Thursday, May 27, 2010

என்னுரை - முடிவுரை

இந்த நாவலை எழுதவேண்டும் என்று பல ஆண்டுகளாக முனைந்தேன். சந்தர்ப்பம் கிடைக்காது போயிற்று. இது கற்பனைகலந்த உண்மை. இதில் வரும் கதாபாத்திரங்களில் பல உண்மையானவை. இக்கதையில் வரும் வதைபட்ட காதாபாத்திரங்கள் உங்களில் ஒருவராகவும் புலம்பெயர்ந்து இருக்கலாம். பலர் விதக்கப்பட்டும் இருக்கலாம். ‘நான் பெற்ற துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’ என்பதற்காக இதனை எழுதத் துணிந்தேன். என்னுடன் 1983 தொடக்கம் 1991 வரை வவுனியாவில் வட்டாரக்கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. செல்வராசா கணபதிப்பிள்ளை அவர்கள் இதனை நாவலாக எழுதும்படி வற்புறுத்தி இருந்தார். அவரது வேண்டுகோள் இந்த நாவல்மூலம் நிறைவேறுகிறது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதை நானறியேன்.

சம்பவங்கள் பல நிறைந்துள்ள இந்நாவலில் இன்பமும், துன்பமும், சமூக அவலங்களும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். நாம் நல்லனவற்றைச் செய்தால் நன்மைதான் விளயும். சுடச்சுடத்தானே பொன் மிளிரும். அதைப்போன்றுதான், மனிதனுக்குத் துயரங்கள் வரும்போது அவற்றை நமக்கு வரும் சோதனைகளாக எடுத்துக் கொண்டால் வெற்றி காண்பது உறுதி. ‘சவாலே சமாளி’ என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்று ஏன்சொன்னார்களோ தெரியாது. சிலர் அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துவதையே காண்கிறோம்.

இந்த நாவலில் வரும் நிகழ்வுகள் 1984 - 86 வரையான காலப்பகுதிக்குரியன. அக்காலப் பகுதிக்குள் நமது நாட்டுநிலையைச் சொல்வதாக இருந்தாலும் அதற்கு முன்னர் 1959-1976 வரையான காலப் பகுதிகளிலும், பின்னரும் நடந்தேறிய சில சம்பவங்களும் சுவையூட்டுவனவாக உள்ளன. நமது இளைஞர்களின் துயரங்களும் அதனால் அல்லலுற்ற பெற்றோரின் அவலங்களும் விபரிக்கப் படுகின்றன. இந்த நாவலூடாகச் சில வரலாற்றுப் பதிவுகளையும் சேர்த்துள்ளேன். நானில்லாத காலத்தில் எனக்குப் பின்வரும் சந்ததியினருக்காகச் சில தடயங்களைச் சொல்லிவைப்பது எனது கடமையென உணர்ந்ததால் அவ்வாறு செய்தேன். படித்து அறிந்து கொள்வது வாசகர்களாகிய உங்களது கடமையாகும். ‘நான் பட்ட துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’. சிறப்பாகத் தமிழ் இளைஞர்கள் பெறாதிருக்கப் பிராத்திக்கின்றேன். ‘சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்தொன்றாய் வாழா’த தமிழினத்தில் ‘தமிழனுக்குத் தமிழனே எதிரி’ என்பதனையும் ‘தமிழர்கள் என்று ஒன்று படுவார்களோ அன்றுதான் தமிழினத்துக்கு விடிவுநாளாகும். என்பதனையும் உணர்ந்து செயற்படுங்கள்.

உலகெங்கும் செறிந்து வாழும் தமிழர்களுக்கு இந்த நாவல் கொண்டுள்ள கருவைப் புரியவைக்க வேண்டும் என்ற பேரவாவினால் உங்களுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன். தமிழர் போராட்டம் தொடங்கியதற்கான காரணங்கள், தமிழ் இளைஞர்களை எவ்வாறு திட்டமிட்டுச் சித்திரவதை செய்து அழித்;தார்கள், எத்தனை இளைஞர்களும், யுவதிகளும் இன்றும் சிறைக்கைதிகளாகக் கூண்டில் கிடந்து வாடுகிறார்கள் என்பதனை நானறிவேன். அவர்களுக்காகக் குரல் எழுப்புவதற்கு நமது தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களைத் தேடுகிறேன். இக்கதையில் உயிரோட்டமாக உள்ளே புதைந்துள்ள கருவைப் படியுங்கள். ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்துள்ளும் புதையுண்டு கிடக்கும் சோகம் இழையோடும். பிள்ளைகளைப் பறிகொடுத்து ஏங்கும் பெற்றோர்களது உள்ளக் குமுறல்கள் புரியும். இதில் வரும் கதாபாத்திரங்கள் அடிபட்ட அனுபவத்தோடு புலம்பெயர்ந்தும் இருக்கிறார்கள். ஆனால் என்போன்றவர்கள் இன்றும் போராடிக் கொண்டே இருக்கிறோம். இவற்றையெல்லாம் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரும் படித்து இப்படித்தான் இலங்கைத் தமிழர் வாழ்க்கை முறை என்பதைப் புரிந்து கொள்ளட்டும். நாங்கள் செத்துக் கொண்டே வாழ்கிறோம். ஆனந்தவெளியில் உள்ள கதைகளையும் படியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பெரிதும் வரவேற்கிறேன்.

நன்றியுடன்

ச.அருளானந்தம்
(கேணிப்பித்தன்)

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP