Saturday, January 29, 2011

சிறுவர் கதைகள்

சிறுவர் கதைகள்
காகமும் பறவைகளும்
உப்பாறு கிராமம் அழகானது. அமைதியான சிறியதொரு கிராமம். அந்தக் கிராமத்துக்கு அழகூட்டுவது கொட்டியாரக் குடாக்கடலின் கடற்கரைதான். கடற்கரையில் பெரிய அலைகள் இல்லை. மாரிகாலத்தில் அலைகள் சுழன்றடிக்கும். கடல் இரைந்த வண்ணம் இருக்கும். கடற்கரை அண்மித்து வீதியிருந்தது. வீதிக்கு அப்பால் மக்கள் குடியிருந்தார்கள். மீன்பிடிதான் அக்கிராம மக்களினது வாழ்வாதாரம். கரைவலை இழுத்து மீன் பிடிப்பார்கள். இன்பமும் துன்பமும் கடலே கொடுத்தது. உப்பாற்று மக்களுக்கு யாவுமாகி நிற்பது அந்த ஆலமரம்தான். பகல்பொழுதில் மக்கள் ஆலமரத்தின் நிழலில் ஓய்வெடுப்பார்கள். இரவில் பல்லுயிரும் பயன்கொள்ளும் ஒரு சத்திரமாக விளங்கியது. காகங்கள் விசித்திரமான பறவைகள். அவை மனிதரோடு சேர்ந்து வாழும் பண்பைக் கொண்டன. மனிதர் இல்லாத இடங்களில் காகங்களைக் காணமுடியாது. அதிகமாக மீன்பிடிக் கிராமங்களில் மனிதரோடு கலந்து வாழும்.
உப்பாறு மீன்பிடிக் கிராமம். ஆதலால் காகங்களும் வாழ்ந்தன. ஆலமரத்தில் பல்வேறு பறவைகளும் கூடுகள் கட்டி வாழ்ந்தன. எந்த நேரமும் ஆலமரத்தில் ஆரவாரமா யிருக்கும். காலையில் கரைவலையில் வேலை நடக்கும். அப்போது காகங்களுக்கு நிறையவே உணவு கிடைக்கும். பகலில் மனிதர்கள் மரநிழலில் ஒதுங்குவார்கள். பறவைகள் மரத்துக் கிளைகளில் சந்தோசிக்கும். இரவில் வெளவால்களின் திருவிழா.
ஒருநாள் உப்பாறு அல்லோல கல்லோலப் பட்டது. மக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. கடலில் இருந்து குண்டுகள் சீறிப் பாய்ந்தன. கரையில் விழுந்து வெடித்தன. கிராமம் அதிர்ந்தது. மக்கள் சிதறி ஓடினார்கள். ஆலமரத்தில் குண்டுகள் பாய்ந்தன. கிளைகள் முறிந்து வீழ்ந்தன. பறவைகள் சிதறிப் பறந்தன. பலநாட்கள் செல்லடிகள் தொடர்ந்தன. உப்பாறு வெறிச்சோடிக் கிடந்தது.
நாட்கள்; உருணN;டாடின. கூடுகட்டி வாழ்ந்த ஒரு காகம் திரும்பி வந்தது. வந்தது. ஆலமரக் கிளையில் அமர்ந்தது. ஆலமரத்தைப் பார்த்தது. “எப்படி நலம்? தன்னந்தனியாக நிற்கிறாய். நானும் உயிர்தப்பிப் பிழைத்தேன்உன்னைப் பார்த்துப் போக வந்தேன்.” காகம் நலம் விசாரித்தது.“எனக்கும் கால்கள் அல்லது சிறகுகள் இருந்தால் நானும் ஓடிஒளிந்திருப்பேன். எல்லாத் துயரங்களையும் தாங்கிக்
கொண்டு நின்ற இடத்திலேயே நிற்கிறேன்”;. ஆலமரம் அழுதது. காகம் உற்றுக் கேட்டது. எங்களுக்கு உணவும் உறைவிடமும் தந்து ஆதரிக்கும் நீயே அழலாமா? உன்னைப் பார்த்துப் பேசத்தானே பறந்து வந்தேன்”;. காகம் தேற்றியது.
“கேட்க மனதுக்குச் சந்தோசமாக இருக்கிறது”. நான் எப்படியோ உயிர் வாழ்வேன். எனது தாங்கும் வேர்கள் இருக்கின்றன. அவை என்னைத் தாங்கி நிமிர்த்தி விடும். அடி வேர்கள் பூமித்தாயின் கனியநீரை உறிஞ்சித்தரும். இலைகள் சுவாசித்து உணவைத் தயாரிக்கும். நான் நீண்ட காலம் உயிர்வாழ்வேன். ஆனால் உன்னால் முடியாது. உனது உடலில் இருந்து ஒரு பகுதி சிதைந்தாலும் உயிர் வாழ்வது நிச்சயமில்லை. நீ எங்காவது ஓடத்தான் வேண்டும்.” ஆலமரம் அசைந்தவாறே விளக்கியது. காகம் ஓரு முறை ஆலமரத்தைப் பார்த்தது. இலைகள் உடைந்த கிளைகளை உதிர்த்து விட்டுப் புதிய தளிர்களைப் பரவ விட்டிருந்தது. காகத்துக்குச் சந்தோசம்.
“மனிதர் செய்யும் கொடுமைக்கு நாமெல்லாம் ஆளாகிறோம். இந்த மனிதர் ஏனிப்படிச் செய்கிறார்கள”;? மீண்டும் ஆலமரம் தனது ஆதங்கத்தை வெளியிட்டது. காகத்துக்குக் கவலை. பேசாதிருந்தது. சடுதியாக எங்கிருந்தோ ஒரு வெடிச்சத்தம். காகம் கதிகலங்கிப் பதறியது. “சுணங்காமல் நீ ஓடு. நான் எப்படியும் உயிர்வாழ்ந்து கொள்வேன். உனது உயிர் போனால் மீண்டும் வராது. ஓடு” ஆலமரம் காகத்தை விரட்டியது. காகம் விரைந்து பறந்தது.
கடலைக் கடந்து பறந்தது. சனங்கள் நெருங்கி வாழும் நகரை அடைந்தது. சுற்றிச் சுற்றிப் பறந்து பார்த்தது. புறாக்கூடுகள் போல் எங்கும் சிமெந்துக் கட்டிடங்கள். சாலையோரங்களில் ஓரிரு சடைத்த வாகைமரங்கள் தெரிந்தன. மரங்களில் பல்வகைப் பறவைகள் வாழ்ந்தன. பறவைகள் தங்குவதற்குப் போதிய இடமில்லை. புறாக்கள் மனிதரோடு ஐக்கியமாகி விட்டன. அவை வீட்டுக் கூரைகளுக்குள் குடியிருந்தன. நகரத்தில் உள்ள காகங்கள் மனிதரைப் போல் வாழ்க்கையை மாற்றிக் கொண்டன. உப்பாற்றுக் காகம் களைப்போடு இறங்கியது. மரக்கிளையில் வந்திருந்தது. அதனை மற்றக் காகங்கள் கண்டு கொண்டன. “என்ன புதியமுகமாயிருக்குது”? இரண்டு காகங்கள் பேசிக் கொண்டன.
“பாவமாய்க்கிடக்குது, எங்களிட்ட இருக்கிற மேலதிகப் பாண்துண்டைக் கொடுப்பம்.” இரண்டும் தீர்மானித்தன. “என்ன நண்பரே! ஊருக்குப் புதுசா. பசிபோல் தெரிகிறது. இப்படி வாங்க. இந்தப் பாண்துண்டைச் சாப்பிடுங்க”. கொடுத்தன. உப்பாற்றுக் காகத்துக்குச் சந்தோசம். காகங்களுக்குக் கிட்டப்போய் பாண்துண்டை எடுத்துக் கொண்டது. நன்றிப் பெருக்குடன் “காகா” என்றது. பசியுடன் பாண்துண்டைக் கொத்தியது. எவ்வளவு கொத்தினாலும் அத்துண்டிலிருந்து ஒரு துண்டுதானும் வரவில்லை. இரண்டு காகங்களையும் பார்த்தது. அவையும் கொத்திக் கொத்தி அலுத்துக் கொண்டன. சில காகங்கள் தண்ணீர் இல்லாத தொட்டியில் குந்தியிருந்தன.
ஏதோ முடிவோடு “ பாண் துண்டையும் தூக்கிக் கொண்டு எங்கள் பின்னால் வா” கட்டளையிட்டுப் பறந்தன. சொன்னபடி காகம் பாண் துண்டைக் கௌவிக் கொண்டு பறந்தது. ஒரு வீட்டுப்பின்புறமாக தண்ணீர் நிறைந்த தொட்டி இருந்தது. தொட்டியடியில் யாரும் இல்லை. காகங்கள் தொட்டியில் உள்ள தண்ணீரில் பாணைத் தோய்த்து நனைத்தன. புதுக்காகமும் அவ்வாறே செய்தது.
வீட்டுக்காரர் சத்தமிட்டவாறே வந்தார். பாணைத் தூக்கிக் கொண்டு பறந்தன. வீட்டுக் கூரையில் வைத்துக் கொத்தின. பாண்துண்டு அலகில் நிறைந்தது. “பட்டணத்துக் காகங்களுக்கு நல்ல மூளையிருக்கு”. உப்பாற்றுக் காகம் மனதில் நினைந்து கொண்டு உண்டது. பசியடங்கியது. அத்துடன் தாகமும் சற்றுக் குறைந்தது. புதுக் காகத்துக்குப் புதுமையாக இருந்தது. பட்டணத்துக் காகங்கள் புத்தி சாலிகள்தான். மனதில் பெருமை கொண்டது.
“எனக்குத் தாகமாய் இருக்கிறது. குழாயடிக்குப் போவம். வா” கூறிக்கொண்டு பறந்தன. உப்பாற்றுக் காகமும் சென்றது. குழாய் மூடியிருந்தது. “எங்கே தண்ணீர்”? புதுக்காகம் பரபரத்தது. “பொறு தண்ணீர் வரும்”;. சொல்லியவாறு குழாயில் இருந்தது. தனது அலகால் மூடியைத் திருகியது. தண்ணீர் சொட்டுச் சொட்டாய் வழிந்தது. அலகைக் குழாயுள் திணித்துத் தண்ணீரை உறிஞ்சிக் குடித்தன. தண்ணீர் விழுமிடத்தில் குழியிருந்தது. அதில் தண்ணீர் தேங்கிநின்றது. “குளிப்பமா? வாங்க” கேட்டவாறே காகங்கள் குளிக்கத் தொடங்கின். உப்பாற்றுக் காகமும் குளித்தது. உடம்புக்குச் சுகமாக இருந்தது. அலகினால் இறக்கைகளைக் கோதிவிட்டன.
அந்த நகரில் பெரியதொரு வெளியிருந்தது. மாலையானதும் நகரத்துப் பிள்ளைகளும் பெரியவர்களும் கூடுவார்கள். பிள்ளைகள் கூடி விளையாடுவார்கள். பெரியவர்கள் ஊர்ப் புதினங்களைக் கதைப்பார்கள். கடலை, கச்சான் முறுக்கு விற்பனை நடக்கும். சிறுவர்கள் கடலைகளை வீசுவார்கள். காகங்கள் பறந்து பறந்து பொறுக்கி உண்ணும். காகநடை பயின்று பார்க்கும். இரைந்து கரையும்.
காகங்கள் தரையிலும், மின்சாரக் கம்பிகளிலும் இருக்கும். பலகாகங்களின் கூடுகள் மின்சாரக் கம்பங்களில் இருந்தன. அவை மின்சார வெளிச்சத்திலும் உறங்கின. உப்பாற்றுக் காகத்துக்குப் புதினமாக இருந்தது. இருள் பரவியிருந்தது. நகரம் பகலாக ஜொலித்தது. “வா, அந்த மரத்தில் இரவைக் கழிப்போம்.” காகங்கள் அழைத்துப் பறந்தன. பின்னால் உப்பாற்றுக் காகம் சென்றது. வீதியோரத்தில் நின்ற வாகைமரத்தை அடைந்தன.
வாகை மரம் சடைத்து நிழல் பரப்பி நின்றது. ஒரு கிளையில் காகங்கள் அமர்ந்தன. மரக்கிளைகளில் பறவைகளின் கூடுகள். கூடுகளில் குஞ்சுகளின் கும்மாளம். மரத்தின் பெரிய கிளைகளில் பொந்துகள் இருந்தன. பொந்துகள் கிளிகளின் மாளிகைகள். ஒருபுறம் மைனாக்களின் ஆரவாரம். மறுபுறம் கிளிகளின் ஆரவாரம். இடையிடையே குயில்களின் குக்கூக்கு.
கடலில் இருந்து காற்று வீசியது. வாகைமரம் காற்றில் அசைந்தவாறு தாலாட்டியது. இருள்பரவி ஊரெல்லாம் அடங்கி விட்டது. மரத்தில் உள்ள உயிரினங்களும் அமைதிகாத்தன. படீரென ஒரு சத்தம் கேட்டது. உப்பாற்றுக்காகம் பயத்துடன் பறந்தது. மற்றக்காகங்கள் விழித்துக் கொண்டன. “ஏய்…எங்கே போகிறாய்…வா..வா” சத்தமிட்டுப் பின்னால் துரத்தி வழிமறித்தன.. “நில்லு..நில்லு ..சொல்வதைக் கேள்” தடுத்தன. “சுடுறாங்க .. வாங்க ஓடித்தப்புவம்” உப்பாற்றுக் காகம் பயத்தால் நடுங்கியவாறு அலறியது.
“அது வெடிச்சத்தம் இல்லை. மின்சாரக் கம்பியில வெளவால் மோதியிருக்கு. திரும்பு. வா போவம்”. காகங்கள் கூறின. அமைதியடைந்த காகம் பின்னால் சென்றது. பறவைகளும் விழித்துக் கொண்டன. “அப்படியென்றால் அது வெடிச் சத்தமில்லையா”? நடுங்கியபடியே கேட்டது. “இதுக்கெல்லாம் போய்ப் பயப்பட்டால் வாழலாமா? எங்களுக்குப் பழகிப் போச்சுது. பாவம் வெளவால்தான் மாட்டுப்பட்டிருக்கும்”. காகங்கள் அனுதாபத்துடன் கூறின. வெளவாலின் நிலையை எண்ணிப் பார்த்தன. அவற்றின் மனக்கண்முன் வெளவால் மின்சாரக்கம்பியில் தொங்குவது தெரிந்தது.
“மின்சாரக் கம்பியில போய் மோதினால் சும்மா விடுமா”? கிளிகள் கீச்சிட்டன. “கம்பியில் எப்படி நீங்க இருக்கிறீங்க? உங்களுக்கு மின்சாரம் தாக்காதா”? ஆச்சரியத்துடன் உப்பாற்றுக் காகம் கேட்டது. “ இதுகூடத் தெரியாதா? இவர் எங்க இருந்து வந்தவர்”?
புறாக்கள் புறுபுறுத்தன. “ஒரு கம்பியில் இருந்தால் பயமில்லை. இரண்டு கம்பியிலும் நமது உடல் பட்டால் மின்சாரம் தாக்கும். காலையில் பாருங்கள். வெளவால் மின்சாரக் கம்பியில் தொங்கும். இப்பொழுது உறங்குங்கள்” பறவைகள் அமைதிகாத்தன. உப்பாற்றுக் காகத்துக்கு உறக்கமில்லை.
“என்ன உறக்கம் வரவில்லையா? இருக்கும் வரை சந்தோசமாக இருப்போம்”. உப்பாற்றுக் காகம் சத்தம் வந்த திசையைப் பார்த்தது. ஒரு ஊசாட்டமும் இல்லை. அமைதியாக இருந்தது. மீண்டும் அதே சத்தம். “நான்தான் வாகை மரம்” காகம் உசாரானது. மற்றக் காகத்தின் பக்கத்தில் குசுகுசுத்தது. காகங்கள் விழித்துக் கொண்டன. மற்றப் பறவைகளுக்கும் ஆச்சரியம். “துன்பம் எல்லோருக்கும் சொந்தமானது. அது வரும் போகும். உலகமும் மாறிக்கொண்டுதான் இருக்கும். வருவதும் போவதும் வாடிக்கைதான்”. மரம் போதனையில் ஈடுபட்டது.
“என்ன இவ்வளவு காலமும் பேசாதிருந்த மரம் இன்றைக்குப் பேசுகிறது”? பறவைகள் கண்களால் பேசிக் கொண்டன. குஞ்சுகள் வஞ்சகமில்லாதவை. “அம்மா காலையில் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். வீதியை அகலமாக்க வேண்டுமாம். மரம் இடைஞ்சலாக இருக்காம். இந்த மரத்தை வெட்டியகற்ற வேண்டும் என்று கதைத்தார்கள். அதுதான் மரம் தத்துவம் பேசுகிறது. குஞ்சுகள் தெரிவித்தன. செய்தி மரமெங்கும் உள்ள உயிரினங்களுக்குப் பரவியது. யாவும் கவலையில் ஆழ்ந்தன.
“நான் போகும் இடமெல்லாம் இப்படியா? என்னால்தானே இந்த மரத்துக்கும் துயரம் வந்தது. அங்கு ஆலமரம் செத்துக் கொண்டிருக்கிறது. இங்கு இந்த மரம் தத்துவம் பேசுகிறது. இதற்கு என்ன செய்யலாம்.? எப்படித் தடுக்கலாம்.” உப்பாற்றுக்காகம் யோசனையில் ஆழ்ந்தது. பறவைகளின் திருப்பள்ளி எழுச்சி தொடங்கும் நேரம். தூரத்துக் கோழிகள் கூவத்தொடங்கின. பறவைகளும் பாடத்தொடங்கின. வாகை மரத்தில் இருந்த பறவைகள் அமைதிகாத்தன. “நான் எனது கவலையைக் கூறியிருக்கக் கூடாது.” வாகை மரத்துக்குக் கவலை. “பிள்ளைகள் உங்ஙளுக்கு என்ன நடந்து விட்டது? ஏன் சந்தோசமாக இல்லை. ஒருவரும் பாடவில்லை”. மரம் கவலையோடு கூறியது. “எங்களுக்கு எல்லாமாகி இருக்கும் உங்களுக்கு வரவிருக்கும் தீங்கை எண்ணினோம். கவலையோடு இருக்கிறோம். பறவைகள் ஒரே குரலில் கூறின. பிள்ளைகள் மாற்றம் என்பது தேவையானது. மாற்றமாம் வையகம் என்று மனிதர்கள் கூறுவார்கள். நான் இல்லாவிட்டால் இன்னொரு மரம் உங்களுக்கு அடைக்கலம் தரும். கவலையை விடுங்கள். சந்தோசமாய் இருங்கள். மரம் கூறிவிட்டுக் காற்றில் அசைந்து கொண்டிருந்தது.
“இந்த மரத்துக்குக் கவலையே இல்லையா? இந்த மனிதரின் நலத்துக்காக மரங்களை வெட்டி வீழ்த்துவதா? மரங்கள்தானே ஒக்சிசனைத் தருவது. அவைதானே மழைக்கும் காரணமாகின்றன. பறவை யினங்களுக்கு உறைவிடத்தை வழங்குகின்றன. வெயிலை வடித்து நிழலைத் தருகின்றன. இதனைத் தடுக்க வேண்டும்.” பறவைகள் ஒரே குரலில் ஒலித்தன. விடிந்து கொண்டு வந்தது. ஒரு காகம் “இன்று சனிக்கிழமை. எல்லாக் காகங்களும் இந்த மரத்தில் கூடவேண்டும். மற்றப் பறவையினங்களும் வரலாம். இன்று சனீஸ்வரனுக்கு உணவு படைத்து நம்மை அழைப்பார்கள். நாம் உண்டால்தான் மனிதர் உண்பார்கள். நாம் அவற்றை உண்ணாது விடுவோம். நடப்பதைப் பார்ப்போம்.” உரத்த குரலில் சத்தமிட்டது.
பறவைகள் அசையாது வாகை மரத்தில் கூடியிருந்தன. செய்தி அனைத்துக் காகங்களுக்கும் பரவியது. எல்லாக் காகங்களும் வாகைமரத்தில் வந்து கூடின. சில காகங்கள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள மஞ்சள் பட்டுத் துணிகளைக் கொண்டு வந்தன. மரத்தின் அடியில் செருகிவட்டன. பூக்களும் குவிந்திருந்தன. மரம் கோயிலாகக் காட்சி தந்தது. மக்கள் சமையலை முடித்து விட்டுக் காகங்களைத் தேடினார்கள். காகங்களைக் காணவில்லை. வாகை மரத்தில் காகங்கள் கூடியிருப்பதை அறிந்தார்கள். படயலை எடுத்துக் கொண்டு வந்தார்கள். படையலைப் படைத்து வாகையைச் சூழ்ந்து நின்றார்கள்.
ஒரு காகமும் கீழிறங்கி வரவில்லை. மக்களுக்கு ஏமாற்றம். “ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது. இந்த மரத்துக்கு யார் பட்டுச் சாத்தினார்கள்? பூக்களை யார் சூட்டினார்கள்.”? கேள்விகள் ஆளுக்காள் கேட்டார்கள். செய்தி சேகரிக்கப் பத்திரிகை நிருபர்கள் கூடிவிட்டார்கள். அவர்கள் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டார்கள்.
வீதியை அகலமாக்குவதற்காக மரத்தை வெட்டியழிக்கும் செய்தி மெல்ல மெல்ல புறப்படத் தொடங்கியது. மக்கள் கூடிவிட்டார்கள். படித்தவர்களும். படியாத பாமரர்களும் மரத்தை வெட்டக் கூடாது என்று வாதிட்டார்கள். அரச திணைக்களங்களத் தலைவர்களும் வந்து சேர்ந்தார்கள். நகரபிதாவும் வந்தார். கோயிற் தலைவர்களும் வந்து விட்டார்கள். “மரத்தை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டக்கூடாது. மரத்தின் எதிர்ப்புறமாக வீதியை அகலமாக்குங்கள்”. ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். “அதற்கான வேலையையும் இப்போதே தொடங்குவோம்.” நகரபிதாவும், வீதி அதிகார சபை முகாமையாளரும் தொடங்கி வைத்தார்கள்.
பறவைகள் பாடத்தொடங்கின. காகங்கள் கீழிறங்கி வந்தன. மக்கள் வைத்த படையலை உண்டு மகிழ்ந்தன. “ஒரு மரத்தை இப்பறவைகள் காப்பாற்றி விட்டன”. மக்களும் சந்தோசத்துடன் வீடுகளுக்குச் சென்று தங்கள் கடமைகளில் ஈடுபட்டார்கள். மரம் வழமைபோல் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. “எங்களுக்கு உதவிய மரத்தைக் காப்பாற்றி விட்டோம்”. பறவைகள் சந்தோசத்துடன் பாடிக் கொண்டிருந்தன.
“டொக்…டொக்..” சத்தம் வந்த பக்கம் பறவைகள் பார்த்தன. எங்கிருந்தோ பறந்து வந்த மரங்கொத்தியார் வீடமைத்துக் கொண்டிருந்தார். மரங்கொத்தி, பறவைகளுக்கு வீடமைக்கும் தச்சன். கிளிகளுக்குக் கொண்டாட்டம். தங்களுக்குப் பாதுகாப்பான வீடு கிடைக்கும் என்று கீச்சிட்டன. பலவகைப் பறவைகளுக்கும் அந்த மரம் உறைவிடத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.
மரம் நன்றியோடு பறவைகளை அரவணைத்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கும் நிழலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உப்பாற்றுக் காகம் அந்த மரத்தை உற்று நோக்கியது. எல்லா உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் இந்த உலகம் ஒரு சொர்க்கபுரிதான். தனக்கு ஆதரவளித்த ஆலமரத்தை நினைத்துக் கொண்டது. அதனை நோக்கிப் பறந்தது.

சிறுவர் கதை
செண்பகமும் நத்தையும்
சுலக்ஷிகா சாப்பிட அடம்பிடித்தாள். அம்மா சாப்பாட்டை ஊட்டிவிட முயற்சித்தார். எங்கிருந்தோ செண்பகம் பறந்து வந்தது சுலக்ஷிகா அந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் கண்கள் பயத்தை ஊட்டின. தாயிடம் நெருங்கி வந்தாள். “அம்மா அது என்ன பறவை?. கண்கள் சிவப்பாக இருக்கு. கொத்துமா”? அந்தப் பிஞ்சு அம்மாவிடம் சொன்னது. அம்மாவுக்கு வாய்ப்பாகியது.
“குழப்படி செய்தால் செண்பகம் வந்து கொத்தும். அதன் கண்களைப் பார். பொல்லாதது. நல்ல பிள்ளையாட்டம் சாப்பிடு. சாப்பிட்டால் செம்பகம் ஒன்றும் செய்யாது. உனது நண்பனாக இருக்கும்.” கூறிக்கொண்டு அம்மா உணவை ஊட்டினாள். சுலக்ஷிகா பறவையைப் பார்த்தவாறே உண்டாள். செண்பகம் அங்குமிங்கும் பாய்ந்து பறந்து திரிந்தது. இடையிடையே “கூம் …கூம்..” என்று சத்தமிட்டது. சங்கு ஊதுவதுபோல் இருந்தது. அதன் சத்தமும் சுலக்ஷிகாவுக்குப் பயத்தை ஊட்டியது. ஆனால் அதனைப் பார்த்தவாறே இருந்தாள்.
செண்பகம் சுலக்சிகாவின் குழப்படியைப் போக்குவதற்கு உதவியது. “செண்பகம்! சுலக்ஷிக்குட்டி சாப்பிட்டிட்டா. இப்ப போய் நாளைக்கும் வா.” அம்மா செண்பகத்தைப் பார்த்துச் சொன்னார். “செம்பகம்! போகவேணாம். என்னோட விளையாட வா. நான் குழப்படி பண்ணமாட்டன்”. சுலக்ஷிகா சத்தமிட்டாள். செண்பகம் எதையோ பார்த்தபடி வேலியில் இருந்தது.
சுலக்ஷிகாவின் கண்கள் ஓணானைக் கண்டுகொண்டன. “அம்மா அதோ..ஓணான்.” சத்தமிட்டாள். செண்பகத்தைக் கண்டதும் ஓணான் ஒளிந்து கொண்டது. அதனைச் செண்பகம் தேடியது. காணாததால் சத்தமிட்டது.
“அம்மா செண்பகம் ஏன் ஓணானைத் தேடுது. அதுவும் குழப்படி செய்ததா”? சுலக்ஷிக்கா கேட்டாள். அம்மாவுக்கு எப்படி விளக்குவது என்று தெரியாமல் தவித்தார். “குழப்படி பண்ணியபடியால்தான் தேடுது. சரி நீ போய் விளையாடு”? அம்மா சுலக்ஷிகாவின் கவனத்தைத் திருப்ப முயற்சித்தார். செண்பகம் வேறு பக்கம் தாவியது.
சுலக்ஷிகா ஓணானைக் கண்டு கொண்டாள். “அம்மா அதோ ஓணான். ஓணானின் நிறத்தைப் பாருங்கள். வேலித்தடிபோல நிறம். அப்போது இளஞ்சிவப்பு. எப்படி நிறம் மாறியது?;”;. அவளுக்கு ஆச்சரியம். அப்பா பாடசாலையால் வந்தார். “அப்பா….” சத்தமிட்டவாறு படலைக்கு ஓடினாள். அவளை வாரித்தூக்கி அணைத்தபடி “சுலக்ஷிக்குட்டி சாபிட்டிங்களாடா”?. கேட்டார். “ ஓம் சாப்பிட்டன். அம்மா செம்பகத்தக் கூப்பிட்டவ. செண்பகம் வந்தது. அதுட கண் செக்கச்சிவப்பாக இருந்தது. பயத்தில் சாப்பிட்டன். அப்பா அது கொத்துமாப்பா”? அப்பாவிடம் கேட்டாள். “செண்பகம் கொத்தாது. நமக்குப் பாதுகாப்பாக இருக்கும்.” என்றார். “அம்மா கொத்தும் என்று சொன்னாவே. அங்க பாருங்க. ஓணான். ஏன் தலையை மேலும் கீழும் ஆட்டுது?” சுலக்ஷிகா ஆர்வமாகக் கேட்டாள். “ஓ…அதுவா…. அதுக்கும் பசிக்குந்தானே? சுலக்ஷிக்குட்டி சாப்பாடு தருவாவா என்று எட்டிப் பார்க்குது.” “இந்த அப்பாக்கு ஒண்டுந்தெரியாது. செண்பகத்தக் கண்டு பயந்து எட்டிப் பார்க்குது. செண்பகம் வந்தால் வேலிக்குள்ள மறைந்திடும்.”
அவள் பார்வை செண்பகத்தின் மேல் பதிந்தது. செண்பகம் பறந்து வந்தது. ஓணான் இருக்கும் பக்கம் இருந்தது. உடனே ஓணான் வேலிக்குள் மறைந்து கொண்டது. “அப்பா நான் சொன்னது சரிதானே? ஓணான் மறைஞ்சிட்டுது. செண்பகம் அதைத் தேடுது”. அப்பாவிடம் இருந்து விடுபட்டு அவற்றைப் பார்த்தாள். சின்னப்பிள்ளைகள் அவதானிப்பதை அப்பா வியந்தார்.
“செண்பகம் பூச்சி புழுக்களை உண்ணும். ஓணான், பல்லி, சிறிய பாம்பு வகைகளையும் விடாது. மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத பறவை. நத்தைகளைத் தேடியுண்ணும். நன்றாக விரும்பி உண்ணும்”. அப்பா செண்பகத்தைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்தார்.
செண்பகம் பறந்து கிணற்றடிக்குச் சென்றது. கிணற்றடியைச் சூழ மரங்கள் நின்றன. பூஞ்செடிகள் செழித்துப் பூத்திருந்தன. அம்மா கச்சான் நாற்றை நட்டிருந்தார். பாத்திகளில் முளைகள் வெளிவந்திருந்தன. தலையில் தலைப்பாகை கட்டியதுபோல் எட்டிப்பார்த்தன. முளைகள் அழகாய் இருந்தன. நேற்றுத்தான் அவற்றைப் பார்த்து ரசித்தார்கள். சுலக்ஷி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள்.
முளைகளை நத்தைகள் நறுக்கி உண்டுவிடும். சில நத்தைகளை சுலக்ஷி கண்டுவிட்டாள். ஊர்ந்து வந்தன “அப்பா நத்தைகளைப் பாருங்கள்”. சத்தமிட்டாள்.. “நத்தைகள் வந்தால் பயிர்களை உண்டுவிடும். என்ன செய்வது? ஒரு இரவுக்குள் பயிர்களை அழித்துவிடும்”. அம்மாவுக்குக் கவலை.
செண்பகம் பறந்து வந்தது. அம்மாக்குச் சந்தோசம். “தோட்டத்தைக் காவல் செய்ய ஆள் வந்திட்டார்”;. அம்மா சத்தமிட்டார். “ஆரம்மா காவலுக்கு வந்திருக்கிறார்”;? சுலக்ஷி கேட்டாள். “அதோ பார். செம்பகம். அது நத்தைகளை விடாது.. நத்தைகள் எல்லாம் மாயமாக மறைஞ்சிடும்.” அம்மா சந்தோசப்பட்டார். செம்பகம் பாத்திகளுக்குள் நுழைந்தது. பறந்து பறந்து திரிந்தது. ஒவ்வொன்றாய் தூக்கிக் கொண்டு சென்றன. நத்தைகள் மாயமாக மறைந்து விட்டன.
“செண்பகம் நத்தையை என்னம்மா செய்யும்?” சுலக்ஷிகா வேடிக்கையாகக் கேட்டாள். “கொண்டுபோய் தனது குஞ்சுகளுக்குக் கொடுக்கும்”. அம்மா விடையளித்தாள்.
“குஞ்சுகள் நத்தையை என்ன செய்யும்.”“எல்லாத்தையும் சாப்பிட்டுவிடும்”. அம்மா நாற்றுக்களைப் பார்த்தவாறே சொன்னார்.“அம்மா! நத்தை ஓட்டுக்குள் மறைந்துவிடுமல்லோ. எப்படி அதைச் சாப்பிடலாம். செண்பகக் குஞ்சகளின் வாய் சின்னன். தொண்டைக்குள் பொறுக்காதா”? அம்மாவுக்கு விளக்கமளிக்க முடியவில்லை. அப்பா அவளை வியந்து கொண்டார்.
“செண்பகம் தனது அலகால் நத்தையைக் கொத்திச் சாப்பிடும். ஓட்டை வீசிவிடும்”;. அம்மாதான் பதில் சொன்னார். “அப்பா செண்பகம் கொத்தும்போது நத்தைக்கு வலிக்காதா”? சுலக்ஷிகா தொடர்ந்தால். வில்லங்கம் இனித்தான் தொடரப்போகிறது. அப்பா கதையை மாற்ற எண்ணினார்.
சுலக்ஷி அங்கே பார். வேலிமூலைக்குச் செண்பகம் போகுது. வாங்க.. பின்னால போய் பார்ப்போம். அவர் நடந்தார். சுலக்ஷி பின்னால் போனாள். வேலிமூலையில் புல்லும் புதருமாக இருந்தது. தூரத்தில் நின்றவாறே கவனித்தார்கள். செண்பகம் புகுந்து சென்றது. எட்டிப்பார்த்தார்கள். ஒரு கூடு தெரிந்தது. அதற்குள் முட்டைகளும் தெரிந்தன.“ஹாய் முட்டை .. அப்பா அங்கே பாருங்க இரண்டு முட்டைகள் தெரியுது. சுலக்ஷிகா சந்தோசத்தில் துள்ளினாள். “இது எங்கட செண்பகம். இது கொத்தாது. அப்பா! இந்த முட்டைகளைச் செண்பகம் என்ன செய்யும்.”? புருவங்களை உயர்த்திக் கேட்டாள். “அடைகாக்கும். கொஞ்சநாட்களில் குஞ்சு பொரிக்கும். குஞ்சுகளைப் பாதுகாத்து வளர்க்கும்.” “அப்பா! நாங்க நத்தையைக் கொடுக்காமல் சோறு கொடுப்போம். சோறு நல்லதுதானே”? அப்பாவுக்குச் சந்தோசம். அவளது மனதில் உதித்த சிந்தனையை திசைதிருப்பி விட்டார். செண்பகம் கெதியாகக் குஞ்சுகளைப் பொரி. நாங்க சோறு தருவோம். என்ன.? அப்பா நாங்க அம்மாட்டப் போவம்.” முன்னால் நடந்தாள். அவள் கண்களில் நத்தைக் கோது பட்டது. அவளுக்கு நத்தைக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொண்டாள். பேசாது நடந்தாள்.
“இனிப்பயமில்லை. ஒரு நத்தையைக் கண்டால் போதும். அந்த இடத்துக்கு தினமும் செண்பகம் வரும். அம்மா கூறிக்கொண்டிருந்தார். “அம்மா நமது வேலி மூலையில் செண்பகம் கூடுவைத்திருக்கு. நாங்க பார்த்தோம். இரண்டு முட்டைகளும் இருக்கு. அது நமது செண்பகம்தான். குதுகலத்துடன் கூறினாள். “நான் சொன்னேன்தானே. தோட்டத்தைக் காவல் செய்ய ஆள் வந்திட்டார் என்று. அவரை எங்கட சுலக்ஷிக்குட்டி கண்டு பிடிச்சிட்டா. சுலக்ஷி கெட்டிக்காரி”;. அம்மா அவளைக் கட்டியணைத்தபடி கூறினார். சுலக்ஷி அப்பாவைப் பார்த்தாள்.“அப்பா! பாவம் நத்தைகள்.” சுலக்ஷி அனுதாபமாகக் கூறினாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மனதுக்குள் எங்கோ வலித்தது.
சிறுவர் கதை
ஆமையும் நத்தையும்
ஆமை குளத்தில் நீந்திவிளையாடியது. ஆறுதலாகக் கரையேறிக் குளக்கட்டுக்கு வந்தது. இளவெயில் இதமாக இருந்தது. உடலில் வெயில்படும்படி தலையை நீட்டியது. உல்லாசமாய் இளம் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. “ஆமையண்ணா! எப்படி இருக்கறீர்கள்.” சத்தம் கேட்டுக் கண்களைத் திறந்த ஆமையாரின் முன் நத்தையொன்று நின்றது.
“பொடிப்பயலே! நான் யாரென்று தெரியாமல் நலம் விசாரிக்கிறாயா? பார்த்தால் தெரியவில்லையா? நான் நலமாக இருப்பதை”. ஆமை அகங்காரமாய்ச் சொன்னது.
“ஆமையண்ணா ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரிப்பது நாகரீகமான செயல். அதைத்தான் நான் செய்தேன். நீங்கள் என்னை அவமானப்படுத்துவது சரியா”? நத்தை விநயமாகச் சொன்னது. “அதற்கும் ஒரு தராதரம் வேணும்? என்னைப்பற்றி உனக்குத் தரியாதா? இந்த ஊரில உலகத்தில இருக்கிற மனிசரிட்டக் கேட்டுப்பார். அப்ப தெரியும்”. ஆமை நத்தையைப்
பொருட்படுத்தாது கூறியது. “என்றாலும் இந்த மமதை கூடாது.” நத்தை தனக்குத்தானே சொல்லிக் கொண்டது. “ஆமையண்ணா யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்? சொல்லமுடியுமா”? நத்தை தெரிந்து கொள்ளும் ஆசையில் கேட்டது. “நீ போய் யாரிடமாவது விசாரித்துப் போட்டு வா”. கூறியனுப்பியது. நத்தை மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது. வழியில் பெரிய கழுகு வட்டமிட்டது. அதிலிருந்து தப்புவதற்குத் தயாரானது. “ஆமையண்ணா கழுகு வருது. கவனம்.” சத்தமிட்டது. தனது உடலை ஓட்டுக்குள் சுருக்கிக் கொண்டது. இலைகளுக்குள் மறைந்து கொண்டது. “கழுகு வந்தால் பார்க்கலாம்”? சொல்லி முடிவதற்குள் கழுகு ஆமையைக் கண்டு கொண்டது.
இரை கிடைத்து விட்ட சந்தோசத்தில் இறங்கியது. ஆமை தனது உடலை ஓட்டுக்குள் இழுத்துச் சுருக்கிக் கொண்டது. பாறையோரத்தில் பதுங்கியது. கழுகு ஆமையின் மேல் குந்தியது. ஆமை அசையது கிடந்தது. பாய்ந்து வந்த முயலார் பற்றைக்குள் ஓடி மறைந்து கொண்டது. கண்டுகொண்ட கழுகு எழுந்து விரைந்தது. முயலைப் பிடிக்க முடியவில்லை. கழுகு மேலெழுந்து பறந்து மறைந்தது.
ஆமை அசையாது கிடந்தது. நத்தை இலைகளுக்குள் இருந்து வெளியே வந்தது. “ஆமையண்ணா கழுகு போய்விட்டது. வெளியே வாங்க”. சத்தமிட்டது. ஆமை மெதுவாகக் தலையை நீட்டியது. வெளியே எட்டிப் பார்த்தது. “ஆமையண்ணா கழுகு என்ன சொன்னது”? நத்தை கதைகொடுத்தது. “எனக்கென்ன தெரியும். நான் நல்லதொரு தூக்கம் போட்டேன்”. ஆமை மழுப்பியது. “நான் கழுகைக் கண்டபடியால் சத்தமிட்டேன். நீங்களும் தப்பிவிட்டீர்கள். இல்லவிட்டால் நாங்க இருவரும் கழுகுக்கு இரையாகி இருப்போம்.” நத்தை கூறியது. “என்னை கழுகால் அசைக்க முடியாது. நான் பலசாலி. எனது ஓடு பலமானது. உன்னிடம் என்ன கதை. எனக்கு வேலையிருக்கு”. கூறிக்கொண்டு நடந்தது. நத்தையும் பின்தொடர்ந்தது.
“ஏய் என்பின்னால் ஏன்வருகிறாய்”? ஆமை சத்தமிட்டது. “எல்லாம் ஒரு பாதுகாப்புக் கருதித்தான்”;. நத்தை ஊர்ந்து கொண்டே சொன்னது. “எனக்கா அல்லது உனக்கா”? கேட்ட ஆமைக்கு நத்தை “ஆமையண்ணா இருவருக்கும்தான்”. என்றது. “எனக்குப் பின்னால் வருவதற்கு உனக்கு அருகதை இல்லை. நீ விலகிப்போ”. ஆமை சத்தமிட்டது. “நான் பின்னால் வந்தால் உங்களுக்கு நன்மை. நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டலும் கூடவே வருவேன்”;. நத்தை கூறியதும் ஆமைக்குக் கோபம் வந்துவிட்டது. “நத்தைத் தம்பி நான் போகும் இடம் தூரமானது. எனது வேகத்துக்கு உன்னால் நடக்க முடியாது. எங்கட தாத்தாவின் தாத்தாவை உனக்குத் தெரியாது. அவர் ஓட்டப்போட்டியில் முயலையும் வென்றவர். இது உனக்குத் தெரியுமா”? நடந்தவாறே ஆமை பெருமையாகச் சொன்னது. நத்தை சிரித்துக் கொண்டது.
“நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது அந்தக் காலம். இந்தக் காலத்தில் அது முடியாத காரியம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்”. நத்தை நின்றவாறே சொன்னது. ஆமைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “நீ இப்ப என்ன சொல்ல வாறாய். என்னோடு நடைப்போட்டிக்கு வருகிறாயா”? மார்தட்டிக்கொண்டு நின்றது. “ஐயோ ஆமையண்ணா என்னால் போட்டி போடமுடியாது. நான் இப்போது சத்துள்ள உணவைத் தேடிப் போகிறேன். அதோ தெரிகிறதே பாதை. அப்படியே போனால் நல்ல தோட்டம் வரும். நல்ல உணவும் கிடைக்கும். நண்பர்களும் வருவார்கள். நாங்கள் சந்தோசமாகப் பொழுதைக் கழிப்போம். பயிற்சியும் செய்வோம்” ஊர்ந்து கொண்டே கதைத்தது.
ஆமைக்குச் சிரிப்பு வந்தது. வாய்விட்டுச் சிரித்தது. “ஏனண்ணா சிரிக்கிறீங்க”. அடக்கமாக நத்தை கேட்டது. உனது கதையைக் கேட்டால் சிரிப்பு வராதா என்ன? நீ சத்துள்ள உணவு சாப்பிடப் போகிறாயா? சாப்பிட்டு என்ன சாதிக்கப் போகிறாய்?;. என்னோடு போட்டிபோடப் போகிறாயா”? சிரித்தது.
“அண்ணா ஒரு நாளைக்கு அப்படி நடந்தாலும் நடக்கலாம். யார் கண்டது. ஆனால் இப்படித் துள்ளியவர்கள் தோல்வியைக் கண்டிருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.” நத்தை ஊர்ந்தவாறே சொன்னது.“எனக்கு வாற கோபத்துக்கு உன்னை …. “ நிறுத்திக் கொண்டது. “ஏனண்ணா நிறுத்தினீர்கள்”. நத்தை சிரிக்காமலேயே கூறியது. “அப்படியே கடித்து நொருக்கிப் போடுவன். கவனமாயிரு. அதோ எனக்கு நல்ல உணவு தெரிகிறது. சாப்பிட்டுவிட்டு உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்”;. கூறிக்கொண்டே விரைந்தது. எதிரே நாகதாளிக் கள்ளிச் செடி பூத்திருந்தது. அதன் பூவை ருசித்தது.
இயற்கை எல்லா உயிர்களையும் பொதுவாகத்தானே படைத்துள்ளது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று மனிதர்கள்தான் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஏன் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு. உயிரினங்களுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது. நத்தை சிந்தனையில் ஆழ்ந்து ஊர்ந்தது. நாகதாளி பூத்திருந்தது. மெதுவாக அருகே சென்றது. நல்ல சுவையான தேன் பூவில் சுரந்திருந்தது. அதனைச் சுவைத்து உண்டது.
உயிரினங்களைப் படைத்த இறைவன் அவற்றுக்கு உணவினையும் படைத்திருக்கிறான். இறைவன் ஒரு கொடைவள்ளல். ஏழைபங்காளி. மனதினுள் நினைந்து வியந்தது.ஆமை நத்தையைக் கண்டு கொண்டது. “ஏய் உன்னை யார் இங்கே வரச்சொன்னது? நான் போகும் இடமெல்லாம் வருகிறாய். நாகதாளியின் தேனைக் குடிக்கிறாய்;.” அதட்டியது. “அண்ணா உனக்கேன் கோபம் வருகிறது. நாகதாளி தனது தேனைக் குடிக்க மறுப்புத் தெரிவிக்கவில்லையே. பசித்தது. நாகதாளிப் பூ கண்ணில் பட்டது. கொஞ்சம் உண்டால் நடப்பதற்குத் தெம்பாயிருக்கும். அதுதான் வந்தேன்.நீங்கள் கோபிப்பது என்ன ஞாயம்.?” தேனைச் சுவைத்துக் கொண்டே கூறியது. “என்றாலும் உனக்கு வாய்க்கொழுப்பு அதிகம். அடக்கி வாசி”. சத்தமிட்டது. சாப்பிட்டதும் ஆமை நடையைக் கட்டியது. பின்னால் நத்தையும் ஊர்ந்து சென்றது.“ஆமை அடங்கிக் கிடந்தாலும் அகங்காரம் கொண்டது. இந்த ஆமைக்கு எப்படிப் பாடம் புகட்டுவது.” யோசித்தவாறே ஆமைக்குப் பின்னால் சென்றது.
ஆமை வேகமாக அரக்கியது. அதன் வேகத்துக்கு நத்தையால் ஈடுகொடுக்க முடியவில்லை. வேகமாக முயல் ஓடிவந்தது. நத்தை ஏதோ சொல்ல வாயெடுத்தது. ஆனால் அதற்கு அவகாசம் இருக்கவில்லை. ஆமை தூரத்தில் சென்று கொண்டிருந்தது. ஒரே பாய்ச்சலில் ஆமையைத் தாண்டிப் பாய்ந்து ஓடியது. அதன் பின்னால் ஏதோ துரத்தி வந்திருக்க வேண்டும். ஆமை எதிர்பார்க்க வில்லை. முயல் ஓடி மறைந்து விட்டது.
“எப்படீயும் முயலைச் சந்திக்க வேண்டும். புற்தரைக்கு முயலும் வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்.” மனதில் எண்ணிக்கொண்டு ஊர்ந்தது. ஒரு காய்ந்த சருகு வழியில் கிடந்தது. சருகில் மெதுவாக ஏறியது. அப்போது வேகமாக காற்று வீசியது. சருகுகளை வேகமாகக் காற்றுச் சுழற்றியது. நத்தை சருகைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. சருகுகள் அந்தரத்தில் பறந்தன. உருட்டிக் கொண்டு வேகமாக வீசியது. புற்தரைவரை சருகுகள் வந்து விழுந்தன.
சருகுகளை அகற்றி நத்தை வெளியே வந்தது. புற்தரையில் புல்லின்மேல் அமர்ந்து களைப்பாறியது. நரி புற்தரைக்கு வந்தது. பல பறவைகளும், பிராணிகளும் கூடின. காகம் எங்கிருந்தோ பறந்து வந்து புற்தரையில் இருந்தது. நரி காகத்தின் அருகில் சென்றது. காகம் மெதுவாகப் பார்த்தது. பக்கத்தில் உள்ள மரத்தில் தாவி இருந்தது. “என்ன காக்கத்தாரே புதினம் ஏதும் இல்லையா”? நரி கதை கொடுத்தது.
“இந்த மனிதர்கள் இன்னும் அந்தக் கதையைத்தான் கதைக்கிறார்கள்”;. காகம் கூறியது. “எந்தக் கதையை” நரி கேட்டது. “அதுதான். உங்கள் தாத்தா எங்கள் தாத்தாவை ஏமாற்றிய கதை.” “ஓ…வடை பறித்த கதையையா? அதெல்லாம் நமக்கெதற்கு? நாங்க சந்தோசமான இருப்போம்.” நரி காகத்தைப் பார்த்துக் கூறியது. பறவைக் கூட்டங்களும் பறந்துவந்து சேர்ந்தன. இந்த உரையாடலை நத்தை கேட்டுக் கொண்டிருந்தது. நத்தை மெதுவாகக் கதை கொடுத்தது. “நரியண்ணா உங்களுக்கு உலகத்தைப் பற்றி நல்லாத்தெரியுமாமே! மெய்யா”? நத்தை மெதுவாகக் கதை கொடுத்தது. சத்தம் வந்த பக்கம் நரி குனிந்து பார்த்தது. “ஹேய் …நத்தைக்குஞ்சு.. நீயா? இங்கே என்ன செய்கிறாய்”?“ நான் இந்தப் பக்கம் வருவது வழக்கம். வந்த இடத்தில உங்களைப் பார்த்தேன். அதுதான்”. நத்தை பணிவாகச் சொன்னது.“நீ நல்லாக் கதைக்கப் பழகிட்டாய். என்ன?“எல்லாம் உங்களைப் பார்த்துத்தான்”.“அடிடா சக்கை. நீ இப்ப என்னையும் வெல்லப்பார்க்கிறாய். என்ன? சரி..ஏன் அப்படிக் கேட்கிறாய்”? நரி ஆவலாய்க் கேட்டது.
“அண்ணா இந்த ஆமை எப்படி முயலாரை வென்றது? ஆமை பெரிதாகப் புழுகிக் கொண்டு திரியுது” நத்தை பக்குவமாகக் கேட்டது. நரி அட்டகாசமாகச் சிரித்தது. அது பெரிய பகுடி. இந்த முயல் சரியான நேரத்தில் குறட்டை விட்டு நித்திரை கொண்டால் ஆமை வெல்லும்தானே”? காகமும் தத்தி வந்திருந்து கேட்டது.
“என்ன பழைய கதையெல்லாம் நடக்குது”.? காகம் தொடங்கியது. “இந்த நத்தைக்குஞ்சு ஆமையாரின் கதையைச் சொல்லட்டாம். அதுதான்….” இழுத்தது. காகம் நத்தையைப் பார்த்தது. “தம்பி நீ சின்னப் பையன். ஆனாலும் நீ சுறுசுறுப்பாக இயங்கி வாழ்கிறாய். சில விசயங்கள் உனக்கும் விளங்காது. இப்ப படிக்கிற பிள்ளைகளைப் பார். படிக்கிற நேரத்தில் படிக்காமல் தூங்குவதில் காலத்தைப் போக்குகிறார்கள். சோதனை வந்தால் மட்டும் விழுந்து விழுந்து படிக்கிறார்கள். கேள்விகளை நன்றாகப் பார்த்து வாசிப்பதில்லை. கேட்ட கேள்விக்கு விளங்காமல் விடையெழுதுகிறார்கள். நல்ல பெறுபேறு எப்படிக் கிடைக்கும்.? முயலார் தூங்கிவிட்டபடியால் ஆமையார் வெற்றிக் கொடி நாட்டினார். அவர் அப்படித்தான் பேசுவார்”;. காகம் தத்துவம் பேசியது.
“இதையெல்லாம் மதியால் மாற்றிவிடலாம்”. நரியார் பெருமையாகப் பேசினார். “எப்படி”? ஆர்வத்தோடு நத்தை முன்னகர்ந்தது. “முயலார் வரட்டும். அவருக்கு உற்சாகம் கொடுப்போம். இன்னொரு போட்டிக்கு ஏற்பாடு செய்வோம்”. நரி நம்பிக்கையை ஊட்டியது. நத்தைக்கு மகிழ்ச்சி. உற்சாகமாக ஒரு முறை குட்டிக்கரணம் அடித்தது.“அண்ணா இந்தப் போட்டி நடக்கும்போது ஒரு சிறுமியை அல்லது சிறுவனையும் அழைப்போம்.”“ஏன்”? ஒன்றும் விளங்காமால் காகம் கேட்டது.“எல்லாம் காரணமாகத்தான். இதுகூடவா தெரியாது. அவர்கள் வந்தால்தான் நடப்பதை எழுதி வைப்பார்கள். அது வரலாறாக இருக்கும்.” நரி ஒரு புன்னகையோடு கூறியது.“ அட …நத்தைக்கும் உலக நடப்புக்கள் தெரியுதே”? அதோ யானையாரும் அவரது தோழர்களும் வருகிறார்கள். காகம் கரைந்தது.தூரத்தில் அவைவந்து கொண்டிருந்தன. முயலாரும் துள்ளி வந்துகொண்டிருந்தார். “சரி உசாராவோம். முயலாரைப் போட்டியில் பங்கு கொள்ள வைப்பதுதான் நமது நோக்கம். மறக்கவேண்டாம்.” நரி எச்சரித்தது. அனைத்து விலங்குகளும் பறவைகளும் ஏற்றுக் கொண்டன. அமைதியாக இருந்தன.
முயல் வந்து சேர்ந்தது.“முயல்தம்பி எப்படிச் சுகம்.” நரியார் அமைதியாகக் கேட்டார். “நல்லசுகம். இன்றைக்கு ஏதும் விஷேசமா? எல்லாரும் ஒன்றாய் கூடியிருக்கிறீர்கள்”;. முயல் நரியைப் பார்த்துக் கேட்டது. “அப்படி ஒன்றுமில்லை. இந்த புற்தரையில் இப்படி ஒன்றாய்க் கூடுவது வழக்கந்தானே. ஒரு கலகலப்பாக இருக்கும். சிலவேளைகளில் போட்டிகள் நடக்கும். கூட்டங்கூட்டமாகச் சேர்ந்திருந்து கதை நடக்கும். சந்தோசமாக இருக்கும்.” நரி விளக்கியது.
“ஓமோம். நான்தான் மறந்துவிட்டேன். இன்றைக்கு முழுநிலவு. புற்தரையில் விளையாடிப் பலநாட்களாகி விட்டன. நானும் உங்களோட சேர்ந்து விளையாட வருகிறேன்”;. முயல் சந்தோசமாகப் பதிலளித்தது. நத்தையாருக்குச் சந்தோசம். “ஹாய் முயலண்ணா. எப்படி இருக்கிறீர்கள்? நானும் வந்திருக்கிறன். ஆமையண்ணாவும் வருவார். இன்றைக்குச் சந்தோசமாக இருப்போம்”. கூறிக்கொண்டு செடியின் இலையில் இருந்து இறங்கிவந்தது.
“ஹாய்…அதோ ஆமையண்ணாவும் வருகிறார்”. சிரித்துக் கொண்டே கூறியது. எதிர்கொண்டு வரவேற்க முன்னால் சென்றது. “ஆமையண்ணா! வாங்க. வாங்க” புன்னகையோடு வரவேற்றது. ஆமைக்குக் கடுஞ்சினம் ஏற்பட்டது. தன்னை முந்திவிட்டு நத்தை வந்ததையிட்டுச் சினந்தது. “எனக்கு முன்னால் எப்படி இங்கே வந்தாய்”? “ஆமையண்ணா இவையெல்லாம் தேவைதானா? எப்படியோ வந்து சேர்ந்து விட்டேன். சந்தோசப் படுங்கள். இன்றைக்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்.” நத்தை அடக்கத்துடன் கூறியது.
“ஆமையாரே! நத்தைத்தம்பி சொல்வது சரிதான். இன்றைக்கு முழுநிலவு. எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்.” நரி வரவேற்றது. விலங்குகளும், பறவைகளும் சேர்ந்து குரல் கொடுத்தன. புற்தரையின் மத்தியில் ஒன்று கூடின. புறாக்கள் நடந்து காட்டின. நாரைகளும் கொக்குகளும் நடைப்போட்டியில் பங்கு கொண்டன. யானைமேல் பறவைகள் பறந்து இருந்தன. தும்பிக்கையால் நத்தையைத் தூக்கியது. ஆமையையும் தூக்கியது. தனது முதுகில் வைத்தது. நத்தை யானையின் முதுகில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
“ஆமையண்ணா! விழுந்து விடுவீர்கள். கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்”. நத்தை சத்தமிட்டது. ஆமைக்குப் பிடித்துக் கொள்ள முடியவில்லை. தவித்தது.
“யானையாரே! ஆமையண்ணா விழப்போகிறார். அவரை மெதுவாக இறக்கி விடுங்கள்”. நத்தை சத்தமிட்டது. யானை தும்பிக்கையால் ஆமையை எடுத்துக் கீழே விட்டது.
வானில் நிலவு பவனிவரும் நேரம். புற்தரை கலகலத்தது. நத்தை தன்னை அவமதித்தாக ஆமை எண்ணிக்கொண்டது. முயல் தன்னை மறந்து துள்ளிப் பாய்ந்து திரிந்தது. தற்செயலாக ஆமைக்கு மேலால் பாய்ந்து சென்றது. ஆமையாருக்குக் கடுங்கோபம் பொங்கி வந்தது. “உனக்கு என்ன வந்தது. ஒரு மரியாதை இல்லாமல் பாய்ந்து திரிகிறாய்? ஆமை வெகுண்டெழுந்தது.
“ஐயோ ஆமையண்ணா தெரியாமல் செய்து போட்டன். மன்னித்துக் கொள்ளுங்க”. முயல் மன்னிப்புக் கேட்டது. “செய்வதையும் செய்து போட்டு மன்னிப்பு வேறா? ஆமை அதட்டியது. “ஆமையண்ணா இதற்கும் கோபமா? ஆமையண்ணா எதெற்கெடுத்தாலும் கோபம் கொள்ளக் கூடாது”. நத்தை மெதுவாகச் சொன்னது. “ஏய்! நீ ஏன் தலையிடுகிறாய?;. நான் உன்னிடம் கேட்டேனா”? ஆமை அகங்காரத்துடன் சத்தமிட்டது.
“ஆமையண்ணா! தெரியாத்தனமாக ஒரு பாய்ச்சல் பாய்ந்து பார்த்தேன். அதற்காக இத்தனை கோபமா”? முயல் அடக்கத்துடன் சொன்னது. “எனக்குத் தெரியும். நீ வேண்டும் என்றே செய்கிறாய். உனக்கு அந்தக் கோபம் இன்னும் போகல்ல”“எந்தக் கோபம்?”. “அதுதான். உங்கட தாத்தாவை எங்கள் தாத்தா ஓட்டப் போட்டியில் வென்ற கதையை”. பெருமையாக ஆமை கூறியது.இதைக் கேட்டதும் நரியார் பலமாகச் சிரித்தார். யானையார் தும்பிக்கையை உயர்த்திப் பிளிறினார். பறவைகள் சிறகடித்துப் பறந்து ஆரவாரித்தன. “ஏன் எல்லாரும் சிரிக்கிறீங்க? நான் என்ன சொல்லிப் போட்டன்.? உண்மையைச் சொன்னால் என்னை அவமானப்படுத்துவதா”? ஆமை ஆத்திரத்துடன் கூறியது.
“இந்தக் கதை உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால் அதை இன்றைக்கு நிரூபித்துக் காட்டினால் நம்புவோம்”. நரியார் சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கூறினார். விலங்குகளும் பறவைகளும் ஏகமனதாக ஏற்றன.
ஆமை தயங்கியது. “இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம். என்றது. “ஆமையண்ணா இவ்வளவுதானா உங்கள் தைரியம்”. நத்தை பதுங்கயிருந்து சத்தமிட்டது. “உனக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். நீயும் வா. உன்னையும் வெல்லவேண்டும். அழைத்தது.“அண்ணா உங்களோடு போட்டி போட என்னால் முடியாது. நீங்கள் வெல்லுவது நிச்சயம்.” நத்தை பின்னிழுத்தது.“நீ ஓரு கோழை. பயந்தாங்கொள்ளி.” ஆமை ஏளனமாகச் சிரித்தது. “சரி விடுங்க. நத்தைத் தம்பி நீயும் பங்கு பற்றுகிறாய். சரியா? நரியாரே போட்டிக்குரிய ஏற்பாட்டைக் கவனியுங்கள்”. யானை இறுதியாகக் கூறியது. எல்லா விலங்குகளும் பறவைகளும் ஒழுங்குகளைக் கவனித்தன. போட்டி தொடங்குமிடத்தை அடையாளம் கண்டன. முடியும் இடத்தைக் காகமும், புறாக்களும் போய்ப்பார்த்து வந்தன. விலங்குகள் நடுவர்களாக பறவைகளும், சில விலங்குகளும் நின்றன. போட்டியில் பங்குபற்றும் ஆமையும் முயலும் ஆயத்தமாக நின்றன. ஒரு ஓரத்தில் நத்தை நின்றது. போட்டியை யானையார் தொடங்கி வைத்தார். ஆமைக்குத் தெரியாமல் நத்தை அதன் முதுகில் ஏறி ஒட்டிக்கொண்டது. போட்டி தொடங்குவதற்காக யானை பிளிறியது. ஆமை வழமைபோல் அரக்கியது. முயல் பாய்ந்து வேகமாக ஓடியது.
ஆமைக்குச் சந்தோசம். இப்படித்தான் இவர் ஓடுவார். என்னைக் காணவில்லை என்று குட்டித்தூக்கம் போடுவார். நான் மெதுவாகச் சென்று வெற்றி யடைவேன். கற்பனையில் மிதந்து கொண்டு ஓடினார். நத்தையார் ஆடாது அசையாது ஆமையின் மேல் இருந்து கொண்டார். முயல் வேகமாக ஓடி ஓரிடத்தில் நின்றது. திரும்பிப் பார்த்தது. ஆமையைக் காணவில்லை. பசும்புல் வரவேற்றது. கொஞ்சம் பசியாறுவோம் என்று புல்லை நறுக்கி உண்டது. ஆமை வேகமாக அரக்கி முயலைத் தாண்டிச் சென்றது.
“ஆமையாரே விடக்கூடாது. வேகமாக ஓடுங்கள். உங்களுக்குத்தான் வெற்றி. ‘கமோன்’.” நரி ஊழையிட்டு உற்சாகப்படுத்தியது. சத்தத்தைக் கேட்ட முயல் எட்டிப்பார்த்தது. ஆமை தன்னை முந்திக் கொண்டு போவதைக் கண்டது. வானத்தில் வளர்பிறையின் நிலவு சிந்திக் கொண்டிருந்தது. முயல் ஆமையிடம் கதை கொடுத்தது. “ஆமையண்ணா! எப்படி வேகமாக நடக்கிறீர்கள். நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே
தெரியாது”. கூறிக்கொண்டு ஆமையின் வேகத்துக்கு ஏற்ப நடந்தது. போகும் வழியில் ஒரு ஓடை குறுக்கிட்டது. எப்படி இதனைத் தாண்டிப்போவது? யோசித்தது. அதனால் முடியவில்லை. “என்ன யோசனை? ஓடை ஆழமானது. எப்படித் தாண்டுவது என்று யோசிக்கிறாயா? எனது முதுகில் ஏறிக்கொள். உன்னையும் ஏற்றிக் கொண்டு எப்படி நடக்கிறேன் என்று பார்”. ஆமை சவால் விட்டது. ஆமையின் முதுகில் மெல்ல ஏறியிருந்து கொண்டது. முயலுக்குப் பயம் வந்தது. ஆமை ஓடையை அண்மித்தது. “ஓடையில் முயலாரின் கதை முடிந்து விடும். அவர் தவிப்பார். நான் வெற்றி பெற்று விடுவேன்”. யோசித்தபடி நடந்தது வழியில் சிறிய கயிறு தென்பட்டது. ஆமை அதனைக் கவனிக்கவில்லை. முயல் பாய்ந்து அதனை எடுத்தது.
“ஏய்! கண்ணயர்ந்து விழுந்து விட்டாயா”? சிரித்துக் கொண்டே நடந்தது. முயல் ஓடிவந்து ஆமைமேல் ஏறியது. மெதுவாக அதன் கழுத்தில் கயிற்றைக் கட்டியது. ஆமை வெற்றி பெறும் எண்ணத்தில் அதனைக் கவனிக்கவில்லை. நடந்தது. சந்தர்ப்பத்தைப் பார்த்து முயலின்மேல் நத்தை தாவியது. அதன் முதுகில் ஒட்டிக்கொண்டது. ஓடை வந்துவிட்டது. “ஏய்! முயல்தம்பி என்ன செய்யப்போகிறாய். ஓடையை எப்படிக் கடப்பாய்”? “ஆமையண்ணா! நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன பயம். நீங்கள் நன்றாக நீந்துவீர்கள். நான் உங்கள் மேல் இருந்து கொள்வேன”;. சிரித்துக்கொண்டு கூறியது. ஆமை வேகமாக தண்ணீருள் இறங்கியது. முயல் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
சிறிது தூரம் சென்றதும் ஆமை சுழியோட நினைத்தது. ஆழத்தில் புகுந்து கலக்க நினைத்தது. முயல் கயிற்றை இழுத்துப் பிடித்தது. ஆமையினால் சுழியோட முடியவில்லை. “ஏய் ஏன் என் கழுத்தில் கட்டியிருக்கிறாய். அவிழ்த்துவிடு.” சத்தமிட்டது.“ஆமையண்ணா கரைக்குப் போனதும் கட்டாயம் அவிழ்த்து விடுவேன். கவலைப் படாமல் நீந்துங்கள”;. மெதுவாகச் சொன்னது. நத்தை சிரித்துக் கொண்டது. ஆமையினால் சுழியோட முடியவில்லை. நீந்திக் கரையை அடைந்தது. முயல் கயிற்றை அவிழ்த்து விட்டது. “ஆமையண்ணா! உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. நான் அந்த மரத்தடியில் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போறன்”;. கூறிவிட்டு ஓடியது. ஆமைக்குப் பொல்லாத கோபம். அது தன்பாட்டுக்கு வேகமாக நடந்தது.
பறவைகளும் விலங்குகளும் வெற்றிக்கம்பத்தில் காவல் இருந்தன. போட்டியாளர்களைக் காணவில்லை. என்ன நடந்தது. யோசிக்கத் தொடங்கின. காகம் பறந்து வந்தது. தூரத்தில் ஆமை வந்து கொண்டிருந்ததைப் பார்த்தது. முயலைக் காணவில்லை. திரும்பிப் போனது. “இம்முறையும் முயலாமைதான்” என்றது. “என்ன”? எல்லாம் வினாவின. “இந்த முயல் எங்காவது நித்திரை கொண்டிருக்கும். ஆமை மட்டுந்தான் ஆதோ தூரத்தில் வருகிறது. காகம் கரைந்தது. பார்வையாளர்களின் கண்கள் போட்டியாளர்களை நோக்கியிருந்தன.“முயலண்ணா களைப்பாறியது போதும். இனித் தொடரலாம். விரைவாக ஓடுங்கள். இல்லாவிட்டால் ஆமை இம்முறையும் வென்றுவிடும்”. நத்தை சத்தமிட்டது.“ஓ…நீயும் என்னோடதான் இருக்கிறாயா? நீ கெட்டிக் காரன்தான்.”
“என்னைப் புகழ்ந்தது போதும். ஆமை வெற்றிக்கம்பத்தை அடைந்து விடுமுன் விரையுங்கள்”. நத்தை இரைந்தது. “இதோ ஒரு நொடியில்…” முயல் எழுந்து ஓடியது. சொன்னதுபோல் ஒரு நொடியில் வெற்றிக்கம்பத்தில் நின்றது. நத்தையும் இறங்கிக் கொண்டது. விலங்குகளும் பறவைகளும் சத்தமிடாமல் நின்றன. ஆமையார் வந்து சேர்ந்தார். “ஆமையண்ணா வாங்க. உங்களை வரவேற்கிறோம்.” முயலும் நத்தையும் முன்னால் நின்று வரவேற்றன.
ஆமை அடக்கத்துடன் புன்னகைத்தது. “நத்தைத் தம்பி நீ எப்படி வந்தாய்? கெட்டிக்காரன்தான்.”“எப்படியோ வந்துவிட்டேன்” நத்தை மெதுவாகக் கூறியது.. “வெற்றியும் தோல்வியும் வீரனுக்குத்தான். இங்கே வென்றவரும் இல்லை. தோற்றவரும் இல்லை. நாம் எல்லோரும் ஒன்றே. வாருங்கள் சேர்ந்து கொண்டாடுவோம்”. ஆமை ஆடியது. “நன்மையும் தீமையும் தானே வருவதில்லை. அவற்றுக்கு நாமேதான் காரணம்”. ஆமை சொல்லிக் கொண்டு ஆடியது. யானைக்கு ஆச்சரியம். நத்தை நரியாருக்கு நன்றிகூறியது. நரியார் சந்தோசப்பட்டார். விலங்குகளும் பறவைகளும் பாடி ஆடி மகிழ்ந்தன. எங்கும் மகிழ்ச்சி பரவியது.

Read more...

Friday, January 28, 2011

சிறுவர் கதைகள்

சிறுவர் கதைகள்
வானம்பாடியும் கரிக்குருவியும்
கிழக்கில் சூரியனின் ஒளிக்கீற்று எட்டிப்பார்க்கும் வேளை. வானில் வர்ண ஜாலங்கள் கோலமிட்டுக் கொண்டிருந்தன. பசுந்தரையில் பயிரின் ஆட்டம். பனித்துளிகளின் மேல் ஒளிக்கதிர் பரவி அழகூட்டியது. இன்னிசையைப் பரவ விட்டபடி கரிக்குருவி குதூகலித்தது. அதன் கருமை உடலில் வெள்ளைக் கோடுகள். அடிவயிற்றுப் பக்கம் வால்வரை வெண்மை பரவியிருந்தது. நிமேசிக்கா அதன் அழகில் தன்னை மறந்திருந்தாள். “அக்கா கரிக்குருவியின் குரல் என்ன இனிமை. அதன் இசையைக் கவனித்தாயா? இந்தக் கரிக்குருவிக்கு சங்கீதத்தை யார் சொல்லிக் கொடுத்தார்கள்.”? சுலக்சிக்கா ரசனையோடு கேட்டாள். கரிக்குருவி வீட்டின் முற்றத்தில் உள்ள வேப்பை மரத்தின் உச்சியில் இருந்து பாடிக் கொண்டிருந்தது.
“ருவீற் ரூ… ருவீற்.. ருவீற் ரூ… ருவிற். ருவிற்”. விட்டு விட்டுப் பாடிய கரிக்குருவியின் ஒலிக்கேற்ப சொற்கட்டைச் சேர்த்தாள். “என்ன இராகத்தில் பாடுது. சா….. சங்கீதம் தெரிந்திருக்க வேண்டு;ம். ‘நமது மனதை இசைய வைப்பதுதான் இசை’. அனுஜா ரீச்சர் சொன்னது நினைவுக்கு வந்தது. “சுலக்சி … அங்கே பார்…” நிமேசிக்கா கையை நீட்டிக் காட்டினாள். இன்னுமொரு கரிக்குருவி அதேபோல் முருங்கைமர உச்சியில் இருந்து பாடிக் கொண்டிருந்தது.“ருவீற் ரூ…. ருவீற் ரூ.. ருவீற் - ரூ ரூ… ருவிற் ரூ…. ருவிற்”. ருவீற் ரூ…. ருவீற். ரூ. ருவீற் - ரூ… ரூ… ருவிற் ரூ…. ருவிற்”.
காது கொடுத்துக் கேட்டாள். அந்தக் குருவியின் இசை வித்தியாசமானதாக இருந்தது. குருவிகள் என்ன சொல்லிப் பாடுகின்றன?
‘வானம் வெளுத்து வருது – தெரியும் வண்ணக் கோலம் அழகு கானம் பாடி மகிழ்வோம் - அதில் காணும் சுகத்தில் வாழ்வோம்’
அவர்களுக்கு அதிசயமாக இருந்தது. ஒரு குருவி பாடி முடிந்ததும் சற்று அமைதி நிலவும். ஒரு இடைவெளி விட்டு மற்றக் குருவி பாடும்.
இடையில் குயிலின் கூவல் குழப்பியது. “கூஊ. கூ.ஊ... இசையே – சுகம் கூவிப் பாடி மகிழ்வோம். ஆஹா ஹா ஹா அழகு – எங்கும் அழகு வீசிக் கிடக்கு”
குயில் கூவலோடு அது பறந்து விட்டது.
மீண்டும் கரிக்குருவிகளின் பாடல் தொடங்கியது. பொழுது புலர்ந்து மரங்களின் நிழலை நீளமாகக் காட்டியது. தூரத்தே உயர்ந்த வேம்பு காற்றில் ஆடித் தனியே நின்றது. அதிலிருந்து புறப்பட்ட துப்பாக்கிக் குண்டுபோல் வானம்பாடி வானில் பறந்து வட்டமடித்தது. மீண்டும் மரக்கிளையில் போயிருந்து பாடியது.
அதன் குரல் வளம் இனிமையானது. உற்றுக் கேட்டார்கள். “சுலக்சி.. கவனமாகக் கேள். அந்த மெட்டுக்குப் பாடல் வரும். வானம்பாடி எப்படிப் பாடுது. அதைப்போல் ஒலியுடன் நீ மெட்டுப் போடு நான் பாடலைச் சொல்லுறன்”. சுலக்சிகா மெட்டைத் தொடங்கினாள்.
‘டியூடி… டியூடி… டியூடி - டிட். டிய+டி… டியூடி… ட்டிடி…. டியூடி… டியூடி… டியூடி - டிட். டிய+டி… டியூடி… ட்டிடி….”
“இப்படித்தான் எனக்கு விளங்கியது. சரி நீ பாடலைச் சொல்” சிரிப்போடு நின்றாள். நிமேசிகா பாடினாள்.
“காலை பறந்து வானில் - இளம்காற்றில் சுற்றி வந்தால்சோலை அழகு சொட்டும் - எங்கள்சோம்பல் பறந்து போகும்”
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். பாடலைக் கேட்டதும் வானம்பாடியின் குரல் இன்னும் இனித்தது. இருவரும் சிரித்துக் கொண்டார்கள். கரிக்குருவி காது கொடுத்துக் கேட்டது. “பறவைகளின் மொழி தெரிந்தால் எவ்வளவு விசயங்களை அறியலாம். நாமும் பறவைகளாகப் பிறந்திருக்கலாம். வானத்தில் சிறகடித்துப் பறந்து பாடி மகிழலாம். மலையின் சிகரங்களைப் பார்க்கலாம். மலையருவிகளில் குளிக்கலாம். பசுஞ்சோலைகளில் இருந்து இசைபாடலாம். நீலக்கடல்மேல் பறந்து ரசிக்கலாம்”. நிமேசிக்கா மனதில் நினைத்துக் கொண்டாள்.
“அக்கா நீ நினைப்பதைத் தான் நானும் நினைக்கிறேன். பறவைகளாய் நாம் பிறந்திருக்கலாம். என்ன”? நிமேசிக்கா சுலக்சிகாவை அதிசயித்தோடு பார்த்தாள்.“ருவீற் ரூ…ரூ..ரூ. ருவீற்.. ருவீற் ரூ…ரூ ரூ…ருவிற். ருவிற்”.பாடிய கரிக்குருவி உற்றுக் கேட்டது. இரண்டு குருவிகளும் வானம்பாடி இருந்த மரத்தை நாடிப் பறந்தன. அந்த மரத்தில் ஏராளமான வானம்பாடிகள் இருந்து பாடின. ஆண் வானம்பாடிகள் கூடுகட்டுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பெண்குருவிகள் பார்த்துத் திருத்தங்களைச் செய்தன. சில நிலத்தில் தெத்தித் தெத்திப் பாய்ந்து விளையாடின. கரிக்குருவிக்குச் சந்தோசம். மரத்தின் சூழல் அழகாயிருந்தது.
வானம்பாடிகள் கும்மாளம் கொட்டி மகிழ்ந்தன. வானில் பாடிப்பறந்து வந்தன. பல கரிக்குருவிகளும் வந்து சேர்ந்து
கொண்டன. அந்தப் பெரிய மரத்தில் பல கிளைகள் இருந்தன. குருவிகள் விரும்பிய கிளைகளில் கூடுகளை அமைத்தன. முட்டைகளை இட்டு அடைகாத்தன. குஞ்சுகள் பொரித்துச் சந்தோசமாக வாழ்ந்தன.
“அக்கா பறவைகளைப் போல் ஏன் மனிதர்களும் வாழக்கூடாது? இந்த மரத்தில் எத்தனை வகைக் குருவிகள் வாழுகின்றன.? வேண்டிய கூடுகளை அமைத்துச் சந்தோசமாக இருக்கின்றன. இந்தக் குருவிகளுக்குக் கூடு கட்ட யார் சொல்லிக் கொடுத்தார்கள்.? எப்படிக் கற்றுக் கொண்டன.? மனிதர்கள் மட்டும் ஒரே சண்டை பிடிக்கிறார்களே. ஏன்”;? சிந்தித்தார்கள்.
“இப்ப என்ன நேரம்?. பாடசாலைக்கு நேரமாகிவிட்டது. குளிப்பதற்கு இவ்வளவு நேரமா? கெதியா வாங்க”. அம்மாவின் குரல் அவர்களை அவசரப்படுத்தியது. கடமைகளை முடித்துப் பாடசாலைக்குப் புறப்பட்டார்கள். அவர்களது உரையாடலைக் குருவிகள் கேட்டன. தமக்குள் அவை சிரித்துக் கொண்டன. வானம்பாடி கரிக்குருவியைப் பார்த்தது. “நமது வாழ்க்கையின் கஸ்டம் இந்தப் பிள்ளைகளுக்கு எங்கே தெரியப் போகிறது. அவரவர் கஸ்டம் அவரவர்களுக்குத்தான் தெரியும். எங்களுக்கும் நோய் வருவதுண்டு. இளமையும் மூப்பும் உண்டு. பசி பட்டினி வழக்கமாக உள்ளவைதான். எங்கள் கஸ்டத்தையும் துயரங்களையும் இந்தப் பிள்ளைகள் அறிவார்களா? இக்கரைக்கு அக்கரை பச்சைதான்”. கரிக்குருவி சிறகை அலகால் கோதியபடி சொன்னது.
“ஏய் பின்னாலே பார்”. வானம்பாடி எச்சரித்தது. கரிக்குருவியைப் பிடிப்பதற்கு ஆயத்தமாகப் பாம்பு சுருண்டது. பாம்பு அதனை வேட்டையாடப் பின் தொடர்ந்தது. கரிக்குருவி உசாராகியது. பறந்து மறுகிளையில் தாவி இருந்தது. குறி தவறிய பாம்பு நிலத்தில் விழுந்தது.
“எந்த நேரமும் உசாராய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எத்தனை ஆபத்துக்கள் காத்திருக்கும்? நமது கவலை நமக்குத்தான் தெரியும். குஞ்சுகளுக்குப் பசிக்கும். இரைதேடப் போகிறேன்”. கரிக்குருவி பறக்கத் தயாரானது. பிள்ளைகளின் சத்தம் கேட்டது. குருவிகள் உற்றுக் கேட்டன. “அம்மா நேற்று ரீச்சர் அடிச்சிப்போட்டா. இங்க பாருங்க”. சுலக்சிகா கையை விரித்து அம்மாவிடம் காட்டினாள். அம்மா சுலக்சிகாவின் கையை விரித்துப் பார்த்தார்.
உள்ளங்கையில் பிரம்படி பதிந்து சிவந்திருந்தது.? “நீ வீட்டு வேலை செய்யவில்லை. ரீச்சர் அடிப்பதில் தப்பில்லை”. அம்மா ரீச்சருக்காகப் பாடினார். ஆனால் தனது பிள்ளையின் கையில் பதிந்திருந்த தழும்பு அம்மாவின் மனதில் காயத்தை ஏற்படுத்தியது. அவரது கண்கள் பனித்தன. கையை மெதுவாகத் தடவி விட்டார்.
குருவிகள் கண்டு கொண்டன. “ரீச்சர்மார் இப்படியும் பிள்ளைகளுக்கு அடிப்பதா? அன்பால் பிள்ளைகளின் உள்ளங்களை வெல்ல வேண்டும். நாங்கள் எங்கள் குஞ்சுகளுக்கு அடிப்பதே இல்லை. அன்பைக் கொட்டி வளர்த்து விடுகிறோம். அவை தங்களாகவே கற்றுக் கொண்டு வாழ்கின்றன. பாவம் இந்தப் பிள்ளைகள்”;. வானம்பாடி வருந்தியது. சுலக்சிகாவும், நிமேசிக்காவும் புத்தகப் பைகளை முதுகில் சுமந்து கொண்டு நடந்தார்கள். அவற்றை அவர்களால் தூக்க முடியவில்லை. முன்னால் குனிந்து வளைந்து சென்றனர்.
ஆக்காண்டி கவலையோடு பார்த்த வண்ணம் இருந்தது. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்று அப்போது சொன்னார்கள். இப்போது “ஐந்தில் வளைந்தது ஐம்பதில் நிமிருமா”? என்று இந்த மனிதர்களிடம் கேட்கவேணும் போல் தெரிகிறது. “இந்தப் பிள்ளைகள் இப்பொழுதே புத்தக மூடைகளைச் சுமந்து கூனி நடக்கிறார்கள். என்ன மனிதப் பிறவிகள்”. குருவிகள் கூறியபடி வானத்தில் பறந்தன. பின் தொடர்ந்து குஞ்சுகளும் பறந்தன.
மரமும் கிளியும்
அந்தப் பிரதேசம் மலைப்பாங்கானது. கற்பாறைகள் நிறைந்து கிடந்தன. அவை சிறிய குகைகளைக் கொண்டிருந்தன. அந்தக் குகைகள்தான் பறவைகளின் வாழ்விடங்கள். கூடுவைத்துக் குடும்பமாக வாழ்ந்து வந்தன. ஆண்டாண்டு காலமாக அங்கேதான் வாழ்கின்றன. கிளிகள் களைத்து வந்து கொண்டிருந்தன. தங்கள் இருப்பிடத்தில் நிம்மதியாய் ஓய்வெடுப்பதில் அலாதியான சந்தோசம். பாடிக் கூச்சலிட்டுப் பறந்து வந்தன.
‘டும் டுமீல்…’ பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டன. பறவைகள் கூச்சலடித்துப் பறந்தன. மலைப்பிரதேசத்தை வட்டமிட்டுப் பறந்து திரிந்தன. மீண்டும் அதே சத்தங்கள். மலையடிவாரம் சிதைந்து கிடந்தது.
மலையடிவாரம் அல்லோல கல்லோலப் பட்டது. மனிதர்களின் நடமாட்டம் கூடியது. கற்பாறைகளை இடித்துக் கீழே தள்ளினார்கள். பாரிய வாகனங்களி இரைந்து கொண்டு நினறன.அமைதி குலைந்தது. பறவைகள் நிம்மதியற்று அலைந்தன. மனிதரின் ஆரவாரம் கூடியது. “இன்றைக்கு இங்கே தங்;கேலாது. இருண்டு வருது. பாதுகாப்பான இடத்துக்குப் போவோம். நாளைக்கு வந்து என்ன நடக்குது என்று பார்ப்போம். வாங்க..என்பின்னால்.” கூறிக் கொண்டு பெரிய கிளி பறந்தது. கிளிக்கூட்டம் பின்னால் தொடர்ந்தது. அவற்றின் மனங்களிலே கவலை.
துரத்தே அமைதியாக ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இருகரைகளிலும் மரஞ்செடிகள் செழித்திருந்தன. கரையோரமாக விசாலித்த ஆலமரம் தெரிந்தது. கிளைகள் பரப்பி உயர்ந்து வளர்ந்திருந்தது. மாலை வெளிச்சத்தில் ஆலம்பழங்கள் தெரிந்தன. “இது பொருத்தமான இடம். வாங்க இன்றைக்கு இங்கே தங்கலாம்.” பெரிய கிளி மெதுவாக உச்சங்கிளையில் இறங்கியது. கிளிக் கூட்டம் ஆரவாரித்து இறங்கின. மரத்துக்குச் சந்தோசம். புதிதாக வந்த நண்பர்களை வரவேற்றது.
“என்ன கவலையா? எங்கிருந்து வருகிறீர்கள். களைப்புத் தெரிகிறது. பசியாக இருந்தால் எனது கிளைகளில் பழங்கள் உள்ளன. அதோ குயில் சாப்பிடுகிறது. நீங்களும் சாப்பிடுங்கள். உறங்குவதற்கு அருமையான பொந்துகளும், பெரிய கிளைகளும் இருக்கின்றன. சந்தோசமாயிருங்கள்.” மரம் காற்றில் அசைந்தவாறே கூறியது. கிளிகளுக்குச் சந்தோசம். பெரியகிளி தங்கள் கதையைக் கூறியது. ஆலமரம் கவலைப்பட்டது. “மனிதர்கள் எப்போதும் இப்படித்தான். தங்கள் தேவையை மட்டுந்தான் சிந்திப்பார்கள். இனிமேல் உங்களால் அங்கு போகமுடியாது. இங்கேயே இருந்து விடுங்கள்”. அமைதியாக மரம் கூறியது.
கிளிக்குஞ்சுகள் சண்டையிட்டுக் கொண்டன. “ஏய் …அங்கென்ன சண்டை. எங்கே போனாலும் உங்கள் சண்டை போகாது. அமைதியாக இருங்கள்.” உரத்துக் கட்டளையிட்டது. மனதுள் சலித்துக் கொண்டது.
“வசதியான இடமாகப் பாருங்கள். நன்றாக ஓய்வெடுங்கள். சொந்த இடத்தை இழப்பது சோகம்தான். பிறந்து வாழ்ந்த இடம் யாருக்கும் சொர்க்கம்தான். என்ன செய்வது? மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்”. மரம் ஆறுதல் அளித்தது. கிளிகள் வசதியான கிளைகளில் அமர்ந்து கொண்டன. இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. தூரத்து மரங்களில் பழங்கள் தெரிந்தன. இரண்டு கிளிகள் தனிமையில் இருந்து கதைத்தன. “அங்கே பார். அந்த மரங்களில் எவ்வளவு பழங்கள்”. காட்டியது. “பழங்கள் அங்குமிங்கும் அசைகின்றன. என்ன விநோதமிது”. கிளி அதிசயித்தது.
“ஐயோ பிள்ளைகள்!. நீங்கள் நினைப்பது போல் அவை பழங்கள் இல்லை. அவை அனைத்தும் வெளவால்கள். இன்னும் கொஞ்ச நேரத்தால் பாருங்கள். ‘கீரடி மாரடி’ என்று எனது கிளைகள் கிடுகிடுக்கும். விடியவிடியக் கூத்துத்தான”;. மரம் விளக்கியது. “விடியவிடியக் கிடுகிடுக்குமா? அப்படியென்றால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்காதா”? கிளிகள் கேட்டன. மரம் சிரித்துக் கொண்டது. “இதிலென்ன தொந்தரவு இருக்கிறது. அதிலேதான் எனக்குச் சுகம் இருக்கிறது. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் மற்ற உயிர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்கின்றன”.
“என்னைப் பாருங்கள். பூமாதேவி நிற்பதற்கு இடம் தந்திருக்கிறது. நிலத்தடியில் கனிப்பொருளை நிறைத் திருக்கிறது. மின்னல் வெட்டிப்படர்வதால் நைதரசன் பூமியினுள் பரவுகிறது. எனது வேர்களினால் கனியநீரினை உறிஞ்சிக் கொள்கிறேன். கனியநீர் எனது உடலில் உள்ள உறுப்புகள் ஊடாக இலைகளுக்குச் செல்கிறது. சூரியன் வானத்தின் வழியாக மழையைத் தருகிறது. சூரிய ஒளியைத் தருகிறது. எனது இலைகளில் ‘பச்சையம்’ இருக்கிறது. பச்சையம் மாப்பொருள் தயாரிக்க உதவுகிறது. இலைகள் சூரிய ஒளியின் உதவியால் மாப்பொருளைத் தயாரித்து அதற்கென உள்ள உறுப்புகள் ஊடாக எனது உடற் பகுதிகளுக்கு அனுப்புகிறது. நிலத்தின் கனியமும் சூரியனின் வெயிலும் எனக்கு சக்தியை தருகின்றன. பருவகாலங்களில் பூத்துக் காய்த்துப் பழங்களை உயிரினங்களுக்கு வழங்குகிறேன்” காற்றில் அசைந்தவாறே மரம் தொடர்ந்தது..
“பழங்கள் உள்ள காலங்களில் பசியாறப் பறவைகள் வரும். மற்றறைய காலங்களில் உயிரினங்களுக்கு உறைவிடத்தை வழங்குகிறேன். மனிதரைத் தவிர எனக்கு தீங்கு எந்த உயிரினங்களும் செய்வதில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்கள். வெளவால்கள் வந்துவிடும்”. ஆலமரம் காற்றில் அசைந்தவாறே கூறிக் கொண்டிருந்தது. “அதோ பாருங்கள் முதலாவது வெளவால் வருகிறது”. கிளிகள் அதிசயத்துடன் பார்த்தன.
பெரிய கிளி பார்த்தது. “உச்சங்கிளைகளில் வெளவால்களின் தொந்தரவு இருக்கும். நீங்கள் அடிமரத்துக் கிளைகளில் நிம்மதியாய் ஓய்வெடுங்கள்”. ஆலமரம் கூறியதும் கிளிகள் இடங்களைத் தேடி ஒதுங்கின.
பெரிய கிளி மரத்தின் கீழ் பார்த்தது. பல விலங்குகள் ஓய்வெடுக்க மரத்தை நாடி வந்து கொண்டிருந்தன.. பறவைகள் ஏராளமாக வந்து தங்கின. வெளவால்கள் பாட்டம் பாட்டமாக வரத்தொடங்கின. உச்சங்கிளைகள் ஆடியசைந்தன. வெளவால்களின் கொண்டாட்டம் தொடங்கி விட்டது. கிளிகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “என்ன மாதிரித் துள்ளுதுகள். இரவில் நிம்மதியாக உறங்கத்தெரியாதா”? தமக்குள் கதைத்துக் கொண்டன. மரம் கிளிகளை எண்ணிச் சிரித்துக் கொண்டது.
“வெளவால்கள் பகலில் ஓய்வெடுத்து உறங்கும். இரவில்தான் அவை உணவு தேடும். மாலை தொடக்கம் காலைவரை உணவுதேடி அலையும். பறக்கும் உயிரினங்களில் வெளவால் மட்டுந்தான் குட்டி போட்டு பால்கொடுக்கும் விலங்கினம். உங்களைப்போல் கால்களை கிளைகளில் ஊன்றியிருந்து உறங்குவதில்லை. அவை தலைகீழாகத்தான் தொங்கி உறங்கும்” ஆலமரம் அதிசயங்களை அறிந்து வைத்திருப்பதைக் கிளிகள் மெச்சின. “தலைகீழாகத் தொங்கினால் உறக்கத்தில் விழுந்துவிடுமே ”? ஆச்சரியத்துடன் ஒரு கிளி கேட்டது. “அதுதான் இல்லை. வெளவால்களின் உடலமைப்பு பறப்பதற்கு ஏற்றவாறு உள்ளது. வெளவாலின் முன்னங்கால்களில் உள்ள விரல்கள் தோலினால் இடைவெளி இல்லாமல் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பு உங்கள் சிறகினைப்போல் பறக்க உதவுகின்றன. தோலமைப்பு உடலின் பக்கத்தசையோடு, பின்னங்கால்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்னங்கால்கள் தலைகீழாகத் தொங்குவதற்கு உதவுகிறது.”
“வெளவால்கள் உறங்கும்போதும் தலைகீழாகவா தொங்கும்.? அவை கீழே விழுந்து விடுமே!” ஆச்சரியத்துடன் கிளிகள் கேட்டன.“வெளவால்கள் தலைகீழாகத் தொங்கும். ஆனால் கீழே விழுவதில்லை. அப்படித் தொங்கும்;போது உடலின் எடையினால் பின்புறக் கால்களின் விரல்கள் ஒன்றுடன் ஒன்று தனாகவே கோர்த்துக் கொள்ளுகின்றன. விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிக் கொள்ளும். இதனால் சிரமமின்றி உறக்கத்தில் ஈடுபடுகின்றன. சக்தி இழப்பும் இல்லை”. ஆலமரத்தின் அறிவைக் கிளிகள் பாராட்டின.“வெளவால்களினால் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இது தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது. வெளவால்களின் கழிவுகளில் நைதரச்கலவை உள்ளது. இது பூமிக்கு உரமாகிறது.” ஆலமரம் கூறிக் கொண்டே சென்றது. கிளிகளுக்கு உறக்கம் வரவில்லை. குகைக்குள் புகுந்து உறங்கிய சுகம் இங்கில்லை. இது புது இடம். வெளவால்கள் போடும் இரைச்சல். ஆலமரத்துக்கு வழமையாக வரும் பறவை விலங்குகள் உறங்கின. இரண்டு கிளிகளும் மெதுவாகக் குசுகுசுத்தன. “இந்த ஆலமரம் எவ்வளவு தியாகத்தைச் செய்கிறது. வெளவால்களும் பூமிக்கும் மனிதருக்கும் உதவுகின்றன. நம்மால் யாருக்கு என்ன லாபம்”? கவலையோடு உரையாடின. “ஏன் வீணாகக் கவலையடைகிறீர்கள். ஒவ்வொரு உயிரும் மற்ற உயிர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிசெய்கின்றன. அது உங்களுக்கு விளங்காது. என்னைப் பாருங்கள். நான் தாவரக்குடும்பத்தின் ஒரு உறுப்பினர். நாங்கள் பகலில் ஒக்சியினை வெளியிட்டுக் காபனீரெக்சைட்டை உட்கொள்கிறேன். உலகில் உயிரினம் வாழ்வதற்கு ஒக்சிசன் அவசியமானது. இரவில் கானீரொட்சைட்டை வெளியிடுகிறோம். தாவரங்கள் அனைத்தும் இதனை மேற்கொள்கின்றன. தாவரங்கள் இல்லையென்றால் உலகம் சூனியமாகிவிடும். உயிரினங்கள் வாழமுடியாது. இரவில் மனிதர்கள் மரங்களின் கீழ் உறங்குவதில்லை. அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். பகலில் மரங்களின் கீழ் களைப்பாறுவார்கள்.” மரம் விளக்கமாகக் கூறியது.“எங்களால் ஒரு பயனும் இல்லை. கிளி கவலையுடன் கூறியது. “ஏன் இல்லை. நீங்கள் உண்பதில்லையா? எவற்றைச் சாப்பிடுகிறீர்கள்.? மரம் விசாரித்தது. “பழங்கள். பூக்கள், தளிர்கள், தானியங்கள்” கிளி அடுக்கிக் கொண்டு போனது. சரி பழங்களைச் சாப்பிட்டு அவற்றின் விதைகளை வீசிவிடுவதில்லையா”? “வீசி விடுகிறோம்.” கிளி சட்டென்று பதிலளித்தது. “நீங்கள் பூக்களில் உள்ள தேனைக் குடிப்பதில்லையா? “குடிக்கிறோம்”. “நீங்கள் உங்களுக்குத் தெரியாமல் தாவரங்களின் பரம்பலுக்கு உதவுகிறீர்கள். பழங்களை உண்டு, விதைகளை வீசுவதால் அவை தூர இடங்களில் விழுந்து முளைவிடுகின்றன. அதனால் தாவரங்கள் பரந்து முளைக்கின்றன. பூக்களில் தேனை நீங்கள் குடிப்பதால் மகரந்தச் சேர்க்கைக்கு வழிபிறக்கிறது. நீங்கள் உங்களுக்குத் தெரியாது உதவி செய்கிறீர்கள். கவலையை விடுங்கள். உங்களால் தாவரங்கள் பரந்து முளைக்கின்றன. நீங்கள் மகத்தான சேவையைச் செய்கிறீர்கள். இப்போது நிம்மதியாய் உறங்குங்கள”;. மரம் ஆதரவாகச் சொல்லியது. கிளிகளுக்கு ஞானம் பெற்ற உணர்வு. சந்தோசத்தில் குதூகலித்தன. “நீங்கள் உறங்குவதில்லையா”? கிளிகள் வினவின. “நீங்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கும்போது உறங்குவேன். நாங்கள் அதிகம் ஒக்சிசனை உற்பத்தி செய்து உலகுக்குக் கொடுக்கிறோம். நாங்கள் ஞானிக்கும் ஞானம் உணர வழிகாட்டுபவர்கள். அரசமரம்தான் புத்தருக்கு ஞானத்துக்கு வழிகாட்டியது. அரசமரத்தின் கீழ் புத்தர் சிலைகளை வைத்து வணங்குகிறார்கள். ஆலமரத்தின் கீழ் விநாயகரை வைத்து வணங்குகிறார்கள். நாங்கள் ஒரு இடத்தில் நின்று கொண்டே உழைத்து அனைத்து உயிர்களுக்கும் உதவுகிறவர்கள். கூறிக்கொண்டது. கிளிகள் கவனமாகக் கேட்டன.“ஆனால் மனித இனம் மட்டும் இவற்றை உணர்வதில்லை. மரங்களை வெட்டுகிறான். காடுகளை அழிக்கிறான். நாங்கள் இல்லாவிடில் மழையும் இல்லை. ஒக்சிசன் குறைந்துவிடும். உயிரினங்கள் அழிந்து விடும்.;” மரம் மெதுவாக அசைந்து கொண்டு தொட்டிலாட்டியது. அதன் சுகத்தில் கிளிகளும் உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தன.

Read more...

Sunday, January 23, 2011

சிறுகதை

சிறுகதை
கண்ணாடி வீட்டில்…
“ஆனந்தன்! அழைத்தவாறே அவர் வெளிக் கதவைத் தட்டினார். வெளிக் கதவின் தட்டுமோசை கேட்டது. ஆனந்தன் எட்டிப்பார்த்தான். அவனது உயரதிகாரி. புன்னகையோடு நின்றிருந்தார். “என்றுமில்லாது இன்றைக்கு இவர் வந்திருக்கிறார்”. ஓடிவந்து வெளிக்கதவைத் திறந்து விட்டான்.“வாங்க சேர்.” வரவேற்று அழைத்தான். அவர் பின் தொடர இவன் முன்னால் நடந்தான். வரவேற்பறையில் இருக்கையைக் காட்டி இருக்கும்படி கூறினான். “சும்மா வோக்கிங் போனனான். இப்படியே ஒருக்கா எட்டிப் பாரத்துவிட்டுப் போகலாம் என்று வந்தன்.” இருக்கையில் அமர்ந்தவாறே சொன்னார்.
காலையில் எழுந்து நடப்பது அவரது கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருப்பவர். நடந்ததால் அவரது உடல் வெயர்த்திருந்தது. காற்றாடியைச் சுழலவிட்டான். ஆனந்தனின் மனைவி மலர் சுடச்சுடத் தேனீர் தயாரித்து வந்தாள்.“பெரிய அதிசயமாக இருக்கு” மலர் புன்னகையுடன் கொடுத்தாள். இருவரும் தேநீரைப் பெற்றுக் கொண்டார்கள். “வர நினைக்கிறதுதான். எங்கம்மா நேரம் கிடைக்கிறது”? தேநீரைக் குடித்தவாறே அவர் சொன்னார். “மிஸ்டர் ஆனந்தன்! மட்டக்களப்புக்குப் போறீங்க. ஒருக்கா மகளையும் எங்கட வீட்டில இறக்கிவிடுங்க. அவ தயாரக இருக்கிறா. அதுதான் சொல்ல வந்தனான்”. கதையோட கதையாய்ச் சொன்னார். “அதுக்கென்ன சேர். வேன்தானே போகுது. அதில பன்னிரண்டு பேர்போகலாம். இப்ப காலை ஏழுமணியாகுது. ஒரு எட்டரை மணிக்குப் புறப்பட்டால் போதும்தானே?;” “ஓமோம். டயஸ்தான் றைவர். அவன் இளம்பொடியன்தானே. விரைவாக ஓட்டுவான் கொஞ்சம் ‘கொன்றோல்ல’ வைச்சுக் கொள்ளுங்க. எத்தனை பேர் போறீங்க? அதிகாரி கேட்டார். “ என்னோடு எக்கவுண்டன் சேகரும், நந்தன் கிளாக்கர் மட்டுந்தான்.” “ நேற்று இதைச்சொல்ல நினைச்சனான். மறந்திட்டன். எக்கவுண்டனோட நீங்களும் ஒருக்கா ஒப்பிலாமணியரின் பாடசாலைக்குப் போய் விசாரித்துப் பாருங்க. நாங்களும் அதிபர்களாக இருந்துதானே இப்படி உயர்ந்து வந்திருக்கிறம். பாடசாலையின் வளர்ச்சி அதிபரிலதான் தங்கி இருக்கு. அதிபருக்குக் கஸ்டத்தைக் கொடுக்கிறது எனக்கெண்டால் பிடிக்கல்ல. கஸ்டப்பிரதேச அதிபர்மார் படும் துயரம் இந்த எக்கவுண்டன்மாருக்கு விளங்காது. பாவங்கள்.” அவர் சொன்னதும் ஒப்பிலாமணி அதிபரை நினைந்து கொண்டான்.“ ஓம் சேர்.. ஒப்பிலாமணி அதிபர் தன்ர பணத்தைக் கொடுத்துத்தான் பாடசாலையை வளர்க்கிறார். எனக்குத் தெரியும். அவருக்கெதிரா ஏதும் விளக்கமா?” “ஓமோம். அதுக்காகத்தான் எக்கவுண்டன் போறார். ஆனால் அதுமட்டுமல்ல அவர் இந்தச் சாட்டில தன்ர வீட்டுக்குப்போறார். அது வேறவிசயம். அதுசரி நீங்க எங்க தங்குவிங்க. அங்க எங்கட மகள் வீட்டிலயும் தங்கலாம். நான் சொல்லியிருக்கிறன்”.? “ தாங்க்ஸ் சேர். நான் ‘சேர்க்கிற் பங்களாவில’ அறையொன்றுக்கு சொல்லிப்போட்டன்.” “அது நல்ல இடம். சாப்பாட்டுக்கு மகள் வீட்டுக்குப் போங்க”“இல்ல சேர். நான் அங்கேயே ஒழுங்கு செய்துபோட்டன். அட்வான்சும் கட்டிப்போட்டன்”. அவர் சிரித்துக் கொண்டார். “ எப்ப திரும்புவீங்க”? புருவங்களை உயர்திக் கேட்டார்.
“;வியாழன், வெள்ளி இரண்டுநாள் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், சனிக்கிழமை அதிபர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கும் நடக்கும.; போகவர இரண்டு நாள். எல்லாமாக ஐந்து நாள். ஞாயிற்றுக்கிழமை திரும்பிடுவன்” ஆனந்தன் விளக்கினான். அந்த உயரதிகாரி சிரித்துக் கொண்டார்.“ஏன் சேர் சிரிக்கிறீங்க”?“ சும்மாதான்.” நாடியைத் தடவியவாறே நின்றார். “அப்ப எப்படியும் எக்கவுண்டன் தன்ர வீட்டில டியூட்டி லீவில நிற்பார். ஐந்து நாளைக்கு மேலதிக ‘பட்டாவும்’ கிடைக்கும். அதிபர் தன்ர பாடசாலைக்கு வரும் அதிகாரிகளை வரவேற்று உபசரித்து சமாளிக்க யார் பணம் கொடுப்பார்கள்”? மனதுக்குள் வெதும்பினார்.
“அதுசரி சேர், ஒப்பிலாமணி அதிபருக்கெதிராக குற்றச்சாட்டா? அவர் நல்லதொரு அதிபராச்சே. பாவம். அவர் பாடசாலைக்காக பாடுபடுவது எனக்கு நன்றாகத் தெரியும். தன்ர சம்பளத்தில் தொண்டர் ஆசிரியருக்கும் உதவி செய்து பாடசாலையை வளர்க்கிறார். அவருக்கு எதிராகக் குற்றச் சாட்டா? என்னால நம்பமுடியல்ல ”
“எனக்குந்தான். ஆனந்தன்! இதெல்லாம் இவங்களுக்கு விளங்காது. ஆசிரியர்கள் உயிர்களோடு வேலை செய்யிறவங்க. வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்களை நாங்க வருத்தலாமா”? அவர் உருக்கமாகச் சொன்னார். “சரி நான் வாறன். மறந்திடாமல் மகளையும் கூட்டிற்றுப் போங்க. அங்கிருந்து வரும்போதும் கூட்டிவந்திடுங்க.”. கூறிக்கொண்டு வந்தவழியே சென்றார்.
வாகனம் எட்டு மணிக்கு வந்துநின்றது. டயஸ் ஆயத்தமாக நின்றான். ஆனந்தன் கொண்டுபோக வைத்திருந்த ஆவணங்களை வாகனத்தில் ஏற்றினான். தனது உடமைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். மலர் வசல்வரை வந்து வழியனுப்பினாள். வாகனம் புறப்பபட்டது.
“டயஸ்..!“சேர்;;”“அவசரம் ஒன்றுமில்லை. ஆறுதலாகப் போனால் போதும். எக்கவுண்டன் முன்சீற்றில்தான் இருப்பார். அவர் ஏறியதும் சாய்ந்து வி;டுவார். நீயும் சாயாமல் கவனமாக ஓடவேணும்”டயஸ் சிரித்துக் கொண்டான். “வழியில் ‘ர்றபிக் பொலிஸ்’; நிற்கும். மாட்டிக் கொள்ள வேண்டாம்”. ஆனந்தன் அறிவுறுத்தினான். டயஸ் வாகனத்தை இயக்கித் திருப்பினான். முன்னால் நந்தன் கிளாக்கர் வந்தார். டயஸ் வாகனத்தை விட்டிறங்கி வந்து அவருடைய பொருட்களை வாங்கினான். “சேர்..நீங்க ஏறுங்க. வீட்டில நில்லுங்க என்று சொன்னன்தானே? நின்டிருக்கலாமே? நான் வந்து ஏற்றிப்போவன்;தானே. உங்கட வீட்ட வரத்தான் புறப்படுறம்”. டயஸ் பணிவுடன் சொல்லிக்கொண்டே வாகனத்தினுள் வைத்தான்.“ டயஸ் நேரம் போச்சுதென்டு எப்படீயோ வந்திட்டன். மற்றவங்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் நமது கடமையைச் செய்ய வேணும்.”. கூறியவாறு நந்தன் ஏறிக்கொண்டார்.நந்தன் கடமைகளை ஒழுங்காகச் செய்பவர். கதையால் யாரையும் மடக்கிவிடுவார். அவருக்கு தனக்கு முன்னால் இருக்கும் முதலாவது இருக்கையை ஆனந்தன் ஒதுக்கியிருந்தான். நந்தனுக்கு அது பெருமையாக இருந்தது. வாகனம் உயரதிகாரியின் வீட்டில் நின்றது. அவரின் இளைய மகள் வந்து ஏறிக்கொண்டாள்.
வாகனத்தினுள் அலுவலகத்தில் வேலைசெய்யும் சிற்றூழியரின் குடும்பமும் பின்னிருக்கையில் ஏறிக்கொண்டது. ஒரு பிரயாணம் போவதென்றால் உடன் வேலைசெய்யும் அலுவலர்களின் தேவைகளையும் நிறைவு செய்யவேண்டும். அது மானிட தர்மமும்கூட. ஆளுக்காள் உதவுவதில் தப்பில்லை. அப்படிச் செய்வதால் அவர்கள் தமது கடமைகளை மனநிறைவோடு செய்வார்கள். ஓரு குடும்பமாக ஒற்றுமையாகச் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பது ஆனந்தனின் கொள்கை.
முன்சீற்றை எக்கவுண்டனுக்கு ஒதுக்கிவிட்டான். அவருக்கு முன்சீற்றில் இருந்து போகத்தான் விருப்பம். அவரின் குணத்தை நன்றாக அறிந்து வைத்திருந்தான். அவருக்குத் தனது பதவி ஒரு பணிப்பாளரது பதவியைவிடவும் பெரியது என்ற எண்ணம் குடிகொண்டிருந்தது. ஆனால் பணிப்பாளரின் அனுமதியுடன்தான் செயற்படுவதை அவர் மறந்து விட்டார். வாகனம் எக்கவுண்டன் வீட்டு வாசலில் நின்றது. அவர் வந்து முன்சீற்றில் ஏறியதும் ‘குட்மோனிங்’;; சொல்லிக்கொண்டார். எல்லோரும் ‘குட்மோனிங்’ சொன்னார்கள். ஆனந்தன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனந்தன் அந்த உயரதிகாரியினை நினைந்து கொண்டான். அவரது உள்ளம் ஆசிரியர்களுக்காக ஏங்குவதைப் புரிந்து கொண்டான். அந்த எண்ணத்தில் மிதந்தான். வாகனம் சாராசரியான வேகத்தில்தான் சென்றது. மனதின் வேகம் ஒலி. ஒளியின் வேகத்தைவிடவும் விரைவானது. கண்ணிமைப் பொழுதில் அண்ட சராரங்களையும் அளந்துவிட்டு வந்து விடும்.
வாகனம் கந்தளாயைத் தாண்டிக் ஹபறனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. “சேர் அங்க பாருங்க”. டயஸ் சடுதியாக வாகனத்தை நிறுத்தினான். ஆனந்தன் எட்டிப் பார்த்தான். எக்கவுண்டனும் பதறித்துடித்து எழுந்தார். நடுவீதியில் இரண்டடி உயரத்தில் படமெடுத்தபடி பெரிய நாகம் அசையாமல் நின்றது. “நல்ல வேளை. கவனமில்லாது போயிருந்தால் பாம்பு அடிபட்டிருக்கும்”;. எக்கவுண்டன் எட்டிப்பார்த்துக் கூறினார். சற்று நேரம் பாம்பு அசையாது நின்றது. ஒரு பத்து நிமிடங்கள் அப்படியே நின்றது. பின்னால் வந்த வாகனங்களும் நின்றன. சிலர் இறங்கி வேடிக்கை பார்த்தனர். பாம்பு படத்தைச்சுருக்கி மெதுவாகப் புதருக்குள் போய் மறைந்தது.
வாகனங்கள் புறப்பட்டன. பாம்பின் படத்தின் அழகு பற்றிக் கதைத்தார்கள். “டயஸ் பாம்பு நல்ல சகுனமா? பார்த்துப் போ” எக்கவுண்டன் சகுனம் பார்த்தார். மின்னேரியாவைத் தாண்டி ஜெயந்திபுரத்தால் செல்லும்போது ஒரு சைக்கிளில் இரண்டு பாடசாலை மாணவியர் பயணித்தனர். திடீரென சைக்கிள் வீதியைக் குறுக்கறுத்தது. டயஸ் தன்னால் இயன்றவரை வாகனத்தைக் கட்டுப் படுத்தினான். சைக்கிளில் வாகனம் முட்டவில்லை. எனினும் சைக்கிளில் சென்ற மாணவியர் பயத்தினால் விழுந்து விட்டனர்.
சைக்கிளின் ஹான்டில் சற்று நெளிந்து விட்டது. வாகனத்தை நிறுத்தி மாணவியருடன் உரையாடும்போது பெரும்பான்மை இனத்தவர் சிலர் வந்து குவிந்து கொண்டார்கள். இருவர் நிறைபோதையில் நின்றனர். மாணவியர் தங்கள்மேல்தான் பிழையென்பதை ஏற்றுக் கொண்டார்கள். எனினும் கூடிநின்றவர்கள் வாகனத்தை மொய்த்துக் கொண்டு தாறுமாறாகப் பேசினார்கள். அவ்விடத்தை விட்டுப்புறப்பட்ட மாணவியரையும் போகவிடாது தடுத்தார்கள்.
பாடசாலை விட்டுப் பிள்ளைகளும் ஆசிரியர்களும் வந்து கொண்டிருந்தார்கள். கல்வித்திணைக்களத்தின் வாகனத்தைக் கண்டதும் ஆசிரியர்கள் கூடிவிட்டார்கள். “சேர் மொக்கத உணே”? என்ன நடந்தது.? கேட்டார்கள். நந்தன் நடந்ததைச் சொன்னார். “சேர் ஹெட் ஒப்பிசக்கத வடகறன்ன? கேட்டான். நந்தன் பயமில்லாது “ ஓவ் - ஓம்” என்றார். “சேர் அப்பி லோன் கண்ட அப்ளைக் கறா சேர். ஏக்கக் கறலாதெண்ட” கேட்டு நின்றார்கள். “அர இன்ன மாத்தயாத்தமாய் அப்பே எக்கவுண்டன். எயா கறலாதெனவா. நம் விஸத்தற தென்ட” சொன்னார். நாங்கள் கடனுக்கு விண்ணப்பித்தோம். இன்னும் அது வரவில்லை. அதைச் செய்து தாருங்கள் என்று கூறினார்கள். கணக்காளர் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார். அவர்கள் தங்கள் பெயர்களை எழுதி ‘லோன்’; பற்றிய விபரங்களையும் எழுதிக் கொடுத்தார்கள்.
“மே மேகொல்லோ அப்பே மினிசு. லொக்கு மாத்துறு. கறுநாகறலா இடதெண்ட” இவர்கள் எல்லோரும் எங்கள் மேலதிகாரிகள். தொந்தரவு தரவேண்டாம். ஒரு ஆசிரியர் சத்தமிட்டார். அனைவரும் விலகிக் கொண்டார்கள். “சேர் அப்பி பலாபொறுத்து இன்னம் சேர்.” என்றார்கள். நந்தன் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தார். அடுத்த கிழமை தொடர்பு கொள்ளுமாறு கூறினார். ஒருவாறு வாகனம் புறப்பட்டது.
எக்கவுண்டன் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டார். “ சேர் நான் இறங்கிறன். டயஸை நாளைக் காலையில ஏழு மணிக்கு அனுப்பிவிடுங்க.” கூறிவிட்டு வீட்டுக்குள் போனார். அதிகாரியின் மகளை அவரது மூத்தமகள் வீட்டில் விட்டபின் சிற்றூழியர் குடும்பமும் தங்கள் வீட்டின்முன் இறங்கிவிட்டது. வாகனம் சேக்கிற் பங்களாவில் நின்றது. இறங்கிக் கொண்டார்கள். “டயஸ்”“ சேர்” “குளிச்சிட்டு வாங்க. ஒரு சிற்றுண்டி சாப்பிட்டுட்டு ஒருக்கா ஒப்பிலாமணி அதிபரைப் பார்த்துவருவம். என்ன”?“ ஓம் சேர்” டயஸ் தனது அறைக்குள் போனான். ஆனந்தன் ஆயத்தமாகிக் காத்திருந்தான். டயஸ் போனதுபோல் ஆயத்தமாகி வந்தான். இருவருக்கும் சிற்றுண்டி காத்திருந்தது. உண்டதும் ஒப்பிலாமணி அதிபரின் பாடசாலையை நோக்கி வாகனத்தில் விரைந்தார்கள்.“ஒப்பிலாமணி அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் அதிபர். அவரில எக்கவுண்டனுக்கு என்ன கோபம்?” ஆனந்தன் வழி நெடுக யோசித்தான். ஆரையம்பதி அருணோதயக் கல்லூரி எடுப்பாக இருந்தது. கல்லூரிக்குள் வாகனம் நுழைந்தது. விளையாட்டுத் திடலில் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். சில வகுப்புக்களில் பாடங்களும் நடந்து கொண்டிருந்தன. கல்லூரியை வலம் வந்தான். கூடவே டயஸையும் அழைத்துக் கொண்டான்.
ஆனந்தனுடன் சரிசமமாகப் போவதில் அவனுக்கு பரமதிருப்தி. ஆனந்தனிடம் மட்டுந்தான் இந்த சலுகையை எதிர்பார்க்க முடியும். மற்றவர்கள் சாரதியை வாகனத்திலேயே காக்க வைத்து விடுவார்கள்.
ஆனந்தனைக் கண்டதும் சில ஆசிரியர்கள் வந்து உரையாடினார்கள். “உங்கள் அதிபர் எங்கே”? “அவர் ஏ எல் பிள்ளைகளுக்கு பௌதீகவியல் வகுப்பெடுக்கிறார் சேர். வாங்க அலுவலகத்தில் இருந்து கதைப்பம்”. ஆசிரியர்கள் அழைத்தார்கள். “டயஸ் வாங்க” ஆனந்தன் டயஸையும் அழைத்துக் கொண்டு சென்றான். லாப்பை அடைந்ததும் எட்டிப் பார்த்தான். ஒப்பிலாமணி அதிபர் மின்னோட்டம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். குழுக்களாகப் பிரித்து செய்முறையில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவரது கற்பித்தல் திறமையை வியந்தான். ஒப்பிலாமணி ஆசிரியர்களுள் ஒப்பில்லாதவர்தான். மனதுக்குள் பாராட்டிக் கொண்டான். ஓரு மூலையில் ஒதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். டயஸ் பக்கத்தில் நின்றான். ஆசிரியர்களும் நின்றனர்.
வகுப்பு முடிந்ததும்தான் ஒப்பிலாமணி நிமிர்ந்தார். அவரது கண்கள் ஆனந்தனில் நிலைக்குத்தி நின்றன. “சேர் மன்னிக்கவேணும். சத்தமில்லாமல் படிப்பிக்கிறதப் பார்த்து நின்றுட்டன்”. தனது பாணியில் வெளிப்படுத்தினான். ஒப்பிலாமணியருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. “வாங்க சேர்” ஆனந்தனின் கைகளைப் பிடித்து அலுவலகத்துக்குள் அழைத்தச் சென்றார். “ஆசிரியர் பற்றாக்குறை என்று சும்மா இருந்தால் பாதிக்கப்படுவது நமது பிள்ளைகள்தானே? அதுகளின் வாழ்க்கைப் பிரச்சினை. அதுகளுக்கு வழிகாட்ட வேண்டியது நமது கடமையல்லவா? அதுதான் இந்த ஆசிரியர்களையும் வருத்தி இழுத்துக் கொண்டுபோறன்”. கூறிக்கொண்டே நடந்தார்.
“இப்படி ஒவ்வொரு அதிபர்களும் ஆசிரியர்களும் சிந்தித்துச் செயற்பட்டால் நமது மாணவச்செல்வங்கள் ஏன் வழிதவறிச் செல்கிறார்கள்?” ஆனந்தன் புளகாங்கிதம் அடைந்தான். “ஒரு பாடசாலை மக்களுக்காக இருபத்திநாலு மணித்தியாலங்களும் திறந்திருக்கவேண்டும.; பாடசாலை விட்டபின்தான் பாடசாலை தொடங்குகிறது” என்ற கருத்தியலை நினைந்து கொண்டான். இப்படிப்பட்ட அதிபர்களுக்கு இடைஞ்சல் வரத்தான் செய்யும். ஆனால் அவர்களுக்கு வரும் துன்ப துயரங்களை பெற்றாரும், கல்வி அலுவலர்களும் களைவதற்கு உதவவேண்டும்.
தேநீர் வந்தது. எல்லோரும் குடித்தார்கள். “சேர் இந்தத் தேநீர் எங்களது ஆசிரியர்களது நிதியத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஏற்பாட்டு முறை. இதில் எனக்குச் சம்பந்தம் இல்லை. நான் இதில் ஒரு பங்குதாரர்மட்டுமே”. புன்னகையுடன் ஒப்புவித்தார்.
“சேர், உங்கட அர்ப்பணிப்பு செயலாளருக்கும் தெரியும். எனக்கு உங்கள நல்லாகவே தெரியும். கண்ணாலேயே அதைக் கண்டிருக்கிறன். ஆனால் ‘எக்கவுண்ட’; வைக்கிறதில ஏதும் சிக்கலா”? ஒருவாறு போட்டான். ஒப்பிலாமணி அதிபர் பெரிதாகச் சிரித்தார். “அங்க பெரிசாச் சிக்கல் இல்ல. வசதிகட்டணவரவு செலவுப் பதிவில எங்கட ஆசிரியர் ஒரு சின்னப் பிழை விட்டிட்டா. அதை எக்கவுண்டன் பெரிசாத் தூக்கிப் பிடிச்சிக் கொண்டு விளக்கம் கேட்டிருக்கார். அவ்வளவுதான்”. அவர் அதை வெகு இலகுவாக எடுத்துக் கொண்டதைக் கவனித்தார்.
“வரவும் செலவும் பதிவில சரியாகத்தான் இருக்கு. ஆனால் பற்றுச்சீட்டிலதான் சிக்கல். கொள்வனவு செய்த பொருட்களுக்கு எல்லாப்பற்றுச் சீட்டிலும் வாங்கிய நிறுவனத்தின் ‘றப்பர்ஸ்ராம்;சீல்’; வேணுமாம். அப்படி சில சின்னச்சின்னக் குற்றச்சாட்டு. தெரியாமத்தான் கேட்கிறன். எங்கட இந்தச் சின்ன ஊரில உள்ள சின்னக் கடையில ‘றப்பர்ஸ்ராம்சீல்’; இருக்குமா? கடையின்ர பெயரையெழுதி, கையெழுத்துப் போட்டுத் தருவார்கள். அதுவும் பெரிய சிரமத்தின் மத்தியிலதான் தருவார்கள். ஆனால் எல்லாப் பற்றுச் சீட்டும் பத்திரமாக இருக்கு. ஒருக்கா நீங்களும் பாருங்க சேர்.” அதிபர் விளக்கமாகச் சொல்லி அதற்குரிய கணக்குப் பதிவேட்டையும் மேசையில் வைத்தார்.
ஆனந்தனுக்குப் பெரிய சங்கடமாகி விட்டது. ஒரு கண்ணோட்டத்தை விட்டான். அவர் சொன்னது சரியாகவே இருந்தது. “இதெல்லாம் பார்த்தாப் பாடசாலையை நடத்தேலாது சேர். எதற்கும் நீங்கள் முன்னாயத்தமாக இருங்கள். செயலாளர் உங்களப்பற்றி நல்ல அபிப்பிராயம் வைச்சிருக்கிறார். ஒருக்கா என்னையும் பார்த்துவரச் சொன்னவர். நாளைக்கு எனக்கு ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு இருக்கு. நான் வரமாட்டன். எக்கவுண்டன் வந்திருக்கிறார். அவர் வருவார். கொஞ்சம் பார்த்துச் சமாளியுங்கசேர். எங்கள மீறி ஒன்றும் நடக்காது. எதற்கும் சனிக்கிழமை நடக்கும் அதிபர் கருத்தரங்குக்கு வாங்க சேர். நாங்க வாறம்”. கூறி எழுந்து புறப்பட்டார்கள். அதிபர் வழியனுப்பி வைத்தார்.
இரண்டு நாள் ஆசிரியர் கருத்தரங்கு முடிந்த பின் அதிபர் கரத்தரங்குக்கு ஆயத்தம் செய்துவிட்டு ஒப்பிலாமணி அதிபருக்காகக் காத்திருந்தான். கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தார். கருத்தரங்கு முடிந்ததும் தனியதக அதிபரோடு கதை கொடுத்தான். “என்ன சேர் நடந்தது. ஏதும் வில்லங்கமோ”? வினாவினான். “அதையேன் கேட்கிறியள். நான் சொன்னதைத்தான் அவர் தூக்கிப்பிடித்துக் கொண்டு நின்றார். வரவுக்கும் செலவுக்குமிடையில் இரண்டு ரூபா வித்தியாசம். செலவுக்குரிய பற்றுச் சீட்டு இல்லை. அதைத்தூக்கிப்பிடித்துக் கொண்டு விளக்கம் கேட்டார்” சால்வையால் முகத்தைத் துடைத்தவாறு தொடர்ந்தார்.
“எனக்கு வந்த கோபத்துக்கு ….” நிறுத்திப் பின் தொடர்ந்தார். ஆனந்தன் அவரைப் பேசவிட்டுப் பார்த்திருந்தான். “நான் ஆசிரியர். அதுவும் அதிபர். என்னால் எக்கவுண்டன் வேலையும் செய்யமுடியும். நான் வெறும் பேப்பரோடு வேலைசெய்யவில்லை. உயிருள்ள ஜீவன்களோடு சேவைசெய்யிறன். இதையார் புரியப்போறார்கள். ஒரு மேலதிகாரி; பாடசாலைக்கு வந்தால் அவர்களை உபசரிப்பது எங்களின் பண்பு. அதற்குரிய செலவை யார் ஈடுசெய்வது? அதிபரோ ஆசிரியர்களோ கல்வி அலுவலகம் வந்தால் இருக்கவும் சொல்லாத அதிகாரிகளுக்கு நாங்கள் எவ்வளவு மரியாதை செய்யிறம்.” எங்கோ பார்த்தவாறு தொடங்கினார்.
“அதிகாரிமார் பாடசாலைகளுக்கு மேற்பார்வை என்று வந்தால் அவர்களை உபசரித்து வேண்டிய வசதிகளைச் செய்வது பயத்தால் இல்லை. எங்கள் பண்பாட்டைக் காட்டுவதற்காகத்தான். பாடசாலைதான் பண்பாட்டை வளர்க்கும் மையங்களாகும். நாங்கள் இன்று செய்வதைத்தான் எங்களுக்குப் பின்வரும் சமுதாயம் கடைப்பிடிக்கும். இதை ஏன் இந்த மேலதிகாரிகள் உணரவில்லை.”? அவர் ஆவேசமாகவே பேசினார்.
“சேர், நீங்கள் என்னைத் தவறாக நினைக்கவேண்டாம். நான் உண்மையைத்தான் சொல்லுறன். அதிகாரிமார் பாடசாலைகளுக்குச் செல்வதற்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அதிபர்கள் கல்வி அலுவலகம் வருவதற்குக் கொடுப்பனவு தருகிறார்களா? பாடசாலை அதிபர்களது உபசரிப்பை அனுபவித்துக் கொண்டு, பயணப்படியையும் முழுமையாகப் பெற்றுக் கொண்டு வாழும் அதிகாரிகளைப் பற்றி எங்களுக்கும் தெரியும் சேர்.” ஒப்பிலாமணி அதிபர் ஆவேசமாகப் பேசியதை ஆனந்தன் எடைபோட்டுப்பார்த்ததான். அவரது கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்து கொண்டான்.
“ சேர்! நேற்று எக்கவுண்டன் காலை ஒன்பது மணிக்கு வந்ததிலிருந்து மூன்று மணிக்குப் போகும் வரை தேநீர், பகலுணவு, பின்னேரம் தேனிர், சிற்றுண்டி வரை அனைத்துச் செலவுகளையும் ஈடுசெய்தது எங்கள் பாடசாலை. இதனை நாங்கள் ஏன் செய்தோம்?. பாடசாலை அது இருக்கும் மக்களின் பாரம்பரியத்தை எடுத்து விளக்கும் புனிததலம். பண்பாடு பாடசாலையில்தான் காலூன்றி வேர்விட்டு நிலைக்கிறது. இது எங்கள் பண்பாடு”. அதிபர் ஒப்பிலாமணியின் இதயம் துடித்தது. ஆனந்தன் அவரின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டான். அவரின் மனஉளைச்சலின் உச்சத்தை உணர்ந்து கொண்டான்.
“சேர்! அமைதியாக இருங்கள். சில அதிகாரிகளை வைத்துக் கொண்டு மற்றவர்களையும் எடைபோடவேண்டாம். நீங்கள் பயமில்லாது போங்கள். “டயஸ்!” சாரதியை அழைத்தான். டயஸ் உடன் வந்தான். “சேரைக் கொண்டுபோய் பாடசாலையில் விட்டுப்போட்டு வாங்க”. அதிபரை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்தான். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனது மேலதிகாரிக்கு அன்றிரவே தொலைபேசியில் விபரங்களைத் தெளிவு படுத்தினான். விடிந்ததும் வந்ததுபோல் அனைவரையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
எக்கவுண்டனின் அறிக்கையும், பிரயாணக் கொடுப்பனவுக்கான பூரணப்படுத்தப்பட்ட படிவங்களும் மேலதிகாரியின் அனுமதிக்காக அவரது மேசைக்கு வந்து சேர்ந்தன. அவரால் அனுப்பப்பட்ட ஒப்பிலாமணியருக்கு எதிரான அறிக்கையை விரிவாகப் படித்தார். அந்த அறிக்கையினை இரண்டு போட்டோப் பிரதி எடுக்கும்படி உதவியாளரிடம் கொடுத்து எடுத்துக் கொண்டார். எக்கவுண்டனின் பிரயாணத்துக்கான விபரங்களையும் பற்றுச்சீட்டுக்களையும் படித்தார். மேலதிகாரியின் உள்ளம் கொதித்தது. ஆனந்தனின் அலுவலக அறையின் மணி ஒலித்தது. அதேநேரம் எக்கவுண்டன் அறையின் மணியும் ஒலித்தது. இருவரும் மேலதிகாரியின் அறையை நோக்கி நடந்தார்கள்.
ஆனந்தனின் அறிக்கையினையும், பிரயாணச் செலவுக்கான படிவங்களை எக்கவுண்டனிடம் கொடுத்துச் சரிபார்க்கும்படி கொடுத்தார். அத்துடன் ஒப்பிலாமணி அதிபருக்கு எதிரான அறிக்கையையும் கொடுத்தார். எக்கவுண்டனின் அறிக்கையையும் செலவுக்கான படிவங்களையும் ஆனந்தனிடம் சரிபார்க்கும்படி கொடுத்தார். அத்துடன் ஒப்பிலாமணி அதிபருக்கு எதிரான அறிக்கையையும் கொடுத்தார்.
“எக்கவுண்டன். நீங்க ஒப்பிலாமணி அதிபருக்கு எதிராகக் கொடுத்த அறிக்கையினைப் பார்த்தேன். ஒப்பிலாமணி அதிபர் உங்களுக்குத் தந்த விளக்கத்தினையும் பார்த்தேன். அந்த அதிபரின் விளக்கத்தைப் படித்தீர்களா? அவர் சரியான விளக்கத்தைத் தந்துள்ளார். நீங்கள் அதனைப் படித்துப் பார்க்காமல் அவருக்கெதிரான அறிக்கையை எழுதித் தந்திருக்கிறீர்கள். பாடசாலைக்குச் சென்று விசாரணையை முடித்தபின் கடையில் சாப்பிட்டிருக்கிறீங்க. உணவு உண்டதுக்கான பற்றுச்சீட்டும் உண்டு.” சில பத்திரங்களைப் புரட்டிப் பார்த்தவாறே கூறினார்.
“பற்றுச்சீட்டில் ‘றப்பர்ஸ்ராம்சீல்’ இல்லை. உங்கட செலவுத் தொகை அதிகம். அதிபரின்; ‘றப்பர்ஸ்ராம்சீல்’ இல்லாத பற்றுச் சீட்டிலுள்ள தொகை சிறியதொகைதான். நீங்களே பிழையான வேலைகளைச் செய்துவிட்டு. மற்றவரைப் பிழைபிடிப்பது என்ன ஞாயம்? கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியலாமா? “லோ மேக்கர்ஸ் சுட் நொட் பி த லோ பிறேக்கர்ஸ்” சட்டத்தை ஆக்குபவர்கள் அதனை உடைப்பவர்களாக இருக்கக்கூடாது. உங்களுக்கும் றைவருக்கும் அதிபர் உணவு தந்ததாக டயஸ் தனது பிரயாணப் படிவத்தில் எழுத்தில் தந்திருக்கிறார். உங்களுக்கு அதிபர் உணவு தரவில்லையா”? அவரை உற்றுப் பார்த்துக் கேட்டார்.
“உங்கள் வீட்டில் இருந்து விட்டு ‘கெஸ்ற்ஹெளஸ்’ பற்றுச்சீட்டைத் தந்திருக்கிறீங்க. உண்மையில் அதிபர் இரண்டு ரூபாயை விளையாடி விட்டார் என்பதை நிருபிக்க நீங்க எத்தனை ஆயிரம் ரூபாய் உங்களுக்காக்கிக் கொள்ளப் பார்க்கிறீர்கள். நீங்கள் பாடசாலைக்குள் நுழைந்த நேரம் தொடக்கம் உங்களை எவ்வளவு மரியாதையாக பாடசாலை மதித்துள்ளது. தேநீர். சிற்றுண்டி. உணவு எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு அதிபரைக் கள்ளனாகக் காட்டுவது மனிதாபிமானமாகுமா? அந்த இருண்டு ரூபாய்க்குப் பற்றுச் சீட்டில்லையென்றால், அவரிட்டச் சொன்னால் அவர் அதைச் சரிசெய்துகொள்வார்தானே. அதற்காக நீங்க ஐந்துநாள் டியூட்டி லீவும் அதோடு பிரயாணப்படியும், பட்டாவும் பெறுவதுதான் நோக்கமா”? மேலதிகாரியின் கண்களில் சினத்தைக் காணவில்லை. மனிதாபிமானம் மேலோங்கியிருந்தது.
“என்ன மிஸ்டர் சேகர்? பாடசாலைகளுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக வரும் நிதியில் எவ்வளவு கொமிசன் நமக்குக் கிடைக்கிறது? இதைப்பற்றி அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரியாமல் இல்லை. நாங்க பாடசாலைகளுக்கு மேற்பார்வைக்காகப் போவது அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவதற்காகத்தான் என்பதை ஏன் மனதில் கொள்வதில்லை.? அவர்களுக்காகத்தான் நாமிருக்கிறோம். நம்மைப்போன்றவர்கள் மனிதர்கள்தானா? யோசியுங்கள்” அந்த மேலதிகாரியின் கண்களில் இப்போதும் கோபத்தைக் காணவில்லை. பதிலாக பச்சாதாபம் தெரிந்தது. அவர் எழுந்து வெளியில் போனார். எக்கவுண்டன் முகத்தைக் கவிழ்த்தபடி இருந்தார்.

Read more...

Thursday, January 20, 2011

சிறுகதை

சிறுகதை
மதுராஞ்சலி
“பத்மினி! “ சேர் ”“எல்லாம் தயாரா?”“ஓம் சேர்”. எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துவிட்டு பத்மினி வரவேற்றார். அந்தப் பயிற்சியறையை எனது கண்கள் துளாவின.அப் பயிற்சியறை தாமரைக்குளம்போல் காட்சியாகிக் கொண்டிருந்தது. செந்தாமரைகள் மலர்ந்து சிரிப்பது போல் ஒரு மலர்ச்சி. எனது கண்கள் சுழன்று சூழலை அவதானித்தன.
அது முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஐந்துநாள் வதிவிட வசதிகொண்ட பயிற்சி. அந்தப்பயிற்சியில் கலந்துகொள்ள நாற்பத்தைந்துபேர் வந்திருந்தனர். அனைவரும் இளம்வயதுப் பெண்கள். முன்பள்ளிகளில் கல்விப்பணியாற்றப் பெண்கள்தான் பொருத்தமானவர்களோ? அனைவரும் முதல்நாள் மாலை ஐந்து மணிக்கு வந்துவிட்டனர். பத்மினி உதவியாளராகச் செயற்பட்டார். தங்குமிடவசதிகள் பயிற்சியறையைச் சூழ்ந்திருந்தன. மிகவசதியான பாதுகாப்பான இடம். ஒவ்வொரு அறையிலும் மூன்றுபேர்கள் தங்கலாம்.
“பத்மினி மூவின ஆசிரியைகளும் வருவார்கள். அனைவரையும் கலந்து அறைகளை ஒதுக்குங்கள்” உதவியாளர் பத்மினியைப் பணித்திருந்தேன். அவர் அதேபோல் ஒரு அறையில் தமிழ், முஸ்லிம். சிங்களம் என மூன்றுபேர் வீதம் கலந்து அறைகளை ஒதுக்கீடு செய்திருந்தார். இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
மங்கல விளக்கேற்றியதும் மௌன இறைவணக்கத்துடன் பயிற்சி தொடங்கியது. முதலில் அறிமுகம்.இருவர் இருவராகச் சேர்ந்து தமக்குள் கலந்துரையாடி தரவுகளைப் பெற்று ஒருவருக்காக மற்றவர் அறிமுகம் செய்யவேண்டும். பணிப்புரை கொடுபட்டதும் அனைவரும் சுறுசுறுப்பாகினர். ஐந்து நிமிடங்களின் பின் ஒன்றுசேர்ந்து இருவரிருவராக எழுந்து ஒருவரை மற்றவர் அறிமுகம் செய்தனர். முதற் சோடியினர் வந்தார்கள். “எனது பங்காளியின் பெயர் சுந்தரி. அவர் மகாலக்ஸ்மி முன்பள்ளியில் கடந்த மூன்று வருடங்களாகக் கடமையாற்றுகிறார். திருமணம் ஆகவில்லை. இந்தப்பயிற்சியில் மேலதிக அறிவினைப் பெறலாம் என வந்துள்ளார்”;. அவர்முடிக்குமுன் “எனது பங்காளியின் பெயர் ஆமினாபேகம். அவர் மஜீதியா முன்பள்ளியில் மூன்றரை வருடங்களாகக் கடமையாற்றுகிறார். திருமணமாகி கணவரோடும் இரண்டு குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறார்”;. சுந்தரி முறுவலோடு முடித்தார். அறிமுகம் தொடர்ந்து கொண்டிருந்தது.
அடுத்து ஒரு இளம் ஆசிரியை எழுந்தார். அழகே உருவான கட்டிளம் பெண். கண்முன் தேர் அசைவதுபோன்று நின்றாள்.“எனது சகோதரியின் பெயர் மதுரா. பன்குளம் பாலர்பாடசாலையில் கடமையாற்றுகிறார். இருபத்துமூன்று வயது. திருமணமாகிவிட்டது…. ஒரு மகன் இருக்கிறார்…. அவருக்கு வயது ஒன்றரை…கணவர்…..” அதற்குமேல் அவர் தொடரவில்லை. அந்த ஆசிரியையால் தொடர்ந்து கூறமுடியாது தவிப்பதை உணர்ந்து கொண்டேன். கூறும்போது அவரது முகம் வாடி வதங்கி எதையோ பறிகொடுத்த ஏக்கத்தோடும், தாழ்வு மனப்பாங்கோடும் போராடுவதை அவதானித்தேன். கண்கள் குளமாகி கண்ணீர் உடைப்பெடுத்துப் பொலபொலத்தது. நிலைமையைத் தொடரவிடாது அடுத்த ஆசிரியையின் குரல் திசைதிருப்பியது.
அவளும் அழகான இளம்கன்னி. அவள் நடையே தனியழகாக இருந்தது. அவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். “எனது சகோதரியின் பெயர் அஞ்சலி. அவர் தம்பலகாமம் முன்பள்ளியில் கற்பிக்கின்றார். வயது இருபத்திமூன்று. திருமணமாகிவிட்டது. ஒன்றரை வயது மகன் இருக்கிறார்…கணவர்….” கிள்ளை மொழி என்பார்களே, அந்த மொழியில் தொடர்ந்தார். அவராலும் தொடரமுடியவில்லை.
அரைகுறைத் தமிழிலும் சிங்களத்திலும் கலந்து சொல்லும்போது அந்த ஆசிரியரின் விழிகள் கலங்கி கண்ணீர் உடைப்பெடுக்கத் தொடங்கியது. அவரது முகத்தில் ஆயிரம் கதைகள் ஊர்வதை அவதானித்தேன்.
பத்மினி கெட்டிக்காரி.. சந்தர்ப்பத்தை உணர்ந்துவிட்டார். அவர்களை இக்கட்டுக்குள் விடவில்லை.“சரி… நீங்கள் தொடங்குங்கள்…” மற்றவர்களை முடுக்கிவிட்டார். அவர்கள் தொடங்கினார்கள்.“ஆயிசா…குசும் …அருந்ததி…அகிலா…” இப்படிக் கூறிக் கொண்டே போனார்கள்.
எனது மனதில் புயல் வீசத்தொடங்கியது. எனது மனமும் சிறுபிள்ளைபோல் எதையும் அறியும் ஆவலோடு அலைந்தது. மூன்று தொடக்கம் ஐந்து வயதுச் சிறுவர்கள் சிந்தனையாளர்கள். சதா அவர்களது மனங்கள் கற்பனையில் மிதக்கும். பளிச்சிடும் கண்களோடு, சிரித்தவண்ணம் கள்ளமில்லா உள்ளத்தோடு பேதமில்லாது விளையாடித்திரிவார்கள். அவர்களோடு சேர்ந்திருந்தால் அவர்களே நமக்குக் கற்றுத்தருவார்கள்.
ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து நம்மைப் பிரமிக்க வைத்துவிடுவார்கள். எனது மனதினுள்ளும் பல கேள்விக்கணைகள் கிளர்ந்தெழுந்தன. ஏன் இந்த இளம் ஆசிரியைகளின் மனக்கடல்கள் அலைமோதின?. இந்த இளம் வயதில் இவர்களுக்கு நடந்ததென்ன? எவ்வளவு அழகான பிள்ளைகள். அவர்கள் பேசும் மொழிதான் வித்தியாசமானது. ஆனால் உணர்வுகள் ஒன்றுதானே. உடனறியும் ஆவலிருந்தாலும் சந்தர்பம் சரியில்லை. அனைவரும் யாவற்றையும் மறந்து பயிற்சியில் ஈடுபடவேண்டும். கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தவேண்டும்.. கற்றல் மகிழ்ச்சிகரமானதாக அமையவேண்டும். பிள்ளைகளாக தங்களை நினைந்து கற்றலில் ஈடுபடவேண்டும். ஏற்கனவே நிகழ்சிநிரல் எல்லாம் தயார். ஆனாலும் பங்குபற்றுநர் சொன்னால் நாகரீகமாக இருக்கும் அல்லவா? பத்மினியைப் பார்த்தேன்.
பத்மினி தொடங்கினார்
“தேநீர் இடைவேளை எப்போது? பத்து அல்லது பத்தரை. எது பொருத்தமானது”? ஒரே குரலாகச் சொன்னார்கள். “பத்தரை மணிக்கு” பத்மினி எழுதிக் கொண்டார். “பகலுணவை நீங்களே தீர்மானியுங்கள்.” என்றார். பாமினி எழுந்தார். “நாங்கள் அனைவரும் கூடித்தீர்மானித்த நிகழ்ச்சி நிரலிது. வாசிக்கிறேன். அதன்படி செயற்படத் தீர்மானித்துள்ளோம். இது எங்களது ஓய்வு நேரமும், இடைவேளைகள் மட்டுந்தான். பாடப்பயிற்சிகளை நீங்கள் தீர்மானியுங்கள்.”
தனது கொப்பியில் உள்ளதை உரத்து வாசித்தார்.“ காலை ஐந்து மணிக்கு துயிலெழுதல். சிரமதானம். தேநீர், காலையுணவு ஏழு தொடக்கம் எட்டுவரை. ஏட்டரை தொடக்கம் பத்தரை வரை பயிற்சி. ஒருமணியிலிருந்து இரண்டு மணிவரை பகல் உணவுக்கான இடைவேளை. மூன்றரை மணிக்கு தேநீர் இடைவேளை. ஐந்தரையில் இருந்து ஆறரைவரை இன்னுமொரு இடைவேளை. எட்டுத் தொடக்கம் ஒன்பதுவரை இரவு உணவு இடைவேளை. இரவு பத்தரைக்கு ஓய்வு. இதனையே தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.” பாமினி முடித்தார். எனக்கு மனதினுள் மத்தாப்பு விரிந்தது.. “இதனை எல்லோரும் ஆமோதிக்கிறீர்;;களா”? பத்மினி ஒருமுறை ஆசிரியர்களிடம் கேட்டார். “ஓமோம்.” புதில்வந்தது. “சரி உங்கள் விருப்புடன் சந்தோசமாக பயிற்சியினைத் தொடங்குவோம்.”பத்மினி ஆசிரியர்களின் விருப்பத்தினை அறிந்து அன்றைய நாளுக்குரிய நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தார். அதனைச் சுவரில் காட்சிப்படுத்தியும் விட்டார்;.
ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களை முன்பள்ளிகள், பாலர்பாடசாலை, நேசரி எனப் பலபெயர்களால் அழைத்தாலும், ஆசிரியர்களை ரீச்சர் என்றே அழைப்பார்கள். அங்கு கல்வி கற்பவர்கள் மூன்று முதல் ஐந்து வயதுச் சிறார்கள்தான். செய்யும் சேவைக்குரிய வேதனத்தைப் பெறாத அப்பாவிகள் இந்த முன்பள்ளி ஆசிரியர்கள். பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து, அன்பு, அரவணைப்பு, இரக்கம். பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பிள்ளைகளை அறிந்து விளையாட்டு மூலம் அவர்களது சிந்தனைக்கு வடிகால் அமைக்கவேண்டும்.
நிகழ்ச்சி நிரலின்படி பயிற்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நகர்ந்துவிட்டன. இன்று நான்காம் நாள். ஐந்தரை மணிவரை பயிற்சிநடந்தது. தங்களை மறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒரு மணித்தியால இடைவேளையின் பின் மீண்டும் பயிற்சி தொடங்கும். நாளை நண்பகலுடன் பயிற்சி முடிந்து அனைவரும் தமது இருப்பிடங்களுக்குப் போய்விடுவார்கள்.
பயிற்சியாளர்கள் கலைந்து தமது அறைகளுக்குச் சென்றார்கள். நானும் வெளியில் சென்று அரைமணித்தியாலத்தின் பின் திரும்பினேன். ஆறுமணியாகிவிட்டது. இன்னும் அரைமணி நேரமிருந்தது. ஓய்வெடுத்து உடைகளை மாற்றி உசாராய் வந்தார்கள். இருவர் மூவராகச் சேர்ந்து உரையாடினார்கள். ஒரே கலகலப்பாக இருந்தது. ஒரு மூலையில் ஒதுங்கி இருவர் இருப்பதை எனது கண்கள் கண்டுகொண்டன. அறிமுகம் செய்யும்போது அவதியுற்றவர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். மெதுவாக அவர்களிடம் சென்றேன். என்னைக் கண்டதும் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். “வாங்க சேர்”. எழுந்து நின்றார்கள். அவர்களை அமரும்படி சைகைசெய்து அவர்களுடன் கதிரையில் அமர்ந்தேன். “எப்படி பயிற்சி….போகுது”?“நல்லாப்போகுது சேர். நல்ல அனுபவங்களைப் பெறுகிறோம்”. இருவரும் கூறினார்கள்.“உங்கட பெயர் .”.? கேட்டேன். எனது தமிழில் கேட்டேன். “ மதுரா” பதில் வந்தது. மதுரமாக இனித்தது.“உங்கள் முன்பள்ளி…? சிங்களத்தில் கேட்டேன். ” பங்குளம” பன்குளம் என்ற தமிழ்கிராமம் குடியேற்றத்திட்டத்தின் பின் ‘பங்குளம’ என ஆகிவிட்டதை உணர்ந்தேன். “நீங்க ..? மற்றவரைப் பார்த்துக் கேட்டேன். “ அஞ்சலி. தம்பலகாமம்”. தமிழ் இனித்தது. முதல்நாள் அறிமுகத்தின் போது நடந்த நிகழ்ச்சி என் மனக்கண்முன் வந்து நின்றது. அடிமனதில் குடைந்து கொண்டிருந்த குமுறல் வெளியாகியது. “ அஞ்சலி எப்படி மதுராவோடு கதைக்கிறீர்கள்”? இருவரும் ஒரு புன்னகையை வீசினார்கள். உள்ளத்தில் புதையுண்டு கிடக்கும் அத்தனை சோகங்களும் அப்புன்னகையூடாகப் பாய்வதைக் கண்ணுற்றேன். “கைபாசையும் எனக்குத் தெரிந்த சிங்களச் சொற்களும் பாவிக்கிறன். இவவும் அதுபோல் தெரிந்த தமிழ் சொற்களையும் பாவிக்கிறா. புரிந்து கொள்ளுறம்”. அஞ்சலி விளக்கினார். “இருவரும் ஒரு அறையிலா இருக்கிறீர்கள்.?”“ ஓம் சேர்” “ மதுரா உங்களப்பற்றிச் சொல்லுங்க ஏன் இருவரும் சோகமாக இருக்கிறீங்க? இங்க ஏதும் பிரச்சினையா? உங்கள யாராவது ஏசினார்களா? மதுராவிடம் சிங்களத்தில் விசாரித்தேன். அவள் உறைந்து போனாள். “அஞ்சலி! என்ன பிரச்சினை. ஏன் வாடிப்போய் இருக்கிறீங்க”? அஞ்சலியிடமும் கேட்டேன்.“அப்படி ஒன்றுமில்லை. நல்லத்தான் இருக்கிறம்.”“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.. உங்கட பிரச்சினையை எனக்குச் சொன்னால் உங்களும், எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். சொல்லுங்கம்மா”. வினயமாகச் கேட்டேன்.“சேர்..சொன்னால் உங்களால என்ன சேர் செய்யமுடியும். போனது திரும்பி வரவாபோகுது”?. அஞ்சலி தைரியமானாள். எவ்வளவு அமைதியான பிள்ளையா இப்படிக் கேட்கிறாள். ஆச்சரியமாக இருந்தது. “சேர்…நமது நாட்டில் காட்டுமிராண்டிகள்தான் உள்ளனர்…” குலுங்கி அழுதாள். கூடவே மதுராவும் அழுதாள். “என்னம்மா என்ன நடந்தது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை”.“அஞ்சலி;! கமக் நஹ. சேர்ட கியமு. ஒயா கியாண்ட” சிங்களத்தில் மதுரா கூறினாள். அஞ்சலி அழுகையை அடக்கி மதுராவின் பக்கத்தில் சென்றாள். அவளது கையைப் பிடித்தாள். “சேர்..நாங்க இரண்டுபேரும் இந்த மண்ணில்தான் பிறந்தோம். இருவரும் காதலிச்சித்தான் திருமணம் செய்தோம். இருவருக்கும் ஒரே வயதுதான். இவள் சிங்களம். நான் தமிழ். இதுதான் வித்தியாசம். ஆனால் எங்க இரண்டு பேருக்கும் பிரச்சினை ஒன்றுதான். இருவரது உடலில் ஓடுவது ஒரேவகையான சிவப்பிரத்தந்தான். எங்கள் கதையும் ஒன்றுதான் சேர்.” விம்மினாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். “ நாங்கள் என்ன பாவம் செய்தோம் சேர்.”? என்னைப் பார்த்தாள். எனக்குப் பெரிய சங்கடமாகிவிட்டது. அவள் கை மதுராவை நோக்கி நீண்டது.
“இவள் கணவன் வேறுவேலை கிடையாததால் இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். சம்பளம் வந்ததாம். கொஞ்சநாட்கள்; சந்தோசமான வாழ்வு கிடைச்சதாம். இலங்கை இராணுவத்தில் விருப்பமில்லாமல்தான் சேர்ந்தாராம். மதுராவின் கணவனை வன்னிப் போருக்கு அனுப்பினார்கள். அவராக விரும்பிப் போகல்ல. போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினால் போனார். விலகவும் முடியவில்லையாம். போனவர் போனவர்தான். அவரின் வாழ்வு முடிந்துவிட்டது. இப்போது அவளுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவரைப் போருக்கு அனுப்பியவர்கள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.” அவள் நாக்கு வரண்டிருக்கவேண்டும். செருமிவிட்டுச் சற்று நிறுத்தித் தொடர்ந்தாள். மதுரா நிலத்தில் குந்தியிருந்து முகத்தைத் தன் கைகளினால் தாங்கிப் பிடித்தபடி விம்மிவிம்மி அழுதாள். அஞ்சலி அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
“நானும் திருமணமாகி சந்தோசமாய்த்தான் சேர் வாழ்ந்தேன். அந்த நாட்களை என்னால் மறக்கமுடியாது. எனது கணவர் என்னைக் கண்கலங்காது பாதுகாத்து வந்தார். நான் தாய்மையுற்று இருந்தேன். ஒருநாள் அதிகாலை நான்கு மணி. எங்கள் கிராமத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்தார்கள். இளைஞர்களைக் கைது செய்து கூட்டி வந்தார்கள். விடிந்து கொண்டு வந்தது. ஆறரை மணியிருக்கும். எங்கள் வீட்டின் கதவைத்தள்ளித் திறந்து கொண்டு புகுந்தார்கள். எனது கணவரை வெளியில் இழுத்தெடுத்தார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். விட்டார்களா பாவிகள்.? வீதிக்கு இழுத்து வந்தார்கள்.” கண்ணகியின் ‘கண்ணீராடிய கதிரிள வனமுலை’ தோற்றத்தை அவளிடம் கண்டேன். கண்களைத் துடைத்துக் கொண்டாள்.“ வரிசையில் நிற்க வைத்தார்கள். எங்களைத் துரத்தினார்கள். எங்களுக்கு முன்னாலேயே அந்த அப்பாவிகளைச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார்கள். எனது கணவன் எனது கண்முன்னாலேயே துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் புரண்டார். அழுது புலம்பினோம். விறகுக் கட்டைகளையும் பழைய ரயர்களையும் போட்டு எங்கள் கண்முன்னாலேயே தீயிட்டுக் கொழுத்தினார்கள். அந்தக் கோரச் சம்பவத்தை நினைக்கவே மனது வேகுது சேர்”. அவள் களைத்துவிட்டாள். சோர்ந்து நிலத்தில் குந்திவிட்டாள்.
இப்போது மதுரா அவளைத் தேற்றினாள். கண்களைத் துடைத்துக் கொண்டே “அடுத்தமாதமே ஒரு குழந்தைக்குத் தாயானேன். இப்போது அவனுக்கு ஒன்றரை வயது” கூறிவிட்டுக் குந்தியிருந்து விம்மினாள். அவள் பக்கம் மதுராவும் குந்திக் கொண்டு அழுதாள். இந்த இரண்டு இளம் உள்ளங்கள் ஒன்று சேர்ந்து துயரங்களைப் பகிர்வதைக் கண்டு என் மனமும் அவர்களுடன் சேர்ந்து அழுதது.
எத்தனை இளைஞர்களை இந்தக் கொடிய போர் காவுகொண்டுள்ளது?. எத்தனை இளம் விதவைகளை உருவாக்கியுள்ளது?. எத்தனை அநாதைக் குழந்தைகளையும், அனாதை இல்லங்களையும் உருவாக்கியுள்ளது?. எத்தனை அங்கவீனர்களை இந்த நாடு கண்டுள்ளது? எத்தனை கோடிப் பெறுமானமுள்ள சொத்துக்களை இழந்துள்ளோம்?. இதற்கெல்லாம் யார் காரணம்.?
வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாக இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அல்லது வெளிநாடுகளுக்குப் போய்வி;டுகிறார்கள். வாழ்க்கையின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். சாதாரண பொது மக்களிடையே பெரும்பாலும் வேற்றுமைகள் இல்லை. அவர்களை அரசியல்வாதிகள்தான் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று இனவாத்தைக் காட்டிக் குழப்பி விடுகிறார்கள். நாட்டின் தலைவிதியைத் தீர்மானிப்பது பாராளுமன்றம்தான். ஆனால் நமது பாராளுமன்றம் நாட்டின் வன்முறைகளுக்குத் தூபமிடும் இடமாக மாறிவிட்டது.
இன ஐக்கியத்தோடு வாழ்ந்து வந்த இந்த நாட்டை மொழியால் பிரித்தார்கள். சமயத்தால் பிரித்தார்கள். தேசியகீதத்தைச் சிங்கள மொழியில் பாடவேண்டும் என்று எந்தப் பொதுமகன் கேட்டான்?. எத்தனை வீதமான சிங்கள மக்களுக்குத் தேசியகீதம் தெரியும். தேசியகீதத்தைப் பற்றித் தெரியாதவர்களே அதனைச் சிங்களத்தில் மட்டும் பாடும்படி பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள். இந்தநாட்டில் பிறந்து வாழும் குடிமக்களாகிய தழிழ் பேசும் மக்களுக்கு இந்தநாடு சொந்தமில்லையா? இவர்கள் ஏன் பாராளுமன்றம் செல்கிறார்கள்.?
இலங்கை நாட்டின் நதிவளங்களை வலைபின்னல் அமைப்புக்களை ஏற்படுத்தினால் விவசாயம் பெருகும். பொருளாதாரத்தில் நம்நாடு தலைநிமிரும். இவற்றைப்பற்றிய அறிவு இல்லாதவர்களை இந்த மக்கள் ஏன் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்கிறார்கள்.? மதுராவும் அஞ்சலிகளும் இந்நிலைக்கு ஆளாவார்களா?
இந்தநாட்டின் மக்கள் படுந்துன்பங்களைப் பற்றிக் கதைப்பதற்கு யாரும் பாராளுமன்றத்தில் இல்லை. ஒருபுறம் அகதிமுகாம்களில் வாடும் மக்கள். இன்னொரு புறம் வீடுவாசல்களைத் தொலைத்துவிட்டு நாடோடிகளாக அலையும் மக்கள். இன்னொருபுறம் உறவுகளை இழந்து மனவடுக்களுக்கு ஆளாகி முள்ளுக்கம்பி வேலி கொண்ட அகதிமுகாங்களுக்குள் முடங்கித் தவிக்கும் மக்கள். மற்றொரு புறம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுத் துயருறும் மக்கள் என்பதைப்பற்றிக் கவலை கொள்ள யாரும் இல்லை. நினைந்து நினைந்து என் மனது கனத்துப் பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருக்கும்வரை மதுராஞ்சலிகள் பெருகிக்கொண்டே போவார்கள். ஒருவித கொடுப்பனவும் இல்லாத முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சியும், டிப்ளோமா அல்லது பல்கலைக்கழகப் பட்டமோ தேவைப்பட்டால் நாட்டை ஆள்வதற்குரிய பிரதிநிதிகளுக்கு எவ்வகையான தகுதி வேண்டும:;? பாராளுமன்றம் செல்வதற்குச் சில தகுதிகளை உருவாக்கவேண்டும். மும்மொழியும் தெரிந்தவர்களாக, நாட்டுப்பற்றுள்ளவர்களாக, பண்பான பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகவுள்ள அறிஞர்களைத்தான் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தகுதியை மக்கள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாடு சொர்க்கமாக மாறும்.
“சேர்… என்ன சேர் யோசனை? பயிற்சியைத் தொடங்கலாம் சேர். வாங்க”. பத்மினி பக்கத்தில் வந்துநின்று அழைப்பதை உணர்ந்தேன். மதுராவையும் அஞ்சலியையும் பார்த்தேன். அவர்கள் பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தார்கள். நான் அப்படியே உறைந்திருந்தேன்.

Read more...

Wednesday, January 19, 2011

சிறுகதை

சிறுகதை
ஆனந்தரின் துள்ளல்
ஆனந்தர் அபார மூளைகொண்டவர். தன்திறமையினால் முன்னுக்கு வந்தவர். வன்னி மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர். நல்ல சம்பளம். மலிவாகக் கிடைக்கும் காணிகளை வாங்கியும் காணி உத்தியோகத்தர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு சில ஏக்கர் நிலங்களையும் பெற்றும் கொண்டார். காணி உத்தியோகத்தர்களாக வருபவர்களும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் காணிகச்சேரி நடத்தி ‘பேமிற்’ எடுத்துக் கொடுத்து விடுவார்கள். வன்னிப்பகுதிக்கு வந்து குடியேறுபவர்கள் குறைவு. யாழ்ப்பாணம் பாதுகாப்புக்கும் கல்வி போன்ற ஏனைய வசதிகளுக்கும் பெயர்போன பிரதேசம். ஆனந்தர் அரசாங்க உத்தியோகம் பார்த்தாலும் அரசியல், சமூகசேவைகள் போன்றவற்றிலும் கரிசனை காட்டினார்.ஆனந்தரின் உதவி இளைஞர்களுக்குத் தேவைப் பட்டது.
யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் அது உலகமெல்லாம் கேட்கும் என்பார்கள். அதற்குக் காரணம் கல்விதான். யாழ்ப்பாணத்தவர்களின் மூலதனம் கல்விதான். அதனால்தான் அரச உத்தியோகங்களில் யாழ்ப்பாணத்தவர்கள் அதிக இடம்பிடித்தார்கள். ஆனந்தரும் வன்னிக்கு வந்தபின் வசதிபடைத் தவராகிவிட்டார். ஆனால் இதனை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில்தான் ஆனந்தர் யாழ்ப்பணத்தில் பிரசன்னமாவார். அதிகாலை ‘இன்ரசிற்றி’ றெயிலில் எறினால் ஒன்பது மணிக்கு வன்னியில் கந்தோரில் இருப்பார். மாலை நாலரைக்கு மீண்டும் றெயில் எறினால் ஏழுமணிக்கு வீட்டில் இருப்பார். ஒவ்வொரு நாளும் கோச்சியில் வந்து போவார்.
சனிக்கிழமைகளில் ஆனந்தர் வீட்டில் பல பிரமுகர்கள் கூடுவார்கள். பின்னர் பக்கத்துக் கோயில் வெளியில் மெதுவாக நகர்ந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை அரசியல் சமூக பலதும் பத்தும் அலசப்படும்.
அரசாங்கம் பல்கலைக்கழகப் புகுமுகத்துக்காக, மாவட்டங்களுக்குக் கோட்டாமுறையையும், வெட்டுப்புள்ளியில் மாற்றங்களையும் கொண்டுவர ‘தரப்படுத்தல்’ என ஒரு சரத்தைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தது. அதனை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்களும், கண்டனக் கூட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பிறமாவட்டங்களில் வேலைசெய்யும் உத்தியோகத்தர்களும். எனையவர்களும் தமது குடும்பத் தரவுகளை அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர் பதிவேட்டில் பதிந்து வைத்துவிடுவார்கள். யாழ்ப்பாணத்திலும் பதிவுகள் இருக்கும். ஆனந்தரும் இந்த நடவடிக்கைகளில் கெட்டிக்காரர். அவருக்கு அரசின் கொள்கையை எந்த ஆர்ப்பாட்டங்களும் மாற்றியமைக்க உதவாது என்பது தெரியும். உண்மையில் தரப்படுத்தலையும், கோட்டாமுறையையும் மனதினுள் ஆதரித்தவர்கள் பலர். அவர்களில் ஆனந்தரும் ஒருவர்.
ஒலிபெருக்கி ‘தமிழன் என்றொரு இனமுண்டு – தனியே அவர்க்கொரு குணமுண்டு’ போன்ற உணர்ச்சியூட்டும் பாடல்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. பிரசாரக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனந்தரின் ஆவேசமான பேச்சைக் கேட்டு மேடையே அதிர்ந்துவிட்ட மாதிரியான ஒரு உணர்வு. கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினரின் மெய் சிலிர்த்து ரோமமயிர் கால்கள் குத்திட்டு நின்றன. புள்ளி விபரங்களை மனப்பாடம் செய்து மக்களைத் தூண்டிவிடும் உணர்வு பூர்வமான பேச்சைப் பேசுவதில் வல்லவர். பேசிவிட்டு மேடையால் இறங்கி வந்தவரை கைகொடுத்து, “அண்ண! நல்ல பேச்சு. ஆட்சியாளருக்குச் சரியான சவுக்கடி’ எனப்புகழ்ந்தார்கள். வீடுவரைக் காரில் கொண்டுவந்து விட்டுச் சென்றனர்.
மாலையும் கையுமாக வந்தவரை மனைவி பார்த்த பார்வையும் “உங்களுக்கு ஏனிந்தவேலை”?என்ற கமலத்தின் வரவேற்பும் கூனிக்குறுக வைத்துவிட்டது. ஆனந்தர் வழமையான அந்தச் சிரிப்பை ஓடவிட்டு அதனைக் கொடுப்புக்குள் அடக்கிக் கொண்டார். எந்தக் கைதேர்ந்த வீரனாக இருந்தாலும் அவன் தனது மனைவிக்குக் கட்டுப்பட்டவனாகவே இருப்பான். என்பது ஆனந்தரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். “அரசியல் கூட்டங்களுக்குப் போகவேணாம் என்று எத்தனை தடைவ சொல்லியிருக்கிறன். நாளைக்கு ஏதேச்சும் நடக்கக்கூடாதது நடந்தால் நானும் என்ர பிள்ளையளும் நடுரோட்டிலதான் நிக்கவேணும்.” அவளின் தொணதொணப்பை அவரால் பொறுக்கமுடியவில்லை. கமலம்! விசயம்புரியாமல் கதைக்காத. என்னை நாலுபேர் நம்பவேணும். நானும் இந்தக் கூட்டங்களில் பங்குபற்றினதில என்ன குற்றம் கண்டனி.” சற்றுக் கடுகடுத்த குரலில் பொரிந்து தள்ளினார்.
“இது அரசியல் கூட்டமப்பா. தரப்படுத்தல், அது, இது என்டு பேசி, ஏன் வீண்பிரச்சினையை விலைக்கு வாங்குறியள்?”. கமலம் மேலும் மேலும் தொணதொணத்துக் கொண்டிருந்தாள். இவளோட பேசிப்பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டு பேச்சை மாற்றினார். “என்ர மனதில உள்ள கனவை இவள் எப்ப புரியப் போகிறாள். ஒருநாளைக்குப் புரியத்தானே வேணும். அப்ப இந்த ஆனந்தர் ஆர் என்பது புரியும்”.; மனதினுள் நினைந்தவாறே வேலைகளில் இடுபட்டார்.
ஆனந்தரின் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கற்றார்கள். அவர்களால் மிகத்திறமையான பிள்ளைகளுடன் போட்டி போடமுடியாது போய்விட்டது. தனது பிள்ளைகளின் தரத்தை அவர் எடைபோட்டிருந்தார். இதற்கு மாற்றுவழியைத் தேடினார். யாழ்ப்பாணத்து வீட்டை வாடகைக்கு விடவும், குடும்பத்தை வன்னியில் தான் வேலை செய்யுமிடத்துக்கு அழைத்துச் செல்வதும், பிள்ளைகளை வன்னியில் உள்ள பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதும் என்றும் முடிவெடுத்து விட்டார். இது பலநாட்களின் ஆலோசனையின் பின் எடுக்கப்பட்ட முடிவாகும்.
மாலைப் பொழுது ஒர் இங்கிதமானதுதான். பலர் கூடிப்பேசவும், உறவு கொண்டாடவும், மனம் விட்டுப் பழையனவற்றை நினைவு கூரவும், அதில் மகிழ்ந்து திளைக்கவும் ஏற்றதுதான் இந்த மாலைப் பொழுது. மெல்லிய இளங்காற்றுப் பனைகளை உசுப்பிக் கூத்துக்காட்டியது. அந்த உசுப்பில் உயர்ந்த பனைகள் குளிர்ந்து ஓலைகளை உரச, அந்த உரசலில் எழுமோசை நாதமாகக் கலந்து இன்பத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது.
அந்தக் கோயில் மணியோசை பூசை முடிந்ததும் ஓய்வு கொண்டது. கோயிலுக்குவந்து பூசை முடிந்ததும் குழந்தைகள் முதல் முதியோர் வரை வீடுகளுக்குச் சென்று கொண்டிரந்தனர். ஆனந்தரின் கூட்டம் கோயில் வெளிவீதியில் அமர்ந்து கொண்டது. கும்பல் கும்பலாக இளைஞர்கள் கூட்டமும் முதியோர் கூட்டமுமாக அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது.
அண்ணே! ..நீங்க வன்னிக்குப் போறியளாமே..மெய்யே..? அந்த இளைஞன் கந்தசாமி கதையோட கதையாகக் கேட்டான். “ஆர் சொன்னது”? “இஞ்ச எல்லாரும் கதைக்கின.” தாங்க முடிவெடுக்கமுதல் செய்தி பரவிவிட்டதை உணர்ந்தார். “ இன்னும் சரியான முடிவு எடுக்கல்ல … தை பிறக்கத்தான் ஒரு முடிவுக்கு வரவேணும். யோசிப்பம். என்ன தம்பி செய்யிறது? உத்தியோகம் பார்க்கிற இடத்தில இருந்து மூன்று மைலுக்குள் இருக்கவேண்டும் என்று சட்டமாம். சொல்லிப்போட்டாங்கள். அதோட என்ர உத்தயோகம் எழரை மணிக்குத் தொடங்கிவிடும். அதுதான் இந்த முடிவு.” மெதுவாக இழுத்து இழுத்துக் கூறிக்கொண்டிருந்தார்.“அண்ணே! ..நீங்க ..அங்க போனால் எங்களுக்குப் புத்தி சொல்லி வழிகாட்ட ஆர் இருக்கினம்.? அண்டைக்கு எங்கட எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கூட்டம் உங்களாலதானே வெற்றி பெற்றது.” கலக்கத்தோடு கந்தமசாமி கூறினான். ஆனந்தருக்கு மனதுக்குள் மத்தாப்பு வெடித்து மெய்சிலிர்க்க வைத்தது.
“தம்பிமார்! நான் அங்க போனாலும் அடிக்கடி வருவன்தானே. ஏன் கவலைப் படுறியள்”. ஆனந்தர் அவர்களைத் தேற்ற முயன்றார்.“குடும்பமும் அங்க போறதால உங்களால வரமுடியுமா என்பது சந்தேகம்தான்”;. கந்தசாமி தனது சந்தேகத்தை முன்வைத்தான்.“அப்படி நினைக்கக் கூடாது தம்பி” “ அண்ணே! வன்னியில வேலைசெய்யிறவை எல்லாரும் இங்க யாழ்ப்பாணத்தில் இருந்துதானே ஒவ்வொரு நாளும் போய் வருகினம்” ஒரு போடு போட்டான் சந்திரன். “அண்ணே! காலையில கோச்சியில போய்…பின்னேரக் கோச்சியில அரசாங்க உத்தியோகத்தர்மார் வந்துவிடுவினம். இவ்வளவு நாளும் நீங்களும் அப்படித்தானே போய்வந்தீங்கள். இப்ப அதையேன் மாத்துறீங்கள்.” ஆனந்தரின் மனதை மாற்ற கணேசன் அதிரடி வழிகளைப் பயன்படுத்தினான். எப்படியாவது ஆனந்தரின் மாற்றத்தைத் தடுத்துவிட வேண்;டும் என்ற நோக்கத்தோடு கூறிக்கொண்டிருந்தான்.
ஆனந்தர் தனது பயண அனுபவங்களை நினைவில் கொண்டார். அதிகாலையில் ஐந்து மணிக்கு ‘இன்ரசிற்றியில்’ எறினால் வன்னியில் எட்டரை மணிக்குக் கந்தோருக்குப் போய் கடமைகளை முடித்து விட்டு மாலை நாலரை மணிக்கு ஏறினால் ஏழுமணிக்கு வீடு. கடந்த பல ஆண்டுகளாக ஆனந்தரின் வாழ்க்கை இது. யாழ்ப்பாணத்தரில் இருந்து வந்து வன்னி மாவட்டத்தில் கடமையாற்றும் பதவிநிலை உத்தியோகத்தர் முதல் சிறூழியர் வரை அனைவரும் காலையில் வந்து மாலையில் வீடு போய்வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
ஆனந்தர் இப்போது தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டார். அவரின் அபார மூளைக்குச் சோதனை வந்து விட்டது. உடனே கதையை திசைதிருப்பி விட்டார்.“ தம்பி..கணேசன்.. நாங்க இப்படியே இருக்கேலா…இங்கேயும்..அங்கேயும் தரப்படுத்தலுக்கு எதிராகக் குரல் குடுக்கவேணும். தரப்படுத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடுக்கி விடவேணும். அங்கயும் இதற்காக ஆரும் இல்ல. வன்னியிலும் தொடங்கப் போறன்….ஓம். அதுதான் இப்ப என்ர மூளையப் போட்டுக் குழப்புது. உங்களுக்குச் சொன்னாலென்ன? உண்மையான காரணமும் அதுதான்”. சாதனை புரியும் வீரனைப் பொல் நிமிர்ந்திருந்தார்.
“நான் வன்னிக்குப் போனதும் ..உங்களையும் கூப்பிடுவன். ..நாங்கள் சேர்ந்து போராட வேணும். இங்கும். அங்கும். எங்கும் போராட வேணும். இதற்கெல்லாம் அங்க ஆர் இருக்கினம். நாங்கதானே பார்க்கவேணும்”;. ஆனந்தரின் சாணக்கியப் பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களைச் சாந்தப்படுத்தியது. அவர்கள் அமைதியானார்கள். தாங்களும் வன்னிப்பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்திப் பிரபலமடையலாம் எனக் கனவுகாணத் தலைப்பட்டனர். ஒருவாறு அவர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார்.
வன்னியில் தனது காணியில் ஏற்கனவே ஒரு வீட்டை அமைத்து விட்டார். நல்ல பாடசாலைகளாகப் பார்த்துப் பிள்ளைகளுக்கு அனுமதியும் பெற்றுவிட்டார். வன்னி மக்களைப் பற்றி ஆனந்தர் நன்றாகவே அறிந்திருந்தார். அவர்களுக்குக் கல்வியில் நாட்டமில்லை. குளம் தொட்டு வளம் பெருக்கும் பெருங்குடி மக்கள். தண்ணீர் நிறைந்த குளங்களும். பரந்த வளமான நிலமும், நிறையவே உண்டு. நெல். தானியச் செய்கையிலும் ஈடுபட்ட மக்களுக்குக் கல்வி இரண்டாம்பட்சமாகவே இருந்தது. மாவட்டக் கோட்டாமுறை வந்தது தனக்குச் சாதகமாகவே இருப்பதை எண்ணிச் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தார். கமலத்துக்கு வன்னிக்கு வரவே விருப்பமில்லை. அவளைச் சமாதானப் படுத்தி ஒருவாறு குடும்ப சகிதம் வந்து விட்டார். பிள்ளைகளை நல்ல பாடசாலைகளில் சேர்த்தும் விட்டார்.
காணி நிறையப் பயிர் செய்தார். பசுக்கள் பாலைக் கொடுத்தன. ‘என்ன இல்லை இந்த வன்னிவளநாட்டில்’ என்று அடிக்கடி கமலத்திடம் சொல்லிக் கொள்வார். ஆனந்தர் வன்னிக்கு வந்து சில வருடங்கள் உருண்டோடி விட்டன.
ஆனந்தர் வெற்றிக் களிப்போடு வீட்டினுள் நுழைந்தார். வரும்போதே “கமலம்…இஞ்ச வா.” பெரிய ஆர்ப்பாட்டமான உரத்த சத்தத்துடன்தான் வந்தார். வழமையாக வெளியில் போய்வந்தால் உடனே ஒருகோப்பைத் தேநீர் கொடுத்தாக வேண்டும். ஆனந்தரின் குரல் கேட்டதும் தேநீரோடுதான் கமலம் வந்தாள்.
ஆனந்தரின் துள்ளலைக் கண்டு கமலம் அதிர்ந்து போனாள். அவளுக்கு ஆச்சரியத்துக்குமேல் ஆச்சரியம். “வெளியில போகும்போது அமவாசை முகத்துடன் கடுகடுத்துத்தான் போனவர், இப்ப இப்படித் துள்ளுறார். இன்டைக்கு இந்தாளுக்கு என்ன வந்தி;ற்று. ஒருநாளும் இவ்வளவு சந்தோசமாய் இந்த மனிசன் இருக்கல்ல. அதிசயமாக்கிடக்கு”. மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். “ இந்தாங்க தேநீர். என்னப்பா இண்டைக்கு உங்களுக்கு” தேநீரை நீட்டியவாறே மனைவி கமலம் கேட்டாள். “இஞ்ச தா அதை”. அவர் பெரிய அட்டகாசமாய் கதிரையில் கால்மேல் கால்போட்டு இருந்து தேநீரை உறிஞ்சினார். ஒரு புன்னகையை எறிந்து “கமலம் என்னை என்னென்டு நினைச்ச நீ. உன்ர சொல்லயும். அந்தப் பொடியளின்ர சொல்லையும் கேட்டு நான் இங்க வராமல் இருந்தால் என்ன நடந்திருக்கும். ஆனந்தர் ஒரு புதிரை உதிர்த்துவிட்டு தேநீரை வாயில் வைத்து இன்னொரு முடரை உள்ளிழுத்து விழுங்கினார். “தேத்தண்ணி நல்லாத்தான் இருக்கு. பத்தியமாயும் இருக்கு”. சிரிப்போடு சொன்னார்.
“என்ன விஷேசம் என்று சொல்லுங்கவன். சொன்னாத்தானே தெரியும்”. கமலம் துருதுருத்தாள். “இன்டைக்கு அட்வான்ஸ் லெவல் சோதின முடிவு வந்திருக்கு தெரியுமாஃ அதுதான் பாத்திட்டு வாறன். மகளும் பாஸ்பண்ணிட்டாள்”. இறக்கி வைத்தார்.“என்னப்பா றிசல்ட்”“ நாலு எஸ்தான்”கமலம் அதிர்ந்து போய்விட்டாள். “நாலு ‘எஸ்’ காணுமே. இவளப் படி படியென்டு படிக்கச் சொன்னனான். வீட்டில கிடக்கிற வேலையள நான் ஒருத்தியாத் தனியக்கிடந்து செத்து இவளப் படிக்க வைச்சால் அவள் நாலு ‘எஸ்’ எடுத்திருக்கிறாள். நாலு ‘எஸ்’ என்னத்துக்குக் காணும். வாசிற்றிக்குப் போறதுக்கு இது காணுமே.? அவன் மூத்தவன் நாம யாழ்ப்பணத்தில் இருக்கேக்க நாலு ‘சியும்’ எடுத்தே வாசிற்றிக்குப் போகல்ல. இவள் நாலு ‘எஸ்’; எடுத்திற்று எப்படி வாசிற்றிக்குப் போப்போறாள்? வீட்டில ஒரு வேலையும் செய்யிறதில்ல. ரியூசனுக்கும் போறவள். இவள என்ன செய்யிறது. பழையபடி யாழ்ப்பாணத்துக்கு எங்கட வீட்ட போவமம்பா”. கமலம் ஒப்பாரி வைத்தாள்.
“இஞ்ச நிப்பாட்டும் உம்முடைய தொளவாரத்த. உமக்கு என்ன தெரியுமென்று கதைக்கிறீர்;? மாவட்டக் கோட்டா முறை வந்ததால நமக்கு எவ்வளவு நன்மை தெரியுமா? இஞ்ச கொஞ்சம் கேள். அவளுக்கு நாலு ‘எஸ்’ போதும். எல்லாப் பாடசாலைக்ளுக்கும் போய்த்தான் வாறன். இந்த மாவட்டத்தில அஞ்சிபேருக்கு மெடிசின் கிடைக்கும். இந்த மாவட்டத்தில என்ர பிள்ளைக்குத்தான் மூன்றாமிடம். யாழ்ப்பாணத்தில இது கிடைச்சிருக்குமே? இந்த ஆனந்தன்; சரியான நேரத்தில சரியான முடிவெடுப்பான். ஏன் பயப்பிடுறாய். என்ர மகள் டாக்குத்தர்தான்.” சொல்லிப்போட்டு வெற்றிக் களிப்போடு துள்ளி ஆடினார். அவளுக்கும் சந்தோசம்தான். ஆனாலும் அது உண்மையாக இருக்கவேண்டுமே என்று மனம் அடித்துக் கொண்டது.“உண்மையே அப்பா. எனக்கென்ன தெரியும்”? கமலம் ஆனந்தரை பார்த்தபடியே சிலையாய் நின்றாள்.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP