Wednesday, May 19, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

24

காலை கணபதிப்பிள்ளை வந்தார். "இன்டக்கி உங்கட வாய்மொழி விளக்கம் எடுப்பாங்க. நீங்க மூன்று பேரும் செட்டிகுளத்தோடு தொடர்புபட்டுள்ளதால அங்கதான் கூட்டிப் போவாங்க. விளக்கம் எடுத்தபின் அடுத்த கிழமை எஸ்.பி. வந்ததும் விடுதலை செய்வதாகப் பேசிக்கொண்டார்கள்“. சொல்லிவிட்டுப் போய்விட்டார். பொலிஸ் ஜீப் தயாராக நின்றது. மூவரையும் சில பொலிஸ்கரர்களையும் ஜீப் சுமந்தது. முன்னாசனத்தில் இன்ஸ்பெக்டர் திசநாயக்க இருந்தார். ஜீப் விரைந்து சென்றது. செட்டிகுளம் சோபை இழந்து கிடந்தது. கிராமப் புறங்கள் இராணுவத்தாரின் சுற்றிவளைப்புக்களுக்கு உள்ளாகின. இளைஞர்கள் காடுகளில் தஞ்சமாகினார்கள்.

செட்டிகுளத்தில் பரமனின் வீடு இருந்தது. வீட்டில் ஜீப் நின்றது. அங்கு தேநீர் வரவழைக்கப் பட்டது. சிலபேரிடம் இன்ஸ்பெக்டர் கதைத்தார். பரமனின் இரண்டு சகோதரர்கள் வந்து இன்ஸ்பெக்டரோடு கதைத்தார்கள். "சரி ஆலங்குளம் வாடிவீட்டுக்குப் போவம்“. இன்ஸ்பெக்டர் திசநாயக்க சொன்னார். ஜீப் கல்லாற்றைத்தாண்டியது. ‚மனிக் பாம்‘ கடந்து பறையனாளங்குளம் சந்தியை அடைந்தது. மோட்டார் சைக்கிளில் பரமனின் சகோதரர்கள் வந்து சேர்ந்தார்கள். மன்னார் - மதவாச்சி வீதியும், வவுனியா - மன்னர் வீதியும் இணையும் சந்தியது. மரங்கள் நிறைந்த சோலை. அதற்குள் அழகாக அமைந்த வாடிவீடு. வாடிவீட்டுக்குப் பொறுப்பாக விமலன் கடமையாற்றினான். அவனை ஆனந்தனுக்கு நன்றாகவே தெரியும். வாடிவீட்டின் எதிர்புறமாக வீதியைக் கடந்து ஆலங்குளக் கிராமத்துப் பாடசாலை. கனகசூரியன் அதன் அதிபராகக் கடமையாற்றினார். அவர் நல்லதொரு கவிஞருமாவார். க.பொ.த. சாதாரணதர வகுப்புவரையுள்ள பாடசாலை. ஆனந்தன் அடிக்கடி பாடசாலைக்கு வருகைதருவான். ஆசிரியர்களோடு சேர்ந்து கற்பிப்பான். வாடிவீட்டில் உணவினை உட்கொள்வான்.

அதிபர் ஓடிவந்து எட்டிப் பார்த்தார். ஆனந்தன் ஒருவாறு அவரை வழியனுப்பி வைத்தான். ஆனந்தன், அலக்சாந்தர், பரமன் மூவரும் வாடிவீட்டின் ஒரு மூலையில் இருந்தார்கள். இன்ஸ்பெக்டர் தனியாக ஒரு இடத்தில் கதிரையில் இருந்தார். மூன்று பொலிஸ்காரர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் இருந்தார்கள். இன்ஸ்பெக்டரின் முன்னாலுள்ள மேசையில் உயர்ரக மதுப்போத்தல்கள் இருந்தன. பொலிஸ்காரர்கள் மேசையிலும் வைக்கப்பட்டன. கிளாசில் ஊற்றிக் குடித்தாரகள்;. பரமனின் சகோதரர்களோடுதான் இன்ஸ்பெடர் கதைத்தார். அவர் இடைக்கிடை பொலிஸ்காரரைக் கூப்பிட்டு ஏதோ சொல்லுவார். "யேஸ் சேர்“; போட்டுவிட்டு வருவார்கள். தமது மேசைக்கு வந்து தாங்களும் போடுவார்கள். போத்தல்கள் காலியாகும் வரை குடித்தார்கள்.

இன்ஸ்பெக்டர் நேரத்தைப் பார்த்தார். "போவம்“ புறப்பட்டார்கள். செலவெல்லாம் பரமனின் சகோதரர்கள் கவனித்தார்கள். நேரே பரமன் வீட்டுக்கு ஜீப் விரைந்தது. மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது. செட்டிகுளம் மக்கள் பரமனின் வீட்டுக்குப் படையெடுத்திருந்தனர். மூவரையும் குளிக்கும்படி இன்ஸ்பெக்டர் கூறினார். மூவரும் கிணற்றடிக்குக் குளிக்க நடந்தார்கள். அவர்களால் நடக்க முடியாதிருந்தது. ஆனந்தனுக்குக் கால்களை நிலத்தில் வைக்கமுடியாதிருந்தது. அலக்சாந்தர் பொலிஸ்நிலையத்தில் பாதரோடு சரணடைந்ததால் அடியில்லாது தப்பமுடிந்தது. அடியின் வலி இப்போது தெரிந்தது. நொண்டியபடியே பரமனும், ஆனந்தனும் நடந்தார்கள். ஆனந்தனின் பாதங்கள் வீங்கியிருந்தன. பாதவிளிம்புகள் கருநீலநிறத்தில் தெரிந்தன. சனங்கள் பார்த்துக் கொதித்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்யவும், பேசவும் முடியாது. நெட்டைமரங்களாக நின்றார்கள்.

அவர்கள் குளித்து வரும்வரை பொலிஸ்காரர்கள் வீட்டின் பின்புறமிருந்து குடித்துக் கொண்டே இருந்தார்கள். "அவங்களுக்குச் சாப்பாடு குடுங்க.“ தங்கள் வீடுபோல் பொலிஸ்காரர்கள் உத்தரவு போட்டார்கள். போலிஸ்காரர்கள் இப்போது தங்கள் தரத்தினை விட்டு ஒன்றாக இறங்கி உறவாடினார்கள். சும்மா சொல்லக்கூடாது. தண்ணி அனைவரையும் சம அந்தஸ்து உடையவர்களாக்கி வீடும். இன்ஸ்பெக்டரின் தோளில் கைபோடும் அளவுக்கு அவர்கள் மாறியிருந்தார்கள். தனியான மேசையில் இன்ஸ்பெக்டரும் பொலிஸ்காரரும் இருந்து சாப்பிட்டார்கள்.

பரமனின் சகோதரர்கள் இன்ஸ்பெக்டரோடு அளவளாவினர். "சேர்..நீங்கதான்..பார்த்து ஏதாவது செய்ய வேணும்“;. அவர்கள் பலமுறை தயவுடன் விண்ணப்பம் செய்தார்கள். "அதற்காகத்தானே..இப்படி இங்கு கூட்டிவந்திருக்கிறம். பயப்பட ஒன்றுமில்லை. நான் போடுற றிப்போட்டிலதான் எல்லாம் இருக்கு. இன்னும் மூன்று நாளையால வெளியில வந்திருவாங்க“ இன்ஸ்பெக்டர் பெருமையாகச் சொன்னார். ஆனால் அவர்கள் ஒன்றும் எழுதவில்லை என்பதை ஆனந்தன் புரிந்து கொண்டான். உணவு முடிந்ததும் இன்ஸ்பெக்டர் அப்படியே சாய்கதிரையில் சாய்ந்து உறங்கினார்.

ஐந்து மணிக்கு ஜீப் புறப்பட்டது. ஆறுமணிக்கு பொலிஸ் ஸ்ரேசனில் ஜீப் நின்றது. தங்களது மாளிகைக்குள் அடைந்து கொண்டார்கள். பசிக்குக் கொஞ்சம் சாப்பிடுவார்கள். இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளையின் தயவு கிடைத்தது. கூட்டுக்குள் யாரையும் போடுவதில்லை. அக்கூடு மூவருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. கண்களை மூடுவதும், திறப்பதும், திறந்து பின் மூடுவதும் தொழிலாக இருந்தது. பொலிஸகாரர் என்ன கதைத்தாலும் தங்களைப் பற்றிக் கதைப்பது போல் உணருவார்கள். ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது. இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன.

மூன்றாம் நாள் காலையில் கணபதிப்பிள்ளை வந்தார். ""சேர்.. றேமனைத் தெரியுமா..“? கேட்டார். ஆனந்தனுக்கு அவர் கேட்ட பெயருடைய ஆளைத்தெரியாது. "எனக்குத் தெரியாது“. என்றான். "எனக்குத் தெரியும் சேர்..“ பரமன் கூறினான். எனக்கும் தெரியும்“;. அலெக்சாந்தரும் கூறினார். "அவனப் பொடியள் போட்டுட்டாங்க. அவன் பொல்லாத ஆள். அவனால எத்தன அப்பாவிகள் ஆமிட்ட புடிபட்டு சித்திரவதப் பட்டிருக்காங்க. இவனுக்கு ஏனிந்த வேலையெல்லாம்“.? சொல்லிப் போட்டுப் போய்விட்டார். "அவன் ஆக்களக் காட்டிக் குடுக்கிறவன். அவனக் கண்டால் சனங்களுக்குப் பயம். செலவுக்குக் காசிகேட்பான். கொடுக்காட்டி ஆமிக்குப் பிட்டிசன் அடிப்பான்“. பரமன் சொன்னான்.

ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அத்தோடு பாவமாகவும் இருந்தது. அவனைத் தெரிந்திருந்தால் அறிவுரை கூறித்திருத்தியிருக்கலாம். மனதிலே கவலையை மூட்டிக்கொண்டான். பரமனின் மனைவி வந்தாள். நடந்தவற்றை ஒப்புவித்தாள். அவள் சென்றபின் பரமன் அதனைப் ஆனந்தனிடம் சொன்னான். "நேற்று இரவு பொடியன்கள் சிலர் றேமனைத் தேடி வந்தார்களாம். அவன் நல்ல வெறியில் இருந்திருக்கிறான். அவனைப்பற்றிய தகவல்களைத் திரட்டி விசாரித்தார்களாம். அவன் ஒப்புக் கொண்டிருக்கிறான். அவனை ஊர்ச்சந்தியில் ரெலிபோன் தூணில் கட்டிவைத்துச் சுட்டுப் போட்டுப் போய்விட்டார்கள். அவன்தான் நமக்கும் பிட்டிசன் அடிச்சவனாம்“. பரமன் சொல்லி முடித்தான்.

"என்னை அவனுக்குத் தெரியாது.; அவன் ஏன் எனக்குப் பிட்டிசன் அடித்தவன். அப்படிச் செய்ய வாய்ப்பில்லையே“;. ஆனந்தனுக்குச் சங்கடமாகியது. ஒரு உயிரை அழிப்பதற்கு இன்னொருவருக்கு என்ன உரிமையிருக்கிறது.? அழித்த உயிரை மீண்டும் வரவழைக்கமுடியுமா? இந்த மனிதப் பிறவியெடுப்பதே அரிதான விடயம். மனிதப்பிறவி எடுத்தாலும் கூன்குருடு நீங்கிப் பிறப்பது அரிது. இப்படிப் பாவச்செயல்களை மனிதர்கள் ஏன் செய்கிறார்கள்? அமைதியாக இருந்து சிந்தனையில் ஆழ்ந்தான். அலக்சாந்தர் கவலையில் மூழ்கியிருந்தார்.

கணபதிப்பிள்ளை வந்தார். " சேர்... எஸ்.பி வந்திருக்கிறார். ஐந்து பத்து நிமிசத்தில கூப்பிடுவார். அவர் கையெழுத்திட்டால் சரி. நீங்க போகலாம்“. அறிவித்து விட்டுச் சென்றான். பரமனுக்குச் சந்தோசம். ஆனால் ஆனந்தனுக்குச் சங்கடமாக இருந்தது. "அலக்சாந்தர்..! எனக்கு நம்பிக்கையில்லை. கதை மற்றப்பக்கமாகத் திருப்பிவிட்டால்? என்ன செய்வது"? ஆனந்தன் கூறினான். பரமன்ர கதையப்பார்த்தால் சிக்கல்போல் தெரிகிறது. "அவன்தான்நமக்கும் பிட்டிசன் அடிச்சது என்றால் அவனுக்கும் நமக்கும் தொடர்பு இருப்பதாக, இவங்கள் மாற்றிவிட்டால்“? ஆனந்தன் யோசனையோடு சொன்னான். "எனக்கும் இப்பதான் விளங்குது. என்ன நடக்கப்போகுதோ தெரியாது“. அலக்சாந்தர் பயத்தோடு சொன்னார்.

"இதில பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? யோகர் சுவாமிகள் அன்றே சொல்லிப்போட்டார“;. ஆனந்தன் சொன்னான். "என்னெண்டு சேர்“? அலக்சாந்தர் குறுக்கே புகுந்தார். "எல்லாம் எப்பவோ முடிந்த காரியம் என்று“ ஆனந்தன் சொன்னான். அலக்சாந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனே தொடர்ந்தான். "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கும். இது கீதாஉபதோசம். நடப்பது நன்றாகவே நடக்கும். நாமும் பார்ப்போம“;. ஆனந்தன் வரட்டுச் சிரிபோடு முடித்தான்.

போலிஸ்காரர் வந்து கூப்பிட்டார். பொலிஸ்காரர் முன்னே செல்ல மூவரும் பின்னால் சென்றார்கள். "எஸ்.பி பொல்லாதவர். பயந்தவர்கள் போல் நடிக்கப் பாருங்க“ போகும்போது பொலிஸ்காரர் சொன்னதிவை. "இவர்களும் நடிக்கிறார்களோ தெரியாது. நாடகமாம் இந்த உலகத்தில் நாமெல்லாம் நடிகர்கள்தானே“. ஆனந்தன் மனதினிலே வைத்துக் கொண்டான். ஒரு அரசனுக்குள்ள மரியாதையைவிடவும் இந்த எஸ். பி ...க்கு இருந்தது. அவரைக் கண்டு பொலிஸ்காரர்கள் பயந்து நடுங்கினார்கள். எஸ்.பி. வெகு கம்பீரமாகத்தான் இருந்தார். அவருக்கு எதிரெதிராக நின்று கதைப்பதற்குப் பொலிஸகாரர் பயந்தார்கள். அவருக்கு முன்னால் மூவரும் நின்றார்கள். அவர் கோவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவை முடிந்ததும் நிமிர்ந்து பார்த்தார்.

அவரது பார்வைக்கு முதலே இவர்கள் முந்திவிட்டார்கள். "குட் மோர்னிங் சேர்“. ஆனந்தனும், அலெக்சாந்தரும் சேர்ந்து சொன்னார்கள். பரமன் அவர்களோடு சேர்ந்து கொண்டான். அவரது வாயசையவில்லை. பயங்கரப் பார்வையை வீசினார். ஏற இறங்கப் பார்த்தார். பேரைக்கேட்டார் சொன்னார்கள். "நீங்க பெரிய இது என்ற நினைப்போ“? மேசையில் தட்டியவாறே எழும்பினார். "ஆனந்தன்...அலெக்சாந்தர்....பரமன்...எல்லாரும்.. கூட்டணி..ஆக்கள். ஈழம் கேக்கிற பெடறல் பாட்டி... சப்போட்டர்.. நல்லாப் பேசி மக்கள ஏமாத்துறது“. பெரும் சத்தத்தோடு கர்சித்தார். மேசை லாச்சியை இழுத்து ஒருகுறிப்பை எடுத்தார். „நீங்க இஞ்ச இருக்க...உங்கட ஆக்கள் றேமனைப் போட்டுட்டாங்க“. சொல்லியவாறே கீழுதட்டைப் பற்களால் கடித்தார். அவரது பார்வையில் இந்தப் பாவிகள் பஞ்சாய் எரிந்தனர்.

"இன்ஸ்பெக்டர்...புட் தெம் பிகைன்ட் த பார். கூடுவென் தாண்ட. கூட்டுக்குள்ள போடுங்க“ சொல்லிவிட்டுத் தனது கதிரையில் இருந்தார். இன்ஸ்பெக்டர் பொலிஸ்னகணஒகாரருக்கு உத்தரவிட்டார். பொலிஸ்காரர் கைகளைக் காட்டி அழைத்தார். கைகட்டி மௌனமாகி வந்தபடியே நடந்தார்கள். விதியை நோவதா? நாட்டை நோவதா? யாரை நோவது? "விதியே..விதியே.. தமிழச் சாதியை என்செயவென்று இருக்கிறாயடா“ பாரதியின் வரிகளை மாற்றியபடி மனம்துடித்தது. பழையபடி கூட்டினுள் விட்டுப் பூட்டிவிட்டார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தச் சிறைவாசம். வருவதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார்கள்.

இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை வந்தார். "இன்டைக்கென்று அவனப் போட்டுட்டாங்க... அந்த ஆத்திரத்தோட எஸ்.பி..இருக்கிறார். உங்கள்ள குற்றமில்ல. பயப்பிடாதங்க. இன்னும் கொஞ்ச நாட்களில விட்டிருவாங்க. இஞ்ச உங்களுக்குப் பிரச்சின இல்லாம பார்த்துக் கொள்வன்.“ அவரது வார்த்தைகள் தெம்பாயிருந்தன. "வேண்டியதைச் செய்துதர இதோ பண்டா றாளகாமி இருக்கிறார். இவர் நல்ல மனிசன். இவரிட்ட உதவியேதும் தேவைப்பட்டால் கேளுங்க“. பண்டாவை அறிமுகம் செய்தார். அவர் சென்று தனது கடமையில் ஈடுபட்டார். அன்று மாலை பாலசிங்கம் வந்தார். அவரது வார்த்தைகள் ஆறுதலைத் தந்தன. காலையிலும் மாலையிலும் தேநீர், உணவு வகைகள் என்று உதவிக் கொண்டே இருந்தார். "மனிதனுக்கு மனிதன் துன்பத்திலதான் சேர் உதவிகளச் செய்யவேணும். நீங்க காலயில நாலுமணிக்கு எழும்பி, வேலைகள முடித்துக் கொண்டு பாடசாலைகளில் ஏழுமணிக்கெல்லாம் நி;ற்பீங்க. உங்களப் பார்த்து நாங்களும் வேளைக்கே பாடசாலைகளுக்குப் போகப் பழகிற்றம். சுறுசுறுப்பாக ஓடியாடி வேலை செய்த உங்கள முடக்கிப் போட்டாங்க. நினைத்துப் பார்க்க வேதனையாக இருக்குது“ இது பாலசிங்கத்தின் சித்தாந்தம். அவரின் ஆதங்கம் புரிகிறது. அதற்காக மனமார நன்றியைத் தெரிவித்தான்.

"சேர்... இஞ்சயிருந்து டி.ஒ. அனுப்பாமல் பார்க்கவேணும்.“ பாலசிங்ம் தேநீரை பிளாஸ்கில் தந்தவாறே சொன்னார். "அதென்ன டி.ஓ.“ பரமன் கேட்டான். "டிற்ரென்சன் ஓடர் அதாவது தடுத்து வைப்பதற்கான அனுமதி“ ஆனந்தன் விளக்கினான். " டி.ஓ போட்டால் மூன்று மாதமெடுக்கும் சேர். எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரிட்டக் கதைக்கிறன். அவர் சட்டத்தரணி. அவருக்கு இதுல நல்ல அனுபவமிருக்கு“. எடுக்க வேண்டிய விடயங்களைப் பற்றி பாலசிங்கம் விளக்கினார். "பாலா...இதெல்லாம் தேவையில்ல. எப்படியும் வாறகிழமை நாங்க வெளியில வருவம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. இருந்து பாரப்பம்“. ஆனந்தன் உறுதியாகச் சொன்னான். சிரித்தவாறே ஆனந்தனைப் பார்த்தார். ஆனந்தனைப் பார்ப்பதற்கு அவருக்கு வேதனையாக இருந்தது. "சேர், நான் வாறன். சொல்லிவிட்டுச் சென்றார். அவர்போவதையே மூவரும் வைத்த கண்வாங்காது பார்த்துக் கொண்டு; நின்றார்கள்.

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP