாளையைக் கட்டவேண்டும். தென்னஞ்சோலையாக இருந்த கிராமங்களில் வட்டுத்தெறித்த தென்னைகள்தான் மிச்சமாய்க் கிடந்தன. தப்பியிருந்த தென்னைகளில் இருந்து தெரிந்து ஒரேயொரு பாளையைக் கொண்டுவந்து கட்டினார்கள். வைரவர் பந்தல் அம்மனைப் பார்த்தபடி இருந்தது. கன்னிக்கால் நாட்டும் சடங்குகளைச் செய்வதற்குப் பூசாரியாருக்கு உதவினார்கள். சிலர் பறைமேளம் அடிப்பதில் கவனஞ்செலுத்தினார்கள். கந்தையருக்கு உலக மாற்றங்களையிட்ட சிந்தனை பிடித்து விட்டது. “பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல” தனக்குள் பண்டிதத் தமிழில் சொல்லிச் சிரித்துக் கொண்டார். வேலைகள் துரிதமாகிக் கொண்டிருந்தன. திடீரென பல்லாயிரக்கணக்கான அழகான வண்ணத்துப் பூச்சிகளின் படையெடுப்பு. குஞ்சு குருமானாய், பாட்டம் பாட்டமாக வட்டமடித்த வண்ணம் பறந்து அந்த இடத்தினைச் சூழ்ந்து கொண்டன. சிறுவர்களுக்குக் கொண்டாட்டம். அவற்றுக்குப் பின்னால் சுற்றினார்கள். அவை பிடிபடாமல் பறந்து திரிந்தன.

அந்திவானம் செம்மை காட்டியது. எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. பூசாரியார் குளித்து வெள்ளையுடுத்து, திருநீறு பூசி அட்டகாசமாகக் காட்சியளித்தார். அவரைப் பார்த்த சிறுவர்களுக்குப் பயமாகவும் இருந்தது. யுத்த டாங்கிகளையும், போர் விமானங்களையும் கண்டு பழக்கப் பட்டவர்களுக்கும் பூசாரியாரின் தோற்றம் கிலியைத் தந்தது. ஒருவரில் ஒருவர் ஒளிந்து பார்த்தார்கள். அவர் மந்திர உச்சாடனத்தில் இருந்தார். அம்மனைக் கும்பத்தில் இருத்துவது இலகுவானதல்ல. மந்திரங்கள் முழங்கின. பறைமேளம் ஒலித்தது. பூசை மணியும், உடுக்கொலியும் சேர்ந்து கொண்டது. ஆட்டிலறிக் குண்டுகளும், ஷெல்வெடிச் சத்தங்களுக்கும் நடுங்காத சிறுவர்கள் இந்த பறைமேளத்தின் சத்தத்துக்குப் பயந்தார்கள். வெடிச்சத்தங்களுக்கு நெஞ்சு படபடக்கும். உடுக்கு, மந்திர ஓசைகளுக்குத் தங்கள் உடல் யாவும் உதறல் எடுத்ததை உணர்ந்தார்கள். பூசாரியார் அம்மனுக்கு உருவேற்றி கும்பத்தில் அமர்த்தும் போது அவரையறியாமல் “ஹா …” என்று அலறிவிட்டார். சனங்கள் திறந்த கண்மூடாது பார்த்திருந்தார்கள்.

மடை வைத்துப் பூசைதொடங்கித் திரை திறந்ததுதான் தாமதம். ஒருவர் “ஹா…ஆ…” சத்தத்துடன் உடலை வளைத்து, முறுக்கி நிலத்தில் விழுந்து புரண்டார். கும்பத்துமாலின் கருவறைக்குள் நுழைந்து முழங்காலில் கிடந்து சாமியாடினார். அவரின் தலையில் தண்ணீர் கொட்டப்பட்டது. இன்னும் சிலர் ஆடினார்கள். அவர்களைச் சூழ்ந்து மந்திரம் ஓதினார்கள். உடுக்கு முழங்கியது. சனங்கள் குவிந்து விட்டார்கள். சனங்கள் இருந்த இடத்தைவிட்டு எழும்பினார்கள். அவர்களை அமர்ந்திருந்து பார்க்குமாறு இளைஞர்கள் கேட்டு;க் கொண்டார்கள். ஆண்கள் ஒருபுறம் இருந்தார்கள். பெண்கள் ஒருபுறமாக இருந்தார்கள். சனங்களின் முகங்களில் பிரகாசம் தெரிந்தது. அவர்கள் தங்கள் துயரங்களில் இருந்து விடுபடும் நிலைக்கு வந்து கொண்டீருந்தார்கள். தங்கட பிள்ளைகளைப்பற்றிக் கட்டுக் கேட்க ஆவலாய் இருந்தார்கள். கந்தையரின் மனதில் சந்தோசம். பாட்டம் பாட்டமாக வண்ணத்துப் பூச்சிகள் வந்தன. எங்கும் பரவிப் பறந்தன. சனங்களில் முட்டி மோதித் திரிந்தன. எவ்வளவு துரத்தியும் முடியவில்லை. வருவதும் போவதுமாகப் பறந்து திரிந்தன. கும்பத்து மாலுக்குள்ளும் சென்று வந்தன.

சனங்களைவிடவும் வண்ணத்துப் பூச்சிகள் அதிகமாயிருந்தன. அங்குமிங்கும் முன்னும் பின்னும் பறந்து திரிந்தன. “எங்கிருந்து இவ்வளவு வண்ணத்துப் பூச்சிகளும் வருது? ஏன்றுமில்லாமல் இப்படிப் பறந்து திரியுதுகள். புதினமாய்க் கிடக்கு.” சனங்களுக்கு அதிசயங் கலந்த ஆச்சரியம். “நானென்டா என்ர வாழ்நாள்ல இப்படி ஓரு புதினத்தக் காணல்ல” வயதில் மூத்த சின்னராசா சொன்னார். உள்ளே சென்ற சாமி வெளியில் வந்து இளைஞரின் மேள இசைக்கு ஏற்பக் குலுங்கியாடியது.

கன்னிக்கால் பக்கத்தால் குலுங்கி ஆடிச் சென்றது. விறகு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. அவ்விடத்தில் சில இளைஞர்கள் எதிரெதிராக நின்றனர். அவர்கள் கைகளில் திருநீறு இருந்தது. வாய்கள் முணுமுணுத்தன. சாமியை நோக்கி மந்திரங்களை முணுமுணுத்து திருநீற்றை “சூ.....“வென்று ஊதினார்கள். அவர்களைச் சாமி பார்த்து நெஞ்சில் கையை வைத்து “என்னை அசைக்க முடியாது.” சைகை காட்டிச் சென்றது. சாமியின் பின்னாலும் வண்ணத்துப் பூச்சிகள் சுழன்று திரிந்தன. “இந்த வண்ணத்துப் பூச்சிகளால கரச்சலாக்கிடக்கு. இதுகள் எங்கிருந்து வருது?”. சனங்கள் ஆளுக்காள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்தது. சாமி தீயை மிதித்துக் குதித்து ஆடி வந்தது. தலையை நீட்டி “ ம்ம்…” என்று நின்றது. புரிந்து கொண்ட இளைஞர்கள் தலையில் தண்ணீரை ஊற்றினார்கள். கும்பத்து மாலினுள் சென்று சாட்டையை ஏந்தி வந்தது. இளைஞர்களைத் தாண்டிச் சென்றது. சுந்தரலிங்கத்தார் மறைந்து நின்றார். அவரைக் கண்டு கொண்டு அவரிடம் சாட்டையைக் கொடுத்து முழங்காலில் நின்று “ஹா…..” சத்தமிட்டு கைகளை இருபுறமும் நீட்டியது.

சுந்தரலிங்கத்தார் சாட்டையைக் கையிலேந்தி மந்திரித்தார். ஒவ்வொரு கையிலும் மூன்று மூன்று சாட்டையடி கொடுத்தார். முடிந்ததும் சாமியிடம் சாட்டையைக் கொடுத்தார். சாமி கும்பத்து மாலினுள் சென்று சாட்டையை ஒப்படைத்துக் கலையோடு ஆடியது. பூசாரியார் பலத்த சத்தத்தோடு மந்திரித்தார். சாமி வெளியே வந்து கன்னிக்காலுக்கு அண்மையில் மண்டியிட்டுச் சர்வாங்காசனத்தில் கிடந்தது. இரு கைகளிலும் வேப்பங்கொத்தினைப் பிடித்தபடி இரு தொடைகளிலும் ஊன்றித் தலையைச் சுழற்றி ஆட்டியது. மூச்சு விரைந்து கனலாகப் பறந்தது. பின் இருகைளையும் நிலத்தில் ஊன்றிக் குலுங்கிக் குலுங்கி அழுதது. தலையைச் சுழற்றிப் பலமாகக் கலையோடு ஆடியது. சனங்கள் கவலையோடு பார்த்தார்கள். தங்கட பிள்ளயளப் பற்றிக் கட்டுக் கேட்கும்படி பூசாரியிடம் சொல்லி வைத்தார்கள். பூசாரி வந்தார். மந்திரித்த தண்ணீரைத் தெளித்தார். “எந்தத் தெய்வம் என்று சொன்னால்தான் அதற்குரிய மந்திரத்தைச் சொல்லலாம்.” கண்களை மூடி மந்திரத்தை ஓதினார். கேள்வி கேட்டார்.
“சரி…. ஆர்.. நீ? சொல்லு”.
“ நான் அம்மன்”
“எந்த அம்மன்?”
“ வன்னித் தெயவம் வற்றப்பளை அம்மன்.”
சனங்களின் வாய்களில் இருந்து ‘வற்றாப்பளை அம்மன்’ ஒலித்தது.
“ எங்கட பூமரங்களெல்லாம் எங்கம்மா” மனங்கள் குலுங்கின
சாமி குலுங்கி அழுதது. நிமிர்ந்து பூசாரியைப் பார்த்தது. இன்னொரு சாமி ஆடிக்கொண்டு வந்தது. அவ்விடத்தில் வந்து நின்றது. நடப்பதைப் பார்த்தது. பூசாரியார் அதற்கு மந்திரித்த தண்ணீரைத் தெளித்துத் திருநீற்றைப் ‘பூ…’ என ஊதிவிட்டார். அந்தச் சாமி ஒருவித சந்தேகப் பார்வையை வீசி அப்பால் நகர்ந்தது. அது போனதும் கலையோடு; தலையைச் சுற்றி ஆவேசமாய் சாமி ஆடியது. சனங்களை நிமிர்ந்து பார்த்தது. தரையில் குழியைக் கிண்டியது. சைகை செய்தது. அந்தக்குழியை கையால் மூடியது.
“மண்ணுக்க….. விதைச்சிப் போட்டாங்க… புதைஞ்சு போய்க்கிடக்குதுகள் … …..”
சனங்களின் கண்கள் பனித்தன. “ எப்பம்மா பூமரங்கள இனிப் பார்க்கப் போறம்?”
சனங்கள் அங்கலாய்ந்தார்கள். சாமி கைகளை விரித்தது. சனங்களையம் ப+சாரியையும் சுற்றிப் பார்த்தது. அட்டகாசமாயச் சிரித்தது. இரண்டு கைகளையும் விரித்து வண்ணத்துப் பூச்சிகளைக் காட்டி “ உங்கள ….. சுத்திப் பறந்து ……. திரியுது… பார்..” சொல்லி முடிந்ததும் சாமியாடியவர் சரிந்து கிடந்தார். சிறிதும் பெரிதுமாய் பல்லாயிரக்கணக்கில் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. சனங்கள் விறைத்து நின்றார்கள்.

Read more...

Thursday, May 27, 2010

என்னுரை - முடிவுரை

இந்த நாவலை எழுதவேண்டும் என்று பல ஆண்டுகளாக முனைந்தேன். சந்தர்ப்பம் கிடைக்காது போயிற்று. இது கற்பனைகலந்த உண்மை. இதில் வரும் கதாபாத்திரங்களில் பல உண்மையானவை. இக்கதையில் வரும் வதைபட்ட காதாபாத்திரங்கள் உங்களில் ஒருவராகவும் புலம்பெயர்ந்து இருக்கலாம். பலர் விதக்கப்பட்டும் இருக்கலாம். ‘நான் பெற்ற துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’ என்பதற்காக இதனை எழுதத் துணிந்தேன். என்னுடன் 1983 தொடக்கம் 1991 வரை வவுனியாவில் வட்டாரக்கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. செல்வராசா கணபதிப்பிள்ளை அவர்கள் இதனை நாவலாக எழுதும்படி வற்புறுத்தி இருந்தார். அவரது வேண்டுகோள் இந்த நாவல்மூலம் நிறைவேறுகிறது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதை நானறியேன்.

சம்பவங்கள் பல நிறைந்துள்ள இந்நாவலில் இன்பமும், துன்பமும், சமூக அவலங்களும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். நாம் நல்லனவற்றைச் செய்தால் நன்மைதான் விளயும். சுடச்சுடத்தானே பொன் மிளிரும். அதைப்போன்றுதான், மனிதனுக்குத் துயரங்கள் வரும்போது அவற்றை நமக்கு வரும் சோதனைகளாக எடுத்துக் கொண்டால் வெற்றி காண்பது உறுதி. ‘சவாலே சமாளி’ என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்று ஏன்சொன்னார்களோ தெரியாது. சிலர் அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துவதையே காண்கிறோம்.

இந்த நாவலில் வரும் நிகழ்வுகள் 1984 - 86 வரையான காலப்பகுதிக்குரியன. அக்காலப் பகுதிக்குள் நமது நாட்டுநிலையைச் சொல்வதாக இருந்தாலும் அதற்கு முன்னர் 1959-1976 வரையான காலப் பகுதிகளிலும், பின்னரும் நடந்தேறிய சில சம்பவங்களும் சுவையூட்டுவனவாக உள்ளன. நமது இளைஞர்களின் துயரங்களும் அதனால் அல்லலுற்ற பெற்றோரின் அவலங்களும் விபரிக்கப் படுகின்றன. இந்த நாவலூடாகச் சில வரலாற்றுப் பதிவுகளையும் சேர்த்துள்ளேன். நானில்லாத காலத்தில் எனக்குப் பின்வரும் சந்ததியினருக்காகச் சில தடயங்களைச் சொல்லிவைப்பது எனது கடமையென உணர்ந்ததால் அவ்வாறு செய்தேன். படித்து அறிந்து கொள்வது வாசகர்களாகிய உங்களது கடமையாகும். ‘நான் பட்ட துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’. சிறப்பாகத் தமிழ் இளைஞர்கள் பெறாதிருக்கப் பிராத்திக்கின்றேன். ‘சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்தொன்றாய் வாழா’த தமிழினத்தில் ‘தமிழனுக்குத் தமிழனே எதிரி’ என்பதனையும் ‘தமிழர்கள் என்று ஒன்று படுவார்களோ அன்றுதான் தமிழினத்துக்கு விடிவுநாளாகும். என்பதனையும் உணர்ந்து செயற்படுங்கள்.

உலகெங்கும் செறிந்து வாழும் தமிழர்களுக்கு இந்த நாவல் கொண்டுள்ள கருவைப் புரியவைக்க வேண்டும் என்ற பேரவாவினால் உங்களுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன். தமிழர் போராட்டம் தொடங்கியதற்கான காரணங்கள், தமிழ் இளைஞர்களை எவ்வாறு திட்டமிட்டுச் சித்திரவதை செய்து அழித்;தார்கள், எத்தனை இளைஞர்களும், யுவதிகளும் இன்றும் சிறைக்கைதிகளாகக் கூண்டில் கிடந்து வாடுகிறார்கள் என்பதனை நானறிவேன். அவர்களுக்காகக் குரல் எழுப்புவதற்கு நமது தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களைத் தேடுகிறேன். இக்கதையில் உயிரோட்டமாக உள்ளே புதைந்துள்ள கருவைப் படியுங்கள். ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்துள்ளும் புதையுண்டு கிடக்கும் சோகம் இழையோடும். பிள்ளைகளைப் பறிகொடுத்து ஏங்கும் பெற்றோர்களது உள்ளக் குமுறல்கள் புரியும். இதில் வரும் கதாபாத்திரங்கள் அடிபட்ட அனுபவத்தோடு புலம்பெயர்ந்தும் இருக்கிறார்கள். ஆனால் என்போன்றவர்கள் இன்றும் போராடிக் கொண்டே இருக்கிறோம். இவற்றையெல்லாம் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரும் படித்து இப்படித்தான் இலங்கைத் தமிழர் வாழ்க்கை முறை என்பதைப் புரிந்து கொள்ளட்டும். நாங்கள் செத்துக் கொண்டே வாழ்கிறோம். ஆனந்தவெளியில் உள்ள கதைகளையும் படியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பெரிதும் வரவேற்கிறேன்.

நன்றியுடன்

ச.அருளானந்தம்
(கேணிப்பித்தன்)

Read more...

Friday, May 21, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

30

இன்ஸ்பெக்டர் திசநாயக்க அருகில் வந்தார். சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார். "மிஸ்ரர் ஆனந்தன். நீங்க இப்படியே வெளியில் போனால் உங்களப் புலி என்று மீண்டும் பிடித்துக் கொண்டு வருவாங்கள். வாங்க ஜீப்பில போவம். ஏறுங்க“ அவரது கட்டளை சரியாகப்பட்டது. ஏறினான். ஜீப் சலூனுக்குச் சென்றது. அவர் இறங்கச் சொன்னார். "முதலில் சேவ் எடுப்போம். பிறகு குளிப்போம். ஒரு இடத்தில் சாப்பிடுவோம். பிறகு உங்கள் அலுவலகத்தில் விட்டுவிடுகிறேன். சரியா“? விளக்கினார். சலூனுக்குள் சென்றார். சேவ் எடுத்து விடுமாறு சொன்னார். அவர் தானும் சேவ் எடுத்தார். கண்ணாடியில் அப்பொழுதுதான் தனது முகத்தை ஆனந்தன் பார்த்தான். ஒவ்வொரு நாளும் சேவ் எடுத்துப் பழகியவன். இப்போது தாடி மீசை தன்பாட்டில் விருப்பம்போல் வளர்ந்திருந்தது. அவனை அவனாலேயே நம்பமுடியாதிருந்தது. பயங்கரத் தோற்றத்தில் இருந்தான்.

சலூன்காரர் முதலில் அடையாளம் காணவில்லை. சேவ் எடுத்தபின்தான் கவனித்தார். "சேர் நான் முதல் மட்டுக்கட்டல்ல இப்பதான் தெரியுது“. அனுதாபத்தோடு சொன்னார். இன்ஸ்பெக்டரே காசைக் கொடுத்தார். முதலில் சலூன்காரர் வேண்டாமென்றார். இன்ஸ்பெக்டர் வற்புறுத்திக் கொடுத்தார். பெற்றுக்கொண்டார். முடிந்ததும் வாடிவீட்டுக்கு ஜீப் சென்றது. கருணாமுர்த்தி காத்திருந்தார். ஆனந்தனை "வாங்க சேர்“ என்று வரவேற்றார். "சேர் இந்த அறையைப் பாவியுங்க. குளிப்பதற்கு ஏற்றவசதிகள் இருக்கு. நல்லாக்குளிச்சிட்டு வாங்க. உங்கட உடுப்பும் இருக்கு. யோகதாஸ் கொண்டு வந்து வெச்சவர்“;. அன்புடன் கூறினார். ஆனந்தன் அறையினுள் புகுந்து குளித்தான். உடல் சுகமாக இருந்தது. பாவம் அலெக்ஸ் நினைத்துக் கொண்டான். தனக்காக எத்தனைபேர் உதவுகிறார்கள். அவர்களை அடிமனதிருத்தி நன்றி நவின்றான். குளித்து உடைகளை மாற்றி வெளியில் வந்தான். இன்ஸ்பெக்டர் ‚பியரில’; லயித்திருந்தார். "மிஸ்ரர் ஆனந்தன் இது நல்லது கொஞ்சம் எடுங்க“. இன்ஸ்பெக்டர் அழைத்தார். "நோ..தாங்கியு பழக்கமில்லை இன்ஸ்பெக்டர். நீங்க எடுங்க“ பதிலளித்தான்.

பகல் சாப்பிடும் போது இரண்டு மணியாகியிருந்தது. சாப்பாடு முடிந்தது. கருணாமூர்த்தியை அழைத்தான். பில்லைக் கேட்டான். "சேர் மன்னச்சிக் கொள்ளுங்க... இதெல்லாம் எனது கணக்கு. உங்களுக்குச் செய்யாட்டி யாருக்குச் செலவழிக்கிறது“. சொல்லிக் கொண்டே தனது வேலைகளில் கருணாமூர்த்தி ஈடுபட்டார். இன்ஸ்பெக்டர் ஜீப்பில் ஏற்றி கல்வித் திணைக் களத்தில் விட்டு விடைபெற்றார். யோகதாஸ் ஓடிவந்து கட்டிப்பிடித்து அழத்தொடங்கி விட்டார். ஆனந்தனுக்குப் பெரும் சங்கடமாக இருந்தது. அலுவலகத்தில் உள்ளவர்கள் எழுந்து ஓடிவந்து நலம் விசாரித்தார்கள். பிரதிக் கல்விப்பணிப்பாளர் செல்வம் பாய்ந்து வந்தார். அவரது கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. பெரிய கூட்டமே கூடியிருந்தது. „அரசினரின் விருந்தாளியாக அழைக்கப் பட்டிருந்தேன். நல்ல விருந்து தந்தாங்க. போதும போதும் என்றாகியது. அலுத்து விட்டது. அனுப்பிவிட்டாங்கள். வந்திற்றன்“. தனது நகைச்சுவையோடு அனுபவத்தை எடுத்து விட்டான்.

நேரே கல்விப் பணிப்பாளரிடம் சென்றான். ஆனந்தனைக் கண்டதும் அவருக்குச் சொல்லவொண்ணா மகிழ்ச்சி. "வாங்க மிஸ்ரர் ஆனந்தன். எப்படி இருக்கிறீங்க“?. மேசையில் இருந்த மணியை அழுத்தினார். கேட்டதும் சந்திரன் வந்தார். சந்திரன் ஆனந்தனோடு மிகுந்த பாசமுடையவர். அவரது மனைவி கலா பொலிஸ் நிலையத்துக்கு வந்து அழுதேவிட்டார். "சந்திரன்! ஏ.ஓ.வைக் கூப்பிடுங்க“. சந்திரன் அவரை அழைக்கப் போனார். ஏ.ஓ பாலசிங்கம் வந்தார். பாலசிங்கம் மிக நல்லமனித நேயங்கொண்ட நிர்வாகி. எல்லாரோடும் அன்பாகப் பழகுவார். "ஏ.ஓ. மிஸ்ரர் ஆனந்தன் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார் என்று கல்வி அமைச்சுக்கு அறிவியுங்க. எக்கவுண்டன் இல்லையா? வரச் சொல்லுங்க. ஆனந்தனது சம்பளப் பட்டியலைத் தயாரித்து சம்பளத்தைக் கொடுக்கச் சொல்லுங்க“. ஒரு கனவுபோல் நடந்தேறிக் கொண்டிருந்தது. ஆனந்தன் கேட்கமுதலேயே கல்விப் பணிப்பாளர் யாவற்றையும் செய்து விட்டார். நன்றி கூறி வெளியில் வந்தான். தான் கடமையேற்றுள்ளதாகக் கடிதம் தயாரித்துக் கொடுத்தான்.

அலுவலகக் கடமைகள் முடிந்து அனைவரும் போய்விட்டார்கள். ஆனந்தன் தனது அறையில் இருந்தான். அதிபர் பாலசிங்கம் தேடிக்கொண்டு அலுவலகம் வந்து விட்டார். "சேர் அலெக்ஸ் தனியத்தான் இருக்கிறார். கண்டதும் கண்கலங்கினார். வருத்தம்தான். என்ன செய்யிறது? ஆறுதல் சொல்லி உணவும் கொடுத்து விட்டுத்தான் வருகிறேன். அவரின் கோவையை உரிய பொலிஸ்காரர் வந்து பூரணப்படுத்துகிறார். கதைச்சனான். நாளைக்குக் கட்டாயம் விடுவார்களாம். பாலசிங்கத்தின் சொற்கள் சற்று ஆறுதலாக இருந்தது. "இப்ப பொலிஸ் நிலையம் போகேலாது. காலையில போய் பாருங்க சேர்“. கூறியதும் பாலசிங்கம் வடைபெற்றுச் சென்றார்.

யோகதாஸ் வந்தார். "யோகதாஸ் .... வாங்க... என்ன புதினம்“? விசாரித்தான். "இப்ப கந்தோர் முன்னமாதிரி இல்ல சேர். எல்லாரும் பயந்து பயந்து இருக்கிறாங்க. எங்கும் பிரச்சினைதான். இளைஞர்கள்தான் கஸ்டப்படுகிறார்கள். தாய் தந்தைமார் அதைவிடப் பயந்து சாகிறார்கள். தங்கட பிள்ளயள வெளிநாட்டுக்கு அனுப்ப ஓடித்திரியுறாங்க. ஏழைகள் எங்க சேர் போகுங்கள்“? கவலையோட நாட்டு நடப்பைக் கூறினார். எப்படி இருந்த நாடு. இப்படிப்போயிற்று. மாலை ஐந்து ஆறுமணிக்கு ஊரெல்லாம் அடங்கி விடுகிறது. நகரிலும் சனநடமாட்டம் குறைந்து வருகிறது. இராணுவ நடமாட்டம்தான் அதிகரித்திருந்தது. யோகதாஸோடு சேர்ந்து உண்டான். சரியான அயர்வாக இருந்தது. உடலெங்கும் வலித்தது. நீட்டி நிமிர்ந்து உறங்கிவிட்டான். வழமைபோல் உறக்கம் கலைந்தது. நேரத்தைப் பார்த்தான். அதிகாலை நான்குமணி. கண்களை மூடியபடி தியானத்தில் ஆழ்ந்தான். இரவு முழவதும் விடாத மழை பெய்தது. எங்கும் மழைநிர் வெள்ளமாக ஓடியது.

தியானம் முடிந்து கண்களைத் திறந்தான். கதவு தட்டப்பட்டது. மெதுவாகத் திறந்தான். "குட்மோர்னிங்.. காவ் சம் ரீ.“ இரண்டு கைகளிலும் தேநீரக்; கோப்பைகளோடு பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வம் நின்றார். அவரைப் பார்த்தும் சிரிப்பாக இருந்தது. தலையில் துவாயால் மூடியபடி மழையில் நின்றார். "நல்லமழை பெய்திருக்கு என்ன சேர்?. உள்ளே வாங்க சேர்“ அழைத்தான். அவர் தேநீர் கோப்பைகளோடு வந்தார். ஒன்றை அவன் பெற்றுக் கொண்டான். கோப்பையை மேசைமேல் வைத்துவிட்டுத் தலையைத் துடைத்தார். கதிரையில் இருந்து உரையாடிக் கொண்டே தேநீரைக் குடித்தார்கள். "வீட்டுக்குப் போகவில்லையா“? செல்வம் கேட்டார். "நாளைக்குப் போகவேணும் சேர். இன்றைக்கு நிறைய வேலையிருக்கு. பொலிஸி;ல் ‚றிளீஸ்’ கடிதம் எடுக்கவேண்டும். சம்பளம் எடுத்துக் கொண்டுதான் போகவேணும்“. பதிலளித்தான்.

"வீட்டுக்கு அறிவிச்சிங்களோ“? அடுத்த வினாவைத் தொடுத்தார். "இல்லை சேர். அதிர்ச்சி இன்பம் கொடுக்க வேணும். அதிலதான் ஒரு சுகமிருக்கு சேர். சிரித்தவாறே கூறினான். "நல்லா அடிச்சவங்களோ“? தொடர்ந்தார். "அங்குள்ள இளைஞர்களோடு ஒப்பிடுகையில் அவ்வளவு இல்லை. என்டாலும் சும்மா சொல்லக்கூடாது சேர். நல்ல .சாப்பாடு தந்தாங்க“. சுவையோடு சொன்னான். "நல்லா மெலிஞ்சிட்டிங்க“. கவலையோடு சொன்னார். நேரம் போனது தெரியவில்லை. அவர் தனது அறைக்குச் சென்றுவிட்டார். அலுவலகம் தொடங்கி விட்டது. கல்விப் பணிப்பாளர் சிவபாதம் அழைத்தார். அவரது அறைக்குள் சென்றான். "மிஸ்ரர் ஆனந்தன், ஒருகிழமைக்கு லீவு போட்டுட்டு வீட்டுக்குப் போய்வாங்க. அது டியு_ட்டி லீவாக இருக்கட்டும். அதச்சொல்லத்தான் கூப்பிட்டனான். சம்பளம் இன்றைக்கு எடுக்கலாம்“. அவர் முடித்தார்.

"சேர்.. இன்றைக்கு பொலிஸில் ‚றிளீஸ்’; கடிதம் எடுக்க வேணும். பழைய கோவைகள் கிடக்கு அவற்றை முடித்ததும் நாளைக் காலையில வீட்டுக்குப் போகிறேன் சேர்“. விளக்கினான். "நல்லது. உங்கட விருப்பம் போல் செய்யுங்க“. கூறிவிட்டு அவர் தனது கடமையில் மூழ்கினார். சில கோவைகளைப் பார்வையிட்டு ஒன்பதரை மணிக்கு வெளியில் வந்தான். யோகதாஸின் சைக்கிளையும், குடையையும் எடுத்தான். மழை பெய்து கொண்டிருந்தது. சைக்கிளில் ஏறி பொலிஸ் நிலையம் சென்றான். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை அவனுக்காகக் காத்திருந்தார். ‚றிளீஸ்’ கடிதத்தைக் கொடுத்தார். பிரித்துப் பார்த்தான். கடிதத்தில் ‚சந்தேகத்தின் பேரில் வசாரணைக்காகக் கைது செய்து விசாரணையின் பின் எந்தவிதக் குற்றமுமில்லை என்பதால் விடுவிக்கப் பெற்றுள்ளார். அவரது பணியைத் தொடரலாம். ஆட்சேபனையில்லை. என்று எழுதியிருந்தது. இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை புன்னகைத்தார். சேர் நீங்க செய்த உதவிக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நன்றி“. மனமுருக நன்றி சொன்னான். "சேர் உங்களுக்கு உதவிகள் செய்வதற்கு நாங்க கொடுத்து வைச்சிருக்க வேணும். அவ்வளவுதான் எனக்குச் சொல்லமுடியும“;. இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை கூறினார்.

"அலெக்ஸாந்தர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார். கோவையை கையெழுத்துக்குப் போட்டாச்சு“. அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு பொலிஸ்காரர் அவரிடம் கோவையைக் கொடுத்தார். அது அலெக்ஸாந்தரின் கோவை. "நில்லுங்க அவரைக் கூட்டிவாறன்“. சொல்லிக் கொண்டே சென்றார். சற்றுநேரத்தில் அலெக்ஸாந்தர் புன்னகையோடு ஓடிவந்து ஆனந்தனைக் கட்டித்தழுவினார். கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஆறாய் ஓடியது. "இந்தாங்க உங்கட றிளீஸ் கடிதம்“;. இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை கடிதத்தையும் கொடுத்தார். "சந்தோசமாய்ப போய்வாங்க“. விடை கொடுத்தார். அலெக்ஸாந்தரின் மனைவி வந்திருந்தார்.

"அலெக்ஸ் நான் நாளைக்கு ஒரு கிழமை லீவில வீட்டுக்குப் போய்வரப்போறன். நீங்க சுகமாக வீடுபோய்ச் சேருங்க“. அலெக்ஸாந்தரின் மனைவியைப் பார்த்து "அலெக்ஸாந்தரை நல்லாப் பார்த்துச் சாப்பாடு கொடுங்க. நான் பிறகு வாறன்“. புன்னகைத்தவாறே சொன்னான். அலெக்ஸாந்தரின் தம்பி யோகன் வானில் வந்தார். அலெக்ஸ் மனைவியுடன் அதில் ஏறிக் கொண்டார். கையசைத்து வழியனுப்பினான். நேரே அலுவலகம் சென்று ஏ.ஓ. பாலசிங்கத்திடம் ‚றிளீஸ்’; கடிதத்தை ஒப்படைத்தான். "இதூன் அவசியமானது. இதன் பிரதிய இப்பவே கல்வி அமைச்சுக்கு அனுப்பிவிடுறன். இனிப்பயமில்லை“. அவர் கடிதத்தைப் பெற்று அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டார். தனது அலுவலக அறையினுள் புகுந்து கடமைகளில் மூழ்கினான். பல அதிபர்களும், ஆசிரியர்களும் அவனைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் நன்றி கூறினான். அடுத்த கிழமை பாடசாலைகளுக்கு வருவதாக வாக்குறுதியளித்தான். அவர்கள் சென்றபின் நிதிப்பகுதிக்குள் நுழைந்தான்.

கணக்காளர் திருநாவுக்கரசு அருமையான மனிதர். அவர் ஆனந்தனின் சம்பளக் காசோடு காத்திருந்தார். "வாங்க மிஸ்ரர் ஆனந்தன்! சம்பளத்தை அவனிடம் கொடுத்தார். மூன்று மாதச் சம்பளம் அவனை எட்டிப் பார்த்தது. நன்றி கூறினான். "மிஸ்ரர் ஆனந்தன்! உங்களுக்கு ஒன்று சொல்லுறன். என்ன காரணம் கொண்டும் இப்ப இடமாற்றம் கேட்கவேண்டாம். இடமாற்றம் கேட்டால் ‚சட்டி சுடுதென்டு, அடுப்புக்குள் பாய்ந்த கதையாகும்’ என்றார். "ஏன் அப்படிச் சொல்லுறீங்க. நான் இடமாற்றம் கேட்கல்லையே“ வியப்போடு கேட்டான். "காரணத்தோடதான் சொல்லுறன். உங்கள அனுப்பிப் போட்டு இப்ப ‚அக்ரிங்கா’ பார்க்கிறவர் அதற்கான வேலையில ஈடுபட்டிருக்கார்“;. ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார். "அப்படி நடக்காது. பயப்படாதீங்க. எனக்குப் பலகனவுகள் இருக்கின்றன. அவற்றை மெய்ப்பட வைத்து விட்டுத்தான் இந்த மாவட்டத்தை விட்டுப் போவன்“. ஒரு புன்னகையுடன் கூறினான்.

"உண்மையில நான் சந்தோசப்படுறன்“;. திருநாவுக்கரசு நன்றியுடன் கூறினார். அவருக்கு ஆனந்தனின் செயற்பாடுகள் பிடித்திருந்தன. கணக்காளரைப் பலருக்குப் பிடிக்காது. எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கொஞ்சம் கெடுபிடிதான். நிதி மிகவும் முக்கியமானது. அதில் குளறுபடிகள் ஏற்பட்டால் மோசடிகள் உருவாகும். அதனால் அவர் இறுக்கமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவரது செயற்பாடுகள் ஆனந்தனுக்குப் பிடித்திருந்தன. ஏதாவது ஒரு வழியில் ஒத்தகருத்து இருந்தால்தானே நட்பு உருவாகும் அல்லது முரண்பாடு முறுக்கி முன்னால் நிற்கும். மழை விடாது பெய்து கொண்டிருந்தது. வானம் இருண்டு கிடந்தது. இந்த மழையிலும் அதிபர், ஆசிரியர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். அதிபர் முருகப்பா அழுதேவிட்டார். அவரைத் தேற்றுவதில் படாத பாடுபட்டான். ஒருவாறு நன்றி கூறி அனுப்பி வைத்தான்.

வீட்டுக்குப் போகும் வேலைகளில் ஈடுபட்டான். ஆயத்தங்களைச் செய்தான். குளிர்காற்றோடு மழை பொழிந்தது. விடியும்வரை காத்திருந்தான். உணவின்பின் உறங்கினான். அதிகாலை வேளைக்கே எழும்பி விட்டான். ஆறரை மணிக்கு ஆயத்தமானான். யோகதாஸ் பஸ்நிலையத்துக்கு வர உதவினார். ஏழுமணிக்கு திருகோணமலைக்குப் போகும் பஸ் இருந்தது. ஏறிக் கொண்டான். பஸ் புறப்பட்டது. ஈரற்பெரியகுளத்தில் நின்றது. பயணிகள் இறங்கினார்கள். தங்கள் மூட்டைமுடிச்சுக்களைச் சுமந்து கொண்டு ஒருவர்பின் ஒருவராக நடந்தார்கள். இராணுவமும், பொலிஸ்காரரும் மூட்டைமுடிச்சுக்களைப் பரிசோதித்தார்கள். தனித்தனியாக ஆட்களைத் தடவிப் பார்த்தார்கள். அடையாள அட்டைகளைப் பார்த்துப் பதிந்தபின் நடக்கச் சொன்னார்கள். பல இராணுவத்தினர் வரிசையாக நின்று பார்த்தனர்.

ஆனந்தனுக்கும் பரிசோதனை நடந்தது. அடையாள அட்டை பதியப்பட்டது. முடிந்ததும் ஆனந்தன் நடந்தான். இராணுவத்தினர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு அடித்தவர்கள் யாரையும் அங்கு காணவில்லை. இறுதியாக ஜீப் நின்றது. ஜீப்பின் முற்பகுதியில் அவன் ஏறியிருந்தான். தூரத்தில் போன வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன. லொறிகள் மட்டும் போய்க்கொண்டிருந்தன. வெள்ளம் வீதியைப் பரவி ஓடுகிறது. பஸ் போகமுடியாது என்ற செய்தி பரவியது. எப்படியும் போகவேண்டும் என்று பலர் தீர்மானித்தார்கள். நடத்துனர் பஸ் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்தார். நடந்து மதவாச்சிவரை போனால் அதிலிருந்து பஸ் பிடிக்கலாம். கதைத்துக் கொண்டார்கள். ஆனந்தன் தீர்மானித்து விட்டான். அவர்களோடு சேர்ந்து நடந்தான்.

சில வழிப்பறிகள் நடந்து கொண்டிருந்தன. பலரின் பொருட்கள் சூறையாடப்பட்டன. வவுனியாப் பொலிசுக்குத் தகவல் கிடைத்தது. அங்கிருந்து பலபொலிஸ்காரர்கள் லொறிகளில் வந்து கொண்டிருந்தனர். மழை தூறிக்கொண்டிருந்தது. அந்தக் கொமாண்டரின் கழுகுக்கண்கள் ஆனந்தனைக் கண்டு கொண்டன. "ஹலோ பிறன்ட் கோமத சப்ப சனிப்ப? எப்படி சுகம்“;? நக்கலாகக் கேட்டான். ஆனந்தன் மௌனியானான். அவன் ஏதோ கெட்ட வார்த்தைகளைக் கொட்டினான். "உன்ர அதிர்ஸ்டம் இப்ப தப்பிட்டாய். எப்பயாவது உன்ன வேட்டையாடுவம். போ“. என்றான்.

ஆனந்தனுக்குக் கண்கள் சிவந்து கோபம் பொங்கியது. மேரியை நினைத்துக் கொண்டான். "அவளைப் போய் பார்த்து ஆறுதல் கூறவேண்டும். எனது பிள்ளைகளைப் பார்க்கவேணும“;. மனம் கூறிக்கொண்டிருந்தது. "இவன் மடையன் கிடக்கிறான்“. ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு நடந்தான். அவனால் சரியாகக் கால்களைப் பதித்து நடக்க முடியாதிருந்தது. அடிபட்ட கால்கள் வலித்தன. கல்நாவ கிராமவீதியால் வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. ஆட்களை இழுத்துக் கொண்டு வெள்ளம் பாய்ந்தது. போகமுடியாது என்ற நிலை வந்து விட்டது. சனங்கள் குழுமி நின்றார்கள். வெள்ளம் வடிந்தபாடில்லை.

மழை விட்டிருந்தது. நேரம் பகல் ஒருமணியைத் தாண்டியிருந்தது. வவுனியாவில் இருந்து லொறிகளில் பொலிஸ்காரர்கள் வந்து குவிந்தார்கள். சனங்களிடம் விசாரித்தார்கள். வழிப்பறி வெள்ளம் பாய்வதற்கப்பால் நடைபெறுவதாகச் சனங்கள் கூறினார்கள். லொறிகள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக நகர்ந்தன. ஒரு லொறியில் இருந்து „மாத்தயா கொகத யன்ன. எங்க போறது“? குரலொன்று ஒலித்தது. ஆனந்தன் பார்த்தான். அவன் அடையாளம் கண்டுகொண்டான். தனது முறைப்பாட்டை அனுதாபத்தோடு பதிந்த பொலிஸ்காரர் பிரியாங்க. "மதவாச்சி“ என்றான். லொறி சற்று நின்றது. "நகின்ட. ஏறுங்க“ பிரியாங்க சொன்னான். ஆனந்தன் ஏறிக் கொண்டான். லொறி ஊர்ந்து சென்றது. மதவாச்சிக்கு வந்து விட்டான். லொறி திரும்பியது. நன்றி கூறி இறங்கிக் கொண்டான்.

மதவாச்சியில் இருந்து திருகோணமலைக்கு பஸ் இல்லை. அனுராதபுரத்துக்குப் போய் அங்கிருந்து போகலாம் என்ற செய்தியை அறிந்தான். அனுராதபுரம் சென்றான். பஸ் மூன்று மணிக்கு வரும் என்றார்கள். மூன்றரை மணிக்கு பஸ் வந்தது. ஏறிக் கொண்டான். ஆறரை மணிக்குத் திருகோணமலையை அடைந்தது. அங்கிருந்து கிண்ணியா பஸ்சில் ஏறினான். ஏழரை மணிக்குக் கிண்ணியாத்துறையைக் கடந்து இருளில் நடந்தான்.
எட்டரை மணியிருக்கும். மெதுவாக வீட்டை எட்டிப் பார்த்தான். வீட்டில் பிள்ளைகள் சூழ மேரி அழுதகண்ணும் சிந்திய மூக்குமாக இருந்தாள்.

அசோக வனத்தில் சீதைசிறையிருந்ததைக் கம்பர் அழகாகச் சொல்வார். புகைபடிந்த ஓவியமாகக் காட்டுவார். அதனை நிஜமாகக் கண்டான். அவனது கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அடக்கிக்கொண்டான். அவன் இருளில் நின்றதை யாரும் கவனிக்க வில்லை. அங்கிருந்து திரும்பி படலைவரை சென்றான். மீண்டும் நேரே வெளிச்சம் படும்படி நடந்து வந்தான். "மேரி“ அழைத்தான். மேரி திடுக்கிட்டுத் திரும்பினாள். ஆனந்தன் அவள் முன்னே நின்றான். தூன் காண்பது கனவா? அல்லது நிஸமா? "அத்தான் வந்திற்றிங்களா“? ஓடோடி வந்து அவனது கால்களைக் கட்டிக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதாள். „எனது உடல்பொருள் ஆவியெல்லாம் நீங்கதான். என்ர கனவெல்லாம் நீங்கதான். என்ர கனவு மெய்ப்படணேடும் என்று வேண்டாத தெய்வங்கள் இல்லை. அந்தக் கனவு எனக்கு முன் மெய்ப்பட்டு நிற்கிறது. இறைவனே இணைபிரியாத வரம் வேண்டும்.“ இறைவனை மன்றாடினாள்.

பிள்ளைகள் அவனைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சினார்கள். மேரியின் அழுகை ஓயமட்டும் அப்படியே நின்றான். ஓய்ந்தபிறகு அவளைத் தூக்கிவாரி அணைத்தான். அந்த அணைப்பில் தனது துயரங்கள் எல்லாம் தவிடுபொடியாகின. "அப்பா வந்திட்டார்“. பிள்ளைகள் கூத்தாடினார்கள். வாங்கி வந்த பொருட்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்தான். அரைநொடியில் செய்தி ஊரெல்லாம் பரவியது. சொந்தங்கள் ஒன்று கூடினார்கள். தனது அனுபவங்களை மனதுக்குள் போட்டுப் புதைத்துவிட்டு அவர்களோடு அளவளாவினான். இன்றுதான் மேரியின் முகத்தில் புன்னகை பூத்தது.

நிறைவு














என்னுரை

இந்த நாவலை எழுதவேண்டும் என்று பல ஆண்டுகளாக முனைந்தேன். சந்தர்ப்பம் கிடைக்காது போயிற்று. இது கற்பனைகலந்த உண்மை. இதில் வரும் கதாபாத்திரங்களில் பல உண்மையானவை. இக்கதையில் வரும் வதைபட்ட காதாபாத்திரங்கள் உங்களில் ஒருவராகவும் புலம்பெயர்ந்து இருக்கலாம். பலர் விதக்கப்பட்டும் இருக்கலாம். ‘நான் பெற்ற துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’ என்பதற்காக இதனை எழுதத் துணிந்தேன். என்னுடன் 1983 தொடக்கம் 1991 வரை வவுனியாவில் வட்டாரக்கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. செல்வராசா கணபதிப்பிள்ளை அவர்கள் இதனை நாவலாக எழுதும்படி வற்புறுத்தி இருந்தார். அவரது வேண்டுகோள் இந்த நாவல்மூலம் நிறைவேறுகிறது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதை நானறியேன்.

சம்பவங்கள் பல நிறைந்துள்ள இந்நாவலில் இன்பமும், துன்பமும், சமூக அவலங்களும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். நாம் நல்லனவற்றைச் செய்தால் நன்மைதான் விளயும். சுடச்சுடத்தானே பொன் மிளிரும். அதைப்போன்றுதான், மனிதனுக்குத் துயரங்கள் வரும்போது அவற்றை நமக்கு வரும் சோதனைகளாக எடுத்துக் கொண்டால் வெற்றி காண்பது உறுதி. ‘சவாலே சமாளி’ என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்று ஏன்சொன்னார்களோ தெரியாது. சிலர் அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துவதையே காண்கிறோம்.

இந்த நாவலில் வரும் நிகழ்வுகள் 1984 - 86 வரையான காலப்பகுதிக்குரியன. அக்காலப் பகுதிக்குள் நமது நாட்டுநிலையைச் சொல்வதாக இருந்தாலும் அதற்கு முன்னர் 1959-1976 வரையான காலப் பகுதிகளிலும், பின்னரும் நடந்தேறிய சில சம்பவங்களும் சுவையூட்டுவனவாக உள்ளன. நமது இளைஞர்களின் துயரங்களும் அதனால் அல்லலுற்ற பெற்றோரின் அவலங்களும் விபரிக்கப் படுகின்றன. இந்த நாவலூடாகச் சில வரலாற்றுப் பதிவுகளையும் சேர்த்துள்ளேன். நானில்லாத காலத்தில் எனக்குப் பின்வரும் சந்ததியினருக்காகச் சில தடயங்களைச் சொல்லிவைப்பது எனது கடமையென உணர்ந்ததால் அவ்வாறு செய்தேன். படித்து அறிந்து கொள்வது வாசகர்களாகிய உங்களது கடமையாகும். ‘நான் பட்ட துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’. சிறப்பாகத் தமிழ் இளைஞர்கள் பெறாதிருக்கப் பிராத்திக்கின்றேன். ‘சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்தொன்றாய் வாழா’த தமிழினத்தில் ‘தமிழனுக்குத் தமிழனே எதிரி’ என்பதனையும் ‘தமிழர்கள் என்று ஒன்று படுவார்களோ அன்றுதான் தமிழினத்துக்கு விடிவுநாளாகும். என்பதனையும் உணர்ந்து செயற்படுங்கள்.

உலகெங்கும் செறிந்து வாழும் தமிழர்களுக்கு இந்த நாவல் கொண்டுள்ள கருவைப் புரியவைக்க வேண்டும் என்ற பேரவாவினால் உங்களுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன். தமிழர் போராட்டம் தொடங்கியதற்கான காரணங்கள், தமிழ் இளைஞர்களை எவ்வாறு திட்டமிட்டுச் சித்திரவதை செய்து அழித்;தார்கள், எத்தனை இளைஞர்களும், யுவதிகளும் இன்றும் சிறைக்கைதிகளாகக் கூண்டில் கிடந்து வாடுகிறார்கள் என்பதனை நானறிவேன். அவர்களுக்காகக் குரல் எழுப்புவதற்கு நமது தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களைத் தேடுகிறேன். இக்கதையில் உயிரோட்டமாக உள்ளே புதைந்துள்ள கருவைப் படியுங்கள். ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்துள்ளும் புதையுண்டு கிடக்கும் சோகம் இழையோடும். பிள்ளைகளைப் பறிகொடுத்து ஏங்கும் பெற்றோர்களது உள்ளக் குமுறல்கள் புரியும். இதில் வரும் கதாபாத்திரங்கள் அடிபட்ட அனுபவத்தோடு புலம்பெயர்ந்தும் இருக்கிறார்கள். ஆனால் என்போன்றவர்கள் இன்றும் போராடிக் கொண்டே இருக்கிறோம். இவற்றையெல்லாம் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரும் படித்து இப்படித்தான் இலங்கைத் தமிழர் வாழ்க்கை முறை என்பதைப் புரிந்து கொள்ளட்டும். நாங்கள் செத்துக் கொண்டே வாழ்கிறோம். ஆனந்தவெளியில் உள்ள கதைகளையும் படியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பெரிதும் வரவேற்கிறேன்.

நன்றியுடன்

ச.அருளானந்தம்
(கேணிப்பித்தன்)

Read more...

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

29

ஒருகிழமை கடந்துவிட்டது. அதிபர்கள், ஆசிரியர்கள் என்று பொலிஸ் ஸ்ரேசனுக்குப் படையெடுத்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்குப் பதில் சொல்வதே பெரும்சிரமமாக இருந்தது. "எப்பசேர் விடுவாங்களாம். ஏன் இன்னம் விடல்ல.“ இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் திண்டாடினான். பலர் பொலிஸ் நிலையத்துக்கு வருவதில் இருந்து தவிர்த்திருந்தார்கள். துணிவுள்ளவர்கள் மட்டும் வந்தார்கள். யோகதாஸ் மாலை வந்து "சேர் உங்கட வீட்டயிருந்து வந்தது“. ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதனை வாங்கிப் பார்த்தான். கடிதத்தில் முத்திரை இல்லை. விலாசமும் இல்லை "யார் தந்தது“. கேட்டான். "செல்வராசா அதிபர் தந்தவர்.“ யோகதாஸ் பதிலளித்தான். ஆறதலாகப் பார்க்கலாம். அதனை வைத்துக் கொண்டான்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பவர்களை எந்தநேரமும் பார்க்கமுடியாது. காலையில் ஆறுமணியிலிருந்து ஏழமணி வரை பார்க்கலாம். மாலையில் ஐந்து மணியிலிருந்து ஆறுமணிவரையும் பார்க்க வரலாம். இப்போது யாரும் பார்க்கவர முடியாத நேரம். கடிதத்தைப் பிரித்தான். அவன் கண்கள் குளமாயின. மேரி எழுதியகடிதம். வாசிக்க வாசிக்கக் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி நெஞ்சுச் சட்டையை நனைத்தது. ஆனந்தன் இப்படித் தேம்பி அழுததைப் அலெக்ஸ் பாரத்ததில்லை. அவரது கண்களும் கலங்கின. "எல்லாவற்றையும் அதிபர் செல்வராசா வந்து கூறினார். என் உயிர் துடித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் விரைவில் வருவீர்கள் என்று சொன்னார்கள். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில் காத்திருக்கிறன்“. அப்படியே மேரி எதிரே நின்று ஒப்புவித்துக் கொண்டிருந்த உணர்வினைப் பெற்றான்.

மேரி வந்தால் தனது இந்தப்பரிதாப நிலையைக் கண்டால் துடிதுடித்துப் போவாள். அவள் தாங்க மாட்டாள் என்பதை அறிவான். அதனால் அவள் அதனைப் பார்க்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அத்துடன் அவளையும் மிரட்டுவார்கள். அதனால் என்னகாரணம் கொண்டும் தன்னோடு தொடர்பு கொள்ளவேண்டாம் என்று அறிவித்திருந்தான். ஆனால் அதிபர் செல்வராசாவும், இரத்தினராஜாவும் திருகோணமலைக்குப் புறப்பட்டு விட்டார்கள். ஆனந்தன் வீட்டுக்கே சென்று மேரியிடம் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கிறார்கள். அவள் வெந்து, மனம் நொந்து, அழுது புரண்டு கடிதம் எழுதியிருக்கிறாள். "எனது மனைவிக்குத் துயரத்தைத் தூண்டிவிட்டார்கள். அவளை அழவைத்துவிட்டார்கள்“ என்று ஒருபக்கம் கோபம் வந்தது. மறுபக்கம் அவர்கள்மேல் பேரன்பு துளிர்த்தது. "என்மேல் உள்ள அன்பின் காரணத்தினால்தானே அவ்வளவு தூரம் சென்று அறிவித்துள்ளார்கள்“. அவர்களை எண்ணி நெக்குருகினான்.

கணபதிப்பிள்ளை வந்தார். "சேர் எப்படி இருக்கிறீங்க. நாளைக்கு எஸ்.பி. வருவார். ஹெட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டர் நல்ல மனுசன். இரவு கதைச்சவர். தான் எஸ்.பி யோட ரெலிபோனில கதைச்சவராம். பொய்யான பிட்டிசமாம். உங்களி;ல குற்றமில்லையாம். அவர் வந்ததும் விடுவதாகச் சொன்னார். பயப்பிடாமல் இருங்க“. கூறிவி;ட்டுச் சென்றார். மூவரும் ஆளையாள் பார்த்தார்கள். "சேர், நீங்க இப்படிக் கவலைப்பட்டதை நான் பார்த்ததேயில்ல. எனக்கும் அழுகை வந்தது.“ அலெக்ஸாந்தர் கவலையோட கூறினார். வாழ்க்கை என்பது, உண்டு உறங்கியிருப்பது மட்டுமில்லை. அதனை ரசித்து அனுபவிக்கவும் வேண்டும். மனிதனுக்கு மட்டும்தான் வாழத்தெரியும். பிறவிப் பயனையிட்டுச் சிந்திக்கவும் செய்;கிறான்.

விலங்குகளின் வாழ்க்கை வட்டம் குறுகியது. இவ்வுலகில் பல்லாயிர உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை உண்டுறங்கி, இனப்பெருக்கம் செய்து மாண்டு மடிந்து போகின்றன. மனிதர்கள் பலர் விலங்குகளாகவே இருந்துவிட்டுச் செல்கின்றனர். காக்கிச் சட்டை போட்டவர்கள் எல்லோரும் இரும்பு மனம் படைத்தவர்கள் இல்லை. அவர்களுள் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலவேளைகளில் அவர்கள் இரும்பாக இதயத்தை மாற்றிக் கொள்கிறார்கள். கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இரும்பான இதயங்களைக் கொண்டவர்களிடம் சட்டம் கைமாறி விடுவதால் மனித அவலங்கள் உருவெடுக்கின்றன. ஆனந்தன் சற்று நிம்மதியானான். கனவுகளை மெய்ப்படுத்துவதில் அவனுக்கு இறைவன் பக்கபலமாக இருந்து உதவுகிறான். நல்லனவற்றைச் சிந்நித்து, நலிவுற்றோருக்கு நல்லனவற்றைச் செய்வதற்கு முனையும்போது வெற்றி வருவது உறுதி.

"சேர் நம்ம மூன்றுபேரையும் ஒன்றாக விடுவாங்களோ தெரியாது. நான் பிந்தி வந்தபடியால் என்னைப் பிந்தித்தான் விடுவாங்கபோலத் தெரியுது. அலெக்ஸ் கவலையோடு சொன்னார். "ஏன் வீணாகக் கவலைப்படணும். வருவதை எதிர் கொள்ளவேணும். கவலைய விடுங்க. மூன்றுபேரையும் விடுவாங்க“. ஆனந்தன் ஆறுதல் கூறினான். நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். குந்தியிருக்க ஒருசிறு மேடை. எழும்பி கைகால்களை அசைக்க இன்னொரு சிறிய இடம். வேளைக்கு உணவு. ஒரு வேலையும் செய்யவேண்டியதில்லை. நல்ல ஓய்வு. வேறென்ன வேண்டும். அதனால்தான் இதனை மாமியார் வீடு என்று சொல்கிறார்களோ?

மனிதர்கள் தங்கள் இன்பத்துக்காகப் பறவைகளைப் பிடித்து அவற்றின் இறக்கைகளை வெட்டிக் கூண்டுக்குள் அடைத்து பாலும், பழமும், உணவும் கொடுத்து மகிழ்கிறார்கள். ஆனால் அந்தப் பறவைகள் மகிழ்கின்றனவா? அதைப்பற்றி யாராவது சிந்தித்ததுண்டா? மனிதர்களை இப்படிக் கூண்டுகளில் போட்டு உணரவைத்தால் பறவை இனங்களுக்கும் சுதந்திரம் கிடைக்கும். இங்கு எல்லாம் கிடைத்தாலும் மனதில் சுதந்திர உணர்வும், மகிழ்ச்சியும் இல்லையே. வருடக்கணக்காகச் சிறையில் வாடும் இளைஞர்களையிட்டுச் சிந்தித்தான். அவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிட்டும்?

பொழுது விடிந்து மணி ஒன்பதாகியது. போலிஸ் நிலையம் உசாரானது. சிங்களத்தில் "உசார். ஹேட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டர் வருகிறார்“;. போலிஸ்காரர்கள் உசாராகி சலூற் அடித்து நின்றார்கள். அவர் அறைக்குள் போனதும் கடமைகள் தொடங்கின. இன்ஸ்பெகட்ர் திசநாயக்க வந்தார். "பரமன் என்ட“ அழைத்தார். பரமன் ஹெட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றான். ஏன் அழைத்துச் சென்றார்கள் என்பது தெரியாது. சற்று நேரத்தில் பரமன் வந்தான். விசாரித்தார்கள். "நீ வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். ஒரு புத்தகத்தில் கையெழுத்துப் போட்டன். போகச் சொன்னார்கள். எனக்குக் கவலையாயிருக்கு சேர். நான் வாறன் சேர்“;. பரமன் கூறிவிடை பெற்றான். "பரமன் இங்கிருந்து போகவேணும். மீண்டும் வரக்கூடாது. போங்க. நாளைக்கு அல்லது நாளை மறுநாள் நாங்களும் வெளியில் வந்துவிடுவம“;. வாழ்த்துக் கூறினான். பரமன் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

பரமனின் சகோதரர்கள் பணத்தை அள்ளி வீசியிருந்தார்கள். பரமனுக்கு எதிரான குற்றங்கள் ஏதுமில்லை. பரமனை எப்பவோ விட்டிருக்கலாம். இன்ஸ்பெக்டர் திசநாயக்காதான் இழுத்தடித்ததை அறிந்து கொண்டான். அவனுக்குரிய கோவையை ஹெட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டருக்குச் சமர்ப்பிக்கவில்லை. இன்றுதான் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுள்ளார். பரமனுக்கு விடுதலை கிடைத்துவிட்டது.

இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை வந்தார். "உங்கட விளக்கத்தை எழுதியவர்களாலதான் உங்களுக்கு பிந்துதுபோலக் கிடக்கு. நான் அதைப் பார்த்துச் சொல்லுறன். ஏஸ்.பி.நாளைக் காலை வந்ததும் கோவைகள் மேசையில் இருந்தால் கையெழுத்துப் போடுவார். இனிக்கவலப்படத் தேவையில்ல. கஸ்டகாலம் எல்லாம் கடந்து போச்சு. நான் பின்னேரம் வாறன்“. அவர் போய்விட்டார். விடுதலை உறுதியாகியது. இருவரும் ஆளையாள் பார்த்தபடி இருந்தார்கள். மதிய உணவு வந்தது. உண்டார்கள். குந்தியிருந்து உரையாடினார்கள். சீமேந்து மேடையில் சாய்ந்தார்கள். நாளை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

"சேர் எப்படி புதிய பாடசாலைகளுக்கு அனுமதியெடுத்தீர்கள்“? அலெக்ஸ் கேட்டார். "பாடசாலை திறப்பதற்கென்று சில படிவங்கள் உள்ளன. அவற்றைச் சரியாக நிரப்பி, கேட்கப்பட்ட ஆவணங்களைச் சரியாகக் கொடுத்தால். அனுமதி கிடைக்கும். கல்வி அமைச்சில் எனது நண்பர் இருக்கிறார். அவரும் உதவி செய்தார். பரீட்சை நிலையத்துக்குரிய அனுமதியும் அப்படித்தான். வெளியில் போனதும் முதல்வேலையாகக் கிராமங்களில் புதிய பாடசாலைகளைத் திறக்க வேணும். 'தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம். கல்வி இல்லாத பேர்களை இல்லாது செய்வோம்’; என்று பாரதி கண்ட கனவை மெய்ப்படச் செய்ய வேணும். வவுனியா மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிறையவே உண்டு. அதனை கல்வி அமைச்சுக்கு எடுத்துச செல்லவேண்டும். இவற்றை விரைவில் முடிக்க வேண்டும்“. ஆனந்தன் அடுக்கிக் கொண்டே சென்றான்.

கதைத்துக் கொண்டே சற்றுக் கண்ணயர்ந்தார்கள். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை வந்தார். "சேர் வாக்குமூலம் எடுத்த பொலிஸ்காரரிட்ட சொல்லி இருக்கிறன். அவங்க இன்னும் கோவையை முடிக்கல்ல. கெதிபண்ணிச் செய்யச் சொல்லியிருக்கிறன். அனேகமாக இரவுக்கு முடிச்சிருவாங்க என்று நினைக்கிறன். அப்ப இருங்க நான் வாறன்;“. அவர் சென்றுவிட்டார். அவர் அடிக்கடி வந்து பார்ப்பது பெரிய ஆறுதலாக இருந்தது. மாலையானதும் வழமைபோல் பாலசிங்கம் வந்தார். உரையாடினார்கள். நடந்த விடயங்களைக் கூறினார்கள். பாலசிங்கத்துக்குச் சந்தோசம். "நல்ல காலம் சேர். டி.ஓ போடாதது. நான் கோயிலுக்குப் போய் ஒவ்வொரு நாளும் மன்றாடி வாறன். இறைவன் அருள்பாலிப்பான்“. உணவைக் கொடுத்தபடியே கூறினார். அவர் சென்றுவிட்டார்.

உணவின் பின் அதிபர்களைப் பற்றிய சிறிய உரையாடல் வந்தது. அதிபர் முருகப்பாவின் வீரதீரத்தைப் பற்றி உரையாடினார்கள். அவர் வந்து தனது கதைத்த முறைகளைப் பற்றிக் கூறினான். ஆனால் கால்களைப் பிடித்ததைப் பற்றிக் கூறவில்லை. "அதுவும் ஒரு வழியில் உதவி செய்திருக்குச் சேர். இல்லாட்டி விளையாட்டுப் போட்டிக்கு உணவு கிடைத்திருக்காது“. அலெக்ஸாந்தர் சொல்லிச் சிரித்தார். அந்த வேதனைகள் மத்தியிலும் சிறிது சிரிப்பு வந்து தலைகாட்டிச் சென்றது. கதைத்துக் கொண்டே சற்று உறங்கினார்கள். உறங்குவதும், விழிப்பதுமாக இரவு கழிந்தது.

காலை வழமைபோல் வந்தது. சொல்லி வைத்ததுபோல் பாலசிங்கம் தேநீர், காலை உணவோடு வந்தார். "நான் ஒருவகையில் கொடுத்து வைத்தவன்தான். அன்பான தாய்தந்தை கிடைத்தார்கள். எனது மனதுக்கேற்ற மனைவி கிடைத்தாள். இரண்டு குழந்தைகள் கிடைத்தார்கள். துன்பத்திலும் உதவும் நல்ல மனிதர்கள் கிடைத்திருக்கிறார்கள். கடவுள் துன்பத்தைக் கொடுப்பதும் ஒருவகையில் ஒரு பரீட்சைதானோ? அப்போதுதானே இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது“. மனதுள் சிந்தனை வளர்ந்தது. "இன்று ஏதும் விஷேசம் நடக்குமா“? மனதுக்குள் கேட்டுக்கொண்டான். "சேர்..இன்றைக்கு அல்லது நாளைக்கு விடுவார்களாம். நான் சார்ஜனிடம் விசாரித்தன்“. பாலசிங்கம் தேநீரை ஊற்றிக் கொடுத்தார்.

"இரண்டு பேரையும் ஒன்றாக விடுவது சாத்தியப் படாதாம்“;. பாலசிங்கம் சொன்னார். "ஏனாம்?“ அலெக்ஸ் கேட்டார். "ஓரு கோவை செய்யிற பொலிஸ்காரர் இன்றைக்கு வரல்லையாம். லீவாம். யாருடையதென்று தெரியாது. ஒருவரை விடுவார்களாம். நான் பின்னேரம் வந்து பாரக்கிறன் சேர்“. கூறிவிட்டுச் சென்றார். இப்போது இருவருக்கும் யோசனை பிடித்து விட்டது. "முதலில் அலெக்ஸ் போகவேண்டும். அலெக்ஸ் பாவம். இளகிய மனம். நான் பிறகு போகலாம்“;. மனதினுள் எண்ணிக் கொண்டான்.

அலெக்ஸ் யோசனையில் ஆழ்ந்தார். "சேர் நீங்கள் முதலில் போனால் நல்லது சேர். வெளியில் இருந்து எனது கோவை வேலையை முடிப்பீர்கள்“;. அலெக்ஸ் கூறினார். ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது. "நமக்குள்ள ஒற்றுமையைப் பார்த்தீர்களா? நான் நீங்க போகவேணும் என்று எண்ணுறன். நீங்க, நான் போகவேணும் என்று எண்ணுறீங்க. சரி யார் முதலில் போனாலும் சரிதான.; முந்தினாலும், பிந்தினாலும் எப்படியும் வெளியில் போனால் போதும்“ ஆனந்தன் கூறினான். பொலிஸ் ஸ்ரேசன் உசாரானது. ஹேட்குவாட்டர்ஸ் இன்ஸ்பெக்டர் முதலில் வந்தார். வேலைகள் தொடங்கின. பத்து மணிக்கு மீண்டும் உசாரானது. ஏஸ்.பி வந்துவிட்டார்.

சற்று நேரத்தால் இன்ஸ்பெக்டர் திசநாயக்கா வந்தார். அறைத்திறப்பை வைத்திருந்த பொலிஸ்காரரை அழைத்தார். அவர் வந்து கதவினைத் திறந்தார். "குட் மோர்னிங் மிஸ்டர் ஆனந்தன். கம் அவுட். யூ ஆர் றிலீஸ் ருடெ“ வெளியில் வரும்படி அழைத்தார். ஆனந்தனின் முகம் கறுத்துவிட்டது. அலெக்ஸாந்தரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அழத்தொடங்கி விட்டார். அலெக்ஸாந்தரின் விடுதலையைப் பற்றிக் கேட்டான். கோவை தயாரில்லை. நாளைக்கு அவர் விடுதலையாவார். இன்ஸ்பெக்டர் ஆங்கிலத்தில் சொன்னார். "இன்ஸ்பெக்டர் நானும் நாளைக்குப் போகிறேனே. அனுமதி தருவீங்களா“? இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார். "மிஸ்டர் ஆனந்தன் உங்களுக்கு நான் சட்டத்தைச் சொல்லித் தரத்தேவையில்லை. அப்படிச் செய்யேலாது. அவர் ஆங்கிலத்தில் விளக்கினார். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை வந்தார்.


"சேர்..நீங்க போங்க. நான் அவரைப் பார்த்துக் கொள்ளுவன். இன்றைக்கு இரவுக்கு அந்தப் பொலிஸ்காரரை வரச் சொல்லிப்போட்டன். ஹெட்குவாட்டரஸ் இனஸ்பெக்டரும் ரெலிபோனில இப்ப கதைச்சவர். நாளைக்கு வந்து கூட்டிப்போங்க“. விளக்கமாகச் சொன்னார். ஆனந்தனுக்குச் சங்கடமாக இருந்தது. "சேர் நீங்க போங்க. நளைக்கு வாங்க. நான் சமாளித்துக் கொள்ளுவன்“. அலெக்ஸ் கூறினார். திசநாயக்கா அவசரப் படுத்pனார். காலையில் வருவதாகச் சொல்லிப்புறப்பட்டான். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளையின் கைகளைப் பிடித்துக் கண்ணில் ஒற்றி விடைபெற்றான். வெளியில் வந்தான். காலையில் வந்து றிளீஸ் கடிதத்தை எடுங்க. நான் எச்.கியுவிடம் கையெழுத்து எடுத்து வைக்கிறன்“ அவர் விடை கொடுத்தார்.

தொடரும்

Read more...

Thursday, May 20, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

28

வெயில் வன்னிக் காட்டிலும்; தனது சேட்டையைக் காட்டியது. பூவரசங்குளத்துச் சந்தியில் இருந்த கடையில் புகுந்தான். நல்ல கறிவணிஸ் தெரிந்தது. சாப்பிட்டான். காய்ச்சிய பசும்பால் கிடைத்தது. வயிறு நிரம்பியது. முடிந்ததும் பாடசாலையினுள் நுழைந்தான். அதிபர் சீனிவாசகம் எழுந்து வந்தார். சீனிவாசகம் நமது விளையாட்டுப் போட்டிக்குச் சில பரிசுப் பொருட்கள் வேண்டுமே. என்ன செய்வது“? விசாரித்தான். "சேர்! நீங்க சொல்லமுதலிலேயே நானும் அலெக்ஸாந்தரும் அவற்றைச் சேர்த்து விட்டோம்.“ சந்தோசத்தோடு சீனிவாசகம் சொன்னார். „விளையாட்டுப் போட்டிக்குரிய ஆயத்தங்கள் எல்லாம் தயார் வியாழன் நீகள் வந்தால் சரி. ஆனால் நடுவர்களுக்கு எப்படியும் உணவு கொடுக்கவேணும். அதுதான் முடியவில்லை.“ சீனிவாசகம் விளக்கினார். ஆனந்தனுக்கு உச்சி குளிர்ந்தது. „உணவை நான் பார்த்துக் கொள்ளுவேன்“;. ஆனந்தன் கூறினான்.

"சரி கடிதங்களைத் தாருங்கள். உடனே போய் அவற்றைக் கொழும்புக்கு அனுப்ப வேணும்“;. விரைவு படுத்தினான். சீனிவாசகம் எல்லாம் தயாராக வைத்திருந்தார். "சேர்! சாப்பிட்டுட்டுப் போங்களன். சாப்பாடு தயாராக இருக்கு“. சீனிவாசகம் முறுவலோடு அழைத்தார். "ஐயய்யோ, இப்பதான் அந்தக் கடையில சாப்pட்டேனே. இனிச்சாப்பிட இயலாது. பிறகு பார்ப்போம். நன்றி. நான் வாறன். கடிதங்களைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

கால்கள் பெடலை மிதித்தன. விளையாட்டுப் போட்டிக்குரிய உணவுபற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான். சாளம்பைக் குளம் வித்தியாலயம் வாருங்கள் என்றழைத்தது. அதிபர் கரீம் புன்னகையோடு வரவேற்றார். பாடசாலையைச் சுற்றி வலம் வந்தான். கண்கள் தேவைப்பாடுகளை ஆராய்ந்தன. "சேர் விளையாட்டுப் போட்டிக்குரிய ஆயத்தங்கள் நடக்குது. உணவுப்பார்சல்கள் பத்து எங்கள் பாடசாலை தரும். அலெக்ஸாந்தரிடம் கூறிவிட்டேன். பயப்படத்தேவையில்லை“. கரீம் அதேசிரிப்போடு கூறினார். அவரை அன்போடு பார்த்தான். நன்றி கூறினான். நல்ல மனிதர்கள் உலகத்தில் ஏராளம் உண்டு. அவர்களை நாம்தான் இனம்காணத் தவறிவி;டுகிறோம். "மிஸ்டர் கரீம் நான் அவசரமாக அலுவலகம் போகவேணும். நான் வருகிறேன். கூறிப்புறப்பட்டான். சேர்! சாப்பிட்டுங்களன். சுhப்பாடு தயாராக இருக்கு. அதிபர் அழைத்தார். வேண்டாம் கரீம் சாப்பிட்டுட்டன். இன்னொரு நாளைக்குப் பாரப்போம். நான் வாறன்“. புறப்பட்டான்.

வழியில் சுணங்காமல் நேரே கல்வித்திணைக்களத்துக்குச் சென்றான். தனது அறையில் உடலைக் கழுவினான். உடைகளை மாற்றிக் கொண்டு அலுவலகத்துக்குள் புகுந்து கடிதங்களைப் பார்வையிட்டுத் தேவையான பதில்களைத் தயாரித்தான். திறக்கவேண்டீய இரு பாடசாலைகளின் கோவைகளைப் பார்வையிட்டான். எஸ்.ஓ.படிவங்கள் சரியாகப் பூரணப்படுத்தப் படவில்லை. வரைபடங்கள் இல்லை. குறைபாடுகளைச் சரிசெய்தான். கல்விப்பணிப்பாளருடன் கலந்தாலோசித்தான். எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உரையாடினான். ஆனந்தனது செயற்பாடுகள் கல்விப் பணிப்பாளர் சிவபாததத்துக்குப் பிடித்து விட்டது. அவன் தயாரித்த கடிதங்களுக்கு தனது ஒப்பத்தையிட்டு அவனிடமே கொடுத்தார். அவற்றை கல்வி அமைச்சுக்கு அனுப்பினான்.

தான் சென்றுவந்த பாடசாலைகளின் நிலையை அறிக்கையாகத் தயாரித்தான். அறிக்கையை கல்விப் பணிப்பளருக்குக் கோவைப்படுத்தினான். நேரம் ஐந்து மணியைத் தாண்டியிருந்தது. தனது அறையில் தினசரிகளைப் புரட்டியபடி இருந்தான். கதவில் யாரோ தட்டுவது தெரிந்தது. "சேர்! மே ஐ கம் இன்..சேர்“. மெல்லிய சத்தம் வந்தது. "ஓ..யெஸ். கம் இன்“ கூறியவாறு கதவினைத் திறந்தான். அங்கே முருகப்பா நின்றிருந்தார். மெதுவாக உள்ளே வந்தார். "வாங்க மிஸ்டர் முருகப்பா“ அழைத்துக் கதவினை மெல்ல மூடினான்.

முருகப்பா திடீரென ஆனந்தனின் கால்களைப் பிடித்துக் கொண்டார். "இதன்ன மிஸ்டர் முருகப்பா? காலை விடுங்க. எழும்புங்க. நான் பெரிய மனிதனல்ல. உங்களப்போல சாதாரண மனிதன். உங்கட வயதென்ன. எனது வயதென்ன? நீங்க போயும் போயும் என்ர காலில விழுவதா?. எழும்புங்க“. அவரைப் பிடித்து எழுப்பினான். "சேர்! இதுதான் முதலும் கடைசியும். நான் விட்டபிழைகளை உணர்ந்து கொண்டேன் சேர். என்னை மன்னிச்சிக் கொள்ளுங்க. இனிமேல் என்ர கடமையச் சரியாகச் செய்வன். அதிபர் கரிமோட கதைச்சனான் சேர். அவர்ர பாடசாலையில் இருந்து விளையாட்டுப் போட்டிக்கு உணவுப் பார்சல் தருவதாகக் கூறினார். எங்கட பாடசாலையில இருந்து நாப்பது பார்சல் வரும். அது என்ர பொறுப்பு“. உண்மையில் முருகப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன.

ஆனந்தனின் மனம் வருந்தியது. வயதில் முதிர்ந்த ஒருவர் தனது காலில் விழும்படி தான் நடந்து கொண்டதற்கு வருந்தினான். அவனது மனதில் போராட்டம். தனது குற்றங்களை மறைப்பதற்காக இப்படி நடந்து கொண்டார். தனக்குத் தானே தேற்றிக் கொண்டான். "வியாழன் விளையாட்டுப் போட்டி கலகலப்பாக நடைபெறும். நான் வாறன் சேர்“. கூறிவிட்டு அவர் போனார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். மனிதர்கள் தமது குறைகளைத் தாமே உணர்ந்து கொண்டால் இந்த உலகத்தில் குற்றங்கள் பெருகாது. அதேவேளை அவர்களுக்கு உரியமுறையில் தெளிவு படுத்தி அவற்றைப் பெரிதாக்கி மனங்களை நோகச்செய்யாமலும் இருக்கவேண்டும். முருகப்பா தொடர்ந்து செய்து வந்த இச்செயற்பாடுகளை இனியும் செய்யமாட்டார். ஆனால் அதனைச் சரியாக நெறிப்படுத்த வேண்டும். சந்தர்ப்பங்கள்தான் அனைவரையும் ஆட்டிப்படைக்கின்றன.

விளையாட்டுப் போட்டி ஆனந்தன் எதிர்பார்த்ததற்கு மேலாக சிறப்பாக நடந்தது. கல்விப்பணிப்பாளர் திரு.சிவபாதம் வித்தியாசமானவர். பொதுவாக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதைத் தவிர்த்துக் கொள்வார். ஆனால் ஆனந்தன் அழைத்தபோது வந்து விட்டார். அவரது வாயாலேயே "இரண்டு புதிய பாடசாலைகள் அடுத்த மாதம் இந்த கல்வி வட்டாரத்தில் திறபடும். அத்துடன் இரண்டு பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமையும். நேற்றுத்தான் திரு.ஆனந்தன் அதற்கான கடிதங்களை முறைப்படி தயாரித்து எனது அனுமதியைப் பெற்று கல்வி அமைச்சுக்கு அனுப்பியிருக்கிறார். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். அவருக்கு ஒத்தாசை கொடுக்கும் அதிபர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்“. எனக் கூறினார். அருட்திரு.பிலிப் அடிகளார் கல்விப் பணிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

"அலெக்ஸ் என்ன யோசனை“? ஆனந்தன் அவரைப் பார்த்துக் கேட்டான். "இல்லை சேர். முருகப்பாவை நினைத்துக் கொண்டேன். விளையாட்டுப் போட்டிக்கு ஒரு சதமும் தரமாட்டேன் என்று அடம்பிடித்தவர், ஐம்பது உணவுப் பார்சல் தந்தாரே. அதை நினைத்தேன்“. ஆனந்தன் கொடுப்புக்குள் சிரித்தான். "முருகப்பா நல்ல மனிசன். ஆனால் ஒருவிதமான போக்கு. அவரை நீதான் ராசா என்றால் எல்லாம் செய்வார்;. பொதுவாக நமது கல்வி வட்டாரத்தில் உள்ள அதிபர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான்;“. சிரித்துக் கொண்டே ஆனந்தன் கூறினான். "சேர் நீங்க எல்லாரையும் நம்பியிருக்கிறீங்க. ஆனால் இரண்டு மூன்று பேர் நமக்கு ஆப்பு வெச்சிருக்காங்க“. பரமன் கூறினான்.

"சேர், எல்லா அதிபர்களும் வந்து பார்த்துப் போனாங்க. ரத்தினத்தாரும், லிங்கரும் வரல்லயே. பார்த்தீங்களா? இவங்கதான் பிட்டிசத்துக்குப் பின்னால் இருப்பதாகப் பரவலான கதை“. பரமன் குறிப்பிட்டான். "யாரையும் நாங்க குற்றம் சொல்லக்கூடாது. இதனை நாம் அனுபவிக்கவேணும் என்டு இருக்கு. அதை அனுபவிக்கிறம். எல்லாம் நன்மைக்கே. நாம் பட்ட துன்பத்தை பிறர்படும்படி செய்யவோ, நினைக்கவோ கூடாது“. அலெக்ஸாந்தர் ஆனந்தனைப் பார்த்தார். அனந்தன் சிரித்துக் கொண்டு நின்றான்.

யோகதாஸ் வந்தார். மாற்றுடைகளைக் கொடுத்தார். "சேர், உங்கள பொலிஸ் கைது செய்துள்ளதாகவும், செட்டிகுளம் கல்வி வட்டாரம் வெற்றிடமாக இருப்பதாகவும், அதற்காகத் தற்காலிகமாக வேறு ஒருவரையும் நியமித்து, அனுமதிக்காகக் கல்வி அமைச்சுக்குக் கடிதம் அனுப்பியாச்சு. ஆவர்தான் இப்ப கடமைசெய்கிறார். பாருங்க சேர் இவங்கட குணத்த. ஆறதலாகக் கடிதம் அனுப்பியிருக்கலாம்தானே?“. கலங்கியவாறு யோகதாஸ் கூறினார். "யோகதாஸ் சரியானதைத்தான் கல்விப் பணிப்பாளர் செய்திருக்கிறார். கட்டாயம் ஒருவர் அந்த வேலைகளைக் கவனிக்கவேண்டும். அடுத்தது கல்வி அமைச்சுக்குத் தெரிவிக்க வேண்டியது அவரது கடமை. அதனை நாங்கள் ஏன் பெரிதுபடுத்தவேணும்.? வாறகிழமை எங்கள விடுவாங்க. வேறென்ன விசேசம்? மனதினில் கவலை இருந்தாலும். அதனை வெளிக்காட்டாது யோகதாசுக்குப் பதில் கூறினான்.

"யாரைப் போட்டிருக்கிறார்“;? கேட்டான். "ஐயாத்துரையரப் போட்டிருக்கிறார்“. யோகதாஸ் பதிலளித்தார். "எங்களிடம் பலவீனங்கள் நிறையவே உண்டு. தகுதியான தகைமையுள்ளவர்களை உரிய பதவிக்கு நியமிப்பதில்லை. இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள்தான் கல்வி அதிகாரியாக நியமனம் பெறவேண்டும். ஆனால் அதற்கு எதிர்மாறாக நியமனங்கள் நடக்குது. கல்வி உலகம் சீரழிவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அடுத்தது கல்வி அமைச்சும், அரசாங்கமும் கல்விச்சேவையை அலட்சியம் செய்வதாகும். பாடசாலைக்கு கல்வி மேற்பார்வைக்குச் செல்பவர் பாடசாலைகளில் உள்ள அதிபர், ஆசிரியர்களைவிடவும் தகைமையுடையவராக இருக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் மரியாதை செலுத்துவார்கள். இவற்றுக்குக் காரணம் அரசியல்வாதிகள்தான். இந்தநிலை என்று மாறும். பெருமூச்செறிந்து கூறினான்.

அதிபர் பாலசிங்கம்; இரவு உணவினைச் சுமந்து வந்தார். "எங்களால எவ்வளவு பேருக்குத் துன்பம்“. ஆனந்தன் கவலையோடு சொன்னான். "ஏன் சேர் அப்படிச் சொல்றீங்க. இது எங்கட கடமை. நாங்க சந்தோசப்படுறம் சேர். உங்களுக்குச் சேவைசெய்யக் கொடுத்து வைத்திருக்க வேணும். உங்களால வவுனியா மாவட்டம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது. நீங்க விரைவில வெளியில் வந்து சேவைசெய்ய வேணும். இதுதான் எங்கள் எல்லோரதும் பிரார்த்தனை“. பாலசிங்கம் சொல்லும்போதே அவரது நா தளதளத்தது. „சேர், சட்டத்தரணி வந்தாரா? என்ன சொன்னார்?“ வினவினார். "அடுத்த கிழமை பார்க்கலாம் என்று சொன்னன். அடுத்த கிழமை நாங்க வெளியில வருவோம் என்ற நம்பிக்கை இருக்கு. எங்களால நீங்களும் அலைவதுதான் சங்கடமாயிருக்கு“. ஆனந்தன் விளக்கினான்.

"டி.ஒ. போடாட்டிச் சரி. போட்டாத்தான் சேர் சிக்கல். உங்கட விருப்பம்போல செய்வம் சேர். பகல் என்ன சாப்பிட்டிங்க.? உணவைக் கொடுத்தவாறே பாலசிங்கம் கூறினார். "பகல் அலெக்ஸ் வீட்டிலிருந்தும், பரமன் வீட்டிலிருந்தும் உணவு வந்தது. நல்ல சாப்பாடுதான். ஆனால் சாப்பிடேலாது“. ஆனந்தன் பதிலளித்தான். "வேறென்ன சேர் வேணும்.“? பாலசிங்கம் கேட்டார். "ஒன்றுமே வேண்டாம். சுதந்திரமாக வெளியில் வரவேண்டும்“ புன்னகையோடு ஆனந்தன் சொன்னான்.

தொடரும்

Read more...

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

27

அதிகாலையிலேயே சைக்கிள் ஓடுவது உடலுக்கு நல்ல பயிற்சியாகும். காலை வவுனியா மன்னார் வீதியால் சைக்கிளில் புறப்பட்டுவிட்டான். நெடிதுயர்ந்த பாலை, வீரை மரங்கள் பனிநீராடிக் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மூலிகைகளால் நிறைந்த வன்னிக் காட்டினைத் தழுவி காற்று வீசியது. அந்தக் காற்றைச் சுவாசிப்பதில் அலாதி இன்பம் பொங்கியது. களைப்பே தெரியவில்லை. அந்தக் காற்றுக்கு அத்தனை சக்தியிருந்தது. போகும் வழியில் கிராமங்களில் மக்கள் சுறுசுறுப்பாகத் தோட்டங்களிலும், வயல்களிலும் தங்கள் தொழில்களில் ஈடுபட்டுழைப்பதைப் பார்த்து ரசிப்பான். ஆநிரைகள் கூட்டங்கூட்டமாகப் படுத்திருந்து சூரியக்கதிர்களில் சுகம் காணும்.

பூவரசங்குளம் பாடசாலையில் அதிபர் சீனிவாசகம் தனது அலுவல்களில் ஈடுபட்டிருந்தார். ஆனந்தனைக் கண்டுவிட்டார். ஓடோடி வந்தார். "சேர் வணக்கம். இந்த அதிகால வேளயில வந்திருக்கிறியள். எங்கட அதிகாரிமார் பாடசாலயளுக்குப் பத்து மணிக்குப்பிறகுதான் வருவாங்க. வாங்க சேர். ஒரு ரீ குடித்துப் போகலாம்“. அழைத்தார். ஆனந்தன் புன்னகைத்தான். சைக்கிளைவிட்டு இறங்கிப் பாடசாலைக்குள் போனான். பாடசாலை மகிழ்ச்சியான சூழலுடன் நிமிர்ந்து நின்றது. சுற்றிவர நோட்டம் விட்டான். "இன்று முதன்முதலில் உங்கட பாடசாலைக்கு வந்தது சந்தோசமாக இருக்கிறது. பாடசாலை அழகாகக் காட்சிதருகிறது“. மனநிறைவோடு சொன்னான். சீனிவாசகம் மகிழ்ந்து போனார். அவரது மனைவியும் அசிரியர். அவர் சுடச்சுடப் பசும்பால் தேநீரைக் கொண்டு வந்தார். "குடியுங்க சேர்“. அன்போடு சொன்னார்.

நீங்க அதிகாலயிலேயே பாடசாலையில் இருந்து வேலைசெய்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வழியில் மூன்று பாடசாலைகளைப் பார்த்தேன். பாடசாலைகள் தூங்கிக்கிடக்கினறன. இன்று ஆலங்குளம் சந்திவரையுள்ள பாடசாலைகளது நிலைகளை அறியப் புறப்பட்டிருக்கிறன். தேநீரைக் குடித்தவாறே தனது திட்டத்தைக் விளக்கினான். அவனது கையிலுள்ள வவுனியா மாவட்டப் பாடசாலைகளின் அமைவிட வரைபடத்தை சீனிவாசகம் கண்டுகொண்டார். பலஅதிபர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்பதை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டார். அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கப் பாடசாலையைச் சுற்றிப் பார்த்தான். அதிபரின் கனவுகளைக் கேட்டறிந்தார். "சேர்! இதனை மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்த வேண்டும். இங்க ஏ.எல் வகுப்பு இல்லை. அதற்கும் அனுமதி வேண்டும். இங்கயிருந்து பிள்ளைகள் பல்கலைக் கழகம் செல்ல வழிசெய்யவேண்டும். அதுதான் சேர் எங்கட ஆசை“. ஆனந்தனுக்கு அவரது ஆசைகளைக் கேட்கச் சந்தோசமாக இருந்தது.

"ஏன் அதிபர்களின் கூட்டத்தில் இவற்றை முன்வைக்க வில்லை“.? ஆனந்தன் வினாவினான். "ஒரு விசயத்தை முன்வைக்கும்போது சகல ஆதாரங்களையும் இணைத்துக் கொடுக்கவேண்டும். அவற்றைக் கொண்டுவரல்ல. அதனால பேசாமல் இருந்தன். இப்ப எல்லாம் தயார் நாளைக்கு உங்களிட்டக் கொண்டு வந்து தாறன் சேர்.“ சீனிவாசகம் விளக்கினார். "எல்லாம் தயாரா? கிராமத்தின் வரைபடம், கடந்தகால பரீட்சைப் பெறுபேறுகள் எல்லாம் இருந்தால் தாங்க பார்ப்பம்“;. கேட்டான். சீனிவாகம் ஆவணங்களை தயாராக வைத்திருந்தார். அவற்றை மேலோட்டமாகப் பார்த்தான். திருப்திப்பட்டுக் கொண்டான். அவரிடமே திருப்பிக் கொடுத்தான். இந்தப் பாடசாலைக்கு ஒரு மண்டபம் இல்லை. இந்த வருடம் நடைபெறும் க.பnh.த. பரீட்சைக்கு இந்தப் பாடசாலையும் ஒரு பரீட்சை நிலையமாக இயங்கும். சரியா“? அவன் சொல்லும்போது சீனிவாசகம் அதிசயித்துப் போனார்.

"சரி நேரம் ஏழுமணி. விளையாட்டுப் போட்டி ஆயத்தங்கள் தயாரா? நான் வரும்போது வாறன். எல்லாக் கடிதங்களையும் தாங்க. கொண்டு போகிறேன். சொல்லிப் புறப்பட்டான். சைக்கிள் விரைந்தது. சீனிவாசகம் அவன் போவதையே அதிசயித்துப் பார்த்துக் கொண்டு நின்றார். சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது. கால்கள் பெடலை மிதித்துக் கொண்டிருந்தன. கைகள் ஹாண்டிலில் விளையாடின. கண்கள் வழிகாட்டின. மனம் எண்ணக்கடலில் விரிந்து எதிர்காலத் திட்டக் கனவில் உலா வந்தது. எவ்வளவு தேவைகள் இருக்கின்றன? இவையாவற்றையும் நிறைவேற்றவேண்டும். எண்ணியவாறே சைக்கிள் ஓடினான். முன்னால் குருக்கள்புதுக்குளம் பாடசாலை தெரிந்தது. பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தது.

அதிபர் பாடசாலையிலேயே இருப்பவர். பிள்ளகைள் பாடசாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். சைக்கிள் விரைந்தது. பூவரசங்குளத்தில் இருந்து அவனது கண்கள் இயற்கைத்தாவரங்களை அவதானித்து வந்தன. அவை படிப்படியாக மாறிவருவதை அவதானிக்கத் தவறவில்லை. உயர்ந்த மரங்கள் உயரத்தில் குறைந்து செல்வதை அவதானித்தான். கிளைகள் நிறைந்ததாகத் தெரிந்தன. இலைகள் அகன்ற தாவரங்களும், முட்செடிகளும் காணப்பட்டன. குளங்களையண்டி மருதமரங்களின் நிறைந்திருந்தன. வேம்பு பரவலாகக் காணப்பட்டன. காட்டுப்பூக்கள் கண்களைப் பறித்தன. பிராமனாளங்குளம் தெரிந்தது. முன்னால் தெரிந்த சந்தியில் காலையூன்றினான். கிராமங்களுக்குச் செல்லும் அம்புக் குறிகளைப் பார்த்தான்.

வலப்பக்கமாகச் சைக்கிளைத் திருப்பினான். கிராமங்கள் பிரதான வீதியிலிருந்து விலகியிருந்தன. ஆட்டுமந்தைகள் அலைந்து திரிந்தன. ஊர்மைனைகள் தெரிந்தன. பெரியதம்பனை குளம்தொட்டு வளம்பெருக்கும் பழம்பெரும் கிராமம். பெரிதொரு கிராமம். பாடசாலை தெரிந்தது. உள்ளே சென்றான். ஊர்மாடுகள் பாடசாலை வளவினுள் காவல் செய்தன. பாடசாலையின் ஒருபுறத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பாடசாலை அலுவலகம் மூடிக்கிடந்தது. ஆசிரியர்கள் யாnருமில்லை. புதியதொரு ஆள் தங்கள் பாடசாலைக்கு வந்ததை அறிந்து பிள்ளைகள் ஓடிவந்தார்கள். விசாரித்தார்கள். "நான் உங்களின் ஆசிரியர்தான். வாருங்கள்“ அழைத்தான். பிள்ளைகள் அனைவரும் வந்தார்கள். மாடுகளை அப்புறப்படுத்தினான். எங்கும் சாணம் குவிந்து கிடந்தது.

மாணவ தலைவர்களை அழைத்தான். வந்தார்கள். பக்கத்திலுள்ள வீடுகளுக்குப் போய் மண்வெட்டி, குப்பைவாரி போன்றவற்றை எடுத்துவருமாறு கூறினான். நொடிப்பொழுதில் வந்தன. தானும் ஒருமண்வெட்டியை எடுத்தான். குழிகள் தோண்டப்பட்டன. அவற்றுள் சாணம் தஞ்சமாகியது. பிள்ளைகள் அனைவரும் இயங்கினார்கள். ஆசிரியர் மாதவன் வந்தார். அவரும் சேர்ந்து கொண்டார். அரைமணி நேரத்தில் பாடசாலை பளிச்சிட்டது. ஒன்றுகூடலை நடத்தினான். மிகவும் அழகாகத் தேவாரம் பாடினார்கள். அறிவுக் கதைகளைக் கூறினான். பலவினாக்களைத் தொடுத்தான். பாடசாலையின் நிலையினைப் புரிந்து கொண்டான். ஆசிரியரிடம் தான் யாரென்பதைக் கூறினான்.

"அதிபர் இன்று வரமாட்டார் அவர் கல்வி அலுவலகம் செல்வதாகச் சொன்னவர். இன்றைக்குப் பதிலதிபராக சின்னத்துரை ஆசிரியர் பொறுப்பெடுத்தவர். அவரிட்டத்தான் பாடசாலைத் திறப்பு. அவர் இப்ப வந்திருவார். மாதவன் கூறும்போதே தூரத்தில் சின்னத்துரை வருவதைக் கண்டுவிட்டார். "அதோ வாறார்“ மாதவன் காட்டினார். "மாஸ்டர். நான் யாரென்டு சொன்னால் அவர் திரும்பிப் போயிருவார். அதிபரைச் சந்திக் வந்தவர் என்று சொல்லுங்க. மாஸ்டர் நீங்க வழமையாகப் போடும் நேரத்தைப் பதியச்சொல்லுங்க பரவாயில்லை. பாவம் பிந்தி வரும் ஆசிரியர்களையும் காப்பாற்றத்தானே வேண்டும். சரியா“? ஆனந்தன் முன்னெச்செரிக்கை விடுத்தான். பிள்ளைகள் வகுப்புக்களை நோக்கிச் சென்றார்கள்.

சின்னத்துரை நேரே அலுவலகதுக்குச் சென்றார். மாதவனோடு ஆனந்தனும் சென்றான். ஆனந்தன் கூறியது போல் சின்னத்துரையிடம் ஒப்புவித்தான். "அதிபர் கல்வி அலுவலகம் சென்றிருக்கார். நாளைக்குத்தான் வருவார். கதவினைத் திறந்தவாறே கூறினார். உள்ளே போய் அலுமாரியினைத் திறந்து ஆசிரியர்களின் வரவுப் பதிவேட்டினை எடுத்து அதில் தனது ஒப்பத்தை இட்டு நேரத்தை எட்டு மணியெனக் குறிப்பிட்டார். மாதவன் அவரின் பின்னால் கையெழுத்திட்டார். ஆனந்தனின் கண்கள் வரவேட்டின் குளறுபடிகளைக் கண்டு கொண்டன. "அதிபர் எப்ப கல்விஅலுவலகம் போனவர்.? அவர் எங்க இருக்கிறவர்? போனல் இன்டக்குச் சந்திக்கலாமோ? ஆனந்தன் வினவினான். "அவர் வவுனியாவிலதான் இருக்கிறவர். ஓவ்வொரு நாளும் வந்து போறவர். அவரின் வீட்டு விலாசம் தெரியாது. மாதவன் மாஸ்டர்! உங்களுக்குத் தெரியுமா“? சின்னத்துரை மாதவனிடம் கேட்டார். மாதவனும் தெரியாது என்று தலையை ஆட்டினார்.

பஸ் பாடசாலைப் படலையில் நின்றது. சில ஆசிரியர்கள் இறங்கி வந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். அவர்கள் வரும்போது பிள்ளைகள் விளையாடுவார்கள். இன்று வகுப்புக்களில் ஆசிரியர்கள் இல்லை. ஆனால் வகுப்புக்கள் அமைதியாக இருக்கின்றன. குதுகலிப்போடு அலுவலகத்தில் நுழைந்தார்கள். அதே நேரத்தைப் பதிந்தார்கள். "என்ன மாஸ்டர் இன்றைக்குப் பிள்ளைகள் ஒழுங்கா வகுப்புகளில் இருக்கிறாங்க. அதிபரும் இல்ல. வேலைகள் கொடுத்தீங்களா? சொல்லிக் கொண்டு ஆசிரியர்கள் இளைப்பாறும் அறைக்குள் சென்றார்கள்.

"மாஸ்ரர் இப்ப உங்கட நேரம் என்ன? ஆனந்தன் கேட்டான். சின்னத்துரை தனது மணிக்கூட்டைப் பார்த்தார். "எட்டரையாகிறது“. சின்னத்துரை பதிலளித்தார். மிஸ்டர் மாதவன் உங்கட நேரமென்ன? பாடசாலை மணிக்கூட்டில் தெரியும் நேரமென்ன? மாதவனைப் பார்த்துக் கேட்டான். "பத்தரையாகிறது“ மாதவன் பதிலளித்தான். "மாஸ்டர் தயவுசெய்து அந்த ஆசிரியர் பதிவேட்டைத் தாங்க“. ஆனந்தன் கேட்டான். "உங்களுக்கு அதெல்லாம் எதுக்கு. வந்த லேலையப் பாரத்திட்டுப் போங்க“? சின்னத்துரை சினத்தோடு பதிலளித்தார். மாதவன் அவர் காதுகளில் ஓதினான். சின்னத்துரை நிலைமையைப் புரிந்து கொண்டார். "மன்னிச்சிக் கொள்ளுங்க சேர். நான் யாரோ என்று நினைச்சிட்டன்“. வரவேடு ஆனந்தன் கைகளுக்குத் தாவியது.

ஆசிரியர்கள் கொண்டுவந்த உணவையுண்டு களைப்பைப் போக்கினர். இன்னும் வகுப்புக்களுக்குப் போகவில்லை. "அதிபர் இன்று பாடசாலைக்கு வந்திருக்கிறார். ஏழு மணிக்குக் கையெழுத்திட்டிருக்கிறார். வெளியில் போயிருக்கிறார். சின்னத்துரை மாஸ்டர் பத்துமணிக்கு வந்து அலுவலகம் திறந்து எட்டுமணியென வரவு பதிந்துள்ளார். ஆனால் ஏழரை மணிக்கு வந்த மாதவன் மாஸ்டர் எட்டுமணிக்கு வரவினைப் பதிந்துள்ளார். பத்தரை மணிக்கு வந்த ஆசிரியர்கள் எட்டு மணிக்கு தங்கள் வரவினைப் பதிந்துள்ளார்கள். நான் ஏழேகாலுக்கு வந்து பிள்ளைகளோடு சேர்ந்து பாடசாலையைத் சுத்தம் செய்தேன். சரி லொக் புத்தகத்தை எடுங்கள்“. கேட்டான். சின்னத்துரையருக்கு வெயர்த்து விட்டது. அதனையெடுத்துக் கொடுத்தார்.

ஆனந்தனுக்குச் சிரிப்பாக வந்தது. „வியாழன் அதிபர்களது கூட்டத்துக்கு உங்கள் அதிபர் வந்தார். அதற்குப்பின் அவர் வரவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் அவரைப் பலமுறை வவுனியாவில் கண்டிருக்கிறேன். வரவுப் பதிவேட்டில் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் அவர் பாடசாலைக்கு வரவில்லை. உண்மையாக அவர் சென்ற புதன் வந்திருக்கிறார். அதன்பிறகு அவர் வரவில்லை. நான் வந்தபின்தான் அலுவலகம் திறபட்டது. அவரது ஆவி வந்து கையெழுத்திட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வருகிறது. கூடுவிட்டுக் கூடுபாயும் விக்கிரமாதித்தன் கதையைக் கேள்விப் பட்டிருக்கிறேன். வியாழன், வெள்ளி, இன்று திங்கட்கிழமை மூன்று நாட்களும் அதிபர் வரவில்லை. ஆனால் அதிபர் உங்களுக்குத் தெரியாமல் கையெழுத்திட்டு விட்டுப் போயிருக்கிறார்.“ சுpன்னத்துரையின் முகத்தில் வெயர்வை அரும்பியது.

„மிஸ்டர் சின்னத்துரை நீங்கதான் அவருக்காக பதில் கடமை பார்க்கிறீங்க. இல்லையா? என்ன நடந்தது. உண்மையைச் சொல்லுங்க. பிழைவிடுவது மனித இயல்பு. ஆனால் அதையுணர்ந்து திருந்தவேண்டும். இல்லையா? மிஸ்டர்.மாதவன் ஆசிரியர்கள் இன்னும் வகுப்புக்குப் போவில்லை. அவர்களை வரச் சொல்லமுடியுமா“? சொன்னதும் மாதவன் வெளியில் சென்றார். மாதவன் செய்தியைத் தெரிவித்தான். ஆனால் வந்திருப்பது யாரென்று சொல்லவில்லை. பிரதி அதிபர் வரச்சொன்னதாகவே சொன்னான். அவர்கள் அலுவலகத்துக்குள் வந்தார்கள். சின்னத்துரையர் அவர்களை இருக்கும்படி கூறினார். அவரே தொடங்கினார்.

"அதிபர் புதன்கிழமை தான் வருமட்டும் பாடசாலைக்குப் பொறுப்பாக இருக்கும்படி கூறிச் சென்றவர். ஆனால் இன்றுவரை வரவில்லை. இன்றுவரை அவர் ஒவ்வொருநாளும் கையெழுத்திட்டுச் சென்றிருக்கிறார். லொக்புத்தகத்திலும் இன்று கல்வி அலுவலகம் செல்வதாக எழுதிக் கையெழுத்திட்டுச் சென்றுள்ளார். நானும், நீங்களும், பத்து அல்லது பத்தரை மணிக்கு வந்து எட்டுமணியென்று நேரத்தைப் பதிந்து விட்டு பன்னிரெண்டு மணிக்குப் போய்விடுகிறோம். இதனால் நமது பிள்ளைகள் தமது கல்வியில் பின்னடைந்துள்ளார்கள். இதற்கான மாற்றொழுங் கினை நாம் மேற்கொள்ளவேண்;டும். என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்“;. கூறிவிட்டு மெல்ல இருந்தார்.

ஆசிரியர்களுக்கு மனதுக்குள் கோபம். "ஒரு வெளியாரை வைத்துக் கொண்டு இப்படிக் கதைப்பது நல்லதல்ல“. திருமதி.கார்த்திகேசு வீறாப்பாகச் சொன்னார். ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது. "நாம் பிழைவிடுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ளவேணும். இதைத்தான் இவ்வளவு நாளும் செய்து கொண்டு வந்திருக்கிறோம். இங்கு இருப்பவர் வெளியாளல்ல. நமது பாடசாலைக்கு மிகவேண்டியவர். நமது கல்வி அதிகாரி. காலையில் அவர் வந்து பாடசாலையைச் சுத்தஞ்செய்து தொடங்கியும் வைத்தார். மாதவன் மாஸ்டரும் அவருக்கு ஒத்தாசை செய்திருக்கிறார். அவர் தானொரு கல்வி அதிகாரியென்று காட்டிக் கொள்ளவில்லை. நமது தவறுகளைச் சுட்டிகாட்டி, திருந்துவதற்கான வழிவகைகளைக் காட்டவே வருகை தந்துள்ளார்“;. சின்னத்துரை கூறியதை ஆசிரியர்கள் உள்வாங்கியதை அவர்களது முகங்கள் காட்டின. "சேர்! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து நாங்கள் உண்மையாக உழைப்போம்“. ஏகமனதாகக் கூறினார்கள். இப்படியொரு மாற்றத்தைத்தான் ஆனந்தன் எதிர்பார்த்தான்.

"நான் உங்களில் ஒருவன். நானும் ஆசிரியராக இருந்துதான் இந்தநிலைக்கு உயர்ந்துள்ளேன். நாமெல்லோரும் கூடி ஏழைமாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்போம். உங்கள் மனமாற்றம் தொடரவேண்டும். நன்றி. உங்கள் வகுப்புக்களுக்குச் சென்று கடமையைச் செய்யுங்கள்“ கூறிவிட்டு;. லொக் புத்தகத்தில் தனது வருகையைப் பதிந்து, அதிபர் வெளியில் சென்றுள்ளார். என எழுதி ஐந்து வரிகள் இடம் விட்டுக் கையொப்பத்தினை இட்டான். "மிஸ்டர் சினத்துரை இன்று மாலை அல்லது நாளைக் காலை அதிபரை அலுவலகத்தில் என்னைச் சந்திக்குமாறு செய்தியை அனுப்புங்கள். அவரைக் காப்பற்ற வேண்டுமானால் உடனடியாக வரச் சொல்லுங்கள். நான் வாறன“ கூறிச் சைக்கிளில் தாவியேறிப் புறப்பட்டான். அவனையே ஆசிரியர்கள் பார்த்தவாறு நின்றார்கள்.

தொடரும்

Read more...

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

26

அலெக்ஸாந்தரின் "வாங்க சேர்“; சத்தம் அவனைச் சுயநினைவுக்கு இழுத்தது. உள்ளே போனான். கண்களை வீசி அளந்தான். அதிபர்களது முகங்களைப் படித்தான். கல்வி அதிகாரியை வரவேற்க ஆயத்தமாகி யிருப்பதை அவதானித்தான். ஒரு வகுப்பறையின் வடிவில் தளபாடங்கள் இருந்தன. நான்கு கதிரைகள். அவற்றுக்கு முன்னால் பெரிய மேசை. மாணவர்கள் இருப்பது போல் அதிபர்கள் அமர்ந்திருந்தனர். ஆனந்தனைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களது எண்ணமெல்லாம் கல்வி அதிகாரியிலேயே இருந்தன. செட்டிகுளப் பங்குத் தந்தை அருட்திரு.பிலிப் அடிகளார் வருவதை அலெக்ஸ் கண்டு கொண்டார். அலெக்ஸ் எழுந்து அடிகளாரிடம் சென்று "வணக்கம் பாதர் வாங்க. என்ன விசயம் பாதர்“? அவரிடம் விசாரித்தார்.

"வணக்கம் அலெக்ஸ். எங்க கல்வி அதிகாரி? அவர் காலயில என்னைச் சந்திக்க வந்திருக்கார். நான் வெளியில போயிருந்தன். அவர் பாடசாலையில் நிற்பதாகச் சொல்லியிருக்கார். நான் வந்ததும் சொன்னார்கள். அதுதான் வந்தனான்“. விசயத்தைச் சொன்னார். "அவர் இன்னும் வரல்ல பாதர். அதுதான் காத்திருக்கிறம்“;. அலெக்ஸ் விளக்கினார். "இன்னும் வரல்லையா“? பாதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது கண்கள் ஆனந்தனைத் தேடின. ஆனந்தன் அடிகளாரைப் பார்த்து விட்டான். எழுந்து வெளியில் வந்தான். "குட் மோர்னிங் பாதர். நான் ஆனந்தன். காலையில் உங்களப் பார்த்து ஆசிர்வாதம் பெறலாம் என்று வந்தன். நீங்க வெளியில் போனதாகச் சொன்னார்கள். வாங்க பாதர் உள்ளே..“ அழைத்தான்.

அலெக்ஸாந்தருக்குத் தன்னை யாரோ அலக்காகத் தூக்கி வாரி மேலே எறிந்து, அதள பாதாளத்தில் இருந்து விழும் உணர்வு ஏற்பட்டது. "காலையில் இருந்து யாரோடு கதைத்தேனோ அவர்தான் கல்வி அதிகாரி என்பதை அறிந்து கொள்ளவில்லையே. மரியாதையோடு அடக்கமும் உள்ள அதிகாரி. சே.. எவ்வளவு மடத்தனம்.“ தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். எண்ணியவாறே உள்ளே முன்னால் சென்றார். பிலிப் அடிகளாருக்கு நல்ல மரியாதை இருந்தது. சமயங்கள் எல்லாம் அன்புவழியைக் காட்டுவன. மனிதர்களைப் பாவச் செயல்களில் இருந்து காப்பாற்றி நல்வழிப்படுத்துவன, என்ற உன்னத நோக்கத்தைக் கொண்டவர். பாதரைக் கண்டதும் அதிபர்கள் எழுந்தார்கள். வணக்கம் சொன்னார்கள். அவரும் வணக்கத்தைத் தெரிவித்தார்.

பாதர் மேசையருகில் இருந்த கதிரையில் அமர்ந்தார். பக்கத்தில் அதிபர்சங்கத் தலைவர் யோகசாமி போயிருந்தார். செயலாளர் அதிபர் பாலசிங்கம். அவரும் சென்று இன்னொரு கதிரையில் இருந்தார். அதிபர் யோகசாமி தான் தலைமை வகித்தார். இரண்டு நிமிட மௌனப் பிரார்த்தனையோடு கூட்டம் தொடங்கியது. "இதுவரை நமது கல்வி அதிகாரி வந்து சேரவில்லை. பாதர் வந்திருக்கிறார். அவரது ஆசியோடு நமது கூட்டத்தைத் தொடங்குவோம். எப்படியும் கல்வி அதிகாரி வந்துவிடுவர்“;. பிலிப் அடிகளாரை ஆசியுரை வழங்குமாறு அழைத்தார். அடிகளாருக்குச் சிரிப்பு வந்தது. "நமது மக்களும் இப்படித்தானே. எங்கும் நிறைந்திருக்கும் ஏகாந்தப் பரம்பொருளைத் தமக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவரைத்தேடி அலைகிறார்கள்“. மனதில் நினைத்துக் கொண்டு அடிகளார் எழுந்தார்.

"எனக்கு இன்றைக்குச் சந்தோசமாக இருக்கிறது. நமது பக்கத்திலேயே இறைவனை வைத்துக் கொண்டு அவனைக் காணவில்லை என்று தேடுகிறோம். நாம் நம்மை அறிந்து, நமது சூழலையும் புரிந்து தேடலில் ஈடுபடவேண்டும். ஒவ்வொருநாளும் புதிதாக வருகின்றன. கழிந்த நாட்கள் திரும்பி வருவதில்லை. புதிய நாட்கள் நம்முன்னே வந்து நிற்கின்றன. நாம்தான் அதனைப் பரிந்து நமது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். எங்களது செட்டிகுளம் கல்வி வட்டாரம் வளமுறவேண்டும். நல்லதொரு கல்விச் சமூகம் உருவாக வேண்டும் என்பதற்காக நமது மத்தியில் வந்திருக்கும் கல்வி அதிகாரி திரு.ஆனந்தன் அவர்களே! அதிபர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கமும், நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக“. பாதர் கூறியதும் அனைவரது கண்களும் சுழன்றன.

எங்கே கல்வி அதிகாரி? யார்..? அவரா..? வினாக்கள் எழுந்தன. "இதோ உங்களோடு ஒருவராக அமர்ந்திருக்கும் இவர்தான் நமது கல்வி அதிகாரி திரு.ஆனந்தன்.“ கைகளால் சுட்டிக் காட்டினார். அனைவரது கண்களும் ஒரே நேரத்தில் ஆனந்தனை மொய்த்தன. யோகசாமி எழுந்து ஆனந்தனிடம் சென்றார். சேர்! மன்னிச்சிக் கொள்ளுங்கோ. உண்மையில் நாங்கள் வேறு யாரோவென்று இருந்துவிட்டோம்.“ மன்னிப்புக் கேட்டு அவருக்காக ஒதுக்கப்பட்ட கதிரையில் அமருமாறு கேட்டுக் கொண்டார். அதிபர்கள் அனைவரும் ஒரே முகமாக அழைத்தார்கள்.

ஆனந்தன் மெல்ல எழுந்து கதிரையில் அமர்ந்தான். பாதர் தொடர்ந்தார். "செட்டிகுளம் கல்வி வட்டாரத்தில் இரண்டு புதிய பாடசாலைகளைத் திறப்பதற்கு இரண்டு வருடங்களாக முயற்சிக்கிறோம். ஆனால் இன்னும் திறந்தபாடில்லை. முதல்வேலையாக அவற்றைத் திறந்து தர ஆவனசெய்யவேண்டும். அடுத்ததாக இந்தப்பாடசாலையிலும் சுற்றுப்புறப் பாடசாலைகளிலும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை நடத்துவதற்கான மத்திய நிலையம் செட்டீகுளத்தில் இல்லை. செட்டிகுளத்தில் அந்தப் பரீட்சை நடத்துவதற்குரிய மத்திய நிலையத்துக்கான அனுமதியையும் பெற்றுத்தரும்படி“ தனது ஆசியுரையோடு சேர்த்துக் கேட்டுக் கொண்டார்.

ஆனந்தன் தன்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்தான். அதிபர்கள் தங்களை அறிமுகம் செய்தார்கள். புன்னகையோடு அவர்களுக்கு வணக்கம் சொன்னான். பாடசாலைகளின் குறைகளைப் பட்டியல் படுத்திப் பாடசாலைவாரியாகப் பெற்றுக் கொண்டான். "பாடசாலைத் தேவைகளுக்காக நீங்கள் கல்வி அலுவலகம் செல்லவேண்டியதில்லை. அத்தேவைகளை என்னிடம் தாருங்கள். உடனேயே முடித்துத் தருவேன்.“ ஆணித்தரமாக முன்வைத்தான். முதற் கூட்டத்திலேயே அதிபர்களது நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டான். "பாதர் குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் அடுத்தமாதம் கைகூடும். அதனைச் செய்து தருவது எனது பொறுப்பு“?. என்றான். அதிபர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. நம்பினவர்களும் உண்டு. நம்பாதவர்களும் இருந்தார்கள்.

"சேர்! மன்னிக்கவேணும். பீடிகையோடு அதிபர் முருகப்பா எழுந்தார். "நீங்க நினைப்பது போல் புதிய பாடசாலைகள் திறப்பது இலகுவானதல்ல. அதேபோல்; செட்டிகுளத்தில் பரீட்சை நிலையம் வைப்பதற்கான அனுமதியும் பெறுவது முடியாத காரியம்“. எதையோ வீழ்த்திய பெருமையில் அவர் சொற்களை வீசினார். ஆனந்தன் சிரித்துக் கொண்டான். "நீங்கள் ஏன் எதிர்மறையாய் நினைக்கிறீர்கள். முடியும் என்று நம்புவோமே.“ ஆனந்தன் வழமையான பதிலை ஆறுதலாகக் கூறினான். "அதுக்கில்ல சேர், புகழுக்காகச் சொல்லிப்போட்டு செய்யாமல் விடக்கூடாது. இப்படிப் பல அதிகாரிகள் வந்தார்கள். அது செய்வேன். இது செய்வேன் என்று சொல்வார்கள். போய்விடுவார்கள். ஒன்றும் நடக்காது. பின் அதுபற்றிய பேச்சே இருக்காது. அதுதான் சொன்னேன்.“ முருகப்பா பதிலளித்தார்.

"அதிபர் முருகப்பா சொல்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், பாதர் நீங்கள் முன்வைத்த இரு கோரிக்கைகளையும் அடுத்த மாதக்கூட்டத்தில் அறிவிப்பேன். சரி உங்களது வட்டார வேலைத் திட்டத்தின்படி விடுபட்ட வேலைகள் இருக்கினறனவா“? வினாவாகக் கேட்டு விடையை எதிர்பார்த்தான். அதிபர் பாலசிங்கம் எழுந்தார். "சேர்! வட்டார விளையாட்டுப் போட்டி அரைவாசியில கிடக்கு. அதைப்பற்றி வட்டார விளையாட்டுச் செயலாளர் திரு.அலெக்ஸாந்தர் கூறுவார். அலெக்ஸ் சேர், அதைப் பற்றிக்கூறுங்களன்“;. அலெக்ஸாந்தரைக் கேட்டுக் கொண்டார். அலெக்ஸாந்தர் எழுந்து விபரத்தை விளக்கினார். 'கீற்ஸ்’ முடிந்துவிட்டது. "பைன’லில் இன்னும் சில நிகழ்ச்சிகளும், பரிசுகளும் வழங்க வேண்டும். அதற்குரிய நிதி வளமும் இல்லை. என்ன செய்யலாம், சேர்? வினாவாக முடித்தார்.

"என்னன்ன செலவு வரும். உத்தேசமாகச் சொல்லமுடியுமா? கேட்டு விட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தார். "சேர்! விருந்தினர்கள், நடுவர்களது உபசரிப்பு, பரிசுப் பொருட்கள், இதர செலவுகளாக உத்தேசமாக இருபத்தைந்தாயிரம் தேறும். அலெக்ஸாந்தர் சமர்ப்பித்தார். "அதிபர் சங்கத்தால் எவ்வளவு கொடுக்கலாம்“. வினவினான். சங்கத்தின் பேரில் விளையாட்டுப்போட்டிக்காக ஏழாயிரம் இருக்கு. அலெக்சாந்தர் வாசித்தார். சரி எப்போது விளையாட்டுப் போட்டியை வைக்கலாம்.? திகதியைத் தீர்மானியுங்கள்“;. கூறிக்கொண்டே தனது தினக்குறிப்பைப் புரட்டினான். "இன்று வியாழன் அடுத்தகிழமை வியாழன் பொருத்தமாக இருக்கும் சேர். எல்லா ஆயத்தங்களையும் செய்து விடலாம்“. கரீம் அதிபர் சுட்டிக்காட்டினார். அது சரிப்பட்டு வராது. மூன்றுகிழமையாவது வேண்டும்“;. மீண்டும் முருகப்பா குறுக்கிட்டார். "வேண்டாம் சேர். அதிபர் கரீம் கூறியபடி வியாழக்கிழமையே வைப்போம“;. அதிபர்கள் ஏகமனதாகத் தீர்மானித்தார்கள்.

"அலெக்ஸ் ஏற்பாடுகளைக் கவனியுங்கள். ஐம்பது உணவுப் பொட்டலம் வேண்டும். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். பரிசுப் பொருட்களை புதன்கிழமை வாங்குவோம். வவுனியா மாவட்டக் கல்வி அலுவலகம் வரமுடியுமா“? கேட்டுவிட்டு அலக்ஸ்சாந்தரைப் பார்த்தான். "ஓம் சேர்“;. அலெக்ஸாந்தரிடமிருந்து பதில் வந்தது. பதினெட்டு வியாழன் விளையாட்டுப் போட்டி நடைபெறும். உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள்“. அதிபர் யோகசாமிக்கு ஆனந்தனின் செயல்கள் அனைத்தும் பிடித்துக் கொண்டது. கூட்டம் முடியும்போது "அன்பானவர்களே உங்கள் பாடசாலைகளுக்குத் திடீர்விஜயம் செய்வேன். உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யுங்கள். அத்துடன் எனது அலுவலகம் இந்தப் பாடசாலையிலேயே அமையும். உங்கள் தேவைகளை இங்கேயே நிறைவேற்றப் படும்“. நிறைவாகக் கூறி விடைபெற்றான்.

அதிபர்களது கூட்டம் முடிந்தது. பாதர் ஆனந்தனிடம் விடை பெற்றார். மெதுவாக ஏதோ சொன்னார். அவனால் தட்டமுடியவில்லை. சம்மதித்தான். அவர் சென்றுவிட்டார். அதிபர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். ஆனாலும் அவர்களால் உடன் செல்லமுடியவில்லை. போக்குவரத்து மிகவும் அரிதாகவே நடைபெற்றது. செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் ஒரு பகுதியில் சிறியதான அறையை பிரதேசக் கல்வி அலுவலகமாக மாற்றியமைத்தான். அதிபர் ரத்தினத்தின் உதவியோடு அலெக்ஸ் யாவற்றையும் செய்து முடித்தார். அதிபர் பாலசிங்கம் பூரணமாக ஒத்துழைத்தார். பல அதிபர்கள் கல்வி அலுவலக அறை ஒழுங்கு படுத்திக் கொண்டே உரையாடினார்கள். உரையாடல்கள் இடையே பலவற்றைப் பரிமாறிக் கொண்டார்கள்.

"செட்டிகுளம் பிரதேசத்தைப் பற்றித் தெரியாது. வஸ்போக்குவரத்தும் குறைவு. எப்படி பாடசாலைகளுக்கு இவர் திடீர் விஜயம் செய்வார். வஸ் வாறநேரம் எங்களுக்குத்தான் தெரியும்“. முருகப்பாவின் குரல் ஓங்கி ஒலித்ததை ஆனந்தன் உள்வாங்கிக் கொண்டான். இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் இருக்கும் திறமைகளை இனங்காணவேண்டும். தக்க தருணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். மனதில் பதித்துக் கொண்டான். ஒரு மனிதனிடம் பலமும் உள்ளது. அதேபோல் பலவீனம் உள்ளது. அதனைப் போக்குவதற்குரிய சந்தர்பங்களை அறியவேண்டும். அதனைப் பயன்படுத்தும் சாதுரியத்தையும் அறிந்திருக்கவேண்டும். மனிதனிடமுள்ள மானிடத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.

துரிதகதியில் அலுவலகம் தயாராகிவிட்டது. அலுவலகத்தை ஒட்டியதுபோல் ஒரு அறை இருந்தது. அதனைத் தான் தங்குவதற்கென ஒதுக்கிக் கொண்டான். "அலெக்ஸ்! அழைத்தான். அலெக்ஸ் வந்தார். "எனக்கொரு உதவி செய்யவேண்டும். நான் வந்து தங்கும் நாட்களில் உணவு வசதிக்கு ஏற்பாடு செய்துதர வேண்டும். செய்யலாமா? கேட்டான். "அதற்கென்ன சேர். நான் ஒழுங்கு செய்யிறன்“;. அலெக்ஸ் ஏற்றுக்கொண்டார். பாடசாலை முடிந்து பிள்ளைகள் போய்க்கொண்டிருந்தார்கள். அதிபர்களும் சென்றுவிட்டார்கள். பிலிப் அடிகளார் செய்தியனுப் பியிருந்தார். அலெக்ஸ் ஆனந்தனை பாதரிடம் அழைத்துச் சென்றார். பகல் உணவுடன் பாதர் காத்திருந்தார். அலெக்ஸாந்தரையும் அவர் அழைத்திருந்தார். சேர்ந்து உணவருந்தினார்கள். உண்டபின் தனது திட்டங்களை விளக்கினான். பாதரிடம் திறக்கவேண்டிய பாடசாலைகளின் விபரங்களைப் பெற்றுக் கொண்டான். அடுத்தகிழமை சந்திப்பதாகக் கூறி விடைபெற்றான்.

தொடரும்

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP