Monday, September 27, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
4
“கயல்! எப்படிப் படிப்பெல்லாம். சோதினைய நல்லாச் செய்தியா? எப்ப முடீவு வரும்.? நீயும் ஓரு வேலைக்குப் போனியண்டா அப்பாக்கும் கொஞ்சம் பாரம் குறையும்”. தங்கம் தனது பாரத்தை இறக்கினாள். கயல்விழிக்கு உயர்ந்த மலையிலிருந்து பாதாளத்துக்குத் தன்னைத் தள்ளிவிட்ட பிரமை ஏற்பட்டது. எதிர்பாராத பெரிய பிரச்சினையை அம்மா அறிமுக மாக்கிவிட்டார். ‘வேலை தேடும் படலத்தைப் பார்’ என அம்மா மறைமுகமாக எச்சரித்து விட்டார். படிக்கும்வரை பிரச்சினை இல்லை. படித்து முடித்தபின்தான் விலங்கு மாட்டப்படுகிறது. சமூகம் ஒரு மனிதனை எப்படி நோக்குகிறது. “பல்கலைக்கழகம் போனால் சோதனை பாஸ்தான். நமது நாட்டிலதான் படிக்கிறதுக்கு வாய்ப்புகள் குறைவு. நீ கவலப்படாத. றிசல்ட் இந்த மாதக்கடசியில் வந்திரும். பிறகு வேலைதேடுவம்”. கடலைப் பார்த்தபடி கூறினாள்.
கயல்விழியின் மனம் பாதாளமலைக் கடலாக விரிந்தது. அதில் வீசும் அலைகளாக எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து, ஓங்கி ஆர்ப்பரித்துச் சிலிர்த்து மோதி உடைந்து சென்றன. பரீட்சை முடிவு வந்து விடும். அதன்பின் என்ன செய்வது? எங்களுக்கு முதல் சித்தியடைந்து வெளியேறிய பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. நமக்கு எப்போது கிடைக்கும். என்ன கல்வித்திட்டம்.? வேலைக்கேற்ற படிப்பு இல்லை. படிப்புக்கேற்ற வேலையில்லை. வேலையில்லாப் பட்டதாரிகள் பெருகிவிட்டார்கள். எப்படி அப்பா அம்மாவைக் காப்பாற்றுவது? கேள்வி மேல் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.
. “வாழ்க்கை என்பது நாம் நினைப்பதுபோல் மலர்கள் பரப்பிய பஞ்சணைந்த படுக்கையல்ல. அது முட்கள் பரப்பிய கற்பாறைப் படுக்கை. பள்ளமும் படுகுழிகளும் நிறைந்த கரடுமுரடான பாதை. அது ஒரு பாம்புப் புற்று. புற்றுக்குள் என்ன, எது இருக்கும், எப்போது வெளிவரும்?. இவை புரியாத புதிராகவே இருக்கும். வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் அதன் தாற்பரியம் புரியும். கோழைகளால் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் உங்களைப் போன்ற புத்திசாலிகளுக்கு அது எளிதாகிவிடும். நீங்களும் சவால்களைக் கண்டு பின்வாங்கினால் சமூகம் குட்டிச் சுவராகிவிடும்.” பல்கலைப் பேராசிரியை பத்மா இறுதிப்பரீட்சை எழுதி வெளியேறும் மாணவியர்களுக்கு பேருரை நிகழ்த்தினார். அதனை நினைந்து அகொண்டாள்.
சிறுவர்களாக இருந்திருந்தால் எப்போதும் கவலையை மறந்து சந்தோசமாக வாழலாம். பணக்கார வர்க்கத்துக்கும் பிரச்சினை குறைவு. அதோபோல் ஏழையாகப் பிறந்தவருக்கும் பிரச்சினைகள் குறைவாகவே இருக்கும். ஆனால் வசதியற்ற நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களுக்குத்தான் பிரச்சினைகள் அதிகம். கயல்விழியின் உள்ளத்தில் அடுக்கடுக்காகப் பல ஆராய்ச்சிகள் வந்து வந்து போயின. இந்த நாட்டில் அடுக்கடுக்காக வந்து போன பேரழிவுகளை நினைந்து கொண்டாள். சுனாமியின் தாக்கமும் அதன் விளைவுகளும் வந்து போயின. சுனாமி வந்தபொழுது விடுதலைப்புலிகள் சிங்களப் பகுதி மக்களுக்கு உதவி செய்ததையும் எண்ணிப்பாரத்தாள். அப்போது சமாதானம் வந்துவிட்டதாகவே எண்ணினாள்.
கிழக்கே அவள் கண்கள் பார்வையைப் பரவவிட்டன. கொட்டியாரக் குடாக்கடலில் மகாவலியின் சங்கமம் தெரிந்தது. மத்திய மலைநாட்டில் உற்பத்தியாகிப் பல சிற்றாறுகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டு கடலோடு சங்கமிக்கிறது. சங்கமிக்கும் இடம் மிக ரம்யமானது. அது பாய்ந்து வரும் பாதையெல்லாம் எவ்வளவு செழிப்பாக இருக்கும். மகாவலி என்றும் வற்றாத ஜீவநதி. இலங்கையின் மிக நீண்டநதி. அதனூடாக் கடலில் பாயும் தண்ணீரைத் தடுத்து நீர்த்தேக்கங்களை அமைத்தால் நமது நாடு சொர்க்கமாகும். இலங்கையில் ஓடும் நதிகளையிட்டு அவள் மனம் யோசித்தது. எல்லா நதிகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து வலைபின்னல் ஏற்படுத்தினால் நமது மக்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும். இதையிட்டு எந்த அரசியல்வாதிகளும் நினைப்பதில்லை. இந்தநாட்டு நதிகளின் நீரைக் கடலுக்குள் விடாமல், பயிர் செய்நிலங்களுக்குப் பாய்ச்சி வளம் பெருக்கும் காலம் வருமா? கற்பனையில் மூழ்கினாள்.
மரஞ்செடி கொடிகளும் பேசுமாமே. அவற்றின் மொழி எதுவாயிருக்கும்.? மரஞ்செடி கொடிகளாகப் பிறந்திருந்தாலும் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் நான் மனிதகுலத்தில் பிறந்து விட்டேனே. நான் செய்த தவப்பேறா? இல்லை இவை யாவும் முன்னம் முற்பிறவியில் செய்த பாவச்செயல்களா? அவளது சிந்தனை விரிந்தது. அவளது விழிகளில் தூக்கத்தின் தாக்கம் எள்ளளவும் இல்லை. யோசித்து யோசித்து எண்ணங்கள் மனக்கடலில் வந்து மோதி உடைந்து, பின்வாங்கி அப்படியே மறைந்து பின் புதிதாக உத்வேகத்தோடு வந்து மோதி உடைந்து போகும். என்னைப் போல் எத்தனை பாவப்பட்ட ஜீவன்கள் இந்த உலகத்தில் இருக்கின்றனவோ? அவள் மனம் சுழன்றடித்தது. பாதாளமலையைக் கடந்து கப்பல் பயணித்தது. ஆட்டமில்லாது கப்பல் நீந்திக் கொண்டிருந்தது. உல்லாசப் பயணிகள் படு சந்தோசமாகக் காட்சியளித்தார்கள். கப்பலின் மேல்தளத்தில் இருந்து ரசித்துக் கதைத்தார்கள். சம்பூர் அவர்கள் வாயில் ‘சாம்பூரா’கப் புகுந்து விளையாடியது. காலாகாலமாகத் தமிழ் மக்களின் பிரதேசங்களாகக் கிடந்த இடங்கள் இப்போது அழிந்து போய்க்கிடக்கின்றன. தமிழ் மக்கள் வீடுவாசல்களையும் சொத்துப்பத்துக்களையும் இழந்து அகதிகளாகிவிட்டனர். சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயமாகிவிட்டது. சம்பூர் மக்கள் பலகிராமங்களிலும் சிதறிக்கிடக்கின்றனர். சம்பூருக்குள் இராணுவம் மட்டும் உள்ளது. சம்பூர் பத்திரகாளி அம்மன் கோயிலின் நிலை எவ்வாறு இருக்கும்? நினைக்கக் கவலையாக இருந்தது.
சொந்த ஊரைப் பலவருடங்களுக்குப் பின் பார்க்கப் போகிறாள். ஊர் எப்படிக் கிடக்கும?;. மக்கள் இல்லாத ஊர் காடாக இருக்கும். அவள் மனம் விரைந்தது. ஒரு இடத்தில் இருந்து கொண்டே இந்த மனம் உலகமெல்லாம் சுற்றி வருகிறதே. இந்த மனம் பொல்லாதது. எந்தத் தடை போட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்துப் போய்விடும். கற்பனை எனும் தேரேறி கயலின் மனம் பறந்தது. அவள் இப்போது மேலே இருந்தவாறு தனது கல்லூரியைப் பார்க்கிறாள். தான் படிக்கும்போது கடமையாற்றிய ஆசிரியர்களைப் பார்க்கிறாள். தனது வகுப்பறைகளுக்கு விரைகிறாள். அந்தப்பரந்த வளாகத்தினைச் சுற்றி வலம் வருகிறாள். அதிபர் கதிர்காமத்தம்பி வேட்டியும் வாலாமணியுடனும் வளாகத்தை வலம் வருகிறார். எத்தனை ஆசிரியர்கள் கற்பித்திருந்தாலும் ஒருசிலர் மட்டுந்தானே மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
சுற்றிவர வகுப்பறைக் கட்டிடங்கள். பாடசாலைக் கட்டிடங்களின் மத்தியில் பாடசாலைத் தோட்டம். தோட்டத்தில் பலவகைப் பயிர்கள். அதிகாலையில் அருளானந்தமும், தங்கராசாவும் வந்து வகுப்பெடுப்பார்கள். விபுணசேகரம் ஆசிரியர் வந்துவிடுவார். சில மாணவர்களும் வந்து தண்ணீர் இறைப்பார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் சிறு நிலம் ஒதுக்கப்பட்டு அதில் பயிர்கள் நடப்பட்டிருக்கும். வகுப்புக்களுக்கு இடையே போட்டி. மாணவர்கள் தாமே இயங்கினார்கள். குரோட்டன் செடிகள் வகுப்பறைக் கட்டிடங்களுக்கு வெளியே நின்று அழகூட்டின. மூன்று ஜீவரத்தினங்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள். ஒரு ஜீவரத்தினம் உதவி அதிபராக இருந்தார். மற்றவர் மாணவர்களின் கட்டொழுங்கில் கவனமாக இருந்தார். அடுத்தவர் ஆங்கிலம் கற்பித்தலில் ஈடுபட்டார். அவர்களது வீடுகளும் கட்டைபறிச்சானில் இருந்தன.
கயல்விழியின் வீடும் அங்குதான் இருந்தது. காலையில் ஒன்று கூடலின்போது ஆசிரியர்களின் நற்சிந்தனை நடைபெறும். அதிபர் தலைமையில் மாணவர்கள் அணிவகுத்து நின்றார்கள். “கல்வி என்பது வெறும் புத்தகப்படிப்பு மட்டுமல்ல. அறிஞர்களுடைய அறிவுரைகள், படிப்பினைகள் புத்தகங்களில் நிறைந்துள்ளன. நாம் அவற்றைப் படித்து அதிலுள்ளவற்றை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். படித்தவற்றை நடைமுறைப் படுத்தாவிட்டால் கற்றதன் பயனை அனுபவிக்கமுடியாது. படித்தவற்றை அனுபவமாக்க வேண்டும். படித்தபடி நடக்க முனையுங்கள்”;. அவர் கூறிய கூற்றுக்கள் கயல்விழியின் காதுகளில் ஒலித்தன. உயர்தரப் பரீட்சைக்காகப் படிக்கும்போதே நாட்டுப் பிரச்சினை தொடங்கிவிட்டது. பொதுவாக கிராமப் புறங்களே பாதிக்கப் பட்டன.
இயக்கங்களின் கண்மூடித்தனமான செயல்களால் கட்டொழுங்கு சிதைந்தது. படிக்கின்ற மாணவர்களை இயக்கங்கள் இழுத்தெடுத்தன. கட்டாயமாக இழுத்தெடுத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் விருப்பமில்லாது சென்றார்கள். அவர்களது உள்ளங்கள் மரத்துப் போய்விட்டன. ஒருவித விரக்தியுடன் வாழ்க்கையை எதிர்கொண்டார்கள். தங்களுக்கு மரணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டது. எதையும் செய்யலாம் என்ற துணிச்சல் பிறந்து விட்டது. நல்லது கெட்டது தெரியாத பருவத்தில் தாங்களாகவே முடிவெடுக்கத் தெரியாமலிருந்தார்கள். கற்றவர்களின் அனுபவங்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தார்கள். தலைமைப்பீடங்களின் கொள்கைகளைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியாத பருவத்தில் இருந்தார்கள். பல்லாயிரக் கணக்கான இளைய தலைமுறையினரின் உயிர்களை இயக்கங்கள் பலிகொண்டன.
“கயல்! என்னம்மா யோசிக்கிறாய்”? அம்மாவின் குரல் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். “இனி இறங்குவம். மூதூர் வந்தாச்சு. இப்ப வஸ் இருக்காம். இறங்கின கையோடு வஸ்சில போவம். இல்லாட்டி ஆட்டோவிலதான் போகவேணும். இருநூறு ரூபா கேப்பாங்க. கெதியாக இறங்கிப் போவம்.” அம்மா துரிதப்படுத்தினாள். ”கப்பல் பயணம் நல்லது. விரைவாக வந்து விட்டது. அம்மா இன்னும் கரைக்கு வரவில்லை. அவசரப்படாதிங்க. ஆறுதலாய் இறங்குவம்”. தாயைச் சாந்தப்படுத்தினாள். கப்பல் கரையை அடையும் முன்னரே சனங்கள் இறங்குவதற்காக எழுந்து நின்றார்கள். இந்த மக்களுக்குப் பொறுமை என்பதே கிடையாது.
மூதூர் ஜெட்டியில் இறங்கினார்கள். ஜெட்டிப் பாலம் மரப்பலகைகளால் ஆனது. பரவியிருந்த தடித்த பலகைகளின் இடையில் அதிக இடைவெளிகள் தெரிந்தன. அந்த இடைவெளிக்குள் அம்மாவின் பாட்டா புகுந்து இடரச்செய்தது. கயல் அவதானமாக நடந்தாள். மூதூர் மாற்றம்பெற்றிருந்தது. ஓலைக்குடிசைகள் ஒழிந்து கல்வீடுகள் முளைத்திருந்தன. ஆனால் தெரிந்த முகங்களைக் காணமுடியவில்லை. இப்போது கெடுபிடிகள் தளர்ந்திருந்தன. உடலில் ஆயுதங்கள் இருக்கின்றதா, என ஆட்களைத் தடவிப்பார்ப்பார்கள். சிலர் தடவிப்பார்ப்பது போல் தழுவியும் பார்த்த ஈனச்செயல்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் நடந்தன. ஆட்களைத்தடவி விடும் தொல்லை இல்லாதிருந்தது. எங்கும் படைவீரர்கள்தான் நிறைந்திருந்தார்கள். வெளியில் வந்தார்கள். நிம்மதிப் பெருமூச்சுப் பறந்தது.
தொடரும்

Read more...

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
3
கட்டைபறிச்சான் நல்ல அழகான கிராமம். கொட்டியாரக்குடாக் கடல் நிலத்தைக் குடைந்து சிற்றாறைத் தூதனுப்பி நிலம்பிடிக்க முயற்சித்தா? உப்புநீர் சிற்றாறு ஊரைச் சுற்றி ஓடுகிறது. வெண்கண்ணா மரங்களின் மூச்சுவேர் வெளிக்கிளம்பிக் குத்தீட்டிகளாக நிமிர்ந்து நிற்கும். கண்டல் கண்ணாவின் நீண்ட காய்கள் நீரிலாடி நீந்தி வரும். காய்கள் ஆற்றோரத்தில் அடைந்து அங்கேயே முளைவிட்டு நிமிர்ந்து நிற்கும். உச்சிக் கிளையில் மீன்கொத்திப் பறவைகள் காவலிருக்கும். கொக்குநிரை உப்புநீர் சிற்றாற்றின் கரையோரம் தவமிருக்கும். சிறு தோணிகள் உலாப்போகும். நீரின்மேல் மிதக்கும் மிதவைகளைப் பிடித்து இழுப்பார்கள். மீன் நண்டு வலையோடு வரும். இறால் மலிவாகக் கிடைக்கும். தோட்டம் நிறைந்து பயிர்கள் சிரிக்கும் இராசவள்ளிக் கிழங்கு நிலத்தடியில் அடைகாக்கும்.
வாழை, கமுகு மரக்கறிவகைகள் விளைந்து நிற்கும். சிறுகுளங்களில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழி பாய்ந்து வயல்விளைந்து கிடக்கும். செல்வச்செழிப்போடு திளைத்த கிராமம். வந்தார்க்கெல்லாம் அள்ளிக் கொடுக்கும் மக்கள், இன்று யாரும் கிள்ளிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள். கயல்விழியின் மனக்கண்முன் கட்டைபறிச்சான் கிராமம் படமாக விரிந்து ஓடியது.
இறால் பாலத்துக்கப்பால் இருக்கும் அம்மன்கோயிலில் வருசத்துக்கு ஒருமுறை வேள்வி நடக்கும். மடைபோட்டுச் சாமியாடி, பொங்கல் பொங்கி மக்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்வார்கள். இளைஞர்களிடையே மந்திரப் போட்டிகள் நடக்கும். சிவம் சாமியாடி ஆசிரியர்களுக்கு வாழைப்பழங்களைச் சீப்போடு தூக்கி வந்து “ ம்..இந்தா” என்று கொடுப்பார். பாடசாலைப் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். இறால் பாலத்தில் தட்டையான கற்களைத் தண்ணீரில் சாய்வாக எறிந்தால் அது தெத்தித் தத்தித் தூரத்துக்குப் போகும். அதை ரசிப்பது வேடிக்கையாய் இருக்கும். அநற்றை நினைந்து மகிழ்ந்தாள். எல்லாம் பகற்கனவாய்ப் போய்விட்டது.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சுந்தரத்தார் எழுந்து விட்டார். அவருக்கு அது பழக்கப்பட்டதுதான். தங்கம் வீடு வாசலைப் பெருக்கித் தேநீர் தயாரித்து விட்டார். கயல்விழி அதிகாலையிலேயே விழித்து விட்டாள். ஆனால் அவள் படுக்கையிலேயே இருந்தாள். அவளது எண்ணமெல்லாம் எதிர்காலம் பற்றியதாக இருந்தது. கிராமத்து மக்கள் அதிகாலையிலேயே எழுந்து விடுவார்கள். சுறுசுறுப்பாக வேலைசெய்வார்கள். உடல் உறுதியாக இருக்கும். மனம் தூய்மையாக இருக்கும். வன்செயல்களினால் அவர்கள் தளர்ந்து நொடிந்து விட்டார்கள். அவளது அசைவை தங்கம் உணர்ந்து கொண்டார். “கயல் தேநீர் தரட்டா பிள்ள”. கேட்டவாறே ஒரு கோப்பைத் தேநீரைக் கொடுத்தார். எழுந்து அவளும் புறப்படத் தயாரானாள். பல்கலைக்கழகத்தில் இருந்து வந்து பலநாட்களாகிவிட்டன. திருமங்கையிடம் இருந்து செய்தியொன்றும் வரவில்லை.
சமதரையில் கிராமத்தில் காலாற நடந்து திரிந்தவளுக்குப் புறாக்கூட்டு வாழ்க்கை வெறுத்தது. படிக்கும் வரைக்கும் தோழிகளோடு அரைட்டையடித்து மகிழ்ந்தவளுக்கு வாழ்க்கை ‘போர்’ அடித்தது. பகலில் நூல்நிலையம் செல்வாள். பத்திரிகைகளைப் புரட்டி வேலைவாய்ப்பு விளம்பரப் பகுதிகளில் கண்களைச் செலுத்துவாள். தெரிந்த முகங்களைத் தேடுவாள். குறிப்பாக அந்தப் பழகிய முகத்தைத் தேடுவாள். தேடும் பொருள் கண்களில் படாது. கவலையோடு திரும்புவாள்.
வீட்டில் அம்மாவுக்கு உதவிகள் செய்வாள். உணவின்பின் வீட்டில் அடைந்து கிடப்பாள். புத்தகங்கள்தான் அவளுக்கு தோழிகள். நல்ல நூல்களைத் தேடி வாசித்தாள். நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்பதை உணர்ந்து கொண்டாள். வாழ்க்கையின் சுழிவு நெளிவுகளை படிப்படியாக அறிந்து கொண்டு வந்தாள். காற்று வசதியற்ற நகரத்து வாழ்க்கை அவளுக்கு அலுப்பைக் கொடுத்தது. தனது பொழுது வீணே கழிவதை உணர்ந்தாள். ஊருக்குப்போனால் பயனுள்ள வழிகளில், உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கலாம். ஒருமுடிவுக்கு வந்தாள்.
“அப்பா நானும் ஊருக்கு வரப்போறன். எனக்கு ஊரைப்பார்க்க ஆசையாய்க் கிடக்கு. நான் வந்தால் உதவியாகவும் இருக்கும்”. கயல்விழி ஆசையோடு கேட்டுக்கொண்டாள். மகளின் சொல்லைத் தட்டவும் மனமில்லை. “இஞ்சாருங்க. நானும் வாறன். எல்லாருமாய்ப் போய் வருவம். வீடுவாசலைப் பார்த்து துப்பரவு செய்தால் நிம்மதியாக போய்க் கிடக்கலாம்.” தங்கம் சொல்லிக் கொண்டே காலைச் சாப்பட்டைத் தயாரித்தார். “எதுக்கும் கொஞ்சம் உண்டனச் சமையுங்க. பகலுக்கும் உதவும்.” சுந்தரர் முன்னெச்சரிக்கையாகச் சமிக்ஞை கொடுத்தார். தாய்க்குக் கயல்விழி உதவினாள். “நீ அங்கால போ பிள்ள. நான் ஒரு நொடியில செய்துபோடுவன். நீ வெளிக்கிடு”. கூறிக்கொண்டு தனது வேலையில் ஈடுபட்டார். சுந்தரத்தார் வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டார். “தங்கம்! சிலநேரம் வேலைகள் முடியாட்டி ஒரு நாளைக்கு நிற்கவேண்டி வரலாம். நான் நின்று வேலைய முடித்துத்தான் வருவன். நீங்க திரும்பிட வேணும்.” சுந்தரத்தார் சொல்லிக் கொண்டு ஆயத்தமானார்.
ஆட்டோவில் ஜெட்டிக்குப் புறப்பட்டார்கள். செல்லச்சாமி ஜெட்டியில் காத்திருந்தார். பெரிய கியு நின்றது. “இன்டைக்குச் சந்தோசமாயிருக்கு. கயல்விழியும் ஊருக்கு வாறதால லோஞ் இல்லை. கப்பல்சேவைதான் இருக்காம். அது எட்டு மணிக்குப் புறப்படுமாம்”. செல்லச்சாமி உற்சாகத்தோடு விளக்கினான். சுந்தரத்தாருக்கு உள்ளுறச் சந்தோசம். கப்பலில் போவது பயமில்லை. பாதாளமலைப் பகுதி சுழியுள்ள இடம். காற்றும் வீசும். பயங்கர அலையும் மோதும். லோஞ் நடுக்கடலில் அலைகளில் மோதுண்டு ஆட்டும். மகள் பயந்து விடுவாள். பயம் அவரை உறுத்தியது. பெற்ற மனம் பித்து என்பார்கள். மனித மனத்தின் இயல்புகள் அப்படித்தானே. அடையாள அட்டையைக் கொடுத்துப் பதிந்தார்கள். பணத்தைக் கொடுத்து ரிக்கட் எடுத்தார்கள். ஏறுவதற்கு வசதியாகக் கப்பல் ஜெட்டி ஓரத்தில் தரித்து நின்றது. அப்படியே கப்பலின் உள்ளே ஏறிப் பார்த்தார்கள். சுமார் இருநூறு பயணிகள் பயணிக்கலாம். கயல்விழிக்குக் கப்பல் பயணம் புதியது. லோஞ்சில் பயணம் செய்திருக்கிறாள். ஓவ்வொரு முறையும் பயணம் செய்யும் போதும் உயிர் போய் திரும்பி வரும் உணர்வைப் பெறுவாள். எனினும் பயணம் செய்யத்தானே வேண்டும். இன்று சற்று வித்தியாசமாக இருந்தது. கப்பலில் யன்னல் ஓரமாக இருக்கையில் இருந்தாள். அம்மா அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். யன்னலின் ஊடாகத் திருகோணமலையின் இயற்கைத் துறைமுகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள். பயணிகள் கப்பலில் ஏறிக்கொண்டனர். அப்பா முன்னால் இருக்கையில் இருந்தார். எட்டரை மணிக்குக் கப்பல் புறப்பட்டது. பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன் துறைமுகத்தின் வழியே பயணங்கள் மேற்கொள்ளப் பட்டன. அது குறுகிய தூரம். ஆனால் பிரச்சினை தொடங்கியதும் அவ்வழி மூடப்பட்டுவிட்டது. தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பது போல் இப்போது பிறிமா ஜெட்டிவரை சென்று மலைத்தொடரைச் சுற்றித் திரும்ப வேண்டும்.
கப்பல் நிறையப் பயணிகள் இருந்தனர். பலர் பெரும்பான்மை இனத்தவர்கள். நம்நாட்டுப் பிரசைகள். அவர்களுக்கு ‘ரூறிஸ்ற்’; அந்தஸ்த்துக் கொடுத்து ஒரு மாயையைத் தோற்றுவித்திருந்தனர். அவர்களும் வெளிநாட்டு மக்களைப் போல் தமது கலாசாரத்தை மறந்து சுற்றுலாப் பயணிகளாக கப்பலில் பயணம் செய்தனர். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து நாட்டைமீட்டு விட்டோம். பயங்கரவாதம் முடிந்து விட்டது. நாட்டைக் கைப்பற்றி விட்டோம். என்ற அரச அறிவிப்புப் பரவியது. அதனைத் தொடர்ந்து ‘ இலங்கையின் வடக்குக் கிழக்கு’ வேறொரு பிரதேசமாக விளக்கம் கொடுபட்டுள்ளது. வேறொரு நாட்டினைக் கைப்பற்றி வெற்றிகொண்டதாக ஒரு எண்ணம் பெரும்பான்மை மக்களிடம் இருந்தது. இப்போது திருகோணமலை உள்நாட்டுப் பெரும்பான்மை இன மக்களுக்குச் ‘சுற்றுலா மையமாக’ ஆகிவிட்டது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கப்பலில் பயணிக்கிறார்கள். கப்பல் ஆட்டம் இல்லாது சென்றது. பாதாளமலையடியில் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. கப்பலும் மெதுவாக அசைந்தது. தொட்டிலில் இட்ட பிள்ளைகளாக பயணிகளும் அசைந்தனர். அலைகள் கப்பலில் மோதின. மோதிய வேகத்தில் அலை உடைந்து நீர்த்திவலைகள் மேலெழுந்து தூறலாய்ப் பரந்தது. நீலக்கடலில் பால்போல் நுரை பரவிச்சிரித்தது. கயல்விழி பார்த்து ரசித்தாள். பாளைச் சிரிப்பு உதிர்ந்தது. அவளது அதீத கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது. அவளது மனம் கட்டைபறிச்சானை நோக்கிப் பறந்தது.
சுந்தரத்தாரின் வீடு அழகானது. அவரது காணியின் கிழக்கெல்லையாக உப்பு நீர்ச்சிற்றாறு ஓடுகிறது. ஆறுதான் கிழக்கெல்லையின் வேலி. தென்னைகள் வரிசையாகக் காட்சி தரும். மா, பலா, வாழையென எங்கும் கனிதரு மரங்கள். ‘தெங்கும் இளநீரும், தேமதுர முந்திரியும்’ என யாழ்நூலில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் குறிப்பிடுவது போல, இரண்டு ஏக்கர் காணியில் அவரது இராச்சியம் அரசோச்சியது. சுற்றிவரத் தோட்டப்பயிர்கள் காய்த்துப் பூத்துக் கலகலக்கும். காணியில் ஆழமான கிணறு இருந்தது. நிலத்தடி நீர் பயிர்களுக்குச் செழிப்புட்டியது. வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டம். வண்ண வண்ண ரோஜாச் செடிகளை கயல்விழி வளர்த்திருந்தாள். குரோட்டன் செடிகளைத் திட்டமிட்டுக் கச்சிதமாக நட்டிருந்தாள். பூஞ்செடிகள் பூத்திருக்கும். இடையிடையே கத்தரி, மிளகாய் கண்சிமிட்டும். கலப்புப் பயிர்ச்செய்கையில் நாட்டம் அவளுக்கு. மரவள்ளிச் செடிகள் ஒரே மட்டமாக அழகாக வளர்ந்திருக்கும். இராசவள்ளிக் கொடிகள் சிறு தடிகளைச் சுற்றிப் பின்னிப் படர்ந்திருக்கும். வீட்டுத்தோட்டம் மேலதிக வருவாயைக் கொடுத்தது.
கட்டைபறிச்சான் நாகதம்பிரான் கோயில் பெருமைவாய்ந்தது. உற்சவ காலங்களில் திருகோணமலை மாவட்டக் கிராமங்களில் இருந்து மக்கள் வருவார்கள். நேர்த்தி வைத்தவர்கள் பயபக்தியோடு விரதமிருந்து பொங்கலிடுவார்கள். இனசனங்கள் தங்கள் உறவுகளோடு சேர்ந்து கொள்ளும் நிகழ்வாக விளங்கியது. இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். வீரசிங்கம் குழுவினரின் வில்லுப்பாட்டு ஊரைக்கலக்கி எடுக்கும். அன்னலக்சுமி, சந்தானலெக்சுமி குழுவினரின் இசைமழை உள்ளங்களைக் கவர்ந்தெடுக்கும். அந்தக்குழுவில் அம்பிகாவோடு கயல்விழியும் சேர்ந்து பாடுவாள். பல்லிசை விற்பன்னர் விபுணசேகரத்தின் பல்லிய வாத்தியக் கருவிகளின் இன்னிசை காற்றில் பரவும்.
‘கத்தும் கடலும் கவிபாடித் தாலாட்டும்முத்தம் எங்கள் மூதூர் பிரதேசத்தின் கட்டைபறிச்சானில்காலிடறும் பக்கமெல்லாம்இசைபரந்து களிப்பூட்டும்.இளந்தென்றல் பரவிவரும்கட்டை பறிச்சானைத் தழுவிவரும் பூங்காற்றுப்பட்டாலே போதும் பாட்டு வந்து கூத்தாடும்காலாற வீதிகளில் கதைத்து நடந்தாலே கொண்ட மனக்கவலைகுலைந்தோடிப் போய்விடுமாம்’
எனக் ‘கேணிப்பித்தன் கவிவரி’களைக் கட்டைபறிச்சான் கனகசிங்கம் பாடி அசத்துவார்.
அந்தக் கவிதை வரிகளை அசைபோட்டுப் பார்த்தாள். என்ன அற்புதமான காலம். எல்லாம் கனவாகிப் போய்விட்டன. கிராமத்தின் வாழ்க்கை முறை ‘கல்லெறிபட்ட தேன் கூடாகக்’ கலைந்து போயிற்று. அவளது எண்ணத்தறி கப்பலின் அசைவால் சிதறியது. “அம்மா! இந்த இடத்தில்தான் லோஞ் புரண்டது. கனபேர் செத்தவங்கள்.” கயல்விழி நினைவு கூர்ந்தாள். தங்கத்துக்குப் பயம். “அதையேன் நினைக்கிறாய். அந்தக் கோணேசரை நினைத்துக் கொள். ஓன்றும் வராது”. அவளுக்கு உள்ளுரப் பயம். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது மகளின் சிந்தனையை வேறு பக்கம் திசைதிருப்ப முனைந்தாள்.
தொடரும்.

Read more...

Saturday, September 25, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
2
“அன்பு என்பதென்ன? மனதிலே உருவாகும் ஒரு உணர்வுதானே? அந்த உணர்வு எவ்வளவு பிணைப்பினை ஏற்படுத்தி விடுகிறது. மனித மனங்களைப் பிடித்து ஆட்டிப்படைக்கிறது. அன்புதான் பாசத்தின் அடித்தளமா? அன்புக்காக ஏங்கும் உள்ளங்கள்தான் எத்தனை? அன்பு கிடைக்கும்போது இன்பத்தால் உள்ளம் துள்ளுகின்றது. அன்பு கிடைக்காது விடில் அதன் பாதிப்பு அதிகமாகின்றது. மனித மனங்கள் இந்த அன்புக்காகத்தானே ஏங்கிக்கிடக்கிறன. அன்புதான் உயிர்களைப் பிணைக்கும் சக்தியா? அன்பின் நிமித்தம் ஒன்றாகப் பழகிவிட்டுப் பின் பிரியும் போது எவ்வளவு கவலையடைகிறோம். என்ன விசித்திரமான மனம்.”? கயல்விழியின் உள்ளம் ஏதோ விசித்திரமான சிந்தனைகளில் சிக்கித் தவித்தது. கயல்விழி எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பாள். எந்தநேரமும் அவள் இதழ்களில் ஒரு கவர்ச்சிப் புன்முறுவல் இழையோடும். ஒருமுறை கயல்விழியைப் பார்த்தவர்கள் மீண்டும் ஒருமுறை பார்க்கத் தவிப்பார்கள்.
பல்கலைக்கழகத்தில் பேரழகியாக வலம்வந்தாள். அவள் உரையாடும்போது ஓரு கலையாடும். அவளது பேச்சில் பொருளிருக்கும். அனைவரோடும் அன்பாகப் பழகும் பக்குவம் வாய்ந்தவள். கலகலத்து உரையாடுவாள். அவளைச் சூழப் பல தோழிகள் இருந்தார்கள். அப்பொழுது அலர்ந்த செந்தாமரையாக ஜொலிப்பாள். சிரிக்கும்போது கன்னங்களில் கவர்ச்சியான குழிகள் உருவாகும். “ஏய் கயல்விழி! உண்மையில் நீ வடிவானவள்தான். எனது கண்களே பட்டுவிடும். உனக்குத் திருஸ்டி கழிக்க வேண்டும்.”? சிரிப்போடு மங்கை கூறுவாள். “ஏய் மங்கை! உண்மையில் உன் பெயருக்கேற்றமாதிரி நீதான் அழகி. உன் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.” கயல்விழி சொல்லும்போது மங்கை குறுக்கீடு செய்தாள். “எதற்கு”? என்று. “உனக்குக் பொருத்தமான ‘திருமங்கை’ என்று பெயர் வைத்ததற்கு”. கலகலத்துச் சிரித்துக் கயல்விழி பதிலளிப்பாள். கன்னக்குழிகள் அவளது சிரிப்புக்காக காத்திருந்ததுபோல் ஓடிவந்து கன்னத்தில் குந்திக் கொண்டன. இருவரும் ஒரே சாயலில் இருந்தார்கள். இரட்டையர்கள் என்றே தோழிகள் அழைத்தார்கள்.
இரவு அவர்களுக்கு உறக்கமில்லை. அழுவதும் ஆளுக்காள் ஆறுதல் கூறுவதுமாகக் கழிந்தது. மங்கை மெதுவாகக் கண்களைத் திறப்பாள். “கயல்விழி உறக்கமா”? அவள் புரண்டு படுத்தபடி “இல்லை. என்ன மங்கை”.? கேட்டாள். “ஒன்றுமில்லை. உண்மையில் உன்னை எனது தோழியாகப் பெற்றதற்காகப் பெருமைப் படுகிறேன்”. அமைதியாகக் கூறினாள். “மங்கை நான் நினைத்ததை நீ சொல்கிறாய். நானுந்தான் நினைத்தேன்”.கயல்விழி சிணுங்கினாள். “எப்படி” மங்கை முணுமுணுத்தாள். “நீ எனக்குத் தோழியானது நான் செய்த புண்ணியம்தான். நம்மிருவருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. நான் நினைப்பதையே நீயும் நினைக்கிறாய். எனக்கு விருப்பமான அத்தனையும் உனக்கும் விருப்பமாக இருக்கிறது. இருவரது குணங்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் நமக்குள் அன்புப் பிணைப்பு ஏற்பட்டு விட்டது”. கயல்விழி விபரித்தாள்.
கதைத்தவாறே உறங்கிவிட்டார்கள். சரியாக ஐந்து மணிக்கு எலாரம் அடித்தது. எழுந்து கொண்டார்கள். குளித்து உடை களை மாற்றிப் புறப்பட்டார்கள். தங்கள் உடைமைகளைப் பொதிகளாக்கி வைத்திருந்தனர். அனைத்தையும் எடுத்துக் கொண்டு முன் மண்டபத்துக்கு வந்தார்கள். தங்களது அறையின் திறப்பை முறைப்படி விடுதி மேற்பார்வையாளரிடம் கொடுத்து “நாங்கள் போய்வருகிறோம். நாங்கள் பிழைவிட்டிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்”. என்றார்கள். அவர்களது செயல் விடுதி மேற்பார்வையாளருக்குப் பெரிதும் பிடித்திருந்தது. அவர்களது கைகளைப் பற்றி “நீங்கள் இருவரும் எனது பிள்ளைகள் மாதிரி. உங்கள் வாழ்க்கையில் நல்லாயிருப்பீர்கள். எனது வாழ்த்துக்கள்”;. கண்கலங்க வாழ்த்துக் கூறி வழியனுப்பினார். வெளியில் வந்தார்கள். எங்கும் மாணவர்கள் கூட்டம். பலர் அழுதவண்ணம் நின்றிருந்தார்கள். பிரிய மனமில்லாது நின்றார்கள். அவரவர்கள் போகவேண்டிய வஸ் வண்டிகள் வந்ததும் ஏறிக் கொண்டார்கள். பிரிந்து தம்வழியே சென்றார்கள்.
திருமங்கை மட்டக்களப்பு வஸ்ஸில் ஏறிக் கொண்டாள். “கயல்விழி! ;போனதும் பக்கத்து வீட்டுக்குப் போன் பண்ணு. என்ன? நான் வாறன்”. மங்கையின் வஸ் புறப்பட்டது. கயல்விழியின் கண்கள் குளமாயின. ஏதோ பறிகொடுத்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வஸ்ஸில் ஏறிக் கொண்டாள். வீடு வரும்வரை அவளது மனம் கனத்தது. பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்து விட்டது. இனி வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில் கற்கவேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கிறன. இனித்தான் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இந்த உலகத்தில் பிறந்து விட்டால் அனுபவிக்கத் தானே வேண்;டும். வரும் சவால்களை ஏற்று வெற்றி கொள்ளத்தான் வேண்டும்.
அம்மாவை நினைத்துக் கொண்டாள். “என்னால எத்தனை பேருக்குத் தொல்லைகள்? அப்பா எனக்காக எவ்வளவு பாடுபட்டார். அவரது மனங்குளிர நல்லநிலைக்குக் கொண்டு வரவேண்டும். என் கண்முன்னால் அவர் தலைநிமிர்ந்து வாழவேண்டும். உழைத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். புதுத் தெம்பு வந்தது. உற்சாகமானாள். இந்தப் பிறவி எப்படி வந்தது.? இனி எந்தப் பிறவி வாய்க்குமோ? விலங்குகள் போல் வாழ்ந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனிதன் மட்டும் தனக்குத்தானே விலங்கினை மாட்டிக் கொண்டு தவிப்பதேன்?.
சமூகத்தில் வாழ்வதற்குச் சில சட்டதிட்டங்கள் வேண்டும்தான். ஆனால் சாதி, சமயம், ஏற்றத்தாழ்வு தேவைதானா? பணம் மட்டும் இருந்தால் போதுமா? பணந்தானா எல்லாம். பணத்துக்காக மனிதன் எதனையும் செய்யத் தயாராயிருப்பதேன்.? தனக்குத்தானே கேள்விக் கணைதொடுத்து, விடைதெரியாது தவித்தாள். திருகோணமலை வந்து விட்டாள்.
அப்பா வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார். மகளைக் கண்டதும் அவரது கண்கள் அகல விரிந்து கொண்டன. சந்தோசம் பெருக்கெடுத்தது. அவளது பொருட்களை எடுத்துக் கொண்டார். அப்பாவை பாசத்தோடு பார்த்தாள். அவளது உள்ளம் உடைந்துபோனதுபோல் ஒரு பிரமை. அப்பா எவ்வளவு திடகாத்திரமான உடற்கட்டு உடையவர். இப்போது இப்படி மெலிந்து உடைந்து விட்டாரே. இந்த நாட்டில் நடந்து முடிந்த அழிவுகளை எண்ணிப்பார்த்தாள். அவளை அறியாமலேயே மூச்சுக் கனலாகப் பறந்தது. “அப்பா மெலிந்து விட்டீர்களே” சொல்ல வாயெடுத்தாள். ஆனால் அதனைச் சொல்லமுடியவில்லை. “அப்பா எப்படி இருக்கிறீர்கள்”;? மாற்றிச் சொன்னாள். “இருக்கிறனம்மா. வா வீட்டுக்குப் போய்க் கதைப்பம். அம்மா காத்திருப்பா”? கூறியவாறே ஆட்டோவை அழைத்தார்.
ஆட்டோவில் ஏறி வீட்டின் வாசலில் இறங்கினார்கள். அம்மா படலைக்கு ஓடோடி வந்து வரவேற்றார். அவளைப் பார்த்ததும் “என்னம்மா கயல்! நேரத்துக்குச் சாப்பிடுவதில்லையா”? நல்லா மெலிந்து விட்டாய்”. கவலையோடு மகளை வரவேற்றார். “அம்மா நான் மெலியல்ல. நீங்கதான் இரெண்டு பேரும் மெலிஞ்சிட்டிங்க”. கவலையோடு சொன்னாள். “என்ன செய்யிறது. நாட்டு நடப்பு அப்படி. எப்ப நமது சொந்த ஊருக்குப் போகப்போறமோ தெரியாது. அங்க போனால்தான் நிம்மதி கிடைக்கும். இஞ்ச வாடவீட்டில இருந்து கொண்டு வாழலாமா”? அம்மா புராணம் பாடினார். “இஞ்சார் தங்கம்! உன்ர புராணத்தப் பிறகு பாடு. இப்ப பிள்ள களைச்சி வந்திருக்கு. சாப்பிடக் குடு. மகள் கயல்! முகத்த அலம்பிற்று வந்து சாப்பிடம்மா. பிறகு கதைப்பம்”. அப்பா உசார் படுத்திவிட்டு வெளியில் போனார்.
கயல்விழி சுறுசுறுப்பானாள். கிணற்றில் தண்ணீரை அள்ளி பெரியவாளிக்குள் ஊற்றினாள். முகத்தில் தண்ணீரை விசிறியடித்துக் கழுவினாள். தண்ணீர் பட்டதும் சில்லென்று இருந்தது. உடலையும் கழுவினாள். சுகமாயிருந்தது. துவாயை எடுத்துத் துடைத்துக் கொண்டு வந்தாள். அம்மா உணவோடு தயாராயிருந்தார். “வாம்மா சாப்பிடுவம்.” அம்மா அழைத்தார். “அப்பா எங்க? அவர் சாப்பிட்டாரா”? கயல்விழி; வினாக்களைத் தொடுத்தாள். சுந்தரத்தார் வந்துகொண்டே “இதோ வந்திற்றன் மகள். நீ சாப்பிடு”. கூறிக்கொண்டு வாங்கி வந்த வாழைப்பழச் சீப்பைச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். “அப்பா! வாங்க எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடுவம்”. கயல் அழைத்தாள். அவர்களும் சேர்ந்து சாப்பிட்டார்கள். அவளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருபுறம் துயரமாகவும் இருந்தது. மங்கையை நினைத்துக் கொண்டாள்.
“பாவம் மங்கை. இப்போது என்ன செய்வாளோ? அவள் சொன்னவை நடக்குமா”? மனதில் நினைத்துக் கொண்டாள். கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக இருந்ததை மீண்டும் எண்ணிக் கொண்டாள். பல்கலைக் கழகத்தில் முதல்நாள் சந்திப்பிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். தங்களது குடும்பங்கள் பற்றிப் பரிமாறிக் கொண்டனர். திருமங்கையின் அப்பா நிரந்தர வேலையற்றவர். தினக்கூலி வேலைக்குச் செல்பவர். வறுமையில் வாழும் குடும்பம். ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசுப் பரீட்சையில் சித்தியடைந்தமையால் ஒருவாறு மேற்படிப்புப் படிக்க முடிந்தது. மகாப்பொல பணமும் அவளுக்குக் கிடைத்தது. அதற்குள் சமாளித்துப் படிப்பை முடித்தவள். படிப்பிலும் கெட்டிக்காரி.
நல்ல குணம்படைத்தவள். பார்த்தவர்கள் அவளைப் பணக்கார வீட்டுப்பிள்ளை என்றுதான் நினைப்பார்கள். அப்படி அவள் நடந்து கொள்வாள். தனது வறுமையைக் காட்டமாட்டாள். அவள் தனக்குத் தோழியாகக் கிடைத்ததையிட்டுப் பெருமைப் பட்டுக் கொண்டாள். சாப்பிட்டதும் அப்பாவோடு அளவளாவினாள். நாட்டு நடப்பைக் கேட்டறிந்தாள். அரசியல் லாபம் தேடும் தலைவர்களால் நாடு குட்டிச் சுவராய் போனதையிட்டுக் கவலையாய் இருந்தது இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகள் எண்ணிலடங்கா. இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக யார் பாடுபட்டார்கள்?. எத்தனைபேர் இரத்தம் சிந்தினார்கள்? சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகள் இலங்கையில் யாரும் இல்லை. இலங்கைக்குச் சுதந்திரம் தானாகத்தான் கிடைத்தது. அதனால் அந்தச் சுதந்திரத்தின் மகிமையை நம்நாட்டு மக்கள் மனப்பூர்வமாக உணரவில்லை.
நாட்டைக் கூறுபோட்டு இன மொழி ரீதியாகப் பிரித்து அரசியல் லாபம் தேடுகிறார்கள். நாட்டுப்பற்று இல்லாத தலைவர்களினால் நாடு சின்னாபின்னமாகி விட்டது. தமிழர் வாழும் பிரதேசங்களில் வன்செயல் அதிகரித்து விட்டது. மக்கள் இடம்பெயர்ந்து தவிக்கும்நிலை ஏற்பட்டு விட்டது. மக்கள் சுனாமியினாலும், வன்செயலினாலும் பெரிதும் பாதிக்கப் பட்டார்கள். வடக்கு கிழக்கு மாகாணத்தின் கிராமங்கள் அழிவுற்றன. பொருளாதாரம் சூறையாடப் பட்டுவிட்டது. பல்லாயிhக்கணக்கான மக்கள் உயிர் துறந்தனர். பலர் காணாமல் போயினர். திருகோணமலை மாவட்டக் கிராமங்கள் சிதைந்தன. சில கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து திருகோணமலை நகரில் வாடகை வீட்டில் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது.
நகர்ப்புறங்களில் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாவிடினும் சற்றுப் பயம் குறைந்திருந்தது. ஷெல்லடி நகர்ப்புறத்தில் இல்லை. சுந்தரத்தார் குடும்பமும் வன்செயலினால் பாதிக்கப்பட்டு அகதியாகி முகாமில் தஞ்சமாகியது. பின்னர் வாடகை வீட்டில் வாழுவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். கயல்விழிக்குப் பொழுது போவது கடினமாக இருந்தது. நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
கட்டைபறிச்சான் கிராமத்தில் மீள்குடியேற்றம் என்றதும் சுந்தரத்தார் பலமுறை ஊரைப் போய்ப் பார்த்து வந்தார். அவரது வீட்டை அவராலேயே அடையாளம் காணமுடியவில்லை. இடையிடையே போய் வளவினைத் துப்பரவாக்குவார். வேலியைச் சரி செய்வார். பற்றைகளை அகற்றுவார். வீட்டைப் பார்ப்பார். அலுப்புத் தட்டும் வந்து விடுவார். சனங்கள் குடியேறிக் கொண்டிருந்தார்கள். சில நாட்களாக அவர் போகவில்லை.
கதவில் தட்டும் சத்தம் கேட்டது. சுந்தரத்தார் வாசலடிக்குச் சென்றார். கதவைத் திறந்தார். செல்லச்சாமி நின்றிருந்தார். அவரை வரவேற்று இருக்கையில் அமரச்செய்தார். “அண்ணன்! நாங்க நாளைக்கு ஊருக்குப் போறம். உடைஞ்ச வீட்டைத்திருத்த நிறுவனங்கள் வந்திற்று. வீடுகளைத் திருத்தி குடியேற்றம் நடக்குது. உங்கட வீட்டைப் பார்த்துச் செலவு விபரத்தைத் தயாரித்துப் போட்டாங்க. நீங்க வந்தாச் சரி. எப்ப வரப்போறிங்க”? செல்லச்சாமி விசயத்தை மெல்ல விட்டான்.
“அப்படியா, நாளைக்கு நானும் வாறன். போய் வளவை வெளியாக்குவம். இஞ்ச வீட்டு வாடகை கொடுத்துக் கட்டாது. வீட்டுக்காரரின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுபடேலாது. தவித்த முயலடிக்கும் சந்தர்ப்பவாதிகள். உழைப்பும் இல்ல. நாளைக்கு முதல் லோஞ்சிக்குப் போவம். என்ன”? சுந்தரத்தார் செல்லச்சாமியிடம் கூறிவைத்தார். அவரும் சரி யென்று எற்றுக் கொண்டார். ஊருக்குப் போவதையிட்டு விவாதித்தார்கள்.
தொடரும்

Read more...

Friday, September 24, 2010

நாவல்

நெருங்கிய பொருள் கைப்பட வேண்டும்.
1
அந்திவானம் செம்மைசூடித் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது. மேற்கு வானம் வண்ணக்கோலம் பூண்டு பருவமங்கையாய் ஜொலித்தது. சூரியக்கதிர்கள் வெம்மை குறைந்து இதமான வெப்பத்தைத் தந்து கொண்டிருந்தது. வானம் நிர்மலமற்றதாய் பிரவாகித்தது. மனிதப் பருவத்தில் பதினெட்டுத் தொடக்கம் இருபத்தைந்து வயதுவரை இளமையின் இரகசியங்கள் துள்ளி நிற்கும் பருவம். இன்பச்சுரங்கத்தின் எழிலகம். செம்மஞ்சள் மாலைப் பொழுது அற்புதமானது. வேலைகளை முடித்துவிட்டுக் குளித்து வந்தால் உண்டாகும் சுகம் இருக்கிறதே இன்பமயமானது. இளவயதினர் சேர்ந்து கும்மாளமிடும் நேரமல்லவா இம்மாலைப் பொழுது?. இவ்வளவு நாட்களும் இந்த நேரத்தில் கலகலப்பாக இயங்கும் இளவட்டங்கள் இன்று வழமைக்கு மாறாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் ஓரு சோகம் குடிகொண்டிருந்தது. பல ஆண்டுகளாக வரவின்றிச் செலவு மட்டும் செய்து மகிழ்ந்திருந்த வாழ்க்கை ஒரு பகுதியினருக்கு முடிவுக்கு வந்து விட்டது. ஒன்றாகப் பழகியவர்களை விட்டுப்பிரிவது எல்லோருடைய உள்ளங்களிலும் இனங்காண முடியாத துயரப்போர்வையை மூடிவிட்டிருந்தது. ஒவ்வொரு வருடத் தொடக்கத்தில் பல்கலைக் கழகம் மாணவர்களை உள்வாங்கும். அதேபோல் ஒவ்வொரு வருடம் முடிவிலும் வெளியனுப்பும். இது மாறி மாறி வரும் ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது. ஒரு நியதியாகி விட்டது. பல்கலைக் கழகத்திற்கு வந்தால் தனது படிப்பை முடித்தவர்கள் போய்த்தான் ஆகவேண்டும். ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்’? என்ன அழகாக வள்ளுவர் கூறியிருக்கிறார். உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த அன்பு தோன்றிவிட்டதோ? கயல்விழி தனிமையில் இருந்தவாறே சிந்தனையில் ஆழ்ந்தாள். நாளை அவள் தனது தோழிகளை விட்டுப் பிரியும் நாள். அவள் மட்டுமல்ல. அவளோடு பல்கலைக் கழகத்தில் ஒன்றாக சேர்ந்தவர்கள் அனைவரும் பிரிந்து செல்லவேண்டும். வந்த வேலை முடிந்ததும் வந்தவழியே செல்லத்தானே வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒன்றாகப் பழகிய அனைவரும் ஒவ்வொரு திக்கில் கலைந்து விடுவார்கள். எங்கிருந்து வந்தார்களோ அங்கே திரும்பிப் போய்விடுவார்கள். இனிமேலும் இந்த இடத்தில் கூடியிருந்து கும்மாளம் அடிக்கமுடியாது. இந்த இடங்களில் புதியவர்கள் நிறைந்து விடுவார்கள். இதுதான் வாழ்க்கையின் ஆரம்பமா? எங்கெங்கு சந்திப்பார்களோ தெரியாது.
கயல்விழி அந்தப்பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்த நாள்முதல் திருமங்கை அவளது உயிர் தோழியாய் ஆகிவிட்டாள். விடுதி அறையிலும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள். கயல்வழி உயிரியல் விஞ்ஞானம் கற்று இறுதிப் பரீட்சையையும் எழுதிவிட்டாள். திருமங்கை கலைப்பிரிவில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றாள். புல்நுனியில் ஒரு எறும்பு ஊருவதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் பண்பு இருவரிடத்தும் இருந்தது. அந்த ஒத்த இயல்பு இருவரையும் தோழிகளாக்கி விட்டது. ஒரு மாலைப் பொழுதில் இருவரும் உலாவந்தார்கள். ஒரு எறும்பு புல்நுனியில் ஊர்ந்து கொண்டிருந்தது. “மங்கை இந்த எறும்பு இருக்கிறதே, இதனிடம் மனிதன் கற்கவேண்டிய விடயங்கள் நிறையவே உண்டு”. எறும்பைப் பார்த்தவாறே கயல்விழி விளக்கினாள்.
“அப்படி என்ன விஷேசம் அதனிடம் உண்டு”? மங்கை அவளைப் பார்த்தவாறே கேட்டாள். “நமது உடல் நமது கையால் எண்சாண்தான். அதேபோல் எறும்பும் தன்கையால் எண்சாண்தான். ஆனால் மனிதனைவிட அது ஆற்றல் மிக்கது. தனது எடையைவிட பல மடங்கு எடையைத்தூக்க வல்லது. எந்தநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும்”;. கூறிவிட்டு ஒரு துரும்பை எடுத்து எறும்பின் உடலைத் தீண்டினாள். அது தனது உடலில் பட்ட துரும்பை உணர்கொம்பால் உணர்ந்து கொண்டது. அது நெளிந்து அதற்கேற்பத் துலங்கியது. அந்த எறும்பைத் தொடர்ந்து பல எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. மற்ற எறும்புகளுக்குச் செய்தி பரவியதால் ஊர்வதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அவை வேலைகளில் ஈடுபடத் தொடங்கின.
“ஒட்டகம் தனது சூழலுக்கேற்பத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தண்ணீரைச் சேமித்து வைக்கும். கங்காரு இனத்துக்குத் தமது குட்டிகiளைப் பாதுகாப்பதற்கு ஒரு பையை இயற்கை கொடுத்துள்ளது. எறும்புக்கு வயிற்றில் இரண்டு அறைகள் உள்ளன. ஒன்றில் தனக்கென உணவினைச் சேர்த்துக் கொள்ளும். அதனை வேண்டியபோது பயன்படுத்தும். மற்றய அறையில் தனது சகபாடிகளுக்காக உணவினைச் சேர்த்துக் கொள்ளும். நன்றாக வேலை செய்த எறும்பு ஒரு நாளைக்கு ஏழு மணித்தியலங்கள் உறங்குமாம். வேடிக்கையாக இல்லை”? மங்கையைப் பார்த்து வினவினாள். மங்கை புன்னகைத்தாள்.
“மங்கை! நமது மனித குலத்தில்தான் ஆண்டான் அடிமை உள்ளதாக நாம் நினைக்கின்றோம். இந்த எறும்புகளின் வாழ்க்கையிலும் ஆச்சரியமான செய்திகள் அடங்கியுள்ளன. எறும்புகள் தங்களுக்கென கூடமைத்து வாழும். பெரிய கூட்டமே இருக்கும். இராணி எறும்புதான் தலைமைதாங்கும். பிறக்கும்போதே இராணி எறும்புக்குச் சிறகுகள் இருக்கும். வளர்ந்து பெரிதாகி தான் வாழந்த கூட்டத்தைவிட்டு வேறாகச் சென்று தனதுகூட்டத்தோடு வாழும். அதன்பின்னர் சிறகுகள் விழுந்துவிடுமாம். போராளி எறும்புகள் கூட்டையும், மற்றைய எறும்புகளையும் பாது காக்கும். வேலையாட்கள் எல்லா வேலைகளையும் செய்யும். உணவு சேகரித்துவரவேண்டும். வாழும் கூட்டைச் சுத்தம் செய்வேண்டும். ஒவ்வொரு நாளும் எறும்புகள் வாழும் கூட்டைச் சுத்தம் செய்யும். தங்களுக்குப் போதிய வேலையாட்கள் இல்லாது விடின் பக்கத்தில் உள்ள எறும்புக் கூட்டை வேவுபார்க்கும். வேவு பார்ப்பதற்குகென்றே எறும்புகள் உண்டு. எந்த எறும்புக் கூட்டில் முட்டைகள் உள்ளனவா என்று வேவு பார்க்கும்.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தனது படையுடன் சென்று முட்டைக்கூட்டைக் கவர்ந்து வரும். தமது கூட்டில் வைத்துப் பாதுகாத்து வளர்க்கும். குஞ்சுகள் பொரித்ததும் அவைகள்தான் இக்கூட்டின் வேலையாட்கள். இது எறும்புகளின் வாழ்க்கை முறை”. கயல்விழி விளக்கிக் கொண்டு போனாள். மங்கை அதிசயித்து நின்றாள். தனது குறிப்புப்புத்தகத்தை எடுத்தாள். பேனாவினால் கிறுக்கினாள். கயல்விழி அவளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். “நீ சொன்னதைச் சிறுவருக்குச் சொல்லவேண்டும். சிறுவருக்கான பாடல் இது. சரி, படிக்கட்டா”? மங்கை கேட்டாள். “எங்கே படி பார்க்கலாம்.? கயல்விழி கன்னத்துக் கூந்தலை ஒதுக்கியவாறே சொன்னாள்.
சின்ன வண்ண உருவத்தில்திரியும் எறும்பு தன்னைப்பார்உன்னைப் போல உயிருண்டுஉழைக்கும் சக்தி அதற்குண்டு வலிமை கொண்ட ஆறுகால் விரைந்து செல்ல உதவுமாம்எளிதில் பளுவைத் தூக்குமாம்எடுத்துச் சுமந்து விரையுமாம்
வயிற்றில் இரண்டு அறையுண்டுவயிற்றை நிறைக்க வழிகண்டுஅயரா துழைக்கும் எறும்புகள்அபார மூளை கொண்டவை
உழைத்த களைப்பைப் போக்கவேஉறங்கும் ஏழு மணிவரைபழமை வாய்ந்த எறும்பினம் பரந்து எங்கும் வாழுமாம்.
“சா… அற்புதமான பாடல். இப்படி இசையோடு பாடினால் சிறுவர்கள் மெய்மறந்து இரசிப்பார்கள். சிறுவருர்களுக்குத்தான் நாங்கள் சொல்லித்தர வேண்டும். அவர்கள்தான் இந்நாட்டின் வருங்காலத் தலைவர்கள். இந்தப் பாடலைத் தொலைத்து விடாதே. விரைவில் நாம் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்”. மங்கையைத் தழுவிப் பாராட்டிக் கூறினாள். மங்கை நெகிழ்ந்து போனாள். இப்படி இருவரும் பேசி மகிழ்ந்த நாட்கள் ஏராளம். ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வந்து கடந்த காலத்தை அலசினாள்.
அவள் முதன்முதல் பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்த நாள். அவளைச் சூழ்ந்து பலர் ‘ராக்கிங்;’ செய்யத் தொடங்கினார்கள். அவள் அழுதே விட்டாள். ஊரில் நடந்த அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட அவளது உள்ளம் கொதித்தது. அவள் தனது அண்ணனை இழந்திருந்தாள். ஊரிலிருந்து விரட்டியடிக்கப் பட்டாள். அப்பா அம்மாவோடு ஓடிக் களைத்து திருகோணமலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியிருந்தாள். உள்ளம் ஒடிந்திருந்தது. மனவடுவால் துவண்டு போயிருந்தாள். படித்தால் ஒரு விடிவு கிடைக்கும் என்ற ஆதங்கத்தில் பல்கலைக் கழகம் வந்தாள். ஆனால் இங்கே உலகத்தைப் பற்றிய கவலையற்ற படித்தவர்கள் ராக்கிங் செய்கிறார்கள். ஆவேசத்தோடு அவர்களைச் சாடினாள்.
“நாங்க வாழ்வதா சாவதா என்ற நிலையில் கிடந்து செத்து வாறம். நீங்க ராக்கிங் செய்யிறீங்களா? உங்களுக்கு நமது நாட்டில என்ன நடக்குது என்று தெரியாதா? நீங்களெல்லாம் மனிதர்கள்தானா? இனிமேலும் ‘ராக்கிங்’; என்று வந்தால் புலிவேட்டை நடக்கும்”. அவள் ஆவேசமாக நின்றாள். அவளது கையில் தோளில் தொங்கிய பை இருந்தது. வேட்டைக்குப் பேகும் புலிபோல்தான் தெரிந்தாள். பல நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு நாயைத் துரத்தும் போது ஓடும் நாய் திரும்பி வாலை பின்னங்கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு குந்தியிருந்தால் எந்த நாயும் கிட்ட நெருங்காது. அந்த நிலையில் இருந்தாள். கண்கள் சிவந்து கனல் பறந்தது. “ஏய் இவள் புலியாம். கிட்டப் போகாதீங்க”. சுற்றி நின்றவர்கள் பரிகாசம் செய்தார்கள். அப்போதுதான் அருண் அந்தப் பக்கம் வந்தான். குழுமி நின்றவர்களே புலி என்று சொல்லி விபரீதத்தை உண்டு பண்ணிவிடுவார்கள் போல் தெரிகிறது. விரைந்து அவ்விடம் புகுந்து சூழ்ந்து நினறவர்களிடம் கதை கொடுத்தான்.
“ ஹலோ இஞ்ச பாருங்க, நாட்டு நிலை தெரியாமல் சத்தம் போடாதிங்க. இங்க பெரும்பான்மை இனத்து மாணவர்கள் இருக்கிறார்கள். நீங்க இப்ப சொன்னத அவர்கள் கேட்டால் என்ன நடக்கும்?; நீங்களே உங்களக் காட்டிக் கொடுத்த மாதிரிப் போய்விடும். அவயின்ர நிலையை நீங்கள் யோசியுங்க. அகதியாக முகாமில இருந்து அவதிப்பட்டு படிக்கவேணும் என்ற எண்ணத்தோட வந்தவர்களுக்கு நாங்க உதவியாக இருக்க வேணும். அதைச் செய்யுங்க”. அவன் பரிந்து பேசினான். “ஆமாடி. இவர் பெரிய இவர”. சொல்லிக் கொண்டு போனார்கள். அவன் அவள் பக்கம் போனான். கோபத்திலும் அவள் அழகாய்த்தான் இருந்தாள். “உங்கட பேரென்ன”? என்றான். அவளது ஆத்திரம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வந்தது. “கயல்விழி” என்றாள். “அழகான பெயர். ஆனால் அவை இப்போது கனல்விழிகளாக ஆகிவிட்டன. சரி இப்படி வாங்க.. அந்த கதிரயில் இருப்போம். கோபம் அடங்கியதும் உங்கள் அறைக்குப் போகலாம்.” அவன் முன்னால் போய் அமர்ந்தான். அவள் பின்னால் சென்றாள்.
“எந்த ஊர்”? அடுத்த வினாவைத் தொடுத்தான். “திருகோணமலை”. சுருக்கமாகப் பதில் சொன்னாள். “நானும் திருகோணமலைதான். நடந்ததை மனதில வைக்காதீங்க. உடனே மறந்திடுங்க. உங்கட நோக்கத்த நிறைவேற்றப் பாருங்க. அது சரி.. நீங்க எந்தப் பீடம்”? அருண் கேட்டான். “உயிரியல் விஞ்ஞானம்” பதிலளித்தால். எனது பெயர் அருண். நான் சமூகவியல் மூன்றாம் வருடம். கெதியாகப் படித்து முடித்து விட்டு அம்மாவுக்கு உழைச்சிக் கொடுக்க வேணும். ஏதும் தேவை என்றால் எனக்கு அறிவியுங்க”. நான் உங்களப்பற்றி எங்கட சிரேஸ்ட மாணவரிடம் சொல்லி வைக்கிறன். நான் பிறகு சந்திக்கிறன். அவன் வந்த வழியே சென்றுவிட்டான். அதன்பின் எப்பொழுதாவது சந்தித்தால் “எப்படி கனல்விழியே நலம்.”? என்று நலம் விசாரிப்பான். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை.
அவன் தமாசாகப் பேசுவான். எப்போதும் கலகலப்பாக இருப்பான். உதவி செய்வதற்கு முன்னிற்பான். இவை அவளுக்குப் பிடித்தவை. அதனால் அவன்மேல் ஒரு மதிப்பு இருந்தது. எப்படித்தான் அந்த நாட்கள் ஒடினவோ தெரியாது. நூலகத்தில் படிப்பில் ஆழ்ந்திருந்தாள். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அருண் ஓரு மூலையில் இருந்து படித்துக் கொண்டிருந்தான். மழை விடுவதாயில்லை. அருண் வெளியில் வந்தான். நூலகத் தரையெங்கும் மாபிள் பதிக்கப்பட்டிருந்தது. நூலகத்துக்குள் வருகின்றவர்களின் குடையில் இருந்து வடிந்த மழைநீரினால் தரை ஈரமாக இருந்தது. பொதுவாக நூலகத்துக்கும் பாட்டா செருப்போடுதான் மாணவர்கள் வருவார்கள். அருண் நூலகவாசலுக்கு வந்தான். அவனைத் தொடர்ந்து கயல்விழியும் வந்தாள்.
அவனிடம் குடையில்லை. தனது குடையைக் கொடுக்க நினைத்தாள். ஆனால் அதற்கு இடம் கிடைக்கவில்லை. விடுதிக்கு ஓடுவதற்காக முனையும்போது செருப்பு வழுக்கி விட்டது. அப்படியே வழுக்கித் தூரத்தில் ‘தொப்’ என்;று விழுந்தான். மாணவியர் ஓவென அலறினார்கள்;. கயல்விழி ஓடிச்சென்று அவனைத் தூக்கமுயன்றாள். மற்றவர்களையும் உதவிக்கு அழைத்துத் தூக்கி மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றாள். டாக்டரிடம் சொல்லி மருந்து கட்டி அவனது விடுதி அறையில் கொண்டு போய்விட்டாள். அவனது காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அடிக்கடி அவனைப் பார்த்துச் சுகம் விசாரிப்பாள். அவளை அறியாமல் அவன்மேல் ஒரு அனுதாபம் ஏற்பட்டது.
அவன் பரீட்சை முடிந்து பிரிந்து செல்லும்போது கயல்விழியிடம் வந்தான். அன்று இருவரும் ஆளையாள் பார்த்தபடி இருந்தார்கள். யார் முதலில் பேசுவது? எப்படிப் பேசுவது? ஊமைகண்ட கனவாக “நான் ஊருக்கப் போகிறேன். உங்கள வீட்டில சந்திக்க வருவன்.” சொல்லிவிட்டுச் சென்றான். அவன் போனதும்தான் மனது வருந்தியது. “நான் ஏதும் கதைத்திருக்கலாம். நானொரு மடச்சி.” தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். அவன் போகும்போது “நான் மனதில உள்ளத அவளிடம் சொல்லியிருக்கலாம். நான் சொல்லவில்லையே. சே.. நானொரு மடையன்.” தனக்குத்தானே நொந்து கொண்டான். அதனை இன்று நினைந்து கொண்டாள்.
கதவில் ஒரு தட்டுக் கேட்டது. கதவைத் திறந்து கொண்டு மங்கை களைத்து வந்தாள். உற்சாகமின்றி வந்தவள் தன்னைக் கட்டிலில் தூக்கியெறிந்தாள். அவளை ஏந்திய கட்டில் இருமுறை மேலுயர்ந்து தாலாட்டியது. கயல்விழி மின்விசிறியைத் சுழலவிட்டாள். காற்றுத் தாலாட்டிவிட்டது.
கயல்விழி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் மங்கை ஏனின்று இப்படிச் சோர்வாக இருக்கிறாள். மெதுவாக எழும்பி மங்கையின் பக்கம் சென்று “ மங்கை! என்ன நடந்தது? ஏன் சோர்வாக இருக்கிறாய்”? கேட்டவாறே அவளருகில் அமர்ந்தாள். கயல்விழியின் மடியில் தலையைப் புதைத்து விம்மத் தொடங்கினாள். அவளைப் பார்த்ததும் கயல்விழியின் கண்கள் பனித்தன. “என்னம்மா நடந்தது? சொல்”. பதிலுக்காகக் காத்திருந்தாள். “கயல் இன்றுமட்டும் ஒன்றாக இருப்போம். நாளை மாலை நீ எங்கோ நான் எங்கோ இருப்போம். ஏன் நாம் தோழிகளானோம்? இப்போது நெஞ்சு வெடிக்கும்போல் இருக்கிறது”? அழுகையின் ஊடே சொற்கள் பறந்தன.
கயல்விழியின் உள்ளத்தில் தெம்பு பிறந்தது. தன்னைச் சதாகரித்துக் கொண்டாள். “மங்கை இதற்காகவா அழுகிறாய்? நீ என்ன சின்னப்பிள்ளையா? நாம் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். நாம் சந்திக்கமுன் எப்படி இருந்தோம்? இடையில் வந்த இந்த உறவு இடையில் போய்விடும். பல்கலைக் கழகக் காலநட்பு படலையோடு போய்விடும். இது உண்மை. ஆனாலும் நாம் மீண்டும் சந்தித்துக் கொள்ளலாம். நமக்கென்று கடமைகள் காத்திருக்கின்றன. நாம் போய் ஏதாவது வேலையைத் தேடவேண்டும். நம்மை நம்பியிருக்கும் ஏழைப் பெற்றோரை வாழவைக்க வேண்டும். நீ இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே”. அவளது மனதும் அழுதது. ஆனாலும் மங்கையைத் தேற்றவேண்டும் என்பதற்காக நடிக்க முயன்றாள். அவள் அப்படிப் பேசினாளேதவிர அவளது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து உடைந்து சிதறின.
மங்கை அதனைக் கண்டு கொண்டாள். “கயல்விழி நீ என்ன சொன்னாலும், நீயும் அழுவது எனக்குத் தெரியும். எனக்கு ஆறுதல் சொல்கிறாய். ஆனால் நீ அழுவதை நான் கண்டு கொண்டேன். தோழி! இந்த நான்கு வருடங்களில் நாம் இணைபிரியாமல் இருந்தோம். நமது நட்பைத் தொடர்ந்து காப்பாற்றுவோம். என்ன”? இப்போது மங்கை கயல்விழியைத் தேற்றினாள். இருவரும் ஆளையாள் பார்த்து ஏங்கி அழுதார்கள். “சரி நாம் வளர்ந்து விட்டோம். இப்போது பட்டதாரிகளாக ஆகிவிட்டோம். இன்னும் ஒருமுறை பட்டமளிப்பு விழாவிலே இந்தப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் சந்திப்போம். இப்போது நமது தோழிகளைச் சந்தித்து வருவோம். முகத்தைக் கழுவிப் புறப்புடு” கூறிவிட்டு கயல்விழி எழுந்தாள்.
டைனிங் ஹோல் கலகலத்தது. வண்ண விளக்குகள் அலங்கரித்தன. வெளிச்சங்கள் இருந்தாலும் ஆளையாள் அடையாளம் காணக்கூடிய வெளிச்சம் இல்லாதிருந்தது. அந்த விடுதி பெண்களுக்கானது. டைனிங் ஹோல் வழக்கமான சோபையை இழந்திருந்தது. அவர்களது உள்ளங்களைப் போல் டைனிங் ஹோலும் உற்சாகமில்லாது களைத்திருந்தது. தோழிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாட முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. கண்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டன. கண்களைப் பார்க்கவிடாது கண்ணீர் பொங்கி மறைத்தது. சாப்பிட வேண்டும் என்பதற்காக வாயினுள் திணித்துக் கொண்டார்கள். கவலையுடன் தமது அறைகளுக்குத் திரும்பினார்கள். கயல்விழிக்கு இருப்புக் கொள்ளவில்லை. மங்கை அழுது கொண்டே இருந்தாள்.
தொடரும்.

Read more...

அந்த மாணவர் உலகம்

உங்களுடன் இதயப் பகிர்வு…
‘அந்த மாணவர் உலகம்’; என்ற இந்த நூல் நான் இளமையில் அனுபவித்த நல்லனுபவங்களைச் சிறுவருடன் பகிர்ந்து கொள்வதற்காக எழுதப்பட்டது. விடுதி வாழ்க்கை எவ்வாறு மாணவர்களுக்கு உதவுகிறது என்பதைச் சுவைபடக் கூற முனைந்துள்ளேன். மாணவ சமூகத்தை செவ்வனே பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுத்தினால் அவர்களது வாழ்வு வளமுள்ளதாக அமையும் என்பதற்கு இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிகழ்வுகள் சான்றாகின்றன.
பெரியவர்களுடன் நெருங்கிப் பழகுவதால் ஏற்படும் அனுபவம் மிகச்சிறந்தனவாக அமையும். இதனை நான் அனுபவித் திருக்கிறேன். மாணவர்களது வாழ்க்கை ஆசிரியர்களது வழிகாட்டலிலும், அவர்கள் மாணவர்களை வழிநடத்த எவ்வாறு முனைந்துள்ளார்கள் என்பதையும் காட்டியுள்ளேன். வாழ்க்கைக்குப் பாடசாலைகள் எவ்வாறு ஏணிப்படிகளாக விளங்குகின்றன என்பதை நான் பெரியவனாக ஆனபின்தான் உணர்ந்தேன். அந்தப் பள்ளிவாழ்க்கை எனக்கு மிகவும் உதவியது. எனது வழிகாட்டிகளாப் பெற்றோரும், எனது அதிபர், ஆசிரியர்களும் இருந்தார்கள்.
அவர்களது முன்மாதிரிகளைச் செய்து பார்க்கும் களமாக நான் வாழந்;த சூழ்நிலைகள் உதவியாக இருந்தன. அத்துடன் நான் பெற்ற பயிற்சிகளும், அவற்றைச் செய்யவேண்டும் என்ற உத்வேகமும் தூண்டின. எல்லாவற்றுக்கும் ஒரு மனப்பக்குவம் வேண்டும். துணிவும் வேண்டும். இன்றைய மாணவர் உலகத்தைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அவர்களை நினையும் போது மனம் வெதும்புகிறது. கல்வியை அனுபவம் ஆக்கினால்தான் அது வாழ்வதற்கு வசதியைக் காட்டும். வெறுமனே புத்தகப் படிப்பு பயனற்றதாகிவிடும். இதனை மாணவர் உலகம் அறிந்து செயல்பட வேண்டும். அதற்கு ஆசிரியர்களும், பெற்றாரும் உறுதுணையாக வேண்டும்.
கேணிப்பித்தன். ச.அருளானந்தம்

1
மயில்வாகனம் என்ற முத்தமிழ் அறிஞர் வாழ்ந்தார். அவர் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்தார். இல்லற வாழ்வைத் துறந்தார். பிரபோத சைத்தன்யா என்ற சஞ்நியாசியாகி துறவியானார். அவரது குரு சுவாமி சிவானந்தர் ஆவார். மயில்வாகனனுக்குசு; ‘சுவாமி விபுலானந்தா’ என்ற துறவுப் பெயரை வழங்கினார். சுவாமி விபுலானந்தர் தனது குருவை நினைந்தார். குருவின் பெயரால் ஒரு கல்லூரியைத் தொடங்க நினைத்தார். பொருத்தமான இடத்தைத்தான் தேடினார். மட்டக்களப்பு வாவியின் கிழகாக அமைந்த அழகான கிராமம் தென்பட்டது. அது நகரில் இருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் இருந்தது.
அது வெண்மணல் பரந்த கல்லடி உப்போடை. பல அன்பர்களின் உதவியுடன் கல்லூரியினை நிறுவினார். சிவானந்த வித்தியாலயம் என்ற பெயரைச் சூட்டினார். சிலகாலம் சிவானந்த வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றினார். ஸ்ரீ இராமகிருஷ்ண சங்க முகாமையாளராகவும் கடமையாற்றினார். அவரது அலுவலகம் சிவபுரியாக இருந்தது.
கல்லூரியின் இருபுறமும் மாணவர்களுக்கான விடுதிகள் இருந்தன. ஒன்று சுமார் நூற்றைம்பது மாணவர்களுக்கு அடைக்கலம் தந்தது. அது கல்லூரி வாளாகத்தை ஒட்டியிருந்தது. சிறு வீதியொன்று கல்லூரி வளாகத்தையும் மறுபுறம் இருக்கும் விடுதியையும் பிரித்திருந்தது. அவ்விடுதியில் நூற்றைம்பது மாணவர்கள் தங்கியிருந்தார்கள். இரண்டு விடுதி மாணவரிடையேயும் ஒற்றுமை இருந்தது. வேற்றுமையில்லை. ஆளுக்காள் ஒத்தாசையாக இருந்தார்கள். உணவு வகையில் வித்தியாசமில்லை. காலஅட்டவணை ஒன்றாகவே இருந்தது. விடுதிகளில் தங்கியுள்ள அனைவரும் வெளியூர்ப் சிறுவர்கள். சிலர் பிறமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.




அச்சிறு வீதியை ஒட்டினாற்போல் ‘சிவபுரி ஆச்சிரமம்’ இருந்தது. சிவபுரி கிழக்கிலங்கை இராமகிருஷ்ண மிசன் தலைமையகம். சுவாமி விபுலானந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் பாடசாலைகளின் முகாமைத்து அலுவலகமாகப் பாவிக்கப் படுகிறது. சுவாமி விபுலானந்தரின் பின் சுவாமி நடராஜானந்தா முகாமையாளராக வந்தார். விபுலானந்தரின் வாரிசாக அவருடைய காரைதீவுக் கிராமத்தில் இருந்து வந்தவர்தான் சுவாமி நடராஜானந்தா. அவர் கிழக்கிலங்கை இராமகிருஷ்ண மிசன் முகாமையாளராக இருந்தார். சிவபுரிதான் அவரது தங்குமிடமுமாகும். சிவபுரி ஒரு நாற்சார் வீடு. நடுவினிலே சிறு நீர்த்தடாகம் இருந்தது. நிலமட்டத்தில் இருந்து மூன்றடி ஆழம் கொண்டது. நிலத்துக்கு மேல் நான்கடி உயரமான சுவரினைக் கொண்டிருந்தது. பன்னிரெண்டடி நீளமும் பத்தடி அகலமும் கொண்டது.
அதனுள் நீர் நிறைந்திருக்கும் அல்லி படர்ந்து பூத்திருக்கும். அதனைச் சுற்றிப் பலநிறப்பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கும். மின்சாரவசதியற்ற காலமது. பெற்றமெக்ஸ் விளக்குகள்தான் பாவனையில் இருந்தன. மாணவர்கள்தான் அவற்றைப் பற்றவைப்பார்கள். ஒவ்வொரு நாளும் பெற்றமெக்ஸ் விளக்குகளைப் பற்றவைப்பதற்கு ஒவ்வொரு குழு இருக்கும். சரியான நேரத்துக்கு விளக்குள் எரியும் அதேபோல் சரியான நேரத்துக்கு அவை அணையும். மாலை ஆறுமணிக்கு வகுப்பறைகளில் பெற்றமெக்ஸ் விளக்குகள் எரியும்.விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் அனைவரும் கால அட்டவணைக் கேற்ப ஒழுக வேண்டும். காலை நான்கரை மணிக்கு மணியொலிக்கும். தொடர்ந்து யோகப்பயிற்சி நடக்கும். பின்னர் குளிப்பு. சமயவழிபாடு. அதன்பின்னர் தேநீர். காலை ஆறுமணிக்கு வகுப்பறைகளில் இருந்து படிக்கவேண்டும். ஏழரை மணிக்குக் காலை உணவு. எட்டுமணி முதல் பன்னிரெண்டு மணிவரை பாடசாலை வகுப்புக்கள் நடக்கும். பன்னிரெண்டு மணிதொடக்கம் ஒருமணிவரை மதிய உணவுக்கான இடைவேளை.
ஒருமணிக்கு மீண்டும் பாடசாலை வகுப்புக்கள் தொடங்கிவிடும். நான்கு மணிக்குப் பாடசாலை முடிந்து விடும். பாடசாலை முடிந்ததும் தேநீர். பின்னர் ஆறு மணிவரை விளையாட்டு. பலவிதமான விளையாட்டுக்கள் நடைபெறும். மாணவர் தலைவர்கள்தான் பொறுப்பாக இருந்தார்கள். ஒருபுறம் கரப்பந்தாட்டம், ஒருபுறம் கால்பந்தாட்டம், மறுபுறம் தேசிய விளையாட்டுக்கள் என விளையாட்டுத்திடல் கலகலக்கும்.
ஆறரை மணிக்குச் சமய ஆராதனை. பயபக்தியாக நடைபெறும். தொடர்ந்து எட்டுமணிவரை வகுப்பறையில் இருந்து படிக்கவேண்டும். எட்டுமணியிலிருந்து ஒன்பது மணிவரை உணவு. பின் கலந்துரையாடல் நடக்கும். ஒன்பதுமணி தொடக்கம் பத்தரை மணிவரை மீண்டும் வகுப்பறையில் இருந்து படிக்கவேண்டும். பத்தரையிலிருந்து அதிகாலை நாலரைவரை நித்திரை. இப்படிக் கால அட்டவணை இருக்கும். மாணவ தலைவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பொறுப்பாக இருந்து இயக்குவார்கள். இராமகிருஷ்ண மடத்துறவிகள் இருந்தார்கள். தூர இடங்களில் உள்ள ஆசிரியர்களும் விடுதிகளில் இருந்தார்கள்.
விடுதிக் கட்டிடங்களுக்குப் பெயர்கள் இருந்தன. கமலாலயம், இரத்தினாலயம், சாராதாலயம் இப்படிப் பெயர்கள். குகதாசன் ஆசிரியருடன் இரத்தினசபாபதி ஆசிரியரும் நேரடி மேற்பார்வை யாளர்களாக இருந்தார்கள். தம்பிராசா ஆசிரியர் இரத்தினாலயத்துக்குப் பொறுப்பாக இருந்தார். அவர்கள் திங்கள் தொடக்கம் வெள்ளிவரை விடுதியில் தங்கியிருப்பார்கள். சனி ஞாயிறு நாட்களில் வீடுகளுக்குப் போய்விடுவார்கள். முக்கியமான நாட்களில் விடுதியிலேயே தங்கியிருப்பார்கள்.
அனைவரையும் நெறிப்படுத்தும் முகாமையாளராக சுவாமி நடராஜானந்தா இருந்தார். அன்பும் கருணையும் கொண்டவர். ஓவ்வொரு ஆசிரியரையும், மாணவர்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பார். அவர்மேல் மாணவர்கள் பெருமதிப்புக் கொண்டிருந்தனர். சனி ஞாயிறு நாட்களில் இராமகிருஷ்ண மடத்துறவிகள் பொறுப்பாக இருப்பார்கள். சில சனிக்கிழமை நாட்களில் மாலை நேரத்தில் சுவாமி நடராஜானந்தா கடற்கரைப் பக்கம் நடப்பார். விடுதி மாணவர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். பல்வேறு கதைகளையும், மாணவர்களது ஒழுக்க நெறிகளையும் விளக்குவார். சுவாமி விவேகானந்தரின் ஆளுமையை விபரிப்பார். ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தி வைராக் கியத்தைக் கூறுவார். “சரி வாருங்கள் என்பின்னால் ..” கூறிவிட்டுக் கடலில் இறங்கி விடுவார். வானத்தைப் பார்த்தபடி தண்ணீரில் மிதப்பார். மாணவர்களுக்குப் பிரமிப்பாக இருக்கும். சிறந்த நீச்சல் வீரராக சுவாமி நடராஜானந்தா திகழ்ந்தார். ஆழத்தில் நின்று கொண்டு “இறங்கி நீந்துங்கள். நான் இங்கு நிற்பேன். எனக்கு முன்னால் நீந்திப் பழகுங்கள்”; என்பார். மாணவர்கள் சந்தோசத்துடன் நீச்சலடிப்பார்கள். நீச்சலைக் கற்றுக் கொடுப்பார். “நான் இல்லாத நேரங்களில் கடல்பக்கம் போகக் கூடாது” என்பார். மாணவர்கள் நீந்தும் போது அவரது நேரடிக் கவனம் மாணவர் பக்கம் இருக்கும்.
2
சிவானந்த வித்தியாலய வளாகம் நிலவில் குளித்துக் கொண்டிருந்தது. இரவு எட்டுமணி. வானில் நிலவின் பவனி. தங்கநிறத்தில் நிலவொளி பிரகாசித்துக் கொண்டிருந்தது. கட்டிடங்களைச் சூழ மரமுந்திரிகை மரங்கள் செறிந்திருந்தன. சில கட்டிடங்கள் பளிச்சிட்டன. வங்காள விரிகுடாக் கடலைத் தழுவி வரும் காற்று குளிரைத் தடவியது. எங்கும் பரந்து வீசியது. இடையிடையே நிழலுக்காக நடப்பட்ட வேம்புகள் அசைந்து கொண்டிருந்தன. நிலவொளி இலைகளில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது.
உணவுக்கான மணி ஒலித்தது விடுதி மாணவர்கள் உணவுச்சாலையை நோக்கிப் புறப்பட்டார்கள். பெற்றமெக்ஸ் விளக்குகள் உணவுபரிமாறும் மண்டபத்தினுள் நுழைந்தன. மாணவர்கள் தங்கள் தட்டுக்களைக் கழுவிக் கொண்டார்கள். வரிசையாக இருந்தார்கள். உணவு பரிமாற மாணவரிடையே குழுக்கள் இருந்தன. ஒரு கிழமைக்கு ஒரு குழு உணவினைப் பகிர்ந்து கொடுக்கும். உணவுக் குழுக்களுக்குள் ஒரு உடன்பாடு இருக்கும். கறிவகைகளைப் பரிமாறும்போது சற்று ‘அதிகம்’ பரிமாறப்படும். இது கண்டும் காணதும் நடைபெறும் கைங்கரியச்செயல். உணவுக்குழு உணவினைப் பகிர்ந்தது. உணவுத் தட்டுக்களோடு மாணவர்கள் வெளியில் வந்தார்கள். நிலவொளி பிரகாசித்துக் கொண்டிருந்தது. நட்சத்திரக் கூட்டங்கள் சிதறிக் காணப்பட்டன. அதேபோல் கூட்டங்கூட்டமாக மாணவர்கள் குழுமியிருந்தார்கள். மணலில் கால் புதைத்துக் கதைப்பது சந்தோசம். அவர்களது கைகளில் உணவுத் தட்டுக்கள் இருந்தன. அவர்களுக்குப் பால்நிலவில் இருந்து உண்பது பிடித்திருந்தது. உல்லாசமாக இருந்து உண்ணத் தொடங்கினார்கள். பால் நிலா வானவீதியில் பவனி வந்தது. அதனை சுவாமி நடராஜானந்தா அவதானித்து விட்டார். மாணவர்களது மனப்பாங்கினை நன்கு புரிந்து கொண்டார். அவர்களை உள்ளுற நினைந்து மகிழ்ந்தார். அவர் மனதில் அன்றுநடந்த நிகழ்ச்சி நிழலாடியது.
‘சிவபுரி’ தடாகத்தில் தண்ணீர் குறைந்திருந்தது. அல்லிப்பூக்கள் வாடத்தொடங்கிவிட்டன. மாணவர்கள் இதனை அவதானித்து விட்டார்கள். கிணறு இருப்பதையும் அவதானித்தார்கள். அது தடாகத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்தது. தண்ணீரை அள்ளியெடுத்துத் தடாகத்தை நிரப்பவேண்டும். மாணவர்கள் ஒன்று சேர்ந்து வந்தார்கள். சுவாமி நடராஜானந்தா அலுவலக வேலையில் ஆழ்ந்திருந்தார். பல கோவைகள் அவர்முன் குவிந்து கிடந்தன. அவர் அவர்களைக் கவனிக்கவில்லை. கோவைகளை மூடியதும்தான் நிமிர்ந்தார். வரிசையாக மாணவர்கள் நிற்பதை அப்போதுதான் கவனித்தார்.
“நான் உங்களைக் கவனிக்கவில்லை. ஏதும் பிரச்சனையா? என்ன விசயம்”;? அவர் ஆங்கிலத்தில் வினவினார். அப்போது ஆங்கில மொழிமூலமான கல்வி கற்பிக்கப் பட்டது. அவர்கள் ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். ஆனந்தனும், சம்பந்தமூர்த்தியும் தலைமைதாங்கி நின்றார்கள். சம்பந்தமூர்த்தி தொடங்கினான். “சுவாமி! இன்று வெள்ளிக்கிழமை. இப்போது ஆறரை மணி. இன்றைக்கு இரவு படிக்கும் நேரத்தை ரத்துச் செய்யவேண்டும். வேறொரு முக்கிய விசயத்துக்கு ஒதுக்க வேண்டியுள்ளது. அதற்கான அனுமதி தேவை. அதுதான் வந்தோம்”. கூறிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தான். “அப்படியென்ன முக்கியமான விசயம். நான் தெரிந்து கொள்ளலாமா”? ஒரு புன்னகையுடன் கேட்டார்.
பூனைக்கு மணிகட்டுவது யார். ஆளையாள் பார்த்தார்கள். “சிவபுரித் தடாகத்தினுள் தண்ணீர் இல்லை. அல்லி வாடியுள்ளது. அதனை நிரப்பினால் நல்லது”. ஆனந்தன் வினயமாகச் சொன்னான் “அதுசரிதான் ஆனால் எப்படி நிரப்புவீர்கள்?. நான் ஒருவரிடம் பம்பிக்குச் சொல்லியிருக்கிறேன். அவர் இன்னும் வரவில்லை. அதுதான் யோசிக்கிறேன்.” அவர் பதிலளித்தார். “பம்பிக்காரர் வருவதற்குள் அல்லி வாடிவிடும். நாங்கள் வாளிகளால் அள்ளி நிரப்பி விடுவோம். உங்கள் அனுமதி கிடைத்தால் இப்பொழுதே தொடங்கி விடுவோம். களைப்பு இருக்காது. ஒரு மணித்தியாலம் போதும்”. கேட்டு நின்றார்கள்.
அவருக்குச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதில் விருப்பமில்லை. “நீங்கள் சிறுவர்கள். உங்களால் அவ்வளவு வாளித்தண்ணீர் அள்ளித் தடாகத்தை நிரப்புவது சிரமம். ‘சிறுவர் செய்த வேளாண்மை வீட்டுக்கு வராதாம்’ என்று சொல்வார்கள். அதனைப் பிறகு செய்வோம். இப்போது போய்ப்படியுங்கள்”. கூறிக்கொண்டு தனது அறையினுள் சென்றார்.
சற்று நேரத்தால் வெளியில் வந்தார். அவருக்கு ஆச்சரியம். சிறுவர்கள் அப்படியே நின்றார்கள். “ என்ன நிற்கிறீர்கள். இன்னும் போகவில்லையா”? ஆச்சரியத்துடன் கேட்டார். ஆனந்தன் முன்னால் வந்தான். நாங்கள் சிறுவர்கள்தான். ‘சித்தாள் வேலை ஏட்டாள் வேவைக்குச் சமன்’ என்றும் சொல்லார்கள். எங்களால் முடியும். நாங்கள் செய்வோம். ஒருமுறை சந்தர்ப்பம் தாருங்கள். நாங்கள் இப்படியான செயல்களில் பழக்கப் படவேண்டும் அல்லவா”? தலைகுனிந்தவாறே விளக்கினான். அவர்களைச் சற்று உற்று நோக்கினார்.
“சிறுவர் உரிமைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு? அப்படி இருந்தும் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவது சரியல்ல”. அவர் தொடர்ந்தார். “சுவாமி குறுக்கே பேசுவதற்கு மன்னியுங்கள். எங்களுக்குப் பயிற்சி அளிப்பவர் நீங்கள். எங்கள் தேவையை நாங்கள் நிறைவு செய்வது எங்களது உரிமைதானே,? எங்கள் விருப்பமில்லாது கொடுமைப் படுத்துவதூன் தவறு. நாங்கள் எங்களை வளர்த்துக் கொள்வதற்காகப் பயிற்சி பெறப்போகிறோம். அதற்கு தங்களது அனுமதி தேவை. தயவு செய்து மறுக்காதீர்கள்.” ஆனந்தன் துணிந்து கூறினான்.
அவர் புன்னகைத்தார். வாழப்போவது அவர்கள். அதற்குரிய வழிமுறைகளைச் சொல்லித்தருவது பாடசாலைகள்தான். அவருக்குச் சந்தோசம் பிறந்து விட்டது. “சரி உங்கள் விருப்பம். எனக்கும் ஒரு மாற்றம் தேவைதான். நானும் வருகிறேன். நடவுங்கள்”. என்றார். சிறுவர்கள் மகிழ்ந்தார்கள். தங்கள் விடுதிகளுக்குள் பாய்ந்து ஓடினார்கள். அரைக்காற்சட்டையும், பெனியனும் அணிந்தார்கள். அணிவகுத்து நின்றார்கள். ஒரே குதூகலமாக இருந்தது.
கணேசமூர்த்தி பெற்றமெக்ஸ் குழுவுக்குத் தலைமை தாங்கினான். மரக்கிளைகளில் பெற்றமெக்ஸ் தொங்கின. வாளிகளுக்குப் பொறுப்பாக மகாலிங்கசிவம் இருந்தான். வாளிகள் வந்து குவிந்தன. தடாகத்தினுள் தண்ணீர் வாளிகளைத் தூக்கி ஊற்றுவதற்குப் பொருத்தமானவர் வடிவேலன்தான். “நான் இருக்கிறேன்” என்று முன்னால் வந்தான். கிணற்றில் இருந்து துலாவை இயக்க முருகேஸ் முன்வந்தான். அவன் உறுதியானவன். மல்யுத்த வீரன். பாடசாலை மட்டத்தில் அவன்தான் சம்பியன். அவனோடு கரீம் துணைநின்றான். கரீம் விளையாட்டு வீரன். ஓட்டப்போட்டிகளில் அவன்தான் சிறந்த வீரன். சிறுவர்கள் கிணற்றுக்கும் தடாகத்துக்கும் இடையில் வரிசையில் நின்றார்கள். கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்குத் துலாக்கொடி இருந்தது. மேல் நாட்டவருக்குத் தெரியாத விஞ்ஞானக் கருவிகளில் துலாக் கொடியும் ஒன்று. பாரத்தை எளியமுறையில் தூக்குவதற்கு நமது முன்னோர்கள் கற்றுத்தந்த வழிமுறைகள்.
இதைனை இயக்க மனிதவலுதான் தேவை. துலாக்கொடி இழுத்துத் தண்ணீர் அள்ளிக் குளித்தல் சுகமானது. உடலுக்குப் பயிற்சியும் கிடைக்கிறது. குளிக்கும் தண்ணீர் பயிர்களுக்கும் பயன்படும். முருகேசும் கரீமும் துலாக்கொடியில் நின்றார்கள். அவர்களுள் ஒருவர் துலாவை இழுப்பார். மற்றவர் துலாக்கொடியை அசைப்பார். அந்த அசைப்பின் விசையில் துலாக்கொடி வாளி சரியும். துண்ணீர் வாளியுள் நிறையும். நிறைந்ததும் உந்தி மேலே தூக்கிவிடுவார்கள். அந்த விசையில் துலாக்கொடி விரைந்து மேலே வரும். வாளிகள் நிரையாக இருக்கும். அருணாசலம் துலாக்கொடியைப் பிடித்துத் தண்ணீரை வாளிகளில் நிரப்புவான். இஸ்மாயில் நிரம்பிய வாளியைத் தூக்கி வரிசையில் உள்ளவரிடம் கொடுப்பான். தண்ணீர் வாளிகள் விரைந்து செல்வதற்கு வசதியாகச் சிறுவர்கள் நின்றார்கள்.

3
சிறுவர்களின் திட்டத்தை இரத்தினசபாபதி ஆசிரியர் அறிந்திருந்தார். அவர் விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர். மாணவர்களது அபிமானத்துக்கு உரியவர். அவரது அனுசரணையோடுதான் திட்டமிட்டிருந்தார்கள். அவர் சொன்னதுபோல் வந்துவிட்டார். சிறுவர்கள் இரண்டு வரிசையில் எதிரும் புதிருமாக நின்றார்கள். இந்த ஒழுங்கு தண்ணீர் வாளிகள் விரைந்து செல்லப் பேருதவியாக இருந்தது. இஸ்மாயில் தண்ணீர் வாளியைத் தூக்கி முன்னால் நின்றவரிடம் கொடுத்தான். அவன் தனக்கு முன்னால் நிற்பவனிடம் கொடுப்பான். மிக இலகுவாகத் தண்ணீர் வாளிகள் நகர்ந்தன. ஆனந்தன் வாளிகள் விரைந்து செல்வதை அவதானித்துத் துரிதப்படுத்தினான்.
அவர் மற்றவரிடம் கொடுப்பார். வாளி கைமாறிப் போகும். பம்பர வேகத்தில் வாளிகள் நகர்ந்தன. சிறுவர்கள் சந்தோசத்துடன் செயற்பட்டனர். தொடர்ந்து தண்ணீர் அள்ளப்படும். அதே வேகத்தில் தடாகத்தினுள் ஊற்றப்படும். சிறுவர்களோடு சுவாமியும் சேர்ந்து கொண்டார். சிறுவர்களின் துணிச்சலைப் பாராட்டினார்.
சிரமதானப்பணி செய்தியாகப் பரவியது. ஆசிரியர்களும் வந்து விட்டார்கள். அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் சிறுவர்கள் அவர்களை வேலைசெய்ய விடவில்லை. “சேர் நாங்கள் செய்கிறோம். நீங்கள் உற்சாகத்தை மட்டும் தாருங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். குகதாசன் ஆசிரியர் வெகுவாக உற்சாகப் படுத்தினார். உற்சாகத்தோடு சிறுவர்கள் மாறிமாறித் தண்ணீர் அள்ளினார்கள். தண்ணீர் வாளிகள் துரிதகதியில் தடாகத்தை அடையும். அதேவேளை தடாகம் நிறையும். எத்தனை வாளித் தண்ணீர் அள்ளினார்கள். தடாகத்தினுள் ஊற்றினார்கள். யாருக்கும் தெரியாது. களைப்பை அவர்கள் உணரவில்லை. அவர்களது உற்சாகம் கலந்த சத்தம் வானைமுட்டியது.
சம்பந்தமூர்த்தி சுவாமியிடம் சென்றான். மெதுவாக ஏதோ சொன்னான். சிரிப்போடு “சரி” என்றார். சம்பந்தமூர்த்தி சமையலறைப் பக்கம் ஓடினான். சற்றுநேரத்தில் வீரையா தேநீர் வாளியோடு வந்தார். வீரையா பல வருடங்களாக அங்கே சமைப்பவர். சிறுவர்களுக்குத் தேநீர் வழங்கினார். சரியாக எட்டரை மணி. தடாகம் நிரம்பி ததும்பிக் கொண்டது. சிறுவர்களுக்குச் சந்தோசம். பெரிய சாதனையைச் செய்த பூரிப்பு. ஆசிரியர்கள் பாராட்டினார்கள். சுவாமி கைகளைத் தட்டி ஆரவாரித்தார். “நீங்கள் சாதனையாளர்கள். சரி குளித்துவிட்டுச் சாப்பிடுங்கள். இன்றைக்கு இரண்டாம் இரவுப் படிப்பும் வேண்டாம். நன்றாக ஓய்வெடுங்கள்;”. அவரின் அனுமதி கிடைத்தது. சுவாமிக்கு நன்றி கூறினார்கள்.
அனைவரும் சேர்ந்து குளித்தார்கள். கிணறு போதியளவு இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் குளிக்கமுடியாது. மூன்று கிணறுகளே இருந்தன. இராமகிருஷ்ண மிசனில் போதிய நிதியில்லை. அதனால் புதிய கிணறு கட்டும் திட்டம் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. குளித்து முடிந்தது. உடைகளை மாற்றிக் கொண்டு உணவுக்குச் சென்றார்கள். ஒரே கலகலப்பாக இருந்தது.
அன்றுமுதல் மாணவர்களின் மேல் நல்ல அபிமானம் உருவாகிவிட்டது. சுவாமி நடராஜானந்தா ஓய்வு நேரங்களில் மாணவர்களோடு அளவளாவுவார். மாலை நேரங்களில் அவர்களோடு சேர்ந்து கிளித்தட்டு விளையாடுவார். தேசிய விளையாட்டை நேசிப்பவர். “நமது முன்னோர் விளையாடிய தேசிய விளையாட்டுக்களை நாம் மதிக்கவேண்டும். அவை உடலுக்கும் உள்ளத்துக்கும் உரந்தருவது. அவற்றை விளையாடுவதற்குப் பணச்செலவு இல்லை”. எனக்கூறுவார். ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள். “விளையாட்டு அனைவரையும் சேர்த்து வைப்பது. விளையாட்டுத் திடலில் ஆண்டான் அடிமையில்லை. விளையாட்டு அனைவரதும் சொத்து.” என விளக்கம் கொடுப்பார்.
சுவாமி நடராஜானந்தா வெளியில் வந்தார். மாணவர்களை உணவுத்தட்டுகளோடு கண்டதும் மாணவர்களது தடாகத்துள் தண்ணீர் நிறைத்த செயல் அவர் மனக்கண்முன் வந்து நின்றது. சிறுவர்களை நோக்கி அவரது கால்கள் நடந்தன. அவரே தொடங்கினார். “என்ன எல்லோரும் நிலவில் சாப்பிடுகிறீர்கள்? சந்தோசமா? நானும் வருகிறேன்”;. கூறிக்கொண்டு உணவுத் தட்டோடு சுவாமி நடராஜானந்தா வந்தார். மாணவர்களோடு மணலில் இருந்தார். மாணவர்களுக்கு ஒருபுறம் சங்கடம். மறுபுறம் தங்களோடு அவர் சமமாக இருந்து உண்பது சந்தோசமாக இருந்தது. கதை தொடர்ந்தது.
“எப்படி விடுதி வாழ்க்கை? சந்தோசமாக உள்ளதா? அல்லது சங்கடமாயிருக்கிறதா”? வினாவை அவரே தொடுத்தார். “எங்களுக்குச் சந்தோசமாயிருக்கு”. மாணவர்கள் ஏகோபித்த குரலில் சொன்னார்கள். அவர் சிரித்தார். “இந்த வயதில் வீட்டில் அம்மா அப்பா தம்பி தங்கைகளோடு இருப்பதுதான் சந்தோசம். ஆனால் இந்தவயது மிக முக்கியமானது. வீட்டில் இருப்பதைவிடவும் விடுதியில் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்”;. அவரின் கூற்றை மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்டார்கள். மாணவர்களோடு சாப்பிடுவது அவருக்கும் பிடித்திருந்தது. அவர்கள் முன்னர் செய்த சிரமதானப் பணிக்கு நன்றிகூறும் நோக்கோடு இருந்தார்.
“பலபகுதி மாணவர்கள் இங்கு இருக்கிறீர்கள். உங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். நல்ல நண்பர்களைத் தேடிக் கொள்ளலாம். ஆளுக்காள் ஒத்தாசையாக இருப்பதைக் கற்றுக் கொள்ளலாம். பாடங்களைக் கலந்துரையாடலாம். சந்தோசத்தை வளர்த்துக் கொள்ளலாம். விட்டுக் கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ளலாம். ஒன்று பட்டு உழைக்கும் நல்ல பண்பு உருவாகும். தலைமைத்துவப் பண்பு தானாக வந்து சேரும். இதற்கு உதாரணமாக நமது தடாகத்தில் தண்ணீர் நிறைத்ததைக் கூறலாம். அதுதான் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டு.”. அவர் நீட்டிக்கொண்டே சென்றார்.
சற்று நிறுத்தித் தனது உணவுத் தட்டைப் பார்த்து உணவை எடுத்து வாயினுள் வைத்தார். பின்னர் தொடங்கினார். “இரண்டு கிணறுகள்தான் உள்ளன. எப்படிச் சமாளிக்கிறீர்கள்? காலையில் குளிப்பது சிரமமாக இல்லையா? நானும் கவனித்து வருகிறேன். உங்கள் சிரமம் எனக்கு விளங்குகிறது. விரைவில் கிணற்றினைக் கட்டிவிடலாம். ஆனால் நிதி நெருக்கடிதான் உள்ளது. அதுதான் யோசிக்கிறேன்”. என்றார். “எங்களுக்கு பெரிய சிரமமாக இல்லை சுவாமி. நாங்கள் சமாளித்துக் கொள்வோம்”. சம்பந்தமூர்த்தி மாணவர்கள் சார்பில் அவரைச் சந்தோசப் படுத்தினான்.
4
“ஒரு கிணறு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் சுவாமி.” ஆனந்தன் வினவினான். “கிணறு கட்டுவதற்கு முதலில் இடத்தைத் தெரிவு செய்யவேண்டும். அந்த இடத்தில் கட்டுவதற்கான பெரிய கிடங்கு கிண்டவேண்டும். அதற்கு அவ்வளவு செலவு போகாது. செங்கல், சீமெனற், கட்டுக்கூலி எனச் செலவுகள் உள்ளன. விரைவில் கட்டுவோம்”;. நடராஜானந்தா விளக்கினார். “சுவாமி, எந்த இடத்தில் கிணற்றைக் கட்டினால் நல்லது” ஆனந்தன் தொடர்ந்து கேட்டான். “ நாம் இருக்கும் இந்த இடம் நல்லது. இது விடுதிக் கட்டிடங்களுக்கு மத்தியில் உள்ளது. இந்த இடத்தில் நல்ல தண்ணீர் உள்ளது. இவ்விடத்தில்தான் கட்ட யோசித்திருக்கிறேன். கட்டவும் வேண்டும்”. சுவாமி இடத்தைக் குறித்துக் காட்டினார். அவர்களுக்கும் பிடித்திருந்தது.
என்னதான் கதைத்தாலும் சுவாமி நேரமுகாமைத்துவத்தில் கரிசனையுடையவர். அவர் எழும்பினார். “நான் உங்களின் நேரத்தை வீணடிக்கிறேன். என்ன? சரி போவோம்”. அவர் சென்றுவிட்டார். “டேய் மூர்த்தி .. சுவாமி இருந்தால் பொழுது போவதே தெரியாது. என்ன”? ஆனந்தன் கேள்வி தொடுத்தான். “அதைத்தான் அவர் சுட்டிக்காட்டிவிட்டார்”;. சம்பந்தமூர்த்தி சிரிப்போடு சொன்னான். முருகேஸ் பெரிய சிரிப்பை உதிர்த்தான்.
“நீங்க ஒன்றைக் கவனிச்சிங்களா”? கரீம் முன்வைத்தான். “எதைச் சொல்கிறாய்”? கணேசமூர்த்தி வினவினான். “சுவாமி மறைமுகமாக நமது இரண்டாவது படிப்பு நேரத்தை நினைவு படுத்தியுள்ளார். அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகள் நடைபெற வேண்டும். இது சுவாமியின் கொள்கை. நாம் அதைப் பின்பற்ற வேண்டும். சரி போவோம். எழும்புங்க”. மனமில்லாது புறப்பட்டார்கள். கடமைகள் முடிந்து படுக்கைகளை விரித்தார்கள். நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது.
ஆனந்தன் சம்பந்தமூர்த்தியை அழைத்தான். முருகேஸ், கணேசமூர்த்தி, மகாலிங்கசிவம், கரீம், வடிவேலன், இஸ்மாயிலுடன் அருணாசலமும் வந்திருந்தார்கள். ஆனந்தன் முதலில் தொடங்கினான். “சுவாமி சொன்னதை நல்லாக் கேட்டிங்களா? இராமக்கிருஷண சங்கம் நிதிவசதியற்றது. நம்மைப் போன்ற ஏழை மாணவர்களுக்காகப் பள்ளிக்கூடங்களை நடத்தி உதவுகிறது. நாங்களும் நமது பங்களிப்பைச் செய்யவேண்டும். என்ன சொல்லுறீங்க”? நண்பர்களின் முன் சமர்ப்பித்தான். “நானும் இதைப்பற்றித்தான் யோசிக்கிறன்”;. இஸ்மாயில் ஒத்தூதினான். “சுவாமியின் வலது கைகளாக நாமிருப்போம்”. மகாலிங்கசிவம் உணர்ச்சியாகச் சொன்னான்.
“என்ன செய்வதாக உத்தேசம்”;. அருணாசலம் வினவினான். “நாமெல்லோரும் ஏழை மாணவர்கள். எங்களால் பணம் கொடுக்கமுடியாது. வீட்டில் காசு கேட்கவும் முடியாது. நம்மிடம் உணர்வும், உடல் வலுவும் உள்ளது. அதனால் கிணற்று வேலைக்குரிய கிடங்கைக் கிண்டிக் கொடுப்போமா? இராமனுக்கு அணில் செய்த சேவைபோல இருக்கும்”;. ஆனந்தன் விளக்கினான். “அது நல்லதொரு யோசனை. நாளைமறுநாள் சனிக்கிழமை நமது பாராளுமன்றம் நடைபெறும். அன்று முடிவெடுப்போம். அவசரமாக ஓடிவந்த மயிலிப்போடி கூறினான். “அதுதான் நல்ல முடிவு”. ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். “சரி நான் நிகழ்ச்சி நிரலில் அதனைச் சேர்க்கிறேன். இப்போது பதினொரு மணியாகிறது. நித்திரைக்குப் போவோம்”. மயிலிப்போடி முடிவுக்குக் கொண்டுவந்தான். தங்கள் படுக்கையை நோக்கி நடந்தார்கள்.
அதிகாலை நான்கு மணி. விடுதிக் கதவில் தட்டும் சத்தம் கேட்டது. மாணவர்கள் விழித்துக் கொண்டார்கள். சிவானந்தம் கதவின் பக்கம்தான் உறங்குபவன். அவன்தான் உள்துறைப் பாதுகாப்பு அமைச்சர். வெளியில் போகும்போது அவனது அனுமதியோடுதான் போகவேண்டும். நல்ல சுபாவம் கொண்டவன். கதவைத் திறந்து விட்டான். ‘பிறதர’; சைத்தனயா கண்டிப்பானவர். ஆனால் இரக்கசிந்தை உடையவர். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். “கெற் அப் மான், றப் யுவர் பொடி மான்” என்று ஆங்கிலத்தில் சத்தமிட்டவாறு வந்தார். சிறுவர்கள் தங்கள் படுக்கைகளைச் சுருட்டி வைத்துவிட்டு வரிசையாக நின்றார்கள். யோகப்பயிற்சி தொடர்ந்தது. உறக்கத்தில் தளர்வுற்ற உடல்கள் உற்சாகம் பெற யோகப் பயிற்சி உதவியது. நாலரை மணிக்கு யோகப்பயிற்சி முடிந்தது.
குளிப்பதற்காகச் சென்றார்கள். குளிக்கும்போதும் முதல்நாள் கதைத்த விடயத்தை நினைவு கூர்ந்தார்கள். மயிலிப்போடி பாராளுமன்றத்துக்குரிய ஏற்பாடுகளைக் கவனிப்பதாக் கூறினான். குளிப்பது ஒரு சுகமான சந்தோசமான பொழுது போக்காகும். துலாவை இழுத்துத் தண்ணீரை அள்ளித் துலாக்கொடியைப் பிடித்தபடி அவரவர் உயரத்துக்கு ஏற்ப உயர்த்திப் பிடிக்க வேண்டும். அதற்காகச் சற்றுத் தள்ளி நடக்க வேண்டும். மீண்டும் வந்து துலாக்கொடியை இழுத்துத் தண்ணீர் அள்ள வேண்டும்.
சின்னஞ் சிறுவர்களும் இருந்தார்கள். மூன்றாம் வகுப்புப் படிக்கும் சிறுவர்களும் இருந்தார்கள். பெரியவர்கள் குளிக்கும் போது அவர்களுக்குக் கீழே குந்துவார்கள். பெரியமாணவர்கள் குளிக்கும் தண்ணீர் அவர்கள் மேல் விழும். ஒருவர் குளிக்கும்போது பலருக்குத் தண்ணீர் படும். அவர்களும் குளிப்பார்கள். இதுதான் அவர்களது மழைதூறல் குளிப்பு. ‘சவர் பாத்’. ஒரே நேரத்தில் பலர் பயனடையும் பலநோக்கோ? உடல் ஈரமானதும் சவர்க்காரம் போடுவார்கள்.
சவர்க்காரம் போட்டவர்களுக்குப் பெரிய மாணவர்கள் தண்ணீர் அள்ளிக் கொடுப்பார்கள். குளிபாட்டியும் விடுவார்கள். அவர்களிடையே ஒரு சகோதர பாசம் இருந்தது. சிலர் குளிக்கும்வரை தூரத்தில் குந்தியிருந்து அரட்டையடிப்பார்கள். பாடங்களையிட்டு விவாதிப்பார்கள். நிரையில் நிற்கும் மரமுந்திரிகைக் கிளைகளில் தாவிக்குதிப்பார்கள். தங்களது முறை வரும்வரை காத்திருப்பார்கள். சகிப்புத் தன்மையைப் பயின்றுகொண்டார்கள். குளித்து முடியும்வரை கிணற்றடி ஒரே குதூகலமாக இருக்கும். சிலவேளைகளில் பிறதரின் மேற்பார்வை இருக்கும். அப்போது சற்று அமைதிநிலவும். சிறுவர்களின் குதூகலத்தைத் தூரத்தில் இருந்து சுவாமி நடராஜானந்தா பார்த்துப் புன்னகைப்பார்.
சுவாமி நடராஜானந்தா அதிகாலையில் வேப்பிலைகளைப் பறித்துச் சப்புவார். வேப்பங்குச்சியால் பல்துலக்குவார். அதனையே பலசிறுவர்கள் பின்பற்றினார்கள். பொதுவாக விடுதி மாணவர்கள் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையையே பின்பற்றினார்கள். ஆங்கில மொழிமூலக் கல்விதான் நடைமுறையில் இருந்தது. ஆனால் இங்கு அது குருகுலக் கல்விமுறையைப் பின்பற்றியதாக இருந்தது. அதனால் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்தது. வீண் செலவு இருக்கவில்லை. வெள்ளிக்கிழமைகளில் சில மாணவர்கள் அனுமதியோடு வீடு செல்வார்கள்.

5
ஒரு மாதத்தில் ஒருமுறை வீடு செல்ல அனுமதி கிடைக்கும். பெற்றோரின் வேண்டுகோள் இருப்பின் விஷேட அனுமதி கிடைக்கும். வீடு சென்று வருபவர்கள் இடைநேரங்களில் உண்பதற்காக ஏதும் தீன்பண்டங்கள் கொண்டு வருவார்கள். அது அன்றே முடிந்து விடும். எல்லோருக்கும் பங்கு கிடைக்கும். விடுதியில் பலசமயத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவரவர் சமயங்களை அனுசரித்துப் போக வசதிகளிருந்தன. கல்லூரியில் பல்லின மாணவர்களும் கற்றார்கள்.
சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களும் கற்றார்கள். பேதங்கள் இருக்கவில்லை. எப்படித்தான் கட்டுக் கோப்புகள் இருந்தாலும் மாணவப் பருவம் அவற்றையும் மீறிச் செயற்படுவது தவிர்க்க முடியாததாகும். சிறப்பாகச் சனிக்கிழமைகளில் சட்டங்கள் மீறப்படும். எதையும் செய்து பார்க்கும் ஆர்வம் ஏற்படும். மாணவர்கள் சின்னச் சின்ன ஆசைகளில் துணிந்து ஈடுபடுவார்கள்.
சனிக்கிழமை இரவு அவர்களுக்குச் சந்தோசமானது. சனிக்கிழமை இரவுகளில் இரண்டாம் நேரப்படிப்பு இருக்காது. அந்த நேரத்தை மாணவர்கள் பொழுது போக்குகளில் செலவழிப்பார்கள். குழுக்குழுக்களாகவே ஈடுபடுவார்கள். விடுதியின் பின்புறமாகப் பற்றைக் காடுகள் மண்டிக்கிடந்தன. உயர்ந்த மரங்கள் ஆங்காங்கு தெரியும். இரண்டு கிலோமீற்றருக்கு அப்பால் தென்னந்தோட்டங்கள் நீண்டு படுத்திருக்கும். குழுவாகச் சேருவார்கள். தென்னந் தோட்டத்தினுள் புகுவார்கள். கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த தென்னோலைகளைச் சேர்த்து நீண்ட சிப்பமாகக் கட்டுவார்கள். அதுதான் தீப்பந்தமாகப் பயன்படும். அப்படியே தூக்கியெடுத்துக் கடற்கரைப் பக்கம் செல்வார்கள். வங்காள விரிகுடா விரிந்து அலைகளை ஆர்ப்பரித்து வீசும். தென்னோலைச் சிப்பங்களின் நுனியில் பற்றவைப்பார்கள். தீ கொழுந்து விட்டு எரியும். வெளிச்சத்தில் கடலலைகள் சிரிக்கும். நல்ல வெளிச்சம் கொடுக்கும்.

கடற்கரை நண்டுகளின் விளையாட்டுத் திடல். விளையாடும் நண்டுகளை மாணவர்கள் வேட்டையாடுவார்கள். தண்ணீரினுள் பெரிய நண்டுகள் உலா வரும். மீன்களும் நீந்தியோடும். அவற்றை வேட்டையாடுவதில் மணவர்களுக்குச் சந்தோசம். கைகளில் கிடைக்கும் தடிகளும், தென்னையின் பூக்கம்பாளையும் அவர்களது ஆயுதங்களாகும். தென்னோலைச் சிப்பங்கள் முடியும்வரை வேட்டை நடைபெறும். வெகுதூரம் சென்று விடுவார்கள். பின் மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருவார்கள். வேட்டையாடியவற்றைத் துப்பரவு செய்து விடுவார்கள். விடுதிக்கு வந்ததும் வீரையாவின் உதவி கிடைக்கும். உடனடிச் சமையல் நடக்கும். ஏற்கனவே பாண் வாங்கி வைத்திருப்பார்கள். எல்லோரும் மணலில் குழுமியிருந்து உண்பார்கள். பெரிய சாதனையாளர்களாக நினைத்துக் கொள்வார்கள்.
சிலவேளைகளில் மட்டக்களப்பு நகரில் உள்ள தியேட்டர்களுக்கு ஓடுவார்கள். இரண்டாவது காட்சிக்குத்தான் போகமுடியும். படம் பார்க்க அனுமதி கிடைக்காது. களவாகத்தான் போகமுடியும். களவாகச் சென்றாலும் பிடிபடாதவாறு தப்பித்துக் கொள்ளும் ஒற்றுமை சிறுவர்களிடம் இருந்தது. ஓரு குழு படம் பார்க்கச் செல்லும். மற்றக்குழுக்கள் விடுதியில் காப்பாற்றத் தயாராக இருக்கும். பணம் இல்லாதவர்களுக்கு நண்பர்கள் உதவுவார்கள். ஒவ்வொருவரின் கையிலும் முப்பது சதம் இருக்கும். ஓடிப்போய் கியூவில் திமிறி நுழைந்து ரிக்கற் எடுப்பார்கள். சிலவேளைகளில் உடல்களில் உரைசல்கள் ஏற்படும். தியேட்டர்களில் பல்கனி இருக்கும். முதலாம் வகுப்பு இருக்கும். இரண்டாம் வகுப்பும் இருக்கும். திரையை அண்டி இருப்பதுதான் கலரி. அதனைக் காந்தி வகுப்பு என்றழைத்தார்கள். நமது சமூகத்தில் நாலு வகை மக்கள் இருக்கிறார்கள். நாலு மனிதர் என்று சொல்வது இதுதானோ? தங்களுக்குள் கேட்டுக்கொள்வார்கள்.
நமது நாட்டில் நாலுவகையான பொருளாதார அமைப்பிருந்ததை தியேட்டர்கள் காட்டின. நல்ல வசதியுள்ளவர்ககள் பல்கனியில் இருப்பார்கள். அடுத்து முதலாம் வகுப்பில் இருந்து படம் பார்ப்பார்கள். அதற்கடுத்த வருவாயுடையவர்கள் இரண்டாம் வகுப்பில் இருப்பார்கள். பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்குக் காந்திக்கிளாஸ்தான். பெருங்குடி மக்களுக்குரியது காந்திக்கிளாஸ். இவர்களும் கலரி வகுப்பில் ஒவ்வொருவராகப் பதுங்கி நுழைவார்கள்.
மெதுவாகத் தலைகளைப் பின்புறமாகத் திருப்பி பார்ப்பார்கள். தெரிந்தவர்கள் இல்லையென்று திருப்தி கொண்டதும் அமைதியாகப் படம் பார்ப்பார்கள். இத்தனை தடைகளைத் தாண்டி வந்து படம் பார்ப்பது ஒரு சவாலான மகிழ்ச்சிதான்.
மட்டக்களப்பு நகரையும் கல்லடியையும் நீண்ட பாலம் இணைக்கிறது. விடுதியில் இருந்து ஓடத்தொடங்கினால் தியேட்டர்வரை ஓட்டந்தான். படம் முடிந்ததும் காலாறக் களைத்து வந்து சேருவார்கள்.
விடுதியில் சுழலும் யன்னல் கதவுகள் இருந்தன. அவற்றை உட்பக்கமாகப் பூட்டலாம். திறாங்கை செருகாமல் விட்டால் தள்ளியதும் திறபடும். யன்னலால் ஏறிக்குதித்து உள்நுழையலாம். சிலவேளைகளில் பகல் இரண்டுமணிக் காட்சிக்குப் போவார்கள். விடுதியில் இருந்து புறப்படும் நேரம் தொடக்கம் படம் முடிந்து விடுதி வந்து சேரும்வரை நேர்த்திக்கடன் வைப்பார்கள். மட்டக்களப்புப் பாலம் காட்டிக் கொடுத்து விடும் இடமாக இருந்தது. பாலத்தின் இருமுனைகளில் ஏதாவது ஒருபக்கம் நின்றால் நடந்து வரும்போது பிடிபட வாய்ப்புக்கள் அதிகம். அதனால் பாலத்தடியில் உள்ள கன்னிமரியாள் அவர்களின் உள்ளங்களில் குடியிருப்பாள். “தாயே எங்களைக் காப்பாற்று. உனக்கு மெழுகுவர்த்தி கொழுத்தி ஆராதிப்போம்.” நேர்த்தி வைப்பார்கள். நேர்த்தியை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. ஆனாலும் கன்னிமரியாள் அவர்களைக் கைவிடுவதில்லை. சாம்பசிவம் ஒரு வித்தியாசமான பிறவி. அவனுக்குத் தான் பெரிய கதாநாயகன் என்ற நினைப்பு. டொன் குவிக்சோ போன்ற கதாநாயகப் பாங்கு. தான் பெரிய சாதனையாளன் என்ற நினைப்பில் வாழ்பவன். அவனது தந்தை ஓரு போடியார். அவர் வசதியானவர். சாம்பசிவத்திடம் கொஞ்சம் பணம் இருக்கும். அவனிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனது நண்பர்களுக்குப் படம் பார்ப்பதற்கு மட்டும் உதவி செய்வதுதான். பலர் அவனது உதவியை நாடுவார்கள். சிலநேரம் திருப்பிக் கேட்பான். அதிகமாக அவன் திருப்பிக் கேட்பதில்லை.
சாம்பசிவத்தின் கையில் படத்தின் பாடல்கள் அடங்கிய சிறு புத்தகம் இருக்கும். அடுத்தடுத்த நாள்வரை படம் பார்த்தவர்கள் காட்சிகளை வர்ணிப்பார்கள். சிவகுமார் நன்றாகச் சிட்டியடிப்பான். பாடல்களை அப்படியே சீட்டியால் ஊதுவான். மற்றவர்கள் சேர்ந்து பாடுவார்கள். ஒருவர் படத்தின் தொடக்கத்தைச் சொல்வார். அடுத்தடுத்தவர் முறையாகச் சொல்லி இறுதியில் மிஞ்சி இருப்பவர் சொல்லி முடிப்பார். சிலர் நடித்துக் காட்டுவார்கள். இப்போதுதான் சாம்பசிவத்தின் கதாநாயகப் போக்குத் தெரியும். மற்றவர்கள அவர்களைச் சூழ்ந்திருந்து ரசனையோடு ரசிப்பார்கள்.
ஒருமுறை சாம்பசிவத்தின் தலையில் சிறு உரைசல் ஏற்பட்டுவிட்டது. இரத்தம் சிறிது கசிந்தது. அவ்வளவுதான். அடுத்தநாள் பண்டேஜ் துணியினால் கட்டுப் போட்டிருந்தான். “என்ன தலையில காயம்.”? சிவகுமார் கேட்டான். “நேற்றுப் படம் பார்க்கப் போனோம். சரியான சனம். நான் கியூவை உடைத்துக் கொண்டு முன்னேறினேன். ஒருவன் முறைத்துப் பார்த்தான். சின்னப் பிரச்சினை. அவன் அடித்தான். அந்த அடியைத் தட்டிவிட்டேன். நான் திருப்பிக் கொடுத்ததில் அவன் விழுந்திட்டான். அந்த மோதலில்; என்ர தலை சுவரில் மோதிற்று. அதனால் ஏற்பட்ட காயம்”. சாம்பசிவம் ஒரு கதாநாயகப் போக்கினைக் கடனாக வாங்கியவாறு விளக்கினான். சிவகுமாரும் சாம்பசிவத்துக்குத் தெரியாமல் படம்பார்க்கப் போனவன். சிவகுமார் சிரித்துக் கொண்டான். இப்படி சாம்பசிவத்தின் ‘டொன் குவிக்சோ’ த்தனம் ஏராளம். அவனுக்குத் தெரியாமல் சிறுவர்கள் வைத்த பெயர் ‘டொன் குவிக்சோச் சாம்பசிவம்’.
6
விடுதியில் வழமையாக மாதம் ஒருமுறை பாராளுமன்றம் கூடும். இவ்வாரம் அதற்கான ஆயத்தங்கள் நடந்தன. பிற்பகல் இரண்டு மணிக்கு பாராளுமன்றம் நடைபெறுவதற்கான அறிவுறுத்தல்கள் ஆங்காங்கு தெரிந்தன. கமலாலயம் விடுதியில்தான் பாராளுமன்றம் கூடும். சரியாக இரண்டுமணி. சபாநாயகர் வருவதற்கான மணியொலித்தது. பிறதர் சைத்தன்யாதான் சபாநாயகர். அனைவரும் எழுந்து நின்றார்கள். சபாநாயகர் இருக்கையில் இருந்ததும் எல்லோரும் அமர்ந்தார்கள். பாராளுமன்றம் தொடங்கியது.
அவர்களது பாராளுமன்றம் வித்தியாசமானது. நடைமுறைகள் யாவும் உண்மைப் பாராளுமன்றம் போலிருக்கும். சபாநாயகருக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ இருக்கைகள் இல்லை. கமலாலய விடுதியில் பாய்கள் விரிக்கப் பட்டிருக்கும். சபாநாயகருக்கு முன்னால் உயரமான பெட்டி இருக்கும். அதன்மேல் தேவையான கோவைகள் இருக்கும். சபாநாயகர் முன்னால் அமர்ந்திருந்தார். அவரது இடப்புறமாகவும் வலப்புறமாகவும் அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆளும்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிரெதிராக இருந்தார்கள். பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும். விவாதங்கள் நடைபெறும். வாக்கெடுப்பு இடம்பெறும்.
ஓவ்வொரு துறைக்கும் பொறுப்பான அமைச்சர்கள் இருந்தார்கள். பிரதம அமைச்சர் சகலதுக்கும் பொறுப்பாக இருந்தார். எதிர்கட்சித் தலைவருக்கு மதிப்பிருந்தது. கல்விக்குத் தனியான அமைச்சர் இருந்தார். சுகாதாரம், விளையாட்டுத்துறைக்கு ஒரு அமைச்சர் இருந்தார். உணவுத்துறை ஒருவரிடம் இருந்தது. உள்துறை, பாதுகாப்பமைச்சும் ஒன்றாக இருந்தது.
பாதுகாப்பமைச்சர் சிவானந்தம் விடுதியின் பாதுகாப்புக்கான வேலி திருத்தத்திற்கான பிரேரணையைச் சமர்ப்பித்து விளக்கினார். கல்வி அமைச்சர் சம்பந்தமூர்த்திக்குத்தான் பிரச்சினைகள் குவிந்தன. எதிர்கட்சித் தலைவராக நடராஜா இருந்தான். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவான். அவனது விவாதத்திறமை அற்புதமானது. அமைச்சர்களைக் கேள்விக் கணைதொடுத்து அதிரவைப்பான்.
“போதிய வெளிச்சம் இல்லை. பெற்றமக்ஸ் போதியதாக இல்லை. மேலதிக பெற்றமக்ஸ் வேண்டும். அமைச்சர் கவனத்தில் கொள்வாரா”? எழுத்துமூலப் பிரேரணையைக் கொடுத்துக் காரசாரமாக விளாசினான். பல பிரேரணைகள் குவிந்தன. கல்வி அமைச்சர் சம்பந்தமூர்த்தி திறமையாகக் கையாண்டான். பெற்றமெக்ஸ் அவசியம் தேவை என்ற பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. எதிர்த்து வாக்களிக்க யாரும் இல்லை. அது ஏகமனதாகச் சபையில் நிறைவேறியது
“ஆளுநரின் அனுமதி கிடைத்ததும் பெற்றமக்ஸ் விவகாரம் நடைமுறைக்கு வரும்”; சம்பந்தமூர்த்தி விடையளித்தான். “எப்போது? பதில் இப்போதே வேண்டும்”. நடராஜா நின்று கொண்டான். சபாநாயகர் குறுக்கிட்டு அமைதிப்படுத்தினார். சம்பந்தமூர்த்தி ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டான். “கௌவர எதிர்க்கட்சித் தலைவருடன்தான் பெற்றமக்ஸ் பிரேரணையைச் சமர்ப்பித்தேன். அவர் மறந்து விட்டுக் கேட்கின்றார். ஆளுநர் அனுமதித்துவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஐந்து பெற்றமக்ஸ் திங்கட்கிழமை வந்துவிடும்”. அமைதியாகச் சம்பந்தமூர்த்தி விடையளித்தான். சபையில் ஆரவாரம். நடராஜா சிரித்தான். நடராஜாவும் சம்பந்தமூர்த்தியும் நல்ல நண்பர்கள். இருவரும் சுவாமியிடம் பெற்றமக்ஸ் பற்றிக் கதைத்து அனுமதியும் பெற்றிருந்தார்கள். தானும் போய்க் கதைத்ததை சம்பந்தமூர்த்தி சபையில் சொல்ல வேண்டும் என்ற ஆசையிருந்தது.
சுகாதார அமைச்சர் மயிலிப்போடி கிணறு பற்றிய பிரேரணையை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கினான். நிதியமைச்சர் விவேகானந்தன் எழுந்தான். “இப்போதைக்குப் போதிய நிதியில்லை. அதனால் இந்தத்திட்டம் ஒத்திவைக்கப் படுகிறது” என்றான். ஆனால் காரசாரமான விவாதம் தொடங்கியது. எதிர்கட்சியினர் “உடனடியாகத் தொடங்கவேண்டும்” என்று வாதாடினார்கள். சில ஆளும் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டார்கள். “ஒரு கிணறு கட்டுவதற்கான உத்தேச செலவு என்ன? நிதியமைச்சர் இப்போது தெரிவிக்கவேண்டும்.” எதிர்க்கட்சித் தலைவர் நடராஜா விடாப்பிடியாக நின்றான்.
ஒரு கிணறு கட்டுவதற்கான உத்தேசச் செலவு மதிப்பிடப்பட்டது. “பொருட்களை மட்டும் கொள்வனவு செய்யலாம். மேசன்கூலியும் கொடுக்கமட்டும் நிதியுண்டு. கௌரவ ஆளுநர் வந்தபின்னர்தான் தீர்மானிக்கலாம்.” நிதியமைச்சர் விளக்கினான். “சரி நீங்கள் சொன்னவற்றை ஏற்றுக் கொள்கின்றோம். கிணற்றுக்காக கிண்டும் பணிக்குரிய செலவை சிரமதானம் மூலம் ஈடுசெய்யலாம். அவையனைத்தையும் இந்தச் சபை ஏற்றுக் கொள்ளும்”;. கல்வியமைச்சரும், சுகாதார அமைச்சரும் இணைந்து தெரிவித்தார்கள்.
“இன்று இரவு கிணற்று வேலையைத் தொடங்குவதற்குச் சபையின் அங்கிகாரம் தேவை”. சபையினர் தெரிவித்தனர். சபாநாயகர் கைகளை உயர்த்தி அமைதிப்படுத்தினார். “சபையின் ஏகோபித்த கருத்தை இப்பாராளுமன்றம் ஏற்றுக் கொள்கிறது. எனினும் இதற்கான வாக்கெடுப்பு நடத்தவேண்டும். நீங்கள் தயாரா”? சபாநாயகரின் அறிவிப்பு வந்தது.
சபையில் இருந்த உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டார்கள். வாக்கெடுப்பு நடந்தது. எதிர்ப்பில்லாது கைகளை உயர்த்தி வாக்களித்தனர். இந்தப் பாராளுமன்றத்தின் ஆளுநர் சுவாமி நடராஜானந்தாதான். “ஆளுநர் கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருக்கிறார். ஆளுநரின் அனுமதி பின்னர் பெறப்படும். மிக முக்கியமான விடயங்களுக்கு பின்னனுமதி பெற வாய்ப்புக்கள் உண்டு. இன்று கூட்டுப்பிரார்த்தனை முடிவுற்றதும் தொடங்குவோம். ஆறு மணிக்குக் கிணறு தோண்டும் பணி தொடங்கும். அத்துடன் அடுத்த சனிக்கிழமை பாதுகாப்புக்கான வேலித்திருத்தம் நடைபெறும். அதனையும் சிரமதானமூலம் செய்வதற்குச் சபை ஏகமனதாக முடிவெடுத்தால் இன்றைக்கே நிறைவேற்றி விடலாம்.” சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். சபை ஆரவாரித்து ஏகமனதாக நிறைவேற்றியது. சுபாநாயகர் முடிவினை அறிவித்தார்.
பாராளுமன்றம் கலைந்து சிறுவர்கள் வெளியேறினார்கள். தேநீரின் பின் விளையாட்டுத் திடல் களைகட்டியது. சிறுவர்கள் எங்கும் பரந்து விளையாடினார்கள். அவரவருக்கு விரும்பிய விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள். சுகாதார அமைச்சர் மயிலிப்போடி சுறுசுறுப்பானான். ஏனைய அமைச்சர்களும் சேர்ந்து கொண்டனர். சிரமதானப் பணிக்குரிய வேவைகளில் ஈடுபட்டார்கள். இரத்தினசபாபதி ஆசிரியர் விளையாட்டு உடையோடு வந்து விட்டார். குகதாசன் ஆசிரியர் இருந்தால் கலகலப்பாக இருக்கும் அவரும் வந்து nவிட்டார். பிறதர் சைத்தன்யா நடந்து வந்தார். அவரைத் தொடர்ந்து மாணவர் படை வந்தது. இரத்தினசபாபதி கயிற்றோடு நின்றார். கிணறு சரியான இடத்தில் அமையவேண்டும். ஆசிரியர்கள் கூடிவிட்டனர்.
7
சுந்தரலிங்கம் ஆசிரியர் ஒரு விகடகவி. சேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவர். சேக்ஸ்பியர் கதைகளைச் சுவைபடச் சொல்வார். எந்தநேரமும் அவரைச் சூழ ஒரு மாணவர் கூட்டம் இருக்கும். அவர் நின்றால் சிரிப்புக்குப் பஞ்சமே இருக்காது. அவரது வகுப்பு மாணவர்களுக்கு ‘மேச்சன்ற் ஒவ் வெனிஸ்;’ தண்ணிபட்ட பாடம். சைலொக்கின் பாத்திரமாக மாறி நடித்துக் காட்டுவார். ‘ஒலிவர் ருவிஸ்ற்’ கதையைக் கூறிக் கொண்டே இருப்பார். சிலவேளைகளில் அரைக்காற் சட்டையோடு வெள்ளைக் கோட் அணிந்தும் வருவார். அழகாகத்தான் இருப்பார். “சேர், சரியான வெயில். இந்த வெயில் காலத்தில் ஏன் சேர் கோட் போட்டிருக்கிறிர்கள். சிறுவர்கள் கேட்பார்கள்.
“வெறிகுட் குவற்ஸன். ஐ லைக்கிற். இன்டைக்குக் காலையில தெரியாமக் குளிச்சிட்டன். அதுதான் குளிருது. கோட் போட்டிருக்கிறன்”. அவரது பதில் வேடிக்கையாக இருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல என்பது மாணவர்களுக்குத் தெரியும். கிழிந்த சேட் போட்டால் அதை மறைப்பதற்குக் கோட் போடுவதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சுந்தரலிங்கம் வந்து சேர்ந்து விட்டார். “ஹேய்..ஹெல்த் மினிஸ்ரர்… பிளைன்ரி ஓடர் பண்ணியாச்சா? வேலையத் தொடங்கப் போறம். முதலில் பிளைன்ரி. அப்பதான் வேலை ஓடும். சுந்தரலிங்கம் வேலைசெய்வதுபோல் பாசாங்கு செய்தார். இரத்தினசபாபதி இன்ஜீனியராக மாறிவிட்டார். குகதாசன் சுப்பவைசர் ஆகிவிட்டார். எத்தனை மண்வெட்டி இருக்கு? வாளி அதிகம் தேவை. ஆளுக்காள் வேண்டிய பொருட்களைத் தேடிக் கொண்டார்கள்.
கிணறு வெட்டுவதற்கான இடத்தை அளந்து வட்டம் போட்டார்கள். கணேசமூர்த்தி குழு பெற்றமக்ஸ் விளக்குகளை சுற்றிவர வைத்தது. சீனத்தம்பி வட்டத்தின் மத்தியில் வெள்ளைத் துணியை விரித்தான். அதில் வெற்pலை, பாக்குப் பழம், பூ, திருநீறு வைத்தான். தேவாரம் பாடினார்கள். குகதாசன் ஆசிரியர் பிறதர் சைத்தன்யரிடம் மண்வெட்டியைக் கொடுத்தார். அவர் முதலாவதாக மண்ணை வெட்டி வெளியில் வீசினார். வடிவேலன், கரீம், முருகேஸ் என அனைவரும் சூழ்ந்து நின்றார்கள். முதலில் உலர்ந்த மணலை வழித்து விட்டார்கள். இரண்டடி ஆழத்துக்கு உலர்ந்த மணல் வந்தது.
இரத்தினசபாபதி குழுக்களாக பிரித்து விட்டார். தம்பிராசா ஆசிரியர் நல்ல உழைப்பாளி. எப்போதும் வேட்டிதான் கட்டுவார். வேட்டியை மடித்துக் கட்டினார். துவாயை எடுத்துத் தலையில் கட்டினார். “எடுடா மண்வெட்டியை. புpடிடா வாளியை. தூக்கடா …பிடி…” என்றார். வேலை துரித கதியில் நடந்தது. கிணற்றினுள் உள்ளவர்கள் மண்ணை மண்வெட்டியால் அள்ளி வாளியில் போடுவார்கள். ஒருவர் வாளியைத் தூக்கி முன்னால் நிற்பவரிடம் கொடுப்பார். அவர் மற்றவருக்குக் கொடுப்பார். இறுதியில் நிற்பவர் வாளியை வாங்கி மணலைக் கொட்டிவிட்டு வாளியை அனுப்புவார். வெறும்வாளியை சின்னவர்கள் எடுத்து விரைவார்கள். “ஏய் போய்ஸ்! சித்தாள் வேலை எட்டாள் வேலைக்குச் சமனாம். உங்களுக்குத் தெரியுமா? நீங்க கெட்டிக்காரர்கள். இந்தா முடிஞ்சுது. இன்னுங் கொஞ்சம். கமோன்..ஹறியப்..” சுந்தரலிங்கம் உற்சாகப் படுத்தினார்.
யாராவது அவருக்குத் தெரியாது போனால் “அங்க யார் ஆடியாடிப் போறது”?” என்பார். பின்னர் “கூ இஸ் ஜூலை ..ஜூலை கோயிங்.” என்பார். சிறுவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். சிறுவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இப்படிச் சொல்வார். இதனைச் சிறுவர்கள் தங்களுக்குள் கூறிச் சிரிப்பார்கள். தமிழோடு ஆங்கிலத்தையும் சேர்த்துக் கதைத்து மகிழ்வார்கள்.
மண் கீழிருந்து மேலே அனுப்புவது சிரமமானது. குனிந்து நிமிர்ந்து பாடுபடவேண்டும். “என்ன களைக்கிறதா? இதோ வருகிறது பிளைன்ரி. கமோன்” சுந்தரலிங்கம் சத்தமிடுவார். “சேர் நாங்கள் விளையாடுகிறோம். வேலை செய்பவர்களுக்குத்தான் களைக்கும். எங்களுக்குக் களைப்பு வராது. சுவாமி வந்து பார்த்துப் பாராட்டவேண்டும். அதுதான் எங்களது லட்சியம்”. ஆனந்தன் உற்சாகமாகக் கூறினான். பிறதர் சைத்தன்யாவுக்கு உற்சாகம் தாங்கமுடியாதிருந்தது. இந்தச் சிறுவர்கள் எப்படி உற்சாகமாக வேலையில் ஈடுபடுகிறார்கள்.? அவர் சந்தோசத்தோடு களமிறங்கினார். ஆழமாகப் போகப்போக மணல் கனத்தது. நல்ல ஈரமணல் பாரமாக இருந்தது. வாளிகள் கீழிருந்து வந்தபடியே இருந்தன. அதோபோல் வெறும் வாளிகள் கீழே போய்க் கொண்டிருந்தன. அதற்கேற்றவாறு கிணற்றின் தொடக்கத்தை அகலமாகக் கிண்டியிருந்தார்கள்.
அடிக்கடி குழுக்கள் மாறுவார்கள். ஓரு குழு வேலை செய்யும்போது மற்றக் குழு இளைப்பாறும். அதேவேளை உற்சாகப் படுத்தும். உணவுக்கான குழு உபசரிப்பில் ஈடுபடும். பிளைன்ரீ கொடுபடும். ஆசிரியர்களும் மாணவரிடை கலந்து கொண்டு வேலைசெய்தார்கள். அனைவரும் வேலையில் ஈடுபட்டார்கள். அது ஒரு சிறப்பம்சம். இரத்தினசபாபதி கிணற்றை எட்டிப் பார்த்தார். ஆறடி ஆழத்துக்குப் போய்விட்டது. இன்னும் நாலடி கிண்டினால் போதும். தண்ணீர் வந்துவிடும். நேரத்தைப் பார்த்தார் எட்டுமணியாகியிருந்தது.
“சாப்பிட்டபின் வேலை செய்வோமா”? குகதாசன் ஆசிரியர் சிரிப்போடு கலகலத்தார். அவர் சிறுவர்களது மனதை அறியும் ஆவலில் இருந்தார். உண்மையில் வேலை முடிந்தபின் சாப்பிடுவதுதான் அவரது நோக்கம். “சேர் சாப்பிட்டால் வேலை செய்யமுடியாது. தண்ணீரைக் கண்டபின்தான் சாப்பாடு”. மணலை அள்ளியவாறே வடிவேலன் சொன்னான். சிறுவர்களின் மனவுறுதியைக் கண்டு ஆசிரியர்கள் பிரமித்தார்கள்.வேலை கடுகதி வேகத்தில் சென்றது. மயிலிப்போடிக்குத் தண்ணீரைக் கண்டுவிடவேண்டும் என்ற அவசரம். கிணற்றின் நடுவில் குழியாகக் கிண்டிப் பார்த்தான் தண்ணீர் ‘குபுகுப’ வெனப் பாய்ந்தது.
8
கொலம்பஸ் கடலில் பலநாட்களாகப் பயணம் செய்தான். நிலத்தைக் காணவே இல்லை. பல இழப்புக்களைச் சந்தித்தான். நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தான் அப்போது நிலம் தென்பட்டது. ஆரவாரித்துத் துள்ளினான். அதைப்போன்று “தண்ணீர் தண்ணீர்” என இரு கைகளாலும் அள்ளி வீசினான். “ ஹ_றே… ஹ_றே” சிறுவர்கள் துள்ளிப் பாய்ந்து ஆரவாரித்தார்கள். சுந்தரலிங்கம் ஆசிரியர் மேலும் தண்ணீர்த் திவலைகள் பட்டன. “யுறேகா.. யுறேகா” எனச் சுந்தரலிங்கம் ஆசிரியர் ஓடியோடிச் சத்தமிட்டார். “ ஏய்…அங்கபாரருங்க…ஆக்கிமிடிஸ் ஓடுறார் ஆக்கிமிடிஸ், ஓடுறார் பாருங்க” குகதாசன் சிரிப்போடு சொன்னார். சிறுவர்களின் சிரிப்பொலி வானை முட்டியது.
“சேர் அந்த ஆக்கிமிடிஸ் துணியிலாமல் ஓடினார். எங்கட ஆக்கிமிடிஸ் அரைக்காற் சட்டையோடு ஓடுறார்”. தம்பிராசா ஆசிரியர் சொல்லிச் சிரித்தார்.
“சரி ஒரு மூச்சுப் பிடிப்போம். கமோன்..குவிக்” கரிம் உற்சாகப் படுத்தினான். இயந்திர கதியில் இயங்கினார்கள். ஒன்பதரை மணியைத் தாண்டி விட்டது. இரத்தினசபாபதி கிணற்றை எட்டிப்பார்த்தார். அவருக்குச் சந்தோசம். சுடசடவென இறங்கினார். உள்விட்டத்தை அளந்தார். எட்டடி விட்டத்தைக் கொண்டிருந்தது. தண்ணீர் முழங்காலளவு இருந்தது. “சரி இது போதும். இன்னுத் தோண்டினால் கட்டுவது கஸ்;டம். வேலையை நிறுத்துவோம். மெதுவாக வெளியில் வாங்க”. கூறினார். சரிந்திருந்த மணலைச் சரிசெய்தார்கள். வெற்றிவாகை சூடிய வீரர்களாக வெளியில் வந்தார்கள். களைப்பையே அவர்கள் முகங்களில் காணவில்லை. கலகலவெனச் சிரித்தபடி சாதனை வீரர்களாக நின்றார்கள். அவர்கள் மனங்கள் சுவாமி நடராஜானந்தாவின் பாராட்டுக்காகக் காத்திருந்தன.
சுவாமி நடராஜானந்தா இராமக்கிருஸ்ண மிசன் பாடசாலைகளின் முகாமையாளர். அதனால் பாடசாலைகளின் மேற்பார்வை அவரது கடமைப்பட்டியலில் இருந்தது. கொழும்பில் தலைமைச் செயலகம் இருந்தது. அங்கு கடமை முடிந்ததும் திருகோணமலை செல்ல வேண்டும். திருகோணமலையில் சில இடங்களில் பாடசாலைகள் இருந்தன. அங்கிருக்கும் பாடசாலைகளை மேற்பார்வை செய்து விட்டே வருவார். எப்படியும் பத்து நாட்களாவது செல்லும். நாட்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. பாடசாலை கலகலப்பாக இயங்கியது. மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரத்தினசபாபதி விளையாட்டுத் திடலில் நின்றார். அவரது கைகளில் ஒரு சுற்றுநிருபம் இருந்தது. அதனைப் படித்தபடியே யோசித்தார். மாணவர்களை அழைத்தார்.
விளையாட்டுத் திடலில் வேலியாகச் சில பமைரங்களும், வேம்பு, மஞ்சவெணா மரங்களும் நின்றன. அவைதான் விளையாட்டுத் திடலின் பாதுகாப்பாளர்கள். அந்திசாயும் நேரமாக இருந்தது. வெயில் மரங்களின் நிழலை நீட்டிவிட்டிருந்தது. நிழலில் அனைவரும் கூடினர். பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கியிருந்தன. “புதன் பிற்பகல் கரப்பந்தாட்டப் போட்டி இருக்கிறது. இம்முறை நீங்கள் வெற்றியடைய வேண்டும். சம்பியன் பட்டத்தைப் பெறவேண்டும். அதற்கு ஆயத்தமாகுங்கள். நீங்களே உங்கள் வீரர்களைத் தெரிவு செய்ய வேண்டும்”. அவர்களிடமே பொறுப்பைக் கொடுத்து விட்டார். பயிற்சியினைத் தொடங்கி வைத்தார். பயிற்சி தொடங்கினால் காலையும் மாலையும் தொடர்ந்து நடக்கும். சிறுவர்கள் குழுமியிருந்து உற்சாகப் படுத்துவார்கள். வீரர்களுக்கு விஷேட உணவுவகைகள் கிடைக்கும்.
அதிகாலை ஆறுமணிக்கு விளையாட்டுத் தொடங்கி விடும். ஏழரை மணிவரை பயிற்சி நடக்கும். பாடசாலை முடிந்ததும் தேநீர் கிடைக்கும். அதன்பின் பயிற்சி நடக்கும். இம்முறை ஆசிரியர் சுந்தரலிங்கம் பயிற்சி நடைபெறும் இடத்துக்கே வந்துவிட்டார். அவருக்கும் விளையாட்டுக்கும் வெகுதூரம். ஆனால் பக்கத்தில் நின்று ஊக்குவிப்பார்.. காத்தான்குடி வஸ் மட்டக்களப்பு நகரை நோக்கிப் போகும். அந்த வஸ் கூனிக்குறுகிய தோற்றமுடையது. மருமகளைக் கண்ட மாமிபோல் தெரியும். முகம் ஒருபுறம் நோக்கும். உடல் வேறுபக்கம் போகும். அப்படிக் கோணி நடப்பவரைக் ‘காத்தான்குடி வஸ்’; என்றழைப்பார்கள்.
காத்தான்குடி வஸ் வந்தது. கரப்பந்தாட்ட வீரர்கள் ஏறிக்கொண்டனர். புதன் பிற்பகல் மட்டுநகர் விளையாட்டரங்கில் தொடங்கியது மட்டக்களப்பு நகர்ப் பொது விளையாட்டு மைதானம் கலகலப்பாக இருந்தது. பல பாடசாலைப் பிள்ளைகளும் குவிந்திருந்தனர். பங்கு பற்றும் பாடசாலை வீரர்கள் பயிற்சியில் இடுபட்டிருந்தனர். ஆனந்தன், சம்பந்தன், கரீம், விவேகானந்தன், நடராஜா, இஸ்மாயில், கணேசமூர்த்தி, முருகேஸ், அரசன் என ஒன்பது பேரும் களமிறங்கினார்கள். ஆனந்தன் கப்ரனாகத் தெரிவாகினான். அவன் தனது திறமைகள் அனைத்தையும் பிரயோகித்தான். ஒரு கூட்டுப்பொறுப்பு அவர்களிடம் காணப்பட்டது. அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்புக் கிடைத்தது. ஆசிரியர்களது ஊக்குவிப்பு அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
நடுவர் சீவரத்தினம் மிகவும் நேர்மையானவர். திறமைசாலி. குலுக்கல் முறை மூலம் பாடசாலைகளைத் தெரிவு செய்தார். முதலில் இரண்டு பாடசாலைகள் தெரிவாகின. பாடசாலைப் பெயர் அழைக்கப்பட்டது. ஆனந்தன் தலைமையில் வீரர்கள் களமிறங்கினார்கள். பலத்த போட்டி நிலவியது. சுளைக்காது ஆடினார்கள். திறமையான ஆட்டம் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. அடுத்து வந்த பாடசாலையையும் வென்றார்கள். வெற்றி அறிவிக்கப் பட்டது.
சுந்தரலிங்கம் ஆசிரியரைக் காணவில்லை. இரத்தினசபாபதி அவரைத் தேடினார். சற்று நேரத்தால் சுந்தரலிங்கம் ஓடோடி வந்தார். குகதாசன் ஆசிரியரும் வந்து சேர்ந்தார். பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இருந்து தேநீர் வரவழைக்கப் பட்டது. சுந்தரலிங்கத்தாரின் தனிப்பமட்ட உபயமாக இருந்தது. குடித்தார்கள். “சென்ற வருடம் நாங்கள் தோல்வி அடைந்தோம். இம்முறை வெற்றியாக்கிய மாணவர்கள் நீங்கள். வாருங்கள் பாடசாலைவரை நடந்தே போவோம். . “லோங் லிவ் சிவானந்தா.. ஹிப்பிப் கூறே” சத்தமிட்டவாறே சுந்தரலிங்கம் முன்னால் நடந்தார். சுந்தரலிங்கம் ஆசிரியரின் துணிச்சலைக் குகதாசன் ஆசிரியர் வெகுவாகப் பாராட்டினார்.
அவரைத் தொடர்ந்து வீரர்கள் நடந்தார்கள். அவர்கள் களைத்திருந்தார்கள். எனினும் அவர்கள் பின்வாங்கவில்லை. நடந்தார்கள். சைக்களில் முன்னால் சுந்தரலிங்கம் விரைந்தார். “அவர் உங்களைவிட்டுட்டு ஓடிற்றார்” என்றார்கள். ஒரு சந்தி வந்தது. யாரும் எதிர்பார்க்காதவாறு சீனவெடிகள் முழங்கின. சில மாணவர்கள் கைகளில் மாலைகளோடு வந்தார்கள். வீரர்களுக்கு மாலைகள் அணிவிக்கப் பட்டன. மேளவாத்தியம் புடைசூழ்ந்து வந்தது. “லோங் லிவ் சிவானந்தா..ஹிப்பிப் கூறே” ஒலி முழங்கியவண்ணம் நடந்தார்கள். ஊர்மக்களும் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கும் சந்தோசம். ஊர்வலம் பாடசாலைவரை தொடர்ந்தது. விடுதியில் கூத்தும் கும்மாளமாகவும் இருந்தது.
காலையில் ஒன்று கூடல் நடந்தது. அதிபர் கணபதிப்பிள்ளை வீரர்களைப் பாராட்டினார் பின்னால் நின்றுழைத்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஒத்தாசையளித்த ஏனைய மாணவர்களையும் பாராட்டினார். “இந்த வெற்றியைப் போல் பரீட்சையிலும் உங்கள் திறமையைக் காட்டவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மாணவர்கள் சந்தோசப் பட்டார்கள்.அன்று சனிக்கிழமை. ஏற்கனவே பாராளுமன்ற முடிவின்படி சிரமதானம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கம்பிவேலி விடுதியைச் சுற்றியிருந்தது. பற்றைச் செடிகள் வேலியை மூடி மறைத்திருந்தது. சில இடங்களில் கம்பி இல்லை. கட்டாக் காலி;மாடுகள் விடுதியினுள் நுழைந்து விடும். பூந்தோட்டம் அழிபட்டு விடும். கள்வரின் செயற்பாடுகளும் இடம் பெறலாம். இதன் காரணமாக வேலியின் முக்கியத்துவம் உணரப்பட்டது. பல குழுக்களாகச் செயற்பட்டார்கள். மண்வெட்டி, கத்தி, கூடைகள் எனப்பல உபகரணங்கள் வந்து குவிந்தன. சில மரங்களின் கிளைகள் தேவைக்கதிகமாக வளர்ந்து காடாகக் காட்சி தந்தது. அவற்றை அளவுக்கேற்ற வாறு வெட்டித் துப்பரவாக்கினார்கள்.9
கம்பி வேலிகளைச் செப்பனிட்டார்கள். குப்பை கூளங்களைக் கூட்டிக் குவித்தார்கள். அவற்றைக் குழி வெட்டிப் புதைத்தார்கள். சிலவற்றைத் தீயிட்டுக் கொழுத்தினார்கள். கைபட்டால் கைலாயம் என்பார்கள். ஒன்றரை மணித்தியாலத்தினுள் விடுதி வளவு கைலாயம் போலாகி விட்டது. பிரதான வீதியை அடுத்தாற்போல் சுவாமி விபுலானந்தரின் சமாதி இருந்தது. சமாதியைத் தாண்டிச் சென்றால் கமலாலய விடுதியை அடையலாம். சமாதியைச் சுற்றிலும் துப்பரவாக்கினார்கள். பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினார்கள். சமாதியைச் சூழ்ந்து நின்றார்கள். அதில் எழுதப்பட்ட பாடலைப் படித்தார்கள்.
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மா மலரோவள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோவெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்லஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது’.
பாடி முடித்ததும் சிரமதானத்தைத் தொடர்ந்தார்கள். முன்னர் மூலைமுடுக்குகள் பற்றைக் காடுபோல் தென்பட்டன. இப்போது பார்ப்போரைக் கவரும் வண்ணம் காட்சி தந்தன. எல்லோர் முகத்திலும் சந்தோசம்.
அதிபர் கணபதிப்பிள்ளை வந்து பாராட்டினார். கட்டிடங்களின் அத்திபாரங்களுக்கு மணலை சுவரோடு சேர்த்தணைத்தார். அவர் வேலை செய்வதைப் பார்த்து “சேர் நாங்கள் செய்கிறோம். நீங்கள் வழிநடத்துங்கள்”;. என்று கேட்டுக் கொண்டார்கள். “சிறந்த தொண்டன்தான் தலைவனாகலாம். நானும் தொண்டனாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நான் வழி காட்டமுடியும்”;. கூறிக்கொண்டே வேலை செய்தார். அவர் சரியாக ஆறுமணிக்குக் கல்லூரிக்குள் காலடி வைப்பார். அதேபோல் மாலை ஆறுமணிக்குக் காத்ததன் குடி வஸ் மூலம் மட்டக்களப்பு நகரில் உள்ள தனது வீட்டுக்குப் போவர். அதிபரின் ஈடுபாட்டைக் கண்டு நெக்குருகி நின்றார்கள்.
சிவானந்தம் கையில் கத்தியிருந்தது. அவன் வேப்பை மரத்தின் அடியில் வெட்டினான். அது அவ்வளவு பெரிய வெட்டல்ல. “ஓ..சனா…வட் த ஹெல் ஆ யு டுயிங்” பதறியபடி ஓடிவந்தார். மரங்களுக்கும் உயிர் இருக்கு. நமக்கு நோவதுபோல் அவற்றுக்கும் நோ இருக்கும். ஆங்கிலத்தில் கூறினார். பக்கத்தில் சாணத்தைக் கண்டு கொண்டார். அதனை எடுத்து அந்த வெட்டுக்காயத்தில் அழுத்தி அப்பினார். “இனி இப்படிச் செய்யாதீர்” என்றார்.
வேம்பின் மருத்துவ மகிமைகளை விளக்கினார். மரங்களின் வயதைக் கணிப்பதைப் பற்றித் தெளிவு படுத்தினார். ஆனந்தனுக்கு வியப்பு. “டேய் சம்பந்தமூர்த்தி நமது அதிபர் கலைப்பரிவில் பட்டம் பெற்றவர் புவியிலில் அதியுயர் பட்டம் பெற்றவர். இவருக்கு எப்படி தாவரவியல் தெரியும். நான் அவரிடம் கேட்கப் போறன்.” என்றான். சம்பந்தனுக்கும் ஆர்வம். இருவரும் உயிரியல் விஞ்ஞானம் கற்பவர்கள். “சேர்! ஹ_ ரோட் யு பொட்னி? உங்களுக்கு தாவரவியலை யார் கற்பித்தார்கள்?” ஆனந்தன் கேட்டான். அதிபர் சிரித்தார். “ஓ…வெல் சனா.. த யங்கிள் அன்ட் த படிபீல்ட் ஒவ் பெட்டிகலோ ரோட்மி பொட்னி.. மட்டக்களப்பின் வயல்வெளிகளும் காடுகளும் எனக்குத் தாவரவியலைக் கற்பித்தன”. என்றார். அவரது பதிலைக் கேட்டு உள்ளுர மகிழ்ந்து கொண்டனர். சிரமதானம் செய்யும்போதும் கல்வி கற்றனர்.
கற்றல் செயல்முறையோடு ஒன்றிக்கும் போது சரியான கற்றலாகிறது. அதிபர் கத்தியைப் பிடிக்கும் முறையைக் காட்டினார். எவற்றை வெட்டலாம். எவற்றை வெட்டக்கூடாது என்பதை அறிந்து கொண்டார்கள். மரங்களின் வயதை அவற்றின் வருடவளயங்களில் இருந்து அறிவதைத் தெரிந்து கொண்டார்கள். மரங்களுக்கும் உயிருள்ளதை அறிந்து கொண்டார்கள். குழிகளைத் தோண்டி பசளையை உருவாக்குவதைத் தெரிந்து கொண்டனர். சுமார் பதினொரு மணியிருக்கும். மணியண்ணரின் கார் வந்து நின்றது.
சுவாமி நடராஜானந்தா அதிலிருந்து வெளியில் வந்தார். அவர் நேரே சிவபுரிக்குச் செல்லவில்லை. இறங்கியதும் மாணவரின் சிரமதானப்பணியைப் பார்க்க வந்தார். “நான் எதிர்பார்க்கவே இல்லை. சா… வண்டபுள்.. யூ ஆர் கிறேற்” சந்தோசத்துடன் வாழ்த்தினார். “திஸ் இஸ் எடுயுகேசன்..இதுதான் கல்வி. நீங்கள்தான் வருங்காலத் தலைவர்கள். உங்களால்தான் நமது சமுதாயம் முன்னேற முடியும். முன்னேறும். பிறகு உங்களைச் சந்திக்கிறேன். எனது வாழ்த்துக்கள்”. கூறிவிட்டு அதிபரோடு உரையாடினார். இருவரும் சிவபுரியை நோக்கிச் சென்றுவிட்டனர்.சிறுவர்களுக்குக் கொண்டாட்டம். “சரியான நேரத்துக்குச் சுவாமி வந்து விட்டார்”;. கூறிக்கொண்டு துள்ளினார்கள்.
கிணற்றடியில் பெரிய அண்டா இருந்தது. அதனைத் தூக்கி அடுப்பில் வைத்தார்கள். அதனுள் தண்ணீரை ஊற்றி சவர்க்காரத் துகள்களைக் கொட்டினார்கள். பெரிய தடியினால் கலக்கினார்கள். சவர்க்காரம் கரைந்து நுரைபரந்தது. சின்னச் சிறுவர்கள் சிரட்டைகளில் சவர்க்காரத் தண்ணீரை எடுத்தார்கள். பப்பாசி இலைத் தண்டுகளை நறுக்கியெடுத்தார்கள். சவர்க்காரத் தண்ணீரில் தோய்த்து மெதுவாதக ஊதினார்கள்.; காற்றூதிய பலூன்களாக சவர்க்கார முட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பறந்தன. அவை காற்றில் உயர உயரப் பறந்தன. சிறுவர்கள் பறக்கும் முட்டைகளைப் பாய்ந்து பிடிக்க முனைந்தனர். அவர்கள் பாயும்போது உடைந்து போயின. பெரிய மாணவர்களும் அவர்களின் சந்தோசத்தில் பங்கு கொண்டனர். விளையாடியவாறே அழுக்கடைந்த துணிகளைக் கொண்டு வந்தார்கள். அனைவரின் துணிகளும் அண்டாவினுள் அடைக்கலமாகின. அடிக்கடி கிளறி விட்டார்கள்.
மரமுந்திரிகைகளில் மந்திகளாகப் பாய்ந்து விளையாடினார்கள். திலகரத்தினம் எம்.ஜி.ஆர் ரசிகன். பழுதடைந்த தும்புத் தடிகள்தான் அவனது வீரவாள்கள். அவற்றைப் பத்திரமாகச் சேர்த்து வைத்திருப்பான். ஆனந்தன் அவனது சகபாடி. இருவரும் மரக்கிளைகளில் தாவி சாகசம் செய்வார்கள். தன்னைவிட வாள் சண்டையில் யாருமில்லை. எவரும் வரலாம் என்று சவால் விடுவான். அவனது ஒரு கை மரக்கிளையில் இருக்கும். மற்றக் கையில் தும்புத்தடி இருக்கும்.
தொங்கியவாறே தடியைச் சுழற்றி வாள்வீசுவான். எதிர்திசையில் ஆனந்தன் தடியோடு நிற்பான். சூழ்ந்திருந்து சிறுவர்கள் இரசிப்பார்கள். “கமோன் எம்.ஜி.ஆர்” சிறுவர்கள் சத்தமிடுவார்கள். திலகரத்தினம் ‘எம்.ஜி.ஆர்’ பாவனையில் ‘அக்சன்’ போடுவான். தடிகள் உடையும் வரை வாள்சண்டை நடக்கும். மாணவர்களின் சிரிப்பொலி வானை முட்டும்.
வெந்நீர் கலவையில் துணிகள் அவிந்துவிடும். நேரத்தைச் சுகாதார அமைச்சர் அறிவித்தார். இயந்திர கதியில் அவரவர் துணிகளை எடுத்துக் கழுவினார்கள். உடுதுணிகளைக் காயப்போடுவதற்கான கொடிகள் இருந்தது. கொடிகளில் துணிகளைக் காயப் போட்டதும் குளித்தார்கள். குளித்து முடிந்ததும் கிணற்றடி ஓய்ந்து போய்க்கிடக்கும். சாப்பாட்டு நேரம் டைனிங்ஹோல் கலகலக்கும். பிற்பகல் மூன்று மணிவரை ஓய்வெடுத்தார்கள். விடுதி மூலைகளில் சிலர் கூடினார்கள். மரக்கிளைகளில் ஏறியிருந்து அளவளாவினார்கள். சிலர் மரமுந்திரிகை கொட்டைகளைச் சேர்த்துச் சுட்டார்கள். சிலர் கதைப்புத்தகங்களோடு உறவாடினார்கள். சுவாமி தனது யன்னலூடாக யாவற்றையும் அவதானித்தார். சிறுவர்கள் கூடுமிடம் கலகலக்கும்.
மூன்று மணிக்கு வகுப்பறையில் நுழைந்து படித்தார்கள். நான்கு மணிக்கு விளையாட்டுத் திடல் கலகலத்தது. “முருகேஸ்! இன்றைக்குச் சுவாமி நிற்கிறார். கட்டாயம் வருவார். கிளித்தட்டு அல்லது கபடி விளையாடுவோம். மற்றவங்களிட்டையும் சொல்வோம். சரியா”? ஆனந்தன் சத்தமிட்டான். விளையாட்டுச் சூடு பிடித்தது. சொன்னதுபோல் சுவாமி வந்தார். வரும்போதே கிணற்று வேலையைக் கவனித்து விட்டார்.
அவருக்குக் கொள்ளை மகிழ்ச்சி. புன்னகைத்தவாறே வந்து பார்த்துக் கொண்டு நின்றார். விளையாட்டைச் சற்று நிறுத்தினார்கள். “ நீங்கள் விளையாடுங்கள்”. கூறிவிட்டு அப்பால் சென்றார். விளையாட்டுத் திடலைச் சுற்றி நடந்தார். அப்படியே சிவபுரிக்குச் சென்றுவிட்டார். விளையாட்டு; முடிந்ததும் வழமையான கடமைகள் தொடங்கின.
10
சுவாமி விபுலானந்தருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. சில பழைய மாணவர்கள் சேர்ந்தனர். “மாணவர்களாகிய நாங்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? நாங்கள் நாடகம் போடுவோமா?” அலசினார்கள். பழைய மாணவர்களைக் கண்டுபிடிப்பது முடியாத செயல். இப்போது படிக்கும் மாணவர்களையும் சேர்ப்போம். முடிவெடுத்தார்கள். ‘வீரபாண்டிய கட்டப் பொம்மன்’ நாடகத்தை பழைய மாணவர் கனகலிங்கம் தேர்ந்தெடுத்தார். அவரே கதை வசனம் எழுதினார். பழைய மாணவன் நேசராசா நெறியாள்கை செய்தார். ஆனைப்பந்தி மாணவியர் ஒத்துழைப்புத் தந்தனர். ஆனந்தன், சண்முகம், திலகரத்தினம், அரசன் எனப் பலர் பயிற்சி பெற்றனர்.
நாடகத்தின் இடையில் ஒரு விறுவிறுப்பான காட்சியைக் காண்பித்தால் நல்லது. ஆலோசித்ததார்கள். அப்போது ‘மின்னல் வீரன’; படம் நினைவுக்கு வந்தது. அதில் வாள் சண்டை நடைபெறும். வாள்கள் மோதும் போது மின்சாரப் பொறிகள் பறக்கும். கனகலிங்கம் அதனை விளக்கினார். “நேரில் செய்தால் கவர்ச்சியாக இருக்கும். செய்வோமா? ” எல்ரோரும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனந்தனும், திலகரத்தினமும் தெரிந்தெடுக்கப் பட்டார்கள். கனகலிங்கம் வாள்சண்டை எப்படி அமையவேண்டும் என்பதை விளக்கினார்.
பெரிய கார் பெற்றரிகள் மன்னேற்றம் பெற்றன. பெற்றரியில் நீளமான வயரைப் பொருத்தி வாள்களோடு இணைக்கப் பட்டிருந்தன. வாள்சண்டையின் போது மேடையில் மங்கலான வெளிச்சம் இருக்கும். வாள்கள் வீசி மோதும்போது மின்சாரப் பொறிகள் பறந்தன. இதற்கான பயிற்சிகளைப் பெற்றார்கள்.
மட்டக்களப்பு கோட்டை முனைப் பாலத்தில் கட்அவுட் போடப்பட்டது. பல இடங்களில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டன. மட்டக்களப்பு நகர மண்டபத்தில் ‘வீரபாண்டியக் கட்டப் பொம்மன்’;; நாடகம் நடந்தது. பத்து நிமிடங்கள் மின்சார வாள்சாண்டை நடந்தது. பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. மக்களிடையே வரவேற்பிருந்தது.
கல்முனை நகரமண்டபத்திலும் நாடகத்தை அரங்கேற்றினார்கள். சேர்ந்த நிதியை சுவாமி விபுலானந்த மணிமண்டபம் கட்டும் குழுவினரிடம் ஒப்படைத்தார்கள். சுவாமி நடராஜானந்தா மாணவர்களது இந்தச் செயலைப் பாராட்டினார். மணிமண்டபம் கட்டிமுடிக்கப் பட்டது. அவர்களுக்கு அந்தக் கட்டிடத்துக்குத் தங்களாலான பங்களிப்பினைச் செய்த மனநிறைவு. மாணவர்களுக்குச் சந்தோசம். மார்கழி மழை பெய்து கொண்டிருந்தது. வகுப்பேற்றப் பரீட்சைகள் முடிந்து விட்டன. அரசாங்கப் பொதுப்பரீட்சைகளும் முடிந்து விட்டன. எங்கிருந்தோ வந்தார்கள். ஒன்றாய்க் கூடியிருந்து விளையாடிப் படித்தார்கள். இன்று பிரிய வேண்டிய நிலையில் இருந்தார்கள். வகுப்பறைகளில் ஆசிரியர்களின் வாழ்த்துரைகள் கிடைத்தன. காலையில் அதிபர் கணபதிப்பிள்ளை நதியைப் பற்றிய தத்துவக் கதையைக் கூறி ‘அநn அயல உழஅந யனெ அநn அயல பழ டிரவ ஐ றடைட பழ கழச நஎநச’ ‘ஆயல பழன டிடநளள லழர’ அறிவுரை வழங்கினார்.
விடுதியில் சுவாமி நடராஜானந்தா காத்திருந்தார். அவரது முகத்தில் ஒரு புன்னகை பூத்திருந்தது. “உங்களுக்காக்கக் காத்திருக்கிறேன். இன்றுடன் உங்களில் சிலருக்குப் பாடசாலைக் கல்வி முடிகிறது. சிலருக்குத் தொடங்குகிறது. நாம் கற்றது கையளவே. கற்க வேண்டியது உலகளவு. வாழ்நாள் பூராவும் மனிதன் கற்றுக் கொண்டுதான் இருப்பான். சுவாமி விபுலானந்தர் வாழ்நாள் பூராவும் கற்றார். அவர் உன்னதநிலை அடைந்ததற்கு அவரது விடாமுயற்சி உதவியது. நீங்கள் வாழ்க்கையில் படிக்க வேண்டியவை நிறையவே உண்டு. நமது மக்களுக்கு உங்கள் சேவைபோய்ச் சேரவேண்டும். சுவாமி விபுலானந்தர் ஏழை மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தனது வாழ்வை அரப்பணித்தார். நீங்களும் உங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் படிக்கும் காலத்தில் செய்த சாதனைகளைப் பார்த்திருக்கிறேன். அதனை நீங்கள் உங்களோடு வாழும் சமூகத்துக் செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். வாழ்த்துக்கள்”. கூறிச் சென்றார். அவர் போவதையே மாணவர்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் கண்களிலே கண்ணீர் உடைப்பெடுத்தது. ‘அந்த மாணவர் உலகம்’; மகத்தானது. மீண்டும் இன்னும் ஒருமுறை வராது.
நிறைவு

Read more...

மதங்கசூளாமணி என்னும் ஒரு நாடகத்தமிழ் நூல்
கிழக்கிலங்கையின் தவப்புதல்வனாம் சாமித்தம்பி மயில்வாகனம் எனும் சுவாமி விபுலானந்தர் பன் மொழிப் புலமையையும் ஆற்றலையும் கொண்டவர். சென் மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகி, மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்து, மீண்டும் அதே கல்லூரியில் ஆசிரியராகி, இலங்கைத் தொழில்நுட்பக்கல்லூரியல் டிப்போமாப் பட்டம் பெற்றதும் அக்கல்லூரியில் கற்பித்தவர். யாழ் சம்பத்ரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் இலங்கையின் முதற்பண்டிதராய் விளங்கியவர். லண்டன் பல்கலைக்கழகத்து விஞ்ஞானப் பட்டதாரியாய் விளங்கிய பண்டிதர் மயில்வாகனம். பி.எஸ் சி அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் சிறந்ததொரு அதிபராக கடமையேற்று அருந்தொண்டாற்றியவர்.
ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளை இராம கிருஷ்ண சங்கத்தின் துறவிகள் இலங்கையிலும் வேரூன்றச் செய்தார்கள். சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளத்தை ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகள் ஆட்கொண்டு விட்டன. பமஹம்சரின் போதனைகளில் அதிக ஈடுபாடு கொண்டார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளம் துறவைநாடிச் சென்றது. உலக இன்னல்களுக்குக் காரண காரியம்தேடிப் புறப்பட்ட சித்தார்தன்போல் மயில்வாகனமும் புறப்பட்டு விட்டார். 1922ல் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமக்கிருஷ்ண மடத்தை அடைந்தார். தனது அங்கலாயும் உள்ளத்துக்கு ஸ்ரீராமக்கிருஷ்ண மடம் விருந்தளித்தது. அங்கே பிரமச்சரிய விரதம் பூண்டு துறவு மார்க்கத்தில் காலடியைப் பதித்தார். தந்தையாரிட்ட மயில்வாகனம் பெயர் நீங்கியது. பிரபோத சைத்தன்யர் என்ற பிரமச்சரியப் பெயரால் அழைக்கப் பெற்றார்.
மடத்தின் அமைதியும், சாந்தமும் அவரை ஆட்கொண்டு விட்டது. தியானம் அவரை நிதானிக்க வைத்தது. நிறைய வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்களின் எழுச்சிக்காக விரிந்தது. பண்டிதராய் இருக்கும் போது தொடர்ந்த தமிழ்ப்பணியையும், சமயப்பணியையும் தொடர்ந்தார்.
ஏழைகளின் கண்ணீரில் இறைவனைக் காணமுடியும் என்பதைப் புரிந்து கொண்டார். ‘படமாக இருக்கும் பரமனுக்கு அன்பின் நிமித்தம் நாம் ஒன்றைக் கொடுத்தால், அது அவருக்குப் போய்ச் சேராது. அதே பொருளை அவனாகக் கருதி நடமாடும் ஏழைக்குக் கொடுத்தால் படமாக இருக்கும் பரமனுக்குச் சேரும்’ என்பது திருமூலரின் கூற்றாகும். திருமூலரின் சிந்தனை அவரைச் சிக்கெனப் பற்றிக் கொண்டது.
‘படமாடக் கோயில் பரமர்க்கு ஒன்றீந்தால்நடமாடக் கோயில் நம்மவர்க்கு அது ஆகாநடமாடக் கோயில் நம்மவர்க்கு ஒன்றீந்தால்படமாடக் கோயில் பரமர்க்கு அது ஆகும்மே’
என்பதன் தாற்பரியத்தை உணர்ந்து கொண்டார். அந்த உணர்வுதான் மட்டக்களப்புக்குக் கல்விப் பயிர் செழிக்க உதவியது.
ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளை இராம கிருஷ்ண சங்கத்தின் துறவிகள் இலங்கையிலும் வேரூன்றச் செய்தார்கள். சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளத்தை ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகள் ஆட்கொண்டு விட்டன. பமஹம்சரின் போதனைகளில் அதிக ஈடுபாடு கொண்டார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளம் துறவைநாடிச் சென்றது. உலக இன்னல்களுக்குக் காரண காரியம்தேடிப் புறப்பட்ட சித்தார்தன்போல் மயில்வாகனமும் புறப்பட்டு விட்டார். 1922ல் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமக்கிருஷ்ண மடத்தை அடைந்தார். தனது அங்கலாயும் உள்ளத்துக்கு ஸ்ரீராமக்கிருஷ்ண மடம் விருந்தளித்தது. அங்கே பிரமச்சரிய விரதம் பூண்டு துறவு மார்க்கத்தில் காலடியைப் பதித்தார். தந்தையாரிட்ட மயில்வாகனம் பெயர் நீங்கியது. பிரபோத சைத்தன்யர் என்ற பிரமச்சரியப் பெயரால் அழைக்கப் பெற்றார்.
மடத்தின் அமைதியும், சாந்தமும் அவரை ஆட்கொண்டு விட்டது. தியானம் அவரை நிதானிக்க வைத்தது. நிறைய வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்களின் எழுச்சிக்காக விரிந்தது. பண்டிதராய் இருக்கும் போது தொடர்ந்த தமிழ்ப்பணியையும், சமயப்பணியையும் தொடர்ந்தார்.
வால்டர் ஸ்கொட.; அவர்கள் ஸ்கொட்லாந்தின் புகழ்பெற்ற கவிஞர். ஸ்கொட்லாந்தின் யாழைத்தேடி எழும் ஏக்கக் குரலாக ‘லேடி ஒஃப் த லேக்’;(டுயனல ழக வாந டுயமந) எனும் அழகிய கவிதையில் மூழ்கி அதனை ‘நீர்நிலைக் கன்னிகை’ என்ற தலைப்பிட்டு மொழி பெயர்த்து எழுதினார். அதன் சாரம் இவ்வாறுள்ளது.
“நல்யாழே துயிலொழிந்து எழுவாயாக, நினது நரம்புகளில் படருங் கையானது பயிற்சியற்ற கையெனினும் செழிய பழம் பாடல்களின் இன்னொலியை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா? நின் இசைக்கு ஒர் இதயமாவது துடிப்புறுமெனின், நின் செயல் வீண் செயலாகாதல்லவா? நீ இன்னும் வாய் திறவாதிருத்தல் தகுதியன்று. சித்தத்தைக் கவரும் வனமோகினியே, எழுந்திரு! இன்னும் ஒருமுறை எழுந்திரு”
வால்டர் ஸ்கொட்டின் பாடல் அடிகளது உள்ளத்தை உருக்கி உள்ளொளியைத் தூண்டியது. தமிழரின் சொத்தான யாழ்கள் துயிலில் மூழ்கியிருப்பதை உணர்ந்தார். அவற்றை மீட்டெடுக்க ஆராய்ச்சியில் இறங்கினார். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, என்பவற்றில் காணப்படும் இசை நாடக ஆராய்ச்சியிலும் இடுபட்டார். தமிழரின் சொத்தான யாழ்களை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியிலும் இறங்கினார்.

1924 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தமது இருபத்து மூன்றாவது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக உயர்நீதி மன்ற சட்டத்தரணி திரு.வு.ஊ. சீனிவாச ஐயங்கார் இருந்தார்கள். அந்த மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவிலே பெரும் புலவராகிய டாக்டர் சாமிநாதையர் தலைமை வகித்தார். இளந்துறவி இவ்விழாவில் கலந்து கொண்டு “நாடகத் தமிழ்” என்ற சொற்பொழிவு மூலம் தான்கண்ட இசைநாடக முடிபுகளை வெளியிட்டார்.
இந்த ஆராய்ச்சி பயனுடையது. இதனை விரிவாக எழுதி வெளியிட்டால் தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மிகப்பயனுடையது. ஆதலால் இதனை விரிவுற எழுதித் தருமாறு தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் உயர்நீதி மன்ற சட்டத்தரணி திரு.வு.ஊ. சீனிவாச ஐயங்கார் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்ற சுவாமி விபுலானந்தர் நாடகத் தமிழை எழுதிக் கொடுத்தார். “இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹா மஹோ உபாத்தியாயர் சாமிநாதையர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழ் அபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார். ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்கும்போது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக’ என சுவாமி விபுலானந்தர் அந்த நூலில் குறிப்பிடுகிறார். அதுவே “மதங்கசூளாமணி” என்ற நூலாக வெளிவந்தது.
“நாடகவியலினை ஆராயப்புகுந்த இச்சிற்றாராய்ச்சியில் கண்ட முடிபுகள் அனைத்தும் பலநாளாக என்னுள்ளத்தினுள் பயின்று கிடந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இருபத்து மூன்றாம் வருட உற்சவத்துக்குச் சென்றிருந்தபோது அவற்றினைத் தொகுத்துத் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் குழுமியிருந்த வித்தகக் கழகத்தில் பெரும் புலவருள் பெரும்புலவராகிய மஹாமஹோ பாத்தியாய சாமிநாதையரவர்களது தலைமையின் கீழ் இயன்றவரை விரித்துக் கூறினேன்.
இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹாமஹோ பாத்தியாயர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.
ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்குமபோது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக” என சுவாமி விபுலானந்தர் நூலில் குறிப்பிடுகிறார். அதுவே “மதங்கசூளாமணி” என்ற நூலாக வெளிவந்தது.
மதங்கர் என்பது கூத்தாடுபவரைக் குறிக்கும் சொல். சூடாமணி என்பது விலைமதிக்க முடியாத ரத்தினம். ‘நானிலம் யாவுமோர் நாடக மேடையே – அதில்நடிப்பவர் ஆண் பெண் அனைவருமாவோம்’
என்ற கூற்றை தமிழ்க் கவிஞர்களும். அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள். கம்பரது கவிகள், நயம்பல கொண்டவை. அவரது கவிதைகள் முத்திரை பதிக்கப்பெற்றவை. முதன்மை பெற்று விளங்குபவை. ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரது நாடகங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக விளங்குவதுபோல் சேக்ஸ்பியர் நாடகச் சக்கரவர்த்தி என சுவாமி விபுலானந்தர் போற்றுகிறார். சேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியதோடு மட்டுமல்லாது மேடையில் நடித்துமுள்ளார்.
“உலக வாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக் கூறிய இக்கவிவாணர் வனப்பின்மிக்க நாடக நூல்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். அதுமட்டுமல்லாது அரங்கினுட் புகுந்து தாமும் கூத்தருள் ஒருவராக நின்று நடித்துள்ளார். நாடகக் கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரில்லை. ஆதலால் சேக்ஸ்பியர் என்னும் இயற்பெயர் பூண்ட இக்கவிவாணரை யாம் மதங்கசூளாமணி என வழங்குவாம். இவரது நாடகங்களுள் அமைந்து கிடந்த வனப்பினுட் சிலவற்றை ஆராயப்புகுந்த இவ் உரைத்தொடரும் மதங்கசூளாமணி என வழங்கப் பெறும்” என சுவாமி விபுலானந்நத்ர் மதங்கசூளாமணியில் கூறுகிறார். எந்த நாட்டவரும் சேக்ஸ்பியருக்குக் கொடுக்காத கௌரவத்தையும் முதன்மையையும் நமது அடிகள் கொடுத்துக் கௌரவித்துள்ளார்.
மதங்கசூளாமணி என்னும் நாடக நூல் உறுப்பியல். எடுத்துக்காட்டியல். ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. நாடகப் பாத்திரங்கள், சம்பவங்கள், எவ்வாறு அமையவேண்டும் என்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து மதங்கசூளாமணியில் தந்துள்ளார். உறுப்பியல் உறுப்பியல் சிலப்திகார அடியார்க்கு நல்லார் உரையினால் பெறப்பட்ட அழிந்துபோன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை விளக்குகின்றார். இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்துக்கு உரிய கட்டுக்கோப்பு, என்பவற்றுடன் நாடகத்துக்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவையுணர்வு என்பன பற்றியும் எடுத்துக் கூறப்படுகிறது.கதை தழுவி வரும் கூத்தே நாடகமாகும். கூத்தை இருவகைப் படுத்துவார்கள்சாந்திக்கூத்து – அதனை அகக்கூத்து அல்லது வேத்தியல் என்றும் அது அரசர்க்குரியதென்றும் கொள்வர்.
நாயகன் சாந்தமாக ஆடுவது சாந்திக்கூத்தாகும். – அது நான்கு வகைப்படும் எனக் காட்டுவர்.
1) சொக்கம் - இது தாள லயத்தை ஆதாரமாக் கொண்டது2) மெய்க்கூத்து - இது உள்ளக்குறிப்பை ஆதாரமாகக் கொண்டது. இவ்வகைக் கூத்தும் தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப் படும்.3) அவிநயக்கூத்து - இது கதை தழுவாது பாட்டின் பொருளுக்குக் கைகாட்டி வல்லபம் செய்யுங்கூத்து4) நாடகம் - இது கதை தழுவி வருங்கூத்து - இவை யாவும் சேர்ந்து வருவதே நாடகம் என்பர்.
மற்றது விநோதக் கூத்து – அதனை புறக்கூத்து அல்லது பொதுவியல் - அது ஏனையோர்க்கு உரியது என்பர். விநோதக்கூத்து குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம் நோக்கு, தோற்பாவை என்பன அடங்கும். இவை பல்வகைப்படும் நாடக உறுப்புக்கள்: சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் நாடக உறுப்புக்களாம்.
சுவை: சுவை ஒன்பது எனக்கூறுவர். இவை உள்ளத்துள் நிகழ்வதாகும். வீரம், அச்சம், இழிப்பு, அற்புதம், இன்பம். அவலம், நகை, நடுவுநிலைமை, உருத்திரம் என்றார். நடுவுநிலைமை ஐம்புலன் அடங்கிய அறிவர்பால் நிகழ்வது. இவர் காமம் வெகுளி மயக்கத்தில் நின்றும் நீங்கியவர் ஆதலால் யாவரும் கண்டஞ்சும் யமனுக்கும் அஞ்சார். எத்துணை இளிவரல் காணினும் இழித்துக் கூறார். கல்வி நிறைந்திருந்தும் அதனைப் பொருளெனக் கொள்ளாக் காரணத்தால் பெருமிதங்காட்டார். புதுமை , பெருமை சிறுமை ஆக்கமென்பன நிலையில்லாப் பொருளென அறிவார். ஆதலின் அவற்றினைக் கண்டு வியப்புறார். வெகுளார் ஆதலினால் சமநிலை எனப்படும் நடுவுநிலை நல்லோரிடத்துப் பொருந்தியிருக்கும். ஆதலினால் நடுவுநிலையைச் சற்றுப் புறந்தள்ளி “நகையே அழுகை, இளிவரல், மருட்கை. அச்சம், பெருமிதம், வெகுளி. உவகை’ என்று அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப’ எனத் தொல்காப்பியர் கூறுவர். எடுத்துக் காட்டியல்இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களை மொழிமாற்றம் செய்து உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கேற்ப விளக்கியுள்ளார். நாடகத்தின் அமைப்பை, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல், என விளக்கி, அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைக் காட்டுகிறார். அத்துடன் நாடகம் தரும் சுவையுணர்வுகiளான வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுவுநிலை என்ற ஒன்பது சுவைகளையும் விளக்கி, அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார். இந்நாடகங்களில் சிலவற்றின் கதைகளை மட்டும் கூறிச் செல்கிறார்.தமிழில் நாடகம் சிறப்படைய ஆசையுற்ற விபுலானந்தர் சேக்ஸ்பியரைச் சரியானபடி அறிமுகம் செய்வதுடன் வடமொழி நாடக மரபையும் அறிமுகம் செய்து அதற்கொப்பத் தமிழ் நாடக மரபையும் காட்டுகிறார். ஒரு வகையில் தமிழர் மத்தியில் நாடகமரபு ஒன்றிருந்ததென்பதையும், அதன் தனித்துவத்தைக் காட்டுவதும் அவர் நோக்கமாக இருக்கலாம். சேக்ஸ்பியரை மாத்திரம் அறிமுகப்படுத்தாது கிரேக்க நாடகங்களையும் ஆட்டுப்பாடலில் இருந்து ஆத தோன்றியமையையும் இணைத்து ஆட்டுப்பாடலைத் தமிழரின் பண்டைய வேலனாட்டத்துடன் ஒப்பிடுதல். நாடக ஆராய்ச்சியில் அவர் கொண்டிருந்த தூரப்பார்வையினைப் புலப்படுத்துகிறது. என பேராசிரியர் சி.மௌனகுரு குறிப்பிடுவர்.ஒழிபியல்ஒழிபியல் தனஞ்செயனார் வடமொழியில் இயற்றிய இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்து கூறுகிறது. நாட்டிய சாத்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களை எல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகமாகும். இவற்றைவிட தொல்காப்பியர் சூத்திர உரையினின்றும் எடுக்கப்பட்ட நாடகத்துக்குரிய அவிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்துக்குப் பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல். அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன் மறுபதிப்பாக இலங்கையின் பிரதேச அமைச்சு 1987 ஜூலை 19ல் வெளியிட்டுள்ளது. இந்த நூலைக் கற்பவர்கள் எத்தனை பேருளர்.? மதங்கசூழாமணியைப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களுக்குப் பாடநூலாக்கப்பட்டுள்ளதா என்பதும் கேள்விக்குறியே. நம்நாட்டுப் பேரறிஞர் சாத்திரங்களை நாங்களே ஒதுக்கிவிடுகிறோம். பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள் மதங்கசூளாமணியை இக்காலத்துக்கு ஏற்றவகையில் இலகு படுத்தி வருங்கால இளையதலைமுறையினருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்பட்டுள்hர்கள். யார் முனவந்து செய்வார்கள் என்று தமிழர் சமூகம் எதிரபார்த்துக்கிடக்கிறது.
கேணிப்பித்தன் ச.அருளானந்தம்.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP