Tuesday, December 15, 2009

தவம் கலைகிறது

வானத்தில் அலங்கோலமாக மேகக்கூட்டத்தின் விசிறல். அமைதியைத் தொலைத்து விட்டுத் தேடும் குழந்தையாகச் சூழலின் தவிப்பு. மரங்களில் எதற்காகவோ தவமிருந்து கூவும் குயில்களின் இன்னிசையிலும் துன்பியலின் கோடுகள் நெளிகின்றன. சூறாவளியின் பின் நிலவும் பயங்கர அமைதியின் மயானத்தன்மை. இனிதாக வீசும் இளங்காற்றுக்கூட உடலையும் உள்ளத்தையும் வெதுப்பியது. உள்ளத்தின் கொந்தளிப்பால் ஏற்பட்ட கொதிப்பு. அனல் மூட்டிவிட்ட வெப்பத்தால் உள்ளத்துள் வெயர்த்து எரிமலையாகி விசுறுகிறது. அது உடலெங்கும் பரவி கொதியாய்க் கொதிக்கிறது. பாதிவிழி திறந்த நிலையில் அமர்ந்திருக்கிறான் கௌதம புத்தன். ஆழ்ந்த தியானம் கலைந்து கொண்டே இருக்கிறது. எப்படி அமைதிப்படுத்தினாலும் மனம் அமைதியடைவாதாக இல்லை. மனம் பொல்லாதது. மனதைப்போல் நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. அமைதி கலைந்து கொண்டே இருக்கிறது. மனக்கடலில் சூறாவளியாய் மாயையின் சித்து விளையாட்டு. பல ஆண்டுகளாகத் தன்னை வருத்தித் தவமிருந்து மானிடம் வாழ வழிகண்ட கௌதமன் மட்டும் விதிவிலக்கா என்ன? அவனது மனதிலும் சுழன்றடிக்கும் சூறாவளிச் சஞ்சலம். சுனாமியின் தீண்டல்.




பாரதம் ஞானிகளையும் புனிதர்களையும் தன்மேனியில் தவழவிட்டு மகிழ்ந்திருந்தது. அதனால்தான் தனக்கென ஒரு பெருமையைத் தேடிக்கொண்டது. பாரதத்தில்தான் துச்சோதனனும் வாழ்ந்தான். கபிலவஸ்து அவனது நாடு. அவன் போற்றுதற்குரிய பேரரசனாக ஆட்சிசெய்தான். அவனது ஒரே தவப்புதல்வன்தான்; சித்தார்த்தன். தனது மகன் இந்த உலகத்தின் துயரங்களைக் கண்டுகொள்ளக்கூடாது. அவனது மனதில் துன்பமே குடிகொள்ளக் கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்தான். இந்த உலகத்தின் மாமன்னனாகத் திகழவேண்டும் என்று திட்டமிட்டு வளர்த்தான். இளமையிலேயே யசோதையைத் திருமணம் செய்து வைத்தான். வாலிபம் இனிமையானது. உடற் சுகத்தைத் துய்த்து மகிழும் பருவம். அன்புக்கினியாளின் அரவணைப்பில் அகிலத்தை மறந்து மயங்கிக் கிடக்கும் அற்புத வாய்ப்பு. அனுபவித்தான். சகலதையும் உற்றுணர்ந்தான். அற்ப சுகம் நிரந்தரமானதல்ல. நிரந்தரமானதென்ன? அது எங்கே உள்ளது. எங்கே கிடைக்கும்.? அவனது மனம் தேடலில் தேர்ச்சியை நாடிச் சென்றது. வாரிசு வந்து பிறந்தது. துன்பத்தின் நிழலையே பார்த்திராதவன் வாழ்க்கையில் இன்பத்தைக் காணமுடியவில்லை. எவை அவன் பார்க்கக் கூடாது என மறைக்கப்பட்டனவோ அவற்றை அவன் நேரில் கண்டு கொண்டான். உலகத்தில் நிலவும் துயரங்களையும் துக்கங்களையும் கண்டான். அவனது மனதில் வெறுமை குடிகொண்டது. மனைவியைப் பார்த்தான். அவளது களங்கமில்லாத முகம் யொலித்தது. எனினும் அந்த முகம் அவனை வசீகரிக்கவில்லை. மாறாக விட்டு விடுதலையாகும் வைராக்கியத்தைப் பெருகச் செய்தது. அருந்தவப் புதல்வனையும் நோக்கினான். எல்லாம் மாயையாக அர்த்தமற்றனவாகத் தெரிந்தன. மனதில் சங்சலம் குடிகொண்டது. மன்னன் மகன் மக்கள் துயர்துடைக்க வேண்டும். ஆனால் சித்தார்த்தன் மனிதத்துயர் துடைக்க அரசையே தூக்கி எறிந்து விட்டான். தன்னையே அர்ப்பணிக்கத் துணிந்துவிட்டான். காட்டை அடைந்து கடுந்தவம் இயற்றப் புறப்பட்டு விட்டான்.





நாட்டைத்துறந்து கடுந்தவம் இருந்து பிறவிப் பெருங்கடல் நீந்தும் வழியைத் தேடினான். தியானம் அவனுக்கு ஆறுதல் அளித்தது. தியானம் யோகநிலைக்கு இட்டுச் செல்வது. நல்ல சிந்தனைகள் ஊடாக நற்பேறைக் காண்பது. தியானத்துக்கு மனப்பக்குவம் தேவை. வைராக்கியம் தேவை. சிந்தனையைக் குழப்பும் எண்ண அலைகள் மோதும். அவற்றை வெல்லக்கூடிய மன உறுதி தேவை. அலைபாயும் மனதைக் கடிவாளமிட்டுக் கட்டுப் படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டான். அவனது பார்வை ஆழமானதாக இருந்தது. அது ஒருவகை யோகம். நல்ல எண்ணங்களை ஒருங்கிணைத்தலை யோகம் என்பார்கள். மனத்தைக் கட்டுப்படுத்தல் முக்கியமானது. நல்ல எண்ணங்களை சிந்தித்துத் திட்டமிட்டுதல் இன்னுமொரு வகையானது. அதற்கான செயல்வடிவங்களை உருவாக்கல். அவற்றைச் செயற்படுத்தும் முறை அனைத்தும் யோகம்தான். அதனை அவன் அனுபவம் செய்தான். நல்ல எண்ணங்களை அனுபவம் செய்தல் கஸ்டமானது. அதனை நினைவில் இருத்தல் என்பார்கள். யோகிகள் நினைவில் இருப்பார்கள். அதனைத் தவமென்போம். சித்தார்த்ன் பல ஆண்டுகள் தியானித்தான். தவமிருந்தான். தியானத்தின் வழியே ஞானத்தைக் கண்டான். சித்தார்த்தன் கௌதமபுத்தர் ஆனான். ‘பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும் நிட்சயம் உண்டு.’ துன்பத்தின் ஊற்றை அவதானித்தான். இன்பத்தின் வழியே துன்பம் தொடர்கிறது. ‘பிறவாமை வேண்டும்’ என்றான். துறவறத்தை வற்புறுத்தினான். பஞ்சசீலக் கொள்கையை அறிமுகம் செய்தான். கொலை, களவு, காமம், பொய், மது ஆகியவை மனதை லௌகீகத்தில் ஆழ்த்துவன. அவற்றைத்துறந்தால் வாழ்வில் பேரின்பத்தை அடையலாம் எனக் கண்டான். பௌத்த தர்மம் உருவாகியது.




பாரதத்தில் கௌதமபுத்தர் பௌத்த தர்மத்தைத் தந்தார். அவர் பிறந்த நாடு அவரது போதனைகளை ஏற்கவில்லை. வேற்று நாட்டு மக்கள் அதனை அரவணைத்தனர். அந்த தர்மத்தை ஏற்றுப் போற்றிப் பின்பற்றினர். ஆனால் அதனைப் பின்பற்றும் மக்கள் அந்தத் தர்மத்தை மறந்து விட்டனர். உடல் அழியும்தன்மையது. அது நிலையானதல்ல. இந்த உடல் உயிருக்கு அவசியமானது. உடலும் உயிரும் சேரும்போதுதான் அது வாழ்வாகிறது. பலர் ஆத்மா அழியாதது என்பார்கள். ‘ஆத்மா அழியும் தன்மையது’ என்றார் புத்தர். பௌத்தம் மறுபிறவி பற்றிப் பேசுகிறது. இதற்கிடையில் வாதிப் பிரதிவாதத் தர்க்கம். வாழும்போது நன்மைகள் செய்து வாழ்ந்தால் சுவர்க்கம் அல்லது பரிநிர்வாணம் கிட்டும் என்பது பௌத்தத்தின் முடிபு. புத்தகாயாவில் தோன்றிய பௌத்தம் புத்தரது காலத்திலேயே தளர்ந்து விட்டது. அதன் ஒருசிறு வேர் மட்டும் பாரதபூமியில் வெளியில் தெரிகிறது. அதன் கிளைகள் பாரதத்துக்கு வெளியே தழைத்து பெருவிருச்சமாக நிற்கிறது. பௌத்த தர்மத்தைத் தந்த கௌதமர் வந்த கடமையை நிறைவேற்றி விட்டு மறைந்து விட்டார். ஆனால் அந்தத் தர்மத்தைப் பின் பற்றும் மக்கள் கௌதமரின் உடலெச்சங்களை வைத்துக் கோயில் கட்டி அடிதடியில் இறங்கி ஆரவாரிக்கின்றனர்.





கௌதமபுத்தரின் கொள்கைகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அந்திம காலத்தின் விளிம்பில் புத்தார் இருந்தார். அவரது கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதையிட்டுச் சிந்தித்தார். பௌத்தத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் என ஆழ்ந்தறியும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு வேதனையைத் தரும் செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறவிருப்பதைக் கண்டார். அதனை முற்று முழுதாகப் பார்க்கும் முனைப்பில் ஈடுபட்டார்.




கௌதமர் தியானத்தில் இருக்கிறார். கௌதமிரின் தியானம் நிலைத்து நில்லாமல் அடிக்கடி கலைகிறது. அவரது மனதில் சலனம் குடிகொள்கிறது. கௌதமரின் பிரதான சீடரான ஆனந்தரின் கவனத்தை அது ஈர்க்கிறது. அவர் மெதுவாகக் கௌதமரின் பக்கம் செல்கிறார். “குருநாதா, நானும் தங்களைக் கவனிக்கின்றேன். தாங்கள் நிம்மதியற்றுத் தவிப்பதைக் காணுகிறேன். அதன் காரணத்தை அறியலாமா?. ஆனந்தர் மெதுவாகத்தான் தொடங்கினார். கௌதமனின் முகத்தில் சஞ்சலத்தின் அறிகுறிகள். நெற்றியில் கோடுகளாக நெளிகின்றன. “ஆனந்தரே சஞ்சலம் தவத்தைக் குழப்புகிறது. எனது தவமும் அதனால் ஏற்பட்ட தர்மமும் முழுப்பயனையும் விளைவிக்குமா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. கூரிய வாளை வல்லவனிடம் கொடுத்தால் அவன் மக்களுக்குக் காவலைக் கொடுப்பான். ஆனால் அதே வாள் கொலைஞனிடம் கிடைத்தால்? நினைக்க உடல் நடுங்குகிறது. ஆயிரம் வருடங்களின்பின் புத்த தர்மத்தின் பெயரால் எத்தனை அட்டூழியங்கள் நடைபெறும் என்பதனை நானறிவேன். இதற்காகவா இவ்வளவு காலமும் தவமிருந்தேன்.”? கௌதமரின் கண்கள் கலங்கியிருக்க வேண்டும். “குருதேவா, இப்போது என்ன நடந்துவிட்டது. நீங்கள் இப்படிக் கலங்கலாமா”? ஆனந்தர் கௌதமரைத் தேற்ற முற்பட்டார்.





“ஆனந்தரே ஓன்றும் நடைபெறவில்லை. ஆனால் புத்ததர்மம் மதம் பிடித்தவர்களது சொத்தாகிவிடும். பல பிரிவுகளாகிப் போய்விடும். சமயவாதங்கள் நடைபெறும். ஆளையாள் அழித்துக் கொள்ளும் மனிதர்கள் புத்ததர்மத்தைத் தம் கைகளில் எடுத்துக் கொள்வார்கள். இந்தக் கௌதம புத்தரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு பாதகச் செயல்களில் ஈடுபடுவார்கள். பஞ்சசீலக் கொள்கைகள் ஏட்டில் உறங்கும்”;. மனவேதனையோடு கௌதமர் கூறினார். ஆனந்தர் பிரமித்துப் போனார். அதனைப் போதிமாதவன் அறிந்து கொண்டான். “ஆனந்தரே இப்படி வந்து அமருங்கள்.” கௌதமர் அன்புக் கட்டளை இட்டார்.




கௌதமர் கல்லிருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனந்தரும் கௌதமர் கூறியவாறே அவர் முன்னே இருந்த கல்லிருக்கையில் அமர்ந்து கொண்டார். அரைவிழி மூடியவாறு ஆனந்தரின் நெற்றிப் பொட்டில் தன் பார்வையைச் செலுத்தினார். ஆனந்தரின் நெற்றிப் பொட்டுத் திரையாக விரிந்தது. ஆனந்தர் உடல் நடுங்கியது. அவர் உணரத் தொடங்கினார். தமக்கேற்றவாறு புத்ததர்மம் மாற்றப் படுவதைக் கண்டார். தேரர்களிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றி பிளவு படுவதைக் கண்டார். அரசர்களைத் தம்வயப்படுத்தி ஆட்சியில் பங்கு கொள்வதைக் கண்டார். பிறசமயங்களைப் புறந்தள்ளிவைப்பதை அவதானித்தார். “குருதேவா..” ஆனந்தரின் வாயிலிருந்து சொற்கள் பறந்தன. “பதறாதீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்.” கௌதமரின் ஆணை அவரைக் கட்டுப்படுத்தியது. ஆனந்தர் அமைதியானார். ஆனால் அவரது சிந்தனையில் அது தெளிவாகத் தெரிந்தது.



இரவு நேரமது. வானம் நட்சத்திரங்களால் தன்னை அலங்கரித்துப் பார்க்கிறது. கல்லும், சிமென்தும் மணலும், சிறு இரும்புக் கம்பிகளும், வண்ணங்களும் குவிந்து கிடக்கின்றன. பலமனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து வேலை செய்கிறார்கள். இடையிடையே சில தலைவர்கள் கார்களில் வந்து போகிறார்கள். அழகான பல சிலைகள் உருவாகின்றன. அவ்வளவும் கௌதமரின் உருவங்கள். இவ்வளவு சிலைகளும் எதற்காக? என்ன செய்யப் போகிறார்கள்? ஆனந்தரின் மனதினிலே ஆச்சரியக் கேள்விக் குறிகள். இரவிரவாக சிலைகளை வாகனங்களில் ஏற்றிப் பல இடங்களில் இறக்கி அங்கு நிலைநிறுத்துகிறார்கள்.




சூரியக் கதிர்கள் மேகங்களைத் தூசிதட்டிச் சோடிக்கின்றன. இரவுமுழுவதும் ஒளியூட்டிக் களைத்த நட்சத்திரக் கூட்டம் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டன. காலையாகிறது மக்கள் கூட்டம் நிறைகிறது. புத்தம் புதிய புத்தரின் சிலைகள் அமைதியைக் கலைக்கின்றன. ஆரவாரம் தொடங்குகிறது. எப்படி இந்த இடத்தில் புத்தரது சிலை வரலாம்.? “அழுக்கும் துர்நாற்றமும் வீசும் இடத்தில் புத்தபகவானின் சிலை இருப்பதா”? மக்களில் சிலர் கேள்விகளைக் கேட்கிறார்கள். “நாங்கள் பெரும்பான்மையினர். இது பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் சிலைகளை எங்கும் வைப்போம்”. பதில்கள் ஓங்கி ஒலிக்கின்றன. பிரச்சினை தீப்பற்றிக் கொண்டு தொடர்கிறது. அந்தப் பிரச்சினை மத்தியிலும் இளம்வட்டங்கள் உலா வருகின்றார்கள். அவர்களது உலகம் தனிஉலகம். அற்புதமான கனவுகளைக் காணும் பருவம். பகல்கனவில் மூழ்கி எதிர்காலத்திற்கான அத்திவாரங்களை நிறுவித் திரியும் வாலிபப் பருவம். பல்கலைக்கழகத்தின் பட்டாம்பூச்சிகள். மாலையில் கூட்டமாய் இயற்கையை ரசித்து இளமைத்துடிப்புக்களை அள்ளி வீசியபடி சைக்கிள்களில் ஒரு கூட்டம் வருகிறது. கடற்கரையில் கூடி கதையளந்து மகிழ்வது அவர்களது பொழுதுபோக்கு. அவர்களை அந்நாட்டுக் காவல்படையினர் சுற்றி வளைக்கிறனர். அந்த இளம்வட்டங்களின்மேல் பொறாமையா? இனக்குரோதமா? அடித்து வதைத்துப் பந்தாடுகிறனர். படையினருக்கு மதுவின் மயக்கம். சித்தசுவாதினமற்றவர்களாகப் பயங்கரமாகச் செயற்படுகின்றார்கள். அவர்களின் கைகளில் துப்பாக்கிகள். துப்பாக்கிகள் தீப்பிளம்போடு சீறுகின்றன. அந்த இளசுகளின் கனவுகள் காற்றில் பறக்கின்றன. இளசுகளின் உடல்களில் இருந்து இரத்தம் நிலத்தில் பரவுகிறது. உடல் சின்னாபின்னமாகிச் சிதறிக்கிடக்கின்றன. ‘பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசும்போது படையினர் திருப்பித் தாக்கியதில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.’ அரச வானொலி செய்தி ஒலிபரப்புகிறது. மக்கள் கூட்டம் கண்ணீர் வடித்துக் கதறுகின்றனர். ஆனந்தரின் உடலில் அசைவு தெரிகிறது. அவரின் நெற்றி சுருங்கி விரிகிறது. கௌதமரின் கட்டளையை அவரால் மீறமுடியவில்லை. மீண்டும் அப்படியே இருக்கிறார். காட்சி தொடர்கிறது.




சித்திரைப் புத்தாண்டு இனங்களை இணைக்கும் நன்நாள். சித்திரைப்புத்தாண்டைக் கொண்டாடும் ஆர்வம் மக்களுக்கு. தேவயான பொருட்களோடு புத்தாடைகளை வாங்கவும் கடைத்தெருக்களில் நுழைகிறார்கள். குண்டு வெடிப்புக்கள் அமைதியைக் குலைக்கிறது. எங்கும் புகைமண்டலம். இதற்காகவே காத்திருந்தவர்களைப் போல் காடையர் கும்பல் திபுதிபு என்று புறப்படுகிறது. வுhள்வெட்டுக்கள் விழுகின்றன. அவல ஒலி ஆக்கிரமிக்கிறது. கற்பழிப்புக்கள், ஒரு இனத்தின் அழிவில் இன்னுமோர் இனம் சந்தோசிக்கிறது. மிலேச்சத்தனங்கள் தாண்டவமாடுகின்றன. அடிதடியில் தொடங்கி துப்பாக்கிக் குண்டுகள் மனித இரத்தத்தை ருசிக்கின்றன. உயிர்கள் பறிபோகின்றன. உடலங்கள் உருளுகின்றன. ஊரடங்குச் சட்டம் அமுலாகிறது. தளர்கிறது. இக்காட்சிளை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனந்தரினால் பொறுக்க முடியவில்லை. “குருதேவா போதும். என்னால் தாங்க இயலாது.” அவர் தளர்ந்து நடுங்கினார். கௌதமரின் விழிகள் அப்படியே இருந்தன. கவலைகளைப் போக்கி அமைதியைச் சாதித்த போதிமாதவனின் விழிகளிலும் கண்ணீர்த் திவலைகள் எட்டிப் பார்த்தன.




“ஆனந்தரே, சங்கம யுகத்தில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும். யுகம் அழியும். மாற்றம் வரும். மாற்றம் தவிர்க்க முடியாததொன்று. புதுயுகம் பிறக்கும். மாற்றத்தை யாரும் தடுக்க முடியாது. தவிர்க்கவும் முடியாது. புதியது வரும். பழையதாகப் போகும். மீண்டும் புதியது வரும். ஒன்றன்பின் ஒன்றாக யாவும் நிகழும். இங்கு எது சரி? எது தவறு என்று தீர்மானிக்க முடியாது. எது நடக்கவேண்டும் என்று நியதி இருக்கின்றதோ அது நடந்தே தீரும். இது தவிர்க்க முடியாத நியதி. சற்று அமைதியாக இருந்து பாருங்கள். இன்னும் அதிசயத்தைக் காண்பீர்கள்”. ஆனந்தரினால் போதிமாதவனின் அன்புக்கட்டளையை மீறமுடியவில்லை. அப்படியே அமைதியானார். அவரது நெற்றிப் பொட்டில் புத்தரின் அரைவிழிப் பார்வை தொடுகிறது. பார்வை பட்டதும் காட்சி விரிகிறது. கற்பனையா இது? ஆனந்தர் அதிசயித்துப் பிரமிக்கிறார். யாவும் தத்ரூபமாகத் தெரிகிறது.




பாராளுமன்றத் தேர்தல் திருவிழாக்கள் நடக்கின்றன. பல தேர்தல் மேடைகளில் அரசியல் பிரச்சாரங்கள் நடக்கின்றன. கனவுகாண்பது போல் காட்சிகள் மாறிமாறித் தோன்றுகின்றன. மேடைகளில் அரசியல்வாதிகளும்,தேரர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள். தங்களது நிலையை மறந்து, துறவறத்தை மறந்து ஏதேதோ பேசுகிறார்கள். ஆனந்தரின் கைகள் அவரை அறியாமலேயே காதுகளை இறுக்கி பொத்துகின்றன. அவர்களது ஆவேசமான பேச்சுக்கள் அசிங்கமானவை. இங்கே செவிப்பொறிக்கு வேலையில்லை. செவிப்புலனுக்கே வேலை. புலனூடாகத் தேரர்களது வாதப்பிரதிவாதங்கள் புகுந்து ஆனந்தரை ஆட்டிப்படைக்கின்றன. மன்னர் ஆட்சி ஏகபோகமானது. தனியொருவரது விருப்பு வெறுப்பு நிறைவேற்றப் படுகிறது. அது ஒரு வகையில் நன்மை தரக்கூடியது. அது வேண்டாம். மக்கள் ஆட்சிவேண்டும். மக்களுக்காக, மக்களே மக்களால் ஆளுகின்ற முறைதான் மக்களாட்சி. ஒருவகையில் மக்களாட்சி முறையும் மறைமுகமான மன்னர் ஆட்சிமுறைதான். வெற்றி பெற்றதும் அவர் ஒருதொகுதியின் வெற்றி பெற்ற மன்னர்தானே. அவரது ஆட்சி நடக்கும். ஏகபோகமானதாக இருக்கும். அதனால் கட்சிகளை அமைத்து வேட்பாளர்களாக பௌத்த துறவிகள் நிற்கிறார்கள். பிரசாரத்தில் இறங்குகிறார்கள். வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். நாடாள்வதற்காகப் புறப்பட்டிருந்தார்கள். வத்திக்கான் தேர்தல் முறையும் புலனாகிறது. உலகப் பற்றைத் துறந்து திருவோடு ஏந்தி இரந்துண்டு பிறவிப் பெருங்கடலை நீக்க அறிவுரைகூறப் புறப்பட்ட துறவிகள் மஞ்சள் காவியுடையில் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.




பாராளுமன்ற விதிகளின்படி சபாநாயகர் சபையினுள் வருகிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும். இது வழமை. துறவிகள் எல்லாம் துறந்தவர்கள். மரியாதையையும், சம்பிரதாயங்களையும் துறந்தவர்கள். இருக்கையில் அப்படியே இருக்கிறார்கள். வாக்கு வாதங்கள். தொடர்கின்றன. மசோதாக்கள் வாசிக்கப் படுகின்றன. செங்கோலை அகற்றச் சிலர் முனைகிறார்கள். சிலர் அதனைத் தடுக்கிறார்கள். தேரர்களின் காவியுடை இழுபடுகிறது. இழுபறியில் ஆளையாள் தள்ளி விழுத்துகின்றனர். அடியுதை பரிமாறப் படுகின்றன. பாராளுமன்றம் மக்களின் ஆள்பதியுரிமையைக் காக்கும் புனிதமான இடம். அங்கு அடாவடித்தனம் தாண்டவமாடுகிறது. ஆனந்தரின் மனம் இறுக்கமடைகிறது. அவரால் தொடர்ந்து அமைதிகாக்க முடியவில்லை. கண்களை மெதுவாகத் திறக்கிறார்.




என்ன அதிசயம். அங்கே புத்தபகவானைக் காணவில்லை. அவரது திருவுடலைக் காணவில்லை. ஆனந்தரின் செவிகளில் கணீரென ஒலி பாய்கிறது. ‘இன்னுமொருமுறை மனிதப் பிறவி வேண்டாம். மனிதர்களைத் திருத்தவே முடியாது.’ ஆனந்தரது உடல் சிலையாக மாறுகிறது. அவரது சிலைதான் காட்சியாகிறது. சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. அந்தச் சிலை தாறுமாறாக வெடித்து விரிவடைகிறது. வெடிப்புக்கள் ஊடாக இரத்தவெள்ளம் வடிகிறது. கல்லும், மணலும், சிமெந்தும் கரைந்து இரும்புக்கம்பிகள் தலைகாட்டுகின்றன. ஆனந்தரின் சிலை வெடித்துச் சிதறித் துகளாகிப் போகிறது.



யாவும் கற்பனை.

Read more...

Monday, December 14, 2009

சௌந்தரம்மா

அந்தப் பத்திரிகையினைக் கையில் எடுத்துக் கொண்டு மூக்குக் கண்ணாடிக் கூட்டைத் தேடினேன். வயது போனால் நினைவுகளும் மறந்து போகுது. வைத்த இடம் நினைவில் இல்லை. “சுலக்சி’ பேரக்குழந்தைக்குக் குரல் கொடுத்தேன். முதுமை பொல்லாத கொடுமையை அனுபவிக்கச் செய்கிறது. மிகவும் அவதானமாகச் செயற்பட்டால் தப்பித்துக் கொள்ளலாம்.. அல்லது சங்கடத்தில் சிக்கிக் கட்டிலில் சாய்த்து விடும். எப்படித்தான் உடல் முதுமையடைந்தாலும் இந்த உள்ளம் மட்டும் என்றும் இளமையாகவே இருக்கிறது. இருந்து துள்ளுகிறது. அதன் வேகத்துக்கு உடலால் ஈடுகொடுக்க முடியவில்லை. என்றும் பசுமையையே விரும்புகிறது. எனது பேரக்குழந்தை சிரிப்போடு கண்ணாடியைத் தந்தாள். கண்ணாடியை முகத்தில் பொருத்திக் கொண்டு பத்திரிகையை விரித்துப் படிக்கிறேன். பக்கங்கள் புரண்டன. ஒரு இடத்தில் என் கண்கள் நிலைக்குத்தி நின்றன. நன்றாக விழிகளைத் திறந்து கண்ணாடியை மேலும் கீழும் அசைத்துப் பார்க்கிறேன். அந்தப் படம் என்னை ஆட்டியசைத்து விட்டது. அது சௌந்தரம்மாவின் படம். படத்தின் கீழ் “அம்மம்மா உங்கள் நினைவு எங்கள் மனதில் நிறைந்திருக்கும்.” பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் நினைவுகூர்ந்திருந்தார்கள். உள்ளம் உளைந்து பழைய நினவுகளில் மூழ்கி மூச்சிரைத்து நிமிர்கிறது. சுமார் அறுபத்தைந்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நினைவுகள் ஒளிந்து ஓடிப்பிடித்து எட்டிப்பாரத்து அலைமோத வைக்கிறது. அந்த நினைவுகளின் ஆதர்ஷண சக்தியால் உந்தப் பட்டு நாடி நரம்புகள் விறுவிறுத்து பெருமூச்சாகி நெஞ்சாங்கூட்டை அமுக்கி உயர்த்தி எம்பிப் பறந்தது.




ஒரு பொருள் நமது பக்கத்தில் இருக்குமட்டும் அதன் அருமை பெருமைகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இல்லாதபோது அதன் அருமை புரிகிறது. நிலையில்லாத மனிதவாழ்வில் எத்தனை தளம்பல்கள். கடலில் காற்று வீசி அலைகளை எழுப்பி கரையை உடைப்பது போல் வாழ்கையிலும் துன்பங்களும். துயரங்களும். இழப்புக்களும் வீசி சந்தித்துக் காலத்தோடு கரைந்து போகின்றன. பலரோடு சேர்ந்திருந்து பழகி பிரிந்தபின்தான் அவர்களது அருமை பெருமைகள் மனதில் குந்தியிருந்து விளையாட்டுகளைக் காட்டும். அவர்களோடு கழித்த நாட்கள் நினைவுச் சுழியில் சிக்கிச் சுழலும். சௌந்தரம்மாவின் நினைவலைகள் மனக்கடலை துளாவி எண்ணக்குமிழிகளை ஊதி எனக்குப் பூச்சாண்டி காட்டியது. சௌந்தரம்மாவின் படத்தைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவவின் இளமைக்கால உருவம் உருண்டு திரண்டு மனக் கண்முன் நின்றது. எத்தனை அழகு. சின்னவயதிலேயே “அம்மம்மா நீங்க நல்ல வடிவு. சௌந்தரம் என்றால் அழகு என்று வகுப்பில சொல்லித்தந்தவங்க” என்று சொன்னேன். அவவின் அந்தச்சிரிப்பு அற்புதமானது. இரு கன்னங்களிலும் குழிகள் விழ ஒரு புன்னகை எறிந்த காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த உருவத்தையும் பத்திரிகையில் உள்ள படத்தையும் உற்று நோக்கினேன். அன்றைய அழகிய உருவம் படத்தில் இல்லை. மாற்றம் என்பது இதுதானா? கட்டுடல் தளர்ந்து தோல்சுருங்கி கண்கள் குழிவிழுந்து புலனைந்தும் பொறிகலங்கி…. நிலைதடுமாறி… சே… என்ன பிறவியிது? இன்றிருக்கும் உடல் நாளைக்கு மாறியிருக்கும். அதுதானே நம்மவர்கள் உருமாறிக்கொண்டு செல்லும் உடலுக்கு மெய்யென்று சொன்னார்கள். எனது கண்களில் கண்ணீர் குளங்கட்டி உடைந்து நெஞ்சுச் சட்டையை ஈரமாக்கியது.




எனக்குப் பசுமையான நினைவாக அது பதிந்து விட்டிருந்தது. அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். ஒருநாள் எங்கள் வீடு அதிர்ந்து கொண்டிருந்தது. “எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிசம் இருக்கக்கூடாது. வெளிக்கிடுங்க” அப்பாவின் குரல் ஆவேசமாகப் பறந்தது. வீட்டில் இருந்த சாமான்கள் வெளியில் வீசப்படுவதை அவதானித்தேன். இவர்களுக்கு என்ன நடந்து விட்டது? நானும் தம்பியும் சுண்டெலிகளாக நடுங்கிக் கொண்டிருந்தோம். அப்பா திடீரென வெளியில் போனார். போனது போல் வீச்சாக வந்தார். மூட்டை முடிச்சுக்கள் தயாராகின. இரண்டு மூன்று சாக்குகள் நிரம்பின. எங்கள் உடமைகள் அதனுள் தஞ்சமாகின. அவற்றை அப்பாவின் தலை சுமந்தன. இரண்டு மூன்று முறை அப்பாவின் தலையில் அவை ஏறின. வெளியில் போய்வந்தார். “ சரி வாங்க” என்றார். புறப்பட்டோம். இப்போது அப்பா முன்னே விறுவிறு என்று நடந்தார். அம்மா அழுது கொண்டு பின் தொடந்தார். சின்னஞ்சிறிசுகள் நாங்கள். சின்னச் சின்னச் சாமான்களைக் கைகளில் எடுத்து அவர்களின் பின் நடந்தோம். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன நடந்தது? ஏன் போகிறோம்.? ஓன்றும் புரியவில்லை. “அவர்ர அட்டகாசம் அவருக்குத்தான் பெரிசு. என்னட்டையும் காட்ட வந்திட்டார். நான் பொறுக்க மாட்டன்” அப்பா கோபாவேசமாக இருப்பது புரிந்தது. “அவன் தெரிஞ்சா செய்தவன். இதற்கெல்லாம் போய்…” அம்மா முடிக்கல்ல. “வாயப் பொத்திற்று வா.” அப்பா கொதித்தார். அம்மா ஒன்றும் பேசவில்லை. மாமாவைத்தான் குறிப்பிடுகிறார் என்பது மட்டும் புரிந்தது.





எங்கள் மாமா மயில்வாகனம். மிகவும் பொறுமைசாலி. எங்கள் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர். ஆனால் அநீதியென்றால் இராமனின் கோதண்டமாக மாறிவிடுவார். அனியாயத்தைத் தட்டிக் கேட்டாராம். அதனை அப்பா “உனக்கேன் இந்த வீண்வம்பு” என்று கேட்கப் போய் வில்லங்கமாகி இந்த நிலை வந்ததாக உணர்ந்து கொண்டோம்.. “என்னண்டாலும் நீங்க பொறுமையாக இருந்திருக்கலாம்.” அம்மாவின் குரல் தளதளத்தது. “நீ வாயை மூடிக்கொண்டு வா. எனக்கு மானம்தான் முக்கியம்.” அப்பா கடுகடுத்தது நினைவிருக்கிறது. “அப்பா நாங்க எங்க போறம்.” தம்பி இடையில் குறுக்கிட்டான். “டேய்.. சின்னவன் நம்மட சௌந்தரம்மா வீட்டுக்குப் போறம்.”. அப்பாவின் குரல் அந்தக் கும்மிருட்டில் ஒலித்தது. “டேய் அண்ணா நம்மட சௌந்தரம்மா வீட்டுக்குத்தான் போறம்.. எனக்குச் சந்தோசமாக இருக்குது.” தம்பி குதுகலத்துடன் கூறினான். என் ஆச்சி, அப்புவை விட்டுவர எனக்கு மனமில்லை. மனம் இடம் கொடுக்கவில்லை. எனக்கு அழுகை வந்தது. அவர்கள் பின்னால் நடந்தேன். அன்று பகல் தொடக்கம் சாப்பாடு ஒன்றுமில்லை. அதோ குப்பி விளக்கொளி தெரிகிறது. சௌந்தரம்மா வாசலில் குப்பி விளக்கோடு காத்திருந்தார். பக்கத்தில் முத்துக்குமார் ஐயா நின்றிருந்தார். எங்களைக் கண்டதும் “போய் கைகால் கழுவி வாங்க சாப்பிடுவம்.” அன்பும் ஆதரவும் கலந்து கட்டளையிட்டார்கள்;. சௌந்தரம்மாவின் பார்வை என்னை வசீகரித்து விட்டது. நெத்தலி மீன் தீயலுடன் அவர் தந்த சாப்பாடு இன்னும் ருசிக்கிறது.





எங்கள் குடும்பம் சௌந்தரம்மா வீட்டில் குடிவந்து பல நாட்களாகி விட்டன. மிகவும் அந்நியோன்யமாகி விட்டோம். அந்த வீடு ஆலங்கேணியில் விநாயகர் ஆலயத்துக்கு முன்வாசல் பக்கமாக மேற்குத் திசையில் செல்லும் தெருவில் இருந்தது. தெரு உப்புநீர் சிற்றாறு ஊர்ந்து வரும் பக்கமாக ஓடி ஒட்டி உறவாடும். உப்புநீர் பரவி சிற்றாற்றில் ஓடும். சின்னச்சின்ன மீன்களும் சேர்ந்து ஓடும். அந்த ஓட்டத்தில் மெல்லிய நுரை தோன்றி கரையில் உடையும். கண்ணா மரங்களில் பறவைகளும், சிள்வண்டும் இசையெழுப்பிப் பாடும். கரையை ஒட்டினாற்போல் தென்னைகள் தலையவிழ்ந்து ஆடும். கூடவே பனைகள் ஒலியெழுப்பிக் கலகலக்கும். அவற்றின் ஊடாகப் பார்த்;தால் சமாவைத்ததீவு தெரியும். அப்பால் வைரமுத்தப்பாவின் சல்லிக்களப்புத் தோட்டம் தெரியும். பூவரசந்தீவில் நல்லையரின் தோட்டம், அப்பால் வண்ணான்வயல் விரிந்து கிடக்கும். அங்கு செல்லனின் துணிகாயவைக்கும் கொடிகள் அசையும். ஒரு அற்புதமான காட்சி பரந்து இருந்தது. சௌந்தரம்மாவின் வீடு ஒரு பழங்காலத்து பெரிய வீடு. வீட்டை ஒட்டினாற்போல் முன்புறமாக ஒரு பெரிய மண்டபம். அந்த மண்டபம் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. முன் அறை யார் வந்தாலும் அமர்ந்திருந்து பேசுவதற்காகப் பயன் படுத்தப்பட்டது. அதுதான் கூத்துப் பழகும் களரியாக விளங்கியது. அங்கு ஒரு சாய்மனைக் கதிரை, ஒரு பலகை பரப்பிய கட்டில், இரண்டு நீண்ட வாங்குகள், சில பாய்கள் இருந்தன. மாலையானதும் அந்த மண்டபம் களை கட்டும். சமாவைத்ததீவில் இருந்து வடிவேலர், பொன்னையர், குமாரசாமி என்று ஒரு பட்டாளமே வரும். நடுச்சாமம் வரை ஆட்டம் பாட்டம் நடக்கும். அண்ணாவி தாமோதரத்தாரும், பத்தினியரும் சேர்ந்து கூத்துப் பழக்குவார்கள். ஊரிளைஞர்கள் கூடியிருந்து கூத்தாடுவார்கள். சார்மனைக் கதிரையில் முத்துக்குமார் கால்மேல் கால்போட்டிருந்து ரசிப்பார். சௌந்தரம்மா பக்கத்தில் இருந்து மெய்மறந்து ரசிப்பார். நாங்கள் தூங்கி விழுந்து ரசிப்போம். சிலவேளை அழுதுமிருக்கிறோம்.




இரண்டாவது அறை களஞ்சிய அறையாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த இரண்டாம் அறை அற்புதமானது. அறையினுள் நெற்பட்டறை இருக்கும். நெல்லைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் முறை அது. வைக்கோலை இதமாக வைத்து, வைக்கோல் புரியை வளையமாகச் சுற்றி அதனுள் நெல்லினைச் சொரிந்து பட்டறை காட்சிதரும். பட்டறை அந்த அறையின் மூலைகளை மட்டும் விட்டு வைத்திருக்கும். அவ்வளவு அகலமானது. பட்டறையின் உயரம் அந்த அறையின் முகட்டைத் தொட்டு நிற்கும். பட்டறை நிறைந்து நெல் குவிந்திருக்கும். பட்டறைமேல் ஏறிப்பார்க்க ஆசைதான். சௌந்தரம்மா ஏசுவார் என்ற பயம் இருந்தது. ‘ஒருநாளைக்கு ஏறிப்பார்க்க வேணும்’. மனதில் அந்த எண்ணம் குடிகொண்டு விட்டது. மண்டபத்தை ஒட்டினாற்போல் அடுக்களை இருந்தது. அடுக்களை எப்பொழுதும் தூய்மையாக இருக்கும். சாணமும், களிமண்ணும் சேர்ந்த கலவையால் மெழுகிச் சில்லுக்காயினால் அழுத்தித் தேய்த்துப் பளபளவென்று இருக்கும். வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்கும். பானை சட்டி சரிந்து விழாதிருக்க களிமண்ணினாலான மேடையில் திருகணிகள் செய்யப்பட்டிருக்கும். அத்திருகணிகளில் சமையற்பாத்திரங்கள் அழகாக அடுக்கி இருக்கும். சமையல் முடிந்ததும் வரிசையில் வைக்கப்படும். சோறு சமைத்து முடிந்ததும் சோற்றுப்பானையை இறக்கி பானையின் வெளிப்புறத்தைக் கழுவி தனது மூன்று விரல்களால் திருநீற்றை அள்ளி பானையின் மூன்று பக்கம் சாத்துவார். “அம்மம்மா சோற்றுப் பானையைக் கழுவி ஏன் திருநீறு போட்டனீங்கள்.” கேட்டுவிட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தேன். “ஓ..அதுவா”? “அது சோற்றுப் பானைக்குக் கொடுக்கும் மரியாதை. அருவமும் உருவமும் இல்லாத சிவனின் திருவுருவமாகக் காட்சி தருவது சோற்றுப்பானை. இறைவன் நமக்குப் படி அளக்கிறான். அவன் அளந்து தந்த அமுதம் பானையில் இருக்கு. அதற்கு மரியாதை செய்யவேணும். அதனால் அவனை நினைவில் கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இதெல்லாம்” என்பார். அப்போதெல்லாம் எனக்கு அதன் பொருள் தெரியாது. பெரியவனாக முதிர்ச்சியடைந்த பின்னர்தான் அதன் பொருளும் நமது பண்பாடும் புரிந்தது.




அந்தப் பண்பாடும் வழக்கமும் இன்று நமது பெண்களிடம் இல்லாது போய்விட்டது. அதனையிட்டு எண்ணும்போது கவலைதான். உணவு உண்டபின் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து அடுக்கி வைத்துவிட்டு உணவு உண்ட இடத்தினைப் பெருக்கி அடுக்களையினை மூடியபின்தான் சௌந்தரம்மா ஓய்வாக இருப்பார். மூன்று வேளையும் இப்படியேதான் செய்வார். “உண்டபின் சுத்தம் செய்யாது விட்டால், திண்ட இடம் நம்மைத் திட்டும்” என்பார். இரவில் இரண்டு பேர் உண்ணக்கூடிய உணவு பானையில் இருக்கும். யாராவது வீட்டுக்கு வந்து விட்டால் ‘பசி தீர்க்க’ உணவளிக்கும் இல்லத்தரசி அவர். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் யாராவது வீடு தேடி வருபவர்களைச் சாப்பிடுங்கள் என்று கொடுத்து மகிழும் பண்பை அவர் கொண்டிருந்தார்.




ஒருநாள் பள்ளிவிட்டு வருகிறேன். கோழி கொக்கொக் எனக் கொக்கரித்துக் கொண்டிருந்தது. சௌந்தரம்மா எனக்காகக் காத்திருந்ததை உணர்ந்தேன். “டேய் அருள்… நம்மட கோழி பட்டறையில் முட்டை விட்டிருக்கு. முதலில் சாப்பிடு. பிறகு பட்டறையில் ஏறி முட்டையை எடுத்துவா.” சௌந்தரம்மா கட்டளையிட்டார். பட்டறையில் ஏறக் காத்திருந்த எனக்குச் சந்தோசம் வீட்டின் முகட்டில் குடிகொண்டு இருந்தது. விண்வெளியில் விண்கலத்தில் தாவி ஏறுவது போன்ற பிரமை. புத்தகங்கள் எங்கு வீசப்பட்டதென்று தெரியாது. பட்டறைப் புரிகளில் காலை வைத்துப் பற்றிப்பிடித்துத் தாவியேறிவிட்டேன். ”டேய் கவனம்.. சாப்பிட்டுவிட்டு ஏறிப்பார் என்றுதானே சொன்னனான். அதற்குள் ஏன் ஏறினநீ.? விழுந்திருவாய். கவனம்.” சத்தமிட்டவாறு நான் ஏறுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பட்டறையில் உலாவந்தேன். எனக்குச் சந்திரனில் நடக்கிற அனுபவம் தட்டியது. வீட்டின் முகட்டில் பட்டறை முட்டியிருந்தது. பட்டறை நிறைந்து நெல் சிரித்தது. என்னைக் கண்டதும் சேவலொன்று அங்கிருந்து சத்தமிட்டுப் பறந்தோடியது. “அம்மம்மா இங்கயிருந்து சாவல்தான் பறந்தோடுது. முட்டையக் காணல்ல” “நல்லாப் பார்” அவவிடமிருந்து சத்தம் வந்தது. வைக்கோலை நீவிப் பார்க்கிறேன். முட்டைகள் என்னை முழுசிப் பார்த்தன. தங்கச் சுரங்கத்தில் வெண்கற்களாக முட்டைகள். ஓன்று இரண்டு …எத்தனை.. ஒரு பத்து இருக்குமா? சந்தோசத்தால் “அம்மம்மா ஒரு பெட்டி தாங்க… முட்டை கனக்கக் கிடக்கு.” சத்தமிட்டேன். “இந்தக் கோழிக்கு இடமில்லையென்டா அங்க போய் முட்டை விடுது.”? கோழிக்கு ஒருபாட்டம் ஏச்சு விழுந்தது. சௌந்தரம்மாவுக்குக் கோபம் வருவதில்லை. வந்தால் ஒரே புறுபுறுப்புத்தான். முட்டைகளைப் பத்திரமாக் கொடுத்தேன். எனது தலையைத் தொட்டுத் தடவி” கெட்டிக்காரன்” என்றார். என் உச்சி குளிர்ந்தது.




வளவின் மூலையில் பெரியதொரு புளியமரம். அந்த மரம் நிறைந்து பறவைகள் கூச்சலிடும். என் கையில் சுண்டுவில் இருக்கும். சட்டைப்பை நிறைய களிமண்ணைக் குழைத்து உருண்டையாகச் செய்து வெயிலில் காயவைத்த உருண்டைக் களிக்கற்கள் இருக்கும். நானும் ஒருகுருவியையாவது அடிக்கலாம் என்று முயன்றுதான் பார்த்தேன். அது முடியாது போயிற்று. “டேய் பாவம்டா குருவி நமக்கு என்ன தீங்கு செய்யுது.? அதுகளுக்கு அடிக்காத” அடிக்கடி புத்திமதி சௌந்தரம்மா சொல்லுவா. புளியங்கிளையில் தாவியேறித் தொங்குவது சுகமாயிருக்கும். கிளை முறியாது வளைந்து கொடுக்கும். “மரத்தில ஏறி விழுந்து கையக்கால முறிச்சுப் போடாத” புறுபுறுப்புத் தொடங்கும். காலையில் புளியம்பூ முற்றமெல்லாம் சொரிந்து கிடக்கும்.. இலையும், பூவும். பிஞ்சும் மண்ணோடு சேர்ந்து அழகூட்டும். அவற்றைக் கொஞ்சநேரம் பார்த்து ரசிப்பார். பிறகு அவற்றைக் கூட்டிப் பெருக்கி அள்ளி குழியில் போடுவார்.. “என்ன அழகான பூக்கள். கொத்துக் கொத்தாய். அங்க பார். பிஞ்சு தொங்குது.” அவவுக்கு எல்லாவற்றிலும் ஒரு ரசனை இருந்தது. சௌந்தரம்மா பெயருக்கேற்றவாறு தங்கத்தின் நிறத்தில் யொலிப்பார். எந்த நேரமும் ஒரு புன்னகை அவரது இதழ்களில் நெளிந்து கொண்டே இருக்கும். அதிகாலை தலைக்கோழி கூவுமுன்னே எழுந்து குளித்து வேலைகளை முடித்து, சோற்று முடிச்சையும் கட்டி வைத்திருப்பார். முத்துக்குமார் ஐயா கண்டற்காடு வயல்நோக்கிப் புறப்பட்டு விடுவார். அவர் போவதையே பார்த்திருப்பார். அவரோடு அயல்கிராமத்து வயற்காரர்களும் சேர்ந்து கதையளந்து செல்வார்கள். நடையில் செல்வார்கள். அல்லது மாட்டு வண்டியில் செல்வார்கள்.




கண்டற்காட்டின் நிலப்பரப்பு, பெட்டைக்குளம், வைராவெளி, ஊர்க்குளம் என விரிந்து கிடக்கும். கணவர் வரும்வரை பம்பரமாய்ச் சுழன்று வீட்டு வேலைகளைக் கவனிப்பார். முத்துக்குமாரின் அண்ணன் செல்லையா நல்லாச் சாத்திரம் சொல்வார். “ பிள்ள சௌந்தரம்.. நீ இருந்து பார்….இவன் அருளன் நல்ல ராச உத்தியோகத்தில இருப்பான்.
“ அவன் படிக்கிற படிப்புக்கு எங்கட மாட்டத்தான் மேய்ப்பான்” எனது அம்மா சொல்லுவா. “அதையிப்பவும் செய்யிறான்தானே. நீங்க பாருங்க. .இந்தச் செல்லையாச் சாத்திரி சொன்னால் சொன்னபடி நடக்கும்.” செல்லையர் சொல்லிப்போட்டு நடையைக் கட்டினார். அவர் பெரிய புள்ளகுட்டிக்காரர். அவரது மனைவி இறந்ததும் தனிக்கட்டையாகி பிள்ளைகளைக் கவனிப்பதில் கரிசனம் காட்டினார். ஆனால் பிள்ளைகள் ‘குஞ்சியாத்தை’ என்று சௌந்தரம்மாவையே சுற்றி வந்தனர். உணவும் உறைவிடமும் கொடுத்து அவர்களை ஆதரித்தார். பற்றாக்குறைக்கு அவரது ஒன்றுவிட்ட தங்கையின் பிள்ளைகளும் வீட்டை நிரப்பியிருந்தனர். அவர்களையெல்லாம் குறைவில்லாது பார்த்துக் கொண்டார்.





சௌந்தரம்மா தனது பிள்ளைகளாகவே எல்லோரையும் நினைத்தார். பகல் உணவு பெரிய அண்டாவில் வேகும். சமையல் முடிந்ததும் தட்டுகளில் பரிமாறுவார். “என்ன வேணும்? இன்னும் கொஞ்சம் போடட்டா? போதுமா?” என்று அன்பாக உணவை கொடுப்பார். பிள்ளைகள் உண்பதைப் பார்த்து சந்தோசிக்க, ரசிக்க சௌந்தரம்மாவுக்கு நிகர் சௌந்தரம்மாதான். ஒருநாள் பாடசாலை விட்டு ஓடி வருகிறேன். அம்மாவின் சமையல் முடியவில்லை. சோற்றைத் தட்டில் போட்டேன். சௌந்தரம்மா செல்லன் கட்டாடியிடம் உடுப்புக்களைக் கணக்கிட்டு அடுக்கிக் கொண்டிருந்தார். “செல்லன், இந்தா.. சாப்பிட்டுப் போ.” தட்டை நீட்டினார். செல்லன் பணிவோடு வாங்கிச் சாப்பிடத் தொடங்கினான். “உன்ர மகன் சித்திரன் பள்ளிக்கு ஒழுங்காப் போறானா?. அவன் கெட்டிக்காரன். உன்ர தொழிலச் செய்யவிடாத. நல்லாப் படிப்பி. அவன் படித்தால் சட்டம்பியாய் வரலாம். இந்தச் சாதி சக்கட்டுக்கள் நம்மட தலைமுறையோடு அழியவேணும். தமிழருக்குள்ள ஒற்றுமையிருக்கா?. நாங்க ஒற்றுமையாக இருந்தால்தானே உரிமையோடு வாழலாம்”? அவ அப்போது கதைச்சது எனக்கு விளங்கல்ல. சௌந்தரம்மா எல்லாப் பிள்ளைகளிலும் ஏன் கரிசனை காட்டுறார். சித்திரன் என்ற சித்திரவேல் என்னோடுதான் படிக்கிறான். நாங்க ஒரே வாங்கில பக்கத்தில இருந்துதான் படித்தோம். சொந்தரம்மா சொன்னதுபோல் சித்திரவேல் இப்ப நல்லதொரு ஆசிரியராக இருக்கிறான். அவன் வண்ணார்வயலில் இருந்து பாடசாலைக்கு நடந்து வருவான். நல்ல நடைகாரன். பூவரசன்தீவக்குப் பக்கவாட்டில் வண்ணார்வயல் இருந்தது. அது குளக்கோட்டு மன்னனால் அவர்களுக்கு நிவந்தமாக வழங்கப் பட்டிருந்தது. நான் முட்டைவிடச் சுற்றும் கோழியாக நிற்கிறேன். பசி யாரைத்தான் விட்டது. ‘டேய் அருள்! இங்கே வா.’ குரல் கேட்டுத் திரும்பினேன். சௌந்தரம்மா கறியோடு நின்றார். எனது தட்டைப் பறித்து கறியைப் போட்டு தனது கையால் பிசைந்து சாப்பிடு என்று தந்ததை இன்னும் நான் மறக்கவில்லை. “இண்டைக்கு வெள்ளச் சட்டம்பியார் என்ன சொல்லித் தந்தவர்? சொல்லு பார்ப்பம்” சாப்பிடும் போது கேட்டார்.

“பக்கத்து வீட்டுச் சேவல் உங்கட வீட்டில் முட்டையிட்டால் முட்டை ஆருக்குச் சொந்தம்.” என்றார். “அதற்கு நீ என்ன பதில் சொன்னாய்?” சௌந்தரம்மா கேட்டார். “அது எங்கட சௌந்தரம்மவுக்குச் சொந்தம்” என்று சாப்பிட்டவாறே பதில் சொன்னேன். அவர் விழுந்து விழுந்து சிரித்தார். செல்லனும் சிரித்தான். அந்தச் சிரிப்பு என்னையும் சிரிக்க வைத்தது. எனக்கு விளங்கவில்லை. “ஏன் சிரிக்கிறீங்க’. கேட்டேன். “டேய் .. கிறுக்குப்பயலே .. சேவல் முட்டை விடுமா”? என்றார். எனக்குப் புரியவில்லை. “பட்டறையில் சேவல்தானே இருந்தோடியது, அதுதான் சொன்னேன்.” என்றேன்.




சௌந்தரம்மாவின் ஆணம் தனிச்சுவையானது. பாலமீன் ஆணத்தில் தேசிக்காய்ப் புளி விட்டுச் சமைப்பார். அந்த மணமும், ருசியும் இன்றும் சுவைக்கிறது. அவரது நிறத்தைப் போலவே ஆணமும் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். இப்போது சொதி என்று சொல்கிறோம் அல்லவா? அதனை ஆணம். என்றுதான் சொல்வோம். அந்தச் சொல்லை இப்பொழுது முஸ்லீம் மக்கள்தான்; பயன் படுத்துகிறார்கள். திருமணம் செய்து பலவருடங்களின்பின்தான் கணேசன் பிறந்தான். பின் புஸ்பம் பிறந்தார். “சின்ன அம்மம்மா” என்று கூறித்துள்ளினேன். புஸ்பம் பிறந்தபின்னர் சௌந்தரம்மாவின் வாழ்க்கையில் சீரும் சிறப்பும் புகுந்து கொண்டது. வயல் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. வீடு புதுபு; பொலிவு பெற்றது. முத்துக்குமார் கிண்ணியா கிராமசபைத் தேர்தலில் வென்றதும் “இதெல்லாம் நமக்குத் தேவைதானா?;. நமக்கு அரசியல் எதற்கு”? என்றார். ஆனாலும் கணவனின் வெற்றியில் சந்தோசித்தவர் அவர்தான். முத்துக்குமார் நல்ல உயரமுடையவர். நீண்ட தலைமுடியை வாரி வளைத்துக் கொண்டை கட்டுவார். எங்கள் தமிழ் கிராமங்களில் ஆண்கள் தலைமுடி வளர்த்துக் கொண்டைகட்டுவது பெருவழக்காக இருந்தது. முத்துக்குமார் தேர்தலில் வென்றபின் தனது கொண்டையை வெட்டிவிட்டார். பழங்காலத்து ராஜாக்கள்போல் தியாகராஜபாகவதரின் சாயலில் காட்சி தந்தார். அழகாகத்தான் இருந்தார். அன்று சௌந்தரம்மா விழுந்து விழுந்து சிரித்தார். அவர் தனது கணவரில் ஒரு தனி ஆளுமையை கண்டுகொண்டார்போலும்;. அவருக்கு ஆலங்கேணி பிள்ளையாரிடம் பக்தி அதிகம். நாள்தவறாமல் கோயில் வலம் வருவார். வெள்ளிதோறும் பத்தினிஅம்மன் கோயிலை வலம் வருவார். நேர்த்திக்கடன் செலுத்துவார். அந்தப்பத்தினி அம்மன் கோயில் மிகப்பழமை வாய்ந்தது. அதன் பெருமைகளை சௌந்தரம்மா அற்புதமாகச் சொல்வார். போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட வரலாற்றையும் சொல்வார். அதன் இடிபாடுகள் இன்றும் மணல்மூடிக் கிடக்கிறது.




சௌந்தரம்மாவின் குடும்பம் எங்கள் கிராமத்தில் வசதியான குடும்பந்தான். அப்போதெல்லாம் வாகனவசதி என்றால் இரட்டைமாட்டு வண்டிதான். அந்த வண்டியில்தான் கொட்டியாபுரம், தம்பலகாமம், தீனேரி, சுங்கான்குழி, மாகாமம், கற்சுனை வயல்வெளி என்று செல்வார்கள். தூரத்துப் பயணங்கள் கூடார வண்டிகளில்தான் தொடரும். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் திருவிழா தொடங்கினால்தான் மாட்டு வண்டிப் பயணத்தின் மகிமை தெரியும். வண்டிற் சவாரி தூள்பறக்கும். ஆலங்கேணிக்கும் தம்பலகாமத்துக்கும் இடையில் சூரன்கல் என்ற இடம் உள்ளது. சூரன்கல் பிரதேசத்தில் பெரிய வெளியிருந்தது. அது சுமார் மூன்று நான்கு கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டது. அந்த இடத்தை நெடுங்கரைச்சை என்றழைப்பார்கள். அந்த இடத்தில்தான் வண்டிற்சவாரி தொடங்கும். இளைஞர்களது வீரவிளையாட்டுக்கள்; களைகட்டும். சுமார் நான்கு அல்லது ஐந்து மணிக்கு வண்டில்கள் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, உப்பாறு கிராமங்களில் இருந்து புறப்படும். வெயில் குறைந்து களைப்பு நீங்கும் நேரமாக இருக்கும். வண்டில்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும். நெடுங்கரைச்சை வந்ததும் தொடர்ந்து வந்த வண்டில்கள் பக்கவாட்டில் பிரியும். ஓன்றன் பக்கத்தில் மற்றது போய்கொண்டிருக்கும். துள்ளிப்பாய்ந்து காளைகள் பறக்கும். பேரொலியாக இருக்கும். பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும். விபத்துக்களும் இடம்பெறுவதுண்டு.





மாட்டு வண்டிகள் செய்வதில் பெரியதம்பி, வேலுப்பிள்ளை, கதிரவேலர் சிறந்த ஓடாவிமார்கள். நல்ல உறுதியாகச் செய்வார்கள். திருவிழா வந்து விட்டால் வண்டில்கள் வண்ணம் பெறும். சில கூடார வண்டிகளாக மாறும். கூடாரவண்டிகள் சவாரியில் ஈடுபடுவதி;ல்லை. எங்களது ஊரில் ‘சாட்டையன் பிணையல்’ என்ற காளைகள் சவாரிக்குப் புகழ்பெற்றது. அதனை வாடகைக்கு அமர்த்துவார்கள். ஒருமுறை ‘சாட்டையன் பிணையல்’ வண்டியில் தம்பலகாமம் திருவிழாவுக்கு சென்றோம். வண்டி ஓட்டியவரைச் சரியாக நினைவில் இல்லை. சௌந்தரம்மா, பக்கத்து வீட்டுப் பெண்கள் பிள்ளைகள் எனப் பலர் பிரயாணம் செய்தோம். “நமக்குச் சவாரி வேணாம். நாம் கோணேசரிடம் போறம். பயபக்தியாய்ப் போய்வரணும் விளங்குதா”? வண்டியில் ஏறும்போதே சௌந்தர்மா கட்டளையிட்டு விட்டார். வண்டில்கள் போய்க்கொண்டிருந்தன. பலவண்டிகள் எங்களது வண்டியைத் தாண்டிப் பறந்தன. ‘சாட்டையன் பிணையல்’ சவாரி செய்து பழக்கப் பட்டவை. பாய்ந்து சென்றன. சௌந்தரம்மா துணிச்சல் மிக்கவர். “கவனமாகப் பிடியுங்க. பிடியை விடக்கூடாது. வண்டில் சரிந்தால் தூரத்தில பாயவேணும்.. விளங்குதா?” கட்டளை கொடுத்திருந்தார். வண்டிகள் மோதுண்டு தடம்புரண்டு சிதறுண்டன. எங்கள் வண்டியும் புரண்டு பக்கவாட்டில் கிடந்தது. அதிசயம். யாருக்கும் காயங்கள் இல்லை. அவவுக்கு எங்கிருந்து அந்தத் துணிச்சல் வந்ததோ தெரியவில்லை. பாய்ந்து சென்று விழுந்து கிடந்த அனைவருக்கும் உதவி செய்தார். வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவர்களை கூப்பிட்டார் சரிந்த வண்டில்களை நிமிர்த்தி உதவும்படி வற்புறுத்தினார். அவரது துணிச்சல் அபரிகரமானது.





“சாகிறதெண்டாலும் நாம பிறந்த இடத்திலதான் சாகவேணும். மணல்தெருவில் காலாற நடந்து கோயிலுக்குப் போய் அம்மனையும். பிள்ளையாரையும் கும்பிட வேணும். ஊரெல்லாம் கூடி சந்தோசமாக வாழவேணும்.. அதுதான் வாழ்க்கை”. தத்துவம் பேசும் சௌந்தரம்மாவின் வாழ்வைச் சோகம் சொந்தமாக்கிக் கொண்டது. இனப்பிரச்சினை ஊரைக்காவு கொண்டபோது ஊரோடுதான் தனது ஊரைவிட்டுச் சென்றார். இரவும் வரும். பகலும் வரும். காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லை. வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டுதான் இருக்கும்.. காலத்தின் வழிமுறைகளையும், வரைவிலக்கணங்களையும் மனிதனால் தடுத்து நிறுத்திவிடமுடியாது. எந்த உயிர் பிறந்தாலும் அந்த உயிர் இறக்கத்தான் வேண்டும். இது இயற்கையின் நியதி. மனித வாழ்வில் இழப்புக்கள் பலவிதமகத் தாக்குகின்றன. சில இயற்கையால் வருவன. சில மனிதனால் வரவைக்கப் படுகின்றன. இனப்பிரச்சினை என்று அழிப்புக்கள் தொடங்கின. ஊரைவிட்டு கிண்ணியாத் துறையைக் பாதையில் கடக்கும்போது ஊர்பக்கம் பார்த்து மக்களோடு அவவிட்ட பெருமூச்சு அனலாய்ப் பறந்தது. சௌந்தரம்மாவின் வீடு வளவு, சுற்றம் பொருள் பண்டம் அனைத்தும் இழந்து அகதியாகத் தவித்தபோது அவர் விட்ட கண்ணீர் கொட்டியாரக் குடாக்கடலோடு கலந்ததைக் கண்டேன். “ஒருநாளைக்கு இந்தக்கடல் பொங்கியெழும்.” எதை மனதில் வைத்துச் சொன்னாவோ தெரியாது. ஊர்ச்சனங்கள் அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாய் அகதிகளாக ஊரைவிட்டு ‘கிளப்பன்பேர்க்’ முகாமில் தஞ்சமாகினார்கள். ராணிபோல் வாழ்ந்த சௌந்தரம்மா பிள்ளைகளுக்காக அவர்களோடு காலத்தைக் கழித்தார். ஒரு மனிதன் பிறந்தான். இறந்தான் என்று சொல்வதிலும் பார்க்க, அவன் உயிர் வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தான் என்பதில்தான் முக்கியம் உண்டு. ஒருவன் எவ்வகையிலேனும் பிறருக்கு உதவியிருந்தால், அவன் ஒரு சிலரது உள்ளங்களிலாவது நினைவு கூரப்படுவான்.; சௌந்தரம்மாவை இன்றுள்ள ஆலங்கேணி மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அம்மக்களும் வன்செயல்களுக்கு ஆளாகி இடம்பெயர்ந்து அல்லல் பட்டு மீளவும் குடியேறியுள்ளனர். மூலவேர்களைக் காணவில்லை. சல்லி வேர்கள்தான் காலூன்றி நிலைத்துள்ளன. சௌந்தரம்மா வாழ்ந்த காலத்தில் இருந்தவர்கள் இன்று இல்லை.




காலந்தான் கவலைகளை மாற்றவல்லது. என்று இனப்படுகொலைகள் தொடங்கப்பட்டதோ அன்றிலிருந்து எம்மைத் துயர் துரத்தத் தொடங்கியது. ஆளுக்கொரு பக்கமாக ஓடினோம். பின்னர் ஆளையாள் சந்திக்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். ஆனாலும் எனது உள்ளத்தில் நீக்கமற நிறைந்து சௌந்தரம்மா இருக்கின்றார். அவர் வாழ்ந்த காலம் பொன்னானது. சௌந்தரம்மா போன்றவர்கள் ஆலங்கேணியில் வாழ்ந்து பண்பாட்டைப் போற்றியவர்கள். ஆலங்கேணியில் வாழ்ந்து அந்த மண்ணிலேயே சங்கமமாகும் அவரது எண்ணம் நிறைவேறாது விட்டது. மண்ணுலக வாழ்வு நிட்சயமற்றது. நினைத்துப்பார்க்கும் போது எல்லாம் பாழாய், பழங்கதையாய்த் தெரிகிறது. தமிழ் மக்கள் வாழ்ந்த இடமெல்லாம் இன்று இல்லை. அவை புதியவர்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும், ஊர்ப்பெயர்களையும் அழித்தொழித்துப் புதுப்பெயர்களும் வரலாறுகளும் முளைத்துவிட்டன. என்பாதங்களைப் பதித்து நண்பர்களோடு நடந்த இடமெல்லாம் கற்பனையில்தான் காணமுடியும். நானும்தான் சொந்த ஊரைத் துறந்துவிட்டுத் தூரத்தேதானே கிடக்கிறேன். முகம்பார்க்கும் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்தேன். முகம் நன்றாய்த் தெரியவில்லை. கண்களைத் துடைத்து விட்டு எனது உருவத்தையும் பார்த்தேன். இளமையில் நானும் மனைவியும் சேர்ந்தெடுத்த படத்தையும் பார்த்தேன். எவ்வளவு மாற்றம். ‘மாற்றமாம் வையகம்…’ கண்கள் குளமாகி வழிகிறது “தாத்தா ஏன் அழுறீங்க” சுலக்சியின் குரல் கேட்டு நிமிர்கிறேன். அவள் எனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களிலும் கண்ணீர். “ஏனம்மா அழுறாய்..”? “நீங்க ஏன் அழுதீங்க”.? அவளது கேள்விக்குப் பதில் என்னால் கூறமுடியவில்லை. எதைக்கூறுவது?



கற்பனை கலந்த உண்மை

Read more...

மணல்திட்டு

அலை வீசி ஆர்ப்பரித்தது. கும்மிருட்டில் அலையின் இரைச்சல் படுபயங்கரமாக இருந்தது. கடற்கரையில் சிலதோணிகள் தரித்து நின்றன. மக்கள் மனங்களில் பயங்கரம் குடிகொண்டு விட்டது. உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடுவதுதான் திட்டம். தோணிகளில் மக்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். பலதோணிகள் மக்களை ஏற்றிக் கொண்டு ஏற்கனவே சென்றுவிட்டன. தூரத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. செல்வந்து விழுந்து வெடித்துச் சிதறி நிலமதிருவதை உணர்ந்தார்கள். கடலிலும் செல்கள் விழுந்து வெடித்தன. பல தோணிகள் சென்றுவிட்டன. அத்தோணிகளுக்கு என்ன நடந்தது? ஒன்றும் தெரியாத நிலை. தோணியில் ஏறியவர்கள் சகுனம் சரியில்லை என்று இறங்கி விட்டார்கள். அழகன் கடற்கரைப் பக்கமாக ஓடிவந்தான். “இண்டைக்கு நிலமை சரியில்லை. பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகமாயிருக்கும் போலத்தெரியுது. . கெதியா வீட்டுக்குப் போய்ச் சேருங்க.” சொல்லிவிட்டு வந்த வழியே ஓடினான். சனங்கள் செய்வதறியாது தவித்தார்கள். சற்று நேரத்துக் கெல்லாம் அழகன் போனதுபோல் ஓடிவந்தான். “இனிச் சுணங்க வேண்டாம். நாளைக்கு இந்த ஊரைச் சுற்றி வளைக்கத்திட்டம் போட்டிருக்கிறார்கள.; இவங்கட கையில பட்டால் மகசீன் சிறைக்கைதிகளுக்கு நேர்ந்த கதிதான் கிடைக்கும்.” அழகன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். சிதறுண்டு அங்குமிங்குமாக ஓடிய மக்கள் ஒன்று கூடினார்கள். தரித்து நின்ற தோணிகளில் ஏறிக்கொண்டார்கள். “கடல்தாயே எங்களைக் காப்பாற்று.” தோணியில் ஏறியவர்கள் ஒரே குரலில் வேண்டுதல் செய்தார்கள். தோணிகள் அலையைக் கிழித்துக் கொண்டு பறந்தன. கடற்கரையோரம் வெறிச்சோடிக் கிடந்தது.





அந்த ஊர் வெறிச்சோடிக்கிடந்தது. கிழக்கு வானம் இருட்டியிருந்தது. இன்னும் வெளிக்கவில்லை. வெடிச்சத்தங்கள் ஓய்ந்திருந்தன. ஆளுக்காள் தெரிந்தும் தெரியாமலும் பலர் புறப்பட்டு விட்டார்கள். பலர் தூரத்தே உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாகப் போய்விட்டார்கள்;. அழகன் ஏற்பாடுகளைச் செய்திருந்தான். அவன்தான் அவர்களது நெருக்கடி நேர எச்சரிக்கைக் குழுவின்தலைவன். அவன் எச்சரிக்கை செய்யும் தனிமனிதனாகச் செயற்பட்டான். கிராமங்கள் அமைதியாய்க் கிடந்தன. நாய்கள் மட்டும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.




கும்மிருட்டில் படகுகள் பறந்தன. அலைகளைக் கிழித்து முன்னேறின. மக்கள் உயிரைக் கைகளில் பிடித்தபடி நடுங்கினார்கள். கடலலைகளும், படகுகளின் இயந்திரங்களும் சேர்ந்திரைந்தன. இரைச்சல் காதுகளில் அறைந்து செவிடாக்கின.. அடிக்கடி கடல் படகினுள் அலைகளை வீசி அச்சுறுத்தியது. கண்களை மூடிப் பயணித்தார்கள். ஒரு முடிவில்லாமல் படகுகள் சென்றுகொண்டிருந்தன. படகுகள் மணற்திடலில் தரித்தன. “கரை வந்தாச்சு இறங்குங்க. அப்படியே நடந்து போனால் ஊருக்குள் போய்விடலாம். கேதிப்படுத்தி இறங்குங்க” படகோட்டிகள் வற்புறுத்தினார்கள். அந்த மணற்திடல் கரையில் இறக்கி விட்டுச் சென்றுவிட்டன. அந்த இருளில் ஒன்றுந்தெரியவில்லை. சுற்றிவரக் கடல்தான் தெரிந்தது. உண்மையாக அவை கரையல்ல. மணற்திட்டுகள். கடலுள் வற்றுப் பெருக்கினால் ஏற்படுபவை. வற்று நேரத்தில் மணல்திட்டுக்களாகப் பரந்து தெரியும். பெருக்கு நேரத்தில் கடலலையால் சிலநேரம் மூடப்பட்டுவிடும். ஒருபகுதிமட்டும் சிறு தீவாகத் தெரியும். இறக்கியதும் படகுகள் மாயமாக மறைந்து விட்டன. ஒரு அரைக்கிலோ மீற்றர் சுற்றளவுள்ள தீவில் அவர்கள் விடப்பட்டார்கள்.





படகுக்காரர்கள் அதிக பணத்துக்காக ஆசைப்பட்டு அதிகமான சனங்களை ஏற்றுவதால் விபத்துக்கள் ஏற்படுவதும் உண்டு. படகுகள் கவிழ்ந்து உயிரிழப்புக்களும் ஏற்படும். எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கும். என்று விதியை நோவதும் உண்டு. இலங்கை சுதந்திரம் பெற்றதும் இனஅடிப்படையிலான முரண்பாடுகள் முளைத்து வேர்விடத்தொடங்கின. இனரீதியாக அரசியல் கட்சிகள் செயற்பட்டன. மொழிச்சட்டம் முளைவிட்டது. மோட்டார் பதிவிலக்கம் சிங்கள ‘சிறி’யில் தொடங்கப்பட்டது. தமிழர்கள் எதிர்த்தார்கள். இனக்கலவரம் ஆரம்பமாகியது. சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களது சொத்துக்கள் காடையர்களால் சூறையாடப்பட்டன. அது புரையோடி 1983ல் இனக்கலவரமாக மாறி அகோரத்தாண்டவம் ஆடியது. தமிழர்களது சொத்துக்களோடு அவர்களது உடல்கள் வெட்டியும், சுட்டும், எரியூட்டப்பட்டும் உயிர்களும் அழிக்கப்பட்டன. கன்னியர்கள் கற்பழிக்கப்பட்டு எரியூட்டிப் புதைக்கப் பட்டார்கள். தமிழ்ச் சிறைக் கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டனர். எதிர்கட்சித் தலைவராக இருந்த தமிழரது அலுவலகம், வீடு அத்தனையும் எரியூட்டப்பட்டன. தமிழர்கள் உயிரைக்கையில் பிடித்தபடி தோணிகளிலும், விமானம் மூலமும் புலம்பெயரத் தொடங்கினர். இந்தியா அவர்களுக்கு ஆதரவளித்து அரவணைத்தது.






சற்றுநேரத்துக்கெல்லாம் இராணுவ வாகனங்கள் அந்த ஊர்மனைகளைச் சுற்றி வளைத்தன. ஆங்காங்கே குழுமிக் கூட்டங்கூடட்டமாக இராணுவத்தினர் பதுங்கிக் காத்திருந்தார்கள். இப்போது இருள்விலகி கிழக்கில் விடிவெள்ளி முளைக்கத் தொடங்கியது. வானைநோக்கிச் சில வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அது இராணுவத்தினருக்கு வழங்கும் கட்டளை வெடி. இராணுவத்தினர் உசாரானார்கள். அரச உயரதிகாரிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் பயங்கரவாதிகள்தான். ஆனால் சாதாரண சிப்பாய்களுக்கு களநிலவரம் புரியும். பதுங்கிப் பதுங்கி, ஊர்ந்தும். தவழ்ந்தும் பெரிய எடுப்பில் கிராமத்தினுள் நுழைந்தனர். சந்திகளில் காவல் இருந்தனர். யாரும் தப்பிவிடக் கூடாது என்பது அவர்களது எதிர்பார்ப்பும் இடப்பட்ட கட்டளையுமாகும். ஆளரவங்களைக் காணவில்லை. ஒரு மனிதப்பிறவியும் கண்ணில் படவில்லை. வீடு வீடாக ஏறி இறங்கினார்கள். “எல்லாரும் தப்பிவிட்டார்கள். நாங்க ஏமாந்து விட்டோம்.” ஆளையாள் ஏமாற்றத்தோடு பார்த்தார்கள். கப்ரன் சாந்தவுக்கு நிம்மதிப் பெருமூச்சு.





காலை பத்து மணியிருக்கும். அந்தப்பிரதேசக் கட்டளைத் தளபதி வந்திறங்கினார். அவர் அந்தப் பிரதேசத்துக்குப் புதிதாக அனுப்பப்பட்டவர். இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் வந்தவர். அவரது கண்கள் துளாவின. இராணுவத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை “எங்கே பயங்கரவாதிகள். கூட்டி வாங்க. அவர்களைப் பந்தாட வேண்டும்”. அவரது கண்கள் அனல்கக்கின. பற்களைக் கடித்தபடி சத்தமிட்டார். “தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். அவர்கள் சிங்கள இனத்தை அழிக்கப் புறப்பட்டவர்கள். அவர்களுக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.” இந்தக் கருத்தே அவனுக்கு ஊட்டப்பட்டது. அதிலே ஊறியவர்தான் இந்தக் கட்டளைத்தளபதியும். அவர் அதனை உறுதிப்படுத்துமாப் போல் நின்றார்.





“சேர்! கிராமம் எங்கும் வலைபோட்டுத் தேடினோம். ஒரு மனிசரும் இல்லை. போட்ட பொருட்கள் போட்டபடியே கிடக்குது. ஊரைவிட்டே போய்விட்டார்கள். எப்போது எப்படி, எங்கே போனார்கள் என்று யாருக்கும் தெரியாது. எங்களுக்கு இரவில் ரோந்து போக்ககூடாது என்ற கட்டளை உண்டு.” சார்ஜன் விமல் சிங்களத்தில் கூறினான். “இந்தக்கிராமத்தில் பயங்கரவாதிகள் முகாமிட்டிருப்பதை உளவுப்பிரிவு அறிவித்தது. அது தெரிந்துதானே சுற்றி வளைப்புச் செய்யக் கட்டளை வந்தது.? அப்படி இருந்தும் கோட்டை விட்டு விட்டீர்களே. சே... அவமானம்.” பாய்ந்து சத்தமிட்டார். இராணுவத்தினர் ஆளையாள் பார்த்துக் கொண்டனர். இது எல்லைக் கிராமம். சில சுயநலவாதிகளின் அநாமதேய செய்திகளை உளவு அறிக்கையாக ஏற்றுக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளையும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளையும் கண்டு கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் வேதனையடைவதைத் தவிர வேறுவழியில்லை. இந்தக் கிராமத்தில் அப்பாவிகளைத் தவிர வேறுயாரும் இல்லை என்பது கீழ்மட்ட இராணுவத்தினர் சிலருக்குத் தெரிந்த விடயம். ஆனாலும் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். சுற்றி வளைப்பு நடந்தது. கப்ரன் சாந்த பக்கத்தில் நின்றிருந்தான். அவனுக்கு ஏதோ சொல்லவேணும் போலிருந்தது. அவன் வித்தியாசமானவன். அவன் துணிந்துவிட்டான். “சேர் இந்தச் சனங்கள் அப்பாவிகள். அன்றாடம் காய்ச்சிகள். இவங்களும் நம்ம நாட்டு மக்கள்தானே? பாவம். ஏன் சேர் கொடுமைப்படுத்தவேணும்.? அவர்கள் என்ன செய்தார்கள்? அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு இராணுவம் அடிபணிவதா”? விறுவிறு என்று கொட்டிவிட்டான். கட்டளைத் தளபதியின் உடல் கொதித்தது. கைகள் விறுவிறுத்தன. விறுவிறுத்த கைகள் கப்ரன் சாந்தவின் சட்டையை இறுக்கிப்பற்றின. மறுகணம் கன்னங்களில் விளையாடின. அவன் நிலைகுலைந்து போனான். “டேய் .. துரோகி... அரசாங்கச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வக்காளத்து வாங்கிறாயா? இரண்டு பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுத்தால் எனக்கு இரண்டு பட்டியேறும். அதைக்கெடுத்து விட்டுக் கதையளக்கிறாயா? நீதான் பயங்கரவாதி.” கட்டளைத் தளபதி அதிர்ந்தான்.





பக்கத்தில் நின்ற இராணுவ சார்ஜனை அழைத்தான். “ சார்ஜன், இவனுக்கு சஸ்பென்ஸ் ஓடர் கொடு. ஒரு கிழமைக்கு ‘டிற்ரென்சன்.’ கூட்டுக்குள்ள போடு” கட்டளை பறந்தது. அங்கிருந்த இராணுவத்தினர் செய்வதறியாது திண்டாடினர். அவர்கள் பலமுறை இந்தக் கிராமத்துக்குச் சென்றிருக்கின்றார்கள்;. மக்களோடு பழகியும் உள்ளார்கள். மக்களது ஏழ்மை வாழ்க்கையை எண்ணி வருந்தியும் உள்ளார்கள்;. காக்கிச் சட்டை போட்ட உடம்புக்குள்ளும் நல்ல இதயம் இருக்கின்றது. கப்ரன் சாந்த அந்த வகையைச் சார்ந்தவன். அவன் புத்தரின் போதனைகளில் மூழ்கியவன். கௌதம புத்தரின் போதனைகளையும், கீதையின் உபதேசங்களையும் வாழ்வியலில் கடைப்பிடிப்பவன். கர்ம வினை பற்றி நன்கு கற்றறிந்தவன். நாம் செய்யும் கர்மத்திற்கேற்ற பிரதிபலன் கிடைக்கும். அவனது தாய் தந்தை புத்த தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். கப்ரன் சாந்த பட்டப்படிப்பை முடித்ததும் இராணுவத்தில் சேர்ந்தான். அவன் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. சமூகவியலை ஒரு பாடமாகக் கற்றவன். இலங்கையின் வரலாற்றை நன்கு படித்தவன். இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும், நாகரும்தான். விஜயன் இந்தியாவில் இருந்து வந்தவன். அவன்தான் சிங்களவர்களது மூதாதையர் என்பதனை ஏற்கமறுப்பவன். இயக்க இளவரசி குவேனியை விஜயன் ஏமாற்றி அவளது இராச்சியத்தைக் கைப்பற்றியவன். அவர்களைக் காட்டுக்குத் துரத்தியவன். நாகர் இலங்கையின் வடக்கை ஆண்டவர்கள். அவர்களது பிணக்கைத் தீர்த்து வைக்கப் புத்தபெருமான் இலங்கைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. அந்த நாகர் என்ன ஆனார்கள். அவர்களது வரலாறு எங்கே? விஜயன் பாண்டியனின் மகளைத் திருமணம் செய்தான். அவனது தோழரும் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்தார்கள். அவர்களது வாரிசுகள் யார்.? விஜயனின் வழித்தோன்றல்கள்தான் சிங்களவாரா? அப்படியென்றால் நாங்கள் யார்? தமிழர்கள் சகோதர்கள் அல்லவா?





சாந்தவுக்குள் ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரே கேள்விகளைக் கேட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான். “சாந்த நீ யார்? ஏன் இங்கு வந்தாய்? உனது கடமைகள் என்ன? நிலையில்லா வாழ்வில் எதனை நீ சாதிக்கப் போகிறாய்? மனிதன் எப்போது பிறந்தானோ அப்போதே அவனது இறப்பும் தீர்மானிக்கப் பட்டுவிடும். இடையில் உயிர்களைக் கொல்வதற்கு நீ யார்.? நல்லதை நினை. நல்லதைச் செய். நினைவு நல்லது வேண்டும். அதனைச் செய். பலன் தானே தேடி வரும்.” அவனது மனம் அவனோடு போராடிக் கொண்டிருந்தது. அவன் இராணுவத்தில் சேர்ந்து கடமைக்குச் செல்லும் போது அவனது தந்தையும் தாயும் சொன்னவற்றை அடிக்கடி நினைவு கூருவான். அதனை சார்ஜன் விமலோடும் பகிர்து கொள்வான். இப்போது தளபதியின் கட்டளையால் விமலுக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. நல்லதொரு கடமை வீரனுக்கு இப்படிப்பட்ட தண்டனையா? இதுதானா தார்மீகம்.? அவன் உள்ளம் குமுறியது. கப்ரன் சாந்தவின் முகம் நிலம் நோக்கியிருந்தது. தனது தார்மீகத் தன்மையைச் சுட்டிக்காட்டிய திருப்தி அவனது முகத்தில் தெரிந்தது. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே. பலன் கன்னங்களில் கிடைத்தது. இது தற்காலிகமானது. மனித மனம் திருந்துவதற்கு ஒரு அக்கினிக் குஞ்சைக் காட்டினேன். பற்றிக் கொள்வதும் பற்றாததும் அவரவர் மனத்தின் அளவைப் பொறுத்தது. அவன் கவலைப் படவில்லை.




கட்டளைத் தளபதி இராணுவத்தை முகாமுக்குத் திரும்புமாறு பணித்தான். பின் ‘பிக்கப்’ வாகனத்தில் ஏறி முகாமுக்குப் போய்விட்டான். இராணுவத்தினர் சாந்தவைச் சூழ்ந்து கொண்டனர். “வீரர்களே! நம்மைப் பெற்றவள் ஒரு தாய். நமக்கு அக்கா, தங்கைமார் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? தமிழர்களும் நமது சகோதரர்கள்தான். இதனை நினைவு கொள்ளவேண்டும். அவர்களது துன்பத்தைத் துடைப்பது நமது கடமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு துன்பமும் வராது. புத்ததர்மத்தின் வழி நடப்போம்.” அடிக்கடி இதனை தனது வீரர்களுக்குக் கூறுவான். தங்களுக்கு உதவும் கப்ரனாகச் சாந்த திகழ்ந்ததை அவர்கள் மறக்கவில்லை. ஆறுதல் கூறிக்கொண்டனர். முகாமுக்குத் திரும்பினார்கள். முகாமில் வழமையான கடமையில் ஈடுபட்டனர்.




அழகன் மணல்திட்டியில் நின்றவாறு வானைப் பாத்தான். கடலைப்போல் வானமும் நீலம்பூத்திருந்தது. வெயில் தகதகத்துக் கொழுத்தியது. சிறிய வட்டத்துக்குள் சிறைப்பட்ட பாவிகளாக இலங்கையின் ஆதிக்குடி மக்கள் அந்தரித்தார்கள். வாய்க்கு வந்தபடி அரட்டிக் கொண்டிருந்தார்கள். “கவலைப் படாதீங்க. எப்படியும் தமிழ்நாட்டுக்குள் போய்விடலாம். நாம் தொப்புக் கொடியினால் பிணைக்கப்பெற்ற உறவுகள். நமது தமிழ் உறவுகள் காப்பாற்றும்.” அழகன் மக்களிடையே புகுந்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். நமது மக்கள் எல்லோரும் ஒரேமாதிரி இல்லை. செய்வதைச் செய்துவிட்டு பழியை யார்மேலாவது போடுவார்கள். இது வழிவழிவந்த மரபு. “இஞ்சவந்து இந்த வேகாத வெயிலில சாவதைவிட, அங்க சிங்கள ஆமிக்காரனால செத்திருக்கலாம்.” சின்னாச்சி முணுமுணுக்கத் தொடங்கினாள். “எங்கட சனங்கள் சரியான சுயநலக்காரர். முதலில தோணியில போனவங்க எங்களையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாமெல்லோ.”? தோட்டத்து முத்தர் தொணதொணத்தார். “ஐயா பொறுமையாயிருங்க... வாழ்வா ..சாவா என்ற நிலையில் இருக்கிறம். அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாதீங்க? இப்ப நமக்குத் தேவை பொறுமை. எல்லாத்தையும் ஆண்டவனிட்ட விடுவம். அவன் பார்த்துக் கொள்வான்.” அழகன் மிகப்பணிவாகக் கேட்டுக் கொண்டான். அவனது பார்வை தூரத்துக் கடலில் இருந்தது.





தூரத்தே விசைப்படகுகள் வருவதைக் கண்டு கொண்டான். அவனுக்குச் சந்தேகம். ஒருவேளை இலங்கை கடற்படைப் படகுகாகளாக இருக்குமோ? ‘அப்படி இருக்கக்கூடாது’ என அவனது உள்ளம் இறைவனை நோக்கி இரந்தது. அவர்களது நல்ல வேளை. தமிழக மீனவப் படகுகள் வந்து கொண்டிருந்தன. அழகன் கையசைத்துச் சைகை காட்டினான். படகுகள் மணல்திட்டியைச் சூழ்ந்து கொண்டன. அழகன் அவர்களிடம் நடந்ததைக் கூறினான். அத்துடன் உதவியையும் கோரினான். அவர்கள் அனைவரும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். மக்களது பரிதாபநிலையைக் கண்டார்கள். அவர்களது மனம் இரங்கியது. இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைக் கொன்று குவிப்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நல்லன நினைப்பதும், செய்வதும் ஆபத்தில் உதவுவதும் மனிதப் பண்பு. உற்சாகமாகத் தலையை ஆட்டினார்கள். அவர்களது சம்மதம் கிடைத்து விட்டது. அழகன் அனைவரையும் பத்திரமாக ஏற்றிவிட்டான். அவர்களுக்கு நன்றி கூறினான். தானும் தொற்றிக் கொண்டான். படகுகள் தமிழகக் கரையை நோக்கி விரைந்தன. கரை நெருங்கிவிட்டது. கரையும் மக்களும் தங்களை நோக்கி வருவது போல் உணர்ந்தார்கள். மண்டபம் கடற்கரை அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.





அழகன் கரையில் நடப்பதை ஊகித்துக் கொண்டான். தோணிகளில் ஏறும்போதே அளவாக ஏற்றும்படி கேட்டுக் கொண்டான். நான் முந்தி. நீ முந்தி என்று ஏறியவர்களை இறக்கியும் விட்டான். ஆனாலும் அளவுக்கதிகமாக மக்கள் ஏறினார்கள். அப்படி ஏறிய தோணிகள் என்னவாயினவோ? கரையை அடைந்ததும் இறங்கிப் பாய்ந்து ஓடினான். மக்கள் திரண்டு பார்த்துக் கொண்டிருந்தனர். “ஒன்று இரண்டு மூன்று.. இருபத்தொன்பது...”. அவன் மயங்கிவிட்டான். ஒன்றாகப் புறப்பட்ட இருபத்தொன்பது உறவுகள் சடலங்களாகக் கிடத்தப் பட்டிருந்தனர். தமிழக அரசின் அலுவலர்களும் பொது அமைப்புக்களும் கரிசனையோடு கவனிப்பதை அழகன் உணர்ந்து கொண்டான். அவர்களுக்கு மனதார நன்றி கூறினான். அவனது மனக்கண்முன் இந்த மக்கள் பட்ட துன்பமனைத்தும் தென்பட்டன. இலங்கை அரசபடைகளின் அடாவடித்தனங்களில் இருந்து தப்புவதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி எண்ணிலடங்காதன. வீட்டில் அவர்கள் நிம்மதியாக உறங்கினது கிடையாது. “ஆமி வருது.. ஆமி வருது’ என யாரோ சொல்வார்கள். “எந்தப்பக்கமாம்?” வாய்கேட்டுக் கொண்டிருக்கும். கால்கள் திசைதெரியாது ஓடிக் கொண்டிருக்கும். உணவு சமைத்தமாதிரி அடுப்பில் இருக்கும். ஆனால் பசியோடு பக்கத்து ஊருக்கு அபயந்தேடி உடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். பிடிபட்ட இளைஞர்கள் திரும்பியதில்லை. அதிர்ஸ்டமுள்ள சிலர் பூசா சிறைச்சாலையில் பூட்டப்படுவார்கள். அவர்கள் செய்த குற்றம் என்ன? தமிழனாகப் பிறந்ததுதான் அவர்கள் செய்த பெரிய குற்றம். அழகனது உள்ளம் கேள்வித் தீயில் வெந்து கொண்டிருந்தது.





செய்தி வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. காது கொடுத்துக் கேட்டனர். ‘இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் கடலில் மூழ்கினர். இருத்தொன்பது பேர்பலி. ஏனையோர் இந்திய கடற்படையினராலும், மீனவர்களாலும் காப்பாற்றப்பட்டு மண்டபம் முகாமுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்’. செய்தி கேட்டு சாந்த உள்ளம் பொருமினான். “இலங்கையில் பிறந்தவர்கள் அனைவரும் இலங்கை அன்னையின் பிள்ளைகள் அல்லவா?. சொந்த நாட்டில் வாழமுடியாமல் அகதியாகி வேற்று நாட்டுக்கு ஓடுவதா? என்ன கொடுமை.” சாந்த வேதனையில் வெந்தான். விமல் ‘சஸ்பென்சனுடன் டிற்ரென்சன்’ ஓடரையும் ரைப் செய்து கட்டளைத் தளபதியின் ஒப்பத்தைப் பெற அவரது அறையினுள் சென்றான். வாசலில் நின்று “மே ஐ கம் இன் சேர்” “உள்ளே வரலாமா? ‘ குரல் கொடுத்துக் காத்திருந்தான். கதவு திறந்துதான் இருந்தது. ”என்ட, வா” பதில் வந்தது. விமல் உள்ளேசென்று சலூற் அடித்து நின்றான். தளபதி அவனை நிமிர்ந்து பார்த்தார். “சேர், ஓடர். தங்கள் ஒப்பத்துக்காக.” நீட்டினான். அதனைப் பெற்று அப்படியே வைத்தான்.


“சார்ஜன்.. றேடியோ..செய்தி கேட்டாயா?”

“இல்லை சேர்”

“இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் கடலில் மூழ்கினர். இருத்தொன்பது பேர்பலி.” கூறிக் கொண்டு இருக்கையை விட்டு எழுந்தான். “அவர்களைப் பிடித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா?” பொறியினுள் சிக்க வைக்கும் கேள்வியல்லவா கேட்கிறான். விமலுக்குச் சந்தேகம் பிறந்தது. இவன் என்ன சொல்கிறான். “எங்கே பயங்கரவாதிகள். கூட்டி வாங்க. அவர்களைப் பந்தாட வேண்டும். பட்டி கிடைக்கும்” என்றானே? இப்போது இப்படிச் சொல்கிறான். அவன் இந்தத்தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்ளத்தயாரில்லை. தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “சேர்! டீட்சென்ரன் ஓடரும் இருக்கு. ஒப்பமிட்டால் மற்றதை நான் கவனிப்பேன் சேர்.” மீண்டும் சொன்னான். தளபதி ஓடரைக் கையில் எடுத்து வாசித்தான். அதனை விமலிடமே நீட்டினான். “கிழித்தெறி. பயங்கரவாதிகளுக்கு நாம் தண்டனை கொடுக்காமல் விடலாம். ஆனால் கடல் கொடுத்துவிட்டது. அவர்கள் அகதிகள் இல்லை. பயங்கரவாதிகள்.” கூறிவிட்டுப் பயங்கரமாகச் சிரித்தான். “அவர்களை நாம் பிடித்துக் கொடுத்திருந்தால் நம் எல்லோருக்கும் ‘புறமோசன்’ கிடைத்திருக்கும். அவர்கள் நம்மிடம் சிக்காமல் போய்விட்டார்கள். அதுதான் கவலை”. சடுதியாக அவனது முகம் மாறியது. “ஓடரைக்கிழித்தெறி. போ”. சத்தமிட்டான்.




விமலுக்கு அவனது செயல் அசிங்கமாக இருந்தது. அவனது முகம் அமவாசையாக இருண்டது. அங்கிருந்து நடந்தான். “இவனெல்லாம் இலங்கையன்தானா? இவன்தான் பேரினவாதி. இலங்கை அரசின் அதிகாரிகள் அனைத்து மக்களையும் தன்நாட்டு மக்களாகக் கருதவேண்டும். ஆனால் இனவேறுபாடு காட்டி அப்பாவிகளை வருத்துவது என்ன நியாயம்,? இவனைப் போன்றவர்கள்தான் இளைஞர்களை ஆயுதம் ஏந்தவைக்கிறார்கள். மடியிலே குண்டுகளைக் கட்டிக்கொண்டு தன்னைத்தானே அழித்துக் கொண்டு தற்கொடையாளியாகிறார்கள். அப்பாவிகளைப் பிடித்துப் பயங்கரவாதிகள் என்று ஒப்புக்கொள்ளச் செய்து பதவி உயர்வு பெறும் புல்லுருவிகள். இயற்கையும் அப்பாவிகளைத்தானா தண்டிக்கிறது? இவையெல்லாம் ஏன்?” விமல் நடந்து கொண்டே சிந்தனையில் மூழ்கினான். அவன் கொண்டு வரும் கட்டளையை எதிர்பார்த்து நின்றவர்கள் அவனை எதிர்கொண்டு முன்னே வந்தனர். அவர்களைக் கண்டதும் விமல் கட்டளையைக் கிழித்தான். நேரே சாந்தவிடம் சென்றான். தளபதியின் செயலைக் கூறினான். ஒருபக்கம் சந்தோசம். அது தண்டனை இல்லை. மறுபக்கம் வேதனை. சாந்தவிடமும் நண்பர்களிடமும் கூறி வேதனைப் பட்டான். “விமல் கவலைப் படாதே. நாம் கர்ம வீரர்கள். வீரர்கள் அழக்கூடாது. எதுவென்றாலும் நன்மைக்கே என்றிருப்போம்” சாந்த அனைவரையும் தேற்றினான்.




“தம்பி உங்கள் பெயரென்ன?” சத்தம் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “அழகன்.” வாய் கூறியது. “சரி எழும்புங்க. வாங்க எங்க பின்னால்” அழைத்தார்கள். அவனால் எழும்பி நடக்க முடியவில்லை. சமாளித்து எழும்பி நடந்தான். பசியும் பட்டினியும் வாட்டியது. அது இலங்கை அகதிகளுக்கான ஒரு முகாம். அந்த முகாமில் அவனது உறவினர்கள் இருந்தார்கள். அவனைக் கண்டதும் ஓவென்று அழுதார்கள். “முதலில் அவருக்கு இதைக் கொடுங்கோ. நல்ல பசியோடு களைத்திருக்கிறார். பிறகு பதியச் சொல்லுங்கோ. பின்னேரம் நாலு மணிக்கு பிரேதங்களை அடக்கம் செய்யவேணும். நாங்க ஆயத்தம் செய்யப் போறம். பிறகு வாறம்”. சொல்லி உணவுப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அழகனுக்குப் பசி. பசி யாரைத்தான் விட்டு வைத்தது. பசிதானே உயிரினங்களை இயக்குகிறது. கவலை ஒருபுறம். “தம்பி அழகன், சாப்பிடு. நடப்பது நடக்கட்டும். பிறந்திட்டம். என்ன செய்வது. இருக்குமட்டும் வாழத்தானே வேணும்”. துரையர் தத்துவம் பேசினார். சாப்பிட்டான். ஊர்மக்கள் பக்கத்தில் இருப்பது ஆறுதலாக இருந்தது. எனினும் ஆழ்மனதில் இருபத்தொன்பது உயிரற்ற உருவங்களும் வந்து நின்றன.




நாலுமணிக்குப் பிரேத அடக்கம். இப்பவே போகவேணும். கிளம்பினான். சனங்கள் மொய்த்திருந்தார்கள். சொந்தங்களை இழந்தவர்களைப் போல் இந்த மக்களும் கண்ணீர் விடுகிறார்களே. அவனது உள்ளம் உருகியது. “நம்ம தமிழ்ச்சனங்களுக்கு இப்படியா ஆகவேணும். இதனை நம்ம நாட்டு அரசு சும்மா விடக்கூடாது. இலங்கை மக்கள் எமது தொப்பிள்கொடித் தொடர்புள்ள உடன்பிறப்புக்கள்.” பல கருத்துக்கள் சூழநின்ற மக்களிடம் இருந்து வந்தன. மனதுக்கு ஆதரவாக இருந்தன. உயிரிழந்த மக்களை இனங்காட்டி பெயர், முகவரிகளை கொடுத்திருந்தார்கள். பட்டியலை சில பத்திரிகைகள் படங்களோடு பிரசுரித்திருந்தன. பெயர்ப் பட்டியலையும், படங்களைப் பார்த்ததும் அழகன்”விதியே! விதியே ...என்செயப்போகிறாய் இந்த இலங்கைத் தமிழச் சாதியை? ஓ வென்று அழுதான். ஒருகிராமத்தின் எல்லையில் பிரேத அடக்கம் நடைபெற்றது. அரச அலுவலர்களும், சமூகநிறுவனங்களும் நல்லடக்கத்தின் போது வேண்டிய உதவிகளைச் செய்தன. எங்கேயோ பிறந்து எங்கேயோ அனாதைகளாக தனது சொந்தங்கள் புதைக்கப்படுவதை அழகனால் பொறுக்கமுடியவில்லை. காலம் யாருக்காகவும் காத்திருப்தில்லை.





முகாமில் ஆயிரக்கணக்கில் இலங்கை அகதிகள் குவிந்து கொண்டனர். சடுதியாக அரச அலுவலர்கள் வந்தார்கள். சில அகதிகளையும் கூப்பிட்டார்கள். அவர்களது கருத்துக்களையும் கேட்டார்கள். “எங்களது உயிர்களுக்குப் பாது காப்பு இல்லை. எங்களது உயிருக்கும், உடமைகளுக்கும் உத்தரவாதமில்லை. ஊனுறக்கம் இல்லாது பயங்கரப் பயணத்தைச் செய்து வந்திருக்கிறம்.” ஓத்த குரலில் கூறினார்கள். “ஐயா இதுதான் இலங்கையின் இன்றைய நிலமை. அதனாலதான் இந்த மக்களை ஒன்றிணைத்து ஒரு கட்டொழுங்குக்குள் கொண்டு வர முனைகிறோம். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்கவேண்டும் அதற்குரிய ஒத்தாசைகளை வினையமாகக் கேட்கிறோம்.” நீதிமன்றில் வழக்காடும் துணிவுடன் அகதிகள் சார்பில் நடுத்தர வயதுடையவர் வேண்டுகோள் விடுத்து நின்றார். தமக்காகக் குரல் கொடுக்கவும் இருக்கிறார்கள் என்ற துணிவு அகதிகளிடையே பிறந்தது. அந்தக்குரலை அழகன் கேட்டிருக்கிறான். குரலின் சொந்தக்காரரைக் காண அவன் விழிகள் அலைந்தன.



யாவும் கற்பனை.

Read more...

Sunday, December 13, 2009

சலனமற்ற வாழ்க்கை.

“அந்தச் சந்தியால திருப்பு. வலப்பக்கமாக மூன்றாவது வீடு. அதில நிற்பாட்டு. கவலை தோய்ந்த முகத்துடன் நந்தன் கூறினான். அவனது மனம் அடித்துக் கொண்டது. புழுதியைக் கிளப்பியவாறு அந்த வாகனம் விரைந்து வந்து நிற்கிறது. அதிலிருந்து பலர் இறங்குகிறார்கள். வாகனத்தில் இருந்து இறங்கியதும் இளையமகன் நந்தன் படுக்கையில் கிடக்கும் கந்தவனத்தாரின் பக்கம் விரைகிறான். அவனது மனைவியும் பிள்ளைகளும் தொடர்ந்து செல்கிறார்கள். சனம் புதினம் பார்க்க வெளிக்கிட்டு வந்தாச்சு. விடுப்புக்களும் விதண்டாவாதங்களும் தூள் பறக்கிறது. சிலர் உண்மையான அனுதாபத்துடன் பார்க்கிறார்கள். சிலர் நமட்டுச் சிரிப்போடு நிற்கிறார்கள். மூத்த மகனும் மருமகளும் சற்றுமுன்தான் வந்தார்கள். இப்போது இளைய மகனும் மருமகளும் பிள்ளைகள் சகிதம் வந்து விட்டார்கள். அபிராமிக்குச் சற்று நிம்மதி. மருமகள்மார் பக்கத்தில் வந்தார்கள். “மாமா, எப்படி இருக்கு மாமா”? விசாரிக்கிறார்கள். அவரையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். அவரது கண்கள் மெல்லத் திறந்து மூடுகின்றன. கண்ணீர் வழிகிறது. ஊரவர்களில் சிலர் இவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் சுகம் விசாரிக்கிறார்கள். நந்தன் அப்பாவை உற்றுப் பார்க்கிறான். “நாங்க இஞ்ச இருக்கிறதால அவருக்கு உதவிதான். காலமையும் வந்து பார்த்து விட்டுத்தான் போனனான்”. பக்கத்து வீட்டுப் பொன்னி முகத்தைச் சுளித்தவாறு கூறிக் கொண்டிருக்கிறாள். உண்மையில் அவள் எட்டிப் பார்ப்பதே இல்லை. விண்ணாணம் பார்ப்பதில் கெட்டிக்காரி. அவளது குத்தலும் பார்வையும் அபிராமியை ஊடுருவுகிறது. உன்னை என்ன செய்கிறேன் பார். என்பதுபோல் பொன்னியின்பார்வை தெரிந்தது.




கந்தவனத்தார் படுக்கையில் இளைத்துக் கிடந்தார். உள்ளத்தில் பட்ட அந்த அடி வேதனையாகி அவரை வீழ்த்தி விட்டது. அது ஆறாதது. காலம்தான் அதனை ஆற்றக்கூடியது. இதயப்பை சிறுகச் சிறுகத் தன் சக்தியை இழந்து கொண்டு வருவதுபோலத் தெரிந்தது. அவரால் பேசமுடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. விரல்களைக் காட்டிச் சைகை செய்கிறார். அதன் பொருள் விளங்காது ஆளுக்காள் தமது கருத்துக்களைக் கந்தப் புராணத்துப் பாடல்களுக்குப் பொருள் கூறுவதுபோல் கூறிக்கொண்டிருக்கின்றனர். கந்தவனத்தார் மீண்டும் தலையை அசைத்துக் கைகளை உயர்த்தி ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். சொற்கள் வெளியேவர மறுக்கின்றன. “மனுசன் ஏதோ சொல்லுது. என்னண்டு கேளுங்க.” பொன்னிதான் கூறிக்கொண்டிருந்தாள். இளைய மகன் நந்தனுக்குக் கோபம் வந்திருக்க வேணும். முகத்தை வேறுபக்கம் திருப்பினான். அங்கு அபிராமி அழுதவண்ணம் வேலைகளில் மூழ்கியிருந்தாள். அவளிடம் கேட்கிறான். “அப்பாவுக்கு என்ன நடந்தது”?





“அவர் நல்லாத்தான் இருந்தார். போனகிழமை திடீரென்று “காய்சல்போல வருது” என்றார். படுத்தவர்தான். எழும்பல்ல. பிள்ளயள ஒருக்கா பார்க்க வேணும்போல கிடக்கு என்றும் சொன்னார். அதுதான் வியளம் அனுப்பினன்.” அபிராமி சொல்லிக்கொண்டே வந்தாள். அவள் அனுப்பிய செய்தியை நந்தன் அசைபோட்டுப் பார்த்தான். “உங்களுக்காகத்தான் காத்துக் கிடக்குப் போல. வந்து ஒருக்காப் பாருங்க. இண்டக்கி அல்லாட்டி நாளைக்கு போய் விடும்போலவும் கிடக்கு. நீங்க வந்தாத் தென்பாக இருக்கும். ஒருக்கா வந்திட்டுப் போனால் நல்லது.” அபிராமி இப்படிச் செய்தி அனுப்பியதில்லை. இந்தச் செய்தி நந்தனின் உள்ளத்தில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால்தான் அத்தனை வேலைகளையும் உதறிவிட்டு ஓடோடி வந்துள்ளான்.





தனது அப்பாவை எண்ணிப் பார்த்தான். அவர் செய்த தியாகங்கள் அவன் கண்முன்னே வந்து பூச்சாண்டி காட்டின. பிள்ளைகளுக்காகக் கந்தவனத்தார் பட்டபாடு கொஞ்சநஞ்சம் இல்லை. பிள்ளைகள் உத்தியோகம் பார்ப்பதால் வெளியூர்களில் இருக்கிறார்கள். அபிராமிதான் கந்தவனத்தாரின் நலனில் அக்கரையுள்ளவள் என்பதை நன்றாக அறிந்திருந்தான். அப்பாவை அவள் கவனித்துக் கொள்ளுவாள் என்ற நம்பிக்கை இருந்தது. ஏதோ பழக்கதோசம் போலிருக்க வேண்டும். அல்லது முற்பிறவியில் விட்டகுறை தொட்டகுறை என்பார்களே அதுவாகவும் இருக்கலாம். வந்தவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்துகொடுத்து உபசரிப்பவளும் இந்த அபிராமிதான். இந்த அபிராமிக்குக் கூறிக்கொள்ள சொந்தபந்தம் என்று ஒன்றும் கிடையாது. இதுவரை அபிராமியின் சொந்த ஊரை கந்தவனத்தார் விசாரித்து அறியவும் இல்லை. அபிராமி சொல்லவும் இல்லை. இந்த யுத்தபூமியில எல்லாரும் அகதிகள்தான் என்ற நினைப்பில் இருந்துவிட்டார்.



கந்தவனத்தார் கைகளை மேலே உயர்த்தி விரல்களை அசைக்கிறார். “மனிசன் ஆரையோ தேடுது. என்னண்டு கேளுங்கவன். பார்த்துக் கொண்டு இருக்கிறியள்.” பொன்னியின் சத்தம் நந்தனின் காதுகளைத் துளைக்கிறது. அபிராமியை மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் பொன்னிக்குப் பரமதிருப்தி. அபிராமியை இங்கிருந்து அனுப்பினால் போதும் என்று நினைப்பவள். பொன்னியின் அவசரம் அவனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. “ஆச்சி, கொஞ்சம் பேசம இருங்க. அவருக்கு ஒன்றுமில்லை. ஆறுதலாகக் கேட்கலாம். இப்ப டாக்டரைக் கூட்டிவந்து காட்டிப் பார்ப்போம்.” நந்தன் கூறிக் கொண்டு எழுகிறான். “தம்பி எதுக்கு டாக்குத்தர். இண்டைக்கோ, நாளைக்கோ போற மனுசனுக்கு இதல்லாம் தேவையா? கேக்கிறதக் கேளுங்கவன்.” பொன்னியின் இந்தச் நச்சரிப்பு நந்தனுக்கு நாராசம் பாய்ச்சுகிறது. அவளை முறைத்துப் பார்க்கிறான். கந்தவனத்தாரின் பார்வையும் பொன்னியின் பக்கம் சாய்கிறது. அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கிறாள். அவருக்கு பொன்னியின்மேல் எந்தவிதக் கோபமும் இல்லை. பொன்னியின் முகம் அமவாசையைக் காட்டுகிறது. இவளுக்கு ஏனிவ்வளவு கோபம்?. அபிராமிக்கு வேதனை அதிகரிக்கிறது. “இப்படியும் மனிதர்களா? ஒருவருடைய சாவில் எவ்வளவு சந்தோசம் இவங்களுக்கு. சாகாவரம் பெற்ற மனிசர்களா நீங்க.? மனதினுள் பேசிக் கொள்கிறாள். நந்தன் பேசாமல் எழுந்து டாக்டரை அழைத்துவரப் போகிறான்.





டாக்டர் வந்து கந்தவனத்தாரைப் பார்க்கிறார். கையைப் பிடித்து நாடி பார்க்கிறார். பார்த்து விட்டுக் கொடுப்புக்குள் சிரிக்கிறார். “என்ன டாக்டர் அப்பாவுக்கு எப்படி இருக்குது.?” பதறியடித்துக் கொண்டு மூத்தமகன் மூர்த்தி கேட்கிறான். “இஞ்ச பாருங்க மூர்த்தி. உங்க அப்பாவின் உடல் சக்தி வாய்ந்தது. உழைப்பால் வலுவடைந்தது. பெரியவரின் இதயத்துடிப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால் பலவீனமாய் இருக்கிறார். நல்ல சத்துள்ள உணவும் ஓய்வும் கொடுத்தால் எழும்பி பழயபடி நடமாடவும் கூடும். அவருக்கு ஏதோ கவலை இருக்கிறது. மனஅமைதி தேவை”. டாக்டரின் இந்தப் பதில் இதயத்துள் பாலை வார்க்கிறது. “இண்டைக்கு அல்லது நாளைக்கு ஆள் குளோஸ்” என்று நம்பியவர்களுக்கு ‘டிமிக்கி’ கொடுத்துக் கொண்டு கந்தவனத்தார் கிடக்கிறார். பிள்ளைகளைக் கண்டதும் அவருக்குத் தென்பு பிறந்துவிட்டதுபோலும். புதினம் பார்க்க வந்தவர்களது உதடுகள் பிதுங்குகின்றன. கந்தவனத்தாரின் மனைவி மறைந்து ஆறுவருடங்கள் உருண்டுவிட்டன. எத்தனை நாளைக்குப் பிள்ளைகள் பார்ப்பார்கள்.? அவர்களும் மனிதர்கள்தானே? கஷ்டநஸ்டம் அவர்களுக்கும் இருக்கும்தானே? பொறுமையைக் கட்டிக் கொண்டு எவ்வளவு காலம் ஜீரணிப்பார்கள். அவர்களுக்கு வீண்சிரமத்தைக் கொடுப்பானேன்? மற்றவர்களுக்குப் பாரமாக இருப்பது பாவம் அல்லவா? படுத்த படுக்கையில் கிடவாமல் போய்ச்சேரவேணும். இதைத்தான் தினமும் இறைவனிடம் ஒப்புவிப்பார். பிறந்து வளர்ந்த ஊரில் போய் இறுதிநாட்களைத் தனியாகக் கழிக்கத் தீர்மானித்து விட்டார். சகோதரி வீட்டில் கொஞ்சக் காலத்தைக் கழித்தார். ஆனால் அதில் அவருக்கு திருப்தியில்லை.; தாயின் பரம்பரைக் காணியில் கொட்டிலை அமைத்துக் கொண்டு அங்கு தஞ்சமானார். அங்குதான் பிரச்சினையே தொடங்கியது.




அந்தக் காணிக்குள் கந்தவனத்தார் வந்ததைப் பலரும் விரும்பவில்லை. பக்கத்து வீட்டுப் பொன்னிக்கு விருப்பமில்லை. பொன்னியின் மகன் கந்தவனத்தாரின் காணியின் பொது எல்லைக்கல்லை அசைத்துத் தனது காணியுடன் ஒரு பாகத்தரையைச் சேர்த்துக் கட்டுகிறான். “தம்பி குணம் ஏனிந்த வேலை. வேலியைப் பொதுவாகப் போட்டால் நல்லதுதானே. பிரச்சினை இல்லையே.” கந்தவனத்தாரின் இந்தக்குறுக்கீடு குணசேகரனுக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேற காணி இருக்கு. ஏன் இந்தக் காணியில வந்து வீடு கட்டவேணும்.” இந்தக் கேள்வியினால் கந்தவனத்தார் ஆடித்தான் போனார். அவருக்குச் சிரிப்பு ஒருபுறம். மறுபுறம் வேதனை. அவரது வருகையை பலர் விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டார். அபிராமியும் வந்து சேர்ந்து கொண்டாள். பிரச்சினைகள் தன்னை நோக்கி நகர்வதை பெரிதாக அவர் பொருட்படுத்த வில்லை. அடிக்கடி இந்தப் பிரச்சனை தலைதூக்கும். அப்படியிருந்தும் கந்தவனத்தார் பொறுமையைக் கடைப்பிடித்தார். ஆனாலும் பொன்னியின் கோபத்துக்கு ஆளாகி விட்டார். “இவன் தொலைவான் இன்னும் போகாமல் கிடக்கிறானே. இவளொருத்தி புதுசாக வந்து சேர்ந்திட்டான். கோள்மூட்டி அபிராமியத் தொலைக்க வேணும். இவள்தான் காட்டிக்குடுக்கிறவள்.” என்று மனதுக்குள் கறுவிக்கொள்வாள். அபிராமியை அவதூறாகப் பேசுவதில் அவளுக்கு நிகர் அவளேதான். எல்லாவற்றையும் மனதினுள் போட்டு அடைந்து கொண்டு பொறுமை காப்பதில் அபிராமி கெட்டிக்காரி. அபிராமி கந்தவனத்தாருடன் வந்து சேர்ந்தது ஒரு விபத்துத்தான். சுறுசுறுப்பாக இயங்குவாள். தேவையானபோது மட்டும் வாய் திறப்பாள். பொறுமையாக வேலைகளைச் செய்வாள். அவளது பொறுமையைக் கந்தவனத்தார் மெச்சியும் இருக்கிறார்.





கந்தவனத்தாருக்குத் தன்கிராமத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்தது உண்மைதான். அந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் முதுகெலும்பாக உழைத்தவர். பாடசாலை செல்லாத பிள்ளைகளை வீடு வீடாகச் சென்று பாடசாலைக்கு அனுப்பியவர். தனது ஊரிலிருந்து பிள்ளைகள் பல்கலைக் கழகம் செல்லவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர். அந்தச் சாதனையையும் நிறைவேற்றியவர். முதல்முறையாகத் தனது கிராமப் பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களைப் பாராட்டிப் பரிசும் கொடுத்தவர். அவர்களை எண்ணி வியந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தவர். அதனால் ஊர்மக்களின் மனதில் பெருமதிப்பைப் பெற்றவர். அரச உத்தியோகம் இடமாற்றத்துக்கு உரியதென்பதால் பல காலம் வெளிமாவட்டங்களில் இருந்தவர். இளைய தலைமுறையினரின் நடத்தை மாற்றங்கள் அவருக்கு எரிச்சலைக் கொடுத்தது. பலவிடயங்களில் தலையிட்டுப் புத்திமதி கூறினார். அவருக்குக் கிடைத்தது பிரச்சினையும் அவமரியாதையும்தான். அதற்காக அவர் ஒதுங்கவும் இ;ல்லை. அந்த பவளவிழா வயதிலும் ஒரு துடிப்புள்ள இளைஞனைப் போல சுழன்று வருவார். அதிகாலையில் ஊரைச் சுற்றி வலம் வருவார். அன்றும் அப்படித்தான் மணல் பரந்த தெருவில் நடந்து வந்தார். ஊர்த்தெரு வேலிகளில் வேம்புகளும் பனை மரங்களும் விசாலித்திருந்தன. வெயிலை வடித்து குளிர்தடவி நிழலைக் கொடுத்துக் கொண்டிருந்தன. ஒரு வளைவில் சாய்ந்த மரத்தில கட்டிய விளம்பரம் தெரிந்தது.




கிராமங்களில் இவைதான் வியம்பரப் பலகைகள். ‘என்னைப் பார். என்னைப் பார்’. என்று காற்றில் ஆடியது. அதனை உற்றுப் பார்த்தார். அவரின் தலை சுற்றியது. தன்னைச் சதாகரித்துக் கொண்டார். அந்த வசனங்களை வாய் முணுமுணுத்தது. நடந்தார். “இந்தக் கிழடுக்கு இந்த வயதிலயும் ஒரு பொண் வேணும். ஊரை விட்டு ஓட்டங்காட்ட வேணும்”. அவரைக் கண்டுதான் சொன்னார்களோ தெரியாது. அந்தச் சொற்கள் அவரது காதுகளில் பாய்ந்து உள்ளத்தை ஊடுருவித் தாக்கியது. இராமனின் அம்பு பட்ட இராவணனது நிலையாய் மாறினார். சொல்லம்புகள் மனதில் தைத்து வேதனையைப் பரப்பியது. தலைசுற்றியது போன்ற உணர்வு. இதயத்தைச் சுட்டெரித்தது. மெல்லிய வலியேற்பட்டது. அப்படியே தெருவோரத்தில் குந்திவிட்டார். உடலெங்கும் வெயர்த்தது. அவருக்குத் தெரியும். தன்னோடு சேர்த்து அபிராமியைத்தான் குத்திக் காட்டுகிறார்கள் என்று. அந்திம காலத்தில் உதவிக்காக ஒரு பெண் உடனிருப்பது தவறா? இவர்கள் சொல்வதுபோல் எந்தப் பிசகும் இல்லையே. யாரும் இல்லாத அனாதைப் பெண்ணுக்கு ஆதரவளிப்பது தவறா? அவரது உள்ளத்தில் பெரும் போராட்டம் தொடங்கி விட்டது. அபிராமியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். காலை தொடக்கம் மாலைவரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள். உ;ள்ள பயிர்களுக்கெல்லாம் தண்ணீர் இறைப்பாள். அவளைக் கண்டு பயிர்கள் பச்சைப் பசேலலெனச் சிரிக்கும். தலையெடுத்தாடும். அவற்றுக்குள்ள நன்றி மனிதர்களிடம் இல்லையா? உடுதுணிகளைக் கழுவி வைப்பாள். பொருட்களைப் பாதுகாத்து வைப்பாள். தனக்கென்று ஒன்றையும் சேர்த்து வைக்காத அற்புதப் பிறவியவள். நேரத்துக்குச் சமைத்துத் தருவாள். தானும் கொஞ்சம் சாப்பிடுவாள். வேலைகளை முடித்ததும் ஒருமூலையில் சுருண்டு படுத்து விடுவாள். அவள் பாயில் படுத்ததை கந்தவனத்தார் கண்டதில்லை. விரதம் காப்பவர்போல் நிலத்தை ஒரு துணியால் தட்டிவிட்டு தலைக்குத் தலையணையாகக் கைகளை மடித்துக் கொண்டு உறங்கி விடுவாள். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் “ஐயா தேத்தண்ணி குடியுங்க“ என்று கோப்பையோடு நிற்பாள். அவளுக்கென்று உறவுகள் இல்லை. எதனையும் எதிர்பார்ப்பதும் இல்லை.




கந்தவனத்தாரின் உள்ளமெல்லாம் அபிராமி ஆக்கிரமித்திருந்தாள். இதுவரை அபிராமியைப் பற்றிச் சிந்தித்ததே இல்லை. தனது குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் நினைத்திருந்தார். மனைவி ஸத்தானத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இப்போது அவளைப் பற்றிய சிந்தனைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஏன் இந்தச் சமூகம் இப்படி? இளம் வயதினர் ஒன்றாக இருந்தால் சிக்கல்தான். ஆனால் உடல்வளம் குன்றி உள்ளத்து உணர்ச்சிகள் வற்றிய அந்திம காலத்தில் விபரீத எண்ணங்கள் தோன்றுமா? தோன்றினாலும் உடல் ஒத்துழைக்குமா? கடவுளுக்குச் செய்யும் தொண்டாக ஒரு பெண் ஒரு ஆணுக்குச் செய்வது எந்தவகையில் பொருத்தமற்றது. மனைவியை இழந்த வயதுபோன ஆணும், கணவனை இழந்த இளம் பெண்ணும் சேர்ந்து ஆளுக்காள் துணையாக இருப்பது தவறாகுமா? அவர்கள் சேர்ந்து வாழ நினைப்பது வெறும் பாலியல் சந்தோசத்துக்கு மட்டுந்தானா? பாலியல்தான் வாழ்வாகுமா? அதற்கு வயதும் உடலும் ஒத்துப் போகுமா? இந்தச் சமூக அமைப்பில் யோசிக்கத் தெரிந்த மனிதரே கிடையாதா? உணவகத்தில் வேலைசெய்யும் ஒரு பெண் உணவைப் பரிமாறுவது போல்தானே இதுவும். அது தவறில்லை என்றால் இது எப்படித் தவறாகும்?. இந்த அப்பாவி எனது நிழலில் இருப்பதை ஏன் இந்தச் சனங்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள்.? கந்தவனத்தாரின் உள்ளம் கேள்விக் களமானது.





மெதுவாக நடந்து வீட்டுப் படலையை அடைந்தார். பொன்னி அபிராமியோடு சச்சரவில் ஈடுபட்டிருந்தாள். அவரைக் கண்டதும் பொன்னி பெட்டிப்பாம்பாக அடங்கிச் சென்றுவிட்டாள். அபிராமி வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். அவளை இன்றுவரை உற்றும் பார்க்கவில்லை. தற்செயலாகப் பார்த்தார். அவள் கண்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டதை அவதானித்து விட்டார்.

“அபிராமி இங்கவா. என்ன நடந்தது”? கேட்டார். அவள் அப்படியே நின்றாள். சந்தோசம் என்பதை அவள் கண்டதில்லை. தன்னை அலங்கரிப்பதும் இல்லை. அவள் முகம் வாடிக்கிடந்தது. ஏதும் பிரச்சினையா? அவர் தொடர்ந்தார். அவள் மௌனம் காத்தாள். அவருக்குக் கோபமே வருவதில்லை. அவளின் மௌனம் அதனை வரவழைத்தது. “சொல்லித் தொலை” கடுகடுத்தார். நிலத்தைப் பார்த்தவாறே “ஒன்டுமில்ல” கூறினாள். “ஒன்றுமில்லாட்டி ஏன் கண்கலங்கியிருக்கு”? அவளுக்கு ஆச்சரியம். தன்னை அவர் ஏறெடுத்துப் பார்த்ததைக் கண்டதில்லை. அவர் தன்னைப் பார்த்துள்ளார் என்பதை அறிந்து விட்டாள். மனதினுள் கொஞ்சம் ஈரம் கசிந்தது. அவரின்மேல் அளப்பரிய மரியாதை துளிர்த்தது. அதனை அவள் வெளிக்காட்டவில்லை. மனதினுள் போட்டு மூடீவிட்டாள். அவள் பேசாது தனது வேலைகளில் ஈடுபட்டாள். “அபிராமி இஞ்ச பார். எனக்கு எல்லாம் தெரியும். ஊரார் கண்டபடி பேசத்தான் செய்வார்கள். இதுக்கெல்லாம் போய் கலங்கி விடக்கூடாது. இங்க இருக்க விருப்பமில்லாட்டி எங்காவது போகலாம். சரியா”? கூறிக் கொண்டு போய்விட்டார். ஆனாலும் அவரது மனதினிலே அமைதியில்லை. தன்னாலேயே சகிக்கமுடியாத போது இவளால் எப்படிச் சகிக்கமுடியும். தாங்கிக் கொள்ளமுடியும். மீண்டும் மனம் குருசேத்திரம் ஆனது. அன்று மாலை முழுவதும் யோசித்த வண்ணமே இருந்தார்.




பெண்மை அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதனை எதிர்த்து அடிமை விலங்கை ஒடிப்போம். ஆணாதிக்கத்தை ஒழிப்போம் என்று வீராப்புப் பேசி போர்க்கொடி மட்டும் தூக்கும் மனிதர்களை எண்ணிச் சிரித்தார். யாருக்கு யார் அடிமை.? இன்று பெண்களுக்குப் பெண்கள்தானே எதிரியாகிறார்கள். கணவனை இழந்த பெண்ணைக் கொடுமைப்படுத்துவது ஆண்களா? வீதியில் செல்லும் அந்தப் பெண்pன் உள்ளத்தைச் சிதைப்பது யார்? வார்த்தைகளால் கொல்லுவது யார்.? மனித உரிமை என்பது இதுதானா? கணவனை இழந்த பெண் நல்ல உடையணியவும் உரிமையில்லையா? அவளுக்கென்று ஆசைகள் இருக்காதா? சாகும் வரையும் இந்தக் கோலம்தானா? இந்த யுத்தபூமியில எத்தனை விதவைகள். இவர்களுக்கு மறுவாழ்வு என்பதே இல்லையா? வாழ முனைந்தாலும் சமூகம் விடுமா? சமூகம் என்பது திறந்த சிறைச்சாலை. சித்திரவதை செய்யும் பலிபீடம். ஆண்கள் வேண்டுமானால் எதனையும் செய்யலாம். ஆனால் பாவம். இந்தப் பெண்கள்..? யுத்தம் ஓயலாம். சமாதானம் வரலாம். ஆனால் விதவைகளாக்கப் பட்ட பெண்களது மனதில், வாழ்வில்; சமாதானதின் நிழலாவது படுமா? எதிரி விளைத்த கொடுமையைவிட எங்கள் சனங்கள் செய்யும் சித்திரவதையை நிறுத்தமுடியாதா? . வினாக்கள் வந்து விரிந்தன. சாதகமான பதில் யாருமே கூறமாட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்கென ஒரு வலையை மாட்டிக் கொண்டு திரிகிறார்கள். பாரதியைப் போல் பலயுகக் கவிஞர்கள் வந்தாலும் இந்தச் சமூகக் கட்டுமானங்கள் உடைபடப் போவதில்லை. அவரால் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியவில்லை. அபிராமியைச் சுற்றியே மனம் அலைபாய்ந்தது. ஒரு ஆறுதலுக்காக வெளியே புறப்பட ஆயத்தமானார். “அபிராமி எனக்கு மனம் சரியில்லை. காய்ச்சல் குணமாயிருக்கு. ஒருக்காப் பிள்ளையளப் பார்க்கவும் வேணும்போல கிடக்கு. வியளம் சொல்லி அனுப்பவேணும். இப்ப கோயிற் பக்கம் போய்வாறன். எங்கையும் போகாத..என்ன?” புறப்பட்டு விட்டார்.




அவர் போவதையே உற்றுப் பார்த்தாள். அவரது நடையில் உற்சாகம் இல்லை. அவரது கம்பீர நடையில் ஒரு தள்ளாட்டத்தை அவதானித்தாள். அபிராமிக்கு மனதினிலே பெரிய போராட்டம். ‘என்னால்தானே ஐயாவுக்கு அவப்பேர். இங்கிருக்க மனமில்லாட்டி எங்காவது போகச் சொன்னாரே. எங்காவது தொலைந்து போய்விட்டால்? என்போன்ற அபலைகள் நிம்மதியாக வாழமுடியாது. “என்ரவர் போனதோட நானும் போயிருக்க வேணும். நாசமாய்ப் போன யுத்தம் என்னை விதவையாக்கியது. இந்தச் சமூகம் நித்தமும் கொல்லுகிறது.” மனம் அலுத்துக் கொண்டது. “நான் என்ன தவறு செய்துபோட்டன். அவருக்குரிய வேலைகளைச் செய்து போட்டு ஓரு பாதுகாபு;புக்காக இந்த வீட்டில் ஒட்டிக் கொண்டு கிடப்பது தவறா? எங்காவது போ என்றாரே. நான் எங்க போவன்?” அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் தாரைதாரையாகப் பீறிட்டுப் பாய்ந்தது. வேலைகளை இயந்திரமயத்தில் செய்து முடித்தாள். சில நாட்களில் நேரம் பறந்து போகும். இன்றுமட்டும் நாள் நகர மறுக்கிறது. தன்னை நொந்து கொண்டாள். “எங்காவது ஆத்தில கடலில விழுந்து சாவமா? சீச்சீ.. பிறகு ஊர்வாயை மூடேலாது. ஐயாவுக்குக் கெட்ட பேர் வந்திரும்.” மனது பேசிக் கொண்டே இருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது. கந்தவனத்தார் இன்னும்வரவில்லை. விளக்கை ஏற்றி வைத்து விட்டுப் புறப்பட்டு விட்டாள். கால்கள் களைத்து நிற்கும்வரை நடந்தாள்.




செவ்வானம் மறைந்து இருள் படியத் தொடங்கியது. நீலவானத்தில் வெள்ளிப் பூக்கள் சிரித்தன. வழமைபோல் கோயிலில் தியானத்தில் இருந்தார். மனம் அமைதியாக இருந்தது. அதிக நேரம் இருந்து விட்டதை உணர்ந்தார். எழுந்து ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டார். வீட்டை நோக்கி நடந்தார். வீடு திறந்தபடி கிடந்தது. ஆளரவமற்ற சூழலைப் புரிந்து கொண்டார். அபிராமி சில சமயங்களில் வீட்டின் பின்புறமாக ஏதேனும் வேலையில் ஈடுபட்டிருப்பாள். அதனால் அவர் அவளைபபற்றி அலுத்துக் கொள்ளவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது. அபிராமியைக் காணவில்லை. எழுந்து அடுக்களைப் பக்கம் நோட்டம் விட்டார். இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தார். அவரது மனம் குழம்பி விட்டது. இந்தச் சனங்களில் வக்கரிப்பை எத்தனை நாளைக்குத்தான் ஜீரணிப்பாள். எங்க போனாளோ? என்ன ஆனாளோ? எங்கு தேடுவது. கவலையோடு கட்டிலில் படுத்தவர்தான். எழும்பவில்லை. அபிராமி வெகுநேரம் கழித்துத்தான் வந்தாள். அவளுக்குத் துயரம் ஏற்படும்போதெல்லாம் அம்மன் கோயிலுக்குப் போய் அழுது தீர்த்துவிட்டு வருவாள். அன்றும் அப்படித்தான் செய்தாள். வந்து எழுப்பியும் அவர் எழும்பவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்தது. அவருக்காக அவள் வேதனைப் பட்டாள். அவரைத் தூக்கி விட்டால் என்ன? அது முடியாத காரியம். அதனை அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். சாப்பிடவும் இல்லை. தன்னை நொந்து கொண்டாள். அப்படியே சுருண்டு கிடந்தாள். கவலையும் களைப்பும் அவளை ஆட்கொண்டிருக்க வேண்டும். உறங்கி விட்டாள். விடிந்துவிட்டிருந்தது. எழுந்து தேநீர் தயாரித்தாள். கந்தவனத்தாரால் எழும்ப முடியவில்லை. ஆபத்துக்குப் பாவமில்லை. கைகொடுத்து எழுப்ப முனைந்தாள். அதனைத் தடுத்து விட்டார். அவராகவே மெதுவாக எழுந்தார். உடல் அனலாய்க் காய்ந்தது. காய்ச்சல் அடித்தது. அவர் பேசவில்லை. வெளியில் போய் வந்தார். வாயலம்பி தேநீரைக் குடித்தார். மீண்டும் சாய்ந்து படுத்துக் கொண்டார்.



அபிராமி அவரையே பார்த்தாள். அவர் பேசாது ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார். அவளால் தாங்கமுடியவில்லை. அவரது கால்களைப் பிடித்தபடி அப்படியே இருந்து விட்டாள். “ஐயா என்னை மன்னிச்pருங்க. நீங்க பேசாதிருந்தால் நான் செத்துப் போயிருவன். எனக்கென்று யாரிருக்கார். நான் எங்க போவன்.” கேவிக்கேவி அழுதாள். கந்தவனத்தாரின் உள்ளம் நடுங்கியது. மெதுவாக அவளது தலையை வருடி விட்டார். “நீ என்ன செய்வாய். இது ஒருவித தவவாழ்க்கை. இந்தச் சமூகம் பொல்லாதது. நல்லதை உணராதது. நீ எங்கயும் போய்விடாதே. நான் கிடக்குமட்டும் என்னோடு கிட. நான் இல்லாத காலத்திலயும் இந்த இடத்தில கிட. நான் பிள்ளயளுக்குச் சொல்லுறன். அவங்கள வரச் சொல்ல வேணும். இப்ப வேணாம். சுகமாகட்டும்.” ஒரு வாஞ்சையுடன் கூறினார்.




ஒரு கிழமையாகியும் அவரது உடல் தேறவில்லை. அபிராமிக்குப் பொறுக்கவில்லை. பிள்ளைகளுக்கு அறிவித்து விட்டாள். இப்போது அவர்கள் வந்து விட்டார்கள். பேரப்பிள்ளைகளின் குதூகலம் அவரை ஆட்கொண்டது. கண்கள் திறந்து சுழன்றன. பேரப் பிள்ளைகள் வந்ததும் வராததுமாக சுற்றி நின்று “தாத்தா” சத்தமிட்டார்கள். கந்தவனத்தாரின் செவிகளில் தேன் பாய்ந்த உணர்வு. விழிகள் திறந்து சுழன்றன. கிட்டவந்து தொட்டுப் பார்த்தார்கள். அவரது உடலில் ஸ்பரிசம் பாய்ந்தது. சிலிர்த்துக் கொண்டார். அவர்களை ஒருமுறை நோட்டம் விட்டார். அவரது முகத்தில் மலர்ச்சி வந்து சில கோடுகளை வரைந்தது. விழிகள் அகன்று மலர்ந்தன. பேரப்பிள்ளைகள் ஓடியொளிந்து விளையாடினார்கள். ஓடிவந்து கந்தவனத்தாரைத் தொட்டார்கள். அவ்வளவுதான் எட்டி ஓடிவிட்டார்கள். சின்னஞ்சிறிசுகள். அவர்களுக்கு விளையாட வாய்ப்புக் கிடைத்துவிட்டது. குதூகலத்தில் துள்ளக் குதித்துச் சத்தமிட்டார்கள். மீண்டும் தொட்டு ஓடினார்கள். அந்தத் தொடுகை கந்தவனத்தாரின் நாடிநரம்புகளில் பாய்ந்து உயிரூட்டியது. முறுவல் உதடுகளில் நடந்தது. நந்தனின் முகத்தில் மலர்ச்சி. “அப்பா எப்படி இருக்கு.? கேட்டான். புன்னகைக்க முயன்றார். அவரது கைகளை வாஞ்சையோடு பற்றினான். “அப்பா எங்களுக்கு எல்லாம் தெரியும். அபிராமி உங்களோடு இருப்பா. உங்களுக்குத் துணையாக இருப்பா. ஒன்றுக்கும் கவலைப் படாதீங்க. நாங்க இருக்கிறம். உங்கட சந்தோசம்தான் எங்கட சந்தோசம்.” நா தளுதளுக்கக் கூறினான். பிள்ளைகள் கூறியதைக் கேட்டுத் தன்னை மறந்தார். தான் எதனைக் கேட்கவேண்டும் என்று காத்திருந்தாரோ அதனைப் பிள்ளைகள் கூறிவிட்டார்கள். அவரது முகத்தில் சந்தோசம் வந்து குந்தியது. அவரது கண்களிலிருந்து கண்ணீர் மடைபுரண்டது. அவருக்குப் பெருமையாக இருந்தது. “எனது பிள்ளைகள் முற்போக்கானவர்கள்”. மனதில் பெருமை கொண்டார். அவரது உடல் உறுதி பெற்ற உணர்வினைப் பெற்றுவிட்டார். அபிராமியை திரும்பிப் பார்த்தார். அவளது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. அவள் வாழ்வது ஒருவித தவவாழ்க்கைதான். அவள் சலனமற்ற வாழ்க்கையில் அனுபவம் பெற்றுவிட்டாள்.



யாவும் கற்பனை.

Read more...

Friday, December 11, 2009

பொறுமைக்கும் ஒரு எல்லை.

செக்கர் வானம் மேற்கில் வண்ணம் தீட்டி விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய புளிய மரத்தடியில் சிறுசுகளின் களியாட்டம்.. அவர்களுக்கு இந்த உலகத்தைப் பற்றிய கவலையோ அல்லது நாளைய வாழ்க்கையைப் பற்றிய நினைப்போ அறவே கிடையாது. ஓடியாடி ஒழிந்து ‘கீரடிமாரடி’ என்று சொல்வார்களே அதேபோல் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்குமிங்குமாக சின்னச் சின்னக் குழுக்களாகப் பெரிசுகள். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் இன்னொரு புறமுமாகக் கூடியிருந்தனர். சில குழுக்களில் ஆணும் பெண்ணுமாகக் கலந்திருந்தனர். எல்லோர் முகங்களிலும் துன்பத்தின் தாக்கம் துல்லியமாகத் தெரிந்தது. கவலை அவர்களது உடம்பை இளைக்க வைத்து நரையும் திரையுமாக கிழப் பருவத்துக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்தது. சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலாலியை அண்டிய பிரதேசங்களின் மக்கள் சொந்த இடங்களில் இருந்தும் விலகியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். வீடு வாசல்களையும் சொத்துப் பத்துக்களையும் விட்டு விட்டு உயிரைக் கையில் பிடித்தவாறு ஓடியவர்கள்தான். மல்லாகத்தில் அந்த அகதிமுகாமில் தஞ்சமாகி இன்றும் அகதி வாழ்க்கை தொடர்கதையாக மாறிவிட்டது.




பலாலியை அண்டிய பிரதேசங்கள் எல்லாம் இன்று அதி உயர்பாதுகாப்பு வலயங்கள் எனப் பேரினவாத அரசு பிரகடனம் செய்திருக்கிறது. சுமார் பன்னிரெண்டாயிரம் குடும்பங்கள் தங்கள் இல்லிடங்களை இழந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். இந்த அரசு ஜனநாயக முறையைப் பின்பற்றுகிறது என்று சொன்னாலும் நடப்பது என்னவோ வேறொன்றுதான். ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் ஆட்சிமுறை என்பார்கள். ஆனால் இலங்கையில் இனரீதியான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து சிறுபான்மை மக்களைக் கொடுமைப் படுத்துகிறது. தமிழ்பேசும் மக்கள் இன்று அகதிகளாக ஆக்கப் பட்டுவிட்டனர். பலமொழி பேசும் மக்கள் வாழும் இந்நாட்டில் பெரும்பான்மை மக்களின் பலம் ஓங்கி விட்டது. அதனால் சிறுபான்மை மக்கள் கொடுமையின் பிடியில் சிக்கி அனுபவித்த துயர் கணக்கில்லை. தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக இந்த நாட்டின் பல ஊர்மனைகள் எரியூட்டப்பட்டன. அழித்தொழிக்கப் பட்டன. இன்று அகதி முகாங்கள் அதிகரித்துள்ளன.





மழைபெய்து விட்டிருந்ததற்கான ஆதாரமாக பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. மழைநீரில் அங்குள்ள சிறுசிகள் கடதாசிக் கப்பல்களைச் செய்து ஓடம் விட்டனர். கால்களால் சேற்று நீரை வீசி அடித்தனர். பெரிசுகளிளிடம் ஏச்சு வாங்கிக் கட்டியும் கொண்டனர். அந்த இடத்தில் பல தற்காலிகக் கொட்டில்கள். மழைகாலங்களில் அந்தக் கொட்டில்களுக்கும் குடைபிடித்தால்தான் தாக்குப் பிடிக்கும். புளியமரத்தடியை ஒட்டினாற்போல் பழயகாலத்துப் பெரிய கட்டிடம்.. அந்தக் கட்டிடத்தைக் கட்டிய புண்ணியவான் வெளிநாட்டில் இருப்பதாகக் கேள்வி. இந்த நாட்டின் பிரச்சனையினால் தமிழ் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டனர். அந்த ஈழத் தமிழ் மக்கள்தான் இன்று பாரதியின் ‘தேமரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.




அந்தப் பாழடைந்த கட்டிடத்தின் சுவரையொட்டிய தூணில் சாய்ந்து கொண்டு நாகம்மா வானத்தை அளந்து கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் செல் விழுந்து வெடித்தாலும் காதில் வாங்காத யோசனையில் ஆழ்ந்திருந்தாள். சிறுவர்கள் அவளைக் கடந்து ஓடி இடறி விழுந்து எழுந்து சென்றனர். அவள் இந்த உலகத்தில் இல்லை. கடைவாயில் பாதி எரிந்தும் எரியாத புகையிலைச் சுருட்டு. எந்தத் தீய பழக்கமும் இல்லாத நாகம்மாவை அவல வாழ்க்கை இந்தச் சுருட்டுப் புகைக்கும் பழக்கத்தைக் கொடுத்து விட்டது. இடைக்கிடை உள்ளிழுத்து வெளிவிடும் புகைக்காக உதடுகள் கடைவாய்ப் பக்கம் திறந்து மூடிக்கொள்ளும்.. அப்பொழுது ‘பக்..புக்’ என்ற ஒலி மட்டும் எழும்.. அவளுக்கு வயது நாப்பது இருக்கும். ஆனால் அறுபதைத் தாண்டிய தோற்றம்..




ஒரு காலை வாசலுக்குக் குறுக்காக நீட்டியிருந்தாள். மறுகாலை மடித்து இரு கைகளாலும் பற்றிப் பிடித்திருந்தாள். நீட்டிய காலை நீட்டியே வைத்திருப்பாள். வீட்டுக்குள் செல்பவர்கள் அவளது காலைக் கடந்துதான் செல்வார்கள். அவள் இந்த உலகத்தில் இல்லை. அவளது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வடிந்து கொண்டிருந்தது. மயிலிட்டி அவளது சொந்த ஊர். அந்த ஊரை ஊதி விளையாடும் உப்புக் காற்றும்இ காற்றில் சரசரக்கும் பனையோலைகளின் கிசுகிசுச் சத்தமும் நாகம்மாவுக்குப் பிடித்தவை. கடற்கரையில் ஈரமணலில் கால்களைப் புதைத்தும் மணலை உருண்டைகளாக்கி கடலுள் வீசியும்இ தோழிகளோடு விளையாடிய நாட்கள் பாழாய்ப் பழங்கதையாய்ப் போயின. கடலன்னையின் கருணையில் அந்தக் கிராமம் வாழ்ந்து கொண்டிருந்தது. சில நாட்கள் பெரும் பணக்காரர்கள் போல் இருப்பார்கள். அப்படியானால் கடலன்னையின் கடைக்கண் பார்வை கிட்டியதாக மகிழ்வார்கள். பல நாட்கள் அந்தப் பார்வை அவர்களுக்குக் கிடைப்ப தில்லை. என்றாலும் அந்த நிம்மதி அவர்களது சொந்தமாகியிருந்தது. நாகம்மா கடந்தகால வாழ்நாட்களில் தனது நினைவலைகளை வீசிக் கொண்டிருந்தாள்.




சுழன்றடிக்கும் அலைச் சுருளில் புகுந்து தோணியைக் கடலில் செலுத்தி வலையெறிந்து மீன்களைக் கரையில் சேர்க்கும் ஆறுமுகம் நாகம்மாவின் மனதைக் குழப்பி விட்டிருந்தான். அவனது முறுக்கேறிய வாலிபம் நாகம்மாவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. நாகம்மா சற்றுக் கறுப்புத்தான். ஆனால் அவளது கரிய விழிகளும் கனிவான கிள்ளை மொழியும் கண்டாரைக் கிறங்கச் செய்யும். ஆறுமுகத்தானுக்கும் நாகம்மாவில் ஒரு கண்தான். தோழிகளோடு கருவாட்டுக் காவலில் இருக்கும் போதுதான் சாடைமாடையாய் உள்ளங்களின் இரகசியங்கள் வெளியாகும்..

“என்ன! நாகம்மா ஆறுமுகம் நல்ல அழகன்தானே? உனக்குப் பொருத்தம்தான்”
தோழி அன்னம் சொன்னதும் நாகம்மா கிறங்கிப் போனாள். அந்த வெளிப்பாடு அவரவர் வீடுகளுக்கும் எட்டிவிட்டது.. ஊரார் வாய்க்கு இடங்கொடாது, இரண்டு குடும்பங்களும் இருவருக்கும் முடிச்சுப் போட்டுவிட்டன. அந்த இன்பமான வாழ்க்கையில் இந்தத் துயர் குறுக்கிடும் என்று அவள் நினைத்திருக்க முடியாது. ஆறமுகத்தோடு வாழ்ந்த இன்ப வாழ்க்கையின் சின்னமாக மூன்று பெண் குழந்தைகள் அவளைச் சூழ்ந்துள்ளன. அவர்களைக் காக்க வேண்டியது அவளது தலையில் வந்து விழும் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. அந்த நிகழ்வு எதிர்பாராமலேயே வந்துவிட்டது.



கடலில் இருந்து பீரங்கிப் படகுகள் வேட்டுகளைத் தீர்த்துக் கொண்டிருந்தன. உயரப் பறந்த புக்காராக்களும் ஹெலிகளும் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தன. சனங்கள் சிதறுண்டு ஓடத் தொடங்கினர். ஆறுமுகம் பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு பனங் கூடலுக்கூடாக ஓடினான். பின்னால் நாகம்மாள் சில பொருட்களையும் கொண்டு ஓடினாள். ஆறுமுகம். வடலிகளுக்குள் புகுந்து ஓடும் போது ஓரு காலில் முள் குத்திய உணர்வை உணர்ந்தான்.
“நாகம்மா புறங்காலில ஏதோ குத்திப் போட்டுது.”
பாம்பு ஓடியதை நாகம்மா கண்டு விட்டாள். அவள் இதயம் துடித்துக் கனத்தது.

“ ஐயோ.. நில்லுங்க பார்ப்பம்”

“ பாக்கிறத்துக்கு நேரம் இல்ல. செல் விழுந்து செத்துப் போடுவம்.இ வா கெதியா” சொல்லிக் கொண்டு ஓடினான். அவனுக்குக் கால் கடுமையாக வலித்தது. அவனால் முன்னேற முடியவில்லை. மயங்கிக் கீழே சாய்ந்தான். அந்த விரியனின் விசம் வேலைசெய்யத் தொடங்கி விட்டது. வாயிலிருந்து நுரை கக்கியது. உடல் நீலம் பாரிக்கத் தொடங்கியது. அவனிடமிருந்து பதிலே வரவில்லை. ஆறுமுகம் பிரியாவிடை பெற்றுவிட்டான். பிள்ளைகளோடு இந்த அகதி முகாம் அவளையும் ஏற்றுக் கொண்டுவிட்டது. நாகம்மாவின் நினைவலைகள் பார்வதியின் குறுக்கீட்டினால் திடீரெனக் கலைந்தன.

“ எணேய் காலை இப்படியே நீ நீட்டியிருந்தால் உதுகள் விழுந்து உடைஞ்சு போங்கள். அங்கால ஒருக்கால் அரக்கி இருவணணை”.

பார்த்துக் கொண்டிருந்த பார்வதி நச்சரித்தாள். பதிலுக்கு ஒரு பார்வை மட்டுமே நாகம்மாவிடம் இருந்து வந்தது. கைகளை ஊன்றி நீட்டிய காலை அப்படியே இழுத்த படியே வசதியாக முதுகைச் சுவரோடு சாய்த்துக் கொண்டாள். சிறுசுகள் குறுக்கும் மறுக்கும் பாய்ந்து துரத்திப் பிடித்துத் திரிந்தனர்.




தூரத்தே யாரோ வருவது தெரிந்தது. இரண்டு வெளிநாட்டு வெள்ளைக்காரரோடு நமது நாட்டவர்கள் சிலரும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை இடைமறித்துச் சிலர் ஏதோ வாதாடிக் கொண்டிருந்தனர். அவர்களைச் சூழ்ந்து சிறுசிகள். ஓரு திருவிழாவை நடத்திக் கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டிருந்த சின்னத்துரைக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். அவர் குந்தியிருந்த புளிய மரத்தின் வேரைவிட்டு எழுந்தார். அந்தப் புளிய மரத்தின் வேர்கள் நிலத்துக்கு மேல் இரண்டடி உயரத்துக்குப் புடைத்திருந்தன. அந்த வேர்கள்தான் அவர்களுக்கு கதிரையாகவும் கட்டிலாகவும் பயன்படுகின்றன. பாழாய்ப் போன போரினால் சின்னத்துரையரைப் போல் பலர் தங்கள் கால்களை இழந்திருக்கிறார்கள். தான் கழட்டி வைத்த செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு வந்தார். சனங்கள் கையில் கிடைத்த பழைய உரப்பைகளை எடுத்துக் கொண்டு ‘நீ முந்தி நான் முந்தி’ என முண்டியடித்த வண்ணம் புடைசூழ்ந்;து கொண்டனர். யாராவது அகதிமுகாமுக்கு வருகிறவர்கள் ஏதேனும் தருவார்கள் என்ற நப்பாசையை வளர்த்துக் கொண்டு விட்டார்கள். வாகனங்கள் முகாமுக்குள் நுழைந்தால் போதும் சனங்களைக் கட்டுப் படுத்துவது பெரும் சிரமமாக இருக்கும்.. பல வயிறுகளுக்குச் சோறிட்டவர்கள் தங்கள் வயிற்றுக்குப் போராட வேண்டிய கொடுமை. கொடுத்துச் சிவந்த கைகள் இரந்து கிடக்கின்றன. உழைத்து வாழ்ந்த சனங்களை அகதி வாழ்க்கை உழைக்கவிடாது சோம்பேறிகளாக்கி விட்டது. சொந்த நாட்டிலேயே சொந்த மண்ணில் அகதியாகி கையேந்தி வாழவேண்டிய விதி இந்த மக்களுக்கு ஏற்பட்டதேன்?.இப்படியே இவர்களை விட்டால் அடிமைகளாகிக் கையேந்தும் நிலையை உருவாக்கி விடலாம் என்ற திட்டமும் இருக்கலாம்.. ‘விதியே!விதியே என்செய நினைத்தாய் தமிழச் சாதியை.’ .பாரதியின் கவிதையடிகள் அமரத்துவமானவை. இங்கே ஈழத்தமிழ்மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை அன்றே தீர்க்கதரிசனத்தில் கண்டிருப்பானோ?


“ சின்னத்துரை! இத்தனை ஆயிரம் சனத்துக்கும் இருக்கிற கக்கூசையும் கிணத்தையும் ஒருக்கா அவையளுக்குக் காட்டு. பார்க்கட்டுமேன்.”
கந்தையர் ஒருபக்கத்தில் இருந்து சத்தம் போட்டார். இப்போது சின்னத்துரையருக்கு உசார் வந்துவிட்டது. கூட்டத்தை விலக்கியபடி முன்னேறினார்.

“இஞ்சால கொஞ்சம் வழி விடுங்கோ”

சனங்கள் விலகி வழி விட்டனர். சிலர் குறுக்கே நின்றனர். அவர்களது கையில் ; வெறுமனாய்க் கிடக்கும் உரப்பை. அவர்களுக்கு ஒன்றும் கிடையாதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. சின்னத்துரையர் சனங்களை விலக்கிக் கொண்டு முன்னேறிக் கொண்டார். நாகம்மாவுக்கு இது புதிய அனுபவமல்ல. இப்படி இந்தப் பன்னிரெண்டு வருசங்களாக எத்தனைபேர் வந்திருக்கிறார்கள். அவள் கண்டிருப்பாள். அவள் அப்படியேதான் இருந்தாள். எந்த மாற்றமும் அவளிடம் இல்லை. வாழ்ந்தாக வேண்டும் என்பதற்காக வாழ்கிறாள். இங்கு நடப்பதெல்லாம் அவளுக்கு வேடிக்கையும் இல்லை. விளையாட்டும் இல்லை. சின்னத்துரை வந்ததும் வராததுமாகக் கேட்டார்.


“ஐயாமார்களே! உங்களுக்குக் கோடி புண்ணியம். எங்களை ஒருக்கா எங்கட சொந்த இடத்தில இருக்க ஏற்பாடு செய்யுங்கோ அதுபோதும் எங்களுக்கு”
கோரிக்கை விடுத்தார்.

“எங்கள எப்ப எங்கட சொந்த இடத்தில இருக்க விடுவினம்.? எங்கட இடத்தில ஆமிக்காரங்கள் இருக்கலாம் என்றால் ஏன் நாங்க இருக்கேலாது? எங்கள இங்க அடைச்சி வைச்சிருக்கினம். என்ன அனியாயம்.? அகதிமுகாம் என்ற பேரில திறந்த சிறைச்சாலையில கிடக்கிறம்.”? கந்தையர் அவர்களைப் பார்த்தபடி கேட்டார். .அங்கே பதில் சொல்லத் திராணி அற்றவர்களே நின்றிருந்தனர். நாகம்மா சற்றுத் திரும்பி இருந்தாள்.

“ கந்தையாண்ணே! என்ன இவங்களிட்ட கதைக்கிறியள். இவங்களால முடியுமே? பாவம். அவங்களும் எங்களக் காட்டிப் பிச்சை எடுத்து வாழுகினம். நாங்க அகதியாக்கப் பட்டதாலதான் அவங்களுக்கு இப்படி சொகுசு கிடைச்சிருக்கு. எங்கள இப்படி இருக்கச் செய்தால்தானே இவங்களும் வாழலாம்.”

நாகம்மா நறுக்கெண்டு சொல்லிப் போட்டு மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
“ பொல்லாத வாயாடி என்ன?”

வந்தவரில் ஒருவர் கூறியதை நாகம்மாவின் காது கேட்டுவிட்டது. அவர்களுக்கு அவளைப் பற்றி என்ன தெரியும்? நாகம்மா பேசவில்லை. உண்மையைக் கூறினால் உறைக்கும் என்று அவளுக்குத் தெரியும். அவள் கடந்த கால வாழ்க்கையில் மூழ்கிவிட்டாள். அந்தப் பயங்கர நிகழ்வு அவளை உலுக்கியது.

“நாகம்மா! அடுப்பு பத்தவைக்க ஒன்டுமில்லை. போய் கொஞ்சம் விறகு பொறுக்கி வருவமே”?

இராசம்மா தலையில் ஒரு சீலைத்துண்டைப் போட்டபடி கேட்டாள்.
“ஓம் ராசம். நானும் கேக்கத்தான் இருந்தனான். நீ முந்திற்றாய். போவமே.”
கயிற்றுத் துண்டுகளோடு சென்றனர். பக்கத்ததுக் கிராமம் பாழடைந்து போய்க் கிடந்தது. முதலில் இராணுவமுகாம் அந்தக் கிராமத்தில் இருந்தது. அங்கிருந்து வேறு இடத்துக்கு இராணுவம் இடம் மாறியது. அந்தக் கிராமம் காடாய் மாறிக் கிடந்தது. அங்குதான் இவ்வளவு நாளும் விறகெடுத்தவர்கள். பூவரசு மரத்தின் கிளைகள் காய்ந்திருந்தன. கிளைகளை வெட்டிக் கட்டினர். ஆளுக்காள் உதவித் தலையில் தூக்கி வைத்து நடந்தனர். பட்பட் என்று பெரும் சத்தத்தோடு முழங்கியது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். யாழ் மருத்துவமனையில் நினைவு திரும்பிய பின்னர்தான் முழங்காலுக்குக் கீழ் ஒருகால் இல்லை என்பது புரிந்தது. கவலை சூழ்ந்த முகத்தோடு தான் பொருத்திய பொய்க் காலைப் பார்த்தாள். இங்கு எத்தனை பெண்களுக்குக் கால்கள் இல்லை. அவர்களை நினைத்துக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர்த் தாரைகள் ஊற்றெடுத்துப் பாய்ந்தன. இந்தக் கொடூரங்களால்தானே நான் வாயாடியானேன். தனக்குள்ளேயே புலம்பினாள்.




சின்னத்துரை வந்தவர்களை முகாமின் பகுதிகளுக்குக் கூட்டிச் சென்றார். ஒவ்வொரு பகுதியாகக் காட்டிச் சென்றார். இடையிடையே விளக்கம் கொடுக்கத் தொடங்கினார். “ஐயா! இஞ்ச மூன்று கிணறுதான் இருக்குது. ஒரு கிணற்றின் சொந்தக்காரர் வந்திட்டார். அங்க தண்ணி எடுக்கேலாது.

“ஏன் அந்தக் கிணற்றில தண்ணி எடுக்கேலாது”? சொந்தக்காரர் விடமாட்டார் என்பதை இவர்களுக்கு எப்படிச் சொல்வது? அவர் சொல்லத் தயங்கினார்.சொல்லவில்லை. கதையை மாற்றினார்.

“அதோ இருக்கு. அந்தக் கிணறு பாவிக்கேலாது. அது உவர்த்தண்ணீர். மற்றக் கிணற்றிலதான் இந்தச் சனங்களெல்லாம் தண்ணி எடுக்குதுகள். தண்ணி குறஞ்சி கொண்டு போகுது. தண்ணீருக்குத்தான் பெரும் தட்டுப்பாடு."

“அப்படியா”? அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். பன்னிரெண்டாயிரம் குடும்பங்களும் பாவிக்கும் ஒன்பது மலசல கூடங்கங்களையும் காட்டினார். அனுதாபமாகப் பார்த்தவர்கள் வந்த வழியே போய்விட்டார்கள். சின்னத்துரையரின் கோரிக்கைக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. அவருக்குக் கிடைத்த பதில் ‘இதெல்லாம் அரசியல் விவகாரம்’ என்பதே.




அந்தப் புளியமரத்தின் கீழ் கூட்டம் நடைபெற்றது. கந்தையர் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுயன்றார். சின்னத்துரையர் தலைமையில் கணபதியாரைச் சந்தித்துச் சமாதானமான முறையில் தண்ணீரைப் பெற முடிவெடுத்தனர். அகதிமுகாம் உருவானபோது மூன்று கிணறுகளையும் துப்பரவு செய்து பாவித்தனர். கணபதியார் ஊர் திரும்பியதும் பிரச்சினை உருவாகிவிட்டது. “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தச் சிறையில் கிடப்பது? ஏலாது. பொறுக்கமுடியாது. எங்கட சொந்த ஊர்களுக்குப் போயாகவேணும். ஏதாவது செய்ய வேணும். அதைச்செய்யுங்கோ”? செயற்கைக் காலை நீட்டிக் குனிந்து எழுந்தவாறே நாகம்மா கூறினாள்.

“முதலில் இந்தத் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு வேணும்.. அதை இப்ப செய்வம்..கணபதியாரோட கதைப்பம். முதலில் பேச்சு வார்த்தை. மிஞ்சினால் பார்ப்பம்.” கந்தையர் எடுத்த முடிவு சரியாகப் பட்டது.


சின்னத்துரையர் தலைமையில் அகதிகள் அனைவரும் குடங்களோடு நடந்தனர். கணபதியாரின் வீட்டுப் படலையில் நின்றனர்.
“ஐயா!” கணபதியரைக் கூப்பிட்டனர்.

“ யாரது” கேட்டுக் கொண்டு கணபதியார் வெளியில் வந்தார்.

" நாங்கதான்.. எங்களுக்குத் தண்ணி வேண்டும். தண்ணி எடுக்கப் போறம். அதுதான்..” சொல்லிக் கொண்டு நின்ற சின்னத்துரையரை எரித்து விடுவதுபோல் கணபதியார் பார்த்தார். அது அவரையும் கூடவந்தவர்களையும் எரிப்பதுபோல் இருந்தது. கூனிக் குறுகி நிலத்தைப் பார்த்தார்கள். அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள். எழுந்து நிமிர்ந்து நிற்கத் திராணியற்றவர்கள். பழக்க தோசம் அதனால் பயந்து விட்டனர்.


“ஏனடா.. உங்களுக்குத் திமிரோ? இவ்வளவு காலமும் இல்லாத திமிர் இப்ப வந்தற்று என்ன? என்னட்ட வந்து.. என்ர கிணத்தில தண்ணி கேட்கிறியள்.. என்ன தைரியம் உங்களுக்கு”.
கணபதியார் ஆணவத்தோடு பேசினார். சின்னத்துரையருக்குப் பக்கத்தில் நின்ற இளையவனுக்குக் குறுகுறுத்தது. அவன் இளைஞன். பயமறியாத பருவம்.. பக்குவமாகப் பேசினான்.


"ஐயா கோவிக்கக் கூடாது. குடாநாட்டில குழப்பம் என்டதும் ஊரைவிட்டு ஓடினியள். எங்களால ஓடமுடியல்ல. எங்களுக்குப் போறதுக்கு இடமும் இல்ல. எங்க போறதெண்டும் தெரியாது. சமாதானம் என்டதும் வந்திட்டியள். ஆமிக்காரனிட்ட அடியுதை வாங்கி நாங்க இஞ்சதான் செத்துக் கொண்டிருக்கிறம். இந்தக் கிணத்துத் தண்ணிய எடுக்க உரிமை இல்லயெண்டு சொல்ல நீங்க யார்”? அவன் ஆவேசத்தோடு சொற்களைக் கொட்டிப்போட்டான்.
"இஞ்சபாருங்க தம்பியவள்.. தேவையில்லாத கதையெல்லாம் என்னட்;டக் கதைக்க வேண்டாம். எழிய சாதியெல்லாம் இஞ்ச தண்ணி எடுக்கேலாது தெரியுமோ?. வந்த வழியப் பார்த்திட்டுப் போங்கோ..ல்லாட்டி நடக்கிறதே வேற”. அவரது பேச்சு அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டவில்லை. பதிலாக அனுதாபத்தை ஏற்படுத்தியது. அவரது திமிர் இங்குமட்டுந்தான் என்பது அவர்களுக்குத் தெரியும்.
“எழியசாதி என்று பார்த்ததாலதான் இப்படித் தமிழன் சிதறுண்டு போய்க்கிடக்கிறான். உங்களப்போல ஆக்கள் இருக்கும் வரை தமிழன் தலைநிமிராது.. ஐயா எங்கட ஊர்ல உங்கட கனவு பலிக்காது” முகுந்தன் அவரைப் பார்த்துக் கூறினான். கணபதியார் எதற்கும் காத்திராது படலையை இழுத்து மூடிவிட்டுக் போய்விட்டார். அவரின் அந்தச் செயல் ஆத்திரத்தை ஊட்டியது.



.
“அண்ணே என்ன பாத்திற்று நிக்கிறியள். ஆமிக்காரனும் அடிக்கிறான். நம்மடவனும் அடிக்கிறான். இன்னும் பொறுத்தமென்டால் நமக்கு விடுதலையே இல்லை.” ஆனந்தன் ஆவேசத்தோடு கூறினான். “நாங்க இப்படிக் கிடப்பதால்தான் எல்லாரும் ஏறி மிதிக்கிறாங்க. எங்கட உரிமையை அடைய ஒற்றுமை வேணும்.. எங்கடவனே எங்கள மதிக்கிறான் இல்ல. மிதிக்கிறான். பிறகு அயலவன் எப்படி மதிப்பான்.? அவனும் மிதிப்பான். டேய்! படலையை உடைங்கடா”
சொல்லிக் கொண்டு கந்தன் படலைக்கு ஒரு உதை விட்டான். படலை தெறித்துத் துரத்தே விழுந்தது. சனங்கள் ஆரவாரித்தனர். “இனிமேலும் அடிமைகளாய் இருப்பதை விட செத்துப் போவோம்.. எங்கட விடுதலைக்காய் இனியொரு விதி செய்வோம்.. எங்கட மண்ணில இருந்து அந்நியனை விரட்டுவோம்.. எல்லாரும் வாங்கோ” ஆனந்தன் உரத்த குரலில் கூவினான்.


கந்தையர் துள்ளி வந்தார். அவரது உடலில் ஒரு சன்னதம் தெரிந்தது. என்றுமில்லாதவாறு இறுமாந்திருந்தார்.

“இன்;னும் என்ன பாத்திட்டு நிக்கிறியள்.. எல்லாரும் போய்த் தண்ணி அள்ளுங்கோ.”
கட்டளை இட்டுவிட்டு நிமிர்ந்து நின்றார். நடப்பது கனவா அல்லது நினைவா? கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் நடந்து விட்டது. கணபதியார் செய்வதறியாது சிலையாகி நின்றார். கணபதியாருக்குப் பின்னணி பாடியவர்கள் மெல்ல நழுவினர். அவர் அவர்களைத் தடுக்க முயற்சிக்க வில்லை. தண்ணீர் அள்ளுபவர்களையும் தடுக்கவில்லை. சனங்கள் தண்ணீரை அள்ளிக் கொண்டு சென்றனர். அவர்கள் முகத்தில் சந்தோசம் குந்தியிருந்தது. அவர்கள் இப்போது தங்கள் உரிமையை உணர்ந்து கொண்டார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் சொந்த நிலங்களை விடுவிக்கத் துணிந்து விட்டார்கள். அதி உயர்பாதுகாப்பு வலயம் அவர்களுக்கு ஒரு தடையாகத் தெரியவில்லை. அந்தப் பாதுகாப்பு வலயங்களைத் தகர்த்தெறியப் புறப்பட்டு விட்டார்கள்..

Read more...

கரோலின்

மேற்கு வானத்தில் வண்ண விளையாட்டு. சூரியனின் ஒளிக்கற்றை மேகத்தினிடை புகுந்து விளையாடி, வண்ணம் பூசுகிறது. .செவ்வந்திமலர்க் கூட்டம் சோடித்து வண்ணம் வண்ணமாய் கோலம் போடுதல்போல் மேகக் கூட்டங்கள் வானில் மிதந்து வேடிக்கை காட்டிக் கொண்டு இருந்தன. தீவுகளாய், விலங்குகளாய். வண்ணக்கடல்களாய், மலைகளாய், கற்பனைக்கெட்டாத அற்புதக் காட்சிகள் விரிந்து கிடக்கின்றன. கண்ணிமைக்குமுன் காட்சிகளை மாற்றி மாற்றிப் புதுப்புதுக் காட்சிகளைப் படரவிட்ட வண்ணம் அவை நெளிந்து அசைந்து கொண்டிருந்தன. வானத்தில்தான் எத்தனை புதுமைகள்.? இயற்கை இத்தனை அழகை எங்கிருந்து பெற்றது?. ஏத்தனை விதமான மாயாஜாலங்களைக் காட்டி மனித மனங்களை ஈர்த்தெடுத்து விளையாட்டுக்களைக் காட்டுகிறது. வாழ்க்கை பொய்கலந்த உண்மை போலவும், உண்மைகலந்த பொய்போலவும், சித்துவிளையாட்டினைக் காட்டுகிறது. இளம் உள்ளங்களில் மலர்ச்சியின் உன்னதத்தையும், கிழம்தட்டிய வயதானவர்களது உள்ளங்களில் வாழ்க்கையின் நிலையாமையையும் காட்டி நிற்கிறது. நாளாந்தம் இந்தப்புதுமைகள் சொல்லி வைத்ததுபோல் நிகழ்ந்தாலும், இதனை எத்தனை மனிதர்கள் உணர்வு பூர்வமாக உணர்ந்து ரசிக்கிறார்கள். புரிந்து அனுபவிக்கிறார்கள். பலருக்கு இந்த உலகம் ஓரு போராட்டக்களமாக மாறிவிடுகிறது. இயற்கையை ரசிப்பதற்கு அவர்களுக்கு அவகாசம் கிடையாது.




இமயத்தில் ஊற்றெடுத்து நிலமடந்தையை முகர்ந்து கிளுகிளுப்பேற்றி, சிலிர்க்கவைத்து, வளைந்து நெளிந்து இனம், மதம், சாதிபேதங்களைக் கடந்து அனைத்து உயிர்களுக்கும் தாகம் தீர்க்கும்; கங்கைநதி பலகிளைகளோடு பாய்கிறது. அதில் ஒருகிளையாக கூக்கிளி கொல்கொத்தா நகரை அணைத்துச் செல்கிறது. கொல்கத்தா இன்னும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நகரினை வளப்படுத்தி, வண்ணம் சேர்த்து கூக்கிலி நதி வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது. கடலும், நதியும் சங்கமிக்கும் காட்சி அற்புதமானதொரு சிலிர்ப்பை ஊட்டுகிறது. அனலாகக் காற்று வீசுகிறது. கோல்கொத்தா நகரின் எதிர்புறத்தில் கூக்கிளியின் மறுகரையில் அமைந்திருக்கும் ஹோட்டல் றடிசனில் நானிருந்து பார்க்கிறேன். நதியின் நீராவி புகைமண்டலமாகக் கூத்துக்காட்டுகிறது. கொல்கொத்தா நகர் புகைமண்டலத்தினுள் புகுந்துள்ளது போல் தெரிகிறது. கூக்கிலி நீரில் காற்றுப் புகுந்து குளிரினை அள்ளியெடுத்து அனல்காற்றின் வெப்பத்தைத் தணிக்க முயல்கிறது. நதிப்படுக்கை வண்டற்படைகளினால் வளமுற்றுக்கிடக்கிறது. கரைகளில் தாவரப்போர்வை விரிந்து கிடக்கிறது. அடர்ந்து உயர்ந்த மரங்களை வளைத்துப் பற்றிப் படர்ந்து ஏறுகொடிகள் வானை எட்டிப்பார்க்கின்றன. வாழ்க்கை என்பது மனிதருக்கு மட்டுந்தான் போராட்டமாக இருப்பதில்லை. ஒவ்வொரு உயிரிங்களும் வாழ்வதாற்காகப் போராடுகின்றன. ‘தக்கன பிழைக்கும்’ என்று எவ்வளவு அற்புதமாக நமது முன்னோர்கள் கூறிவைத்தனர்.




ஆவியாக்கத்தினால் வெயிலின் கொடுமை புரியவில்லை. மப்பும் மந்தாரமாகவும் இருந்தாலும் அனல்காற்று வறுத்தெடுக்கிறது. மரங்கள் காற்றிலாடிச் சிலிர்த்து நிற்கின்றன. காட்டுப்பூக்கள் விரிந்து அற்புதங்களை உலகினுக்குச் சமர்ப்பிக்கின்றன. பறவைகள் பாடிப்பறந்து தமது நடிபங்கை நிறைவு செய்கின்றன. மெல்லிய இளந்தென்றல் அசைந்து கொண்டிருக்கிறது. மனிதர்கள் வருவார்கள். தமது நடிபங்கை நிறைவு செய்வார்கள். போவார்கள். உலகம் சுழலும். மாற்றங்கள் நிகழும். வையக வாழ்வு அற்புதமானது. இந்த உடலில் உயிர் உள்ளபோதுதான்; அதன் மகத்துவத்தை உணரமுடியும்.




எனது கண்களும், மனமும் வானைத் தொட்டு நிற்கும் அற்புதமாக வடிவமைக்கப் பெற்ற ஹோட்டலை வியப்புடன் அளைகிறது. எவ்வளவு அற்புதமாக வடிவமைத்துள்ளார்கள். 1783ல் கட்டப்பட்ட கோட்டை. இரண்டாம் உலகப் போரின்போது யப்பனியரின் குண்டு வீச்சால் சிதைந்து போனது. இந்தியா சுதந்திரம் பெற்றபின் கோட்டை செப்பனிடப்பட்டது. அதன் வரலாற்றுச் சின்னங்களையும் சிறப்புக்களையும் ஒன்று சேர்த்து பழைய அமைப்பைக் கலையாது அதே கலைவண்ணத்தோடு புதுக்கட்டிடங்களும் கட்டப்பட்டு எடுப்பாக ‘ஹொட்டல் றடிசன்’; என்ற பெயரோடு நிலைத்திருக்கிறது. கூக்கிளி ஒருபுறம் கொல்கொத்தா நகர் பரந்து கிடக்கிறது. நகரின் எதிர்புறமாக கூக்கிளியின் மறுபுறமாக ஹோட்டல் றடிசன் நிமிர்ந்துள்ளது. நதிக்கரையோர நிலப்பரப்பின் தாவரப் போர்வை பசுமை விரித்துக் குதூகலிக்கிறது.




ஹோட்டல் றடிசனில் நான் தங்கியிருக்கிறேன். எனது அறையிலிருந்து வெளியில் வருகிறேன். அறையினைப் பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே அழகான ஒரு கட்டிளம் கன்னியின் படம். வசீகரமான கண்கள். வடித்தெடுத்த அமைப்போடு கூடிய உருவம். தெய்வச்சிலையாகத் தெரிந்தாள். தொடர்ந்து பல படங்கள். தனித்தனியாகவும், குடும்பமகவும் காட்சியளித்தன. இவை பெரிய வரலாற்றைத் தாங்கியுள்ளதை அங்கு வேலை செய்யும் சிப்பந்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். உணவகம் கூக்கிளியின் கரையோரமாக இருந்தது. செவ்வந்தி மாலைப்பொழுதில் கூக்கிளி குதூகலிக்கும். படகுகள் அசைந்து திரியும். அக்கரையில் கொல்கொத்தா நகரம் மங்கலாகத் தெரிகிறது. தேநீரை வரவழைத்து இருக்கையில் அமர்ந்தேன். ஹோட்டல் உதவி மனேஜர் உலாவந்தார். அவரிடம் ஹோட்டலின் வரலாறு பற்றிக் கேட்டேன். அவர் கூறியதும் உசாரானேன். வரவேற்பறைப் பக்கம் விரைந்தேன். சில தகவல்கள் கிடைத்தன. தகவல்களை மனக்கொம்பியூட்டர் பதிந்து கொண்டது. கண்கள் படங்களில் நிலைகுத்தி மேய்ந்தன. கதானாயகனின் படம்மட்டும் அங்கிருக்கவில்லை. கட்டழகுக் கன்னி கரோலின், அவளது தாயார் மேரி, தந்தை ஜெனரல் வாற்சன் ஆகியோரின் படங்களும் என்னைக் கற்பனையில் மிதக்கவிட்டன. எனது மனக்குதிரை கட்டுப்பாட்டுடன் விரைந்து செயற்படுகிறது.




வழமைபோல் அந்த வெண்குதிரை தனது பயணத்தில் ஈடுபட்டிருந்தது. குதிரையின்மேல் அழகெல்லாம் ஒன்றிணைந்து உருவாகின சாயலில் கரோலின். பதினாறு வயதுக் கட்டழகி. அவள் உள்ளம் கற்பனையிலும். ஓப்பனையிலும் மிதந்து கொண்டிருந்தது. கூக்கிலியில் இருந்து புறப்பட்ட சிற்றலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவளது அழகை ரசித்துச் சிரித்து ஒலியெழுப்பி எட்டிப்பாத்துப் பின்வாங்குகின்றன. பார்த்து ரசித்த பறவையினங்கள் மெய்மறந்து பாடிக்களித்தன. குளிர் தென்றல் கட்டியணைத்துச் சுகம் சொன்னது. அவள் அமர்ந்திருந்த குதிரை அவளது மெல்லுடலைச் சுமந்து கொண்டு உடலுக்கு நோகாதவாறு ஒரு அற்புதக் குலுக்களுடன் போய்க்கொண்டிருந்தது. அவளைச் சுமப்பது அதற்கு ஒரு இன்பம்போலிருந்தது. அவளது குறிப்பறிந்து செயற்பட்டது. குதிரை சற்று வேகமாக விரையும். பின் தொங்கோட்டத்தில் ஓடும். ஓட்டத்திற்கு ஏற்றவாறு அவளது மேனியெங்கும் தொடரலைபோல் பரவும். மெல்லக் குலுங்கி அசையும். சிலவேளைகளில் தனியாகவும், சிலவேளைகளில் தனது அன்னையுடனும் செவ்வந்தி மாலைப்பொழுதில் பயணப் பொழுதுபோக்கு நிகழும்.




அவளது அன்னை மேரி வெகு தூரத்தில் குதிரையில் வந்து கொண்டிருந்தாள். கரோலினின் குதிரை சற்று வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. மேரியின் குதிரை மெல்ல மெல்ல ஆற்றோரத்தின் அழகில் மயங்கிப் போய்க்கொண்டிருந்தது. மேரி இயற்கையழகை நேசிப்பவள். பசுமை விரிந்த மரஞ்செடிகளையும், பூக்களையும், பறவைகளின் குரல்களிலும் தன்னை மறப்பவள். குதிரையில் அமர்ந்தவாறும், இறங்கி மலர்களைத் தொட்டழைந்தும் ரசிப்பவள். குறிப்பிட்ட தூரம் வரை இருவரும் சென்று ஓய்வெடுத்துத் திரும்புவார்கள்.
“அம்மா இந்த நதி எவ்வளவு உயிரினங்களை மகிழ்விக்கிறது. உயிரூட்டுகிறது. அற்புதமாக இல்லை”? வினாவாக மலர்ந்தாள்.

“அதனால்தான் இந்தியர்கள் நதியினைத் தாயாக, சக்தியாக மதிக்கிறார்கள். நதிகளை இந்து சமயம் சக்தியாகப் போற்றுகிறது”. மேரி நதியின்மேலுள்ள பற்றினை வெளிப்படுத்தினாள்.

இரக்க சுபாவமுள்ள மேரி தனது மகள்மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்து வந்தாள். கரோலினது கண்களில் கண்ணீரைக் கண்டால் அவளது நெஞ்சில் உதிரம் கொட்டும். மகளின் துடுக்கும், நகைச்சுவைப் பேச்சும், இயற்கையினை ரசிக்கும் பாங்கும் மேரிக்கு மகிழ்ச்சியினை ஊட்டியது. கரோலின் நதியைப் பார்த்தாள். தனது தாயைப் பார்த்தாள்.
“அம்மா இந்த நதிநீரில் நான் சங்கமித்தால், உயிரினங்களுக்கு உரமாவேனல்லவா? நானும் அந்தச் சக்தியோடு சேரமுடியுந்தானே”?
மேரி அதிர்ந்து விட்டாள். கண்கள் பனித்தன. “என்ன வந்தது உனக்கு? அப்படியெல்லாம் பேசக்கூடாது. நாம் மனிதர்கள். நதியினைத் திசைதிருப்பி அனைத்து உயிரினங்களுக்கும் உதவமுடியும். அதனைச் செய்யலாம் அல்லவா”? இருவரும் உரையாடி உலாப் போனார்கள்.




இந்தியா ஐரோப்பியரின் பிடியில் சிக்கிவிட்டிருந்தது. மன்னராட்சி மக்கள் மனங்களில் நிறைவு தந்திருந்தது. மன்னர்களைத் தங்களது ரட்சகர்கள் என்று மக்கள் இறுமாந்திருந்தனர். மன்னர்களின் குடும்ப ஆட்சி கொடிகட்டிப் பறந்தது. மன்னர்கள் பரம்பரை செல்வச் செழிப்போடு வாழ்ந்தது. மன்னர்களுக்கு இனமத மொழி வேற்றுமையில்லை. மன்னர்கள் மன்னர் பரம்பரையிலேயே திருமணம் செய்து கொள்ளும். ஆனால் குடிமக்கள் அவ்வாறு செய்யமுடியாது. அவர்களுக்கு மட்டும் சாதி, இனமத , மொழி வேறுபாடிருந்தது. மன்னர்களுக்குள் போட்டி, பொறாமை, பதவிமோகம், நிறைந்திருந்தது. அரசர்களின் நன்மைக்காகவும், பதவிக்காகவும் மக்கள் பயன்படுத்தப் பட்டார்கள். பதவியாசைகளால் ஆளையாள் காட்டிக் கொடுத்து அழிந்தார்கள். மக்கள் அந்நியர் வசம் சிக்கி அடிமைகளானார்கள். வணிபநோக்கில் வந்த ஐரோப்பிய கம்பனிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இந்தியாவும் அவர்களின் பிடியில் சிக்கிவிட்டது. 1783ல கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்குள் இந்தியா வந்து விட்டது.




இந்தியாவை ஒல்லாந்தர் கைப்பற்றியதும் கூக்கிளி நதிக்கழி முகத்தில் பிரமாண்டமான கோட்டை அமைக்கப் பெற்றது. பிரித்தானிய கிழக்கிந்திய கொம்பனி; ஒல்லாந்தரை விரட்டியடித்து கைப்பற்றியதும் அந்தக் கோட்டை பிரித்தானியர் வசமானது. படையணிகள் குவிக்கப் பெற்றுப் பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டது. இந்தியாவின் செல்வமனைத்தும் சுரண்டப்பட்டது. கூக்கிளி நதியின் துறைமுகம் பிரபலமடைந்தது. துறைமுகத்தில் பல்வேறுநாட்டுக் கப்பல்கள் வந்து போயின. எனினும் போத்துக்கீசக் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் சவாலாக இருந்தது. அதனால் பிரித்தானியப் போர்வீரர்களது தேவை அதிகமாயிருந்தது. சாதாரண போர்வீரர்களையும், கூலிப்படைகளையும் தெற்காசிய நாடுகளில் இருந்து பெற்றுக் கொண்டனர். கொல்கத்தாவைத் தாலாட்டித் தட்டிக் கொடுத்துச் செழிப்பாக்கி கூக்கிளி நதி வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது. நதியைப் போல் மனிதர்கள் இருந்திருக்கலாம். நுதி அழுக்கை அகற்றி, அடியில் படியவைத்து ஒழுக்காறாக ஓடுகிறதல்லவா?; வேறுபாடில்லாமல் நீரை ஏல்லோருக்கும வழங்குகிறது.




கொல்கத்தாவுக்கு ஜெனரல் றெஜினோல்ட் வாற்சன்; அனுப்பப்பட்டார். ஜெனரல் வாற்சன் கடமை தவறாதவர். கட்டுப்பாடானவர். அவருடன் மனைவி மேரியும், மகள் கரோலினும் வந்திருந்தனர். பெரும் படையணிக்கும், பிரித்தானிய கிழக்கிந்திய கொம்பனிக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக ஜெனரல் விளங்கினார். அவரது படையணியின் சாதாரண போர்வீரனாக ஹென்ற்லி கடமையாற்றினான். ஹென்ற்லி கட்டழகன் மட்டுமின்றி கடமையிலும் கண்ணானவன். கூக்கிலிக் கரையோரப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தான். நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டையாளும் அதிகாரிகள், அவர்கள்தம் குடும்பத்தவர்களது பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருக்கவேண்டும். செவ்வந்தி மாலைப் பொழுதில் மேரியும், கரோலினும் உலாப் போவதைப் பார்த்திருக்கிறான். அவர்களது ரசனையை மெய்மறந்து ரசித்திருக்கிறான். அவன் கடமையாற்றும் காவல்நிலையைத் தாண்டி குதிரைகள் விரைந்து செல்லும். அவர்கள் போவதை அவதானித்தவாறு இருப்பான்.




அன்று அதிசயமாக அது நடந்தது. கரோலினது குதிரை சற்று வேகமாக முன்னால் விரைகிறது. தூரத்தே மேரியின் குதிரை வந்து கொண்டிருந்தது. காற்றும் பலத்து வீசிக்கொண்டிருந்தது. காற்றுக்கு எதிர்த்திசையில் குதிரை வந்து கொண்டிருந்தது. காவல்நிலையைத் தாண்டும்போது கரோலினின் அழகான தொப்பி காற்றோடு விளையாடியது. அதனைக் காற்று மெல்லெனப் பறக்கவிட்டது. இன்னும் தாமதித்திருந்தால் தொப்பி கூக்கிளியோடு சங்கமித்து நீந்திவிளையாடும். தொப்பி தலையிலிருந்து நழுவியதை கரோலின் உணர்ந்து கொண்டு குதிரையைத் திருப்பினாள். காவல்நிலையத்தில் ஹென்ற்லி கடமையிலிருந்தான். ஹென்ற்லி கட்டழகன். படையணியில் இருக்கும் இளைஞர்களைக் கன்னியர் ஏறெடுத்துப் பார்ப்பது அரிது. தனது எஜமானனின் மகள் அவள். அவளது பாதுகாப்பு அவனது கடமையானது. தொப்பி தண்ணீரில் விழுந்தால் என்ன கதி? “பார்த்துக் கொண்டிருந்தாயா”? தனக்கு ஏதும் நடக்கலாம். நினைத்துப் பார்க்குமுன் ஹென்ற்லி உசாராகிவிட்டான்.




ஒரே பாய்ச்சல். தொப்பியைத் தண்ணீரில் விழவிடாது பிடித்துக் கொண்டான். கெரோலினின் குதிரை திரும்பியது. அவன் பாய்ந்து பிடிக்கும் லாவண்யத்தை கரோலின் ரசித்தாள். குதிரை தன்னை நோக்கி வருவதைக் கண்டான். தான் தண்ணீரில் நனைந்துள்ளதை பொருட்படுத்தவில்லை. குதிரையை நோக்கி நடந்தான். கரோலினுக்கு மரியாதை செலுத்திவிட்டு தொப்பியை நீட்டினான். அவள் குதிரையை விட்டுக்கீழே இறங்கினாள். தோப்பியைப் பெறுவதற்காகப் பார்த்தாள். அவளது இதயத்தில் ஒரு மின்வெட்டின் பாய்ச்சல். புhர்வை ஹென்றலியைத் தாக்கியது. அவனும் அதிர்ச்சிக்குள்ளானான். ஒரு புன்னகையை எறிந்து நன்றி சொன்னாள். தொப்பியைப் பெற்றுக் கொண்டாள். நான்கு கண்களும் சந்தித்துக் கொண்டன. மனங்கள் கலந்தன. இனந்தெரியாத இன்ப அதிர்ச்சி. “என்ன வந்ததெனக்கு?. அவனிடம் காந்தம் இருக்கிறதா? என்னை இழுத்தெடுக்க”. அதிசயித்து நின்றாள். அற்புதமான உணர்வு உள்ளங்களில் படிந்து கிளர்ந்து வேர்விடத் தொடங்கியது. அவர்கள் உள்ளங்களில் அது துளிர்விடத் தொடங்கியது. அவர்களது உள்ளங்களைப் புரிந்த உணர்வில் கூக்கிளி சிற்றலைகளைக் கரையில் வீசி எறிந்து சிரித்துக் கொண்டிருந்தது. அலைகள் கரையில் மோதிக் கலகலத்தன. கூக்கிளி செம்புலப் பெயல்நீரைச் சுமந்து சலனமற்று ஓடிக்கொண்டிருந்தது. அந்த இளம் உள்ளங்களில் ஒரு மலர்வு. உதடுகளில் அன்புப் பரிமாற்றம் துளிர்விடத் தொடங்கியது. மேரி நடந்ததைக் கவனித்தாள். மேரி அதனைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஹென்ற்லி சாதாரண படைவீரன். தனது மகள் ஜெனரலின் மகள். ஒரு எஜமானிக்குச் செய்யும் கடமையாகவே மேரி நினைத்துக் கொண்டாள். அவளும் ஹென்ற்லிக்கு நன்றி சொன்னாள். அவனுக்குப் பெரும்பேறாக இருந்தது.




கண்கள் மட்டும் உருவங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டன. கரோலின் உள்ளத்தில் ஹென்ற்லி சிறைப்பட்டான். ஹென்ற்லியின் உள்ளத்தில் கரோலின் குந்திக் கொண்டாள். இயற்கை எவ்வளவு அற்புதமானது. இளமையைக் கொடுத்து அளப்பரிய கற்பனைகளைக் காண்பித்து, துணிச்சலையும், சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலையும் கொடுத்திருக்கிறது. அதேவேளை தடைகளையும் போட்டு அவற்றை உடைத்தெறியும் வல்லமையையும் கொடுத்துள்ளது. தக்கன பிழைக்க வழியும் செய்துள்ளது. இப்போது கரோலின் தனிமையில் செல்லவில்லை. உள்ளத்தின் உள்ளே ஹென்ற்லியைச் சுமந்து கொண்டு சென்றாள்..





கரோலினின் வாழ்க்கையில் அந்நிகழ்வு ஒரு அற்புதத்தை ஏற்படுத்திவிட்டது. கண்ணை மூடிப்ப் பார்த்தாள். ஹென்ற்லி முன்னின்றான். அவளுக்கு உறக்கம் வரமறுத்தது. அடிக்கடி அந்நிகழ்வு மனத்திரையில் விழுந்து பூச்சாண்டி காட்டியது. அவள் நிலைதடுமாறித்தான் போனாள். ஹென்ற்லியின் முகமும், அவனது செயலும் அவளை வசீகரித்து விட்டது. அவனைத் தொடர்ந்து பார்க்கவேண்டும், பேசவேண்டும் போல் தோன்றும். கனவுலகில் வலம் வந்தாள். மாலையில் மட்டும் குதிரைச் சவாரி செய்த கரோலின் காலையிலும், நினைத்த நேரங்களிலும் கூக்கிளி நதிக்கரையோரம் உலாவரத் தொடங்கினாள். பறவைகளின் இசைக்கோலம் அவளுக்கு இனித்தது. மலர்களின் வண்ணங்களும், அவற்றின் நறுமணமும் அவளை ஈர்த்தது. இளந்தென்றல் சுவாசப்பையை நிறைத்துப் புதுமைகளைப் புகுத்தியது. சூழல் சுகத்தைப் பரப்பி உற்சாகத்தைக் கொடுத்தது.




ஹென்ற்லியின் உள்ளத்தில் கரோலின் இருந்தாலும் கரோலினின் தந்தையை நினைக்கவே அவனுக்குப் பயமாக இருந்தது. உலகம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது சூழன்று கொண்டேதான் இருக்கும். பருவகாலங்கள் வரத்தான் செய்யும். நாட்கள் நகர்ந்தன. தென்றல் வீசும். புயலடிக்கும். சூறாவளி பேரலைகளைத் தள்ளும். கடல் கொந்தளிக்கும். இவை இயற்கையின் நியதி. மனித வாழ்க்கையிலும் இவை வித்தியாசமான முறையில் நிகழும். கரோலின்-ஹென்ற்லியின் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் காற்றில் கலந்து மனிதவாய்களில் நுழைந்து வானலையில் கலந்து ஜெனரல் வாற்சன் செவிகளில் முழக்கமிட்டது. இடிமின்னல். புயல் குடும்பத்தில் தாக்கிச் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அழுத்தம் இறுக்கமாகும்போது அதற்கு வலிமை அதிகரிக்கும். கரோலின் ஹென்லி சந்திப்புக்கள் தொடர்ந்தன. கடிதங்கள் பரிமாறப்பட்டன. இதயங்கள் கலந்தன. இனியென்ன? இருவரும் பிரிவதில்லை என்ற வைராக்கியம் தனது கட்டினை வலிமையாக்கியது.




மேரி தனது கணவனுடன் கலந்துரையாடினாள். வாற்சன் எரிமலையானார். “ மேரி, சொல்வதைக் கொஞ்சம் கேள். நான் ஒரு ஜெனரல். இந்த சாம்ராச்சியத்தின் ஏகபோகத்தளபதி. பலருக்குப் பதில் சொல்லவேண்டியவன். நமது கௌரவம் என்னவாவது? ஒரு ஜெனரலின் மகள் சாதாரண படைவீரனைக் கைப்பிடிக்க அனுமதிக்க முடியாது. இந்த ஜேனரல் வாட்சன் ஒரு இரும்பு மனிதன். அதனால்தான் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.” வாட்சன் இறுகிக் கொண்டு போனான். “நான் சொல்வதைக் கேளுங்கள். தளபதி என்பது நீங்கள் பார்க்கும் உத்தியோகம். கரோலின் நமது மகள். அவளது வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும்.” “அதைத்தான் நானும் சொல்லுகிறேன். உனக்கு விளங்காது. கரோலின் ஹென்ற்லியைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். இனி இதைப்பற்றிக் கதைக்க வேண்டாம்.” வாட்சன் விலகிச் சென்றுவிட்டான். மறைந்திருந்து கரோலின் கேட்டிருந்தாள். “அம்மா இனி எதுவந்தாலும் ஹென்ற்லிதான் எனது கணவன். இது உறுதி” கரோலின் அறையினுள் நுழைந்தாள். மேரி துடிதுடித்துப் போனாள். யாருக்காக அழுவது?





கரோலின் -ஹென்ற்லி சந்திப்புக்கள் இறுக்கமாகின. அந்த இறுக்கம் வேகத்தைக் கூட்டி விட்டது. அந்தி மயங்கும் மாலைப் பொழுது கூக்கிளியை குதூகலிக்க வைத்தது. அலைகளை எறிந்து விளையாட்டுக் காட்டியது. கரோலின் ஹென்ற்லியின் அணைப்பில் இருந்தாள். “ ஹென்ற்லி என்னால் பொறுக்கமுடியாது. நமது நட்புக்கு அப்பா எதிர்ப்புக் காட்டுறார். நாம் இங்கிருந்து போய்விடலாம்” அவன் மௌனமானான்.. “என்ன மௌனம்?’ “ஒன்றுமில்லை. எப்படிப் போவது என்றுதான் யோசிக்கிறேன்”. “அடுத்த வாரம் கப்பல் வருகிறது. அதில் போய்விடலாம்.” கரோலின் பதிலளித்தாள். “எப்படித் தெரியும்.? ஹேன்ற்லி வினவினான். “நான் யார்? ஜெனரல் வாட்சனின் மகள். அப்பாவுக்குள்ள ஆற்றல் எனக்கும் இருக்காதா?” ஹென்ற்லிக்குச் ‘சரேல்’ என்றிருந்தது. “இவள் தான் சாதாரண படைவீரன் என்பதைக் குத்திக் காட்டுகிறாளா”?. அவன் கதையை மாற்றினான். “நேரம் போய்விட்டது. ஜேனரலின் ஆட்கள் வரும் நேரம்.” அவன் விலகிப் போகத்தயாரானான். “நான் சொன்னதென்னவாகிறது”? கரோலின் கோபத்தோடு சொன்னாள். “சரி பார்ப்போம். நீ போ. நேரமாகிறது.” தூரத்தில் குதிரைகள் வருவது தெரிந்தது. “ஹென்ற்லி ஆயத்தமாகு. கப்பலில் போகிறோம். சரியா”?. கூறிக்கொண்டே கரோலின் புதரூடாக மறைந்தாள்.




கப்பல் ஒன்று கரைதட்டிநின்றது. கப்பலில் பொருட்களை ஏற்றுவதும், இறக்குவதுமாகப் பலர் தொழிற்பட்டனர். ஜூலை பதினைந்தில் கப்பல் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. கப்பலின் கப்ரன் தோமஸ் இரக்கமுள்ளவன். அவனைக் கரோலின் சந்தித்தாள். தனது நிலைப்பாட்டைக் கூறிக்கப்பலில் புகலிடம் கோரினாள். கரோலினுக்காகப் பலர் பரிந்துரை செய்தார்கள். கப்ரன் இணக்கத்துக்கு வந்துவிட்டான். ஹென்ற்லியிடம் தனது ஏற்பாட்டைக் கூறினாள். முதலில் ஹென்ற்லி மறுத்தான். அவனும் கரோலினை உயிருக்கு உயிராக நேசித்தான். சாதார படைவீரனான தன்னை அவள் காதலிப்பதை முதலில் அவன் வெறுத்தான். “காதலுக்கு என்ன அந்தஸ்த்து வேண்டிக்கிடக்கிறது. கரோலின் உனக்கு ஏற்றவள். அவளைக் கைவிட்டு விடாதே.” நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். “ஹென்ற்லி! நீ கரோலினைக் காதலிக்கிறாயா”? ஜேம்ஸ் கேட்டான். “ஆமாம்.” இவன் பதிலளித்தான். “சரி அவளோடு கப்பலேறு. நாங்கள் உதவுவோம். யோசிக்காதே”, ஜேம்ஸ் உறுதியாக நின்றான்.




இருள் மெல்லப் பரந்து மூடிக்கொண்டிருந்தது. கப்பல் புறப்படத் தயாரானது. இருளில் இரண்டு உருவங்கள் சனங்களோடு சனங்களாக கப்பலில் ஏறிக் கொண்டன. கூக்கிளி நதியில் கப்பல் அசைந்தாடிக் கொண்டிருந்தது. காற்று மெல்ல மெல்ல ஊதத்தொடங்கியது. அலைகளை அள்ளி வீசத் தொடங்கியது. திடீரெனப் போர்த்துக்கேய கடற்கொள்ளையர்களின் கப்பல் புகுந்து கொண்டது. காற்றின் வேகம் அதிகரித்தது. காற்றோடு கடும் மழையும் சுழன்றடித்தது. கடற் கொள்ளையரும் ஒரே நேரத்தில் கப்பலைத் தாக்கினர். கப்பல் பேயாட்டம் ஆடியது. எங்கும் கூக்குரல். வெடிச்சத்தங்கள். கரையிலிருந்து பீரங்கிகள் முழங்கின. இருளில் தீப்பிளம்புகளைக் கக்கியவண்ணம் பீரங்கிக் குண்டுகள் பாய்ந்தன. இருபுறமும் இருந்து பீரங்கிகள் முழங்கின. சூறாவளி சுழன்றடித்தது. மேரி கவலையில் தவித்தாள். ஜெனரலுக்குச் செய்தியனுப்பினாள். கோள்ளையரும், சூறாவளியும் ஒரே நேரத்தில் தாக்கிதால் ஜெனரல் ஆடிப்போய் விட்டான். செய்வதறியாது திகைத்தான். வெகுநேரத்தின் பின் சூறாவளி ஓய்ந்தது. கப்பல்களைக் காணவில்லை. கொள்ளையர்கள் தப்பிவிட்டார்களா? கப்பலில் ஏறிய மக்களும் கரோலினும் ஹென்லியும் எங்கே? தெரியவில்லை. ஓரிருவர் உயிர்தப்பினார்கள். அவர்கள் நீந்தி கொல்கத்தாக் கரையை அடைந்தார்கள். அவர்களின் கூற்றுப்படி கப்பல் கூக்கிளி ஆற்றினுள்; அமிழ்ந்து கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கப்பலினுள் கரோலினைப் பார்த்துள்ளார்கள். அவளும் ஹென்ற்லியும் கப்பலோடு கூக்கிளி நீரில் சங்கமித்து விட்டார்கள். ’கரோலின்’ வாய் முணுமுணுத்தது. எனது கண்கள் பனித்தன. வெப்பக் காற்றோடு எனது வெப்பமான பெருமூச்சும் கலந்து கொண்டது. கூக்கிளி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஹொட்டல் றடிசன் சோகமாக நிமிர்ந்து நிற்பது போல் தெரிகிறது. அந்தக் குயில்களின் சோகக்கூவுகை என்னை ஆட்கொண்டது.



(கற்பனை கலந்த உண்மை.)

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP