Wednesday, May 19, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

25

நித்திரையும், விழிப்புமாக இரவு, பகல் கழியும். சாய்ந்திருத்தல். எழுந்து ஆறடி நீளம், இரண்டடி அறைப்பரப்பில் நடப்பது. சற்று நேரம் குந்தி யிருப்பது எனப் பொழுது மெதுவாகக் கழிந்து செல்லும். சூரிய ஒளி அவர்களைக் கண்டு உளிந்து கொண்டதா? அல்லது, சூரிய ஒளியை இவர்களுக்குக் காட்டாமல் சூரியன் மறைக்கிறதா? கேள்விகள் எழும். விடையும் கிடைக்கும். ஆனால் விடிவு கிடைக்காது. பொழுது விடிந்து விட்டது. அதிகாலையிலேயே அவர் வந்திருந்தார். "நான்தான் சட்டத்தரணி சொர்ணன். மிஸ்டர் பாலசிங்கம் இரவு வந்து விசயத்தைச் சொன்னார். உங்கட சம்மதத்தக் கேட்டுப்போட்டு, நாளைக்கு கோட்ல ஆட்கொணர்வு மனுக்கொடுக்க யோசிக்கிறன். உங்கட விருப்பமென்ன“? சொர்ணம் அடுக்கிக் கொண்டு போனார்.

"நீங்க இவ்வளவு தூரம் அக்கறை காட்டி வந்ததற்கு நன்றி. அதற்கு என்ன செய்யவேணும்“? ஆனந்தன் அவரைப் பார்த்துக் கேட்டான். "நீங்க ஒண்ணும் செய்யத்தேவையில்ல. நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுவன். இது பொல்லாத கேஸ். அவசரகாலச் சட்டத்துக்குக் கீழ் பிடிச்சிருக்காங்க. அவங்கள் டி .ஓ போட்டால்....பிறகு உங்களக் கொழும்புக்கு அல்லது வேறெங்காவது கொண்டு போயிடுவாங்க“. சொர்ணம் சொன்னதைக் கேட்டு அலெக்சாந்தரின் விழிகள் பிதுங்கின. "என்ன அநியாயம் சேர் இது. நாங்க..அரசாங்க உத்தியோகம் செய்யுறம். பாடசாலையும், பிள்ளைகளும் என்று பாடுபடுறம். எங்களுக்கு ஏனிந்த நிருவத்தத் தாறாங்க“. அலெக்சாந்தர் சொற்கள் விம்மலூடாக வந்தன.

குற்றம் செய்பவர்கள் யாரோ. ஆனால் மாட்டிக் கொள்வது ஒன்றும் அறியாத அப்பாவிகள்தான்;. இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கிறது. யாரையும் குறை சொல்லிக் குற்றமில்லை. "சேர்..இதுக்குச் செலவு எக்கச் செக்கமாச் போகுமே. எவ்வளவு போகும்“? அலெக்சாந்தர் பயத்துடன் சட்டத்தரணியைப் பார்த்துக் கேட்டான். அவ்வளவு போகாது. இந்தப் பொலிஸ்காரர், சிறூழியர்கள், கோட் செலவென்று கொஞ்சம் போகும். அவ்வளவுதான். செலவைப் பார்த்தால் சரிவருமா? "இல்ல சேர். மன்னிச்சுக் கொள்ளுங்க. இப்படி ஆயிரக்கணக்கான அப்பாவிகள். போலிஸ் நிலையங்களிலும், பல சிறைக்கூடங்களிலும் கிடக்கிறாங்க. அவங்களப் போல நாங்களும் கிடந்திட்டுப் போறம். அந்த அப்பாவிகளுக்கு உதவிசெய்ய யாராவது முன்வாறாங்களா“? ஆனந்தன் கவலையோடு தெரிவித்தான். "உங்கள எனக்கு நல்லாத் தெரியும் என்றதாலதான் நான் வந்தனான். அத்தோடு மிஸ்டர். பாலசிங்கமும் நேற்று வந்து சொன்னார். உங்களுக்கு விருப்பமில்லயென்டால் விடுவம்“;. சட்டத்தரணி சொர்ணன் இழுத்தார்.

"அதுக்கில்ல...சேர். தவறாக எடுக்காதீங்க. நீங்க வந்ததற்கு மிச்சம் நன்றி. நாளைக்குச் சொல்லுறன் சேர். குறை எண்ணாதீங்க“. ஆனந்தன் பவ்வியமாகக் கூறினான். "சரி... நீங்க மிஸ்டர் பாலசிங்கத்திடம் சொல்லிவிடுங்க. நான் வாறன்“. அவர் மெல்ல நடையைக் கட்டினார். "என்ன சேர்.. அவர் சொன்னதுபோல் மனுப் பண்ணுவமா“? அலெக்சாந்தர் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார். "இஞ்ச பாருங்க... அலெக்ஸ் நாங்க வழக்கு, கோட், என்று போனால் இன்னும் சிக்கல் வரும். எக்கச் செக்கச் செலவு வரும். அந்தச் செலவுக்கு என்ன செய்வது?. நாங்க அரசாங்க உத்தியோகத்தர்தான். ஆனால் எடுக்கிற சம்பளம் என்ன? வாழ்க்கைச் செலவுக்கே காணாது. கடனாளியாகப் போய்க் கொண்டிருக்கிறம். எந்த அரசாங்க உத்தியோகத்தர் வசதியாக வாழுறாங்க?. எல்லாரும் 'பேச்சுப் பல்லக்கு தம்பி பொடிநடைதான்’; என்றுதான் கிடக்கிறாங்க. பேசாமக் கிடப்பம்.“ ஆனந்தன் தனது ஆதங்கத்தை வெளியில் விட்டான்.

அவனது கண்கள்முன் ஆமிக்காரங்களின் அட்டகாசங்களும், சித்திரவதைக்குள் சிக்கித் தவிக்கும் அப்பாவிகளும் தெரிந்தனர். எந்த அரசியல்வாதி இவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறான்.? தேர்தல் காலங்களில் இளைஞர்களின் தலையில் தலைப்பகை கட்டிவிடுகிறான். மொழிவெறியையும், இனவெறியையும் தூண்டி விடுகிறான். 'இப்படை தோற்;கின் எப்படை வெல்லும்’ என்றும் 'தூக்கு மேடை பஞ்சணை மெத்தை’ என்றும் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்களாக்கி விளையாட விடுகிறான். அவர்களும்; கோஷமிட்டு பலிக்கடாக்களாக்கி விடுகிறார்கள். விட்டில் பூச்சிகளாக விழுந்து மாட்டிக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களது சுகபோகங்களுக்காக அப்பாவி இளைஞர்கள் அணுவணுவாகச் சித்திரவதைக்குள் சிக்கிச் செத்து மடிகிறார்கள். இனவாத அரசியலால் நமது நாடு சகதியாகி விட்டது. மூவின இளைஞர்களும் சண்டையிட்டு மடியப் போகிறார்கள். பயங்கரவாதம் என்ற போர்வையில் மனித இனம் அழிந்துபோகும். ஆனந்தனது மனக்கடலில் புயல் வீசியது. கண்கள் சிவந்து கண்ணீர் கசிந்தது.

என்று இந்த இலங்கைத்தீவில் சமாதானப் புறா பறக்கும். எப்போது விடிவு வரும்? அவனது உள்ளம் கொதித்தது. "சேர் என்ன யோசனை“? அலெக்ஸாந்தர் கேட்டார். "அலெக்ஸ் கவலைப்படாமல் இருப்பம். நமது வாக்குமூலத்தைப் பதிந்து கொண்டார்கள்தானே? அந்த சீ.ஐ.டி. ஒபிசர் எங்களைக் கைது செய்த கப்ரனுக்கு ஏசியதை நினைத்துப் பார்க்கிறன். நாங்கள் நிரபராதியென்று அவர் முகம் சொன்னது. அவர் கட்டாயம் தனது றிப்போட்டைக் கொடுத்திருப்பார். எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் மேல் நடவடிக்கை எடுப்பார்கள். எனக்கென்றால் நம்பிக்கை இருக்கிறது“. "என்னெண்டு சேர்“. அலெக்ஸாந்தர் சிறுபிள்ளையைப் போல் ஆனந்தனின் முகத்தைப் பார்த்தவாறே கேட்டார்.

"அலெக்ஸ்..நாங்கள் யாருக்கு என்ன குற்றம் செய்தம்?. நாங்கள் மனிதர்களுக்குச் சேவை செய்யிறம். மக்கள் சேவை மகேசன் சேவை என்பார்கள். எனக்குப் பல கனவுகள் உள்ளன. மலையக மக்களைப் பேரினவாதம் விரட்டியடித்தது. காந்தியம் செய்த சேவை அளப்பரியது. வன்னியில் நூற்றுக்கும்மேலான கிராமங்களில் மலையக மக்களைக் குடியமர்த்திய பெருமை காந்தியத்திற்கு உண்டு. டாக்டர் இராஜசுந்தரம், டேவிட் ஐயா, இன்னும் பல இளைஞர்களின் அரிய முயற்சியினால் காடுகள் கிராமங்களாகின. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் அந்த மக்களின் பிள்ளைகளின் வாழ்க்கையில் கல்வி ஒளிவீச வழி செய்யவேண்டும். இந்த வவுனியா மாவட்டத்தில் உள்ள அத்தனை கிராமங்களிலும் பாடசாலைகளை அமைக்கவேணும். அந்தக்கனவு மெய்ப்பட வேண்டும். அது மெய்ப்படும். அந்த நம்பிக்கை எனக்கு ஆன்ம பலத்தைக் கொடுத்துள்ளது. அலெக்ஸ்! இருந்து பாருங்க. எண்ணி இரண்டு கிழமைகளுக்குள் நமக்கு விடுதலை கிடைக்கும்“;. உணர்ச்சிசோடு உறுதியாக ஆனந்தன் கூறினான்.

அலெக்ஸாந்தார் ஆனந்தனை நன்றாக அறிந்தவர். ஆனந்தன் முதன்முதல் செட்டிகுளம் வந்ததையும், இரண்டு பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துத் திறந்து வைத்ததையும், இரண்டு பாடசாலைகளில் பரீட்சை நிலையங்களை வைப்பதற்கு அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததையும் நினைத்துக் கொண்டார். அலெக்ஸாந்தர் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்தவர். பின்னர் அரசியல் சிக்கலால் பிரதி அதிபராக்கப் பட்டவர். அவரது செயற்திறன் மீண்டும் அதிபராகப் பதவியுயர்வு பெறச்செய்தது. அவரது மனத்திரை சற்று விரிந்தது.

அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கல்விக் கட்டமைப்பு நன்றாகச் செயற்பட்டது. மாவட்டங்களில் கல்விக்குப் பொறுப்பாக மாவட்டக் கல்விப் பணிப்பாளர் இருந்தார். அவருக்கு அடுத்து பிரதம கல்வி அதிகாரி, வட்டாரக் கல்வி அதிகாரி எனப் பலர் இருந்தார்கள். வவுனியா மாவட்டம் நான்கு வட்டாரங்களாக எல்லையிடப் பட்டிருந்தது. முதன்முதல் ஆனந்தன் செட்டிகுளம் கல்வி வட்டாரத்தின் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்று வந்தான். முன்பின் தெரியாத இடம். அறிமுகம் இல்லாத மனிதர்கள். அதிபர்களையோ, அல்லது ஆசிரியர்களையோ அவன் அறிந்திருக்க வில்லை. அவர்களைச் சந்தித்திருக்கவும் இல்லை. அவனை யாரும் முதல் கண்டதும் இல்லை. ஒவ்வொரு கல்வி வட்டாரத்திலும் அதிபர்கள் சங்கம் இருக்கும். மாதம் ஒருமுறை அதிபர்கள் கூட்டமிருக்கும். அதிபர்களே கூட்டம் நடக்கும் திகதியைத் தீர்மானித்து அறிவிப்பார்கள்.

பாடசாலைகளின் வருடாந்த வேலைத் திட்டங்கள் பற்றிய குறைநிறைகள், தேவைகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். சிலமாதங்களாக இந்தக் கல்வி வட்டாரத்துக்குக் கல்வி அதிகாரியில்லை. முதலிருந்தவர் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார். தற்காலிகமாக ஒருவர் வந்து போனார். கல்விச் சேவைகள் பாதிக்கப்பட்டன. புதிய கல்வி அதிகாரி வருவதை அதிபர்கள் அறிந்திருந்தார்கள். அதிபர்கள் கூட்டத்திற்காக வந்து கொண்டிருந்தனர். பாடசாலை தொடங்கு முன்னமேயே ஆனந்தன் பாடசாலைக் கேற்றைத் திறந்து பிள்ளைகளோடு அளவளாவிக் கொண்டிருந்தான். தன்னை யார் என்று அவன் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு ஆசிரியராக நடித்துக் கொண்டிருந்தான். பாடசாலைக்கு முதல் வருகை தருபவர் அலெக்சாந்தர்தான். அவர் அப்போது பிரதி அதிபராக இருந்தார். அவர்தான் சிரித்த முகத்தோடு வந்து விசாரித்தார். ஆனந்தன் அதிபரைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினான். அதிபர் வரும்வரை பாடசாலையைச் சுற்றி உலா வந்தான்.

அதிபர் வந்ததும் ஒன்றுகூடலுடன் பாடசாலை தொடங்கப்பட்டது. தூரத்தில் நின்றவாறே யாவற்றையும் அவதானித்தான். அதிபர் தனது அலுவலகத்துள் புகுந்து கொண்டார். அலெக்சாந்தர் ஆனந்தன் பக்கம் வந்தார். "சேர் கனநேரமாக நிக்கிறீங்க. வாங்க அதிபரைச் சந்திக்கலாம்“. அழைத்தார். பின்னால் சென்றான். "சேர்.. இவர்..உங்களைப் பார்க்க வேணுமாம். கனநேரமாகக் காத்திருக்கிறார்“;. அலெக்ஸ் அதிபர் ரத்தினத்திடம் சொன்னார். ரத்தினம் அரசியல் செல்வாக்கில் அதிபராக வந்தவர். "அப்படியா.. இப்ப எனக்கு நேரமில்ல. அதிபர்கள் கூட்டமிருக்கு. இன்டைக்கென்று புதிய கல்வி யதிகாரியும் வாறார். கூட்டம் எப்பமுடியுமென்று தெரியாது. அதுதான் புறப்படுறன். நாளைக்கு வரேலுமா?. மிஸ்டர் அலெக்சாந்தர் இவரிட்ட என்ன விசயமென்று கேட்டு வையுங்க. நான் வாறன்.“ அதிபர் சொல்லிக் கொண்டே வெளியில் வந்தார். "அதுக்கென்ன நாளைக்குச் சந்திக்கிறன்“. கூறியவாறே பின்னால் சென்றான். அதிபர் விறுவிறென்டு அதிபர்கள் கூட்டம் நடைபெறுமிடத்துக்கு நடந்தார். "இவர் இப்படித்தான்..சேர். சேர் உங்களுக்கு என்னால ஏதும் உதவி செய்யமுடியுமா“? அலெக்ஸாந்தர் பதிலுக்காகக் காத்திருந்தார். அவரின் நடத்தைகள் ஆனந்தனை வெகுவாகக் கவர்ந்தது.

அதிபர் ரத்தினம் சுறுசுறுப்பற்றவர். எல்லாவற்றிலும் ஒரு அசமந்தப் போக்கு. அதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டான். "மிஸ்டர் அலெக்சாந்தர் நீங்கள் அதிபர் கூட்டங்களுக்குப் போவதில்லையா“? ஆனந்தன் கேட்டான். "முதலில் நான்தான் அதிபராக இருந்தன். திடீரென இவர் கல்வித்திணைக்களக் கடிதத்தோடு அதிபராக வந்தார். நான் விலகிக்கொண்டன். அவர் கூப்பிட்டால் போவன்“. அலெக்ஸாந்தர் பதிலளித்தார். "இன்றைக்குப் போகல்லையா? ஆனந்தன் கேட்டான். "புதிய கல்வி அதிகாரி வாறாராம். வந்தபின் போகயிருக்கிறன்“. அலெக்ஸ் சொன்னார். கூட்டம் முடியும்வரை நானும் உங்களோட வந்திருக்கலாமா? நடப்பதை அறிந்தால் நல்லதொரு நியூஸ் பத்திரிகையில் போடலாம்“;. ஆனந்தன் கூறியதும் அலெக்ஸ் சந்தோசப்பட்டார். "நல்லது சேர். எங்கட புதிய கல்வி அதிகாரியும் வாறார். அவரைப்பற்றியும் பத்திரிகையில் போடலாம். வாங்க போவம்“. அழைத்தார்.

இருவரும் அதிபர் கூட்டம் நடக்கும் மண்டபத்துக்குச் சென்றார்கள். அதிபர்கள் ஒன்று கூடினால் கலகலப்பாக இருக்கும். தங்களது வீரப்பிரதாபங்களை விட்டுப் பார்ப்பார்கள். எல்லோரும் சேர்ந்து கதைப்பதால் ஒன்றும் விளங்கவில்லை. "சேர் எதுக்கும் ஒருக்கா இதில நில்லுங்க. உள்ளேபோய் எங்கட அதிபரிடம் ஓரு சொல்கேட்டுட்டு வாறன்“. சொல்லியவாறு அலெக்ஸ் உள்ளே சென்றார். வரிசையாக நின்ற வேப்பைமரங்கள் நிழலை அள்ளி வீசின. வேப்பம்பூக்கள் சொரிந்து அழகூட்டின. வாசம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சூழலை அவதானித்தான். எதிர்ப்புறமாக ஜேசு கோயில். பாலைமரத்தின் கீழ் மாதாவின் அழகுச் சிலை. எங்கும் பயன்தரு மரங்கள். வன்னிக் காடு வளத்தைத் தன்னகத்தே பொத்தி வைத்திருந்தது. வளமான மண், தோட்டங்கள் நிறைந்து பயிர்கள் சிரித்தன. உழுந்தும் பயறு, எள்ளு என எங்கும் தானிய வகைகள். உழைப்பால் உயரும் மக்கள். ஆநிரைகள் என செட்டிகுளம் செழித்திருந்தது. கதிரைகளை அரக்கித் தங்களுக்கு விருப்பமான இடங்களில் அதிபர்கள் அமர்ந்து அமர்க்களப் படுத்தினார்கள்.


தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP